“ம்மா, இவங்க சிவரஞ்சனியை கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறது போல தெரியுது. என்னை நீயும் அதைத்தான் பண்ற. என் விருப்பம் உனக்கு முக்கியமே இல்லையா மா?” என்று அம்மாவிடம் கேட்டான் ஜெயதேவன்.
“ப்ச்” என்று கண்ணை உருட்டி, சிவரஞ்சனியின் குடும்பத்தை குறிப்பாக காட்டினார் சீதாலட்சுமி.
“நீ எனக்கு பிராமிஸ் பண்ணியிருக்க, நேத்து நம்ம வீட்ல வச்சு நான் கேட்கும் போது ஓகே சொல்லிட்டு இப்போ இங்க வந்து மாத்தி பேசினீன்னா எனக்கு கெட்ட கோபம் வரும் ஜெய். நீ நினைக்கிற மாதிரி சினிமாக்காரியை எல்லாம் நம்ம வீட்டு வாசப்படியை கூட மிதிக்க நான் விட மாட்டேன். நம்ம குடும்ப கௌரவம் என்ன…”
“அம்மா, பிளீஸ்.” என்று அவரை மேலே பேச விடாமல் தடுத்தான் அவன்.
“ம்ம், உனக்கு புரிஞ்சா சரிதான்” என்று கெத்தாக சொன்னவர், “நம்ம வீட்ல சிவரஞ்சனி பத்தி பேச்சு வரும் போதெல்லாம் நீ நல்ல மாதிரியா பேசவும் தான், இப்போ உனக்கு அவளைப் பேசினது. சரி, அவளை பிடிக்கலன்னா நான் உன்னை கட்டாயப்படுத்தல.” என்றவர் தன் அலைபேசியை தேடி எடுத்து மகனிடம் நீட்டினார்.
“அதுல இருக்க ஃபோட்டோல இருந்து உனக்கு பிடிச்ச ஒரு பொண்ணை சொல்லு. இப்போ குறிச்சிருக்க தேதியிலயே உன் கல்யாணத்தை நடத்த வேண்டியது என் பொறுப்பு” என்ற அம்மாவை, எதுவும் செய்ய முடியாத கோபத்துடன் முறைத்தான் ஜெயதேவன்.
திருமணம் அவனது வாழ்க்கைக்குமான முடிவு. சிவரஞ்சனியை விட சிறந்த முடிவு அவன் வசம் தற்போதில்லை என்ற நிதர்சனம் புரிய மௌனமாய் அமர்ந்திருந்தான்.
“என்ன ஜெய்?” சீதாலட்சுமி கேட்க, “அவனை கொஞ்ச நேரம் ஃப்ரீயா விடு” என்று மனைவியிடம் சொல்லி மகனை பரிவாய் பார்த்தார் சேதுராமன்.
அனைவரின் முன்னும் சம்மதம் என்று சொல்லி விட்டு, அவனாலும் இப்போது மாற்றி பேச முடியாது என்பதால் அமைதி காத்தான்.
“வாங்க, சாப்பிட போகலாம்” என்று அங்கயற்கண்ணி வந்து அவர்களை அழைக்க, சீதாலட்சுமி முதலில் எழுந்து கொண்டார்.
அம்மாவின் பார்வைக்கு கட்டுப்பட்டு எழுந்த ஜெயதேவனின் பார்வையில் விழுந்தாள் பட்டுச் சேலையில் வந்து நின்ற சிவரஞ்சனி.
“மருமக முகத்துல கல்யாண களை வந்துடுச்சு பாருங்க. கௌரி இந்த பூவை அவளுக்கு வச்சு விடு” தாங்கள் கொண்டு வந்திருந்த பையில் இருந்த மல்லிகை பந்தை எடுத்து மகளிடம் நீட்டினார் அவர்.
அவர்கள் முன்னேற்பாடாக தான் வந்திருக்கிறார்கள் என்ற புரிதலுடன் தலையை குனிந்தாள் சிவரஞ்சனி. தலையில் பூச்சூடி நிமிர்ந்தவளின் கண்கள் ஜெயதேவனின் மேலேயே நிலைத்திருந்தது.
யாரையும் பொருட்படுத்தாமல் அவளிடம் வந்து நின்றான் அவன்.
