“ஜெய்” என்று கௌரி அழைக்கவும், பதில் சொல்ல திரும்பியவனின் கரம் இன்னமும் சிவரஞ்சனியின் தோளில்தான் இருந்தது. கௌரி அவர்களைப் பார்த்து மலர்ந்து புன்னகைக்க, அதன் காரணம் புரியாமல் கண்களை சுருக்கினாள் சிவரஞ்சனி.
“என்னக்கா..” என்று ஜெயதேவன் கேட்கவும் தான் அவன் கரம் தன் தோளில் இருப்பதை உணர்ந்து விலக்கி விட்டாள்.
“உங்க கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள் இருக்கு. நீங்க இனிமே டெய்லி பொறுமையா பேசலாம். இப்போ உள்ள வர்றீங்களா? மாமாவும், சித்தியும் உங்களை கூப்பிடுறாங்க” என்று அவள் சொல்லவும், ஜெயதேவனின் மன நிம்மதி சீட்டு கட்டைப் போல மெல்ல சரிந்தது.
“நீங்க போங்க அண்ணி, நாங்க இப்போ வந்திடுறோம்” ஜெயதேவனை ஓரக்கண்ணால் சுட்டிக் காட்டி சொன்னாள் சிவரஞ்சனி.
சிறிய தலையசைப்புடன் உள்ளே சென்றாள் கௌரி.
“என்னை வச்சு என்ன கேம் பிளே பண்ற?” அவன் எரிச்சலுடன் கேட்க, “ஹா, கேமா? நானா? ம்ஹூம், இல்லையே. நான் பாட்டை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி முந்திரிக் கொட்டை மாதிரி நீங்க தான் சந்தம் மறந்து சங்கீதம் பாடிட்டீங்களே” என்று சலிப்புடன் தோள் குலுக்கினாள்.
“எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் மாமான்னு முதல் ஆளா சொன்னது யாரு? நீங்க தானே? இப்போ இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டியதும் உங்க பொறுப்பு தான். ஓகே? ம்ம், அப்புறம் உங்கம்மாவோட பாட்டை கேட்க ஆல் த பெஸ்ட் தேவன்” என்றாள். அந்த பாட்டு என்ற வார்த்தையில் அத்தனை அழுத்தம் கொடுத்தாள். அவனுக்கு இப்போதே அம்மாவின் பாட்டு காதில் கேட்பது போன்ற பிரம்மை.
“அம்மா, நீயே என் அகிலம்மான்னு சினிமால மட்டும் உருகி உருகி பாடுற ஜெய் நீ. ஆனா, உன் சொந்த அம்மா மேல உனக்கு கொஞ்சமாவது பாசம் இருக்கான்னு நீயே மனசை தொட்டுச் சொல்லு?”
“பாரு, நான் இதை கேட்கும் போது கூட எப்படி கோபமாக பார்க்கற? உனக்கு என் மேல அன்பு, அக்கறை எதுவும் இல்ல.”
“என் ஆசைப்படி நீ கல்யாணம் பண்ண மாட்டன்னு எனக்குத் தெரியும்..” என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போவார் சீதாலட்சுமி. அம்மாவின் குரல் அவன் காதில் எதிரொலிப்பது போலிருக்க, பதட்டமாக தலைக் கோதி கொண்டான்.
“கேம் யார் பிளே பண்றாங்க தேவன்? நானா? நீங்களா? இப்படியா ஒரு செகண்ட் கூட யோசிக்காம பேசுவீங்க? ம்ம், எனக்கு மட்டுமில்ல, உங்களுக்கும் வரிசையா வரன் கொண்டு வந்து நிறுத்துவாங்க உங்கம்மா. அதை மறந்துட்டீங்களே” நக்கலாக சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
அவசரமாக அவளுடன் இணைந்து நடந்தான். இருவரும் ஒன்றாக கூடத்திற்குள் நுழைந்தார்கள்.
இருவரின் குடும்பமும் பேச்சை பாதியில் நிறுத்தி அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.
