சிவரஞ்சனி அன்றாடம் மருத்துவமனைக்கு சென்ற வரை அவளுக்கு எல்லாமே இயல்பாக தெரிந்தது. தற்போது சில நாட்களாக வீட்டில் அடைந்து கிடப்பதே அவளுக்கு மூச்சு முட்ட வைத்தது. முன் தின இரவு அறையை ஒதுக்கி தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் தனியாக எடுத்து வைத்தாள். தங்க நகை, பட்டு புடவைகள் என எதுவும் அவள் அறையில் அதிகமாக இல்லை. அறையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே இருக்க, அவள் வேலை எளிதாகவே இருந்தது.
அவளின் சிறு வயதில் இருந்தே கல்வி தந்த அறிவின் தெளிவினால் அப்பாவின் சாதி வெறி மீது வெளிப்படுத்த தெரியாத ஒருவித ஒவ்வாமை உணர்வு அவளுக்கு உண்டு.
காலப் போக்கில் தன் கருத்தை வெளியிட்டு அம்மாவிடம் அடியும் வாங்கியிருக்கிறாள். அப்பாவின் கண்டிப்புக்கும், கட்டுப்படாமல் திமிறி இருக்கிறாள்.
அண்ணன் அப்பாவுடன் சேர்ந்து சாதி சங்க கூட்டங்களுக்கு செல்கையில் வெறுத்திருக்கிறாள். ஆனாலும், அது அவள் வீடு. அவள் குடும்பம் என்று மகிழ்வாக தான் இருந்தாள்.
பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது அவளுக்கு கல்யாணம் பேசும் வரை எல்லாமே நன்றாக தான் இருந்தது.
அதன் பிறகு தான் வீடே நரகமானது.
“கல்லூரி, மருத்துவ படிப்பு, டாக்டர் சிவரஞ்சனி..” என்ற கனவுகளுடன் இருந்தவளுக்கு கல்யாணம் என்ற போது ஏற்பட்ட அதிர்ச்சியை அவளால் என்றைக்குமே மறக்க முடியாது.
இத்தனை வருடங்களுக்கு பிறகு அவளின் கனவுகள் அனைத்தும் கை வரப் பெற்ற பின் மீண்டும் ஒரு திருமண ஏற்பாடு. அதிலும் நூறு சிக்கல்கள்.
மனம் மகிழ்ச்சியில் நிறைவதற்கு பதிலாக ஏதேதோ சிந்தனைகளில் தடுமாறி தத்தளித்து கொண்டிருந்தது.
முதலில் மூச்சடைக்கும் இந்த சூழலில் இருந்து வெளிவர விரும்பினாள். ஆக, மறுநாள் காலையில் எழுந்ததும், குளித்து வெளியில் கிளம்பினாள்.
“காஃபி தரவா ரஞ்சனி?” என்று அவளைக் கண்டதும் கேட்டாள் கௌரி.
“நானே கலந்துக்கறேன் அண்ணி” என்று அவள் சமையல் அறைக்குள் நுழைய, “மணி என்ன தெரியுமா ரஞ்சி? எந்நேரம் எழுந்திருச்சு வர? ம்ம், நாளைக்கு உன் மாமியார் வீட்டுக்கு போய் இப்படி எட்டு மணிக்கு எழுந்து வந்தீன்னா, என்ன பேசுவாங்க தெரியுமா? உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க. எங்க வளர்ப்பு சரியில்லன்னு தான் சொல்வாங்க.” என்று அங்கயற்கண்ணி புலம்ப, “நீ வளர்த்த அருமை பெருமையை காப்பாத்த அண்ணா இருக்கும் போது நீ ஏன் மா என்னை பத்தி கவலைப்படுற?” என்று அவள் கேட்கவும், முறைத்தாள் கௌரி.
“காலைல அலாரம் வச்சாவது வெள்ளன எழுந்து உன் வளர்ப்பு பெருமையை பேசிடுறேன் மா. நீ கவலைப்படாத.. சரியா?” என்ற மகளை கண்டிப்பாக பார்த்தார்.
“முதல்ல உன் வாயை குறை. அப்புறம் இப்போ உங்கண்ணனுக்கு என்ன குறையாம்? அவன் பாட்டுக்க சிவனேன்னு உன் கல்யாண வேலையை இழுத்துப் போட்டு பார்த்திட்டு இருக்கான். அவனை ஏன் பேசுற நீ?” பார்வை மருமகளின் மேலிருக்க, மகளை கேட்டார் அவர்.
