அந்தக் காலை வேளையிலும் தேவனின் முகத்தில் தெளிவில்லை. அது சிவரஞ்சனியின் கண்களுக்கு தப்பவில்லை.
“காதல் தேவனுக்கு ஜஸ்ட் கால் கிலோ காதல் போதுமா? அட பாவத்த.” என்று கிண்டலாக சிரித்தபடியே சொன்ன மனைவியை இன்னும் நெருக்கமாக இழுத்தான் தேவன்.
“ஐம்பத்தி நாலே கால் கிலோ வேணும்.” அவளின் காது மடலில் உதடுகள் உரச முணுமுணுத்தான். உடல் சிலிர்க்க, கீழுதட்டை கடித்து கணவனை முறைத்தாள்.
“என்ன முறைக்கிற? நான் சரியான வெயிட் தான் சொன்னேன். நேத்து கூட செக் பண்ணேனே. ம்ம், அதே வெயிட் தான் இருந்த, நோ சேஞ்சஸ்..” அவன் தீவிரமாக சொல்ல, அவன் மார்பில் அடித்தாள். அவளின் இடையை இறுக பற்றி சட்டென அவளை உயரத் தூக்கி, அவள் கத்தவும் கீழே விட்டான் தேவன்.
“ஐம்பத்தி நாலே கால் கிலோதான்” என்று மீண்டும் அவன் கண் சிமிட்டி சொல்ல, அவள் கண்களோ அவனை கரிசனத்துடன் ஏறிட்டது.
தேவன் கண்களில் வழிந்த பிரியமும், அன்பும், தவிப்பும், துடிப்பும் அவளை பேச்சிழக்க செய்தது. கடந்த பத்து வருடங்களில் இந்த பிரியத்தின் தடத்தை கூட அவள் பார்த்ததில்லை. முன்னர் காதல், திருமணம் இதையெல்லாம் அவள் பார்த்த பார்வையே வேறு. தேவனின் அன்பு அவளுக்கு பிரியத்தின் பாதையை காட்டியது. அது குறித்த அவளின் பார்வையையும் மாற்றியது. முன்னெப்பொழுதும் விட அந்தக் கணம் அவன் காதலை முழுமையாக உணர்ந்தாள்.
தேவனின் காதல் அவனை கலக்கமடைய செய்திருக்கிறது. சரியான உறக்கமின்றி, ஆழ் மனத்தின் வெளிப்பாடாக கனவு கண்டு, மிரண்டு எழுந்து.. “சிவரஞ்சனி..” என்று உறக்கத்திலும் அவன் அழைத்தது, இப்போதும் அவள் செவியில் எதிரொலிப்பது போலிருந்தது.
“இப்பவும் கஞ்சன் மாதிரி ஐம்பத்தி நாலே கால் கிலோன்னு அளந்து அளந்து காதலை கேட்டுட்டு இருக்கீங்க. இது காதல் தேவனுக்கு அழகா சொல்லுங்க?” அவன் கன்னம் தாங்கி கேட்டாள்.
“எனக்கு தேவையான அளவு எவ்வளவுன்னு எனக்குத்தானே தெரியும்? ம்ம்?”
“ம்ம்”
“அப்போ நான் சொன்ன அளவு சரிதான்.” என்றான் தீவிரமாக. உன் காதல் மட்டும் போதும் எனக்கு என்ற அவன் வார்த்தைகளின் உள்ளர்த்தம் அவளுக்குத் தெளிவாக புரிந்தது. சிவரஞ்சனியின் கண்களும், இதழ்களும் மலரைப் போல மெல்ல விரிந்து புன்னகைத்தது.
ஒற்றை கரம் உயர்த்தி தேவனின் கழுத்தை வளைத்தாள். “ஏய், என்ன?” என்றவனின் கண்கள் விரிந்த வேகத்தில், அவள் முத்தமிடவும் அப்படியே மூடியது. அவள் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை, பகிர முடியாததை உணர்வுகளால் அவனுக்கு கடத்தினாள்.