“அங்க, பிள்ளைங்க பேசிட்டு வந்துட்டாங்க. நீ போய் எல்லாருக்கும் சாப்பிட ரெடி பண்ணு” என்று மனைவிக்கு கட்டளையிட்ட சொக்கநாதர், “கல்யாணம் பேசி முடிச்சிருக்கோம், நீங்க கண்டிப்பா கை நனைச்சுட்டு தான் போகணும்” என்று ஜெயதேவனின் பெற்றோர் மற்றும் கௌரியின் பெற்றோர், அதாவது அவனின் பெரியப்பா குடும்பத்தினரிடம் சொன்னார் அவர்.
மகளின் புகுந்த வீடு என்பதால் அவர்களாலும் மறுக்க முடியவில்லை. அதற்குள் திருமண பத்திரிக்கை அடிப்பது வரை பேசி பத்திரிக்கையின் உள்விவரம், உறவினர் பெயர்கள் என அனைத்தையும் முடிவு செய்திருந்தார்கள்.
ஏற்கனவே இரண்டு முகூர்த்த தேதிகளை குறித்து வாங்கி, அதில் ஒன்றை முடிவும் செய்திருந்தால், அது அவர்களுக்கு எளிதாகவே இருந்தது.
“காலைல இன்னொரு முறை சரி பார்த்திட்டு சொல்றோம் சம்மந்தி, அப்புறமா பத்திரிக்கையை அடிக்கக் கொடுங்க” என்று சீதாலட்சுமி சொல்ல, ஜெயதேவன் சிலைப் போல நின்றான். சிவரஞ்சனியை திரும்பிப் பார்க்காமலேயே அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்கிறாள் என்று சரியாக கணித்தான் அவன்.
அங்கயற்கண்ணி எழுந்து சமையல் அறை சென்றார்.
“என்ன மாப்பிள்ளை நின்னுட்டே இருக்கீங்க? வாங்க, இப்படி வந்து உட்காருங்க” என்று அவனை அழைத்தார் சொக்கநாதர்.
சொக்கநாதருக்கு பேசச் சொல்லியா தர வேண்டும்.
அவரது, “மாப்பிள்ளை” என்ற அழைப்பில் அவனது முதுகு நேராவதை பார்த்து, “ம்க்கும்” என்றாள் சிவரஞ்சனி.
“நீங்க ஏற்கனவே ஓகே சொல்லிட்டீங்க தேவன்” என்று அவனிடம் கிசுகிசுத்தாள்.
“எங்கப்பாவுக்கு என் சம்மதம் எப்பவுமே முக்கியமில்ல” என்பதை தனக்குள் முணுமுணுத்து கொண்டாள்.
“அண்ணா, என் போன் குடு. அப்படியே என் ஹேன்ட்பேக் உங்க ரூம்ல இருக்கும். அதையும் எடுத்துட்டு வந்து குடு” என்று நேரம் பார்த்து அவள் சாமர்த்தியமாக காய் நகர்த்த, மாமனாரிடம் செல்ல ஓரடி எடுத்து வைத்த ஜெயதேவன் அவளை மெல்ல திரும்பிப் பார்த்தான்.
அவள் அறையினுள் வைத்து நெப்போலியனிடம் அவளின் அலைபேசி, கைப்பை கேட்டது அவனுக்கு நினைவு வந்தது.
இப்போது சரியான சமயம் பார்த்து அதை அவள் கேட்கவும் நெப்போலியனை பார்த்து விட்டு, “செக்” என்றான் அவளிடம்.
அவன் கண்களில் கேலியை மீறி தெரிந்த பாராட்டிலும், ரசனையிலும் அவளுக்கு சிரிப்பு வந்தாலும், சிதற விடாமல் நின்றாள்.
“என்ன எல்லோர் முன்னாடியும் வச்சு கேட்டா, கொடுத்துடுவேனா? ம்ம், போன் எல்லாம் தர முடியாது. பேசாம இரு, இல்லனா..”
