இரண்டு நாள்கள் கழித்து சேதுராமன், சீதாலட்சுமி இருவரும் சென்னை வந்து விட்டார்கள்.
“தள்ளுங்க, தள்ளுங்க. நான் சமைக்கிறேன்” வீடு வந்ததும் சமையல் அறையை கைப்பற்றியிருந்தார் சீதா.
“இட்லிக்கு சாம்பார் மட்டும் தானா? சட்னி எதுவும் அரைக்கலையா? சள்ளு சுள்ளுன்னு காரமா மிளகா சட்னி அரைக்க வேணாமா?” என்று சத்தம் போட்டார்.
“இல்லம்மா. தம்பி காரம் சாப்பிட மாட்டார்னு..” புவனா தயங்கி சொல்ல,
“அதான் அவனுக்கு சாம்பார் இருக்கே. மருமகளுக்கு தனியா சட்னி செஞ்சிருக்கலாம் இல்ல?” என்றவர், அவரே தேவையான பொருட்களை எடுத்து சமையலில் இறங்கினார்.
“எனக்கும் சாம்பாரே போதும்த்த” என்றபடி சிவரஞ்சனி உள்ளே வர, “நீ சும்மா இருத்தா” என்று அவளையும் அதட்டினார் அவர்.
சமையல் உதவி ஆட்கள் அங்கிருந்து நகர, சிவரஞ்சனி மேடையில் சாய்ந்து நின்றாள்.
“உங்க ரெண்டு பேருக்கு சமைக்க ரெண்டு ஆள் வச்சும் கூட என்ன சமைச்சு சாப்பிடுறீங்க ரெண்டு பேரும்? நாளே நாள்ல நீ ஆள் அரவாசியா கரைஞ்சு போய்ட்டு இருக்க. ஜெய் கண்ணெல்லாம் உள்ள போய் கிடக்கு. ரெண்டு பேரும் வயித்துக்கு சாப்பிடுறது இல்ல போலயே..” என்று அங்கலாய்த்தவரும் இளைத்திருந்தார்.
“எங்க வீட்டுக்கு நீங்க கல்யாணம் பேச வரும் போது நான் உங்களை ரொம்ப டெரர்னு நினைச்சேன். தெரியுமாத்த?” பேச்சை மாற்றும் விதமாக அவள் புன்னகையுடன் கேட்க, “நானு இப்பவும் டெரர் தேன்” என்று கெத்தாக சொல்லி சிரித்தார் சீதா.
“அன்னைக்கு நீ ஒன்னும் என்னைய பார்த்து பயந்த மாதிரி தெரியலையே” என்று அவர் புருவம் சுருக்கி கேட்க, “நான் பயந்தேன்னு எப்போத்த சொன்னேன்?” என்று நமுட்டு சிரிப்புடன் கேட்டாள் அவள். அதற்கு சீதாவுமே சிரித்து விட்டார்.
“ஜெய் எங்களுக்கு தவமிருந்து கிடைச்ச ஒத்த புள்ள. இத்தன வருஷமும் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தான். நானும் அவனுக்கு எத்தனையோ பொண்ணுங்க ஃபோட்டோ காட்டினேன். ஆனா, அவனுக்கு பிடிச்சிருக்குன்னு என்கிட்ட சொன்ன மொத பொண்ணு நீதான். உங்களுக்கு கல்யாணமான நாள்ல இருந்து அவன் சந்தோசமா இருக்கறத பார்க்கும் போது என் பெத்த மனசு அப்படியே பூரிச்சு போகுது. உன்கிட்ட மாமியாதனத்தை காட்டி என் பிள்ளை சந்தோசத்தை நான் ஏன் கெடுக்க போறேன்?” என்று கேட்டார் சீதாலட்சுமி.
“ஆனாலும், உங்களுக்கு என் மேல கோபம் இல்லையாத்த? நான் உங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் உங்களுக்கு இவ்வளவு பிரச்சினை. எங்க வீடு, அப்பா, அண்ணா.. ஏன் நானுமே கூட…” என்றவளின் பேச்சில் இடையிட்டு, “பழசை பேசி என்னாகிட போகுது ரஞ்சனி? நாம அதை பேசி, புலம்பி, பிரச்சனை பண்றதால நடந்தது எதையாவது மாத்திட முடியுமா சொல்லு?” என்றவர், “உங்கப்பா, அண்ணனுக்கு நீ எப்படி பொறுப்பாவ?” என்றும் சேர்த்து கேட்க, மௌனமாய் நின்றாள்.
