“ஏடா! வா” ராஜீவனை பாலா கைப்பிடித்து இழுக்க, அவர் இறுகி நின்றார். விஜயனும் பிந்துவும் சென்று அச்சம்மாவிடம் சொல்ல, அவரும் ஷோபனாவும் வேகமாக ஓடி வந்தனர். இவர்களை பார்த்து, அச்சுதனும் வந்தார்.
அச்சம்மா மகனை பார்க்கவும், அழுகையில் கரைந்தவர் ராஜீவனின் முகம் வருடி, ” நின்னைக் கண்டுட்டு எத்ர வருஷமாயிடா ராஜீவா? (உன்ன பார்த்து எத்தனை வருஷமாச்சு டா ராஜீவா?) என்றார் ஆதங்கமாக.
ராஜீவன் அம்மாவை பார்க்கவும் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தார்.
“உன் பொண்ணை இத்தன வருஷம் கழிச்சு இப்போதான் அனுப்பியிருக்க, ஏன் அம்மா பார்க்க மாட்டேனா? என்னை பார்க்க கூட இத்தன வருஷம் நீ வரலையே… ” என்று தவிப்பில், பிரிவுத்துயரில் பேசிக்கொண்டே போனார். ராஜீவனிடம் இதற்கெல்லாம் பதிலுண்டு! ஆனால் அதனை சொல்ல விரும்பவில்லை. பல வருடம் கழித்து, அம்மாவின் குரலை, அவர் ஸ்பரிசத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தார், மெல்ல மெல்ல இறுக்கம் தளர அதுவரை பொறுக்காத அச்சுதன் பேசினார். ராஜீவன் அமைதியாக அம்மாவை பார்த்திருக்க, அச்சுதனுக்கு இன்னும் கோபம் தீரவில்லை.
“இப்ப மட்டும் இவனாவா வந்தான்? இவன் பொண்ணா சண்டை போட்டு வந்தா? இவனுக்குத் திமிர், நம்ம பேச்சு மீறி, நேரம் காலம் பார்க்காம கல்யாணம் பண்ணி என்னாச்சு பார்த்தியா? இப்ப இந்த பாலா கெஞ்சி அழைச்சிட்டு வந்திருப்பான், இவனா வந்திருக்க மாட்டான்.” என்று ஆவேசத்தோடு திட்டினார். ஆற்றாமை, ஆதங்கம் என்று அச்சுதன் பேச ராஜீவன் இந்த வார்த்தைகளை நிச்சயம் எதிர்ப்பார்த்தார்.
பூரத்தில் செண்டை மேளம் வாசிக்கும் முக்கியமான நபர் அச்சுதன், பல வருடங்களுக்கு முன் தலைமை பொறுப்பே அவரிடம்தான், கோவில், தெய்வபக்தி எல்லாம் அதிகம். அப்படிப்பட்டவர் மகன் வேறு மதத்துப் பெண்ணை காதலிக்கிறேன் என்று வந்து நின்றபோது முடிந்தளவு எதிர்த்தார் அச்சுதன். பத்மினிக்குமே விருப்பமில்லை, ராஜீவன் அம்மா பேச்சைக் கேட்பார் என்பதால் அவரும் பிடிவாதமாக நிற்க, முயன்று பார்த்த ராஜீவன் அவர்களை மீறிவிட்டார். ஏழு வருட காதல்! எதற்காகவும் ப்ளஸ்ஸியை விட தயாராக இல்லை. அப்பா, அம்மா திருமணம் முடிந்து சென்றால் ஏற்பார்கள் என்று நினைக்க, அச்சுதன் மகனை விட்டாரே தவிர மதத்தை இல்லை!
மகனின் ஆசை, தீவிரம் தெரியாமல் தன் பேச்சைக் கேட்பான் என்று நம்பியிருக்க, அன்றையை நிலையில் மகனின் திருமணம் நிச்சயம் பெரிய இடி! ஆவேசத்தில் வார்த்தைகளை இறைத்திருந்தார், அவருக்கு அதெல்லாம் இப்போது நினைவில். கோபத்தில் கொட்டியவை என்று கடந்திருக்க, அந்த வார்த்தைகள் மகனை மொத்தமாக பிரிக்கும் என்று அவர் நினைக்கவில்லை.
என் மகன் பிரிந்தானே என்ற கோபம் விட, என்னை மீறி போனானே என்ற எண்ணம். அதுவும் ராஜீவன் சில முறை வீட்டிற்கு அழைத்து பேச, அச்சுதன் அனலைக் கொட்டினார். ராஜீவன் அவர் மகன் இல்லையா? அச்சனை போலவே அழுத்தமாக இருந்துவிட்டார், அதுவும் மனைவி இறந்து, மகளை பிரிந்த பின் யாரும் வேண்டாம் என்ற மன நிலைக்குப் போய்விட்டார்.