“இல்லனா, என்ன பண்ணுவ?” என்று அசட்டையாக அண்ணனை ஏறிட்டாள்.
“உங்கப்பா மேல வேணும்னா உனக்கு ரொம்ப பயமில்லாம இருக்கலாம். ஆனா, அண்ணி..” என்று அவள் முடிக்க கூட இல்லை, பல்லைக் கடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் நெப்போலியன்.
அப்பாவை திரும்பிப் பார்த்து விட்டு தனது அறைக்குள் சென்று, அவளின் கைப்பையை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
படக்கென்று பிரித்து அலைபேசியை எடுத்தவள், அதை உயிர்ப்பித்து திரையை வெறித்தாள்.
ஒரு முழு நிமிடம் அவளின் அலைபேசி குறுஞ்செய்தி மற்றும் தவற விட்ட அழைப்புக்கான அறிவிப்பு ஒலியை எழுப்பி ஓய்ந்தது. அவள் விரல்கள் அத்தனையையும் ஒதுக்கி விட்டு, ஜெகபதி பாபுவின் அழைப்புகளை, குறுஞ்செய்திகளை தொட்டுத் திறந்தது.
மூன்று நாட்களுக்கு முன்பு முப்பது அழைப்புகள், ஐம்பதுக்கும் மேலான குறுஞ்செய்திகள் அவனிடம் இருந்து வந்திருந்தது.
“நான் வர மாட்டேன் ஜெகா, சாரி. எனக்காக வெயிட் பண்ண வேணாம்” என்று அவளைப் போலவே நெப்போலியனால் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டிருந்த செய்திக்கு பின்னர் அவனிடம் அப்படியொரு அமைதி. அன்றிரவு அதற்கு பதிலும் அனுப்பியிருந்தான் அவன்.
அதைப் பார்த்ததும் உதடு கடித்து கண்களை மூடித் திறந்தாள்.
“அண்ணா..”
“இப்போ, என்ன?”
“நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்னா..”
“உன் சம்மதத்தை கேட்டு இங்க யாரும் காத்துட்டு இல்ல ரஞ்சி”
அவன் சொல்லவும், கைகளை இறுக மூடி, வார்த்தைகளை வரிசைப்படுத்தினாள்.
“ம்ம், அதானே. என் சம்மதம் எல்லாம் என்னைக்கு உங்களுக்கு முக்கியமா இருந்திருக்கு. அதை விட்டுத் தள்ளுவோம் ண்ணா. நாம அண்ணியை பத்தி பேசுவோம்” என்றவளை, கோபமாக திரும்பி கேள்வியாக பார்த்தான் நெப்போலியன்.
“ரஞ்சனி, உங்கண்ணாகிட்ட அப்புறம் பேசுவ. இங்க வாம்மா, எங்களோட வந்து உட்காரு” அவளை சீதாலட்சுமி சத்தமாக அழைத்தார். அவருக்கும், மகனுக்கும் நடுவில் கை காட்டி அவர் அழைக்க, “இதோ வர்றேன் அத்த” என்ற தங்கையின் கைப் பிடித்தான் நெப்போலியன்.
“அண்ணிக்கு என்ன? சொல்லிட்டு போ”
“இருண்ணா, வர்றேன். என் வருங்கால மாமியார் கூப்பிடுறாங்க இல்ல? போய் பேசிட்டு வர்றேன்”
“ஏய் ரஞ்சி”
“ஏயா? ம்ம், அப்போ அவ்வளவு சீக்கிரம் விஷயத்தை உன்கிட்ட சொல்ல கூடாதே”
“நான் போடுற எல்லா கண்டிஷனுக்கும் நீங்க ஓகே சொல்றதா இருந்தா மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கும்” என்றாள் தீர்க்கமாக.
“நடக்கிறதை பத்தி பேசு ரஞ்சி. நாங்க சொல்றதை தான் நீ கேட்கணும். நீ சொல்றதை கேட்க..”
