வானில் வளர்பிறை நிலவு தங்கத் தகடாய் மேலெழுந்திருந்தது. காணொளியில் தெரிந்த அவன் முகத்தில் சோர்வு கொட்டிக் கிடந்தாலும், அவன் புன்னகை அதை மறைத்து முகத்தை ஒளிர செய்தது.
அவனுக்குப் பின்னே நிலவும், இருளும் நிறைந்திருக்க, ஆங்காங்கே புள்ளியாய் செயற்கை வெளிச்சம் கண் சிமிட்டியது.
“ம்ம்” என்று சிவரஞ்சனி சொல்ல, அவளை போலவே, “ம்ம்” என்று ராகம் இழுத்தான்.
“நீ தானே நாள்தோறும் நான் பாடக் காரணம்..” உடலில் இருந்த போதை குரலிலும் கொஞ்சம் கலந்திருந்தது.
“நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம். நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்.” அவளுக்கு மட்டுமேயான தென்றலாய் தீண்டிய குரலில் பாடினான் ஜெயதேவன்.
சிவரஞ்சனி வியப்பில் விழி விரித்து, பின் இயல்பாக பாடலை ரசித்தாள்.
“பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே,
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன், உந்தன் காந்தக் கண்ணில்..” தலைக்கேறி இருந்த போதையுடன், இயற்கையும், இசையின் போதையும் சேர்ந்துக் கொள்ள, எதிரில் இமைக்காமல் அவனையே பார்த்திருந்த பெண் இதுவரை இல்லாத போதையை தந்திருக்க வேண்டும் அவனுக்கு.
மெல்ல முன்னே நகர்ந்து தொடர்ந்து பாடியவனுக்கு பாடலின் இடையில் விக்கல் வர, தண்ணீர் எடுத்து நீட்டினாள்.
அந்நேரம் இசைக்கு சிறிய இடைவெளி விழ, “நீதான் தெய்வம் நீதான் செல்வம்… கீதம் சங்கீதம்..
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்..” என்று பாடி முடித்திருந்தாள் சிவரஞ்சனி. அவள் பாடும் போது ஜெயதேவனின் சிரிப்பு அவள் குரலுக்கு பின்னணி இசையை சேர்த்திருந்தது.
அவள் அப்படியே பல்லவியை தொடர, அவளோடு இணைந்து கொண்டான் அவன். இருவரும் ஒன்றாக பாடலை முடிக்க, “வாவ்” என்று ஆர்ப்பரித்தான் ஜெயதேவன்.
சட்டென அவர்களை நிசப்தம் ஆக்கிரமித்துக் கொண்டது. தேவ கானமாய் ஒலித்த இசைக்கு அது தேவையாகவும் இருந்தது. சில நிமிட ஆழ்ந்த அமைதிக்கு பின்னர், “நீ தானே நாள்தோறும்..” என்று அவன் மீண்டும் பாடலை முணுமுணுக்க, “கச்சேரி முடிஞ்சது தேவன்” என்று கண்டிப்புடன் சொல்லி அலைபேசியை அணைத்து அவனிடம் நீட்டினாள் சிவரஞ்சனி.
இப்பொழுது விரல்கள் தேயும் அளவுக்கு, செவிகள் கேட்கும் திறனை இழக்கும் அளவுக்கு அதே காணொளியை, அந்தப் பாடலை, அவர்கள் இருவரின் குரலையும், பாடலையும் மீண்டும் மீண்டும் ஓட விட்டு ஆழ்ந்தான், ஆராய்ந்தான், ரசித்தான் தேவன்.
“கீதம்.. சங்கீதம்..” எனும் அவள் குரல் சங்கீதமாய் அவன் செவியில் பாய, கண் மூடி உதட்டில் உறைந்த புன்னகையுடன் ரசித்தான்.
அன்றைக்கு நடந்தது அவனுக்கு மங்கலாக தான் நினைவிருந்தது. அவள் முதலில் பதறியது, அக்கறையாக விசாரித்தது, அனுசரணையுடன் கவனித்தது அவனுள் கனவு போல விரிந்தது.
