“நீங்க என்னதுக்குப்பா தேவையில்லாம பயப்படுறீங்க. பாருங்க, எல்லாம் நம்ம பிளான் பண்ணப்படி தானே நடக்குது. விடுங்க, பார்த்துக்கலாம். இந்த கல்யாணம் நம்ம நினைச்ச மாதிரி தான் நடக்கும். நாம நினைச்சதை எல்லாம் நடத்திக் கொடுக்கும்” என்று அப்பாவின் கைப் பிடித்து அறுதியிட்டு சொன்னான் நெப்போலியன்.
ஆனாலும், அவர் பார்வை மகளின் மேல் சந்தேகமாக தான் படிந்திருந்தது.
“நம்ம கண்ணு முன்னாடியே ஊரை விட்டு ஓடிப் போக பார்த்தாடா உன் தங்கச்சி. இப்போ மட்டும் அடங்கி இருப்பான்னா நினைக்கிற?” என்று கேட்ட அப்பாவிடம், “நான் சொல்றேன் இல்லப்பா, நம்ப மாட்டீங்களா? அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷன் போய் நாம நிக்கும் போதே அவளுக்கு தெரிஞ்சிருக்கும். நம்மளை மீறி இனி எதுவும் அவளால செய்ய முடியாது. எங்கேயும் தப்பிச்சு போக முடியாதுனு. அதுக்கு மேல ஏதாவது அவ டிரை பண்ணா பார்த்துக்கலாம் ப்பா” என்றான் நெப்போலியன்.
அண்ணன் பேசுவது அவளுக்கு கேட்கவில்லை என்றாலும், உள்ளுணர்வு எச்சரிக்க, உஷாரானாள்.
“நான் காலம் முழுக்க இப்படியே இருப்பேனா தெரியாது. ஆனா, கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருப்பேன்னு தோணுது” என்று அவள் நிஜம் பேச, சிரித்து விட்டான் ஜெயதேவன்.
உண்மைக்கென்று ஒரு வசீகரம் இருக்கத்தானே செய்கிறது.
“அன்பே, ஆருயிரேன்னு பேசுறத விட இப்படி அடிச்சுக்கறது நல்லா தான் இருக்கு” என்று அவன் முணுமுணுக்க, அவள் காதில் அது விழவில்லை.
“என்ன சொன்னீங்க?”
“எல்லாம் என் நேரம்னு சொன்னேன்” என்றான். சட்டென சிலிர்த்துக் கொண்டாள்.
“அதையே நானும் சொல்லலாம் தேவன். ஆனா, நான் சொல்ல மாட்டேன். ஏன்னா எனக்கு பேசிக் டீசென்சி தெரியும்”
“அடேயப்பா, டீசென்சி? உனக்கு? நான் வந்ததுல இருந்து குடிகாரன், குடிச்சு உளறினேன், லவ் ஃபெயிலியர், நான் உனக்கு செட்டாக மாட்டேன்னு எத்தனை நொட்டை சொல்லியிருப்ப?” கோபமாக கேட்டான்.
“ஏயப்பா, இவர் மட்டும் ரொம்ப நல்ல மாதிரியா பேசினார். எனக்கு வாழ்க்கை கொடுக்குறேன், வாழைக்காய் கொடுக்கிறேன்னு ஆதி காலத்து அங்கிள் மாதிரி பேசி என் ஆத்திரத்தை கிளப்பிட்டு..”
“என்னைப் பார்த்தா உனக்கு அங்கிள் மாதிரி இருக்கா? அடங்கோ..” என்று எகிறி கொண்டு போனான் அவன்.
“ஹலோ, காதல் தேவன். வயசென்ன உங்களுக்கு?”
“உன்னை விட மூனு வயசு தான் பெரியவன் நான். அப்போ நீ என்ன?” என்று அவன் கேட்க, “ஏன் நீங்களே அதையும் சொல்லிடுங்களேன். நீங்க ரொம்ப தைரியமான ஆள் தானே?” என்றாள் பார்வையில் கிண்டல் மொழி பகர்ந்து.
