“சாரி டாக்டர், உங்க அப்பாய்ண்மெண்ட் வாங்க மறந்துட்டேன்” ஒற்றை கண்ணடித்து கிண்டலாக சொன்னான் தேவன்.
“என்ன அப்பாய்ண்மெண்ட்?” என்று புரியாமல் கேட்டவள், கணவனின் சிரிப்பை பார்த்ததும், “திமிரை பாரேன்” என்று அவன் தோளில் அடித்தாள்.
“ஹாஸ்பிடல்ல தான் அப்பாய்ண்மெண்ட் எல்லாம். வீட்ல இல்ல” என்றாள்.
“அப்பவும் எனக்கு அது தேவைப்படாது.” என்றான் அவளை தன்னோடு இறுக்கி அணைத்து. “நான் லைஃப் டைமுக்கு அப்பாய்ண்மெண்ட் வாங்கியிருக்கேன் டாக்டர்” கரகரத்த குரலில் அவள் காதில் கிசுகிசுத்தான். உடல் சிலிர்க்க, “வசனம் பேசாதீங்க..” என்றாள் சிரிப்புடன்.
“நான் உண்மையை சொன்னேன் டாக்டர்” என்று அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன், அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான். அந்தப் பார்வை அவளை இம்சை செய்தது. ஆனாலும், அவளால் இமைக்கவும் முடியவில்லை. அவன் கண்ணில் கட்டுண்டு நின்றாள்.
“வருவான் காதல் தேவன்னு என் தலைவி தாபத்தில் உருகும் போது, நான் வராம இருப்பேனா சொல்லு? அதுவும் வளையல் ஓசை ராகமா இசைப்பேன்னு நீ பாடின பின்னாடி வராம இருக்க நான் என்ன மடையனா?” என்று குறுநகையுடன் அவன் கேட்க, சிரித்து விடாமல் இருக்க சிரமப்பட்டாள் சிவரஞ்சனி. அவளுக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.
“அது பாட்டு வரி, நான் ஒன்னும்..” என்றவளால் மேலே பேசமுடியவில்லை. அவள் மேனியை மழை மெல்ல நனைக்க, தேவனின் பார்வை அதில் சிலிர்ப்பூட்டியது.
“நான் பாட ஆரம்பிச்ச புதுல காதலேன்னு உருகி பாடும் போது, இப்படியெல்லாம் ஒரு ஃபீலிங் நிஜமா இருக்கான்னு நினைச்சுருக்கேன். அப்புறம் ஒரு காதல் தோல்வி வந்து, லவ் மேல கொஞ்சம் வெறுப்பு கூட வந்தது. ஆனா…” தேவன் சொல்ல, அவன் கழுத்தில் கரம் கோர்த்து அவன் விழிகளில் விழி பதித்து நின்றாள்.
முகத்தை அப்பாவியாக வைத்து, “ஆனா…” என்று கேட்டாள்.
“ஆனா, இப்பவும் காதல்னா கொஞ்சம் காமெடியா தான் இருக்கு. ஆனா, நீயில்லாம என்னால தனியா இருக்க முடியல. உன்னை பார்க்காம, பேசாம, முக்கியமா நிமிஷத்துக்கு ஒரு முறை நீ போடுற சண்டை இல்லாம என்னால இருக்க முடியல. உன்னோட கேலி, கிண்டல், நக்கல்ன்னு.. எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்ணேன். அதான் உன்கிட்ட ஓடோடி வந்துட்டேன். ஒருவேளை இதுக்கு பேர் தான் காதல்னா..” தீவிரமாக சொல்லிக் கொண்டு போனவனை, முறைத்தாள் சிவரஞ்சனி.
“சண்டக்கோழி” என்று சிரித்து, காற்றுக்கு பறந்த அவளின் சேலை தலைப்பை பற்றி இருவரின் தலைக்கும் குடையாக்கினான்.
“அச்சோ, வாங்க வீட்டுக்குள்ள போகலாம். நீங்க மழையில நனைஞ்சா அவ்ளோதான். உங்களுக்கு லேசா சளி பிடிச்சாலும் என் ஜீவனை வாங்கிடுவீங்க..” என்று பதறினாள்.
