“அங்க கயிறு கட்டியிருக்காங்க இல்லயா? இந்த பக்கமா வா ஊர்மி, அந்த பக்கம் போகாத.” என்று எச்சரிக்கை செய்தவன் அவளை முன்னே நடக்கவிட்டு பாதுகாப்பாக பின் தொடர்ந்தான்.
“இன்னிக்கு யாரும் சன் செட் பார்க்க வரலயா?” ஊர்மி கேட்க
“நம்ம கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டோம், ஒரு குரூப் வருவாங்க” என்றான்.
அரை மணி நேரம் கூட கடினப்பட்டு கடந்துவிட்டாள்.
“ஜெய் எப்போ மலை வரும்?” பாவமாகக் கேட்டாள்.
“இன்னும் கொஞ்ச நேரம்..” என்றான். மீண்டும் பத்து நிமிடத்தில் அதே கேள்வி, அதே பதில்.!
இப்படி முப்பது முறைக்கும் மேல் அதே கேள்வியும் அதே பதிலும் அவர்களிடையே பகிரப்பட, ஊர்மிளாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் முடியவில்லை.
லேசான குளிர் இப்போது கொஞ்சம் அதிகரித்தது போல் இருந்தது. காற்றின் இரைச்சல், உதிர்ந்த இலைகளோடு பேசியது. மரங்களைப் பிடித்து பிடித்து நடக்க, அதிலும் கொஞ்சம் கொஞ்சமாய் குளிர் ஏறத்தொடங்கியது.
அந்தியின் ஈரத்தை மேனி உணர, கால்களில் வலி. அதுவரை ஒரளவு இருந்த பாதைகளும் இல்லை. சிறிய ஒற்றையடி பாதை! அதுவும் கூட இடையே கற்கள். பார்த்து செல்ல வேண்டி இருந்தது, ஏற்றமாக வேறு இருக்க, நிறைய சக்தி தேவைப்பட்டது. அப்படியே மண்ணில் உட்கார்ந்தாள்.
“ஊர்மி!” என்று ஜெய் அதட்ட
“நான் கீழ போறேன், இங்க எனக்குப் பயமாயிருக்கு! கொஞ்ச தூரம் கொஞ்ச தூரம்னு எவ்வளவு தூரம் என்னை நடக்க விட்டீங்க?” அவனை குற்றம் சாட்டினாள். ஜெய்யிடம் ரசனையான புன்னகை.
“உன்னை நடக்க விட்டு, நான் பறந்தா வரேன்?” கேலியாக புருவம் உயர்த்தி கேட்க, அவள் முறைத்தாள்.
“ஐநூறு படி ஏறின ஆள், ஜஸ்ட் இந்த குட்டி மலை ஏற முடியாதா?” என்று கேட்க,
“அய்யோ தெரியாம சொல்லிட்டேன். நான் பாவம், எனக்கு முடியல..” என்று அதையே சொல்ல,
“ஊர்மி! இன்னும் கொஞ்ச நேரம், இருபது நிமிஷம் போய்டலாம். பாதி தூரம் வந்துட்டு போகலாமா? எதுனாலும் முழுசா முயற்சி பண்ணனும்.. ” என்று அவன் ஊக்கமாக பேச
ஊர்மிளாவோ தலையில் கைவைத்து, “அய்யோ ஜெய்! உங்க மோட்டிவேஷன்ல ஸ்பீச்க்கெல்லாம் சிங்கப் பெண்ணா நான் சிலிர்த்து எழ மாட்டேன். நான் வாழ வேண்டிய பொண்ணு, எனக்கு மூச்சே அடைக்குது. தயவு செய்து கீழ போகலாம்” என்றாள்.
