நண்பனை ஊர்மிளா பேசினாலே அவருக்குப் பொறுக்கவில்லை. இதில் அவள் ராஜீவனை அப்பா என்று அழைக்காமல் இருப்பதில் அவ்வளவு வருத்தம். இதில் மகன் பேசிவிட, ஆற்றவே முடியவில்லை.
“டேய் பாலா! என்ன இது? அவன் லவ் பண்றான், நோ சொன்னா கோவம்தான் வரும்” என்று ராஜீவன் பேச
“என்ன லவ்வு? எல்லாம் பிரேம ப்ராந்தனுங்க!” என்று பல்லைக் கடித்தவர் ஜெயனுக்கு ஃபோட்டோவை மாற்றியனுப்பியது சொன்னார்.
ராஜீவன் அதிர்வில் பார்க்க, ” உன் பொண்ணு திடுதிடுப்புனு வந்துட்டா, அவ எனக்குப் ஃபோன் பண்ணியிருப்பா போல, இங்க மழை. என் ஃபோன் நாட் ரீச்சபிள்னதும் அவ ஊருக்கே வந்துட்டா. கரெக்டா என் நேரம் ஜெயன் பார்த்துட்டான். இவன் பொண்ணுங்க கிட்ட பேச்சே வச்சுக்க மாட்டான். ஆனா ஊர்மிகிட்ட அதிகம் உரிமையெடுத்தான்” என்றதும்
“பார்த்தேன்” என்றதும் பாலா இப்போது அதிர்ச்சியாகி பார்த்தார்.
ராஜீவன் “உன் பையன் ஊர்மியைப் பார்க்கிற பார்வையே சொல்லுச்சு, நான் ஏதோ சைட் அடிக்கிறான் நினைச்சேன்” என்றதும்
“பாரு, அப்படி ஒரு இம்சை! நான் கெஞ்சுறேன் ஃபோட்டோ மாறிடுச்சுனு. அவன் எனக்கு மனைவின்னா ஊர்மினு சொல்லி என்னை டார்ச்சர் பண்றாண்டா” என்று புலம்பினார்.
“ஏடா பாலா! கண்ணாடி போட்டிருக்க தானே? மெசெஜ் அனுப்புறப்ப பார்த்து அனுப்ப மாட்டியா?” என்று கடிய,
“போடா! அப்போ மறந்துட்டேன். நீ தான், எல்லாம் நீ செஞ்ச டென்ஷன்” என்று திட்டினார்.
ராஜீவன் மறுப்பாக தலையசைத்து, “பாலா! உன் பையன் சொன்னதுக்கு நீ கோவப்பட்டாலும் அதான் உண்மை! அவன் சொல்ற மாதிரி நான் உரிமையில சொல்லல, உண்மையை சொன்னேன்! எனக்கு பிரபாவை, அவங்கப்பாவை தெரியும்தானே? அதைவிட ஊர்மிளா? அவ அவங்க பேச்சை தட்ட மாட்டா! கண்டிப்பா நடக்காத விஷயத்துக்கு ஆசைப்பட்டு ஜெய் மனசு கஷ்டப்படப்போகுதுடா” என்றதும் பாலாவுக்குப் பயம்.
இருந்தும் “என்னடா நீயே இப்படி சொல்ற? நீதான் என் நம்பிக்கையே, நீ அந்த பிரபாகரன் கிட்ட பேசக்கூடாதா?” என்றதும் அதிருப்தியாகப் பார்த்தார்.
“பிரபா கிட்ட எந்த உரிமையில் நான் பேசுவேன் பாலா? நீ சொல்றியே உன் பொண்ணுனு அந்த வார்த்தையே எனக்கு இத்தனை வருஷத்துல சொன்னது நீ மட்டும்தான்! நியாயம்னு ஒன்னு இருக்குடா, ஊர்மியோட எந்த விஷயத்துலயும் நான் தலையீட்டதே இல்லை. இப்போ கல்யாண விஷயத்துல எப்படிடா? ஊர்மிக்குப் பிடிச்சா கூட பரவாயில்லை, அப்பவும் அவ விருப்பப்பட்டாலும் என் ஊருக்கார பையன்னா கண்டிப்பா பிரபா அப்பா ஒத்துக்கமாட்டார். முன்னாடி அவர் அவளை வெளியே கொடுக்க விரும்பாம அவர் பேரனுக்கே கட்டி வைக்க நினைச்சார். இப்போ விஷயம் தெரிஞ்ச பின்னாடி கண்டிப்பா ஒத்துக்கமாட்டார்.”
