அதிகாரமாக பெயர் சொல்லி உறவு கொண்டாடியவருக்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள் சிவரஞ்சனி.
“அவங்க பேசட்டும். நீ உள்ள வா” என்று மகளை உள்ளே இழுத்துக் கொண்டு போனார் அங்கயற்கண்ணி. கௌரி வந்தவரை உபசரித்து கொண்டிருந்தாள்.
அறைக்குள் வந்ததும் கர்ணாவுக்கு தகவல் சொல்லி விட்டாள். ஆனாலும், படபடப்பு குறையவில்லை. ஜெயதேவன் ஏற்கனவே கோபத்தில் இருப்பது போல தெரிய, அவனிடம் இதை தெரியப்படுத்துவதா, வேண்டாமா என்று மனதினுள் கேள்வி எழுப்பியபடி அமர்ந்திருந்தாள்.
கௌரி அறைக் கதவை லேசாக தட்டி விட்டு உள்ளே வந்தவள், “உன்னை மாமா கூப்பிடுறாங்க, வா” என்று அழைக்கவும், அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“வான்னு சொல்றேன் இல்ல.” என்று அதட்டி அவளின் கைப் பிடித்து எழுப்பி விட்டாள்.
இருவரும் கூடத்திற்கு வர, “உட்காரு” என்று தொலைக்காட்சி முன்னிருந்த சோஃபாவில் சிவரஞ்சனியுடன் சேர்ந்து அமர்ந்தாள் கௌரி.
“என்னை அப்பா கூப்பிட்டாங்கன்னு சொன்னீங்க?” என்று அப்பாவை திரும்பி பார்த்து கேட்டாள்.
அவர்களுக்கு சற்று தள்ளியிருந்த சோஃபாவில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள் ஆண்கள்.
கௌரி தொலைக்காட்சியை இயக்க, சிவரஞ்சனி, “நேத்துல இருந்து ஒன்னுமே பேசல நீங்க. பிஸியா? கோபமா?” என்று கேட்டு ஜெயதேவனுக்கு செய்தி அனுப்பினாள்.
உடனேயே, “கொஞ்சம் பிஸி” என்று பதில் வந்தது. அதனுடன் முகநூல், எக்ஸ் தள இணைப்பையும் சேர்த்து அனுப்பியிருந்தான்.
“என்ன லிங்க் இது?” என்று கேட்டு அவள் அதை தொட, “என்னன்னு ஓபன் பண்ணி பார்த்தா தெரியப் போகுது சிவரஞ்சனி” என்றான் அவன்.
அதற்குள் அவளின் முகநூல், எக்ஸ் பக்கங்களில் இருந்து அறிவிப்பு ஒலி வந்துக் கொண்டேயிருக்க, கணத்தில் குழம்பிப் போனாள்.
ஜெயதேவன் அனுப்பிய இணைப்பு அவளின் அலைபேசி திரையில் மெல்ல விரிந்தது.
இருவரும் இணைந்து புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்து நின்ற புகைப்படத்தையும் அதற்கு மேலிருந்த வாசகத்தையும் விழி விரித்து பார்த்தாள் அவள்.
“சந்தங்கள் நீயானால், சங்கீதம் நானாவேன்”
என்ற தலைப்பின் கீழ் அவர்களின் திருமண அறிவிப்பை சிவரஞ்சனியின் பக்கத்தை டேக் செய்து வெளியிட்டிருந்தான் ஜெயதேவன். அத்துடன் அவர்களின் இரண்டு புகைப்படங்களையும் இணைத்திருந்தான்.
முதல் புகைப்படத்தில் வேட்டி சட்டையில் இருந்த ஜெயதேவன் முன்னே சிவப்பு பட்டில் சிரிப்புடன் நின்றிருந்தாள் சிவரஞ்சனி. அது நெப்போலியனின் திருமணத்தில் எடுத்த புகைப்படம் என்பதை பார்த்ததும் விளங்கிக் கொண்டாள்.
அடுத்த புகைப்படம் ஜெயதேவன் குடும்பம் அவர்களின் திருமணம் பேச வந்த தினத்தில் எடுக்கப்பட்டிருந்தது.