வார்த்தைகள் எல்லாம் மறந்து போனது போல அவன் முகம் பார்த்து நின்றாள்.
“நீங்க ஓகே சொல்லிட்டீங்க தேவன். என் சம்மதத்தை எல்லாம் எங்கப்பா கேட்கவே இல்ல. அப்புறம் ஏன் இந்த கல்யாணத்துக்கு இப்போ ஓகே சொன்னேன்னு தானே பார்க்கறீங்க?”
“சிவரஞ்சனி, என்ன பிரச்சினை உனக்கு?”
“நான் பேசி முடிச்சுடுறேன் தேவன், பிளீஸ்”
“ம்ம், கர்ணா குடும்பம் பிரச்சினை கொடுக்குறதை தாண்டி ஏதோ இருக்குது போல. இல்லையா?”
அவன் கேட்கவும், ஆமென்று தலையசைத்தவளுக்கு ஜெகபதி பாபுவின் நினைவு வந்தது. அதனுடன் இணைந்து குற்ற உணர்ச்சியும் வந்தது.
ஜெயதேவனிடம் நொடிக்கொரு முறை அவன் காதல் கதையை சொல்லி சொல்லி காண்பித்திருக்கிறாள். இப்போது அவளின் கதையை கேட்டால் என்ன செய்வான் அவன்? என்ற சிந்தனை மனதிலோட, “உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். ரொம்ப ரொம்ப இம்பார்ட்டன்ட், அதைக் கேட்டதுக்கு அப்புறம் நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்தி..” என்ற அவள் பேச்சை,
“ப்ச், முதல்ல என்னனு சொல்லு. அப்புறம் டிசைட் பண்ணலாம்” என்று முடித்து வைத்தான் அவன்.
“இப்போ சொல்ல முடியாதே. நாளைக்கு வெளில மீட் பண்ணலாம். இல்லனா, நீங்க வீட்டுக்கு வாங்க” என்றாள்.
“இந்தா உன் போன், என் நம்பர் சேவ் பண்ணிட்டேன். நான் நைட்டு போன் பண்றேன். அப்போ என்னன்னு சொல்லு”
“இல்ல, நேர்ல தான் சொல்லணும்” என்று அவள் சொல்ல, லேசாக சிந்தனை வயப்பட்டான்.
“நான் நாளைக்கு காலைல சென்னை போறேன். நாளைக்கு நைட் ஒரு சாங் ரெக்கார்டிங் இருக்கு. நான் திரும்பி வர ரெண்டு நாளைக்கு மேல ஆகும். அதான் யோசிக்கிறேன்” என்று அவன் சொல்லவும், அதிர்ச்சியுடன் நெஞ்சில் கை வைத்தாள் சிவரஞ்சனி.
“ரெண்டு நாளா..?”
“நீயென்ன என் லவ்வர் மாதிரி..” என்று தொடங்கியவன், “ம்ம், இன்ட்ரெஸ்டிங். என் வருங்காலமா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்ட போல. உன் பேச்செல்லாம் அப்படித்தான் இருக்குது” என்று சட்டென மாற்றி சொல்லி கண் சிமிட்டியவனை கடுப்புடன் பார்த்தாள்.
“அப்பாடா, காளி இஸ் பேக்” என்றான் கள்ளச் சிரிப்புடன். அதற்கும் கண்களை உருட்டினாள்.
“அப்புறம் எனக்கு ரெண்டு கண்டிஷசன் இருக்கு தேவன்”
“என்ன நீ, இப்பத்தான் நான் காரணம் சொல்லுவேன், அந்த கதை கேட்டு கல்யாணத்தை முடிவு பண்ணிக்கோங்கன்னு சொன்ன. அதுக்குள்ள கல்யாணத்துக்கு ரெண்டு கண்டிஷனும் போடுற. என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?”