“நான் சொல்றதையும் கேட்டாக வேண்டிய சிட்டுவேஷன் உனக்கு பிரதர். ஏன்னா, இந்த கல்யாணம் உன் பொண்டாட்டி கௌரி மனோகரி ஏற்பாடு பண்ணினது. அதுவும் அவங்களோட சொந்த சித்தப்பா பையனுக்கு. தட் இஸ், உன் சின்ன மாமனார் குடும்பம், இல்லையா?. இதுக்கு நான் நோ சொன்னா என்னாகும்னு ஒரு செகண்ட்டாவது யோசிச்சா நீ இப்படி தெனாவெட்டா பேச மாட்டண்ணா”
நெப்போலியன் கண்கள் அறையில் சுழன்று அவளின் பெற்றோருடன் அமர்ந்திருந்த மனைவியை தொட்டது.
“கல்யாண ஜவுளிக்கு மதுரை சரிப்படாது ப்பா. நாம திருநெல்வேலி ஆர்எம்கேவி போயிடலாம்” என்று நாத்தனாரின் திருமணத்தை திட்டமிட்டு கொண்டிருந்தாள் கௌரி.
“அப்பாக்கு கண்டிப்பா இந்த ஐடியா அண்ணி தான் கொடுத்திருப்பாங்க. அவங்க வீட்லயும் உங்க பிளான் புட்டுக்கிட்டதை எல்லாம் சொல்லாம, கர்ணா ஃபேமிலி மேல பழியை போட்டு இந்த கல்யாணத்துக்கு கன்வின்ஸ் பண்ணியிருப்பாங்க. என்ன, நான் சொல்றது சரிதானே?”
“உன்னை மாப்பிள்ளைகிட்ட பேச விட்டதே தப்பு.”
“டூ லேட் பிரதர், ரொம்ப ஃபீல் பண்ணாம நான் சொல்றதை கேட்டு அதுக்கு சரின்னு மட்டும் பதில் சொல்லு போதும். நீ சரின்னு தான் சொல்லியாகணும். உனக்கு வேற ஆப்ஷன் இல்லண்ணா”
“என்ன லந்தா? உன்னை பேச விட்டா..” என்று அவன் ஓரெட்டு அவளை நோக்கி எடுத்து வைக்க, “நான் ஜெயதேவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று சொல்லி அவனை தடுத்து நிறுத்தினாள் சிவரஞ்சனி.
“இந்த கல்யாணத்தினால நான் அண்ணி வீட்டுக்கு மருமகளா போனாலும், உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. மக, தங்கச்சின்னு உறவாடிட்டு நீங்க யாரும் அங்க வரக் கூடாது. உங்க பிசினஸ் டீலிங், அரசியல் லைஃப் எதுலயும் என் பேர் வரக் கூடாது. இனிமேல் உங்களுக்கு எந்த விதத்துலயும் நான் கட்டுப்பட மாட்டேன். இது உங்களுக்கு மட்டுமில்ல அண்ணிக்கும் சேர்த்து தான் சொல்றேன்”
நெப்போலியன் அதை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியும், கோபமும் கொப்பளித்த கண்களுடன் தங்கையை பார்த்தான்.
“உனக்கு புரியற மாதிரி சொல்லனும்னா, உங்க சங்காத்தமே எனக்கு வேணாம்னு சொல்றேன். தட்ஸ் ஆல். ஆனா, இந்த ரூல் உங்களுக்கு மட்டும்தான். அம்மா, அப்பத்தா, அப்புச்சியை நான் எப்போ வேணாலும் வந்து பார்ப்பேன். அவங்களும் என் வீட்டுக்கு வரலாம்” என்றதும், அவன் உதட்டில் கோணல் சிரிப்பு உதயமாக அதை அப்படியே வெட்டி விட்டாள் சிவரஞ்சனி.
“அண்ணா, அப்பான்னு அவங்க ஆரம்பிச்சா அவங்களுக்கும், உங்க நிலைமை தான். சோ, சிரிக்காத.” என்றாள் மெலிதாக சிரித்து.
