இதுதான் முடிவென்று தெரிந்த பின்பு இருவரும் ஒரு மனதாக ஒருமித்து கைக் கோர்க்க முடிவு செய்து விட்டனர்.
ஜெயதேவனுக்கு, சிவரஞ்சனியின் அறிமுகம் கௌரியின் திருமணத்தின் போது தான் நிகழ்ந்தது. அவளின் பெயரை கேட்டதுமே பிடித்தது. அவனுக்கு மிகப் பிடித்த ராகம் அது என்பதனால் இருக்கலாம்.
அன்றைக்கு திருமண விழாவில் அவன் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருந்த போது அவள் உதவியதால் அவளின் குணநலனும் பிடித்தது.
அவளின் குடும்பத்தை அறிந்த பிறகு தான், கட்டாயத்தின் பேரில் என்றாலும் அவளை மணமுடிக்கவே சம்மதித்திருந்தான் அவன்.
“என்ன தேவன்?” என்ற கேள்வியுடன் சிவரஞ்சனி முன்னே நடக்க, அவன் சொல்லாமலே அவனின் நெருக்கடிக்கான காரணத்தை கண்டறிந்து அவன் முன் ராணியின் தோரணையுடன் நின்று கேள்வி கேட்டவளை ரசனையுடன் கண்டு வெறுக்க விரும்பினான் அவன். ஆனால், முடியவில்லை.
அவன் அந்த வீட்டிற்குள் நுழைந்து சில மணி நேரங்களும், ஒரே ஒரு மாலைப் பொழுதும் தான் கழிந்திருக்கிறது. ஆனால், பல மணி நேரங்கள் அவளுடன் செலவிட்ட உணர்வு அவனுக்கு. முதலில் வார்த்தைகளால் போரிட்டு, பின்னர் அதே வார்த்தைகளை சற்று வளைந்து கொடுத்து, இப்போது சம்மதம் சொல்லும் நிலைக்கு வந்திருந்தார்கள் அவர்கள்.
ஜெயதேவன் சிவரஞ்சனியை மணமுடிக்கும் முடிவோடு தான் அந்த வீட்டிற்க்குள் அடியெடுத்து வைத்தது.
“ஒரு மோசமான அரசியல்வாதி குடும்பத்திடம் இருந்து உன்னை காப்பாற்றப் போகிறேன் நான்.” என்ற இறுமாப்புடன் அவன் வந்து நின்றால், “ராஜாவை காக்க ராணி ரெடி” என்று அவனை அல்லவா சதுரங்க கட்டத்தின் நடுவில் நிறுத்தி விட்டாள் அவள்.
அந்த சாதுர்யம் அவனுக்குப் பிடித்தது. ஆக, சிரிப்புடன், “சரண்டர்” என்றான் அவன்.
“ம்ம். ஓகே. டிபீட் அக்செப்டட் (தோல்வி ஏற்றுக் கொள்ளப்பட்டது)” என்று சொல்லி, சட்டென அவனிடம் இருந்து விலகி சீதாலட்சுமியின் அருகில் சென்று அமர்ந்து விட்டாள்.
ஜெயதேவன் புன்னகையை மறைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் வெளியில் இயல்பாக, சகஜமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், அவள் மனதின் அலைப்புறுதலால் கண்கள் அலைபாய அதை கண்டவன் மனதில் அப்படியொரு உறுத்தல்.
அந்த அரசியல்வாதி குடும்பத்தை தாண்டி அவளுக்கும் ஏதோ ஒரு சிக்கல் இருப்பதை அவனால் உணர முடிந்தது. அவன் நேரடியாக கேட்டும் அவள் பதில் சொல்லாமல் தவிர்த்தது, அவன் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தது. அதை அவளே சொல்லட்டும் என காத்திருந்தான் அவன்.
சிவரஞ்சனியை பொறுத்தவரை மிக நீண்ட மாலை அது. ஜெயதேவனை மறுத்து, வெறுத்து, இறுதியில் மணமுடிக்க சம்மதித்து என ஒரே நாளில் எத்தனை மனமாற்றங்கள். அத்தனைக்குப் பின்னும் அவளுக்கு பல காரணங்கள் இருந்தது. ஒவ்வொரு காயையும் நிறைய கணக்குகள் போட்டு மிக கவனமாக நகர்த்தினாள் அவள்.