சிவரஞ்சனி அவனையே விழியலக பார்த்துக் கொண்டிருக்க, ஜெயதேவன் சிரிப்புடன் தாடையில் கை வைத்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். இதிலும் பட்டும், பூவுமாக அவள் நிற்க, இரண்டு புகைப்படங்களிலும் மணமகன் தோரணையில் நின்றிருந்தான் ஜெயதேவன். இரண்டுமே தற்செயலாக எடுக்கப்பட்டது என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு இயல்பாக இருந்தது. அதிலும் முதல் புகைப்படத்தின் ஓரத்தில் தேதி முதற்கொண்டு திருத்தப்படாமல் இருக்க, மக்களின் கற்பனைகள் அவர்கள் இட்ட கருத்துகளில் வெளிப்பட்டது.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்த புகைப்படம்.
ஆக, “காதல் தேவன் தன் காதலியை கைப் பிடிக்க போகிறார்” என்றிருந்தார்கள்.
“பின்னணி பாடகர் ஜெயதேவனுக்கும், மருத்துவர் சிவரஞ்சனிக்கும் விரைவில் திருமணம்” என்று அடுத்தடுத்த செய்தி பக்கங்களில் செய்தியை கண்டவளுக்கு இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது.
“இங்க பாரு” என்று அவளின் கையை சுரண்டி, தொலைக்காட்சியில் சத்தத்தை கூட்டினாள் கௌரி.
சமீப செய்தியாக அவர்களின் திருமண அறிவிப்பை வெளியிட்டு, அத்துடன் ஜெயதேவனின் பதிவையும், புகைப்படத்தையும் மாறி மாறி ஒளிபரப்பினார்கள்.
அந்த செய்தி காதில் விழுந்ததும் நெப்போலியன் எழுந்தே வந்து விட்டான்.
“தமிழக துணை முதல்வரை நேரில் சந்தித்து மகனின் திருமணத்திற்கு அழைத்தார் தேவன் கிரானைட்டின் உரிமையாளர், பாடகர் ஜெயதேவனின் தந்தை திரு. சேதுராமன் அவர்கள்.” என்ற செய்தியை தொடர்ந்து புகைப்படம் திரையை நிறைக்க, அரசியல்வாதியின் முகம் அதிர்ச்சியில் வெளிறியது.
திருமணத்திற்கு அவரின் தலைவர் குடும்பத்தையே அழைப்பார்கள் என்று அவரென்ன கனவா கண்டார். தொழிலதிபர்களின் தயவு இல்லாமல் அரசியல் தொழில் செய்ய முடியாது என்பதை அறியாதவரா அவர்.
“அப்போ நான் கிளம்பறேன். நீங்க பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டு சொல்லுங்க” என்று அப்பா, மகன் இருவரையும் கோபமாக பார்த்து சொல்லி விட்டு எழுந்து கொண்டார் அவர்.
“நம்ம பிசினஸ் பார்ட்னர்ஷிப் எப்பவும் போல தொடரணும்னு தான் நாங்க ஆசைப்படுறோம். நாங்க கேட்கிற மாதிரி ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க. அதை விட்டுட்டு இப்பவே நான் போட்ட பணத்தை கொடுங்கன்னு நீங்க கெடுபிடி பண்றது நல்லால்ல.” என்ற நெப்போலியன், “அதுக்கும் மேல நீங்க மிரட்டினா..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சேதுராமனுடன் வீட்டினுள் நுழைந்தான் ஜெயதேவன்.
“என்ன பழனிவேல், எப்படியிருக்கீங்க?” சேதுராமன் நேரடியாக அவரிடம் நலம் விசாரிக்க,
“ம்ம், இருக்கேன். நீங்களே பார்க்கறீங்களே” என்று தடுமாற்றத்துடன் பதில் கொடுத்தார் கர்ணாவின் தந்தை பழனிவேல்.
“இன்னைக்கு காலைல தான் உங்க தலைவரோட மகனை பார்த்துட்டு வந்தேன். ஆறு மாசம் கழிச்சு வரப் போற தேர்தலுக்கு தம்பி இப்பவே ஓடிட்டு இருக்கார். தலைவரை பார்க்க முடியாம தான் அவங்க வீட்டுக்கு போய் என் புள்ளை கல்யாண பத்திரிக்கையை சின்னவருக்கு வச்சுட்டு வந்தேன். அவங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா வர்றேன்னு.” என்றவரின் பேச்சில் கவனமாக இருந்த சிவரஞ்சனியின் பக்கத்தில் வந்து நின்றான் ஜெயதேவன்.
