மங்களூரில் சிவரஞ்சனிக்கு மூன்று மாத பணி முடியவும் சென்னை திரும்பினார்கள் தம்பதிகள்.
“உனக்கு நாலு நாள் லீவ் தானே? அதுக்கு அப்புறம் தானே இங்க ஹாஸ்பிடல் ஜாயின் பண்ணணும்?” தேவன் கேட்க, அவன் மீது சாய்ந்து கண் மூடியிருந்தவள். “ம்ம்” என்று ஆலாபனை செய்தாள்.
“எனக்கும் மூனு நாளைக்கு ரெக்கார்டிங் எதுவுமில்ல. சோ, டிக்கெட் இருக்கான்னு பார்க்கறேன். மதுரை போகலாமா? வீட்டுக்கு போய் ரொம்ப நாளாச்சுல்ல?” என்று கேள்விகளாக அடுக்கினான்.
“எங்க ரொம்ப நாளாச்சு? போன மாசம் தானே போனோம்?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“எது? உன் அண்ணன் பொண்ணை பார்க்க போன அந்த ஒரு நாள் விசிட்டா?” என்று தேவன் கோபமாக கேட்க, அவள் முகம் கனிந்தது.
“அத்தை மடி மெத்தையடி..” என்று அவள் முகம் நோக்கி குனிந்து பாடினான் தேவன்.
“போங்க..” என்று அவனை தள்ளி விட்டாள். அவளையும் இழுத்துக் கொண்டு விழுந்தான்.
கௌரி கர்ப்பகால சிரமங்களை எல்லாம் தாங்கி நல்லபடியாக பெண் குழந்தை பெற்றெடுத்திருந்தாள். இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்து இருவரும் மதுரை சென்று குழந்தையை பார்த்து வந்தார்கள்.
தானொரு குழந்தைகள்நல மருத்துவர் என்பதை மறந்து பயத்துடன் குழந்தையை மனைவி கையில் வாங்குவதை கண்டதும் தேவனின் முகத்தை பார்க்க வேண்டுமே.
“ஹம்ம், உன்னை இப்படி பார்க்கவே நாம சீக்கிரம் ப்ரெக்னன்ட் ஆகுறோம்” என்று அவள் காதுபட சபதம் எடுத்தான் தேவன். அவனை முறைத்து, அவன் கையில் குழந்தையை கொடுத்தாள் அவள்.
“ஏய்.. நீயும் பிடி.. ரொம்ப குட்டியா இருக்கு பாப்பா..” என்று பதறியவனை கண்டு அவளுக்கு சிரிப்பு பீறிட்டது. அவன் குழந்தையை வாகாக அணைத்து பிடிக்க உதவினாள். குழந்தையை கண்ணிமைக்காமல் அவன் பார்த்து நின்ற பொக்கிஷ தருணங்களை புகைப்படங்களாக சேமித்து வைத்தாள்.
நெப்போலியன் அவர்களையே பார்த்தபடி மனைவியின் பக்கத்தில் நின்றிருந்தான். பெண் குழந்தைக்கு தந்தையானதும் அவனது தோரணையே மாறிப் போனது. பார்வை, பேச்சு என்று எல்லாவற்றிலும் மாற்றத்தை கண் கூடாக காண முடிந்தது. பல வருடங்களுக்கு பின் தங்கையின் முகம் பார்த்து இயல்பாக பேசினான். அவனுக்கு அப்போது தான் புதிதாக பாசம் பிறந்திருந்தது. அங்கயற்கண்ணியும் அங்கிருந்தார். தன் பிள்ளைகளை நெகிழ்வான மனநிலையுடன் பார்த்திருந்தார். பேத்தி பிறந்த செய்தி சொக்கநாதருக்கு தெரியும். முதல் நாள் மருத்துவமனை வந்து பார்த்து விட்டுச் சென்றார். அவ்வளவுதான். அதற்கு மேல் அவரால் அங்கிருக்க முடியவில்லை. அவரின் சொந்த குடும்பத்தின் அந்நிய பார்வையும், நடத்தையும் அவரை தூரவே நிறுத்தியது. அவருக்கான தண்டனையாக அதை ஏற்றுக் கொண்டார் அவர்.
“என்ன ஊருக்கு போகலாமா?” தேவன் மீண்டும் கேட்க, “ம்ம்” என்ற அவள் பதில் அவன் கழுத்தில் புதைந்தது.
அன்றிரவே மதுரை சென்றார்கள். சீதாலட்சுமி, சேதுராமன் இருவரும் அவர்களுக்காக உறங்காமல் காத்திருந்தனர்.
