“என்னப்பா எதுவும் பேசாம வரீங்க?” என்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஊர்மிளா பிரபாகரனை கேட்க, அவரோ மகளை அரை நொடி திரும்பிப் பார்த்துவிட்டு சாலையில் கவனம் செலுத்தினார்.
காலையில் அம்மாவும் பெரியம்மாவும் கோயில் சென்றுவிட, தாத்தாவும் பெரியப்பாவும் அலுவலகம் போக பிரபாகரன் பரிசோதனைக்காக மகளை மருத்துவமனை அழைத்து வந்தார். ஆனால் அவளிடம் பேசவில்லை.
பிரதான சாலையிலிருந்து வண்டியைத் திருப்பி, அவர்களின் தோட்டம் செல்லும் வழியில் செலுத்தினார்.
தோட்டம் வரவும் வண்டியைத் நிறுத்தியவர் மகளிடம்
“ஊர்மி! நான் உனக்கு நல்லா அப்பாவா இருக்கேனா?” என்று பிரபாகரன் கேட்க, ஊர்மிளாவுக்கு அந்த கேள்வியே பிடிக்கவில்லை.
“என்னப்பா இதெல்லாம்? நீங்கதான் பெஸ்ட் அப்பா” என்று அவள் வேகமாக சொல்ல, அவரோ லேசாக சிரித்து
“நீ என்னை அப்படி ஃபீல் பண்ண வைக்கலயே” என்றார். ஊர்மிளா அதிர்வோடு முகம் சுருக்கி அவரை பார்க்க, காரை விட்டு இறங்கி அந்த தென்னந்தோப்புக்குள் நடந்தார். ஊர்மிளாவும் அப்பாவோடு நடக்க
“உனக்கு ஜெய்யைப் பிடிச்சிருக்குனு எனக்கு மெசெஜ் அனுப்பின அன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணேன் ஊர்மி, ஒரு சின்ன அதிர்ச்சி லவ் பண்றேனு சொல்லவும், மத்தபடி என் பொண்ணு அவ மனசை எங்கிட்ட சொல்ற சுதந்திரத்தை நான் கொடுத்திருக்கேனு ரொம்ப பெருமையா ஃபீல் பண்ணினேன். நீ சொன்ன மாதிரி அந்த மெசெஜ் கேட்டு நான் தூங்கல, அதுக்குக் காரணம் சந்தோஷம், பெருமை! இப்படி…” என்று கைகளை விரித்தவர் முகத்தில் இன்னும் அந்த நாளின் பெருமை மிச்சமிருந்தது.
“நீ கேட்டியே உன் அம்மாவை பார்த்தப்ப எப்படி ஃபீல் ஆச்சுனு? எனக்கு ஒன்னுமே ஃபீல் ஆகல! மிலிட்டரிகாரனுக்குப் பொண்ணு கொடுத்தா போதும்னு இருந்தேன், இதுல உங்கம்மாவோட அப்பா கூட மேஜர், சரி அப்பா மேஜர் அந்த பொண்ணு நம்மை புரிஞ்சிப்பா நினைச்சேன்! அவளுக்கோ ஆர்மிமேன் பிடிக்காது, என்னோட முதல் காதல், அதிகமான காதல் எல்லாமே ஆர்மி! நம்ம நாட்டுக்காக செய்றோம், ஆர்மில இருக்க த்ரில், அட்வெஞ்சர் அதுவொரு தனி போதை! அந்த வயசுல அது எனக்கு ரொம்ப பிடிச்சது! இதெல்லாம் மீறி உன் அம்மா எனக்கு எவ்வளவு முக்கியம்னு ஒரு நாள் நல்லா புரிஞ்சிக்கிட்டேன்” என்றபடி தோப்பில் போட்டிருக்கும் நாற்காலியில் உட்கார்ந்தார். ஊர்மிளா அப்பாவின் பக்கம் உட்கார,
“தினமும் உலகத்தில் நிறைய விஷயம் நடக்குது, அது நம்மை பாதிக்காது! நமக்கு நெருக்கமானவங்களுக்கு நடக்கிறப்பதான் பெருசா ஒரு பயம் வரும்! வாழ்க்கையை இன்னும் நல்லா வாழணும் தோணும்!” என்றவர் கைகளை தலைக்குக் கொடுத்து சாய்ந்தபடி, வானத்தை பார்த்து கடந்த காலத்தை பகிர்ந்தார்.
“ராஜீவனை என்.டி.ஏல சேர்ந்த அப்புறம் எனக்குத் தெரியும், நார்த் ஈஸ்ட்ல இரண்டு பேருக்கும் ஒன்னா போஸ்டிங், ஸேம் பட்டாலியன்(battalion) நாங்க, குவார்டர்ஸ்ல பக்கம். ப்ளஸியோட பார்வை புரிஞ்சே எல்லாம் செய்வான் அந்த ராஸ்கல்!” என்றவர் முகத்தில் செல்ல கோபம். ராஜீவனை பற்றி பேச ஊர்மிளாவின் உள்ளத்தில் கனமாய் ஒரு உணர்வு, அவரின் காதல் கண்ணீர் எல்லாம் உலா போக ஊர்மிளாவுக்குக் கண்கள் கலங்கின. பிரபாகரன் அதை கவனிக்கவில்லை.