பாலாவுக்கு ராஜீவனை பேசவும் பொறுக்கவில்லை, “அச்சா! இது ஷரியல்லா!” என்றார் அதிருப்தியாக.
“நான் இப்படி வந்து நிக்கணும்னு தானே எதிர்ப்பார்த்தீங்க அச்சா! என் மனைவி இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது சொன்னீங்க, உங்க இஷ்டப்படியே நடந்திருச்சு.” என்றதும் எல்லாரும் ராஜீவனை அதிர்வோடு பார்த்தனர். அச்சுதன் அன்றைய கோபத்தில் பேசினார், அதற்காக மகன் துணையிழந்து நின்றால்.. மகனை அதிர்வோடு பார்த்தவருக்கு பேச்சில்லை. பாலாவுக்கு யார் பக்கம் பேசவென்றே தெரியவில்லை.
“இனிமே நீங்களா நினைச்சாலும் அவ உங்க தரவாட்டுக்கு வரமாட்டா, சந்தோஷமல்லே?” ராஜீவன் கேட்க கேட்க அச்சம்மாவிற்கு அழுகை பெருகியது. அன்று அப்படி பேசிவிட்டார், மகனே இல்லை என்றவர்கள்தாம்! ஆனால் காலம் எல்லாவற்றையும் தகர்த்தி, தளர்த்தி விடுகிறதே? பேத்தியைக் கூட சட்டென்று ஏற்க முடிந்த அச்சுதன் மகனை இப்படி நோகடிக்க, பத்மினியால் அழுகையை அடக்க முடியவில்லை. பிந்துவுக்கு அச்சம்மா அழுவது தாங்காமல், அவளுக்கும் அழுகை வர
“ஏடி, இப்போ ஏன் அழற? உன் மகனை வர சொல்லு” என்று உள்ளே போய்விட, ராஜீவனை இழுத்து வந்தார் பாலச்சந்திரன்.
“ஏண்டா அவர் கோவத்துல பேசினார், நீயும் அப்படி பேசுற? அம்மா பாவமில்லையா?” பாலா ராஜீவனை கடிந்தார்.
“உண்மையைதானே பேசினேன்” என்றார் அவர். அம்மா அழுது கொண்டே இருக்க,
“அம்மா! ஏன் அழறீங்க? போதும்! நான் நல்லா இருக்கேன். இப்போ வந்துட்டேன்ல, உங்க பேத்தியும் உங்களோடதானே இருக்கா?” என்று அவர் கைப்பிடித்து சமாதானம் செய்தார். ஷோபனாவும் அண்ணன் அருகே வந்தவர்,
“ராஜீவேட்டா!” என்று கண்ணீரோடு அழைத்தார். அவருக்கும் முன்பு அண்ணன் மீது கோபம், புகுந்த வீட்டில் அண்ணனின் திருமணம் விமர்சிக்கப்பட்டு, பேச்சு வாங்கியிருந்தாரே.. இப்போது அதெல்லாம் எங்கோ மாயமாகிவிட்டது. ராஜீவன் தங்கையைப் பார்த்து புன்னகை செய்தார். மகனை உட்கார வைத்து, அவரின் கையைப் பிடித்து தன் வருத்தம் ஆதங்கம் எல்லாம் சொல்லி புலம்பினார் அச்சம்மா. இடையே பேத்தியைப் பற்றியும் பேச, பாலா நண்பனை முறைத்தார்.
ராஜீவன் அம்மாவிற்குப் பதில் சொல்லி ஆறுதல்படுத்தினார். மகளின் கண்ணீர் போல அம்மாவின் கண்ணீர் சுட்டது! நான் நல்ல மகனுமில்லை, அச்சனுமில்லை, அவரறிந்த உண்மை! இருந்தும் அதனை நேரடியாக சந்திக்கும்போது கடினமாக இருந்தது. உண்மையை சந்திக்க தனி தைரியம் வேண்டும் போல!!
