ஜெயதேவனின் கோபத்தில் நியாயமிருக்க, உடனேயே அவனை அழைக்க முற்படவில்லை சிவரஞ்சனி. வீட்டினரின் பார்வையை கண்டும் காணாதது போல தனது அறைக்கு வந்து விட்டாள்.
அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆழ்கடலின் சுழலுக்குள் அகப்பட்ட உணர்வு மீண்டும் மீண்டும் அலையாய் எழுந்து அவளை அலைக்கழிக்க, இம்முறை தப்பிக்க எதையும் பற்றிக் கொள்ள தோன்றவில்லை அவளுக்கு. கை, கால்களை பலமாய் அடித்து நீருக்கு மேலே வந்து விட போராடினாள். தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள, தன் சுய பலத்தால் தன்னையே இழுத்து கரை சேர்த்து விட்டால் போதும் என்றிருந்தது அவளுக்கு.
“ரஞ்சனி..” கௌரி வந்து நிற்க, அவளுடன் அங்கயற்கண்ணியும் நின்றிருந்தார்.
“என்னங்கண்ணி?” இருவரையும் பார்த்துக் கேட்டாள்.
“எதுவும் பிரச்சினை இல்லையே?” என்று அம்மாவும், “எங்க யார்கிட்டயும் சொல்லிக்காம கிளம்பிட்டான் ஜெய். உங்கண்ணா மேல கோபமா இருக்கானா? இல்ல, என் மேலயா?” என்று கௌரியும் கேட்க, மறுப்பாக தலையசைத்தாள்.
“இப்படி தலையாட்டினா என்ன அர்த்தம்? வாயை திறந்து பதில் சொல்லு. எனக்கு மனசு கிடந்து அடிச்சுக்குது.” அங்கயற்கண்ணி சொல்ல, அம்மாவை தீர்க்கமாக பார்த்தாள்.
“உனக்கு ஏன்மா மனசு அடிச்சுக்குது? இந்த கல்யாணம் நடக்கலைன்னா அப்பாவோட மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் குறைஞ்சிடும்னா? இல்ல, அண்ணனோட பேர், பிசினஸ் இதெல்லாம் பாதிக்கப்படும்னா?”
“எப்படி பேசுறா பாரு கௌரி.” என்று மருமகளிடம் ஆதங்கத்துடன் சொன்னவர், “உன் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு பெத்தவ எனக்கு அக்கறை இருக்காதா ரஞ்சி. நீ எனக்கு ஒரே பொண்ணு, உன்னை நல்லபடியா..” என்று அவளை நெருங்கி உருக்கமாக அவர் பேச, இறுக்கமானாள் சிவரஞ்சனி.
“போதும் மா, நிறுத்து. இப்பத்தான் உனக்கு நான் கண்ணுக்கு தெரியறேனா? உனக்கு ஒரு பொண்ணு இருக்கா, அவளை நீ தான் அக்கறையா பார்த்துக்கணும்னு இப்பதான் ஞானோதயம் வந்துச்சா மா உனக்கு? இத்தனை வருஷமும் என்னம்மா பண்ணிட்டு இருந்த? என்னை நீ வளர்க்கல, நானே தான் வளர்ந்தேன். உங்க அடிமைத்தனத்தையும், அடியையும் பொறுத்துக்கிட்டு.. போம்மா..” என்று பேச முடியாமல் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
“அப்பா, உன் நல்லதுக்கு தான்..” என்று ஆரம்பித்த அம்மாவை மனதில் மண்டிய கசப்புடன் பார்த்தாள்.
“ரஞ்சனி..” என்று கௌரி அழைக்க, “நீங்க இந்த வீட்டுக்கு வந்தப்போ, இனிமேலாவது என் உலகம் மாறும்னு ரொம்ப எதிர்பார்த்தேன் அண்ணி. அண்ணாவுக்கு நீங்க சொல்லி புரிய வைப்பீங்கன்னு நம்பி எதிர்பார்த்து, நான் ஏமாந்தது தான் மிச்சம்.” என்றாள் கை விரித்து.
