பொன்னிற வேலைப்பாடு செய்திருந்த ரோஜா நிற தாவணி உடுத்தியிருந்தாள் சிவரஞ்சனி. மதுரையின் மல்லியை சூடாமல், தூக்கிப் போடப்பட்டிருந்த கொண்டையில் அழகாய் பிச்சிப்பூ சூடி நேர்த்தியாய் நின்றிருந்தாள்.
“இது என் தம்பி ஜெயதேவன்” என்று கௌரி அவனை அறிமுகப்படுத்த, அதற்கு அவசியமே இல்லாமல் அவனைக் கண்டதும் அவள் கண்களில் வந்து போன ஒளி சொன்னது, அவனை அவளுக்குத் தெரியும் என்று.
ஆனால், தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமல், “ஹாய்” என்றாள் புன்னகையுடன்.
“ஹாய், சிவரஞ்சனி. என்ன படிக்கறீங்க?” எடுத்ததும் அதைத்தான் கேட்டான். கௌரி சிரித்து, “அவ டாக்டர் டா” என்று சொல்ல,
“இன்னும் படிச்சுட்டு தான் இருக்கேன்.” என்று பதில் சொன்னாள் சிவரஞ்சனி.
“ஏன் டாக்டரா பிராக்டிஸ் பண்ண பிடிக்கலையா?” அவன் புரியாமல் கேட்க,
“ஓகே. சாரி. என்ன படிக்கறீங்கன்னு நான் கேட்டிருக்கு கூடாது” சங்கடமாக சொல்லி தலைக் கோதி கொண்டான்.
“இட்ஸ் ஓகே” என்றாள் சிவரஞ்சனி. அதற்கு மேல் அதிகம் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள் அவள்.
மறுநாள் திருமணத்தின் போது பார்க்கும் போது ஒரு புன்னகை அவ்வளவு தான். ஆனால், அவளை நிறுத்தி வைத்து அவன் தான் பேசினான்.
அதற்கடுத்த நாள் பசுமலை ஹோட்டலில் நடந்தது வரவேற்பு நிகழ்ச்சி. நெருங்கிய உறவுகள் மற்றும் தொழில் முறை நண்பர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திறந்தவெளியில் சிறு சிறு குடில்கள் அமைத்து பப்பெட் முறை உணவு ஏற்பாடாகி இருந்தது.
அதுவரை வரவேற்பில் அண்ணியுடன் நின்றிருந்த சிவரஞ்சனி, “ஃபைவ் மினிட்ஸ்ல வர்றேன் அண்ணி” என்று சொல்லிக் கொண்டு காற்று வாங்க வெளியில் வர, அவள் கண்ணில் விழுந்தான் தடுமாற்றத்துடன் சுவரை பிடித்து நின்ற ஜெயதேவன்.
“ஆர் யூ ஆல்ரைட்? ஏன் இப்படி நிக்கறீங்க? உடம்புக்கு என்ன பண்ணுது?” ஓடி வந்து அவனை தாங்கிக் கொண்டு கேட்டாள். அவன் மேலும் தடுமாறினான்.
“உங்களுக்கு ஏதாவது மெடிக்கல் கண்டிசன் இருக்கா ஜெயதேவன்? நீங்க சொன்னா தான் என்னால ஹெல்ப் பண்ண முடியும்.” என்றவள், அவனை நேராக நடக்க வைக்க போராடினாள். அங்கிருந்த இருக்கையை நோக்கி அவள் நடந்தால், அவனோ மறுபக்கமாக அவளை இழுத்தான்.
அவள் உதவிக்கு அழைக்க தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று திரும்பி திரும்பிப் பார்க்க,
“ஷிட், நீயென்ன என்னை விட மோசமா தள்ளாடுற?” கண்களை தாழ்த்தி அவளைப் பார்த்துக் கேட்டான் தேவன்.
“குடிச்சுருக்கீங்களா?” அதிர்ச்சியுடன் கோபமாக கேட்டு ஆழ மூச்சிழுத்தவளின் முகம் அஷ்டகோணலாக, “ச்சைக், தானே? குடிக்கும் போது எனக்கும் அப்படித்தான் இருந்தது” என்றான் சிரிப்புடன்.
அவளோ சிரிக்காமல் முறைத்தாள்.
“கண்ணாலேயே என்னை எரிச்சுடாதீங்க” அவள் கண்களை காற்றில் வட்டமிட்டு சொன்னான்.