நெப்போலியன் ஒரு நொடி அதிர்ந்து நின்றாலும், அப்பாவின் பல வருட பயிற்சி அவனைக் கை விடவில்லை.
“பெரிய டாக்டர்ன்ற திமிர்ல ஆடாத ரஞ்சி. அந்த படிப்புக்கு எவ்வளவு கெஞ்சினன்னு மறந்துட்டியா என்ன? என் மருமக டாக்டருன்னு பெருமையா சொல்லிப்பேன்னு, அவங்க மகனுக்கு ஈக்வலா உன்னைப் படிக்க வைக்க சொன்னதால தான், எல்லாம் நடந்தது. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. அந்தாளுக்கு ஒரு போன் போட்டா போதும்.. உன் தலையெழுத்து திரும்பவும் மாறிடும்..”
என்று மிரட்டிய அண்ணனை கேலி சிரிப்புடன் பார்த்தாள் சிவரஞ்சனி.
“என்னை அந்தாள் வீட்டு வருங்கால மருமகள்ன்னு நீங்க ஊர் முழுக்க தண்டோரா போட்டாலும், கர்ணாவும், நானும் ஒரு நாளும் ஜோடியா இந்த மதுரையை சுத்தினது இல்ல. எங்க கல்யாண பேச்சை அவங்க வீட்ல இத்தனை வருஷமா எடுக்கவே இல்ல. ஏன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா ண்ணா நீ? உனக்கெல்லாம் மூளைன்னு க்ரே கலர் வஸ்து மண்டையில இருந்தா தானே யோசிப்ப. உங்கப்பா மாதிரி உனக்கும் ஆட்டு மந்தை அரசியல்வாதி புத்தி வந்ததுக்கு அப்புறம் அதையெல்லாம் நான் எதிர்பார்க்கிறதே தப்பு தான்”
“அப்போ கர்ணா உனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கான்?” அந்தக் கேள்வியை தங்கையிடம் கேட்பது போல தனக்குத்தானே சொல்லிக் கொண்டவனுக்கு, உண்மையை ஏற்றுக் கொள்வது சுலபமாக இல்லை.
“பையன் வெளிநாட்டுல இருந்து வந்ததும் கல்யாணம்னு இத்தனை வருஷம் அந்தாள் சொன்னது எல்லாம்..”
“அதை ஆராய்ச்சி பண்ணி இப்போ என்ன பண்ண போறண்ணா? நீ போய் அவர் கால்ல விழுந்தாலும் என்னை அந்த வீட்டுக்கு இனி மருமகளாக்க மாட்டார் அவர். ஜாதி பெருமை ரொம்ப முக்கியம் அவருக்கு. அதுனால அதை விட்டுத் தள்ளுவோம். ஏன்னா என் பிரச்சினை அவர் கிடையாது. என்னை வச்சு உங்க அரசியல் ஆசையை நிறைவேத்திக்கப் பார்த்த நீயும், உங்கப்பாவும் தான் எனக்கு எப்பவுமே தலைவலியா இருந்திருக்கீங்க. உன் பிசினஸ் பிராப்ளம், உன் இன்வெஸ்ட்மெண்ட் இஸ்யூ, இன்னும் பல பல காரியங்களுக்கு அந்த அரசியல்வாதி தான் ஹெல்ப் பண்ணி இருக்கார். இனிமே அந்தாள் உங்களை சும்மா விடுவான்னு நினைச்ச?”
“ஏய் ரஞ்சி” என்று அடிக்குரலில் கத்தியவனின் கண்கள் அப்பாவை கலக்கத்துடன் நோக்கியது.
“இந்த ஜெயதேவன் இல்லனா..” என்று கடுமையாக ஆரம்பித்து, இன்னொரு அரசியல் அல்லது தொழில் குடும்பத்தை கொண்டு வருவேன் என்று சொல்ல வந்தவனால், அதை தங்கையின் முகம் பார்த்து சொல்லி முடிக்க முடியவில்லை.