இரவு கணவன் கண்டது மோசமான கனவாக இருக்கும் என்று அனுமானித்தவள், அதைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லை. அதை மறக்கட்டும் அவன் என்றே நினைத்தாள்.
அந்த நிமிடம் தேவனின் உலகத்தில் சிவரஞ்சனி மட்டுமே இருந்தாள். காலம் அப்படியே அந்த நொடியிலேயே உறைந்திடாதா என்று அவன் ஏங்கி நிற்க, சிவரஞ்சனி விலகி மருத்துவமனை கிளம்பினாள்.
தேவனும் குளித்து அலுவலக வேலையை பார்க்கத் தொடங்கினான்.
“நம்ம கல்யாணத்தப்போ அப்பா மாறினது போல இருந்தது தேவன். அவருக்கு என் மேல எங்கயோ கொஞ்சம் பாசம் ஒட்டிட்டு இருக்கும்ன்னு, அவர் என்னை பார்த்ததை வச்சு நானே கற்பனை பண்ணிக்கிட்டேன் போல..”
அவள் சொல்லவும் மடிக் கணினியில் இருந்து தலையை உயர்த்தினான்.
“பாசம் இல்லாம எங்க போகும்? அதெல்லாம் இருக்கும். ஆனா..” என்று முடிக்காமல் அப்படியே விட்டான். அவன் கவனமெல்லாம் கண்டபடி சிதறுவதை காண அவளுக்கு மனம் கலங்கியது. அவள் மருத்துவமனை சென்றேயாக வேண்டும். விடுமுறை எடுக்க முடியாத பணிச்சூழல்.
“நீங்க இன்னைக்கு வீட்ல தான் இருக்கப் போறீங்களா? நானும் லீவ் சொல்லவா?” என்று அவள் கேட்க, சட்டென பளிச்சிட்டது தேவனின் கண்கள்.
“நீ லீவ் போடுறன்னா நான் வீட்ல இருக்க ரெடி” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
“அப்போ உங்களுக்கு வேலையிருக்கு அப்படித்தானே?”
“ம்ம்” என்றவன் குரலில் இருந்து அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். நான்.. நான் முரளிதரன், திருமூர்த்தி ரெண்டு பேரையும்.. அவங்க ஹெல்ப் நமக்கு வேணாம்னு சொல்லிட்டேன்..” சற்றே தடுமாறி, தயக்கத்துடன் அவள் சொல்ல, “ரெண்டு நாளா அவங்களை காணோம்னு போதே கெஸ் பண்ணேன். இட்ஸ் ஓகே. விடு, பார்த்துக்கலாம். நீ கம்பர்ட்டபிளா இருந்தா போதும்..” என்று தேவன் இயல்பாக சொல்ல, அதை சாதாரணமாக கடக்க முடியாமல் சந்தேகித்தாள்.
அவனது நடவடிக்கை அவளைக் குழப்பியது. எந்நேரமும் அவளுக்கு பாதுகாப்பாக நிற்கிறான். பயப்படுகிறான், தூக்கத்திலும் கனவாக அதன் தாக்கம் தெரிகிறது.
ஆனாலும், அவனிடம் என்னவென்று அவளால் கேட்க முடியவில்லை. அவள் கேட்டாலும் நேரடியாக பதில் சொல்வான் என்று தோன்றவில்லை.
“நீ தானே நான் பாடும் சிவரஞ்சனி.. நீயின்றி நானில்லை…” என்று பாடிக் கொண்டே எழுந்தவன், அவளுடன் கைக் கோர்த்து கொண்டான்.
“ரொம்ப யோசிக்காத. வா, சாப்பிட போகலாம்” என்று அறையை விட்டு வெளியில் அழைத்துச் சென்றான்.
