பாலச்சந்திரனுக்கு மனது மிகவும் கஷ்டமாக இருந்தது, அவர் அப்பா ஸ்தானத்தில் இருப்பவர் அச்சுதன். ராஜீவன் வீட்டை விட்டு சென்றதிலிருந்து, ஒரு மகனாக அவருக்கு இருப்பவர், ராஜீவனுக்கு மகள் இல்லையென்றால் வேறு, ஆனால் இருந்தும் அதனை மறைப்பது வேதனையைக் கொடுத்தது. அதே நேரம் நண்பன் சொல்லாமல் இதை சொல்வதும் உசிதமாகபடவில்லை. தயக்கமும் தடுமாற்றமும் ஆட்கொள்ள நின்ற அப்பாவைப் பார்த்த ஜெய்ச்சந்திரன் அச்சச்சனிடம்,
“என்ன அச்சச்சா? காலையில இங்க?” என்று கேட்டபடி அவர் அருகே உட்கார்ந்தான். பாலச்சந்திரனும் மகன் அருகே உட்கார்ந்தவர்,
“வாங்க அச்சா! எந்த்து காரியம்?(என்ன விஷயம்)” என்று கேட்க, அச்சுதன் முறைத்தார்.
“காரியம் இருந்தாதான் வரணுமா?” என்று கேட்க, ஜெய் அச்சுதனை பார்த்து புன்னகைத்தவன்
“அப்படியில்ல அச்சச்சா! முக்கியமான விஷயம் இல்லைன்னா நீங்க வந்திருக்க மாட்டீங்க இல்லை, அதான் அப்பா கேட்கிறார்” என்று மலையாளத்தில் அவருடன் சகஜமாக உரையாடினான் ஜெய். ஊர்மிளாவுக்கு அச்சுதனை யாரென்று தெரியவில்லை, அச்சச்சன் என்று அன்று ஜெய் சொன்னதெல்லாம் மறந்திருந்தது.
“நிண்ட ப்ரண்ட் ராஜீவன் எப்போல் இவிட வரும் பாலா?” (உன் ப்ரண்ட் ராஜீவன் எப்போ இங்க வருவான்? என்று அச்சுதன் பாலாவைக் கேட்க, ஊர்மிளாவுக்கு ராஜீவன் என்ற பெயரில் எல்லாம் புரிந்தது.
“நல்லா இருக்கேன் தாத்தா, நீங்க எப்படி இருக்கீங்க?” என்று ஊர்மிளாவும் இயல்பாக விசாரித்தாள்.
“சொந்தத்துல பொண்ணு பார்த்திருக்கேன் சொன்னியேடா பாலா, இந்த பொண்ணா?” நல்ல காலமாக அச்சுதன் மலையாளத்திலேயே பேச, ஊர்மிளாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பாலச்சந்திரன் மறுத்து சொல்ல வர,
“அந்த பொண்ணே தான் அச்சச்சா!” என்றான் ஜெய்ச்சந்திரன். ஊர்மிளாவை பார்த்த அச்சுதனுக்கு சந்தோஷம், அவரின் ஜெய்க்குப் பொருத்தமாக இருப்பாள் என்பதை விட, ஜெய்க்குப் பிடித்த பெண் என்பது அவன் பார்வையில், பேச்சில் அச்சச்சனுக்குப் புரிய அந்த பெண் மீது ஒரு வாஞ்சை பிறந்தது.
“சரி, அவன் வந்ததும் நம்ம விஜயனுக்கும் பிந்துவுக்கும் நான் நல்லா இருக்கும்போதே கல்யாணம் பண்ணிடனும்டா. பையன் கல்யாணம் பார்க்க கொடுத்துவைக்கல, பொண்ணுக்கும் நிறைவா வாழ கொடுப்பினை இல்லை, அந்த குருவாயூரப்பன் இந்த பசங்களை நல்லா வாழ வச்சா போதும். சீக்கிரமே ஜெய்க்கும் இந்த பொண்ணுக்கும் கல்யாணம் வை, எனக்கு இவனுங்களும் விஜயனும் வேற இல்லைடா” என்று பாலச்சந்திரன் தோளில் உணர்ச்சிவசப்பட்டு தட்டினார். பாலச்சந்திரனுக்கும் மனம் நெகிழ, நண்பன் மேல் கோபம் வந்தது.
அச்சுதன் பேசிவிட்டு எழுந்தவர் ஊர்மிளாவை பார்த்து புன்னகைத்து, “நம்ம வீடு இங்கதான் மோளே இருக்கு, வந்துட்டு போகணும். டேய் ஜெயா உன் அச்சம்மா சந்தோஷப்படுவா, அழைச்சிட்டு வா” என்றார்.
அச்சுதன் பாலச்சந்திரனோடு பேசியபடி வெளியேறியவர், முற்றத்தைத் தாண்டி ‘பூமுகம்’ வரவும்
“இந்த பொண்ணு இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்காளா பாலா, எனக்கு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ரொம்ப தெரிஞ்ச மாதிரி… ” என்று அச்சுதன் சொல்ல, பாலச்சந்திரன்
“இல்லச்சா! போன வாரம் வந்தா, இப்போ சும்மா சுத்தி பார்க்கலாம்னு வந்திருக்கா” என்றார். அச்சுதனுக்குத் துணையாக வீடு வரை போனார் பாலச்சந்திரன். வீட்டில் அச்சுதன் சென்றதும்,
“ஊர்மி! அவர் உன்னோட தாத்தா” என்று ஜெய் சாதாரணமாக அறிமுகம் செய்ய, ஊர்மிளா தலையசைத்தாள். இவளுக்கு என்ன கொஞ்சமும் அவள் உறவுகளை அறிய ஆர்வமில்லையா என்று ஜெயன் நினைத்தான், அவனுக்குத் தெரியாதே ரத்னவேலின் செல்ல காமாட்சி அவள்! பெரியப்பா, அத்தைகள் என்று பெரிய குடும்பம் அவளுக்கு இருக்கிறதென.