“எப்பவும் இனிமே நடக்கப் போறதை மட்டும் தான் பார்க்கணும் ரஞ்சனி. என்னைக்கு என் புள்ளை கூட நீ எங்க வீட்ல காலடி எடுத்து வச்சியோ, அதுக்கு பின்ன நீ எங்க வீட்டு பொண்ணு. உனக்கு ஒன்னுன்னா நாங்க சும்மா இருப்போமா?” அவரின் பேச்சு மனதை தொட, அவளுக்கு கண்கள் தளும்பி நின்றது.
“கௌரியோட அம்மா, என் தம்பி பொண்டாட்டி எல்லாம் உன்னால தான்னு என் மூஞ்சிக்கு நேராவே சொல்லத்தான் செஞ்சாங்க. நான் திருப்பி நல்லா பதில் கொடுத்துட்டேன். ஆமா, பாத்துக்கோ. குடும்பம்னா நாலு குளறுபடி நடக்கத் தான் செய்யும். அத எப்படி சரி செய்யுறதுன்னு பார்க்காம குறை சொல்லிட்டே திரிஞ்சா சரியா போகிடுமா? போங்கத்தா அங்குட்டுன்னு தொரத்தி விட்டுட்டேன்” என்று அவர் கோபமாக சொல்ல, கலங்கிய கண்களுடன் புன்னகைத்தாள் சிவரஞ்சனி. அவளிடம் பேசிக் கொண்டே வெங்காயம், தக்காளி வதக்கி அவளுக்காக தனியாக சட்னி அரைத்து தாளித்தார் சீதா.
இந்த அன்பை அம்மாவிடம் நிரம்ப எதிர்பார்த்திருந்தாள் சிவரஞ்சனி. அங்கு எப்பொழுதும் ஏமாற்றம் மட்டுமே அவளுக்கு மிஞ்சியிருக்கிறது. அப்பாவை மீறி அம்மா எதுவுமே செய்ததில்லை. அவளுக்காக பரிந்து பேசியது கூட கிடையாது. அவரைப் பொறுத்தவரை கணவருக்கு பின்னர் தான் பிள்ளைகள்.
“நீ போய் ஜெய்ய கூட்டிட்டு வா, நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கறேன்” என்று சீதா சொல்ல, சரியென்று நடந்தாள்.
அப்பாவுடன் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தான் தேவன். இருவரும் அவளைக் கண்டதும் அமைதியாகி விட்டார்கள்.
“சாப்பிட வாங்க மாமா” என்று அவள் அழைக்க, “நீ போம்மா. நாங்க இப்போ வர்றோம்” என்றார் சேதுராமன்.
உணவு மேஜையில் பொதுவான பேச்சுக்கள் தான் ஓடியது. தேவனே அவளை மருத்துவமனையில் விட்டான்.
“நீங்க டிரைவ் பண்ணாதீங்க தேவன். பசுபதி அண்ணாவை டிரைவ் பண்ண சொல்லுங்க. அவரை உங்க கூடவே கூட்டிட்டு போங்க” காரில் இருந்து இறங்கி நின்று அவள் சொல்ல, கேள்வியாக புருவம் உயர்த்தினாலும், சரியென்றே தலையசைத்தான் தேவன்.
மறுநாள் விடியலின் போதே அவளுக்குள் ஒருவித படப்படப்பு. தேவன் இயல்பாய் அவளை உரசி சீண்டி செல்ல, அவள் உடலில் நிதானமே இல்லை. அவனையே இமைக்காமல் பார்த்து நின்றிருந்தாள்.
“நான் மங்களூர் போக ஓகே சொல்லிடவா தேவன்? நீங்களும் என் கூட வர்றீங்களா?” ஏதோ ஒரு உந்துதலில் அதைக் கேட்டு விட்டாள்.
சட்டை அணிந்து கொண்டிருந்தவன் நேராக அவள் முன் வந்து நின்றான். அவனுக்கு புன்னகையுடன் சட்டை பொத்தான்களை போட்டு விட்டாள் அவள்.