“ஜெய், திரும்பவும் தனியா பேசணும்னு ஆரம்பிக்காத. சித்தி உன்னை முறைக்கிறாங்க பார். ஒழுங்கா ரெண்டு பேரும் சாப்பிட வாங்க. அப்புறமா பேசுவீங்க” என்று கௌரி சொல்ல, வீட்டினர் அனைவரின் பார்வையும் அவர்கள் மேலிருப்பது புரிந்தாலும், ஜெயதேவன் அசரவில்லை.
“நீங்க போங்கம்மா, நாங்க வர்றோம்” என்றவன், சிவரஞ்சனியுடன் இணைந்து நடந்தான்.
“என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டு, கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு, எதுக்கு இந்த மேக் அப் அண்ட் மேக் ஓவர்?” என்று சன்னக் குரலில் கேட்டான்.
“நான் இன்னும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லவே இல்ல தேவன்”
என்றவள், அவளின் அலைபேசியை அவன் கையில் திணித்தாள்.
“உன் போனை எதுக்கு என்கிட்ட கொடுக்குற?” என்று கேட்டபடியே குனிந்து பார்த்தவனின் கண்கள் அலைபேசி திரையில் பதியவும், தன் நடையை நிறுத்தி விட்டான். அவளும் நின்று அவனையே பார்த்தாள்.
அலைபேசி திரையில் கூகிள் பக்கம் திறந்திருக்க, ஜெயதேவன் குறித்த சமீபத்திய செய்திகள் அதில் வரிசையாக இருந்தது.
முதல் பக்கத்தின் முக்கால்வாசியை நிறைத்திருந்தது அவனுக்கும், புது முக நடிகைக்குமான காதல் கிசுகிசு. இருவரும் இணைந்து நிற்கும், சிரித்தபடி இருக்கும் புகைப்படங்களும் அதில் இருக்க, ஆத்திரத்துடன் அலைபேசியை இறுக்கி பிடித்தான் அவன்.
“ஹலோ காதல் தேவன். அது என் போன், பத்திரம் பாஸ். உடைச்சிடப் போறீங்க” என்றவளை ஆயாசத்துடன் பார்த்து, “யூ பிளீவ் திஸ் கைண்ட் ஆஃப் காஸிப்ஸ் சிவரஞ்சனி?” என்று ஏமாற்றத்துடன் கேட்டான்.
“நான் நம்புறது இருக்கட்டும். இதை உங்கம்மா நம்புறாங்க போலவே? அதுனால தானே உங்களுக்கு இந்த அவசர கல்யாணம்?” என்று அவள் அழுத்தமாக கேட்க, அமைதியாக தலையசைத்தான் ஜெயதேவன்.
“ம்ம், செக் மேட் மிஸ்டர் காதல் தேவன்.” என்றாள் சிவரஞ்சனி கண் சிமிட்டி.
அவளையே கண்ணெடுக்காமல் பார்த்து நின்றான் அவன்.
அவர்களின் குடும்பம் ஆடும் சதுரங்க ஆட்டத்தில் இருவருமே சிக்கிக் கொண்டிருக்க, மாலை ஒருவரையொருவர் அவசியமில்லாமல் தாக்கி பேசிக் கொண்டது அதிகம் என அவனுக்கும் புரியத்தான் செய்தது.
அவர்கள் இருவருமே சூழ்நிலை கைதிகள். இருவருக்கும் இங்கு நிற்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கையில், அவளை வார்த்தையால் காயப்படுத்தியது தவறு என உணர்ந்து அவள் முகம் பார்த்தான் ஜெயதேவன்.
“செக் மேட் தேவன். வாட் ஆர் யூ கோயிங் டு டூ நவ்?” புருவம் உயர்த்தி கேள்வி கேட்டாள்.
அவளை மணமுடித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் அவன் நிற்கும் போது என்ன பதில் சொல்வான்?
சிவரஞ்சனிக்கு சற்று முன்னர் நெப்போலியனிடம் சொன்னது தான் நினைவில் வந்தது.
“நாம சின்ன வயசுல செஸ் விளையாட கத்துக்கிட்டோமே, அது உனக்கு இன்னமும் மறக்காம இருக்கா ண்ணா? சதுரங்கத்தில் ராணிக்கு தான் அதிக பவர். ராணியால எல்லா பக்கமும் நகர முடியும்.” என்றவள்,
“சிறுத்தை சிவரஞ்சனிகிட்ட சிக்கிடுச்சு போல? ராஜாவை காக்க ராணி எப்பவும் ரெடியா தான் இருப்பா. ராஜா என்ன சொல்றீங்க?” என்று அவள் கேட்க, அவன் உதடுகள் அவனையும் அறியாமல் புன்னகையில் பிரிந்தது.