“அண்ணா கல்யாண வேலை பார்க்கறான்? நீ பார்த்த?” உதடு வளைத்து கோணல் சிரிப்புடன் கேட்டாள். அவள் பார்வை கௌரியின் மேல் நிலைத்திருக்க, அங்கயற்கண்ணி எதுவும் சொல்லும் முன்னர் முந்திக் கொண்டு, “கையில என்ன வண்டி சாவியா ரஞ்சனி?” என்று அவளிடம் கேட்டாள் கௌரி.
“ம்ம், ப்ரெண்ட் வீட்டுக்கு போறேன் அண்ணி” என்று சிவரஞ்சனி சொல்லவும், சடாரென்று அடுப்பு வேலையை விட்டுவிட்டு திரும்பினார் அம்மா.
“பத்து நாள்ல கல்யாணத்தை வச்சுட்டு, தனியா வெளில எங்க போற நீ? அப்படி எந்த ப்ரெண்ட் வீட்டுக்கு போற? உங்கப்பா வந்தா அவ்வளவு தான். என்னை தொலைச்சி கட்டிடுவார்.” என்று படபடத்து கத்தினார் அவர்.
அவள் அவசரமின்றி நிதானமாக மிடறு மிடறாக காஃபியை ரசித்து அருந்தினாள்.
“ரஞ்சி, உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன். உன் காதுல விழுதா இல்லையா?”
“கேட்டது மா”
“நீ ரூமுக்கு போ. நான் உனக்கு டிஃபன் எடுத்துட்டு வர்றேன். நாம ரெண்டு பேரும் பதினொரு மணி போல தைக்க குடுத்திருந்த உன் ஜாக்கெட்டை எல்லாம் போய் வாங்கிட்டு வருவோம். வேலை கிடக்கு” வரிசையாக அவர் காரணங்களை அடுக்க, அவள் அங்கிருந்து நகரவில்லை.
காபி குடித்து கோப்பையை கழுவி வைத்து விட்டு மெல்ல அங்கிருந்து கூடத்திற்கு அவள் வர, “ரஞ்சி, நான் சொல்லிட்டே இருக்கேன். நீ கொஞ்சம் கூட மதிக்காம…” என்று கத்திக் கொண்டே பின்னால் வந்தார் அம்மா.
“என்னம்மா?” எங்கோ வெளியில் செல்ல தயாராகி நின்றிருந்த நெப்போலியன் தங்கையை பார்த்து விட்டு அம்மாவிடம் கேட்க, “யாரோ ப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்னு கிளம்பறா உன் தங்கச்சி. வீட்ல இரு. வேலை இருக்குன்னு சொல்லிட்டு இருந்தேன்” என்று அவர் சொல்ல, “ம்ம்” என்றவன், “எந்த ப்ரெண்ட்?” என்று தங்கையிடம் கேட்க, அவளோ அசட்டையாக வாயிலை நோக்கி நடந்தாள்.
“ரஞ்சி, நான் கேட்டுட்டு இருக்கேன்.”
“ப்ரெண்ட். அவ்ளோ தான். யாருன்னு சொன்னா, உனக்கு தெரிய போகுதா என்ன?”
“யாருன்னு சொல்லிட்டு போ. இல்லனா..”
“இல்லனா? இல்லைனா, என்ன பண்ணுவ? பெரிய மாவீரன். உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ, போ” அசட்டையாக திரும்பி நின்று அண்ணனின் முகம் பார்த்து சொல்லி விட்டு, கையில் வண்டி சாவியை சுழற்றியபடி விறுவிறுவென்று வெளியே நடந்து விட்டாள் அவள்.
“ஏய், ரஞ்சி. நான் சொல்லிட்டே இருக்கேன். என்னை மதிக்காம நீ எங்க போறேன்னு நானும் பார்க்கறேன்.” என்று கத்திக் கொண்டே அவளை பின் தொடர்ந்தான் நெப்போலியன்.
“உன்ன..” என்று ஆத்திரத்துடன் அவன் சிவரஞ்சனியை நெருங்குகையில் ஜெயதேவனின் கார் அவர்கள் வீட்டினுள் நுழைந்தது.