“எனக்கு அடுத்த வாரம் நாலு சாங் ரெக்கார்டிங் இருக்கு. அந்த கவர்மென்ட் புராஜக்ட் பத்தி சொல்லியிருந்தேன் இல்ல? பெண் கல்வி அன்தெம். அந்த பாட்டும் பத்து நாள்ல ரெக்கார்ட் பண்ற மாதிரி இருக்கும். அதுக்கு ரத்னம் சாரோட வீடியோ ஆல்பம் ஷூட்டிங்கும் தேதி கொடுத்துட்டேன். எல்லாமே அடுத்தடுத்து வருதே சிவரஞ்சனி?”
என்றவனாலும் மனைவி ஆசையாக கேட்கும் போது மறுக்க முடியவில்லை. அவனது பணி சூழல் சென்னையில் இருந்து நகரவும் முடியாது.
“மங்களூர் போறதுன்னு முடிவே பண்ணிட்டியா?” அவன் கேட்க, “போகவா?” என்ற கேள்வியை பதிலாக தந்தாள்.
‘ராஜாவுக்கு வைத்த குறி ராணியின் பக்கம் திரும்பும் என்றால், நான் போகத் தயார்’ என்று மனதிற்குள் திடமாக சொல்லிக் கொண்டாள். அதை அறியாதவன், “நான் டாக்டர் தேவாகிட்ட விசாரிச்சுட்டேன். அது புது ஹாஸ்பிடல்ங்கிறதால செக்யூரிட்டி அதிகமா இருக்கும்ன்னு அவர் சொன்னார். நாம பயப்படத் தேவையில்லன்னு சொன்னார். நீ வேணும்னா மேங்களூர் போய்ட்டு வாயேன்” என்று தேவன் சொல்ல, கணவனும் தன்னை சென்னையில் இருந்து வெளியேற்ற முயல்கிறானோ என்ற சந்தேகத்துடன் அவனைப் பார்த்தாள் அவள்.
“உனக்கு விருப்பம் இல்லனா விடு. நீ போகலைன்னா நானும் உன்னை மிஸ் பண்ண மாட்டேன்” என்றான் அவளை மென்மையாய் அணைத்து.
“உனக்கென்ன ஜாலியா போய்டுவ. நீ என்னை இத்துணூண்டு கூட மிஸ் பண்ணவும் மாட்ட. கேட்டா காதலும் இல்லைன்னு சொல்லுவ. ஆனா, நீயில்லாம என்னால இருக்க முடியாது” அவள் முகத்தை கையில் ஏந்தி தேவன் சொல்ல, அவன் விழிகளில் விழி பதித்து அவனையே பார்த்திருந்தாள் அவள்.
“இப்பயும் ஏதாவது சொல்றியா? மனுஷ மனசு புரியாத மருத்துவர்” என்று அலுத்துக் கொண்டு மனைவியை விடுவித்தான்.
அன்று மருத்துவமனை சென்று முதல் வேலையாக அண்ணனை அழைத்தாள் சிவரஞ்சனி. அவளுக்கு கல்யாணம் முடிந்த நாளில் இருந்து அண்ணனின் அலைபேசி அழைப்பை அவள் ஏற்பதில்லை.
அதிலும் சமீபமாக அவன் பல முறை அழைத்தும் பதிலளிக்கவில்லை. இன்று மனதிற்குள் ஒரு நெருடல் இருந்து கொண்டேயிருக்க, அண்ணனுக்கு அழைத்திருந்தாள்.
“ரஞ்சி” என்று அழைப்பை ஏற்றதும் கத்திய நெப்போலியனின் குரலில் அதிர்ச்சியே அதிகமிருந்தது.
“ரஞ்சி, நீ தானா? என்னாச்சு?” என்று அவன் பதற, “பழனிவேலை என்ன பண்றதா இருக்க நீ” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் அவள்.
“அது, நீ என்ன கேட்கறன்னு…”
“அவரை என்ன பண்ண பிளான் பண்றண்ணா?”
“பிளானா? என்ன கேட்கற நீ? அப்படியெல்லாம் ஒன்னுமில்லயே. நான் சும்மா அவரை மிரட்டினேன். அவ்ளோதான். அது உனக்கெப்படி தெரியும்?”
“என்ன பிளான் பண்றன்னு கேட்டேன்.”
“நானும் இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன்..”