“குடிச்சுட்டு பேச்சை பாரு” எரிச்சலுடன் முணுமுணுத்து, “எங்கயாவது விழுந்து தொலைச்சுடாம இங்கேயே இருங்க. நான் போய் உங்க வீட்ல இருந்து யாரையாவது கூட்டிட்டு வர்றேன்” என்று அவள் விலக போக, “என்னாது..” என்று அதிர்ச்சியுடன் கத்தினான்.
“வீட்டுக்கு தெரிஞ்சா கொன்னே புடுவாங்க” ரகசியம் போல கிசுகிசுத்தான்.
“அப்புறம் ஏன் குடிச்சீங்க?”
“ம்ம், அந்த சோக கதையை நான் எப்படி சொல்வேன்?” என்றவன் முகம் போன போக்கில் அவளுக்கு சிரிப்பு வந்தது.
“சிலர் சிரிப்பார், சிலர் அழுவார். நானே சிரித்துக் கொண்டே அழுகின்றேன்” என்று அவன் பாவத்துடன் பாடவும், பரிதாபமாக பார்த்தாள்.
“அப்படி பார்க்கிறது தான் வேணா..” என்று அவன் அதற்கும் பாட அவளுக்கு சுவாரசியமாகிப் போனது. அதை வெளிக்காட்டி கொள்ளாமல், “உங்க டிரைவர் எங்க இருப்பார் சொல்லுங்க. போய் கூட்டிட்டு வர்றேன்.” என்று கேட்டாள்.
“டிரைவர்?” என்று யோசித்து, உதட்டை இடப்புறமாக வளைத்து, “ப்ச்” என்றான்.
“என் கால் ஒரு பக்கமா போகிற ஃபீல். இப்படி உட்காருவோமா?” நடைபாதையை கைக் காட்டி அவன் கேட்க, “இல்ல, அங்க போயிடலாம்” என்று திறந்தவெளி உணவகத்தை கைக் காட்டினாள்.
“ஓ, சிவரஞ்சனியா? இந்த போதை தெளிய ஏதாவது மருந்து குடுக்க முடியுமா டாக்டர்?” என்று சலம்பினான்.
“நடங்க” கோபமாக சொன்னாள். வரவேற்பு நடக்கும் இடத்தில் இருந்து விலகி, பக்கத்தில் இருந்த உணவகம் சென்று அமர்ந்தார்கள்.
“இங்கேயே இருங்க. நான் இப்போ வந்துடுறேன்”
“ஓ, நீயும் என்னை விட்டு போறியா?” என்றான் சோகமாக.
சிரிப்பை அடக்கி, “வர்றேன் இருங்க” என்றவள், அவர்களை நெருங்கிய பணியாளரிடம் அவனை ஒப்படைத்து சென்றாள்.
இருவரின் அம்மாவிடமும் வெவ்வேறு காரணங்கள் சொல்லி விட்டு அவள் வர, அதற்குள் ஓய்வறை சென்று, வாந்தி எடுத்து ஓய்ந்து வந்திருந்தான் ஜெயதேவன்.
“ஒரு கிரீன் டீயும், வெஜ் சாலடும் கொடுங்க” என்று பணியாளரிடம் கேட்டு விட்டு தேவனிடம் திரும்பினாள்.
“அடிக்கடி குடிப்பீங்களா என்ன?”
“ஃபர்ஸ்ட் டைம். ம்ஹூம், இல்ல. செகண்ட் டைம். காலேஜ்ல ஒரு டைம் டிரை பண்ணியிருக்கேன். காலேஜா, ஸ்கூலா?” என்று அவளிடமே கேட்டான்.
“என்னைக் கேட்டா எனக்கு எப்படி தெரியும்?” என்றவள், “ஆமா, உங்களுக்கு திடீர்னு குடிக்கணும்னு ஏன் தோணுச்சு?” என்று கேட்டாள், அரை நொடியில் சோகமானான்.
“அவள் பறந்து போனாளே, என்னை மறந்து போனாளே..” என்று சோகம் சொட்ட சொட்ட பாடினான்.
நவரசத்துடன் அவனது காதல் கதையை அவளிடம் பகிர்ந்தான். அவளின் அறிமுக பாடலை அவனுடன் தான் பாடியதால் ஆரம்பித்திருந்தது அவர்களின் நட்பு.
நாளடைவில் அதுவே பிரியமாக மாற, இருவரும் இணைந்து பாடிய பாட்டுக்கள் மிகுந்த வெற்றி பெற்றது. அப்படியிருக்கையில் அவர்களின் பாடல் பதிவின் ஒரு துணுக்கு காணொளி இணையத்தில் வெளியாகி பரபரவென பரவ, அவளும் பிரபலமானாள். அதன் விளைவாக நடிக்கும் வாய்ப்பு வர, விரும்பி ஏற்றுக் கொண்டாள்.