சதுரங்கத்தில் மட்டுமல்ல, வாழ்விலும் எது எளிதோ, அதுவே கடினம் என்ற அடிப்படை தெரிந்ததால் மிக நிதானமாக யோசித்து தான் தன் முடிவினை எடுத்திருந்தாள் சிவரஞ்சனி.
“சாரி அத்த, நீங்க கூப்பிட்டப்போ வர முடியல. அண்ணா, அண்ணின்னு மாத்தி மாத்தி என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. நீங்க பெரியவங்களும் முக்கியமான விஷயம் பேசிட்டு இருந்தீங்களா, அதான்..” என்று சீதாலட்சுமியிடம், சிவரஞ்சனி பேசிக் கொண்டிருக்க,
‘யானை அவுட்’ என்று அம்மாவை குறிப்பாக பார்த்துச் சொன்ன ஜெயதேவன், ‘ராஜாவுக்கு முன்னாடி யானையை பாதுகாப்பா நிறுத்துறது, வெரி குட் மூவ் சிவரஞ்சனி’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
சீதாலட்சுமி, சிவரஞ்சனி பக்கம் வந்து விட்டால் போதுமே. அப்பா, அண்ணா என யாருக்கும் அவள் கவலை கொள்ளத் தேவையில்லை.
“உங்கப்பா, அண்ணா உன் மேல கோபமா இருக்காங்கன்னு பயப்படாத. அவங்க பல வருஷமா பேசி வச்ச உறவு முறியும் போது எல்லோருக்கும் வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனா, உனக்கு நாங்க இருக்கோம். எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கறோம். நீ தைரியமா இரு. என்ன?” என்று அவர் பூடமாக கேட்க, லேசாக தலையசைத்தாள்.
“ஜெய் பத்தி சினிமா பத்திரிக்கை, நியூஸ்ல வர்றது எல்லாம் உண்மையில்ல ரஞ்சனி. அது அவனுங்க சும்மா காசு பார்க்க இல்லாததையும் பொல்லாததையும் எழுதுறானுங்க. என் புள்ளையை பத்தி நானே பெருமை பேசக் கூடாது. ஆனாலும், சொல்றேன். அவன் சின்ன வயசில் இருந்தே ரொம்ப ஒழுக்கமானவன். பொண்ணுங்ககிட்ட தேவையில்லாம பேச, பழக எதுவும் செய்ய மாட்டான்” என்று அவர் மகனின் புகழ் பாட, அவளுக்கு சிரிப்பை அடக்குவது சிரமமாக இருந்தது.
அம்மாவின் பேச்சு அவனுக்கும் கேட்கவே செய்தது. சங்கடத்துடன் தலை கோதிக் கொண்டு தலைக் குனிந்தான்.
அன்று தலைக்கேறிய போதையுடன் சிவரஞ்சனியிடம், தான் காதலித்த பெண்ணை பற்றி புலம்பியது இப்போது அவனுக்கு மங்கலாக நினைவுக்கு வந்தது.
“எனக்கும் தெரியும் அத்த. சினிமா காஸிப் எல்லாம் நான் நம்ப மாட்டேன்” என்று சொன்ன சிவரஞ்சனியின் ஓரப் பார்வை அவன் மேல் விழுந்து மீண்டது.
“ரொம்ப நல்லது ரஞ்சனி” என்று பெரிதாக புன்னகைத்தார் சீதாலட்சுமி.
அங்கயற்கண்ணி வீட்டு உதவியார்களுடன் சேர்ந்து அனைவருக்கும் உணவை பரிமாற, பேசிக் கொண்டே உண்டார்கள்.
“நீயும் சாப்பிட வாம்மா” என்று அவள் அம்மாவை அழைக்க, தங்கையை முறைத்தான் நெப்போலியன்.
