பிரபாகரன் மகள் எதாவது யோசித்திருப்பாள் என்று வர, அவளோ பேசாமல் இருக்க
“நம்ம ஒருத்தவங்களுக்குப் பிடிச்சவங்களா இருக்கிறதை விட நம்மை அவங்க புரிஞ்சிக்கணும். தாத்தாவுக்காக நீ இவ்வளவு யோசிக்கிற, தாத்தா உனக்காக யோசிக்க மாட்டாரா? ஜெய்யை பிடிச்சிருக்கானு உன்னை ஒரு வார்த்தை கேட்காம அவர் இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறார். நீ தேவையில்லாதது யோசிக்கிற ஊர்மி! விஷ்ணு அவனுக்குப் பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணினா அவனை ஒதுக்கினாரா? அப்போ நீயும் அப்படித்தானே? பேத்தி ஆசையைத் தெரிஞ்சிக்கல, அப்புறம் என்ன பெரிய தாத்தா?” பிரபாகரன் மகளை சீண்டிவிட, ஊர்மிளா சீறினாள்.
“சான்ஸ் கிடைச்சதுனு தாத்தாவ பேசிட்டு இருக்கப்பா நீ! என் தாத்தா எனக்காக யோசிப்பார். நான்.. நானே அவர்கிட்ட பேசிக்கிறேன், அப்ப தெரியும் தாத்தா பத்தி” என்று ரோஷமாக பேச
“பார்க்கிறேன் நான்” என்றார் கிண்டலாக.
இருவரும் மீண்டும் வீடு வர, வரும்வழியில் மிகவும் பிரபலமான உணவகத்தில் நிறுத்தினார்.
“காலையில சீக்கிரம் சாப்பிட்டது, வா காஃபி ஸ்னாக்ஸ் எதாச்சும் சாப்பிட்டு போகலாம்” என்று அவளோடு உணவகத்தின் ஏசி பகுதிக்கு செல்ல, அப்போது உண்டு முடித்து கை கழுவி நேரே சென்ற ஜெய்ச்சந்திரன் பிரபாகரன் கண்ணில் பட்டான்.
“ஜெய்” என்று அவர் அழைக்க, அந்த குரலில் திரும்பியவன் பிரபாகரனை எதிர்ப்பார்க்கவில்லை. அவரிடம் செல்ல
“என்ன மணி பதினொன்னு மேல ஆகுது, இப்போதான் சாப்பிடுறீங்களா?” என்று கேட்க
“லேட்டாச்சு மாமா” என்றவனிடம்
“இங்க உட்காருங்க ஜெய், நானும் ஊர்மியும் காஃபி குடிக்கலாம் வந்தோம்” என்றதும் அவர் பின்னே இருக்கையில் உட்கார்ந்திருந்த ஊர்மிளா கண்ணில் பட்டாள். பிரபாகரனும் தள்ளி நிற்க, ஊர்மிளாவின் பார்வை ஜெய்யைத் தொட்டது.
பிரபாகரன், “உனக்குக் காஃபி மட்டும்தான், அதுக்கு ஏன் மெனுவை பார்க்கிற” என்று அதட்டி மெனுவை வாங்கினார். ஜெய்யும் ஊர்மிளா பேசாமல் இருக்க
“நீங்க பேசிட்டு இருங்க, நான் கால் பேசிட்டு வரேன்” என்று எழுந்துபோனார். அப்பா நகரவும்
“நீங்க ஊருக்குப் போகலையா ஜெய்?” என்று ஊர்மிளா கேட்க
“உன் தாத்தாவை சம்மதிக்க வைப்பேனு உனக்குப் ப்ராமிஸ் பண்ணியிருக்கேனே” என்று ஜெய் சொல்ல
“ஏன் ஜெய் இப்படி பண்றீங்க? என்ன அவசரம் உங்களுக்கு? நேத்து பேசக்கூட விடாம கால் கட் பண்றீங்க? அப்படி என்ன திமிர்? இந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் தான் தாத்தாவுக்குப் பிடிக்காம போயிருக்கும்” ஊர்மிளா கோபத்தில் திட்டினாள்.
“என் காதல் மேல எனக்கே நம்பிக்கையில்லன்னா எப்படி? என்ன அவசரமா? உனக்கு முடியலன்னு உங்கப்பா சொன்னார், எனக்கு கஷ்டமாயிருந்தது பார்க்க வந்தேன், நேர்ல பார்த்துட்டு உண்மை மறைச்சு பேச எனக்கு விருப்பமில்லை, அதான் என் அப்பா நம்ம விஷயம் பேசினார். அதெல்லாம் தப்பில்லை!” என்றான் இயல்பாக.
“என்னை அவசரம் சொல்றியே, உன் தாத்தா உன்னை அவர் ப்ரண்ட் பேரனுக்குப் பேசியிருக்காராமே? அதெல்லாம் பார்த்துட்டு நான் சும்மா இருக்கணுமா?” ஜெய்யும் இப்போது பல்லைக் கடித்தான். அவனுக்கு அவ்வளவு கோபம்.