“இட்ஸ் ஓகே. எப்பவாவது தானே நனையறேன். ஒன்னும் ஆகாது” என்றவனை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்றாள் சிவரஞ்சனி. மனைவியின் சேலையை கையில் சுற்றியபடி, “இதுக்கு பேர்தான் முந்தானையில் முடியறதா?” என்று வம்பு பேசினான் தேவன்.
“நானா உங்களை முடிஞ்சுருக்கேன்?. நீங்கதான்…” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், முழுதாக சேலை அவன் வசமாகியிருந்தது. தேவன் எப்போதும் சிவரஞ்சனி வசம்தான் என்று மீண்டுமொருமுறை அழுத்தமாக, அன்பால் அவளுக்கு உணர்த்தினான். காதலுக்கு அர்த்தம் தேடிய இருவரையும் கட்டிப் போட்டிருந்தது அவர்களின் காதல்.
தேவன் வீடு வந்ததும், அவளின் தனிமையின் தவிப்பு, தடயமின்றி காணாமல் போனது.
சிவரஞ்சனி தினமும் மருத்துவமனை செல்ல, தேவனுக்கு வீட்டில் இருந்தே பார்க்க ஆயிரம் வேலைகள் இருந்தது. இடையிடையே சென்னை, மதுரை என வேலை விஷயமாக சென்று வந்தான் அவன்.
அப்படியே ஒரு மாதம் கழிய, மழைக்கால மாலையை ரசித்தபடி ஜன்னலோரமாய் நின்றிருந்த தேவனின் கையில் தேநீர் கோப்பையை கொடுத்து விட்டு, “நாளைக்கு எனக்கு ஆஃப்” என்று அறிவித்தாள் சிவரஞ்சனி.
அவளுக்கு பின்னே தலை வாராமல் பூச்சூடி இருந்த மல்லிகை கொடியை, மனைவியை அணைத்து வாசம் பிடித்தான் தேவன்.
“தேவன்..” என்று சிணுங்கினாள். “பூ வாசம் புறப்படும் பெண்ணே..” என்று அவன் பாடவும் புன்னகைத்தாள்.
மெல்ல புரண்டு சாய்வாக படுத்து, படுக்கையில் கையூன்றி, அதில் தலையை வைத்து, கணவனை பார்த்திருந்தாள்.
“குட் மார்னிங்” என்றான் அவளின் பார்வையை உணர்ந்து.
“ம்க்கும்..” என்று தொண்டையை செருமினாள்.
“என்ன பாட போறியா?” என்று அவளைப் போலவே நக்கலாக வினவினான். கண்ணை சுருக்கி கணவனைப் பார்த்தாள்.
“உன் பார்வையே சரியில்லையே, என்ன காலையிலேயே கச்சேரியை ஆரம்பிப்போமா சிவரஞ்சனி ராகமே..” என்று சிரிப்புடன் கண்ணடித்து கேட்டவனின் பார்வை, அவளை தலை முதல் கால் வரை வருட, “உங்க கச்சேரியே வேணாம். ஆளை விடுங்க” என்று உதடு சுளித்தாள்.
“நேத்து நைட் நீ கச்சேரியை ஆரம்பிக்கும் போது, நான் ஏதாவது சொன்னே..” படுக்கையில் இருந்து படக்கென எழுந்தோடிப் போய் கணவன் மேல் பாய்ந்து அவனை பேச விடாமல் செய்தாள். தேவன் நிலைத்தடுமாறி மனைவியை அணைத்தபடி பின்னே சரிந்தான்.
“நீ தானே நான் பாடும் சிவரஞ்சனி…” என்று மந்தகாச புன்னகையுடன் பாடியவன், அவனது குரல் பயிற்சியையும், உடல் பயிற்சியையும் சேர்த்தே சிவரஞ்சனி ராகத்தில் முடித்திருந்தான்.
அன்று விடுமுறை என்பதால், படுக்கையை விட்டெழ மனதில்லாமல், சோர்வுடன் சுருண்டு கொண்டாள் சிவரஞ்சனி.
காலை உணவுக்கான நேரத்தில், “தூங்கினது போதும் எழுந்திரு” என்று அவளை எழுப்பினான் தேவன். மெல்ல புரண்டு அவன் மடியில் தலை வைத்து உறக்கத்தை தொடர்ந்தாள்.