“குடிச்சுருக்கீங்களா?” அந்த அதிர்ச்சிக்குப் பின் ஆளே மாறிப் போனாள். கோபம், எரிச்சல், சிடுசிடுப்பு என அவளிடம் சிக்கியவனை சிரிப்பை மறக்க செய்தாள்.
“எப்படி குடிச்சீங்க?”
“பார்ட்டில இருந்ததே..”
“ஓ, இந்த அண்ணனை..” என்று அவள் பல்லைக் கடிக்க, “2, 3 கிளாஸ் தான் குடிச்சேன்.” என்று ஐந்து விரல்களை காட்டியவனை காண்கையில் அவளால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
“உங்க அப்பா…” என்று அவள் ஆரம்பிக்கும் முன்னே, “கொன்னே போடுவார்” என்று அலறினான்.
தேவனுக்கு போதையில் தெளிவில்லாத நிலை, அவன் உளறலும், குழறலுமாய் பேச சற்று நேரத்தில் கோபம் மறைந்து சிரிக்கத் தொடங்கியிருந்தாள் சிவரஞ்சனி.
“என் பாட்டு எப்படி இருந்ததுன்னு நீங்க சொல்லவே இல்லையே?” அவன் மேஜையில் தலை சாய்த்துக் கேட்க, புன்னகைத்தாள்.
“பதில் சொல்லுங்க சிவரஞ்சனி”
“தமிழகத்துக்கே பிடிச்ச குரல் உங்களோடது. நான் என்ன புதுசா சொல்ல?”
அவள் முகத்தை காற்றில் பிடித்து சொன்னான். மெல்ல பின்னே நகர்ந்தவள், “நாளைக்கு விடிஞ்சா இப்போ உளறினது எதுவும் உங்களுக்கு ஞாபகம் கூட இருக்கப் போறதில்ல..” என்றாள் நக்கலாக.
“ச்சே, அப்படியெல்லாம் மறக்க மாட்டேன்” என்று அப்போது சொன்னதை நினைத்து இப்போது சிரித்தான் ஜெயதேவன்.
அவள் சொன்னது போல மறந்து தான் விட்டான்.
“இது எங்கண்ணாக்கும், உங்க அக்காக்கும் நடக்குற வெட்டிங் ரிசப்ஷன். நாம ரொம்ப நேரம் இப்படி வெளில உட்கார்ந்துட்டு இருக்க முடியாது. எங்க வீட்ல தேடுவாங்க. எழுந்திருங்க தேவன்” இருக்கையை பின்னுக்கு தள்ளி எழுந்து கொண்டாள்.
மேஜையில் இருந்து தலையை லேசாக உயர்த்தி, “இன்னும் கொஞ்ச நேரம் பிளீஸ்..” என்று கெஞ்சினான்.
அவள் பின்னே திரும்பி எட்டி விழாவிற்கான உணவு ஏற்பாடாகி இருந்த திறந்த வெளி அரங்கத்தை நோட்டம் விட்டாள்.
“இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன? ஏன் அவசரம், இந்த அவசரம் நில்லு பொண்ணே..” என்று பின்னிருந்து தேவன் பாட திரும்பி அவனை முறைத்தாள்.
“எழுந்திருங்க தேவன்” அதட்டினாள்.
“இன்னும் பேசக் கூட தொடங்கல..”
தொடர்ந்து பாடியவனை நெருங்கி மார்பின் குறுக்கே கை கட்டி நின்றாள்.
அவளின் பட்டுச் சேலை காற்றுக்கு அலைபாய்ந்து அவன் மீது படர, அதை வெடுக்கென்று அவள் பின்னுக்கு இழுக்கும் முன் கண் மூடி வாசம் பிடித்தான் ஜெயதேவன்.
“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு..” என்றவனை கண்களால் எரித்தாள்.
“வேட்டி கட்டுற ஆணுக்கு என்ன வாசம் தெரியுமா?” கோபம் குறையாமல் கேட்டாள்.
“இப்படி திடீர்னு கேட்டா என்ன சொல்லுவேன்? பெர்ஃப்யூம் ஸ்மெல்லா இருக்குமோ?”
அவளின் கேள்விக்கு அவளிடமே பதில் கேட்டான்.