“இந்த பத்திரிக்கை டிசைன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்று பேச்சை மாற்றும் விதமாக, அலைபேசியில் ஒரு புகைப்படத்தை எடுத்து அவன் நீட்ட, அனைவரின் பார்வையும் அங்கே சென்றது. அங்கயற்கண்ணி சாம்பார் பாத்திரத்துடன் சமையல் அறை சென்றார்.
அந்த புகைப்படத்தை கண்டவளின் கண்கள் பிடித்தமின்மையை வெளிப்படுத்த, “என்ன டிசைன்ங்க இது?” என்று கோபத்தை மறைக்காமல் கேட்டு அவளுக்கு நிம்மதியை அளித்தான் ஜெயதேவன்.
“இந்த டிசைனுக்கு என்ன குறை மாப்பிள்ளை? நம்ம வீடுங்கள்ல விஷேச பத்திரிக்கை இப்படி அடிக்கிறது தானே வழக்கம்? அவ்ளோ ஏன், எங்க கல்யாணத்துக்கு கூட இப்படித்தானே அடிச்சோம்? இதையே பெருசு பண்ணி பேனரும் வச்சோம்னா..”
“பேனரா? அதெல்லாம் எதுவும் வேணாம். அப்புறம் இந்த பத்திரிக்கை விஷயம் எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்” என்று நெப்போலியனுக்கு படபடவென பதில் கொடுத்தான் ஜெயதேவன்.
“பெரியவங்க நாங்க முடிவு பண்ணிக்கறோம் மாப்ளை” என்ற அப்பாவின் பேச்சை அவன் பொருட்படுத்தவேயில்லாதது, சிவரஞ்சனிக்கு நிரம்ப பிடித்தது.
“நீங்க என்னப்பா சொல்றீங்க? இந்த டிசைனையா அடிக்க குடுக்க போறீங்க?” என்று அவன் அப்பாவிடம் கேட்க, முகத்தை சுளித்த விதமே சேதுராமனை மறுப்பாக தலையசைக்க வைத்தது.
“மாமா என்ன சொல்ல வர்றாங்கன்னு முதல்ல கேளு ஜெய்” என்று கௌரி மாமனாருக்கு பரிந்து கொண்டு வர, அக்காவை தீர்க்கமாக பார்த்தான் அவன்.
“நம்ம ரெண்டு பக்க சொந்தக்காரங்களுக்கும் கொடுக்க தான் இந்த டிசைன். உன் ஃப்ரெண்ட்ஸ், சினிமா இண்டஸ்ட்ரி ஆளுங்களுக்கு கொடுக்க வேற புது டிசைன் அடிச்சுக்கலாம். நாங்க அப்படித்தான் பண்ணோம்” என்ற கௌரியை, ஜெய், ரஞ்சனி இருவருமே அதிருப்தியுடன் பார்த்தனர்.
“நீ பேசாம இரு. இது ஜெய் கல்யாணம். உன் தம்பியே அவனுக்கு பிடிச்ச மாதிரி முடிவு பண்ணட்டும்” என்று கௌரியின் அம்மா சொல்ல, அவள் அப்போதும் திரும்பி மாமனாரை தான் பார்த்தாள்.
“இந்த ஜாதி பரம்பரை பெருமை பேசுற எதுவும் எங்க கல்யாண பத்திரிக்கையில் இருக்கக் கூடாது. வீட்டுக்கு ஒன்னு, சொந்தத்துக்கு ஒன்னு, வேலைக்கு ஒன்னுன்னு நாலு டிசைன்லாம் அடிக்க வேணாம். எல்லோருக்கும் ஒரே மாதிரி..” என்றவன், சட்டென பேச்சை நிறுத்தி, “பத்திரிக்கை அடிக்கிற வேலையை எங்கப்பா பார்த்துப்பார். நீங்க பேர் எழுதி கொடுங்க போதும்” என்று தீர்மானமாக சொல்லி விட்டான்.
“சரி ஜெய், நான் பார்த்துக்கறேன்” என்று சேதுராமனும் மகனுக்கு உறுதி தர, தெளிந்தது என்னவோ சிவரஞ்சனியின் முகம் தான்.
நெப்போலியன் முகம் கன்றுவதை காண அவளுக்கு கொண்டாட்டமாக இருந்தது.