“இதெல்லாம் லைஃப்ஃபோட முக்கியமான மொமன்ட்ஸ் ஊர்மி! சத்தியமா சொல்றேன், இந்த நாள் உனக்கு மறக்கவே முடியாது. சூர்யன் மறையறத மலை உச்சியில நின்னு பார்க்கிறது, நான் நூறு தடவைக்கும் மேல பார்த்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் எனக்கு புதுசா இருக்கு” என்று அவனும் அவளோடான ஒரு அழகிய பொழுதுக்கும், அவளுக்கும் அவன் ஊரின் அழகினை காட்டிட வேண்டும் என்ற ஆவலில் பேச ஊர்மிளாவோ
“மறக்காதுதான்! இப்படி கால் வலிச்சா எப்படி மறக்கும்? சன் செட் தானே எங்க தாத்தா மூணு மாடிக்கு வீடு கட்டி வைச்சிருக்கார், மேல போய் நின்னா இதே சூரியன் அங்கேயும் தெரியும். அதை விட உயரமான கட்டிடம்ல கூட நின்னு பார்த்துக்கிறேன்” என்றதும் அவனுக்கு சுர்ரென்று ஏறியது.
எவ்வளவு அழகான காட்சி! அவளோடு பார்க்க இவனுக்கு எவ்வளவு ஆவல். அவள் மறுக்க,
“உனக்கு வெறும் வாய்தான்! சரி வா, இதுல கேப்டன் பொண்ணு வேற!” என்று எரிச்சலாக அவன் திரும்பி நடக்க, ஊர்மிளாவுக்கு அவன் அப்படி பேசிவிட ரோஷம் வந்தது. ஜெயன் இரண்டடி நடக்க, ஊர்மிளாவோ முன்னோக்கி நடந்தாள்.
இவள் வருகிறாளா என்று திரும்ப, ஊர்மி மேலே செல்ல, ஜெயனும் புன்னகையோடு மேலே நடந்தான். ஊர்மி வைராக்கியத்தோடு மேலே நடந்தாள், இருபக்கத்திலும் நீண்ட மரங்கள், ஒரு பக்கம் கயிறு கட்டியிருக்க, ஊர்மி லேசாக எட்டி பார்த்தாள். சூர்யன் அல்லே, சூரியன் இல்லை என்பதே அவ்விடத்தின் பொருள். மனிதர்கள் புழங்காத காலத்தில் சபரிமலைக்கு அவ்வழியே செல்வார்கள். அடர்த்தியான மரங்கள் இருக்க, சூர்ய வெளிச்சமே விழாத அளவு இயற்கையின் போர்வை இருக்குமாம்! அதனால் சூர்ய நெல்லி என்று பெயர்.
“ஓஹ், இங்க ஆறு ஓடுதா?” அவனிடம் கேட்க
“ஆறு இல்ல, அது மேகம்!” என்றதும் ஒரு அதிர்வில் அவள் சட்டென்று தடுமாற,
“பார்த்தும்மா” என்று ஊர்மியின் கைப்பிடித்தான். ஊர்மியின் இதயத் துடிப்பு அவளுக்கு நன்றாகக் கேட்டது.
“பயப்படாம, பார்த்து போ” என்றவன் கையை விட,
“மேகமா அது? நான் ஆறுனு நினைச்சேன்” என்றாள் இன்னும் அதிர்ச்சி நீங்காமல்.
ஜெயன் சிரிப்போடு, “மேகக் கூட்டம்! இவ்வளவு உயர்த்திலிருந்து பார்க்கிறப்ப அப்படி தெரியும், இல்லை மலை இருக்க மாதிரி தெரியும், எல்லாமே பனி புகை” என்றான். ஊர்மி மெல்ல நடக்க, வியர்த்து குளிர்ந்து என்று ஒரு வழியானாள். இதில் பாதை சறுக்கிட, மரத்தைப் பிடிக்க, அது வேறு கையை கீறியது. சில நேரம் உட்கார்ந்து, கையை மண்ணில் வைத்து ஒருவழியாகிவிட்டாள்.
“எங்க மொட்ட மாடியில நின்னு பார்த்திருந்தா எனக்கு இவ்வளவு கஷ்டம் இல்ல” முணுமுணுத்தபடி ஏறினாள்.
கிட்ட தட்ட இரண்டு மணி நேரம், ஊர்மி இவனிடம் பேசவே இல்லை. கேட்டால் கொஞ்ச தூரம் என்பான்.
“கொஞ்சத்துக்கு அர்த்தம் தெரியாதவர்” என்று திட்டினாலும் ஏறிவிட்டாள்.
“ரைட்ல திரும்பு ஊர்மி!” அவன் வழி சொல்ல, ஊர்மியும் கடுப்பாகவே திரும்பினாள்.