“ஊர்மிளாவுக்கு விருப்பமா?”
“இல்லைடா, அவ சாதாரணமாதான் பழகுறா. இவன் தான் ஊர்மி..ஊர்மினு..” சொல்லும்போதே பாலாவுக்கு மகனின் எண்ணத்தை நினைத்து பயம், கவலை எல்லாம் சேர அவர் கண்கள் அதனை பிரதிபலித்தன. இன்னும் ஜெய் காதல் சொன்னது தெரியாதே?!
ராஜீவனுக்கு நண்பனை பார்க்க கஷ்டமாக இருந்தது.
“சாரி பாலா! என்னால நல்ல மகனா, நல்ல அப்பாவா, அட்லீஸ்ட் நல்ல நண்பனா கூட இருக்க முடியல” ராஜீவன் அதிகபட்ச வருத்தத்தோடு சொல்ல,
“என்னடா நீ? எனக்காக பார்க்காத, ஜெய் நல்ல பையண்டா! அந்த பிரபாகரன் அப்பா வசதி பார்ப்பாரா?” என்ற பாலாவின் கேள்வியில்
“வசதியெல்லாம் உனக்கும் இருக்குடா, அவர் வசதி, ஜாதி, மதம்னு எதுவும் பார்க்க மாட்டாரு! ஆனா அவர் வேற மாதிரி! அவர் குடும்பம்தான் பெருசு! பிரபாவுக்கு ஆர்மில ஜாயின் பண்ண விருப்பம், அவருக்கு இஷ்டமில்லைனாலும் அவனை அலொவ் பண்ணினார். பட் ஊர்மிக்காக அவன் ஆர்மியை விட்டான், அதனாலயே பேத்தி மேல பிரியம் அதிகம். ஊர்மிளாவை அவர் ஊர்ல, அவருக்குப் பிடிச்ச இடத்துல கொடுக்கத்தான் இஷ்டப்படுவார். ஊர்மியும் அவரை மீறி எதுவும் செய்ய மாட்டா!” என்று உண்மையை சொல்ல, அதை ஏற்க சிரமப்பட்டார் பாலச்சந்திரன்.
மகனுக்கு ஊர்மிளா என்றால் பிடிக்குமே என்று மறுகியவருக்கு நண்பன் சொல்வதும் புரிந்தது.
“ஊர்மிளா சந்தோஷமா இருக்கணும்டா. அவ இங்க வரதுல எனக்கே விருப்பமில்லை, என் பொண்ணுக்கு தேவையில்லாத டென்ஷன் வேண்டாம் பாலா. அங்க அவ தாத்தாவுக்கு செல்ல பேத்தி, அப்பா அம்மானு என் பொண்ணுக்கு அழகான குடும்பம் இருக்கு. என்னை சேர்ந்த எதுவும் அவளை சேராம இருக்கிறதுதான் அவளுக்கு சந்தோஷம் கொடுக்கும். ஜெயனை நினைச்சு எனக்குக் கஷ்டமா இருக்கு, ஆனா நடக்காத ஒன்னை நினைச்சு உன் மகன் கஷ்டப்பட வேண்டாம், இந்த காதல் வலியெல்லாம் ராஜீவனோட போகட்டும்! என் பாலா பையனுக்கு அது வேண்டாம்!” ராஜீவன் குரல் கலங்கினாலும் அழுத்தமாக சொன்னார்.
ராஜீவன் அப்படி சொல்ல, பாலச்சந்திரனுக்கு அதுவரை மகனது ஆவல் நிறைவேற வேண்டும் என்று இருந்த கொஞ்ச எண்ணமும் பறந்து போனது. இன்னொரு ராஜீவனாக அவர் மகன் வேண்டாம் என்றே தோன்றியது. ஒரு காதல் போதும்! அது என் நண்பனை படுத்தி வைப்பது போதாதென்று என் மகனையுமா? வேண்டாம் என்று ஸ்திரமாய் முடிவெடுத்தார். நம் பார்வை நம்மை சுற்றி நடப்பது கண்டுதானே உருவாகும், மாறுபடும்.
ராஜீவனின் காதல், அவரின் பிடிவாதம், தனிமை. விஜயனின் காதல், அதனால் சொன்ன பொய், குழப்பம் என்று அவருக்குத் தெரிந்த காதல் எல்லாம் பயமுறுத்த, ஜெயன் மனதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார். அவனோ ஊர்மிளா மனம் என்ன சொல்லுமோ என்று அதிலேயே தவித்தான்.