“ம்ம், பெர்ஃப்யூம் கேட்குது உங்களுக்கு. சரக்கு நாத்தம் தான் வரும். உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் பொண்ணுங்களை இழுக்கணும். உங்க போதைக்கு ஊறுகாய் பாருங்க நாங்க. சேலையில் வீடு கட்டவா? சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமேன்னு பாட்டுக்கு கூட பொண்ணுங்க தான் சரக்கு இல்ல?”
“அய்யயோ, அப்படியா?” கேள்வியும், கோபமும் புரியாமல், பதிலும் தெரியாமல் முழித்தான் அவன்.
“நான் போய் உங்கம்மாவை வரச் சொல்றேன்” என்று அவள் நகரப் போக, “ஐயோ வேணாம்” என்று கத்தினான்.
“அப்புறம் என்ன தான் பண்றதா இருக்கீங்க? உங்க டிரைவருக்கு கால் பண்ணி இங்க வரச் சொல்லுங்க. இப்படியே போதை தெளியற வரைக்கும் உட்கார்ந்துட்டு இருக்கப் போறீங்களா?”
“இங்கயா? இங்கன்னா, டிரைவருக்கு நீ தான் ரூட் சொல்லணும். எனக்கு நான் எங்க இருக்கேன்னே தெரியல டாக்டர்” என்று அவன் சொல்லவும், தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.
அதைப் பார்த்து சத்தமாக சிரிக்கத் தொடங்கியவன், அப்படியே கண்ணோரம் வழிந்த நீருடன் மேசையில் தலை சாய்க்கவும், அவனை கோபமும், கரிசனமுமாக பார்த்தாள் சிவரஞ்சனி.
அவனை இந்த நிலையில் தனியாக விட்டுப் போகவும் மனம் வரவில்லை. அவனது வீட்டினரிடமோ, உறவினர்களிடமோ சிக்க வைக்கவும் விரும்பாமல், என்ன செய்வதென்று தெரியாமல் அவள் குழம்பி நிற்க, உறக்கத்திற்கும், மயக்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தான் தேவன்.
ஒரு முடிவுடன், “தேவன், எழுந்திருங்க. உங்க டிரைவர் கூட வீட்டுக்கு கிளம்புங்க நீங்க. உங்கம்மாக்கு போன் பண்ணி சொல்லிடுங்க” என்று அவள் சொல்ல, மெல்ல தடுமாற்றத்துடன் எழுந்து நின்றான்.
சிவரஞ்சனி திரும்பி பார்க்க, அதுவரை அவர்களை காணாதது போல கண்காணித்து கொண்டிருந்த பணியாளர் ஓடி வந்து அவனைப் பிடித்து நிறுத்தினார்.
“ஏன் இப்படி தள்ளாடுறீங்க? ஒழுங்கா நடங்க.” என்று பணியாளரை அவன் மிரட்ட, சிவரஞ்சனி சிரிப்புடன் அவனைப் பிடித்து கொள்ள, பணியாளர் விலகி போனார்.
பசுமலையின் உச்சியில் அமைந்திருந்த அந்த திறந்த வெளி உணவகத்தில் பாதுகாப்புக்காக சுற்றிலும் ஆள் உயரத்திற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. இருவரும் அதைப் பிடித்து நின்று மதுரை மாநகரத்தை பார்த்தார்கள்.
அங்கிருந்து பார்க்க மொத்த மதுரையையும் காண முடிந்தது. ஊரெங்கும் வெளிச்ச புள்ளிகள் மின்னுவதைப் பார்க்கையில் நட்சத்திரங்கள் பூமியில் மின்னுவதை போலிருந்தது.
இருளில் ஆங்காங்கே மின்மினிகள் பறக்க, ஜெயதேவன் அதை பிரம்மிப்புடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இந்த இடம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா சிவரஞ்சனி?”
“ம்ம், உயரத்துல இருந்து பார்க்கும் போது உலகமே அழகா தெரியும். என் பிரச்சினை, கவலை, வேதனை எல்லாம் புள்ளியா மறைஞ்சு போகும்.” என்று முணுமுணுத்தாள். அவனுக்கு கேட்கவில்லை. அவள் புறமாக தலை சாய்த்தான்.