“அதெப்படி அண்ணி கண்ணு முன்னாடி ஒரு பொண்ணுக்கு நடக்கிற கொடுமையை பார்த்திட்டு கண்டுக்காம இன்னொரு பொண்ணால இருக்க முடியுது? இவளும் நம்மளை மாதிரி பொண்ணு தானே, இவளுக்கு இந்த கொடுமை நான் எப்படி நடக்க விடலாம்? இதே எனக்கு நடந்தா நான் என்ன பண்ணுவேன்னு யாரும் யோசிக்கவே மாட்டாங்களா? ப்ச், எனக்கு நீங்க யாரும் ஹெல்ப் பண்ணியிருக்க வேணாம். அட்லீஸ்ட் என் நிலையில் இருந்து கொஞ்சம் என்னை புரிஞ்சுக்க எப்பவாவது டிரை பண்ணியிருக்கலாம்”
“ரஞ்சனி..” என்று கௌரி ஏதோ சமாதானம் சொல்ல வர, “பரவாயில்ல அண்ணி. நீங்க எதுவும் சொல்ல வேணாம். எப்படியும் இந்த கல்யாணம் உங்க எல்லோரையும் காப்பாத்திடும்.” என்றாள்.
அம்மாவும், அண்ணியும் மாறி மாறி பேச, அமைதியாக படுத்து விட்டாள் அவள்.
‘என் வாழ்க்கை ஏன் இப்படியானது? பிடித்தும், பிடிக்காமலும், ஒருவித கட்டாயத்தினால் நிகழும் இந்த திருமணத்தில் நான் ஜெயதேவனை பகடைக் காயாக மாற்றி விட்டேனா? அம்மாவுக்காக அவனும், குடும்பத்திற்காக நானும் ஒரு பந்தத்தில் இணைவது எப்படி சரியாகும்?’ மனதில் ஓடிய எண்ணங்களுடன் கண் மூடினாள், உறக்கத்திற்கு பதிலாக ஜெயதேவனின் கோப முகமே கண்களில் வந்து நின்றது.
“இருங்கம்மா, ரெப்ரஷாகிட்டு வர்றேன். அப்படியே எனக்கு ஒரு கப் காஃபி” என்று மெல்ல நழுவி, படியேறி தனதறைக்கு சென்று விட்டான்.
“அப்படியே எனக்கும் ஒரு கப்” என்று சேதுராமனும் கேட்க, “உங்களுக்கு கஷாயம் போட்டு எடுத்துட்டு வர்றேன் இருங்க” என்று முகத்தை திருப்பிக் கொண்டு போனார் சீதாலட்சுமி.
தேவன் அறைக்குள் நுழைந்ததும் இசையை ஒலிக்க விட்டு அலைபேசியை எடுத்தான். அவனையும் அறியாமல் சிவரஞ்சனியின் பெயரை தொட்டது விரல்கள்.
அவளிடம் இருந்து எந்த செய்தியும் வந்திருக்கவில்லை.
“என்னோட கடந்த காலத்துக்கு என்னால மன்னிப்பு கேட்க முடியாது தேவன். அதை உங்ககிட்ட இருந்து என் ஃபேமிலி மறைச்சு, அதுனால இந்த கல்யாணம் முடிவானதுனால தான் மன்னிப்பு கேட்டேன். அவ்ளோ தான்.” இன்னும் அவள் குரலே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
“என்கிட்ட வேற எதையும் எதிர்பார்க்காதீங்க” என்று அவன் கண்களை பார்த்து அவள் சொன்ன போது, தனக்கு ஏன் கோபம் வந்தது? தன்னைத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டான்.
“கர்ணா, கல்யாணம், இந்த காதல் தேவன், நீங்க யாரும் என்னை காப்பாத்த தேவையில்ல.” என்று இரைந்தவளின் மனத்தை அவனால் அன்று புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு கோபம் என்று தான் நினைத்திருந்தான்.
எப்போது அவனிடம் வேலை, மருத்துவமனை குறித்துப் பேசினாளோ, அப்போதே அவளை தெளிவாக புரிந்துக் கொண்டான் அவன்.
இத்தனை வருடங்களும் அந்த வீட்டில் அவள் போராடி தோற்றும் தொடர்ந்து அமைதியாக அங்கேயே இருந்ததின் காரணமும் புரிந்தது.
அவளின் உலகம் வீடல்ல. மருத்துவமனை என்பது விளங்கியது.