“ஏன்த்த, நான் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போனா உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?” என்று அவள் பவ்யமாக சீதாலட்சுமியிடம் சிறு குரலில் கேட்க, “என்னம்மா நீ டாக்டருக்கு படிச்சுட்டு வேலைக்கு போகாம, வீட்ல இருந்து என்ன பண்ண போற? ஏன் ஜெய் ஏதாவது சொன்னானா?” என்று கேட்டு மகனை திரும்பி கண்டனத்துடன் பார்த்தார் அவர்.
அவர்கள் பேசியது கேட்காததால் குழப்பமாக பார்த்தான் அவன்.
“என்ன?” என்று கண்களால் சிவரஞ்சனியிடம் கேட்டான்.
தலையை வலப் புறமாக அசைத்து அவனது அம்மாவை சுட்டிக் காட்டி, “இங்க கேளுங்க” என்று கண்களால் பதில் சொன்னாள்.
“ம்ம், நேரம்” என்று முணுமுணுத்து கொண்டான்.
“நீங்க சொல்லுங்கத்த”
“சென்னையில ஹாஸ்பிட்டலா இல்ல, உன் தோது பார்த்து அங்க ஜாயின் பண்ணிக்கோ ரஞ்சனி” மருமகள் தன்னை கேட்டு முடிவு செய்கிறாள் என்று உச்சி குளிர்ந்து போனவராக சொன்னார் சீதாலட்சுமி.
கௌரியின் அம்மா அடுத்தடுத்து செய்ய வேண்டியவை பற்றி பேச அனைவரின் கவனமும் அங்குத் திரும்பியது.
இது அவசர கதியில் முடிவான திருமணம் போல தெரியக் கூடாது என்பதற்காக இரண்டு குடும்பமும் அதிக மெனக்கெட்டு திட்டமிட்டார்கள்.
“நீங்க கவலையை விடுங்க. எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கறோம்” என்று சேதுராமன் வாக்கு கொடுக்க, நெப்போலியன் அப்பாவை பார்த்து புன்னகைத்தான்.
சிவரஞ்சனியின் முகத்தில் சிந்தனை கோடுகள் தீவிரமாகியது.
அவள் வாழ்வின் எல்லா நிலையிலும் அவர்களின் தலையீடு இருப்பதை அவள் ரசிக்கவேயில்லை. இந்த திருமணம் வேண்டுமானால் அவர்களின் ஏற்பாடாக இருக்கலாம். ஆனால், அதையும் அவள் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்வது அவள் கையில் தானே இருக்கிறது.
முதலும், முடிவுமாக இதற்கொரு முடிவு கட்ட விரும்பினாள் அவள். அதற்கு ஜெயதேவனின் உதவி வேண்டும். அவனில்லாமல் அதை செயலாக்க அவளால் நிச்சயமாக முடியாது.
உணவு முடித்து கௌரி, ஜெயதேவன் குடும்பம் கிளம்பத் தயாரானார்கள்.
“என்ன மருமகளே, நாங்க போய்ட்டு வரட்டுமா?” சிவரஞ்சனியின் கைப் பிடித்து கேட்டார் சீதாலட்சுமி.
“ம்ம்” என்று அவருக்கு பதில் சொன்னவளின் பார்வை ஜெயதேவனை தொட்டு தொட்டு மீண்டது.
அவளின் அப்பா, அண்ணா, கௌரியின் பெற்றோர் என அனைவரும் சேதுராமனை சுற்றி வளைத்து நின்று பேசி கொண்டிருக்க, அப்பாவிற்கு ஆதரவாக நின்று அவர்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தான் ஜெயதேவன்.
“ஜெய்..” என மகனை அழைத்து, அருகில் வந்தவனிடம், “சீக்கிரம் பேசிட்டு காருக்கு வா. வீட்டுக்கு வந்து போன் பண்ணி மணிக் கணக்கில் பேசிக்கோ. நாங்க யாரும் ஒன்னும் சொல்லப் போறதில்ல” என்று மகனுக்கு மட்டும் கேட்கும் சிறுகுரலில் சொல்லி விட்டு விலகிப் போனார் அவர்.