நடிகையான பின்பு பாடகி, காணாமல் போனாள். ஜெயதேவன் அவளிடம் காதலை மறைமுகமாக சொல்ல, அத்தனை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
அதற்கு பிறகு அவள் நடிப்பில் தீவிரமாகி இருந்தாள்.
ஒரு வருடம் கழித்து அவளின் முதல் படம் வெளியாகும் போது, ஜெயதேவன் அந்த படத்தில் ஒரு பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகனாக மட்டுமே இருந்தான்.
அவள் தன் இரண்டாம் படத்தில் நடிக்கும் போது முதல் பட நாயகனுடன் காதல் என்று அறிவித்தார்கள்.
“என்னை விட்டு போறேன்னு சொல்றவளை எப்படி பிடிச்சு வைக்கன்னு தெரியல. என்னை லவ்வே பண்ணலன்னு சொல்றவளை எதுக்காக பிடிச்சு வைக்கணும்? நான் மட்டும் தான் அவளை லவ் பண்ணேனாம். அவ என்னை ஹர்ட் பண்ணக் கூடாதுன்னு எனக்கு ஓகே சொன்னாளாம்… ம்ம், என் மனசை அவ கால்ல போட்டு மிதிச்சுட்டு போய்ட்டா. என் இதயம் சுக்கு நூறா நொறுங்கி போச்சு. ” புலம்பினான்.
“உங்க இதயம் என்ன கண்ணாடியா? கீழ போட்டதும் உடைய?”
“ஓ, உடையாதா? ஆனா, எனக்கு நெஞ்சு வலிக்குதே?” என்று நெஞ்சை தட்டிச் சொன்னான்.
“காதல் எல்லாம் ஹார்மோன் வேலை. அதுக்கும் ஹார்ட்டுக்கும் சம்மந்தமே கிடையாது. அது பாவம், ரெஸ்ட் இல்லாம பிளட் பம்ப் பண்ணிட்டு இருக்கு. அதை போய் உங்க லவ் ஃபெயிலியருக்கு ப்ளேம் பண்றீங்களே?”
“இதயமே, இதயமே..” பாடினவன், “அம்புட்டும் பொய்யா டாக்டர்?” என்று கேட்க, சிரித்தாள் சிவரஞ்சனி.
“நமக்கு பிடிச்சவங்களை பார்க்கும் போது மூளையில் தான் முதல்ல பல்ப் எரியும்.”
“ஓ, அதுனால தான் லவ் பண்ணும் போது மூளை வேலை செய்யாம போய்டுதா?” என்று கேட்டு சத்தமாக சிரித்தான்.
“உண்மையா என் மூளை வேலை செய்யல தான். அவளை பத்தி வந்த நியூஸ் எதையும் நம்பல நான். என் லவ் மேல அவ்வளவு நம்பிக்கை. போடான்னுட்டு அவ என்னை தூக்கி போட்டு போற வரைக்கும் ஏமாளியா தான் இருந்திருக்கேன்.” அவன் தன் போக்கில் புலம்ப, அவனிடம் தண்ணீரை எடுத்து நீட்டினாள்.
கிரீன் டீ, சால்ட் வர இரண்டையும் கட்டாயப்படுத்தி உண்ண வைத்தாள்.
“எனக்கு லவ் ஃபெயிலியர் தான். அதுக்காக இப்படியா தண்டனை கொடுப்ப? இந்த இலை தழையை கூட சாப்பிட்டுடுவேன். ஆனா, இந்த டீ தான்” என்று முகம் சுளித்து தேநீரை குடித்தவன் உடலை உதறி, வயிறை பிடித்துக் கொண்டு வாந்தி எடுப்பது போல குமட்ட, சட்டென அவனின் மணிக்கட்டை அழுத்தி பிடித்தாள் சிவரஞ்சனி.
“ஃபீலிங்ஸ் மூளைல தானே வரும்ன்னு சொன்னீங்க? ஆனா, நீங்க என் கைப் பிடிச்சதும், என் ஹார்ட் பீட் எகிறுதே. அது ஏன் டாக்டர்” அவள் முகம் நோக்கி குனிந்து சந்தேகம் கேட்டான்.
“அவசரமா அட்ரலின் சுரக்குது. அதுனால ஹார்ட் பீட் எகிறுது. அட்ரலின் ஹார்மோன் தெரியும் தானே?” சிரிப்புடன் கேட்டாள்.