“எவண்டா இவன்’னு கடுப்பா இருக்கும், எங்களுக்கு கல்யாணமாகி நாலு வருஷமானாலும் அப்படி தாங்கினதில்லை, அவங்க இரண்டு பேருக்கும் அதுக்கு முன்னாடியே ஏழெட்டு வருஷ காதல்! உங்கம்மா எங்கிட்ட ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணுவா! அப்பா சொதப்பிடுவேன்! ஏற்கனவே இரண்டு அபார்ஷன், மறுபடியும் குழந்தை இறந்து போச்சு, உங்கம்மா நொந்துட்டா! என் அம்மா இந்த விஷயத்துல எல்லாம் ரொம்ப பேசுவாங்க, அப்போ குழந்தை இறந்ததை சொல்லல. குழந்தையில்லாம போச்சுன்றது மட்டுமே பெரிய கஷ்டமா வலியா இருந்தது, அம்மாவா உன் அம்மா எப்படி ஃபீல் பண்ணுவா நான் நினைக்கல”
“அப்போதான் குழந்தையோட வருவானு நினைச்ச ப்ள்ஸீ போய்ட்டா, கூட நின்ன எனக்கே தாங்க முடியாத அதிர்ச்சி! அரை மணி நேரம் முன்னாடி சிரிச்சுட்டு பிரபாண்ணா’னு பேசின பொண்ணு இல்லை! நாங்க ஆர்மிமென், இறப்பை எதிர்ப்பார்த்து தைரியமா போறவங்க, பட் ப்ளஸீ போய் ராஜீவன் தனியா நின்னது என்னை ரொம்ப பாதிச்சது, ஒரு வாரம் முன்னாடி குழந்தையை இழந்தது பெருசா தெரிஞ்சது, அந்த நாள் எனக்கு ஜமுனா இருந்தா போதும்! வேறெதுவும் வேண்டாம் தோணிச்சு!” என்றபடி வாஞ்சையான உணர்வோடு மகளை பார்த்தார். ஊர்மிளா பிரித்தறியா ஒரு பாவனையில் அவரை பார்க்க
“அந்த நிமிஷம் கடவுள் குழந்தையைப் பறிச்சிட்டாலும் ஜமுனாவை எனக்குக் கொடுத்தார்னு தோணிச்சு. ஜமுனா மேல அந்த நிமிஷம் அப்படியொரு காதல்! அவ கிட்ட கூட சொன்னதில்லை, ஒருமாதிரி மனசெல்லாம் அவ மட்டுமிருந்தா! சந்தோஷமாவும் பயமாவும் ஒரு டிஃப்ரண்ட் ஃபீல், அவ எப்பவும் இருக்கணும்னு” என்றதும் ஊர்மிளாவுக்கு ஜெய்யை தவிர அந்த நொடி வேறெதுவும் எண்ணமில்லை. இதே உணர்வைத்தான் அவளுமே ஓண இரவில் உணர்ந்தாள், அவனோடு பிரியமாக பிரியாமல் ஒரு வாழ்க்கை!
“அவ இங்க வந்தும் டீரிட்மெண்ட் எடுக்கிறேனு சொன்னா, ஆனா எனக்குப் பயம். அதுவரைக்கும் எனக்குப் பயமே கிடையாது, என் அப்பா அம்மா ஆர்மி நினைச்சு பயந்தப்போ கூட நான் அவங்களை மதிச்சதில்லை! அவளை கன்வின்ஸ் பண்ணி, நீ மட்டும் போதும்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்” என்றவர் அதுவரை இருந்த பாவனை மாறி,
“என் வாழ்க்கையில் எனக்குப் பிடிச்சதை மத்தவங்களுக்குப் பிடிக்கலனாலும் நான் செஞ்சுருக்கேன், என் விருப்பத்துக்காக சண்டை போட்டிருக்கேன், என் பொண்ணு?” என்று கேள்வியாக ஊர்மிளாவை பார்த்தார்.
“இப்போ தாத்தா கிட்ட ஜெய்க்காக நான் சண்டை போடணும் சொல்றீங்களாப்பா?” ஊர்மிளாவின் குரலில் அடக்கப்பட்ட கோபம்.
“ஜெய்க்காக இல்லை! உனக்காக! அவ்வளவு ஆசையா எனக்கு அவனை பிடிச்சிருக்குனு எங்கிட்ட சொன்ன பொண்ணு நேத்து தாத்தா சொன்னா சரின்ற? அப்போ ராஜனை கட்டிக்க சம்மதமா?” பிரபாகரன் கோபத்தை அடக்காது கேட்டார்.