************************
விமானத்தில் பயணம் செய்த ஊர்மிளாவின் மனம் இந்த முறை ராஜீவனை, அப்பாவை, அம்மாவை என்று எதையும் யோசிக்காத வண்ணம் செய்துவிட்டான் ஜெய்ச்சந்திரன்.
ஜெயனின் காதல் தெரிந்தாலும், அவன் காதலிக்கும் பெண்ணை தெரிந்து கொள்ள இயல்பான ஆர்வம் இருந்தாலும் கூட நிச்சயம் அந்த பெண் அவள் என அனுமானமே இல்லை.
ஊர்மிளாவுக்கு இன்னும் அதிர்ச்சி விலகவே இல்லை. அதுவும் ஜெயனோடு பயணித்த இரண்டு நாட்களும் அவன் காதல் பற்றி சொன்னபோது அவன் கண்களும், குரலும் கடத்திய காதல்.. அது புரிந்ததே. அதனை இன்னொரு காதல் கதையாக மட்டுமே ரசித்தது அவள் மனம்.
என்னை மறக்காத என்ற அவன் வார்த்தைகள் ரீங்காரமிட, கொஞ்சம் களைப்பாக இருந்தாலே கண்ணயரும் ஊர்மிளாவுக்கு உறக்கம் தூரமானது. ஜெய் மீது காதல் எல்லாம் பூக்கவில்லை, இருந்தும் அந்த செய்தி கடத்திய அதிர்ச்சி நீங்கவில்லை.
அதனோடு சென்னை விமான நிலையம் வந்திறங்க, ஜெயனை, தேவிகுளத்தை, ராஜீவனை எல்லாம் மறக்க வைக்கும் வண்ணம் வந்து நின்றார் பிரபாகரன்.
“அப்பா!” என்று ஊர்மிளா அவரை கண்டு ஓட, மகளை தோளோடு அணைத்தார். ஊர்மி அவரிடம் வந்து சேரவும் அவ்வளவு நிறைவு.
“அப்பான்னா அப்பாதான்!” என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டவள் “நானே கடுப்பா கேப் பிடிச்சு போகணும் நினைச்சேன், நீங்க வேலையா இருப்பீங்க டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னா நீங்களே வந்துட்டீங்க, ஐ மிஸ்ட் யூப்பா” என்று ஊர்மிளா படபடவென்று பேசிக்கொண்டே வந்தாள். கார் அருகே வரவும்
“அப்பா, நான் டிரைவ் பண்றேன். ப்ளீஸ்” என்று கேட்க, அவரும் சாவியைக் கொடுத்தார்.
அப்பாவோடு சென்னையிலிருந்து காஞ்சிவரை பயணம். ஊர்மிளா மனதில் அந்த நேரம் யாருமே இல்லை. அவளின் ஊரை, வீடை, அம்மாவை பார்க்கும் உணர்வில் துள்ளினாள்.
பிரபாகரனிடம், “அப்பா! தாத்தா எங்க? வீட்லயா? ஆபிஸ்ல்யா?” என்று கேட்க
“அவர் தேசிகன் தாத்தா மீட் பண்ண போயிருக்கார்டா” என்ற பிரபாகரன் மகள் முகத்தை பார்த்தார். மனைவி சொன்னது போல் தெளிவாக இருந்தாள். அவளையே பார்க்க,
“என்னப்பா” என்றாள் சாலையைப் பார்தபடி. காஞ்சிபுரம் செல்லும் கிளைச்சாலையில் திரும்பினாள்.
“என்னடா?” என்றதும் காரை மெல்ல ஓரம் கட்டியவள், அப்பா முகம் பார்த்து
“பெஸ்ட் அப்பாவையும் அம்மாவையும் எனக்குக் கொடுத்ததுக்கு உங்க ப்ரண்டுக்கு தேங்க்ஸ் சொன்னேன்” என்றாள் நிதானமாக. அந்த் வார்த்தைகள் கொடுத்த வாத்சலயம் வரையறுக்க முடியாதவை. பிரபாகரனுக்கு இருக்கும் அந்த சிறு பயத்தை, மகளின் வார்த்தைகள் போக்கிவிட கண்கள் கலங்கி போனது. பெற்றவனிடமே என்னை சிறந்த தந்தை என்று சொல்லியிருக்கிறாள் என்று மகளை பார்க்க
“கேப்டன் கண் கலங்கலாமா?” என்று அப்பாவின் கன்னத்தைத் துடைத்து,
“தாத்தா சொல்ற மாதிரி எதுவும் மாறல, மாறாது!” என்றாள் இப்போது தெள்ளத்தெளிவாக.