“ஒன்னுமில்லையே.” என்றவனை அவள் சந்தேகமாக பார்க்க, “காலைல சென்னை போய்ட்டு இப்போ தான் திரும்பினோம். ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்கு போயிட்டு இருந்தோம். அந்நேரம் அக்கா கால் பண்ணவும் நேரா உன்னை பார்க்க வந்துட்டேன். தட்ஸ் ஆல்” என்று தோள் குலுக்கினான் தேவன்.
“அண்ணி, உங்களுக்கு கால் பண்ணாங்களா? ஏன்?” ஆச்சரியமாக கேட்டாள்.
“ஏன்னா? எவ்வளவு கோபம் இருந்தாலும் தன் ராணி மேல எதிரியோட பார்வை படுறதை கூட ராஜா விரும்ப மாட்டார் தானே?” தீவிர முகபாவத்துடன் பதில் சொன்னான். புன்னகைக்க முயன்றவளால் முடியவில்லை.
“என்னால உங்களுக்கும், மாமாக்கும் தேவையில்லாத டென்ஷன், இல்ல?” என்று கலக்கத்துடன் கேட்டாள்.
அவளின் கண்களை கூர்ந்து, இல்லை என்று தலையசைத்தான் ஜெயதேவன்.
அங்கிருந்த அனைவரையும் கண்டவளுக்கு கலக்கத்தை மீறிய பெயரிட முடியா உணர்வு அலைக்கழித்தது.
சதுரங்க ஆட்டத்தில் அங்கிருந்த அனைவரையும் நிறுத்தி விட்ட உணர்வு அவளுக்கு. வெற்றி பெறும் போராட்டத்தில் வெட்டுப்படவும் வாய்ப்புண்டு என்பதை நினைத்து, கண்களை மூடித் திறக்கையில் கர்ணா வீட்டுக்குள் வந்திருந்தான்.
வெளிநாட்டில் இருப்பவன் இங்கு எப்போது வந்தான் என்ற கேள்வியுடன் அலைபேசியையும், அவனையும் மாறி மாறி ஆச்சரியமாக பார்த்தாள் சிவரஞ்சனி.
“வா, கர்ணா..” என்று நெப்போலியன் வியப்பும், ஆவலுமாய் வரவேற்க,
“கர்ணா, நீயெங்க இங்க வந்த?” என்று மகனை கேள்வி கேட்டார் பழனிவேல்.
“நெப்போலியன் கால் பண்ணார் ப்பா. நம்ம பார்ட்னர்ஷிப் பத்தி நீங்க பேசணும்னு சொன்னதா சொல்லவும் கிளம்பி வந்தேன். அப்படியே ரஞ்சனி கல்யாணத்துக்கு விஷ் பண்ணிட்டு போகலாம்னு, நீங்களும் அதுக்கு தானே வந்தீங்க?” என்று அவன் கேட்க பழனிவேலிடம் பதிலில்லை.
வேக எட்டுக்கள் வைத்து ஜெயதேவனை நெருங்கியவன், “கங்கிராட்ஸ்” என்று அவன் கைப் பற்றிக் குலுக்கினான்.
சிவரஞ்சனியை பார்த்து புன்னகைத்து, “ஹேப்பி ஃபார் யூ” என்றான். மெல்ல தலையசைத்து பதிலுக்கு புன்னகைக்க முயன்றவளின் கவனம் முழுவதும் ஜெயதேவனிடம் தான் இருந்தது.
“தேங்க்ஸ்” என்று ஜெயதேவன் அவனுக்கு பதில் சொல்ல, அப்பாவிடம் விரைந்தான் கர்ணா.
“உங்கம்மா போன் பண்ணிட்டே இருக்கா. நான் வீட்டுக்கு போறேன் ஜெய். நீ பொறுமையா பேசிட்டு வர்றியா?” என்று மகனிடம் வந்து கேட்டார் சேதுராமன்.
“சரிங்கப்பா” என்று அவன் சொல்ல, சிவரஞ்சனி வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு வெளியேறினார் அவர்.
மறுநொடியே கர்ணா, “நெப்போலியன், வீட்ல வச்சு பிசினஸ் பேச வேணாமே. நாளைக்கு நாம ஆபீஸ்ல மீட் பண்ணலாமா? நீங்க எப்போ ஃப்ரீன்னு பார்த்திட்டு எனக்கு கால் பண்ணுங்க” என்று நெப்போலியனிடம் சொன்னான்.