“உங்களை ஏமாளின்னு என் குடும்பம்..” என்றவள், அவன் கேள்வியாக புருவம் சுருக்கவும், அதற்கு மேல் எதையும் சொல்லவில்லை.
“தேவன், நான் ரொம்ப பேசுறேன்னு நீங்க நினைக்கலாம். ஏன் எனக்கே தெரியுது தான். பட் ஐ ஹவ் நோ அதர் வே. சோ, பிளீஸ்..”
“இந்த பிளீஸை நீ முன்னாடியே சொல்லி இருக்கலாம்” என்றவனை அவள் முறைக்க, சிரிப்புடன், “சீக்கிரம் சொல்லு. எங்கம்மா உன்னை விட மோசமா என்னை முறைக்குறாங்க பார்” என்றான்.
அவனையே விழியெடுக்காமல் பார்த்த அவள் பார்வையில் அப்படியொரு தயக்கம் தெரிந்தது.
“ஓகே, சிவரஞ்சனி. நான் சீரியஸா கேட்கிறேன். சொல்லு” என்று கைக் கட்டி நின்றான்.
“நீங்க.. நீங்க.. என் வீட்ல இருந்து.. கல்யாணத்துக்கு வரதட்சணையா எதுவும் வாங்க கூடாது”
“சத்தியமா நீ என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க?’ என்று அவன் கோபமாக கேட்க,
“நம்ம கல்யாண செலவெல்லாம் நீங்க தான் செய்யணும். எங்கப்பாவை ஒரு பைசா கூட செலவு பண்ண விடக் கூடாது” என்று அவள் போக்கில் சொல்லிக் கொண்டே போனாள்.
“ஓ..”
“நாளைக்கு எக்காரணம் கொண்டும் அவருக்கு நீங்க ஹெல்ப் பண்ண கூடாது. பைனான்ஸியலா மட்டுமில்ல, பொண்ணு எடுத்த வீடாவும் அவங்களுக்கு நீங்க எந்த உதவியும் செய்யக் கூடாது..”
“ஏன்?”
“இதுக்கெல்லாம் உங்களுக்கு சம்மதம்னா மட்டும்..” மேலே அவள் பேசும் முன் கை நீட்டி தடுத்தான் அவன்.
ஜெயதேவனுக்கு அவள் பேச்சு புதிராக இருந்தது.
அவளின் பெற்றோரை திரும்பிப் பார்த்தான். அந்த வீட்டை கண்களால் சுழற்றினான். அவள் குடும்பத்தின் தொழில்களை, சொத்துக்களை பற்றியெல்லாம் அவனுக்கும் ஓரளவுக்கு தெரியும். அவனது அக்கா கௌரியின் திருமணத்தின் போதே அதெல்லாம் ஆராய்ந்து அலசப்பட்டது தானே. ஆக, அவனுக்குத்தான் அவளின் நிபந்தனைகள் புரியவில்லை.
“சிவரஞ்சனி, நீ என்ன சொல்ல வர்றன்னு கொஞ்சம் தெளிவா சொன்னா தான் எனக்குப் புரியும்”
“நீங்க, எங்க வீட்ல இருந்து வரதட்சணையா, சீர், செனத்தி எதுவும் வாங்க கூடாது. கல்யாண செலவும் கேட்க கூடாது. எங்க குடும்பத்துக்கு இன்னைக்கு இல்ல என்னைக்கும் நீங்க பண விவகாரத்துல ஹெல்ப் பண்ணக் கூடாது.” என்றாள் அழுத்தமாக அவன் கண்களை பார்த்து,
“இதுவும் செக்னு புரியுது. ஆனா, யாருக்குன்னு தான்..” என்று அவன் கேள்வியும், யோசனையுமாக மீசையை நீவி விட, சிரித்து விட்டாள் சிவரஞ்சனி.