“இங்கருந்து மதுரையை பார்க்க அவ்ளோ பிடிக்கும். ஆனா, ஒரு ரெண்டு மூனு முறை தான் வந்திருக்கேன் தேவன். அடிக்கடி வர்ற வாய்ப்பு கிடைச்சதில்ல. இங்க தாழம் பூ செடி இருக்கு. அதுல பூ வரும் போது, அந்த வாசத்துக்காக ப்ரெண்ட் கூட பார்க்க வந்திருக்கேன்” என்றாள்.
“ம்ம், நான் இசையை ரசிச்ச அளவுக்கு இயற்கையை ரசிச்சது இல்ல” என்றான் அவள் முகம் பார்த்து.
“இனிமே குடிக்காதீங்க தேவன்” மென்மையாக அவள் சொன்னாலும், அதில் கட்டளை தொனியே இருந்தது.
“இந்த காதல் தோல்வியை மறக்க ஏதாவது மருந்து கொடுக்க முடியுமா டாக்டர்?” அவன் தீவிரமாக கேட்கவும் முறைத்தாள்.
“நீங்க குழந்தைகள் டாக்டர்னு மறந்துட்டேன் பாருங்க. ம்ம், நானும் எங்கம்மாக்கு குழந்தை தான். அதை நீங்க கண்சிடர் பண்ணனும் டாக்டர்” கண் சுருக்கி பாவம் போல சொன்னான்.
“குடிக்கிற குழந்தைக்குலாம் நான் டிரீட்மெண்ட் பண்றதில்ல” எரிச்சலுடன் சொன்னாள். அத்தோடு குடிப்பதனால் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் பாதிப்பை விளக்கமாக சொன்னாள். அதைக் கேட்டு முடிக்கையில் அவனுக்கு போதை மொத்தமாக இறங்கிய உணர்வு. மெல்ல சுவரில் சாய்ந்து நின்றான்.
“ஹலோ, விழுந்துட போறீங்க” என்று அவனை பின்னுக்கு இழுத்தாள்.
“உலகத்துல இசையை விட சிறந்த மருந்து எதுவும் இருக்கா என்ன தேவன்?” அவள் கேட்கவும், நிமிர்ந்து நின்று அவளை பார்த்தான் ஜெயதேவன்.
“காதல் ஒரு உணர்வு அவ்ளோதான். உங்களுக்கு ரொம்ப பிடிச்ச, உங்களுக்கான ஒருத்தரை சீக்கிரம் மீட் பண்ணுவீங்க. அதுவரைக்கும் நிறைய பாடுங்க, அதை விட நிறைய பாட்டு கேளுங்க. உங்களுக்கு பிடிச்ச பியானோ அடிக்கடி வாசிங்க. இசையும், இயற்கையும் இருக்கும் போது இதயம் சுகமா தான் இருக்கும்” என்றாள்.
மௌனமாய் கண் மூடி நின்றான்.
“எனக்கு பியானோ பிடிக்கும்னு உனக்கு எப்படித் தெரியும்? நான் பியானோ வாசிப்பேன்னு உன்கிட்ட யார் சொன்னா?”
அவனுக்கு பதில் சொல்லாமல், அவனை வற்புறுத்தி அவனது ஓட்டுனரை அழைக்கச் செய்தாள்.
“அப்பாகிட்ட சொல்லிட்டு எஸ்ஸாகிடுறேன்” என்று அவன் சொல்ல, “நாளைக்கு உங்கம்மா சந்தேகப்பட்டு, ஃபங்ஷன் நடக்கும் போது பாதியில ஏன் போனன்னு உங்களைக் கேட்டா என்ன சொல்லுவீங்க?” என்று கேட்டாள் அவள்.
“கரெக்ட். ஏன் சீக்கிரம் போன? என்கிட்ட ஏன் சொல்லலன்னு விசாரணையில் இறங்கிடுவாங்க சீதாலட்சுமி” என்றான் அவனும்.