அப்பாவை திரும்பி பார்த்து, “இனிமே பிசினஸை நான் தான் பார்க்கப் போறேன். அப்பாவை நாம எதுக்கும் தொல்லை பண்ண வேணாம். ஓகே? அப்புறம் பார்ட்னர்ஷிப்ல இருந்து விலகுற ஐடியா எங்களுக்கு இல்ல” என்றான்.
கர்ணா சொன்னது அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது.
“கர்ணா” என்று கர்ஜித்தார் பழனிவேல்.
“கிளம்பலாம் ப்பா” என்று அவரிடம் சொன்னவன், மற்றவர்களிடம் விடைப் பெற்றுக் கொண்டு விறுவிறுவென்று அப்பாவுடன் வெளியேறினான்.
சிவரஞ்சனி அவர்களுக்கு மேல் குழம்பிப் போனவளாக நிற்க, “சாரி, நான் ஊருக்கு வந்து ரெண்டு நாளாச்சு. இந்நேரம் உன்னை தொல்லை பண்ண வேணாம்னு நினைச்சேன். அதுனால தான் உன்னை காண்டாக்ட் பண்ணல. முதல்ல எங்கப்பாவை சமாளிச்சுட்டு அப்புறமா உன்கிட்ட பேசுறதா இருந்தேன். ஆனா, அவர் என்னை முந்திக்கிட்டார். சாரி அகைன். இனிமேல் உன் வாழ்க்கையை, உன் விருப்பப்படி நீ வாழலாம். என் பேரோ இல்ல என் குடும்பத்து நிழலோ கூட உன் மேல இந்த ஜென்மத்துல படாது. ஐ பிராமிஸ் யூ தட். ஸ்டே ஹேப்பி ரஞ்சனி” என்று நீளமாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் கர்ணா. அதை படித்து முடித்து அவள் நிமிர வாசலில் அவன் கார் கிளம்பும் சத்தம் கேட்டது.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜெயதேவனின் கையில் அவளின் அலைபேசியை வைத்தாள் சிவரஞ்சனி. அவன் தயங்க, “படிங்க தேவன்” என்றாள்.
கர்ணா அப்போது அனுப்பியிருந்ததையும், அதற்கு முந்தைய செய்தியையும் படித்தவனுக்கு கர்ணா, நெப்போலியனின் அழைப்பில் அங்கு வரவில்லை என்பது தெளிவாக புரிந்தது.
மேலும், பல விஷயங்கள் அவனை புதிராக குழப்ப அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“கர்ணா, எனக்கு நல்ல ப்ரெண்ட். அவ்ளோ தான்” என்றாள்.
“ஜெய், உனக்கு காஃபி எடுத்துட்டு வரவா?” என்று அவர்களின் முன்னே வந்து நின்று கேட்டாள் கௌரி.
அவள் நீட்டிய தண்ணீரை வாங்கிக் கொண்டு அவன் தலையசைக்க, “ஜெய்யை பின்னாடி தோட்டத்துக்கு கூட்டிட்டு போ ரஞ்சனி. நான் காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றாள் அவள்.
நெப்போலியன், அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தவன், “மாப்ள” என்று அழைத்து, “பழனி மாமா வந்தது பிசினஸ் பேச தான். ரஞ்சி விஷயத்தில இனிமே பிரச்சினை பண்ண மாட்டார். அவரை நாங்க பார்த்துக்கறோம்” என்று தேவன் கேட்காமலே உத்திரவாதம் அளித்தான்.
தேவன் காற்சட்டை பையில் இரண்டு கைகளையும் நுழைத்து கொண்டு கடின பார்வையுடன் நிற்க, “உங்ககிட்ட நாங்க முன்னாடியே சொன்னோம் இல்ல? மகனுக்கு பொண்ணு கொடுக்கலைன்னு கோபத்துல, பிசினஸ்ல கை வைக்கிறார். அதான்..” என்று அவன் தடுமாற்றத்துடன் இழுக்க, “பிசினஸை வீட்டுக்குள்ள கொண்டு வந்திருக்க கூடாது நீங்க” என்று புன்னகையுடன் குற்றம் சாட்டும் தொனியில் சொன்னான் ஜெயதேவன்.
