அதுவொரு மழைக்கால மாலை நேரம். மதுரையின் பசுமலையில் அமைந்திருந்த நட்சத்திர விடுதி பரபரப்பாக காணப்பட்டது.
ஒட்டு மொத்த மதுரையையும் காணும் விதமாக ஓர் ஓரமாக தனித்திருந்தது அந்த பிரம்மாண்ட விடுதியறை.
அறையை ஒட்டிய பால்கனி பகுதியில் அமர்ந்திருந்தான் கர்ணா.
அவனுடன் அவனது மூன்று நெருங்கிய சிறுவயது நண்பர்களும் அமர்ந்திருந்தார்கள்.
“என்ன சார் பண்றது? இந்த போலீஸ் டிபார்ட்மெண்ட் ஒழுங்கா அவங்க வேலையை பார்த்தா, எங்களுக்கு எல்லாம் வேலையே இல்லாம போய்டும். நானும் உங்களைத் தொல்லை பண்ண மாட்டேன். ஆனா, போலீஸ் எங்க சார் வேலை பார்க்குது. சினிமாவில காட்டுற மாதிரி கடைசி நிமிஷத்துல தான் வர்றாங்க சார். அப்புறம் நாட்ல சட்டம் ஒழுங்கு எப்படி சரியா இருக்கும்? நீங்களே சொல்லுங்க?” என்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் திருமூர்த்தி. அவனின் பார்வையும், பேச்சும் முரளிதரனையே தாக்க, அங்கிருந்த குவளை தண்ணீரை எடுத்து நண்பனின் முகத்தில் வீசினான் முரளிதரன்.
“பேச்சா பேசுறான் டா…” என்று முரளி கோபமாக சொல்ல, முகத்தில் வடிந்த நீரை சிரிப்புடன் கையால் வழித்து நண்பனின் மேல் உதறினான் திருமூர்த்தி.
“உனக்கொரு கேடும், க்ரைஸிசும் வர மாட்டேங்குதே” பல்லைக் கடித்துக்கொண்டு முரளி சொல்ல, “ரொம்ப கெட்ட புத்தி போலீஸ் உனக்கு..” என்று எட்டி நண்பனை அடித்தான் அவன். கர்ணா கவனம் வேறெங்கோ நிலைத்திருந்தது.
அவனது பார்வையை கண்டு அங்கிருந்த மற்றொருவன், “அது சிவரஞ்சனியும், அவங்களோட ஹஸ்பண்ட் சிங்கர் தேவனும் தானே?” என்று கேட்டான்.
அனைவரின் தலையும் ஒன்றாக திரும்பியது.
அங்கிருந்த திறந்த வெளி உணவகத்தில் மாலை சிற்றுண்டி உண்டு கொண்டிருந்தார்கள் தேவனும், சிவரஞ்சனியும்.
“காதல் தேவன்..” என்றான் முரளி. “ராணின்னு சொல்லுடா, போலீஸ்..” என்று திருத்தினான் திருமூர்த்தி.
“கேட்டா மட்டும் என்னடா ஆகப் போகுது விவே? அதான் அவளை வேணாம்னு விட்டுட்டு வந்துட்டார் இல்ல சார்” என்று நண்பனை கோபமாக பார்த்துச் சொன்னான் முரளிதரன். அப்போதும் அவர்களின் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் கர்ணா.
திருமூர்த்தியின் முகம் நொடியில் இறுகி போனது.
“லவ் பண்ண பொண்ணை அம்போன்னு விட்டுட்டு ஊரை காப்பத்துற நீ என்னை சொல்லாத” என்று பதிலுக்கு நண்பனை கத்தினான் திருமூர்த்தி.
“அம்போன்னு தானே டா விட்டேன். உன்ன மாதிரி கல்யாணம் பண்ணி கழுத்தறுக்கல இல்ல?” அந்த கேள்வியில் உடைந்துப் போய் நண்பனை பார்த்தான் திருமூர்த்தி.
“ஏன் டா டிவோர்ஸ் வரைக்கும் போனீங்க.? பேசி, சரி பண்ணி, சமாதானமா போய் இருக்கலாம். இல்ல.. ஏன்டா…” நண்பனுக்காக வருந்தினான் விவே என்று அவர்கள் அழைத்தவன்.