“முதல்ல சாப்பிடுங்க, வாங்க” என்ற சீதாலட்சுமி, மருமகளை தான் முதலில் கவனித்தார்.
அதைப் பார்த்து, “ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ..” என்று தேவன் சோகமாக பாட, “தட்டை பார்த்து சாப்பிடு தம்பி” என்று மகனை அதட்டினார் சீதா.
“உங்களுக்கும் இதே கவனிப்பு தானாப்பா?” என்று அப்பாவை கேட்டான் தேவன்.
“சாப்பிடு தம்பி” என்று அவனிடம் சிரிப்புடன் சொல்லி விட்டு, மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக மருமகளிடம் பேசத் தொடங்கினார் சேதுராமன்.
“ஓ, நீங்களுமாப்பா..” என்று போலி அதிர்ச்சியுடன் கேட்டவனை சிவரஞ்சனி முறைக்க, “அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..” என்று வாய்க்குள்ளே பாடினான் தேவன்.
“கௌரி பொண்ணுக்கு கொடி எடுத்து வச்சுருக்கேன். நாளைக்கு போய் பார்க்கும் போது பிள்ளைக்கு போட்டு விட்டு வாங்க. வெறும் கையோட அத்தை போனா நல்லா இருக்காதுல்ல?” என்று இருவரிடமும் சொன்னார் சீதா. சிவரஞ்சனி சம்மதமாக தலையசைத்தாள்.
அண்ணன் குழந்தையை முதல் முறையாக அவள் பார்க்கப் போன போதும், குழந்தைக்கு தேவையான பொருட்களை பை நிறைய சீதா தான் வாங்கி வைத்திருந்தார். சிவரஞ்சனி கொண்டு போய் கொடுத்ததோடு சரி. குழந்தைக்கு பேர் வைக்கும் போதும் சீதா தான் மருமகளின் சார்பாக அனைத்தும் செய்தார்.
கௌரி குடும்பத்திற்கு அது தெரிந்து தான் இருந்தது. ஆனாலும், அலட்டிக் கொள்ளவில்லை சீதா.
அங்கயற்கண்ணி, அப்பத்தா, அப்புச்சி என அனைவரும் சிவரஞ்சனியிடம் பேசினாலும், இதுதான் முறை. இதை நீ செய்ய வேண்டும் என்று யாரும் அவளிடம் சொல்லவில்லை. அதற்கு சீதா வாய்ப்பளிக்கவில்லை. அவருக்கு மருமகளின் மனநிலை புரிந்தது. அவரும் ஒரு காலத்தில் புது மருமகளாக இருந்தவர் தானே?
திருமணத்திற்கு பிறகு மகளாக முழுதாக பிறந்த வீட்டில் உரிமை கொண்டாட முடியாமல் ஒதுங்கி நின்றவர் தானே. ஆக, அவரால் மாமியார் வேடம் அணிய முடியவில்லை. பாசத்தை மட்டுமே பிரதானமாக காட்டினார்.
அவர் பெரிய செல்வாக்கான குடும்பத்தில் வாக்கப்பட்டாலும் எல்லா சிறுமைகளையும் அனுபவித்திருக்கிறார். அவரின் மாமியார் இருந்தவரை பிறந்த வீட்டைப் பற்றிய ஏளன பேச்சுகளை ஏராளமாக கேட்டும், கடந்தும் இருக்கிறார். எதிர்க்க முடியாமல் நின்றிருக்கிறார்.
சமீபமாகதான் சிவரஞ்சனியின் பிறந்த வீட்டை பற்றி சொல்லிக் காண்பித்து தேவன் பேசியது, அவன் மூலமாகவே அவருக்கு தெரிய வந்திருந்தது. தேவனும் மனைவியிடம் மனதார மன்னிப்புக் கேட்டிருந்தான். அம்மாவிடமும் வருத்தத்துடன் தான் அதைப் பகிர்ந்து கொண்டான். ஆனால், சீதாவுக்கு மனது துடித்து போனது. அன்றிலிருந்து மருமகளுக்கு முழு ஆதரவாக நின்றார். மருமகளுக்கு பிறந்த வீட்டு ஏக்கம் வராமல் பார்த்துக் கொண்டார் அவர்.
சேதுராமன் எப்போதும் குடும்பக் கட்சிதான்.
சிவரஞ்சனி அன்புக்கு ஏங்கிய காலமெல்லாம் காணாது போயிருந்தது. தனக்கு கிடைத்த அன்பை இரு மடங்காக திருப்பிக் கொடுத்தாள் அவள்.