அங்கே சமையல் அறையில் காயத்ரி கல்லூரி செல்லும் அவசரத்தில் சமையல் மேடையில் சாய்ந்து, கையில் உணவு தட்டை ஏந்தியபடி உண்டுக் கொண்டிருந்தாள்.
அவளுடன் பேசியபடி நின்றிருந்தார் மத்திம வயது பெண்மணி ஒருவர்.
இருவருக்கும் பரிமாறிய புவனாவின் கண்களில் தொக்கி நின்ற கேள்வி தான் அவளுக்கும் தொண்டை வரையில் நிற்கிறது என அவரிடம் எப்படி சொல்வாள் அவள்?
அவர்கள் இருவருக்கு சமைக்க புவனா ஒருவர் போதுமே? எதற்காக புதிதாக இன்னொருவர்? என்று கணவனிடம் கேட்கவில்லை அவள். அது அவன் வேலையாக இருக்கலாம். இல்லையென்றால் சீதாலட்சுமி பணியமர்த்தி இருக்கலாம். அவர்கள் இருக்கும் சூழலில் ஏனோ அவளுக்கு கேள்விகள் கேட்கத் தோன்றவில்லை.
அவர்கள் உணவு முடித்து வெளியில் வர, பசுபதியுடன் இன்னொரு நபரும் நின்றிருந்தார். வீட்டின் பாதுகாப்பு பணிக்கு மேலும் இருவர் நின்றிருந்தார்கள். எதுவுமே தனித்து தெரியவில்லை. தோட்டம், கார் துடைப்பது, வளர்ப்பு பிராணியை வெளியில் அழைத்துச் செல்வது என ஆளுக்கொரு வேலையை இயல்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.
தேவனை பார்த்ததும் அவர்களின் உடல் மொழி மாறிப் போகவும் அவன் தான் அவர்களை பணிக்கு அமர்த்தியிருக்கிறான் என புரிந்துக் கொண்டாள்.
பழனிவேலின் ஆட்கள் சென்னையில் இருக்கிறார்கள் என்று திருமூர்த்தி எச்சரித்தது அவளுக்கு நினைவிற்கு வந்தது. மதுரையில் இருந்து ஆள்களை இறக்கியது மட்டுமின்றி இங்கேயும் புதிதாக சிலரை பிடித்திருப்பார் என்பது எளிய கணிப்பாகவே இருந்தது.
“நீ ஃப்ரீயானதும் கால் பண்ணு. மதியம் நானே வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன். ஓகே?” என்று தேவன் கேட்க, “ஓகே” என்றாள்.
அவளின் அறை வரை சென்று அவளை விட்டுவிட்டு வழியில் சந்தித்த மருத்துவர் தேவராஜனிடம் சில நிமிடங்கள் நின்று பேசி விட்டே திரும்பிச் சென்றான் தேவன்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலில் காரை லாவகமாக செலுத்திக் கொண்டிருந்தவனின் எண்ணமெல்லாம் மனைவியை சுற்றியே வந்தது.
“நானும் லீவ் சொல்லவா?” என்று அவள் கேட்டபோது, “எஸ் லீவ் சொல்லிட்டு என் கூடவே இரு சிவரஞ்சனி. பத்திரமா என் கைக்குள்ளயே இரு” என்று கத்தி விடத் துடித்தான் அவன். ஆனால், எத்தனை நாள்களுக்கு அப்படி கைக்குள் வைத்து அவளைப் பொத்தி பாதுகாக்க முடியும் என்ற பரிதவிப்பும் சேர்ந்தே அவனுக்கு தோன்றவும் தான் மறுத்து பேசினான். சிறந்த மருத்துவரான மனைவியை எக்காரணம் கொண்டும் வீட்டில் அடைக்க அவனால் முடியாது.