மாலையில் கௌரி அழைக்கும் போது அக்கா ஏதோ திருமண வேலையாக பேச அழைத்திருக்கிறாள் என்ற எண்ணத்துடன் தான் அழைப்பை ஏற்றான் அவன்.
“உன் நம்பருக்கு எவ்வளவு நேரமா டிரை பண்றேன் தெரியுமா ஜெய்” என்ற அக்காவின் குரலில் இருந்த பதட்டத்தில் சட்டென நிமிர்ந்து அமர்ந்தான்.
“என்னாச்சுக்கா?”
“உனக்கு இவ்வளவு நேரம் டிரை பண்ணி நீ எடுக்கலன்னதும், சித்திக்கு அடிச்சு நீ எங்கன்னு கேட்டேன். அவங்க என்ன ஏதுன்னு விசாரிக்கவும், உண்மையை சொல்லிட்டேன் ஜெய்” என்ற கௌரி, அதையே அவனிடமும் தெரியப்படுத்த,
“எனக்கு ஏற்கனவே தெரியும் கா. சிவரஞ்சனி சொல்லிட்டா” என்றான் யோசனையுடன்.
“ஆனா, இதைப் பத்தி நீ முன்னாடியே சொல்லி இருக்கணும் கா. இப்போ போய் அம்மாகிட்ட சொல்லி அவங்களை டென்ஷன் பண்றது தப்பில்லையா கா?” கோபமாக கேட்டான்.
“இல்ல ஜெய். அவ வீட்டை விட்டு போகணும்னு தான் பண்ணாலே தவிர.. அவளை நீங்க தப்பா நினைக்க கூடாதுன்னு தான் நான் முன்னாடியே..” என்று அவள் தயக்கத்துடன் சொல்ல,
“பிளீஸ், நிறுத்து கா. உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா? அவ பேர் ஸ்பாயில் பண்ண அவ வீட்டு ஆளுங்க நீங்களே போதும். அவளுக்கு வீடு நரகமா இருந்தா, தப்பிக்க தான் தோணும். அவங்க குடும்பத்தோட சேர்ந்து நீயும் அவளுக்கு நடந்த எல்லாத்துக்கும் உடந்தையா இருந்துட்டு.. இப்போ என்னமோ என்கிட்ட கதை விடுற கா? அவளை நாங்க தப்பா நினைக்க கூடாதா? நிச்சயமா நினைக்க மாட்டோம். ஓகே?” குரலில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கேட்டான்.
“ஜெய், அவ கர்ணா குடும்பத்துக்கு கிட்ட மாட்ட கூடாதுன்னு தான், நான் உங்க வீட்டுக்கு வந்தேன். நீ அவளை பாத்துப்பன்னு..” என்றவளை பேச விடாமல், “ஆஹா, எம்புட்டு அக்கறை கா? உண்மையை சொல்லட்டா? நீங்க யாரும் அவளுக்கு தேவையில்ல, சிவரஞ்சனிக்கு அவளை பார்த்துக்க தெரியும்.” என்றான் கடுப்புடன்.
“ஜெய்..”
“நான் அங்க தான் வரேன் கா. நீ போனை வை” என்று அழைப்பை துண்டித்து விட்டான்.
கௌரி தற்போது உண்மையை சொன்னதின் காரணம் அவனுக்கு விளங்க, அவர்கள் வீடு செல்ல விரைந்தான்.
“என்ன ஜெய்?” மகனின் தோள் தொட்டு கேட்டார் சேதுராமன்.
சிவரஞ்சனியின் வீட்டிற்கு பழனிவேல் வந்திருப்பதையும், அவரின் மிரட்டலையும் அப்பாவிடம் சொன்னவன், அத்தோடு அவர் திருமணத்தை நிறுத்திய காரணத்தையும் சொல்ல, “ம்ம்” என்றார் சேதுராமன்.
“உங்களுக்கு தெரியுமாப்பா?”
“ம்ம், விசாரிக்கையில் தெரிய வந்தது. உனக்கு பொண்ணை பிடிக்கையில, இதைச் சொல்லி குழப்ப வேணாம்னு தான் விட்டுட்டேன்.” என்றார்.