ஒரு பத்தடி நடந்திருப்பாள். கண் முன் கண்ட சித்திரத்தில் கண்கள் மின்ன நின்றாள் ஊர்மிளா.
அந்தி வானில் அத்தனை நிறம்!! நிறங்களின் கூட்டாக மேகம், மேகமெது வானமெது என்று வகுத்தறிய முடியவில்லை. நீலம், வெண்மை, மஞ்சள் என்றிருந்த வானத்தில் மெல்ல மெல்ல செந்தூரத்தின் சிவப்பு! சூர்யனை தொட்டு சென்றது மலை. அவளும் எத்தனையோ படங்களில் இப்படியான காட்சிகளை பார்த்திருக்கிறாள். ஆனால் நேரில்??
மெய்மறந்தெல்லாம் நிற்கவில்லை அவள்! மெய் உணர்ந்து நின்றாள்! மேலேற மேலேற குளுமை குடியிருக்க, காற்று காதில் உரசியது. உடலில் குளிரினால் நடுக்கம் ஓடினாலும் பல்லை கடித்து அடக்கினாள்.
தீடீரென அப்படியொரு சந்தோஷம்! சிவப்பின் அத்தனை சாயலிலும் வானம்! இடையே நீலத்தின் சாரல், கீழே இருந்த கிளம்பிய வெண்புகை. சுற்றிலும் பச்சை பசுமை! சிறு குன்றின் மேல் உட்கார்ந்தாள். அந்த பச்சைக்குன்றின் மேல் பனித்துளிகள் குடிகொண்டிருக்க, உடை தாண்டி உடல் தீண்டி உள்ளும் புறமும் ஈரம். கைகளை சூடு பறக்க தேய்த்தாள்.
உற்சாகம் மீற, “வாவவ்வ்வ்வ்!” என்று கத்தினாள். ஜெயனுக்கு அந்த பூனைக்குட்டியின் புன்னகை முகம் பார்க்கத்தானே ஆசை. அவன் அங்கிருந்த குட்டி பாறையில் உட்கார்ந்தான். மழையின் குளிர் உணர்ந்திருக்கிறாள், மலையின் குளிர் புதிதல்ல, ஊட்டி, கொடைக்கானல் எலலம் சென்றவள்தான்.
இருந்தும் இப்படி அந்திக்காற்றோடு ஆகாயம் தொட்டு செல்லும் மலை, மேகம் எல்லாம் புதிது. இயற்கை ப்ராவாகமாய் உணர்வினை கொடுக்க, கைகளைத் தேய்த்துகொண்டவளுக்கு செஞ்சாந்தாய் சிவந்திருந்த சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மறைவது தெரிந்தது.
சூர்ய நெல்லி காற்று தேகம் தீண்ட, சிலிர்த்தபடி ஜெயனை பார்க்க அவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்தான். ஊர்மிளா அதுவரை உற்சாகமாக இயற்கையில் லயித்தவள் புன்னகையைப் பூட்டியபடி
“தேங்க்ஸ்!” என்றாள். அவன் புருவம் உயர்த்த
“செமயா இருக்கு! இப்படி பார்த்ததே இல்லை. ஃபோட்டோவுல பார்க்கிறதுக்கும் நேர்ல பார்க்கவும் அவ்வளவு வித்தியாசம். இவ்வளவு நேரம் நடந்து வந்தது இதுக்காகன்னு நினைக்கிறப்ப… வர்த் தான். சொல்லுவாங்களே சில விஷயம் சொன்னா புரியாதுன்னு, இது அப்படி இருக்கு! ஒரு மாதிரி இருக்கு” என்றாள்.
அவள் கண்கள் கூட அந்த அலாதி இயற்கையில் லேசாய் கலங்கின. என்னவோ ஒரு நிறைவு! சத்தியமாக இவ்வளவு தூரம் நடந்தது எல்லாம் இதற்காக என்றால் பரவாயில்லை என்ற எண்ணமே.
ஜெயன் ஒன்றும் சொல்லாமல், அவன் குளிர் ஜாக்கெட்டைக் கழட்டினான்.