“அப்புறம் நீ சொன்ன கண்டிஷன்ஸ் பத்தி நான் யோசிச்சு நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது பதில் சொல்றேன்” என்றான். அவன் கண்களில் அவளை வெறுப்பேற்றும் நோக்கமும், குறும்பு சிரிப்பும் இருக்க,
“ஓகே. நாம ஒரு கட்டிங்கோட கண்டிஷன்ஸ் டிஸ்கஸ் பண்ணுவோம்” என்று இரு விரல்களால் குறிப்பு காட்டி அவள் சொல்ல, “உன்னை எல்லாம்..” என்று பல்லைக் கடித்தான் ஜெயதேவன்.
“ஜெய்..” என்று அழைத்தபடி சீதாலட்சுமி வர, “சீ யூ” என்றவன் முகத்தில் சிரிப்பிருந்தது.
அவர்களது குடும்பம் விடைபெற்று வெளியேறியதும் மகளை பிடித்துக் கொண்டார் அங்கயற்கண்ணி.
“இந்த கல்யாணம் எங்க உனக்கு பிடிக்காம போய்டுமோன்னு நான் பயந்துட்டே இருந்தேன் ரஞ்சி. மாப்ளகிட்ட நீ சிரிச்சு பேசவும் தான் என் மனசுக்கு ஆறுதலா இருக்கு”
“இப்பவும் நான் பிடிக்கலன்னு சொன்னா என்னம்மா பண்ணுவ?” சிவரஞ்சனி கோபமாக கேட்க,
“பைத்தியம் மாதிரி விளையாடாத” என்று அவளை அதட்டினாள் கௌரி.
அவளோ அசட்டையாக நின்றாள்.
அப்பா ஓரடி அவளை நோக்கி எடுத்து வைக்க, அவர் கைப் பிடித்து, “நீங்க போய் படுங்கப்பா. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று தைரியமாக சொன்னான் நெப்போலியன்.
சிவரஞ்சனி அடுத்து வந்த இரண்டு நாட்களும் அமைதியாக தான் சுற்றினாள்.
“நீ இப்படியே அமைதியா பேசாம இருந்திருக்கலாம்” என்று திமிராக சொன்ன நெப்போலியனுக்கு சேதுராமனின் தொழிலும், பெயரும் மட்டுமே பெரிதாக தெரிந்தது. அவர்களுக்கு கிரானைட் தொழில் என்ற கணக்கு மட்டுமே அவன் கண்களுக்குத் தெரிந்தது.
அதைக் குறித்து மட்டுமே அப்பாவும், மகனும் பேசிக் கொண்டார்கள். சிவரஞ்சனியின் அமைதியை அவர்கள் கண்டுக் கொள்ளவேயில்லை.
சதுரங்க ஆட்டத்தில் அமைதி தான் ஆபத்து என்பது புரியாதவர்களாக நின்றார்கள் அவளின் எதிரணியினர்.
ஜெயதேவன் சொன்ன சொல் மாறாமல் அவளைக் காண வந்து நின்றான்.
“நான் ஒருத்தரை விரும்பினேன். அவருக்கு ஊரு ஆந்திரா. அது அப்பா, அண்ணாக்கு தெரிஞ்சுடுச்சு. அதுனால தான் உங்க வீட்டுக்கு வந்து அவசரமா நம்ம கல்யாண பேச்சை எடுத்தாங்க” மனதில் தயக்கம் இருந்தாலும், தைரியமாக அவன் கண்களை பார்த்துச் சொன்னாள் சிவரஞ்சனி.
அதைக் கேட்டதும் காரின் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து விட்டான் ஜெயதேவன்.
“தேவன்..”
“வேணாம் சிவரஞ்சனி. இப்போ நான் பேசினா நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ. கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்றவனின் குரலில் அப்பட்டமான கோபம் தெரிந்தது.