தற்போது துணை முதல்வரை சந்திக்க சென்றுக் கொண்டிருந்தான். மதுரையில் இருக்கும் போதே அவரிடம் தொலைபேசியில் பேசியிருந்தார்கள். ஆனாலும், நேரில் பேசுவது போல வராது என்று சேதுராமன் வலியுறுத்தவும் முன்அனுமதி பெற்று இதோ அவரின் அலுவலகம் வந்து விட்டான்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு சற்றே தெளிந்த முகத்துடன் வெளியில் வந்தான் அவன்.
பழனிவேல் மீது காவல்துறையில் புகார் அளிக்க விரும்புவதை தெரிவிக்க விரும்பினான். ஏற்கனவே அவர்களுக்கு பரிச்சயமான அதிகாரிகளிடம் பேசியிருப்பதை பற்றியும் குறிப்பிட்டான்.
பழனிவேல் மீது அவரின் மகன் கர்ணாவே புகார் அளித்திருக்கிறார் என்றார் துணை முதல்வர். காவல்துறையின் தீவிர கண்காணிப்பு வட்டத்தில் அவர் இருப்பதாகவும், அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட, நிம்மதியடைந்தான் தேவன்.
மதுரையில், “தேவன் கிரானைட்ஸ்” அவர்களின் அலுவலகம், வீடு என எங்கும் பாதுகாப்பை வலுப்படுத்தினான். கர்ணாவை அலைபேசியில் அழைத்து அவனிடமும் பேசி விட்டு வைத்தான்.
அத்தனை ஏற்பாடுகள் செய்த பிறகும் அவன் மனம் தணியவில்லை. வேறென்ன? வேறென்ன? என்று துடியாய் துடித்துக் கொண்டிருந்தது.
அவர்களது கட்டாயத்தின் பேரில் நிகழ்ந்த கல்யாணம் என்று இப்பொழுது அவனாலேயே நம்ப முடியவில்லை.
நான்கு வருடங்களுக்கு முன்னர் அவளை முதல்முறையாய் சந்தித்த போது தோன்றிய உணர்வுக்கு இப்போதும் அவனால் பெயரிட முடியவில்லை.
ஆனால், இன்றைக்கு அவன் உணர்வது நிறைந்த அன்பை மட்டுமே. அவனின் பிரிய ராகத்தின் மேல் கொள்ளை பிரியம் வைத்திருந்தான் அவன். தேவனின் தேவாரம் சிவரஞ்சனி.
“நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்..” என்ற வரிகளை அவள் மெய்யாக்கி இருந்தாள். அவன் வாழ்வில் சிவரஞ்சனி இல்லாது போனால், நிச்சயமாய் அதன் பிறகு அவன் பாட காரணம் இல்லாமல் போகும்.
அப்படியொரு காட்சியை கற்பனை கூட செய்ய முடியாமல், “நோ” என்று கத்தினான் தேவன்.
நேரம் நண்பகலை தொட்டிருக்க அலைபேசியை எடுத்து பார்த்தான். மனைவியிடம் இருந்து அழைப்புகள் எதுவுமில்லை. காரில் காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அவளுக்காக காத்திருந்தான். அந்நேரம் முந்தைய இரவின் கனவின் மிச்சங்கள் அவன் கண்களுக்குள் வர, அனிச்சையாக பதட்டம் மனதை ஆக்கிரமிக்க கார் கதவை வேகமாக திறந்து இறங்கி, மருத்துவமனைக்குள் சென்றான்.
சிவரஞ்சனி தனக்காக காத்திருந்த கடைசி குழந்தையையும் பார்த்து முடித்து, மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவும் அங்கு சென்றிருந்தாள். இரு தினங்களுக்கு முன்னரே மங்களூர் செல்வது தொடர்பாக அவளிடம் பேசியிருந்தார்கள்.
புதிய மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் இணையப் போகிறார் என்றும், அவரின் கீழ் பணி புரியப் போகும் இளம் மருத்துவர் வரும் வரைக்கும் அவளால் செல்ல முடியுமா என்றும் அவர்கள் கேட்க, அவளால் சட்டென மறுக்க முடியவில்லை.