“ஓகே. அப்போ அதுவும் ஹார்மோன் வேலை தானா?” என்றவன், சோகமாக மேஜையில் தலை சாய்த்தான்.
“இல்ல, நீ என்கிட்ட மட்டும் பேசு” என்று அவளை நெருங்கி அமர்ந்தான்.
அவள் முறைக்க, “சரி பாடு” என்றான்.
அப்போதும் அவள் அமைதியாக இருக்க, “அப்போ நான் பாடுறேன். அதான் என் தொழிலே.” என்று சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
தொண்டையை செருமினான். தண்ணீர் எடுத்து நீட்டினாள்.
“உங்களோட ஃபர்ஸ்ட் பாட்டு பாடுங்க” என்று அவள் சொல்லவும், விசிலடித்தான்.
“என் ரசிகைக்காக….” என்று அவளைப் பார்த்து தலை குனிந்து நிமிர்ந்தவன், “வைகாசி நிலவே.. வைகாசி நிலவே.. மை பூசி வைத்திருக்கும் கண்ணில்..” அவள் கண்ணை பார்த்து பாடினான். மென்புன்னகையுடன் மயக்கும் அவன் குரலை ரசித்தாள் சிவரஞ்சனி.
காற்றெங்கும் அவன் குரல் காதல் வரிகளை கலக்க செய்தது.
“என் ஜீவன் வாழும் வரை
ஓ… என் செய்வாய் நாளும் எனை” அந்த வரிகளை மீண்டும் மீண்டும் அவன் பாடி முடிக்கையில் மெய் மறந்து அவனையே பார்த்திருந்தாள் அவள்.
“நீங்க ஃபர்ஸ்ட் அவார்ட் வாங்கின பாட்டு?” அவள் வரிசையாக கேட்க, அவன் சொன்னது போல ரசிகையின் விருப்பத்தை பாடலுடன் நிறைவேற்றினான்.
தேநீர், உணவு, பாடல் என தொடர்ந்தவன் சிறிதே தெளிவாகி இருந்தான்.
“என்னை தேடப் போறாங்க தேவன்? நான் கிளம்பவா?”
வெகுநாட்கள் கழித்து அவன் பாடலை கண் மூடி ரசித்து கேட்டு உருகி நின்ற ஒருத்தியை அவனுக்கு பிரிய மனம் வரவில்லை. சிவரஞ்சனி அதிகம் பேசவில்லை. வார்த்தைகள் வெளிப்படுத்தாத அவள் உணர்வை, பாராட்டை அவளின் கண்கள் வெளிப்படுத்த அதில் கட்டுண்டான் தேவன்.
அவன் மனதில் காதல் தோல்வி பின்னே போயிருந்தது. இசையும், இயற்கையும், இரவும், மெல்லிய இருளும், எதிரில் கண்ணை துடைத்து பார்க்க வைக்கும் அழகிய பெண்ணும் அமர்ந்திருக்க, ஒரு மாய வலையில் சிக்கிய உணர்வு அவனுக்கு. ஆனாலும், விடுபட விரும்பவில்லை அவன்.
கண்களை மூடி சோர்வாக மேஜையில் தலை சாய்த்தான்.
“தேவன், எழுந்திருங்க. இனிமே என் ஹெல்ப் உங்களுக்கு தேவைப்படாது. யூ ஆர் ஓகே நவ். நீங்க நார்மலாகிட்டீங்க. வீட்டுக்கு போங்க” என்று அவள் அழுத்தமாக அதட்டலாக சொல்ல, “டென் மினிட்ஸ் பிளீஸ்” என்று கெஞ்சினான்.
“ஆல்ரெடி ரொம்ப டைமாகிடுச்சு” என்றவள் அலைபேசியை எடுத்து அம்மாவுக்கு அழைத்து பேசி விட்டு வைத்தாள்.
“சீ சிம்பிள். அவ்ளோ தான்” என்றவனை அவள் முறைக்க, “பாடவா என் பாடலை..?” என்று ராகம் இழுத்து பாடினான்.
“ஓகே. உங்களுக்கு பிடிச்ச ராகத்துல ஒரு பாட்டு பாடுங்க. அத்தோட கச்சேரி முடிஞ்சது. சரியா?” அவள் கண்டிப்புடன் கேட்க, “எனக்கு பிடிச்ச ராகம் என்ன தெரியுமா? சிவரஞ்சனி?” என்று பதில் கேள்வி கேட்டான்.
“சொல்லுங்க என்ன ராகம்?”
“சொன்னேனே. சிவரஞ்சனி” கண் சிமிட்டி குறும்பாக சொன்னான்.