“போட்டுக்கோ” என்று கொடுக்க அவள் வேண்டாம் என்றாள்.
ஜெயன் நீட்ட, “உங்களுக்குக் குளிருமே?” என்று கேட்க
“எனக்குக் குளிர் தாங்கும், உனக்காகத்தான் போட்டு வந்தேன். ஏறும்போது வெயிட்டா இருக்கும், உனக்கு கஷ்டம். இப்போ கொஞ்ச நேரத்துல குளிர் ஏற ஆரம்பிச்சிட்டா உனக்குத் தாங்காது” என்றான். ஊர்மிளாவுக்கு அவன் செயலில் ஆச்சர்யம்! அவன் கொடுத்த ஜாக்கெட் வாங்கி போட்டுக்கொண்டாள்.
“செமையா இருக்கு. எங்கப்பாம்மாவுக்குக் காட்டணும்” என்று சொல்ல, ஜெயன் உடனே “இங்க சிக்னல் வீக், வீடியோ எடுத்துக்கோ, இறங்கின அப்புறம் பேசலாம்” என்றான்.
யாரோ வரும் சத்தம் கேட்க, பார்த்தால் தங்கப்பன் வந்தான். அவன் பின்னே ஐந்தாறு பேர், கையில் குட்டியாக ஒரு ஃப்ளாஸ்க். லைட் ஒன்று.
“இவங்களுக்கு கொடு தங்கப்பா!” என்றதும் அவன் டம்ளரில் காஃபியை நீட்ட, ஊர்மிளா அசந்துவிட்டாள்.
“அசத்துறீங்க! உங்களுக்கு?” என்று தங்கப்பனையும் ஜெயனையும் கேட்க, தங்கப்பன்
“ஜெயேட்டா காஃபி குடிக்க மாட்டார் மேடம்” என்றான்.
“அப்படியா?” ஊர்மி பார்க்க, அவன் தலையசைத்தான். ஊர்மிளா காஃபியை ரசித்து பருகினாள். தங்கப்பன் கைட் செய்ய, அவனோடு வந்தவர்கள் அங்காங்கே நின்று போட்டோ எடுத்தனர்.
“டைமாகிடும் ஊர்மி, நம்ம கிளம்பினா சரியா இருக்கும்” என்று ஜெயன் அவளை அழைக்க, இப்போது இறங்க மனமில்லை.
அவள் அந்த கூட்டத்தை வேடிக்கை பார்க்க, “அவங்க இங்க ஸ்டே பண்ணுவாங்க, நம்ம ஊருக்குப் போகணும். வா” என்றழைக்க அவள் புகைப்படம் எடுத்தாள். அவனோடு இயல்பாக செல்ஃபியும் எடுக்க, ஜெயனும் புன்னகையோடு நின்றான்.
இருவரும் மீண்டும் இறங்க, ஒன்றரை மணி நேரம் மேல் ஆனது. இருள் எங்கும் நிரம்பியிருக்க, ஊர்மிளா ஜெயனின் கையை விடவில்லை. இருவரும் இறங்கி விட, ஊர்மி உடனே வீட்டுக்கு அழைத்து பேசினாள்.
“அம்மா! நான் எங்க இருக்கேன் தெரியுமா?” உற்சாகமாகக் கேட்ட மகளின் குரலில் ஜமுனாவுக்கு அவ்வளவு சந்தோஷம். நேற்றிரவு பேசியதோடு சரி, இன்று பேசவே இல்லை. அவளாக அழைக்கட்டும் என்று நினைத்திருந்தார்.
“எங்கடி இருக்க?” ஜமுனா கேட்க, பிரபாகரன் மகளின் குரல் கேட்கவும் மனைவியை இடித்துக்கொண்டு வேகமாக வந்தமர்ந்தார்.
“அப்பாஆ!” உற்சாக மிகுதியில் ஊர்மிளா அழைக்க, பிரபாகரனுக்கு மகளின் வார்த்தை ஆனந்த பதம்! முதல்முறை அழைத்தபோது எத்தனை உணர்வு மிகுதியோ இன்றும் அதே நிலை. இருவரும் மகளை பேசவிட்டனரே தவிர எதுவும் பேசவில்லை. அலைப்பேசிக்குள் பிரபாகரன் மகளை பார்த்து பூரிக்க, இங்கே அருகில் இருந்தவன் அவளின் பாவனை ஒவ்வொன்றையும் ரசித்து அள்ளிக்கொண்டான்.