நிர்வாகம் அவள் முடிவெடுக்க நேரம் கொடுத்தது. ஒரு வாரத்திற்குள் அவளின் முடிவை தெரியப்படுத்த சொல்லியிருந்தார்கள். ஆக, இப்போது எதற்காக அவளை அழைக்கிறார்கள் என்ற சிந்தனையுடன் உள்ளே சென்றாள்.
அவள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடையும் அளவில் நிர்வாகம் அவளுக்கு மருத்துவமனையில் வைத்து நடந்த தாக்குதலுக்கு முதலில் அவளிடம் மன்னிப்பை வேண்டியது. அது போன்ற அசம்பாவிதங்கள் இனி நேராமல் பார்த்துக் கொள்வது தங்களின் பொறுப்பு, கடமை என உறுதி அளித்தார்கள்.
மருத்துவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த மேலும் பாதுகாவலர்களை நியமிப்பது குறித்தும், அதிகமான கண்காணிப்பு கேமரா பொருத்துவதும் குறித்தும் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள்.
சிவரஞ்சனி அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தச் சம்பவம் அவளுக்கு மோசமான அனுபவத்தையும், மனநிலையையும் கொடுத்திருந்தது. அந்தக் குழந்தையின் தந்தையின் நிலையில் இருந்து பார்த்ததால் மட்டுமே அவளால் அதை எளிதில் கடக்க முடிந்தது. அன்று ஏற்பட்ட கால் சுளுக்கு கூட இன்னமும் முழுமையாக அவளுக்கு குணமாகாதிருக்கும் போது, மருத்துவமனை நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுத்ததை அவளால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
“தேங்க்யூ” என்றாள் மனதார. அவள் அறைக்குத் திரும்ப தேவன் அவளுக்காக காத்திருந்தான்.
அவனிடம் மருத்துவமனை நிர்வாகம் பேசியதை விவரித்து கொண்டே வீடு வந்தாள். தேவன் அதைக் கேட்டுக் கொண்டதோடு சரி, எதுவும் சொல்லவில்லை.
தேவராஜனின் வேலையாக இருக்கலாம் என்ற கணிப்பில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள் சிவரஞ்சனி.
அன்றிரவு, “நான் மங்களூர் போகவா தேவன்?” என்று அவள் கேட்கையில், “நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே” என்றான் தேவன்.
அவர்கள் தேனிலவிற்கு கேரளா சென்ற போது மனைவியிடம் தெரிந்த மாற்றம் அவன் கண் முன்னே வந்தது. இயற்கையின் ஏகாந்தத்தை அவள் ரசித்து நின்றது பசுமையாய் அவன் நினைவில் நின்றது. அது போன்றதொரு மாற்றம் அவர்களுக்கு நல்லது என அவன் நினைத்தான்.
தங்களை சுற்றி நடப்பதை நிறுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள் சிவரஞ்சனி. அவளுக்கு எதுவுமே புலப்படவில்லை. அப்பா, அண்ணனை எதிர்த்ததை போல பழனிவேலை எதிர்க்க முடியுமா? அவருக்கு திருப்பிக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என எவ்வாறு சிந்தித்தாலும் ஒன்றுமே சிக்கவில்லை.
ராஜாவின் பக்கமிருந்து பார்வையை ராணியின் பக்கம் திருப்ப வழிகளை தேடினாள் அவள்.
அவள் மனது நிலையின்றி தவித்துக் கொண்டிருந்தது. அவளின் உள்ளுணர்வு உணர்த்தியதை அவளால் ஒதுக்கவும் முடியவில்லை.
எதுவோ நிகழப் போகிறது. ஆனால், என்னவென்று அவளால் புள்ளிக் குத்த முடியவில்லை. எல்லாவற்றிலும் முற்றுப் புள்ளி வைப்பது தானே கடினம்.