அம்மா, அப்பாவிற்கு மனைவி எது வாங்கிக் கொடுத்தாலும், என்ன செய்தாலும் மகிழ்ச்சியுடன் பார்த்து நிற்பான் தேவன். அவ்வளவுதான். அதில் எப்போதும் அவன் தலையிட்டது கிடையாது.
“கொடி, கொலுசுன்னு எல்லோரும் அதையே தானேம்மா செய்வாங்க. நீயேன் ஒட்டியாணம் வாங்கிக் கொடுக்க கூடாது?’ தேவன் அம்மாவிடம் வம்பு வளர்க்க, “ஒட்டியாணமா? அது என் பேத்திக்கு ஆர்டர் கொடுத்திருக்கேன் டா ஜெய். வைரத்துல செய்ய சொல்லியிருக்கேன்” என்று ஒரே போடாக போட்டார் சீதா.
“பேத்திக்கு வைரமா? இருக்கட்டும் இருக்கட்டும்மா..” என்றவனின் பார்வை மனைவியின் மேல் பதிய, கண்களால் அவனை மிரட்டினாள் சிவரஞ்சனி.
மறுநாள் கௌரி வீட்டிற்கு சென்று குழந்தையையும், நெப்போலியனையும் பார்த்து விட்டு வந்தார்கள்.
சிவரஞ்சனி முன்னை போல அல்லாது கௌரியிடம் நன்றாக பேசினாள். அதிசயமாக இம்முறை அம்மா வீடு சென்று அனைவரையும் பார்த்து வந்தாள். அப்பாவை பார்த்து நலம் விசாரித்ததோடு சரி. அதற்கு மேல் எந்த பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை அவள்.
“அந்த பழனிவேல் என்னவானார்?” நீண்ட நாள்கள் கழித்து அவர் குறித்து கணவனிடம் கேட்டாள். காரோட்டி கொண்டிருந்தவன், “கெடுவான், கேடு நினைப்பான்” என்று சொல்லி தோள் குலுக்கினான் தேவன்.
அவர் மேல் அத்தனை வழக்குகள் பதிவாகி இருந்தது. நீதிமன்றத்துக்கு அலைந்தே ஓய்ந்திருந்தார் மனிதர். அப்போதும் அவரின் ஆத்திரமும், பழி வெறியும் தீரவில்லை. ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரை அப்படியொரு நிலையில் நிறுத்தியிருந்தான் கர்ணா.
இரண்டு நாள்கள் கழித்து சென்னை திரும்ப மதுரை விமான நிலையத்தில் இருந்தார்கள்.
அப்போது ஒரு சிறிய கூட்டத்துடன் அவர்களைக் கடந்து போனான் கர்ணா. அவர்களை கண்டதும் புன்னகைத்தான்.
பழனிவேல் மீது எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் அவனுக்கு எதிராக திரும்பியிருந்தது. அதுதானே அரசியல். அப்பாவின் குற்றங்களுக்கு அவனைப் பொறுப்பாக்கி கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அரசியல்வாதிகளுக்கு மக்களை திசை திருப்ப தெரியாதா என்ன?
அந்நேரம் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் இருவரும் இணைந்து திட்டமிட்டு வெளியிட்ட பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கும் அரசின் விளம்பர பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த காணொளி கோடிக் கணக்கில் பார்வைக்குள்ளாகியது. அரசுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் பாராட்டையும், பெயரையும் புகழையும் சேர்த்தது.
கல்வியறிவு இல்லாத மக்களிடையே அதன் அவசியத்தை உணர்த்தியது தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பான அந்தப் பாடல்.
கர்ணாவின் பெயர் அதனால் நல்லவிதமாக பேசு பொருளானது. சுகாதாரத் துறை அமைச்சராக மருத்துவர்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி அவர்கள் மத்தியிலும் நற்பெயர் வாங்கினான் அவன். அதில் முதன்மையானது மருத்துவர்களின் பணி சூழலின் பாதுகாப்பு குறித்து அவன் எடுத்த நடவடிக்கைகள்.
அன்று செய்தி பார்த்ததும், “தேங்க்ஸ்” என்று அவனுக்கு தேவனே குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தான்.
கர்ணாவின் சொந்த வாழ்க்கை, குடும்பம், அவனது அரசியல் எதிர்காலம் என பல்வேறு விமர்சனங்கள், பேச்சுகள் பொதுவெளியில் இருந்தது. ஆனால், அதில் எதிலும் அவர்கள் தலையிட்டு கொள்ளவில்லை.
சென்னை அவர்களை பரபரப்பான இயல்பு வாழ்க்கைக்குள் மீண்டும் இழுத்துக் கொண்டது.