மலை ஏறியது முதல் சமவெளி வந்தது வரை சலிக்காது அப்பா, அம்மாவிடம் கதையாக சொன்னவள்
“ஓகே ஊர்மி! இப்போ தனியாவா இருக்க? ஆறு மணி அச்சே, இருட்டிடும். பார்த்து போ!” என்று பிரபாகரன் சொல்ல, ஜெயன் அதுவரை அன்றைய நாளின் ஏற்பாடு குறித்து சாக்கோவிடம் பேசியவன் ஊர்மியிடம் வர, அவனை அறிமுகம் செய்தாள்.
“அதுக்கெல்லாம் என் ப்ரண்ட் இருக்கார், இங்க பாருங்க. எங்கப்பா அம்மா!” பெருமையாக வீடியோ காலில் அறிமுகம் செய்தாள் ஊர்மிளா.
“ஹலோ அங்கிள்! ஹாய் ஆன்ட்டி” என்று ஜெயனும் பேச,
“சேஃபா ரீச் பண்ணீட்டு கூப்பிடு ஊர்மி, பார்த்துக்கோங்க ஜெய்!” என்று பிரபாகரன் வைத்துவிட்டார். மகள் முகம் பார்த்ததே போதும் அவர்களுக்கு.
“வினய் சொன்னப்போ கூட தெரியல நீங்க செமதான்” என்றான் பாராட்டாக.
“என்ன சொன்னான்?”
“நிறைய சொன்னான்! எனக்கு உங்க சீக்ரெட் கூட தெரியுமே” துள்ளல் குரலில் ஊர்மிளா சொன்னாள். அவள் வந்தபோது இருந்த மன நிலை முற்றிலுமில்லை, அவள் மன நிலையை மாற்றியவன் ஒரு வார்த்தை கூட அது பற்றி பேசாது இருந்தது ஊர்மிளாவுக்குப் பிடித்தது.
“ரகசியமா?” அவன் சிரிக்க, ஊர்மிளா தலையாட்டினாள் .
“உங்க லவ் ரகசியம்” என்றதும் ஒரு நிமிடம் அதிர்வில் ஸ்டியரிங்கை இறுக பற்றினான் ஜெயன்.
“டென்ஷன் ஆகாதீங்க, ஜஸ்ட் நீங்க லவ் பண்றீங்க சொன்னான். வேற ஒன்னுமில்லை. பட் நிஜமா உங்க ஆளு கொடுத்து வைச்சவங்க” என்று பாராட்ட
“அப்படியா? என் கதை கேட்டா சிரிப்ப நீ” என்றான்.
“சொல்லுங்களேன்” ஊர்மி சம்மதிக்க
“எங்கப்பா எனக்கு ஒரு பொண்ணு பிக் அனுப்பினார், அந்த பொண்ணு வேற வேலை விஷயமா எங்க ஊர் வந்தா. எனக்கு ஒரே சந்தோஷம், ஆனா அவளுக்கு என்னை தெரியல, அப்புறம்தான் தெரிஞ்சது எங்கப்பா ஃபோட்டோ மாத்தி அனுப்பிட்டார்னு” கொஞ்சம் வருத்தம் கொஞ்சம் ரசனை என்று ஜெயன் சொல்ல
“பார்த்தவுடனே எப்படி லவ் வரும்?” என்றாள்.
“லவ் இல்லை, எங்கப்பா பிக் அனுப்பினதும் நான் மனைவியா வரப்போற பொண்ணுனு ஆர்வத்துல பார்த்தேன், அப்புறம் நேர்ல பார்த்தப்ப இன்னும் பிடிச்சது. அவளை ஒவ்வொரு முறை பார்க்கிறப்பவும் எனக்கு அவளை காதலிக்க காரணம் தந்துட்டுதான் இருக்கா!” ஜெயன் கவனம் சாலையில் இருந்தாலும் வார்த்தைகள் இயல்பாக வந்தன.