“உங்களால எதுவும் பண்ண முடியாதா டா? ஒரு முறை பேசி பாருங்களேன் டா. மீட் பண்ணுங்க டா..”
“அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்.” என்றான் முரளிதரன்.
“பின்ன, சாருக்காக காலம் முழுக்க பொண்ணை வீட்லயே வச்சுட்டு இருப்பாங்களா?” என்று நண்பனை பார்த்து கத்தினான் திருமூர்த்தி.
“மூர்த்தி..” என்று அதட்டினான் விவே.
“நீ சொல்லு” அவன் கேட்க, மிகவும் தயங்கினான் திருமூர்த்தி.
“என்னடா..”
“அவ ப்ரெக்னன்ட்டா இருக்கா..” திருமூர்த்தி சொல்ல, இருக்கையை உதறி எழுந்து, பளாரென்று நண்பனை அறைந்திருந்தான் முரளிதரன். கர்ணா அப்போதுதான் கலைந்தான். ஆனாலும், ஒன்றும் சொல்லவில்லை.
திருமூர்த்தி வலியுடன் முகம் சுருக்க, மீண்டும் கை ஓங்கினான் முரளி. “டேய், போதும் டா” என்று அவனை தடுத்துப் பிடித்தான் விவே.
“நீயெல்லாம்..” என்று நண்பனை வசைமாரி பொழிந்தான் முரளிதரன்.
பத்து நிமிடங்கள் கழித்து, “க்ரைஸிஸ் ஹாண்டிலர் லைஃப்ல மெகா க்ரைஸிஸ். கடவுள் வச்சான் பாரு. ஆப்பு” என்றான்.
“முரளி..” கர்ணா அதட்ட, திருமூர்த்தி அங்கிருந்த செந்நிற பானத்தை ஒரே மடக்கில் குடித்து முடித்தான்.
“பிளாக் டீயை அடிச்சுட்டு, சரக்கடிச்ச மாதிரி சீன் போடுறான் பாரு. டேய், தொழில்ல தான் போலீஸ் மாதிரி நடிக்கறீங்கன்னு பார்த்தா இதுலயுமா டா?” என்று நண்பனை வம்புக்கு இழுத்தான். திருமூர்த்தி சிரித்து விட, அவனைத் தொடர்ந்து நண்பர்களும் சிரித்து விட்டார்கள்.
அவர்கள் மீண்டும் இயல்பாகி அமர்ந்தார்கள். இருக்கையில் சாய்ந்த நால்வரின் பார்வையும் திரும்பவும் தூரத்தில் பதிந்தது.
ஜெயதேவன் தலையை பின்னுக்கு இழுத்து சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த சிவரஞ்சனி, அவனிடம் தீவிரமாக எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
கையில் தண்ணீர் கோப்பையை வைத்து கொண்டு, “ஊற்றிடுவேன்” என்று செய்கையாக அவள் மிரட்டுவதை கண்டு அவர்களும் புன்னகைத்தார்கள்.
“வேணாம்..” என்று தேவன் கையசைக்க, சிரிப்பும், முறைப்புமாக அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி.
அவள் அமர்ந்திருந்த மேஜையில் அந்த விடுதியில் மலர்ந்த தாழம்பூ மடல்கள் இருக்க, அதன் மணம் காற்றின் வழியே அவர்களின் நாசியை நிறைத்தது.
சிவரஞ்சனிக்கு பின்னே மயில்கள் சுற்றிக் கொண்டிருந்தது. வெகு இயல்பாக அவர்களைப் பொருட்படுத்தாமல் மெல்ல அடியெடுத்து வைத்து நடைப் போட்டு கொண்டிருந்தன அவை. வானில் மழை மேகம் சூழ, மயிலொன்று தோகை விரித்தாடியது.
“வாவ்..” என்று வியந்து நின்றாள். மனைவியையும், மயிலையும் புன்னகையுடன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தான் தேவன்.
சிவரஞ்சனி வயிறை ஒரு கையால் பிடித்து இரும, சட்டென எழுந்து அவளுக்கு தண்ணீர் எடுத்து நீட்டினான் தேவன்.
ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் அங்கிருந்து சென்றிருந்தார்கள்.