“தூங்கு மூஞ்சி, எழுந்திரு” என்று அவளை உலுக்கினான். பட்டென கண்ணைத் திறந்து அவனை முறைத்தாள்.
“எனக்கு போராடிக்குது, எழுந்திரு பிளீஸ்” என்று கெஞ்சினான். அது கொஞ்சம் வேலை செய்தது.
“ஆனாலும், நீ ரொம்ப பண்ற தெரியுமா?” ஓய்வறைக்குள் நுழைந்தவளை நோக்கி கத்தினான்.
“ஓ, நல்லா தெரியுமே” என்று நக்கலாக சொல்லி விட்டு, கதவடைத்தாள் சிவரஞ்சனி.
“அப்போ தெரிஞ்சே பண்ற இல்ல? வெளில வா, உனக்கிருக்கு கச்சேரி.” என்று கத்தினான்.
“வாட்? இன்னொரு கச்சேரியா? என்னால முடியாது காதல் தேவன்” அவள் தீவிரமாக சொல்ல, அவனுக்கு வெட்கம் வந்து தொலைத்தது.
“உன்ன..” என்றவன் சத்தமாக சிரித்து விட்டான். அவள் குளித்து வெளியே வந்து உடை மாற்ற எடுத்துக் கொண்ட அரை மணி நேரமும் சிரிப்பும், சீண்டலுமாகவே கழிந்தது.
அவர்களுக்கு காலை உணவாக பொங்கல், வடை, சாம்பார் செய்திருந்தார் பேச்சி.
“பெஸ்ட் ப்ரேக்பாஸ்ட். நான் சாப்பிட்டு போய் தூங்கறேன்” என்று பொங்கலை ருசித்தபடி அவள் சொல்ல, இப்போது முறைப்பது தேவனின் முறையானது. அவள் கையில் அள்ளிய உணவை, அவள் கைப் பிடித்து தனக்குத் தானே ஊட்டிக் கொண்டான் தேவன்.
“தூங்கப் போறியா? நோ வே. நாம வெளில போறோம்” என்றான் தேவன்.
“வெளில போறோமா? எங்க?”
“அதெல்லாம் சொல்ல முடியாது. அது சஸ்பென்ஸா தெரிஞ்சுக்க வேண்டிய சர்ப்ரைஸ்” என்றான். வேண்டுமென்றே கொட்டாவி விட்டு அவனை வெறுப்பேற்றினாள்.
“என்கிட்ட கேட்காம எப்படி நீங்களா முடிவு பண்ணுவீங்க?”
“எனக்காக வர மாட்டியா நீ?”
“எனக்காக கூட வர மாட்டேன்.” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.
“தூங்கு மூஞ்சி” என்றான் கடுப்புடன்.
“ஹா, என்ன வேணாலும் சொல்லிக்கோங்க. நான் சாப்பிட்டு போய் குட்டித் தூக்கம் போடுவேன். அப்புறம் மதியத்துக்கு பேச்சியக்கா மேங்களூர் மீன் குழம்பும், பிரான் ஃப்ரையும் செய்து தருவாங்க. லஞ்ச் நல்லா சாப்பிட்டுட்டு மதியத்துக்கு மேல படம் பார்க்கலாம்னு இருக்கேன். உங்க ரத்னம் சாரோட புதுப்படம்தான் பார்க்கணும்னு நினைச்சேன். அதுல பாட்டெல்லாம் ஹிட்டு. ஆனா, படம் நல்லா..”
“ஏன் பாட்டையும் நல்லா இல்லைன்னு சொல்லேன்..”
“ச்சே ச்சே. அப்படிச் சொல்லி மிஸ்டர் காதல் தேவனை ஹர்ட் பண்ண மாட்டேன். அவர் வேற ரெண்டு பாட்டு பாடியிருக்கார். நான் ஏதாவது சொல்லி அவர் அழுதா…” வம்பு பேசிய வாயை இடக்கரம் கொண்டு அழுத்தமாய் பற்றி அவளின் பேச்சை நிறுத்தினான். உதடுகள் பிரிந்திருந்தாலும் அவளால் பேச முடியவில்லை.
