அடுத்த இரண்டாம் நாள் விஜயன் பிந்துவின் திருமணம் சிறப்பாக நடந்தது. ஊர்மிளா காஞ்சிப் பட்டுடுத்தியிருக்க, புடவையில் வேறாக தெரிந்தாள். ஜெயன் அவளை புடவையில் கண்டு கொஞ்சம் தவித்தான், அதுவரை தோன்றாத அகத்திணை எண்ணமெல்லாம் அகத்தில் அடியெடுத்து வைக்க, அவள் பக்கம் பார்க்காமல் கல்யாண வேலையில் கவனம் செலுத்தினான்.
ஊர்மிளா கட்டியணைத்துக் கொஞ்ச தோன்றிய மனதை கட்டிவைத்தான். ஜெயன் ஊர்மிளாவை பார்க்காமல் தவிர்க்க, அது ஊர்மிக்குத் தெரியவில்லை. அவள் மிகவும் இயல்பாக அவள் காணாத புதிய முறை திருமணத்தை கண்டு ரசித்தாள். தனியாக இருக்க விடாமல் அவளை பிந்துவோடு இருக்க சொல்லிவிட்டான் ஜெய்.
ஜெயனும் வினயனும் விஜயனுக்கு சகோதரர்களாக நின்று எல்லா வேலையும் செய்தனர். விஜயனின் தந்தை வழியில் அவனுக்கு சகோதரர்கள் இருந்தாலும், அவர்கள் சிறியவர்கள். பாலச்சந்திரன் தங்கைக்காக, அவரின் அச்சனுக்காக என்று ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தார். அச்சுதனுக்கும் பத்மினுக்கும் அன்று மிகுந்த சந்தோஷமான நாள், ராஜீவன் தனியாக இருப்பது தவிர வேறு எந்த கவலையுமில்லை. தங்களின் பேரனுக்கே பேத்தியை மணமுடிப்பதிலும், இத்தனை வருடம் பிரிந்திருந்த மகனும் பேத்தியும் மீண்டும் வந்திருக்க, அச்சம்மா முகத்தில் மாறாத புன்னகை.
ஜெயன் கூட அச்சம்மாவை கிண்டல் செய்தான்.
“எந்தா இது அச்சம்மா? மாமாவை பார்த்தா தான் சிரிக்கிறீங்க? அப்போ நானெல்லாம் ஸ்பெஷல் இல்ல?” என்று கேட்க
“எந்தடா ஜெயன் இது? நீ எப்போலும் எங்கட பிரியப்பட்டவனானு!” என்று அவன் கன்னம் தட்டினார். ஜெயனும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருக்க,
“நிண்ட விவாகம் காண ஞான் காத்திருக்குகாயானு” (உன் கல்யாணம் பார்க்க நான் காத்திருக்கேன்) என்று பிந்துவின் பின் நின்ற ஊர்மிளாவின் மீது பார்வை பதித்து சொன்னார் அச்சம்மா.
“ஞானும்” என்று ஜெயன் ஊர்மியை ஒரு நொடி ஓரவிழியில் ரசித்தவன் அச்சம்மாவை பார்த்தான்.
“வாவே! போடாப்பா”(பிரியமான குழந்தையை அழைக்கும் சொல்)” என்று பத்மினி சொல்லிவிட்டு செல்ல, ஜெயன் பந்தி நடக்குமிடம் சென்றான். திருமணம் முடியவும் ஊர்மிளா வினயனிடம் அவளை புகைப்படம் எடுத்து தர சொல்ல,
“என்ன ப்ரண்ட், கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டீங்க போல” என்று அவளை கிண்டலாக பார்த்தான்.
“அங்க ஒருத்தன் மாப்பிள்ளையா சுத்துறான், நீ பட்டுப்புடவையில கலக்குற! பாவம் ஜெயேட்டா!” என்று வம்பு செய்ய
“வினய்! ஓவரா பேசாம ஃபோட்டோ எடுத்து கொடு” என்று ஊர்மி மிரட்டினாள். வினய் சொன்னது போல் பட்டு வேட்டியில் இருந்த ஜெயனை மனது ரசிக்கத்தான் செய்தது.