இரவு உணவுக்கான நேரம் நெருங்கியதும் நண்பர்கள் நால்வரும் அறைக்குள் வந்தார்கள்.
முரளிதரன் தொலைக்காட்சியை போட்டு சோஃபாவில் சரிந்தான்.
இரண்டு மாதங்களுக்கு முன் நிகழ்ந்த, இசையமைப்பாளர் தேவாரனின் இசை நிகழ்ச்சியை தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருந்தார்கள்.
முரளிதரன் அதை விடுத்து செய்தி சேனல் வைக்கப் போனான்.
“டேய், இதுவே இருக்கட்டும். சேனல் மாத்தாத” என்று கத்தினான் திருமூர்த்தி.
அதில் ஜெயதேவன் பாடிக் கொண்டிருந்தான். அவனது பாடலுடன் சிவரஞ்சனி ரசித்து கேட்பதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.
“சிவரஞ்சனியை நீ வேணாம்னு சொன்னதுக்கு பின்னாடி ஒரு நியாயமான காரணம் இருக்குடா கர்ணா. ஆனா, அந்த பொண்ணு உன்னை வேணாம்னு சொன்னது எனக்கு ஆச்சரியம் தான்” விவே சொல்ல, திருமூர்த்தி அவனை முறைத்தான்.
“டாக்டரை இன்னும் நேர்ல பார்க்கல இல்ல சார். அதான் இப்படி பேசுறார்” என்று கிண்டலாக சொன்னான் முரளிதரன்.
“இல்லடா, கர்ணாக்கு என்ன குறை? அவனை ஏன் வேணாம்னு அவங்க சொல்லணும்?” என்று திரும்பவும் கேட்டான்.
நண்பர்களின் கவனம் தொலைக்காட்சியில் நிலைத்திருந்தது. அங்கே சிவரஞ்சனி மேடையேறி கொண்டிருந்தாள். ஜெயதேவன் ஓடிப் போய் அவளின் கைப் பிடித்து மேடைக்கு அழைத்து வர, நிகழ்ச்சியை காண கூடியிருந்த கூட்டம் அதைக் கண்டதும் சத்தமிட்டு ஆர்பரித்தது.
சில மாதங்களுக்கு முன்பு தேவனின் சமூக வலைத்தள பக்கத்தில் சிவரஞ்சனி பாடியதை பகிர்ந்திருந்தான். அதைக் கேட்டு அவளுக்கு முதல் பாடல் வாய்ப்பை இசைத் தென்றல் வழங்கினார். சிவரஞ்சனி யோசிக்காமல் மறுத்து விட்டாள். மனைவிக்கு கிடைத்த வாய்ப்பை வீணடிக்க விரும்பாமல் தேவன் அவளை வற்புறுத்தி பாட வைத்திருந்தான். அதன் பிறகு மேலும் ஒரு பாடல் பாடியிருந்தாள்.
அவ்வளவுதான்.
இந்த இசை நிகழ்ச்சியும் கணவனுக்காக அவள் சம்மதித்திருந்தாள். அவளுக்கு பாடவும் பிடித்திருந்தது.
அந்த மேடையில் இருந்த இசைக் கலைஞர்களும், இசையமைப்பாளர் தேவாரனும் இசைக்க, தயக்கமும், அவ்வளவு பெரிய கூட்டத்தின் முன் நிற்கும் தடுமாற்றமுமாக நின்றிருந்தாள் சிவரஞ்சனி.
“அன்பே..” துளி வெட்கமும், சிரிப்புமாக அவள் பாடலை ஆரம்பிக்க, கூட்டம் ஆரவாரித்தது.
“அன்பே, யார் என்ன சொல்ல என்னைத் தொடு நீ..” சுருதி சுத்தமாக பாடினாள். அதைக் கேட்டு தேவன் முகத்தில் மயக்கும் புன்னகை. அந்த வரிகளை கேட்டு கத்தியது கூட்டம்.
“உன் மேல் ஆசைகள் வைத்தேன், என்னை கவனி..” அடுத்த வரியை அவள் பாட, தேவன் சத்தமில்லாமல் உடல் குலுங்க சிரித்தான்.
“நீ ஏதோ டவுட் கேட்ட இல்ல?” என்று நண்பனை பார்த்து கேட்டான் திருமூர்த்தி.