“உங்கம்மாவும் செலிபிரிட்டியா என்ன?” அவள் பதில் கேள்வி கேட்க, ஒரு நொடி பதிலின்றி முழித்து, “ஏய், நாங்க தான் பொண்ணு வீடு” என்றான்.
“நல்லதா போச்சு. இப்போ ஃபோட்டோ காட்டுங்க.”
“எங்கம்மாவை தெரியல சொல்லிட்ட… எங்கம்மா..” என்று அவன் சலம்ப, “உங்களை இப்படியே விட்டுட்டு போய் உங்கம்மாவை கூட்டிட்டு வரவா?” என்று மிரட்டினாள் சிவரஞ்சனி.
“ஒழுங்கா உங்கம்மா ஃபோட்டோ காட்டுங்க. நான் போய் வேற யார் கிட்டயாவது பேசிட போறேன்” என்று அவள் கேட்கவும், அலைபேசியை எடுத்து அம்மாவின் புகைப்படத்தைக் காட்டினான்.
அந்நேரம் ஓட்டுநர் அவனை அழைக்க, அவருக்கு வழி சொல்லி அங்கு வரச் செய்தாள்.
“எதுவும் பேசாதீங்க, ஓகே? வாயவே திறக்கக் கூடாது” ஜெயதேவனை மிரட்டி, ஏற்கனவே பணியாளரிடம் வாங்கி வைத்திருந்த இனிப்பு சோம்பை உண்ண கொடுத்தாள்.
“வீட்டுக்கு போனதும் நிறைய தண்ணி குடிச்சிட்டு தூங்குங்க. சரியா? நாளைக்கு காலையில கண்டிப்பா தலை வலிக்கும். காபி குடிங்க. டேப்லெட் எதுவும் போட கூடாது. ஜூஸ், மோர்னு குடிச்சு உடம்புல நீர்ச் சத்து இருக்க மாதிரி பார்த்துக்கோங்க. மனசு வலிக்குது, இதயம் உடைஞ்சு போச்சுன்னு.. நீர்ச் சத்து வேணும்னு குடிக்க கிளம்பிடாதீங்க. என்ன?” அவளின் கடைசி கேள்விக்கு சத்தமில்லாமல் சிரித்தான்.
“நான் இப்போ உள்ள போறேன். கரெக்ட்டா பத்து நிமிஷத்துல உங்கம்மாக்கு கால் பண்ணுங்க. ஓகே?”
“அச்சோ ஏன்? என்னை மாட்டி விட போறியா?”
“ஷப்பா” என்றவள், “நான் உங்கம்மா கிட்ட பேசி டிஸ்ட்ராக்ட் பண்ணிடுறேன். அதுனால அவங்க உங்களை நிறைய கேள்வி கேட்க மாட்டாங்க. உங்களுக்கு தலைவலி, தூக்கம் வருது, டையர்ட்டா இருக்கு, இதுல ஏதாவது ஒரு காரணம் சொல்லி வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்புங்க. புரிஞ்சுதா?” அவள் சலிப்புடன் கேட்க, சம்மதமாக எல்லா பக்கமும் தலையை அசைத்தான்.
அவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே அவள் நடக்க, அப்போதும் ஏதோ பாடலை மெலிதாக முணுமுணுத்தான்.
சிவரஞ்சனி உள்ளே சென்று சீதாலட்சுமியை தேடிக் கண்டுபிடித்து அவரிடம் பேச்சுக் கொடுக்க, அந்நேரம் அம்மாவை அழைத்தான் ஜெயதேவன். அவன் பேசி முடிக்கவும், அவரிடம் இருந்து நழுவி வெளியே வந்தாள் அவள்.
அவன் காரில் ஏற அவனுக்கு துணையாக பணியாளர் ஒருவர் உள்ளே ஏறினார்.
“ஹோட்டல்ல இருந்து கீழ இறங்கும் போது சின்னதா ஒரு ஹேர்பின் பெண்ட் இருக்கு சார். உங்களுக்கு உடம்பு முடியலைன்னு மேடம் அனுப்பினாங்க” என்று அவர் சொல்ல, தூரமாய் நின்றிருந்த சிவரஞ்சனிக்கு புன்னகைத்து கையசைத்தான் ஜெயதேவன்.