“நம்ம வீட்டுக்குள்ள வந்த அஞ்சாவது நிமிஷமே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டார் ஜெயதேவன். சோ இந்த கல்யாணத்தை இப்போ நீ நிறுத்தினா அண்ணிக்கு என்ன பதில் சொல்லுவண்ணா?” நெப்போலியன் பதிலின்றி முழிக்க,
“ம்ம், இப்போ சொல்லுண்ணா. நான் போட்ட கண்டிஷன் பத்தி நீயென்ன நினைக்கிற? நீ ஓகே சொன்னா நான் ஜெயதேவனை கல்யாணம் பண்ணுவேன். அதுனால அண்ணி ஹேப்பியானா உன் பிசினஸ் பிரச்சினையை தீர்த்து வைப்பாங்க. இல்லையா, நீயும், உங்கப்பாவும் நடுத் தெருவுக்கு வர்றதை பார்க்க முதல் வரிசையில் டிக்கெட் வாங்கிட்டு காத்துட்டு இருப்பேன் நான்”
தன் மனதில் பல வருடங்களாக அழுத்திக் கொண்டிருந்ததை இறக்கி வைத்த நிம்மதியுடன் நிர்மலமான முகத்துடன் நின்றாள் சிவரஞ்சனி.
அவளை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக அவர்கள் நிர்பந்தித்திருக்கிறார்கள். அப்பத்தா, அப்புச்சியின் உடல் நிலையை காரணம் காட்டும் போது அவளும் கட்டுப்பட்டிருக்கிறாள். அம்மாவின் மிரட்டலுக்கு அடி பணிந்திருக்கிறாள்.
எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு. அதைக் கடந்த பின் எதுவுமே அர்த்தமற்றதாகி விடுகிறது. அவளுமே அந்த நிலையில் தான் இருந்தாள். உங்களுக்கு என் மேல் பாசம் இல்லாத போது, நான் மட்டும் உங்கள் மேல் ஏன் பாசமாக இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாள் அவள்.
அந்நேரம், “ரஞ்சனி, என் கூட வா” என்று கௌரி வந்து நிற்க, “இருங்க அண்ணி. அண்ணா முக்கியமான விஷயம் சொல்லிட்டு இருந்தான். ஒரு செகண்ட் வெயிட் பண்ணுங்க” என்றவள், “சொல்லு ண்ணா” என்று நெப்போலியனை நேராக பார்த்து நின்றாள்.
“உங்கண்ணாகிட்ட அப்புறம் பேசு ரஞ்சனி. சித்தி உன்னை சேலை மாத்தி கூட்டிட்டு வர சொன்னாங்க. அவங்களை விட்டா நாளைக்கே உங்க கல்யாணத்தை நடத்திடுவாங்க போல. எங்க கல்யாணத்தப்போவே உன்னை விசாரிச்சாங்க. இப்போ அவங்களை கையில பிடிக்க முடியல.” மேலும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போன அண்ணியை புன்னகையுடன் பார்த்து, அண்ணனின் பக்கம் அர்த்தத்துடன் பார்வையை திருப்பினாள் அவள்.
நெப்போலியனுக்கு வேறு வழியிருக்கவில்லை. “சரி, ரஞ்சி.” என்று தங்கைக்கு பதில் சொன்னவனின் பார்வை அவளைத் தவிர்த்து அங்கிருந்த அனைவரின் மேலும் விழுந்தது.
“தேங்க்ஸ்.” என்று சொல்லி அண்ணியுடன் நடந்தவள், ஏதோ ஒரு உந்துதலில் ஜெயதேவனை திரும்பிப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இபொழுது அவனைப் பார்த்து, “செக்” என்று வாயசைத்தாள் சிவரஞ்சனி. அவனுக்கு எதற்கென்று புரியவில்லை. அவளைக் குழப்பமாக பார்த்தான்.