“ஊர்மி! மதியம் அங்க போய்ட்டு வரலாம்” என்று உரிமையாக அழைக்க, ஊர்மிளா மறுத்தாள்.
“ஏன் ஊர்மி? அச்சம்மா உன்னை பார்த்தா சந்தோஷப்படுவாங்க” என்று ஜெய் சம்மதிக்க வைக்க நினைக்க,
“இங்க பாருங்க, நான் பிரிகடியர் ராஜீவனை பார்க்கத்தான் வந்தேன். எனக்கு என் தாத்தா, அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா, அண்ணனுங்கனு பெரிய குடும்பம் இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க எனக்கு புரியாம இல்லை. இப்போ வந்துட்டு போன தாத்தாவுக்கு என்னைப் பத்தி தெரிய வேண்டாம். அவங்க பிந்துவையே பேத்தினு நினைச்சிட்டு இருக்கட்டும்! அதான் எல்லாருக்கும் நல்லது!” என்றாள் ஊர்மிளா முடிவாக. அந்த பதில் ஜெயனுக்கு உவப்பாகவே இல்லை.
“எங்கப்பா எப்போ உங்க மாமாவானார்?” என்று கோபமாகக் கேட்டாள்.
“எங்கப்பா உன்னை அவர் தங்கச்சி பொண்ணு சொன்னார், அண்ட் பிரிகடியர் ராஜீவன் ப்ரண்ட் பிரபாகரன் இல்லையா? ராஜீவன் மாமா, அவர் ப்ரண்ட்’டும் மாமா” என்றான் மூச்சுவாங்க. அதை கேட்கவும் ஊர்மிளா அமைதியானாள்.
பாலச்சந்திரன் அச்சுதனை விட்டு வீடு வர, அப்பாவிடமும் அதையே ஜெய் சொல்ல, பாலச்சந்திரனுக்கு மகன் மீது அவ்வளவு கோபம். ஊர்மிளா இல்லையென்றால் கத்தியிருப்பார்.
“நினக்கு வேற ஒரு பணி இல்லே?(உனக்கு வேற வேலை இல்லை?)” என்று கோபத்தோடு கேட்க
“சத்தியம் பறைஞ்சா எனிக்கு ஒரு பணியுமில்லாச்சா” (உண்மையை சொல்லணும்னா எனக்கு ஒரு வேலையுமில்லைப்பா)” என்றான் ஜெய் நன்றாக சாய்ந்தபடி.
ஊர்மிளா இவர்கள் பேச்சை கவனித்து நிற்க, “உட்காருடா” என்றார் அவளிடம்.
“அங்கிள்! நீங்க மலையாளியா?” என்று ஊர்மிளா விசாரிக்க, “இல்லைமா, தமிழ்தான்! ஆனா தேவிக்குளத்துல நாங்க இரண்டுமே பேசுவோம்.” என்றார்.
“இல்லை வீட்ல பேசுறீங்களே?” என்றதும் ‘உனக்கு புரியக்கூடாதுனுதான்’ என்று மனதில் நினைத்து
“அது மாறி மாறி வரும்மா” என்றார்.
“எனக்கும் கொறச்சு கொறச்சு அறியும். இவர் வேலை செய்யலன்னு தானே திட்டுறீங்க?” ஊர்மிளா ஆர்வமாகக் கேட்க
ஜெய்யோ அவள் பேசிய விதத்தில் சிரித்தவன், “கொறச்சு அறிஞ்சால் மதி(கொஞ்சம் தெரிஞ்சா போதும்)” என்றான். பாலச்சந்திரன் மகனை பார்க்க,
“அங்கிள், உங்க ப்ரண்ட் எப்போ வருவார்?” என்று ஊர்மிளாவின் கேள்வியில்
“உன் தாத்தாவும் அதையே கேட்டுப் போறார், ஈவினிங் ஃப்ளைட் சொன்னான். அவன் ஆர்மில பெரிய ஆள், நினைச்ச நேரம் போன் எடுக்க மாட்டேங்கிறானே?” என்று புலம்பினார். ஜெய் ஊர்மியை அரக்கபறம்பில் அழைத்து செல்ல கேட்க, பாலாவும்
“வீட்ல சும்மாதானே இருக்கணும்டா ஊர்மி, போய்ட்டு வாயேன். நீ உன் அச்சம்மா, அத்தையெல்லாம் பார்த்தா அங்கிளுக்கு சந்தோஷமா இருக்கும். ” என்றதும் ஊர்மிளா யோசித்தாள்.
“உன்னை யார்னு நான் சொல்ல சொல்லல ஊர்மி! என் தங்கச்சி பொண்ணுனு தான் உன் தாத்தா கிட்ட சொன்னேன். ஸோ சும்மா பார்த்துட்டு வாம்மா ” என்றார். ஊர்மிளா சம்மதிக்க, பாலச்சந்திரன் சின்னவனை அழைத்துக்கொண்டு ரிசார்ட் செல்ல காரை எடுக்க சொன்னார். பாலச்சந்திரன் முகம் யோசனையில் இருக்க, ஜெய்யும் அப்பாவின் பின்னே வந்தான்.