“இவ்வளவு நேரமா எங்க போன? உன்னை உங்கப்பா தேடிட்டு இருக்கார். பொம்பளை புள்ளை இருட்டுல தனியா நின்னுட்டு என்ன பண்ற? உள்ள வா” என்று சிவரஞ்சனியை கைப் பிடித்து வரவேற்பு அரங்கத்திற்குள் இழுத்துப் போனார் அங்கயற்கண்ணி.
ஜெயதேவன் மலையில் இருந்து கீழிறங்கியதும் பணியாளர் காரில் இருந்து இறங்கி கொள்ள, அவன் மட்டுமாக வீடு சென்றான்.
அதன் பின் அவளை காணும் வாய்ப்பு அவனுக்கு சீக்கிரத்தில் வாய்க்கவில்லை.
கௌரியின் கல்யாண விருந்து, மறுவீட்டு விருந்து எதிலும் அவளைப் பார்க்க முடியவில்லை. அவளைக் குறித்து விசாரிக்க, அவனுக்கும் எதுவோ ஒன்று தடுத்தது.
அவளுக்கு நன்றி சொல்ல விரும்பினான், அவ்வளவே.
அவனைப் போல அல்லாமல், சீதாலட்சுமி தயங்காமல் அவளைக் குறித்து விசாரித்தார்.
“சிவரஞ்சனி காலேஜ் போய் இருக்கா. இந்த வருஷத்தோட அவளுக்கு மேல் படிப்பு முடியுது” என்ற பதில் வந்தது.
தேவன் அவர்களுக்கு இடையில் நடந்த பேச்சுகள், அவர்கள் பகிர்ந்த ரசனைகள், பாட்டுக் கச்சேரி என அனைத்தையும் மறந்திருந்தான். ஆனாலும், அவளைக் காண விரும்பினான்.
கௌரியின் திருமண புகைப்படங்கள் வர, அவர்களின் குடும்ப நபர்கள் இருந்த புகைப்படங்களை தனியாக அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.
அதில் தான் மீண்டும் சிவரஞ்சனியை பார்த்தான் ஜெயதேவன். அம்மா, அவளைப் பற்றி அவனிடம் கேட்டது, அப்பாவிடம் சொன்னது எதுவும் அவன் காதில் விழவில்லை.
அவளுக்கு நன்றி மட்டுமாவது சொல்லியிருக்கலாம் என்று குற்ற உணர்ச்சியுடன் நினைத்துக் கொண்டான் அவன்.
அவர்கள் இருவரும் உறவினர் என்பதால் வருடத்திற்கு ஒருமுறையோ, இரு முறையோ ஏதேனும் பொதுவான விசேஷங்களில் இருவரும் சந்திக்க நேரிடும். ஆனால், ஒரு புன்னகையுடன் அவனை கடந்து விடுவாள் சிவரஞ்சனி.
சமீபமாக இணையம் அனைவரின் உள்ளங்கைக்கு வந்த பிறகு அவன் மிகவும் பிரபலமாகி இருந்தான். அவன் முகம் பலருக்கும் முன்னை விட பரிட்சயமாகியிருந்தது. ஆக, விழாக்களில் சுதந்திரமாக அவனால் சுற்ற முடியவில்லை.
அவளை பார்த்தாலும் பிடித்து நிறுத்தவும் முயலவில்லை அவன்.
இருவர் பேசுவதற்கு வழிகளா இல்லை? அவன் முழுதாக முயற்சிக்கவில்லை. அவ்வளவே.
மீண்டும் ஒருமுறை அவர்கள் இருவர் பாடிய காணொளியை கண்டவனுக்கு, எத்தனை முறை பார்த்தான் என்ற எண்ணிக்கையே இப்பொழுது மறந்திருந்தது.
“நீ தானே.. நான் பாட காரணம்” அவன் காதில் ரீங்காரமாய் ஒலித்தது அவர்கள் குரல்.
அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைக்க விரும்பினான். ஆனால், என்ன சொல்லி அவளை சமாதானப்படுத்த என்று தெரியாமல் அப்படியே கண் மூடி படுத்து விட்டான் அவன்.