“பாரு.” என்று அவன் கண் காட்ட, தொலைக்காட்சியில் தேவனையும், சிவரஞ்சனியையும் சேர்த்துப் பார்க்கையில் அவர்களுக்கு கேள்விகளே எழவில்லை.
சிவரஞ்சனி கூட்டத்தை பார்க்காமல் பாடிக் கொண்டிருந்தாள். தேவனின் கண்கள் மனைவியின் மேலேயே இருந்தது. நீலநிற லினன் சேலையில் அவளின் மேடிட்ட வயிறு தெரிய, பூரண அழகுடன் மிளிர்ந்தாள்.
“மெதுவா மெதுவா.. வரவா.. வரவா..” என்று அவள் முடிக்க, “அன்பே..” என்று கணீரென்ற குரலில் சிரிப்புடன் தேவன் பாட கூட்டம் மீண்டும் ஆரவாரம் செய்தது.
“அன்பே யார் என்ன சொல்ல என்னைத் தொடு நீ..” மனைவியை பார்த்தே பாடினான். துள்ளலுடன் ஒலித்த அவன் குரல் கூட்டத்தை வசீகரித்து கட்டிப் போட்டது.
சிவரஞ்சனி சிரிப்பை அடக்கி நின்றதை காணவே கொள்ளை அழகாக இருந்தது. அவனது குரலை போலவே தேவனும் அழகாக கம்பீரமாக நின்று வசீகரித்தான்.
“இவங்க லவ் மேரேஜா டா?”
“ம்ம், அப்படித்தான் தெரியுது. ஆனா, என் ரெக்கார்ட்ஸ் இல்லைனு சொல்லுது” என்றான் திருமூர்த்தி.
கர்ணா முறைக்க சட்டென அமைதி சூழ, மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கினார்கள்.
அங்கே தேவன், சிவரஞ்சனி இருவரும் போட்டி போட்டு தங்கள் குரலால் கூட்டத்தை கட்டிப் போட்டிருந்தார்கள்.
அவர்களது காதல் திருமணம் என்றே உலகம் நம்பியது. தேவன் அப்படித்தானே அறிவித்திருந்தான்.
“விட்டக் கொற, தொட்டக் கொற என்று ஓடி வந்த பந்தமய்யா..” என்று சிவரஞ்சனி அடுத்து பாடிய வரிகள், அவர்களின் உறவை சொன்னது போலவேயிருந்தது.
“இப்போதும், எப்போதும் உன்னோடு நான் இருப்பேன். எங்கே நீ சென்றாலும் பின்னோடு நான் நடப்பேன்.” மனைவியை அத்தனை நெருங்கி நின்று பாடினான் தேவன்.
“இந்தக் காதல் நிலைத்திருக்கும். காலம் கடந்திருக்கும், பொய்க்காது தெய்வசாட்சி.” என்று பாடியவளின் இதழ்களில் பெரிய புன்னகை வீற்றிருந்தது.
“இந்தக் கண்ணன்தான் மன்னன்தான், காலமெல்லாம் உன் கட்சி.. அன்பே..” என்று கை வீசி, மனைவியின் முன் லேசாக குனிந்து, அந்தக் கணம் உலகிற்கே உரக்க தன் காதலைச் சொன்னான் காதல் தேவன்.
மக்களின் கைத்தட்டலும், ஆரவாரமும் அவர்களின் பாட்டு சத்தத்தை மீறி அரங்கத்தை நிறைத்தது.
“அன்பே..” என்று தேவன் சிரிப்புடன் உச்சரிக்க, வெட்கத்துடன் சிரித்தாள் சிவரஞ்சனி.
“அன்பே யார் என்ன சொல்ல என்னைத் தொடு நீ..” தேவாரனின் இசையில், இருவரும் இணைந்து ஒன்றாக பாடினார்கள். தேவனும், ரஞ்சனியுமாக தேவராகம் இசைத்தார்கள்.
பாடல் முடிய இருவரின் பார்வையும் தொட்டுக் கொண்டது. அதில் கொட்டிக் கிடந்தது கொள்ளை காதல். அவர்களின் காதல் என்றென்றும் நிலைத்திருக்கும்.