“அண்ணா..” என்று அடித் தொண்டையில் இருந்து கத்தினாள்.
“மூளையே இல்லாத முட்டாளா நீ. அவரை ஆக்ஸிடென்ட் பண்ணிட்டு ஜெயிலுக்கு போக போறியா? இல்ல, அந்தாள் தப்பி பிழைச்சு என் குடும்பத்தை ஒட்டு மொத்தமா அழிக்கணும்னு ஆசைப்படுறியா நீ?” என்று அவள் ஆத்திரத்துடன் கேட்க, “ஐயையோ இல்ல ரஞ்சி..” என்று அலறினான் அவன்.
“நான் உனக்காகதான்..”
“தயசு செஞ்சு எனக்காக நீ எதுவும் செய்ய வேணாம். எனக்கு நீ பண்ற பெரிய உதவியே அதான். புரிஞ்சுதா?”
“அந்தாள் பேர்ல பண மோசடி, ஆள் கடத்தல், லாண்ட் மோசடின்னு அஞ்சாறு போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க வச்சுட்டா போதும்னு மாப்ள சொன்னாராக்கும்? அவனுக்கு அதெல்லாம் தூசி மாதிரி. தட்டிட்டு வெளில வந்துடுவான்” என்று நெப்போலியன் சொல்லிக் கொண்டே போக, பழனிவேலை மடக்க சட்டரீதியாக இத்தனை செய்திருக்கிறானா தேவன் என்று ஆச்சரியமடைந்தாள் அவள்.
சேதுராமன் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று நெப்போலியன் அடுக்க, அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான்.
“அவங்க பண்றது தான் அந்தாளை அசைக்காது. நான் லேசா தட்டி வைக்கிறேன். அப்போதான் அடங்குவான்” என்று நெப்போலியன் சொல்ல, கோபத்துடன் பல்லைக் கடித்தாள் சிவரஞ்சனி.
“அவங்க பண்றது தான் சரி. நீ ஆக்ஸிடென்ட் பண்றேன், அடக்கி வைக்கிறேன்னு உன் ஆட்களை வச்சு சொதப்பி வைக்காத. அந்தாள் அதுக்கும் எங்க மேல தான் பாய்வார். முதல்ல அவரை இப்படி ஆக்ஸிடென்ட் பண்ணனும்னு நீ நினைக்கிறதே ரொம்ப தப்பு. என் பேரை சொல்லி நீ அவரை எதுவும் பண்ணா.. அப்புறம் அவருக்கும், எனக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?” அவள் சுள்ளென்று கேட்க, “அந்த கேடு கெட்டவன் எல்லாம் அழிஞ்சு தான் போகணும்.. அவனுக்கு நீ சப்போர்ட் பண்ணி பேசாத..” என்று அவளையே அதட்டினான்.
“என்னைப் பொறுத்தவரை நீயும் கெட்டவன் தான். அதுனால ரொம்ப ஆடாம அமைதியா இரு. அதான் நீ எனக்கு பண்ற பெரிய ஹெல்ப். சரியா?”
“ம்ம்..” மேலே அவன் பேச இடம் கொடுக்காமல் இணைப்பை துண்டித்திருந்தாள் அவள்.
அவளின் எச்சரிப்பை நெப்போலியன் செவிசாய்ப்பானா என்று கவலைக் கொண்டது அவள் மனது.
அவளுக்கு இப்போதே லேசாக தலையை வலித்தது. நெப்போலியனிடம் பேசியதை பற்றி தேவனிடம் சொல்ல எண்ணி அவனுக்கு அழைத்தாள். அவன் வேலையாக இருப்பதாக சொல்லவும், பின்னர் அழைக்கிறேன் என்று வைத்து விட்டாள்.
அதன் பின்னர் அவளும் தன் பணியில் மூழ்கினாள். மதியம் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பசுபதி தான் வந்தார். மாலை அவள் மருத்துவமனை கிளம்பும் நேரம்தான் வீடு வந்தான் தேவன். அதனால் இருவரும் பேசுவதற்கு நேரம் வாய்க்காமலே போனது.
சீதாலட்சுமி, சேதுராமன் இருவரில் ஒருவரிடமாவது தெரியப்படுத்தி இருக்கலாம். அவளுக்கு இருந்த மன அழுத்தத்தில் அதையும் செய்யவில்லை அவள்.