“ஒன்னுமில்லாத வரைக்கும் சரிதான்” சிரித்துக் கொண்டே சொன்னான் தேவன்.
“நான் சிவரஞ்சனியை வெளில கூட்டிட்டு போறேன். அம்மா ஏதோ வேலையா கூட்டிட்டு வர சொன்னாங்க. மாமா, அத்தைக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்னு சொன்னாங்க” என்று அவன் சொல்லவும், “சரிங்க, மாப்ள” என்ற நெப்போலியன், ‘எங்கே அழைத்து செல்கிறீர்கள்’ என்ற கேள்வியை மறந்தும் கேட்கவில்லை.
“என்கிட்ட குண்டக்க, மண்டக்க பேசாம அப்பவே மாப்ள வர்றாருன்னு சொல்றதுக்கு என்ன?” என்று மகளை காய்ந்தார் அங்கயற்கண்ணி. எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் அப்படியே நின்றிருந்தாள் சிவரஞ்சனி.
“வீட்ல சாப்பிட்டு தான் கா வந்தேன்” என்று தேவன் சொல்ல, “வீட்டுக்கு வந்துட்டு காஃபி கூட சாப்பிடாம போனா எப்படி? உள்ள வாங்க மாப்ள” என்று மாப்பிள்ளை வரவேற்பை அங்கயற்கண்ணி தொடர, “அம்மா உடனே வர சொன்னாங்க அத்த. ஈவ்னிங் வந்து டிஃபனே சாப்பிடுறேன்” என்று புன்னகையுடன் அவன் மறுக்க, அவர்களால் தடுக்க முடியவில்லை.
“வர்றோம்” என்று பொதுவாக சொன்னான்.
சிவரஞ்சனி அதையும் சொல்லவில்லை. சின்ன தலையசைப்பு, அவ்வளவு தான்.
அவன் காரை நெருங்கியதும் சாவியை அவன் கையில் திணித்து விட்டு அவன் கெஞ்சலாக பார்க்கவும் காரில் ஏறினாள்.
மரங்கள் அடர்ந்த மதுரை – நத்தம் சாலையில் கார் விரைந்தது. அவள் கண் மூடி அமைதியாக அமர்ந்திருக்க, சிவப்பு நிற குல்மோஹர் மலர்கள் தரையெங்கும் விழுந்து சிவப்பு கம்பளம் விரித்திருக்க, அதன் முன்னே சென்று மர நிழலில் காரை நிறுத்தினான் தேவன்.
“சிவரஞ்சனி..” இருவருக்கும் இடையில் இருந்த அவள் கையை இறுக பற்றப் போனான்.
அதற்கு முன், “அன்னைக்கு போடின்னு சொல்லிட்டு நான் கூப்பிட கூப்பிட கண்டுக்காம போனீங்க?” என்று நெற்றிக் கண் திறந்து விட்ட இடத்தில் இருந்து சண்டையை தொடர்ந்தாள்.
“அது..” என்று அவளை சமாளிக்கும் வழி பிடிபடாமல் முழித்தான் ஜெயதேவன்.
காரின் குளிர்சாதனத்தை மீறி அவனுக்கு வியர்க்க, பதட்டமாக தலை கலைத்து கோதிக் கொண்டான்.
மெல்லிய புன்னகை உதட்டில் உதிக்க, உதடு கடித்து மறைத்தாள் சிவரஞ்சனி.
அவன் அவசரமாக அலைபேசி எடுக்க, “ஹெல்ப்புக்கு ஆள் கூப்பிட போறீங்களா?” என்று கிண்டலாக கேட்டாள்.
அவன் உதடுகள் குறுஞ்சிரிப்பில் வளைந்தது. மெதுவாக கண் சிமிட்டினான். அவள் முகத்துக்கு நேராக அலைபேசியை நீட்டினான்.
“என்ன வித்தை காட்டுறீங்க?” என்று அதட்டியவளின் குரல் மறுகணமே அமைதியானது.
“நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்.. நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்.. நீ இன்றி நான் பாட..” என்று அவன் குரல் ஒலிக்க, அதிர்ச்சியில் விரிந்தது அவள் விழிகள்.
அவளின் எதிர்வினை கண்டு, அவன் கண் சிமிட்டி புன்னகைக்க, அதன் பிரதிபலிப்பு அவளிடமும் எதிரொலித்தது.