“விடுங்க..” குழறலாய் வந்து விழுந்தது எச்சரிக்கை.
“என் கூட வெளில வர்றேன்னு சொல்லு, விடுறேன்” என்று மிரட்டினான். சிரிக்க முடியாமல் சிரித்தாள்.
“முடியாது..” என்று தலையசைத்தாள்.
“நான் சொன்னா உடனே முடியாதுன்னு மல்லுக்கு நிக்கணும் உனக்கு. இல்ல? என்ன டிசைன் இது?” அவன் கையை உதறி கோபமாக கேட்க, கன்னம், உதடு, தாடை என முகத்தை தேய்த்து விட்டு மெலிதான வலியுடன் கணவனை முறைத்து, “அந்த டிசைனுக்கு பேரு பொண்டாட்டி” என்றாள்.
“மேரேஜஸ் ஆர் மேட் இன் ஹெவன்னு நேத்து சொன்னவருக்கு பொண்டாட்டி பெருமை தெரியல” போலியாக அலுத்துக் கொண்டாள்.
“அது ஹெவன்னு நான் எப்போ சொன்னேன்..” என்று வெட்கச் சிரிப்புடன் கேட்டவனின் துளி கோபமும் அக்கணம் காணாமல் போயிருந்தது. இந்த சமாதானமே தேவைப்படாத செல்லச் சண்டைகளே அவர்களின் வாழ்க்கைக்கு அதிக சுவாரசியம் சேர்த்தது.
அவனிடம் முடியவே முடியாது என்று சொன்னவள், காலை உணவு முடித்து, தேவன் அலுவலக அழைப்பு ஒன்றை பேசி முடிக்கும் நேரத்தில், அவனுக்கு முன்னே தயாராகி வந்து நின்றாள்.
“சேலை ஓகேவா தேவன்? இல்ல, பீச், டிரெக்கிங்னு பிளான் பண்ணியிருக்கீங்களா சொல்லுங்க. அதுக்கேத்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வர்றேன்” சேலையை சரி செய்தபடி கேட்டாள்.
கருநீலத்தில் ஆங்காங்கே வெள்ளை பூக்கள் வரைந்திருந்த மென்மையான மல்மல் சேலை அணிந்திருந்தவள் அவன் மனதை முழுவதுமாய் கொள்ளை கொண்டாள். மனைவியை நெருங்கி நின்றான் தேவன்.
“அது என் இடுப்பு..” என்று அவன் இடுப்பில் இடித்துச் சொன்னாள்.
“ஓ, சாரி. எனக்கு இந்த சேரி எப்பவும் வில்லன்தான். அதுனால..” என்றவனை முறைத்து, “வெளில போகணும்னு சொன்னீங்க.” என்று கண்ணை உருட்டினாள்.
“ம்ம்” என்று அலுத்து, “மொத்தமா கிடைக்காட்டி போகுது. முத்தமாவது குடு” என்று கொஞ்சி, முத்தமிட்டான்.
அரை மணி நேரத்திற்கு பிறகு, பழுது பார்க்கப்பட்டு புத்தம் புதிது போல பளிச்சிட்ட தேவனின் பிஎம்டபிள்யூ கார் அவர்களை சுமந்து கொண்டு உடுப்பி நோக்கி பயணித்தது.
இருவரும் பேச்சு, செல்லச் சண்டை, பாட்டு என பயணத்தை ரசித்து மேற்கொண்டனர். எங்கு செல்கிறோம் என்ற கேள்வியை மீண்டும் கேட்கவில்லை சிவரஞ்சனி.
“காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்..” அவள் பாட,
“ரொம்ப தப்பான நேரம் செல்லம். இந்நேரம் பாட வேண்டிய பாட்டா இது?” என்று தேவன் கோபிக்க, கிண்டலாக சிரித்தாள். கார் உடுப்பியை கடந்து வேறொரு பாதையில் பயணிப்பதை அப்போது தான் கண்டாள் அவள். ஆனாலும், கேள்வி கேட்கவில்லை.