சிவரஞ்சனி பணி முடித்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தாள். தேவன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான்.
மனைவியின் முகம் பார்த்து அவளின் மனம் புரிந்து, “சாரி” என்று கெஞ்சிக் கொஞ்சினான்.
அவள் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனைப் பார்க்க, “ப்ராமிஸ்ஸா நாளைக்கு வீட்ல இருப்பேன். ஓகே?” என்றான்.
“தூங்கு மூஞ்சி..” அவசரமாய் முத்தமிட்டு, அவள் அடிக்கும் முன் வெளியேறியிருந்தான். மறுநாள் அவளுக்கு ஓய்வு நாள். தேவன் பாடல் ஒலிப்பதிவிற்கு காலையிலேயே சென்று விட்டான். சிவரஞ்சனி எதுவும் சொல்லவில்லை.
மாலை ஓய்வாக தேநீருடன் பால்கனியில் சாய்ந்து நின்றிருந்தாள் அவள். தேவன் அவன் குரலாக அங்கிருந்தான். மரங்களை, மலர்களை ரசித்தபடி மிடறு மிடறாக தேநீரை அருந்திக் கொண்டிருந்தவளை பின்னிருந்து மொத்தமாக அணைத்துக் கொண்டான் தேவன்.
அவளின் கோப்பையில் இருந்த தேநீரை இப்போது அவன் அருந்தினான்.
“இந்த மல்லியும், இருவாச்சியும் நல்லா வளர்ந்திடுச்சு இல்ல. பூ வாசம் நம்ம ரூம் முழுக்க இருக்கு” அவர்களுக்கு எதிரில் இருந்த பூச்செடிகளை பார்த்துச் சொன்னவன், மனைவியை இறுக்கி அவள் தலையில் சூடியிருந்த பூவை வாசம் பிடித்தான்.
“இது அத்த கொண்டு வந்தச் செடி. நம்ம வீட்ல இருக்கச் செடியில இருந்து பதியம் போட்டு எடுத்துட்டு வந்தாங்க”
“ஓ, சீதா மருமக பூ வைக்க மதுரையில் இருந்த மல்லிப்பூ செடி வருது. ஹம்ம்..” என்றான் ராகம் இழுத்து. அவன் கைகளில் திரும்பி அவன் கண்களுக்குள் பார்த்தாள்.
“என்ன?”
“இந்த பூ ரெண்டையும் பார்த்தா என்ன ஞாபகம் வருது உங்களுக்கு?”
“உன் ஞாபகம்தான். வேறென்ன?” மயக்கத்துடன் உடனடியாக பதில் வந்தது.
“எப்போதும் அதே நினைப்பு..” என்று அவன் மார்பில் முட்டினாள்.
“நல்ல நினைப்பு தானே?” என்று சரசமாக கேட்டவன், “சரி விடு. உனக்கு என்ன ஞாபகம் வருது. சொல்லு?” என்று கேட்டான்.
அவள் தொண்டையை செருமினாள்.
“பாடப் போறியா?” அவன் ஆர்வமாக கேட்க, “பாவை நின்றேன், சோலை ஓரம். நீயும் வந்தாய், மாலை நேரம்..” என்று பாடினாள் அவள்.
தேவனின் கண்கள் பளிச்சிட்டது. அவர்களின் திருமணம் குறித்து பேசிய இரவில், சிவரஞ்சனி வீட்டு தோட்டத்தில் இருவரும் நின்று பேசுகையில் இதே மல்லியும், இருவாச்சியும் அங்கிருந்தது அவனுக்கு மங்கலாக நினைவு வந்தது.
“காதல் தேவனே, நீ என் ஜீவனே..” என்று தொடர்ந்து பாடினாள். அதிலும் அந்த காதல் தேவனில், என் ஜீவனேவில் அவள் கொடுத்த அழுத்தம் அவனை பித்தனாக்கியது.
“தேவன் கோவில் தீபம் ஒன்று.
ராகம் பாடும் நேரம் இன்று
கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது” என்று உணர்ச்சி ததும்ப, உள்ளம் உருக காதல் சந்தத்தை படித்தான் காதல் தேவன்.
“உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது..” என்று அவனோடு இழைந்து சங்கீதம் பாடியது அவனின் பிரிய ராகம் சிவரஞ்சனி. அவர்களின் பாட்டில் இருந்த காதல் அவர்களின் வாழ்விலும் நிறைந்திருக்க, நிறைவாய் அணைத்து நின்றவர்களின் இதழ்களில் நிறைவான புன்னகை.