இருந்தும் ரசனை ரகசியமாகவே இருந்தது, ஜெயனோடு பேசி பழக அவளுக்கு நேரம் வாய்க்கவில்லை. ஆனால் ஜெயன் மற்றவரோடு பேசுவதை பழகுவதை அவள் கண்கள் பார்த்துக்கொண்டே இருந்தன, அந்த பார்வை சில நேரம் ரசனையாகவும் மாறியது, என்ன மனம் ஒத்துக்கொள்ளவில்லை.
அச்சச்சன் அருகே நின்று அவர் சொல்வதை பொறுமையுடன் கேட்டு செய்யும் ஜெயனை மிகவும் பிடித்தது. ரத்னவேலிடமும் அவன் இப்படி நடக்க வேண்டும் என்று மனது ஆவல் கொண்டது, ஊர்மிளாவை பொறுத்தவரை அவள் கணவன் அவள் குடும்பத்தினரோடு இணக்கமாக நடக்க வேண்டும், அதுவே அவளின் முதல் எண்ணம்!
பெரியவர்களிடம் மரியாதை நடக்கும் பண்பு, அப்பாவிடமும் தம்பியிடமும் அவன் காட்டும் குறும்பு, தன்னிடம் காட்டும் பிரியத்தின் பக்கம் என்று ஜெய்ச்சந்திரனை ஊர்மிளாவின் உள்ளம் ஆராய்ந்தது.
தன்னை காதலிக்கிறேன் என்றபோதிலும் அவன் பார்வையோ, பேச்சோ எல்லை மீறியது இல்லை. எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை, உண்மையில் இயல்பான நட்பை தாண்டி அவன் எல்லையைக் கடக்கவே இல்லை. அதெல்லாம் ஜெயனுக்கு வரவுமில்லை.
ஜெய்ச்சந்திரனுக்குக் காதலிக்க நேரமில்லை! இருந்தும் அவன் பிரியத்தின் மொழியை அவன் பார்வை சொல்லிவிடும், இவளை கண்டாலே அவன் கண்கள் ஒளிர்வதை ஊர்மிளாவும் இந்த நான்கு நாட்களில் கண்டாள்.
வினயன் புகைப்படம் எடுத்துத் தர உடனே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாட்ஸப்பில் அனுப்பினாள். பிரபாகரனுக்கு அழைத்து,
“அப்பா! நான் எப்படியிருக்கேன், நீங்க வாங்கி கொடுத்த சேரீ செமயா இருக்குப்பா, ஐ லவ் இட்” என்று உற்சாகமாக ஊர்மிளா பேச, வாட்ஸப்பில் வந்த அவளின் படத்தைப் பார்த்த பிரபாகரனுக்கு நெகிழ்வாய் ஒரு உணர்வு.
“எவ்வளவு சீக்கிரம் வளர்ந்துட்ட டா ஊர்மி?” என்று நெகிழ்ந்த குரலில் பிரபாகரன் மகளிடம் கேட்க, அவளோ சிரிப்போடு
“ரொம்ப பண்ணாதீங்க பா, முதல்ல தாத்தா கிட்ட காட்டுங்க. அவர் ஃப்ரீனா போன் கொடுங்க” என்று ஆர்வமாகக் கேட்டாள். சின்ன வயதிலிருந்து புதிய உடை அணிந்தால் வீடெங்கும் சுற்றி தாத்தாவில் தொடங்கி அவள் சின்ன அண்ணன் விஷால் வரை காட்டி மகிழ்வது ஊர்மிளாவின் வழக்கம். அது பிரபாகரனுக்கும் புரிய,
“அவர் ரூம்ல இருக்கார், நான் காட்டிட்டு கூப்பிடுறேன். நீ நல்லா எஞ்சாய் பண்ணு, நேரத்துக்கு சாப்பிடணும்.” என்று பிரபாகரன் வைத்தவர் அப்பாவின் அறைக்குச் சென்றார்.