காரின் கண்ணாடி இறக்கி விடப்பட்டிருக்க, இதமாய் அவளைத் தழுவிச் சென்றது மலையமாருதம். கணவனின் பாடல்களோடு தழுவிய காற்றும், அவளைத் தாலாட்ட, கண்ணயர்ந்து விட்டாள். கார் மலையேறத் தொடங்கவும், அவளின் உறக்கம் கலைந்துப் போனது.
மலையும் மழையுமாக மனதை கொள்ளை கொண்டது இயற்கை.
“ஆகும்பே போய்ட்டு இருக்கோம். நாம இந்த ஊரை கண்டிப்பா விசிட் பண்ணனும்னு தேவா டாக்டர் சொன்னார். இன்னும் இருபது நிமிஷத்துல போயிடலாம்” என்று தேவன் சொல்ல, மௌனமாய் கேட்டுக் கொண்டாள்.
“அவங்க ஹனிமூன் வந்த ஊராம் இது” ரகசிய குரலில் சொன்னான்.
“நமக்கு கல்யாணமாகி பல மாசமாகிடுச்சு. அதுவுமில்லாம நாம ஏற்கனவே ஹனிமூன் போயிட்டோம்”
மனைவியின் பதிலை கேட்டதும் கடுப்புடன், “சோகத்த..” என்றான் புலம்பலாக.
“இதை மட்டும் சரியா செய்” என்று சலித்துக் கொண்டான் தேவன்.
“ஹனியும், மூனும் பக்கத்துலயே இருக்கவங்களுக்கு தினமும் ஹனிமூன் தான். பேரை பாரு காதல் தேவன்னு, பெருசா பேச வந்துட்டார்” அவளின் நக்கலை எங்கே கவனித்தான் அவன்.
“வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே” என்று பாடி, “ம்ம், என் நிலா எப்பவும் நீதான்” என்று அவள் சொன்னதின் அர்த்தத்தை சொல்லிப் பார்த்து பூரித்தான். ஆனால், சிவரஞ்சனி அப்படியெல்லாம் விட மாட்டாளே. ஏடாகூடமாக பதில் கொடுத்து அவனை எகிற வைத்தாள். சிரிப்பும், முறைப்புமாக ஆகும்பே சென்றடைந்தார்கள்.
அதிக மழைப் பொழிவை கொண்ட அந்த ஊர், இப்போதும் மழையில் நனைந்து மிகப் பொலிவாக நின்றது.
காரில் இருந்து இறங்கியதும், அவளுக்கு மழையினால் உடல் நடுங்கியது.
கைகளை ஒன்றோடொன்று பரபரவென தேய்த்து சூடானதும் கன்னங்களில் வைத்துக் கொண்டாள்.
“வா, டீ குடிக்கலாம்” அவளுடன் கைக் கோர்த்து அங்கிருந்த கடைக்கு அழைத்துச் சென்றான்.
சாலையில் இருந்து ஒதுங்கி ஓரமாக மறைவாக அமைந்திருந்தது அந்தக் கடை. தேநீர், சிற்றுண்டி மற்றும் மலைப் பயணத்திற்கு அத்தியாவசியமான பொருட்களை உள்ளடக்கிய சிறிய நவீனமாக இருந்த அந்தக் கடையை ஆச்சரியமாக பார்த்தாள் சிவரஞ்சனி.
பத்து பேர் அமரும் வகையில் சில மேஜைகளும், இருக்கைகளும் ஒரு பகுதியில் போடப்பட்டிருந்தது. அவர்கள் சென்ற நேரத்தில் யாருமே இல்லை. அவர்களைக் கண்டதும் இளைஞன் ஒருவன் ஓடி வந்தான்.
மனைவிக்கு இருக்கையை இழுத்துப் போட்டு தானும் அமர்ந்தான் தேவன்.
“டீ சொல்லவா?”
“ம்ம்”
“மங்களூர் போண்டா, மைசூர் போண்டா சொல்லவா?” என்று கேட்டவனை சிரிப்புடன் முறைத்து, “ஒன்னும் வேணாம்” என்றாள்.