அவன், “வீட்டுக்குள்ள” என்ற வார்த்தையை அழுத்தி சொல்லி, சிவரஞ்சனியை பார்த்து விட்டு, நெப்போலியனை பார்க்க, தலைக்குனிந்தான் அவன்.
அண்ணனுக்கு அவமான உணர்வெல்லாம் வரவே வராது என்று கசப்புடன் அவனைப் பார்த்து விட்டு வீட்டினுள் நடந்தாள் சிவரஞ்சனி.
அவளைப் பின் தொடர்ந்தான் ஜெயதேவன்.
“நீங்க ரெண்டு பேரும் பண்றது எதுவும் சரியில்ல. உங்கப்பனை நான் ஒழுங்கா வளர்த்திருந்தா, நீ ஒழுங்கா வளர்ந்திருப்ப டா” என்று அவர்கள் இருவரையும் பேசினார் மாயாண்டி.
அடுப்படியில் நின்று சேலை தலைப்பால் வாய் மூடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் அங்கயற்கண்ணி.
“அத்த அழறீங்களா? பிளீஸ், அழாதீங்கத்த. தப்பு நம்ம மேலயும் இருக்கு. இவங்க பேச்சுக்கு தலையாட்டி அவளை இத்தனை நாள் நாமளும் சேர்ந்து தானே கட்டாயப்படுத்தினோம்” என்று கௌரி சொல்ல, அமைதியாய் ஆமோதித்து கண்ணீர் விட்டார் அவர். பிறந்ததில் இருந்தே சாதி பெருமையும், பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் போதிக்கப்பட்டே வளர்ந்தவர் அவர்.
அவருக்கு கணவரின் பேச்சை மீறும் தைரியம் ஒருநாளும் வந்ததில்லை. அப்பாவின் வாரிசாக மகனும் வளர்ந்து நிற்கும் போது வருந்தினார் தான். ஆனாலும், அவர்களை மீறி அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. அவரையும் அதட்டி, மிரட்டி தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள் வீட்டு ஆண்கள்.
ஜெயதேவன், சிவரஞ்சனியை தொடர்ந்து வந்து தோட்டத்தை பார்த்தபடி அங்கிருந்த மர இருக்கையில் அமர்ந்தான்.
அவன் தலையை திருப்பி பார்க்க, அவனுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்தாள் சிவரஞ்சனி.
“தேங்க்ஸ்” என்றாள் அவன் கண்களை பார்த்து. இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தான் தேவன்.
எதற்கென்று கேட்கவில்லை அவன். கௌரி அவனை அழைத்து பழனிவேல் வந்திருப்பது பற்றிய விவரம் சொல்லியதும், அனிச்சையாய் சிவரஞ்சனியின் முகம் தான் அவன் கண் முன்னே வந்தது.
“பழனிவேல் அவங்க வீட்ல உட்கார்ந்திருக்காராம் ப்பா” என்று அப்பாவிடம் சொன்னவன், அடுத்த நிமிடமே அவர்களின் திருமண அழைப்பை வெளியிட்டு விட்டான்.
அப்பாவின் ஆலோசனையின் பெயரில் அவர் அரசியல் தலைவரை சந்தித்ததையும் செய்தி நிறுவனங்களுக்கு பகிர்ந்து விட்டான். பத்தே நிமிடத்தில் பரபரப்பு செய்தியாகி இருந்தது.
“நான் எதிர்பார்க்கவே இல்ல” சிவரஞ்சனி சொல்ல, “ம்ம், எனக்கு பொதுவா பெர்சனல் லைஃப் சோஷியல் மீடியால ஷேர் பண்றது பிடிக்காது தான். ஆனா, இது அவசியம்ன்னு பட்டது” என்றான்.
“உங்களுக்கு எப்படி தெரியும்? கௌரி அண்ணி கால் பண்ணாங்க சொன்னீங்க, நிஜமாவா?” என்று அவள் முடிக்கும் முன்பே இடையிட்டு, “ஜெகபதி பாவுவை கல்யாணம் பண்ணிக்க இருந்ததா என்கிட்ட நீ சொல்லவேயில்லையே சிவரஞ்சனி?” என்று கோபமாக அவள் கண்களை பார்த்து கடுமையான குரலில் கேள்வி கேட்டான் ஜெயதேவன்.