“நம்ம சொந்தம்னு நினைக்கிறப்போ தானா ஒரு அன்பு வரும்ல?” ஜெய் கேட்க
“எஸ்! நீங்க சொல்றது சரி, நம்மவங்கனு பார்த்த அப்புறம் வர பாசம் என்னைக்கும் போகாது” ஊர்மிளா குளிரும் இருளோடும் கோர்த்திருந்த காற்றை பார்த்து சொன்னாள்
அவள் தாத்தா அப்படித்தானே? அவரின் பேத்தி அவள்! அந்த பார்வையும் பாசமும் என்றைக்கும் போகாதே!
“அந்த பொண்ணை பார்த்துட்டு எனக்கு வேற யாரையும் அந்த பார்வையில பார்க்க முடியல..”
காரணம் சொன்னவனுக்கு காதல் சொல்ல தைரியமில்லை.
“சரி யார் அந்த பொண்ணு?” என்று கேட்க நீதான் என்று சொல்ல நினைத்தாலும் சொல்ல முடியவில்லை. காதலின் ஆகப்பெரும் பயம் அது நிராகரிக்கப்படுமோ என்ற அச்சம் தானே? அவ்வளவு சொல்ல முடிந்தவனுக்கு அவள்தான் என்ற சொல்ல முடியவில்லை.
“அந்த பொண்ணுக்கிட்ட சொல்லிட்டு சொல்றேன்” என்றதும் அவன் இவ்வளவு பகிர்ந்ததே பெரிது என்று ஊர்மிளாவும் கேட்கவில்லை.
“லாலேட்டன் லவ் சாங் கேக்கிறப்பவே நினைச்சேன் ப்ரண்ட், நீங்க ஒரு ஓமணாவ உஷார் பண்ண தான் நினைக்கிறீங்கன்னு.! கண்டிப்பா உங்க கல்யாணத்துக்கு வருவேன் ப்ரண்ட்! தேங்க்ஸ் இன்னிக்கு எனக்கு மறக்க முடியாத நாள்” என்றாள்.
“கண்டிப்பா நீ வரணும்” என்று ஜெயனும் அழுத்தி சொன்னான்.
“ஆமா நம்ம நடந்தோமே, எவ்வளவு கிலோமீட்டர்?”
சாதனையாக சொல்ல நினைத்து கேட்க, “2.5 கிலோமீட்டர்” என்றதும்
“காமாட்சி!” என்று புலம்பியவள்
“ஜெய் ப்ளீஸ் பொய் சொல்லாதீங்க, ஏற இரண்டு மணி நேரம் இறங்க ஒன்றர மணி நேரம்.. ஜஸ்ட் தோ கிலோமீட்டர், பொய்தானே?” ஊர்மிளா நப்பாசையோடு கேட்க அவனோ
“உண்மை ஊர்மி! மலை பாதை அப்படி, அதனால ரொம்ப தூரம் மாதிரி தெரியும்.”
“மண், கல்லுனு குத்தி நடந்தேனு அதுக்காச்சும் ஒரு அஞ்சாறு கிலோமீட்டர்னு சொல்லியிருக்கலாம்” என்று அவள் ஆதங்கப்பட, மெல்ல பேசியபடி இரவோடும் இருளோடு அவர்கள் தேவிகுளம் வர, பாலச்சந்திரன் மகன் மீது கடுங்கோபத்தில் இருந்தார்.
ஊர்மிளா இறங்கி நிற்க, ரொனால்டோ ஜெயனிடம் ஓடி வந்தான். ஊர்மி அவனை கொஞ்ச ஜெயனின் பார்வை ஊர்மிளா மீதே. அது பாலச்சந்திரன் கண்ணில் மட்டுமல்லாது ராஜீவன் கண்ணிலும் பட்டது.
“ஏதோ வயசுப்பய பார்க்கிறான்” என்று நினைத்தாலும் அந்த பார்வையோடு உரிமையும் இருப்பதாகவே ராஜீவன் உணர்வு சொல்லியது.
“அறிவிருக்கா உனக்கு? எவ்வளவு நேரம்?” என்று பாலச்சந்திரன் மகனை கத்தினார். ஜெயன் அப்பாவை முறைத்தான்.
அந்த இரவு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிறமாய் அமைந்தது!