“நீ வெயிட் பண்ணு. உன்னை நான் ட்ராப் பண்றேன்” என்று தேவன் சொல்ல, “நீங்க திரும்பவும் வெளில கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம், சாங் ரெக்கார்டிங் இருக்கு. உன்னை ட்ராப் பண்ணிட்டு ஸ்டுடியோ போறேன் நான். நைட் சீக்கிரம் வந்துடுவேன்” என்று சமாதானம் சொன்னான் தேவன்.
“இப்போ போகலாம்” என்றாள் புன்னகையுடன். அந்த புன்னகை அவன் உதட்டிலும் பரவ காரை நகர்த்தினான் தேவன்.
மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஸ்டுடியோ சென்றான். பசுபதி பின்னிருக்கையில் சாய்ந்து உறங்கிட அவரை எழுப்பி தொந்தரவு செய்யாமல் அவனே காரை செலுத்தினான்.
ஒன்பதரை மணிக்கு பணி முடிந்து தளர்ந்து அமர்ந்தாள் சிவரஞ்சனி. சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்திருந்து விட்டு அவள் ஓய்வறை செல்ல வெளியில் வர, மருத்துவமனை காத்திருப்பு பகுதியில் இருந்த தொலைக்காட்சி அவள் பார்வை வட்டத்தில் விழுந்தது.
அவள் கண்களில் விழுந்தது, மனதில் பதியாமல் ஓய்வறைக்குள் நுழைய போனாள். உள்ளுணர்வு உந்த நின்ற இடத்தில் இருந்தே அவள் திரும்பிப் பார்க்க, அதிக சத்தமில்லால் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
“காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார் அவரின் சகோதரன்”
“திருமணம் முடிந்து ஐந்தாண்டுகள் கழித்து இரண்டு குழந்தைகளின் கண் முன்னே அவர்களின் தாய் குத்திக் கொல்லப்பட்டார்”
“தமிழகத்தில் தொடரும் இது போன்ற ஆணவ கொலைகளுக்கு…”
என்ற செய்தியை தொடர்ந்து,
“இந்த ஆணவ கொலை தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர் பழனிவேலிடம் கருத்து கேட்க..” அதற்கு மேல் அவள் எதையுமே கேட்கவில்லை. ஒரு நொடி அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள் சிவரஞ்சனி.
அவளுக்கு கைகளெல்லாம் உதறியது. அந்த நிமிடமே தேவனை காண துடித்தாள். அவனைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். அவன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவளால் அவனுக்கு எதுவும் நேர்ந்து விடக் கூடாது. அவளை பழி வாங்க, பலி கொடுக்க பின்னப்படும் இந்த வலையில் அவன் சிக்கிட கூடாது.
அவளால் அவனுக்கு எதுவும் நேர்ந்திடக் கூடாது. அவளுக்கு பிரியமும், காதலுமான ஒரு உலகத்தை பரிசளித்தவன் அவன். அவளிடம் காதலை மட்டுமே எதிர்பார்த்தவன். இதுநாள் வரை அவனிடம் அவள் காதல் கூட சொன்னது கிடையாது. அவர்கள் நிரம்ப மகிழ்ச்சியான மண வாழ்க்கையை வாழ்ந்தார்கள் தான். அவன் வேண்டி கேட்ட காதலை அவள் சொன்னாளா? இல்லையே.
இந்த கணமே அவனிடம் சென்று கத்தி சொல்ல வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அவசர அவசரமாக வெளியே வந்தாள் சிவரஞ்சனி.
தேவனுக்கு பாடல் பதிவுக்கு நடுவே மனைவியின் நினைவு வந்தது. அந்த பாடல் சிவரஞ்சனி ராகம் என்பதால் கூட இருக்கலாம். இல்லையென்றாலும் அவனுக்கு எப்போதும் அவள் நினைவு தான்.
அவளுக்கு பணி முடிய அரை மணி நேரமே இருக்கிறது என்பதை கண்டவன், அனுமதி பெற்று அவசரமாய் வெளியில் வந்தான்.
அடுத்த பத்தாம் நிமிடம் தேவனின் கருப்பு நிற பிஎம்டபிள்யூ கார் அசுர வேகத்தில் பின்னால் இருந்து இடித்துத் தள்ளப்பட்டிருந்தது.