“அப்பா! ஊர்மி உங்ககிட்ட காட்ட சொன்னா” என்று மகளின் புகைப்படத்தைக் காட்ட
“அட! நம்ம காமாட்சி எவ்வளவு வளர்ந்துட்டா, அவ புடவை கட்டி ரொம்ப நாளாச்சு. இந்த ஃபோட்டோவை தேசிகனுக்கு அனுப்பி விடுடா. அவன் ராஜாவுக்கு அனுப்புவான். நான் நல்லாயிருக்கும்போதே ஊர்மிக்கு கல்யாண செஞ்சிடணும்டா, இன்னும் இருபது நாள்ல தேசிகன் பேசி முடிச்சிடலாம் சொல்லிட்டான்” என்றார் பேத்தியின் திருமணம் காணும் ஆசையில்.
அங்கே அச்சுதனும் ஊர்மிளாவையே பார்த்தார். அவரின் தம்பி முறையில் உள்ளவர், “ராஜீவன் இரண்டாவது பொண்ணு அப்படியே நம்ம பெரியம்மா மாதிரி இருக்கா இல்லை?” என்று மலையாளத்தில் கேட்டு போக, அச்சுதனுக்கு அதுவே மனதில் ஓடியது. ஊர்மிளா பிந்துவுடன் இவ்வளவு நேரம் இருக்க, அவர் ராஜீவனுக்கு இரண்டு மகள்கள் என்று நினைத்தார்.
பிந்துவும் விஜயனும் உறவினர்களோடு புகைப்படம் எடுக்க, அச்சுதன் கீழே அமர்ந்திருந்தார். அவர் தம்பி இப்படி சொல்லிவிட்டு செல்ல, ஏற்கனவே ஊர்மிளாவை பார்க்கும்போதெல்லாம் அவருக்கு அந்த முகம் மிகவும் தெரிந்ததாய் தோன்றும்.
இதில் ராஜீவன் வேறு மகள் தனியாக இருக்கிறாள் என்று அவளோடு வந்து உட்கார்ந்து கொள்ள, மகனுக்கு அந்த பெண் மீது எப்படி பாசம் என்று யோசித்தார். பிந்துவோடு ராஜீவன் பேசுவதற்கும் ஊர்மிளாவிடம் பேசுவதற்குமான வேறுபாட்டினை அச்சுதன் நன்றாக உணர்ந்தார். அச்சுதன் மனதில் கேள்விகள், குழப்பங்கள்!
**************
விஜயன் திருமணம் முடிந்த அடுத்த நாள் உத்ராடம், திருவோணத்தின் முந்தையை நாள். ஜெயனுக்கு சூர்ய நெல்லியில் அன்று முக்கிய வேலை இருக்க, காலையில் சென்று மதியம் திரும்பி விட நினைத்தான். பாலா, ராஜீவன் இருவரும் அரக்க பறம்பில் சென்றுவிட்டனர். இவளுக்கு அங்கு போக பெரிதாக விருப்பமில்லை. வினயனும் அங்கு செல்ல ஆயத்தமாக, ஜெயனோடு சூர்ய நெல்லி வருவதாக சொல்ல வினயன் உடனே
“ஜெயேட்டா! அடிபொலி” என்று கிண்டலடிக்க
“போடா மோனே!” என்று தலைக்கோதினான் ஜெய். அவனுக்கு ஊர்மிளா அவனோடு வருவதில் அலாதி மகிழ்ச்சி.
அவர்கள் இருவரும் சூர்ய நெல்லி செல்ல, அமைதியான பயணம். அங்கு சென்று ஜெய் அவன் சந்திக்க வேண்டிய நபரை சந்தித்த பின், அவளோடு எஸ்டேட் பக்கம் போனான். ஜீப்பை கேம்ப் சைட் அருகே நிறுத்தியவன்,
“வா உனக்கு ஒரு அழகான இடம் காட்டுறேன்” என்றவன் முன்னே செல்ல, ஊர்மிளா அவனை பின்தொடர்ந்தாள். நேற்றிரவு பெய்த சிறுமழையின் ஈரம் மண்ணில் இருக்க, காற்றிலும் குளுமை!