“அம்மம்மா! மாமா வரட்டும் சாப்பிடலாம்னு விருந்தெல்லாம் ரெடி பண்ணிட்டு இப்படி அழுதுட்டே இருந்தா, அவருக்கு பசிக்கும்ல” விஜயன் கேட்கவும் பாலா உடனே
“பார்த்தீங்களா? இவனை பார்த்ததும் என்னை மறந்துட்டீங்க? இல்லன்னா இந்நேரத்துக்கு ஊனு கழிச்சுப் போவாம்டானு சொல்லியிருப்பீங்கம்மா” என்று வம்பு பேச, அச்சம்மா முகத்தில் சிரிப்பு. ராஜீவன் நண்பனை நன்றிபார்வை பார்த்தார். பாலாவோ ராஜீவனை தவிர்த்தார். அச்சம்மா உடனே உற்சாகத்தோடு எழுந்தவர், எல்லாரையும் வரிசையாக உட்கார வைத்து அவரே பரிமாறினார். ராஜீவனுக்குப் பிடித்தவையாகவே செய்திருந்தார். மகன் அருகிலியே முட்டியை மடங்கி உட்கார்த்தவர், பொறுமையாக பரிமாறினார்.
ராஜீவன் பசிக்கு உண்டார். பாலச்சந்திரனுக்கு ராஜீவனை பார்க்க பார்க்க தோன்றியது, ‘என் ராஜீவன் மாறிட்டான்’ என்பதே. ராஜீவன் உணவு பிரியர், ஆனால் காலையிலும் இப்போதும் உண்ணும் ஆர்வமே இல்லை. அம்மாவின் சமையலுக்கு இருவரும் போட்டி போட்டுக்கொண்டு உண்ட நாட்கள் நினைவில் எழ, பாலச்சந்திரனுக்கு உண்ண முடியவில்லை. எல்லாம் மாறியிருக்க, மனம் அந்த நாட்களை எண்ணி ஏங்கியது.
பாலா உண்டு எழ, ராஜீவனும் அச்சுதனும் பேசிக்கொள்ளவில்லை. அச்சுதன் அவர் அறையில் முடங்கிக்கொள்ள, அச்சம்மா மகனை வைத்து பேசிக்கொண்டே இருந்தார். ராஜீவனை அங்கேயே விட்டு பாலச்சந்திரன் தன் வீடு போனார்.
ரொனால்டோ மட்டும் வாசலில் சுற்றினான். “சாப்பிட்டியா டா?” என்று அவன் கிண்ணத்தைப் பார்க்க, உணவு வைத்திருந்த தடமிருக்க
“எங்க உன் அண்ணனுங்க?” என்று அவனை கேட்டபடி கதவை பார்க்க, பூட்டியிருந்தது. வினயனுக்கு அழைக்க,
“ஜெயேட்டாவும் ஊர்மியும் வீட்ல இருக்காங்கப்பா, இங்க ரிசார்ட் பார்க்க வந்துட்டேன்” என்றான்.
“பூட்டியிருந்தா உங்க சட்டை பையில சாவி இருக்கும், திறந்துட்டு உள்ளே போங்க. என்னை ஏன் கூப்பிடுறீங்க?” என்றதும்
“பட்டி!” என்று திட்டி வைத்தார். இவரிடம் இருந்த சாவி கொண்டு திறந்து உள்ளே போக ரொனால்டோவும் பின் தொடர்ந்தது. முற்றமருகே இருக்கும் கரும்பலகை அருகே ரொனால்டோ செல்ல, யாராவது வெளியே சென்றால் அங்குதானே எழுதுவார்கள்.
“அறிவுடா நீ” என்று ரொனால்டோவை பாராட்ட, அவன் பாலேட்டனின் காலை சுற்ற, கரும்பலகையைப் படித்த பாலச்சந்திரனுக்குத் தலை சுற்றியது.
“உங்க மருமக கூட நான் சூர்ய நெல்லி போறேன் அச்சா” என்று மலையாளத்தில் எழுதி கீழே ‘ நிங்கள் பிரியப்பட்ட மகன் ஜெயன்’ என்று கையெழுத்து வேறு.
“ஏடா! ஜெய்!!!!!!!!” என்று கத்திய பாலச்சந்திரன் குரல், மலைப்பிரதேசத்தில் மனம் விரும்பியவளோடு பயணம் செய்த ஜெயனுக்குக் கேட்க வாய்ப்பில்லை.
“டேய் ரொனா! ஒரு மனுஷனுக்கு ஒரு பிரச்சனை இருக்கலாம், ஆனா பிரச்சனை மட்டுமே இருக்கலாமா? என் கூட்டுக்காரந்தான் பிரச்சனைன்னா, என் மகன் எவ்வளவு பிரச்சனை நடந்தாலும் அவன் விஷயத்துல உஷாரா இருக்கான்… என்ன செய்ய போறானோ? பாலச்சந்திரா! நீ பாவம்டா” என்று புலம்ப, ரொனால்டோ அவரைக் கட்டிக்கொண்டது.