“அப்பா! தாத்தாவுக்கு ஜெய் பிடிக்கலன்னா எனக்கு ஜெய் வேண்டாம் சொன்னேன், பட் ஜெய் வேண்டாம்னா யாருமே வேண்டாம். அதைவிட எனக்கு ஜெய் மேல கோபம், அதை உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்க கூட என்னை புரிஞ்சிக்கலலப்பா?” என்று ஊர்மிளா கோபத்தோடு நாற்காலியில் இருந்து எழ, அவளின் கைப்பிடித்து அமர வைத்தவர் அவள் தலையில் கொட்டினார்.
ஊர்மிளா வலியில் தலையைத் தேய்க்க, “என்ன புரிஞ்சிக்கல? உனக்கு ஜெய்யைப் பிடிச்சா யார் என்ன சொன்னாலும் அப்பா உனக்காக நிற்க மாட்டேனா ஊர்மி? தாத்தா வேண்டாம்னா வேண்டாம் சொல்றது தப்பில்லையா? இது ஜெய்யை ஹர்ட் பண்ணாதா? உனக்கு ஜெய் மேல கோவம்னா பேசி சரி பண்ணு”
“எனக்கு ஒன்னே ஒன்னுதான் டா ஊர்மி! உனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை உனக்கு அமையணும்! அது ஜெய் ராஜா யாரா இருந்தாலும் எனக்கு ஓகே! தாத்தாவுக்குப் பிடிக்கலனு உன் மனசை மாத்திப்பியா? உனக்காக அவர் மனசை மாத்திக்கட்டும்!” என்றார் எரிச்சலாக. ஜெய்யை ரத்னவேல் நடத்திய விதம் பிரபாகரனுக்கு உவப்பாக இல்லை.
“ஏன் பேசுனா என்ன? உன் தாத்தாவுக்கு நான் எப்பவும் சொல் பேச்சு கேட்காத புள்ள தானே? அண்ட் ரத்னவேலை டென்ஷன் பண்றானே அந்த பையன் அதனால எனக்குப் பிடிச்சிருக்கு” என்று சிரித்த பிரபா மகள் முறைக்கவும்
“ஜெய் ஏன் ஸ்பெஷல் தெரியுமா? என் பொண்ணுக்கு அவனை பிடிச்சிருக்கு! அது மட்டுமில்ல, உன்னை பிடிச்சிருக்குன்னு உன் பின்னாடி சுத்தி டிஸ்டர்ப் பண்ணியிருந்தா செவுல்ல விட்டிருப்பேன், அவன் அப்பாவோடு வந்து பொண்ணு கேட்கிறான். பெரியவங்களை மதிச்சு பேசுறான், அதே நேரம் அவன் விருப்பத்துல ஸ்ட்ராங்கா நிக்கிறான். அப்பாவை இம்ப்ர்ஸ் பண்ணிட்டான் டா! தாத்தா அவ்வளவு பேசியும் எங்கேயும் அவன் மரியாதையில்லாம நடக்கல. ரொம்ப ஹானஸ்டா நடக்கிறான். அண்ட் நான் அவனை பத்தி விசாரிச்சு ரிப்போர்ட் பண்ண சொல்லியிருந்தேன், பையன் பக்கா!” என்றார் பிரபாகரன்.
“அப்பா?!” அப்பா இவ்வளவு செய்வார் என்று யோசிக்கவில்லை.
“இருந்தாலும் எம்.எல்.ஏ கேரக்டர எனக்குப் புரிஞ்சிக்க முடியல, சர்வேஷ் உன்னை வேண்டாம்னு சொன்னா என் பேத்தியை வேண்டாம்னு சொல்லுவியானு அவனை பேசினார். ஜெய் உங்க பேத்தி வேணும்னா அவனையும் பேசுறார், ஷப்பா!” என்று தன் விரல்களுக்கு நெட்டி முறித்தபடி எழுந்தார்.
அப்பாவுக்கு ஜெய்யைப் பிடித்திருக்கிறது என்பது ஊர்மிளாவுக்கு மற்ற நாளாக இருந்தால் உற்சாகம் கொடுத்திருக்கும், இப்போதோ அதனை குறித்து மகிழ முடியவில்லை. அவளுக்கே ஜெய்யோடு என் வாழ்க்கை எப்படியிருக்கும் என்ற பயம்? அவன் அச்சச்சனை தான் பார்ப்பான் என்ற கோபம். இதில் தாத்தாவுக்கு வேறு பிடிக்கவில்லை.
ஊர்மிளா அப்பாவின் பேச்சை அசை போட்டபடி அமைதியாக இருக்க, “நீ கொஞ்ச நேரம் இங்கயே உட்காருடா, நான் தோப்பை சுத்திட்டு வரேன்” என்று தோப்பின் உள்ளே போனார்.
ஊர்மிளா நாற்காலியில் சாய்ந்து நீல ஆகாயத்தை பார்த்தபடி கண்மூடினாள். மிதமான வெயிலின் இதம் தேகம் தொட்டது, குளிரும் காய்ச்சலும் படுத்தியவளுக்கு ஊசியாய்க் குத்தாத காஞ்சி காற்றின் வாஞ்சை பிடித்தது. இருபது நிமிடங்கள் பிரபாகரன் சுத்தி விட்டு வர, ஊர்மிளாவும் அங்கேயே நடந்தாள்.