“ரெண்டு டீ கொடுங்க. ஹம்ம், இஞ்சி போட்டு தர முடியுமா?” என்று கேட்ட தேவன், அந்த இளைஞன் தலையசைக்கவும், “விண்டோ க்ளோஸ் பண்ண முடியுமா? மழைச் சாரல் மேல படுது” என்றான் கன்னடத்தில். அந்த இளைஞனின் பார்வை மனைவியின் மேல் படிந்து மீள்வதை கண்டதும் இறுக்கமானான் தேவன். சட்டென இருக்கையை நகர்த்தி அவளுக்கு நெருக்கமாக போட்டு அமர்ந்தான். அலைபேசியில் மின்னஞ்சல் பார்த்துக் கொண்டிருந்த சிவரஞ்சனி நிமிர்ந்து கண்களால், “என்ன?” என்று கணவனிடம் கேட்டு, திரும்பவும் அதில் மூழ்கினாள். அவள் நிமிர்ந்து பார்த்த அந்த ஒற்றை நொடி அந்த இளைஞனின் கண்களில் வந்து போன பாவனையை தேவன் வெறுத்தான். பொதுவாக இது போன்ற பார்வைகள் பிரபலம் என்பதால் அவன் மீதுதான் விழும்.
மனைவியின் மேல் விரும்பாத பார்வை பட்டதும் அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“ஓகே சார்” மிகத் தாமதமாக பதில் தந்து, மீண்டும் சிவரஞ்சனியை பார்த்தான் எதிரில் நின்றவன்.
தேவன் எரிச்சலுடன் மனைவியின் கைப் பிடித்தான். அவள் நிமிரவும், “உனக்கு கண்டிப்பா டீ குடிக்கணுமா?” என்று கேட்டான். அவன் கண்களை பார்த்ததும், “வேணாம். வாங்க, போகலாம்” என்று அவளும் சொல்ல, “சாரி. நீங்க உட்காருங்க. ஒரே நிமிஷம். நான் டீ எடுத்துட்டு வர்றேன்” என்று பதறினான் இளைஞன்.
“இல்ல..” என்று தேவன் சொல்வதற்குள், உள்ளிருந்து ஒரு குரல் அந்த இளைஞனுக்கு ஏதோ கட்டளையிட்டது.
அதிகாரமும், எரிச்சலுமாக ஒலித்த அந்தக் குரலுக்கு உடல் இறுகினான் அவன். தேவன், சிவரஞ்சனி இருவரின் கண்களும் குரல் வந்த திசையில் பார்த்தது.
மீண்டும் எதையோ சொன்னது பெண் குரல். சிவரஞ்சனிக்கு இப்போதும் முகம் தெரிய, சடாரென்று எழுந்து விட்டாள் அவள்.
“ஹேய்..” என்று மனைவியின் கரம் பற்றினான் தேவன்.
“நீங்க…” என்று தமிழில் ஆரம்பித்த சிவரஞ்சனி, அந்தப் பெண்ணை நோக்கி நடக்க முற்படும் முன்னர், அவளை அதிர்ந்த விழிகளுடன் நோக்கி, அடுத்த கணமே காணாமல் போனாள் அந்தப் பெண்.
“என்னாச்சு.. யார் அது?” தேவன் கேட்க, “என் காலேஜ் சீனியர் போல இருந்தது தேவன். ஆனா, வேற யாரோ போல. தெரியல” என்று தோள் குலுக்கியவளை விசித்திரமாக பார்த்து விலகிச் சென்றான் கடையில் இருந்த இளைஞன்.
அதன் பிறகு அவன் பார்வை அவள் மேல் படவேயில்லை. சிவரஞ்சனி கணவனுடன் சிரித்து பேசி, தேநீர் அருந்தி காருக்கு திரும்பினாள்.
தேவன் காரை மெல்ல நகர்த்தி கொஞ்ச தூரம் சென்று சாலை ஓரமாக நிறுத்தினான். சிவரஞ்சனி கர்ணாவை அழைத்தாள்.
அந்த அலைபேசி அழைப்பு அவர்களின் வாழ்க்கையை மீண்டும் மாற்றப் போகிறது என அவளுக்குத் தெரியும். ஆனாலும், அவளால் அழைக்காமல் இருக்கவும் முடியவில்லை. தேவனும் அதுவே சரியென்றான். ஆக, தயங்காமல் செய்தாள்.