அன்று சிவரஞ்சனி, “நாங்க ஹைதராபாத் போய் செட்டிலாக இருந்தோம்..” என்று சொன்னதின் முழுமையான அர்த்தத்தை இன்று தான் உணர்ந்தான் அவன். கௌரியிடமும் அதனாலேயே அவளை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.
அவளுக்காக புகைப்படமும், செய்தியும் வெளியிட்டான்.
அதற்கு நேர்மாறாக கோபப்படவும் செய்திருந்தான்.
சில நேரங்களில் ஒரு செயலை செய்து விட்டப் பிறகே சிந்திக்கத் தொடங்குகிறோம்.
சிவரஞ்சனியிடம் தான் வெளிப்படுத்திய கோபம் அதீதம். அதே சமயம் அவள் உண்மையை முழுதாக சொல்லாமல் மறைத்ததும் தவறு, அதற்கு தன் கோபம் சரி என இரு வேறு மனநிலையில் உழன்று கொண்டிருந்தான் அவன்.
“ஜெய்” கீழிருந்து அம்மாவின் குரல் கேட்க, அப்படியே எழுந்து சென்றான்.
மகனை பார்த்ததும், “நீ ரூமுக்கு போய் எவ்வளவு நேரமாச்சு ஜெய். அதே ஷர்ட்ல தான் இருக்க, மாத்தலையா?” என்று கேட்டார் சீதாலட்சுமி.
அவருக்கு பதில் சொல்லாமல் காஃபியை எடுத்து அருந்தத் தொடங்கினான் அவன்.
“உங்க ரெண்டு பேரையும் அப்புறமா கவனிச்சுக்கறேன். நீ சொல்லு. இந்த ஃபோட்டோ கௌரி கல்யாணத்துல எடுத்தது தானே? கல்யாணத்துல எடுத்த நம்ம போட்டோவை மட்டும் எனக்கு அனுப்பி வச்சா. அப்போ பார்த்திட்டு நான் மறந்தே போய்ட்டேன். ஆனா, உனக்கு அப்போருந்தே மருமகளை பிடிக்குமா ஜெய்?” என்று ஆவலாக கேட்டார் சீதாலட்சுமி.
சிரிப்பை அடக்கி, “ம்மா” என்று முறைத்தான் தேவன்.
அவன் ஆமென்று சொன்னால் நிறைய விஷயங்கள் அப்படியே குளிர்ந்து போகும் என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும், பொய் சொல்ல மனம் வரவில்லை.
“பதில் சொல்லு ஜெய். இந்த போட்டோவை எடுக்க தான் நேத்து என் போனை வாங்கினியா? என் போனில் இந்த ஃபோட்டோ இருக்கறது எனக்கே தெரியாதே டா”
“எனக்கு இந்த ஃபோட்டோ பார்த்த ஞாபகம் இருந்தது மா”
“பாருங்களேன். என்ன சொல்றான்னு, ஞாபகம் இருந்ததாம்.” என்று கணவரிடம் சொன்னவர், “ஒழுங்கா நேரா பதில் சொல்லு தம்பி.” என்று மகனை அதட்டினார்.
அவன் மௌனமாக அமர்ந்திருக்க, “கௌரி கல்யாணத்தப்போவே உனக்கு மருமகளை பிடிக்குமா ஜெய்?” மீண்டும் கேட்டார் அவர்.
அவன் சிவரஞ்சனியை காதலிக்கவில்லை தான். ஆனால், “பிடிக்கும் ம்மா” என்று உண்மையை சொன்னான் தேவன்.
பளிச்சென மலர்ந்தது சீதாலட்சுமியின் முகம்.
“இதை உங்க புள்ள அப்பவே சொல்லியிருந்தான்னா நல்லாருந்திருக்கும் இல்லங்க. உடனே கல்யாணம் பண்ணி வச்சுருக்கலாம். இந்த நடிகைங்க கூட காதல்னு இவன் பேரும் அடிப்பட்டிருக்காது. மருமகளும் நம்ம வீட்ல நிம்மதியா வாழ்ந்திருக்கும். ரெண்டு பேர் பேரும் கெட்டு..”
“கெட்டு போக நம்ம புள்ளைங்க பேர் என்ன ஊறுகாயா? விடு சீதா” என்று மனைவியை அதட்டினார் சேதுராமன்.