“இது என்ன செடி?” என்று போகும்வழியில் இருந்த செடியைப் பார்த்து ஊர்மிளா கேட்க
“ஏலக்காய்! கொஞ்ச மாசத்தில ஏலக்காய் நல்லா வளர்ந்திடும். இங்க சும்மா கொஞ்சம் இருக்கு, பக்கத்து எஸ்டேட் முழுக்க ஏலக்காய் போட்டிருக்காங்க” என்றபடி ஏலக்காய் தோட்டத்தின் இடப்பக்கம் நடந்தான். சுற்றிலும் தேயிலை தோட்டம்.
“எப்படி பறிப்பாங்க, அவ்வளவு உயரத்துல?” ஊர்மிளா ஆர்வமாகக் கேட்டாள்.
“அதெல்லாம் ப்ராக்டீஸ், இங்க கம்மி! பக்கத்துல கண்ணன் தேவன், லாக் ஹார்ட் எஸ்டேட் எல்லாம் இருக்கு. அங்க நிறைய பேர் வேலை செய்வாங்க, மலை மேல குவார்ட்ர்ஸ் இருக்கும்”
“சகதியா இருக்கும், பார்த்து வா ஊர்மி”
“எங்க அழைச்சிட்டு போறாங்க, பக்கம் பக்கம் சொல்லி அன்னிக்கு மாதிரி மலை ஏற விடாதீங்க”
பேசியபடி நடந்தவள் அப்போதுதான் அந்த சத்தம் கவனித்தாள். மிக மிக சிறிய அருவியின் சத்தம். தண்ணீர் அத்தனை பசுமையாக, குளுமையாக அருவியிலிருந்து கொட்டியது.
“இது டூரிஸ்ட் ஸ்பாட் எல்லாமில்லை. ஊர்க்காரங்களுக்கு மட்டும் தெரியும், ரொம்ப சின்னதுதானே? பட் அமைதியா அழகா இருக்கும். நீ உன் ஷூவை கழட்டிட்டு கால் வச்சு பாரு” என்றதும் அருவி அருகே இருந்த கரும்பாறை ஓரத்தில் ஷூ சாக்ஸை கழட்டியவள், ஆர்வமாக அருவி பக்கம் போக, தலை எல்லாம் நனைக்காது, அதுவும் நீர் வரத்து குறைவாக இருக்க, காலை நனைத்தாள்.
ஊசியாய்க் குத்தியது நீர், ஜில்லென்று அவளை ஸ்பரிசத்தது. மழை, கடல், அருவி என்று நீரின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறமல்லவா? வெவ்வெறு குணம்! சிலருக்கு மழை, சிலருக்குக் கடல், சிலருக்கு அருவி என்று ரசனை மாறினாலும் அது தண்ணீர் அல்லவா? ஊர்மிளாவுக்கு மழை, கடல், அருவி என்று எல்லாம் பிடிக்கும். அதுவும் எதிர்ப்பாராமல் இங்கு வந்திருக்க, அந்த கரும்பாறையில் உட்கார்ந்தவள் சந்தோஷமாக கால்களை நனைத்து ஆட, வெயிலோடு சேர்ந்து மின்னியது ஊர்மிளாவின் முகம்.
“தேவிகுளத்தில் பெரிய அருவி இருக்கு, உங்க அக்காவோடது” என்று ஜெய் அவள் ஆர்ப்பரிப்பை ரசித்து உள்ளத்தில் உள்வாங்கி ரசனையோடு சொல்ல
“எனக்கு அக்காவா?” என்று விழியுயர்த்தி பார்த்தாள் ஊர்மிளா.
“ஊர்மிளாவோட அக்கா சீதாதேவி அல்லே?” என்று ஜெய் கேட்க
“ஓஹ்! ராமாயணம்” என்று ஊர்மிளா இழுக்க
“அச்சம்மா சின்ன வயசுல ராமாயணம், மகாபாரதம், மகாபலி சக்கரவர்த்தி கதைனு எல்லாம் சொல்லுவாங்க. அவங்களால தெரியும், ஊர்மிளான்னா என்ன தெரியுமா?” என்று கேட்டவன்