நெப்போலியன் ஏதோ சொல்ல, “அதெல்லாம் சரிப் படாது தம்பி” என்று சீதாலட்சுமி அடித்து பேசுவதை நமுட்டு சிரிப்புடன் பார்த்து புன்னகைத்தாள் சிவரஞ்சனி.
“ம்க்கும்” என்று தொண்டையை செருமினான் ஜெயதேவன்.
“என்ன பாடப் போறீங்களா?” அவளிடம் மீண்டும் அதே நக்கல் தொனி.
“ம்ம்.. பாடவா உன் பாடலை.. என் வாழ்விலே ஓர் பொன்வேளை” அவளுக்கு மட்டுமேயாக ஒலித்த அவன் குரலில் ஒரு நொடி அவனைக் கூர்ந்து பின் மெதுவாக ரசித்து இமை மூடித் திறந்து அவனைப் பார்த்தாள் சிவரஞ்சனி. இருவரின் கண்களும் இமைக்காமல் ஒன்றையொன்று தொட்டு நிற்க,
“கண்ணா உன் நெஞ்சில் காதல் காயம்” என்று கேலியாக பாடல் வரியை மாற்றி சொல்லி அந்த சூழலில் இருந்த இனிமையை கலைத்தாள் அவள்.
“உன்னை எல்லாம் மியூசியத்தில் வச்சுருக்கணும். எப்படி வெளில சுத்த விட்டானுங்கன்னு தெரியல” என்று பல்லைக் கடித்தான் அவன்.
“ம்ம், இதான் நீங்க தேவன். அதை விட்டுட்டு என்னமோ என்னைப் பிடிச்சு கல்யாணம் பண்ற மாதிரி பாட்டு பாடி நாடகம் போடாதீங்க. திஸ் இஸ் நாட் யுவர் சினிமா சூட்டிங்” என்றாள் பதிலுக்கு.
“காலம் முழுக்க இப்படியே தான் எடுத்தெறிஞ்சு பேசிட்டு இருக்கப் போறியா?” கவலையாக கேட்டான்.
“இதையே நானும் திருப்பிக் கேட்கலாம் தேவன். அப்படியே உங்க முன்னாள் காதலியை, காதலை மறந்துட்டீங்களான்னும் கேட்கலாம். அதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க?”
“அவளுக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணமாகிடுச்சுன்னு உனக்கு தெரியும். அந்தவொரு உண்மை போதாதா உனக்கு?” என்று அவள் முகம் நோக்கி குனிந்து கோபமாக கேட்டவன், “எனக்கு பிறன் மனை நோக்கி பழக்கம் இல்ல” என்றான் அழுத்தமாக. அந்தக் குரலும், அவனது உடல் மொழியும் அவளுக்கு பேச்சு மறக்க செய்தது.
அவனின் காதல் கதையை முழுவதுமாக அவள் அறிவாள். ஆனாலும், கல்யாணம் என்று வரும் போது அவளுக்கு ஒரு தெளிவு தேவைப்பட்டது. அவனே அதைச் சொன்ன பிறகு அவளிடம் சிறியதாய் ஆசுவாச பெருமூச்சு வெளிப்பட, அவள் நிலைப் புரிந்து, “சாரி, சிவரஞ்சனி” என்றான் ஜெயதேவன்.
எவ்வாறு பார்த்தோம், பேசினோம், பழகினோம், பிரிந்தோம் என ஒட்டு மொத்த கதையையும் பகிர்ந்தவளிடம் குறைந்த பட்சமாக இந்த உத்திரவாதத்தை தான் அளிக்க வேண்டும் என நினைத்து அவன் சொல்ல, அவளும் பதிலுக்கு, “சாரி” என்றாள்.
“இனிமே அதைப் பத்தி பேச மாட்டேன்” என்று உறுதியாக சொன்னாள். மெல்ல கண் மூடித் திறந்தான் அவன்.
அவளைக் கண் காட்டி அப்பாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் நெப்போலியன். இருவரும் அவளையே சிரிப்புடன் பார்த்து பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு பகீரென்றது.