“ஓஹ், நான் ராஜா மாமாவை கல்யாணம் பண்ணிடுவேனு தான் இங்கயே தாத்தாவ கன்வின்ஸ் பண்ண சுத்துறீங்களா?” ஊர்மிளாவும் சீறினாள்.
ஜெய்யோ அதற்கு நேர்மாறாக கிண்டலாக அவளை பார்த்தான்.
“ராஜா மாமா..” என்று இழுத்தவன் “நீ என்னை கல்யாணம் பண்ணுவன்ற நம்பிக்கை விட, என்னை தவிர யாரையும் பண்ண மாட்டன்ற நம்பிக்கை எனக்கு ரொம்ப அதிகம் ஊர்மி! நம்பிக்கைன்றதை விட உண்மை!” என்றான் அழுத்தமாக.
“உன் தாத்தா இப்படி ஒரு முடிவெடுத்திருக்கார், நீ அவர்கிட்ட நம்மை பத்தி பேசல. எங்கிட்டவும் சொல்லல” ஜெய் பேசிக்கொண்டே போக
“என்ன சொல்ல சொல்றீங்க ஜெய்? அங்க இருந்து வந்தன்னைக்கே பெரியப்பா எங்கிட்ட இந்த விஷயம் சொல்றாங்க, அடுத்த நாள் எனக்கு முடியல. அப்பவும் உங்களுக்கு நான் இதை சொல்லலனு தான் கவலை, ஒருத்தியை அழ வச்சு அனுப்பினோமேனு கவலையில்லை. உங்க காதல், உங்க அச்சச்சன், உங்க ஃபீலிங் இதான் முக்கியம்?” என்று ஊர்மிளா அவனிடம் சண்டையிட
“ஏடி! எனக்கு உன்னை பத்தி கவலையில்லையா? உனக்கு முடியலனதும் உடனே கிளம்பி வந்தா என்னை பேசுற? நான் உன்னை அழ வச்சன்னா? நீதான் என்னை பேசின ஊர்மிளா” என்ற ஜெய்யும் இறுக்கமானான்.
ஜெய்யால் ஊர்மிளா பேசியதை மறக்க முடியவில்லை. குடும்பத்தை பிரிக்கிறேன் என்ற பேச்சு அத்தனை வதைத்தது, தன்னிடம் ஒரு வார்த்தை பேசாது ஊரிலிருந்து வந்துவிட்டு தன்னை பேசுகிறாளே என்ற எரிச்சல்.
“அச்சச்சனை நீ பேசினா நான் பேசாம நிக்கணுமா? உன் தாத்தா நேத்து என்னை மட்டம் தட்டிப் பேசினப்போ கூட, பெரியவங்க ஊர்மி தாத்தான்னு நான் பொறுமையா இருந்தேன், நீ அச்சச்சனுக்கு அந்த மரியாதை கூட கொடுக்கல!” ஜெய் அவள் கண்கள் பார்த்து குற்றம் சொல்ல ஊர்மிளாவுக்கு உள்ளம் அடைத்தது. அவள் உள்ளத்தின் உயவினை(உயவு- துன்பம், suffering) சொல்லாத கனம் கண்ணீராக மாறியது.
என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணம் ஊர்மிளாவை கொடுமையாக வதைத்தது. ஊர்மிளா கைகளைக் கோர்த்துக்கொண்டு கண்ணீர் நிறைந்த விழிகளோடு அவனை பார்த்தாள். அந்த பரிபாஷை அவனுக்கு புரியவில்லை.
“நீங்க உண்மைனு நம்புற ஒன்னு ஒரு நாள் பொய்னு தெரியறப்ப இருக்க வலியெல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது ஜெய்..” என்றவள் கண்ணீரைத் துடைத்து அழுகைக்கு அணைபோட்டாலும், தொண்டை வலித்தது.
“உங்க பூர்வீகம் இங்க இருந்தாலும் நான் தேவிகுளத்துக்காரனு பெருமையா சொல்லுவீங்க தானே நீங்க? ஒரு பாட்டு விஷயம்னாலும் நான் சின்ன வயசுல கேட்டது, என்னோட ஊரு, என் உணர்வுனு சொன்ன ஜெய் என்னை அவர் அச்சச்சனோட பேத்தினு சொல்வார்” என்ற ஊர்மி
“எனக்கும் அப்படித்தானே? இல்லை பொண்ணுன்னா அதையெல்லாம் நினைக்கக் கூடாதா? இது என் ஊர் ஜெய், என் தாத்தா ஆச்சி, அப்பா…அம்மா…” என்றபோது வந்த அழுகையை உதடு கடித்து அடக்க, மூச்சு வாங்கியது ஊர்மிளாவுக்கு. ஜெய் அவள் தவிப்பது பொறுக்காது, அவள் கரம் பற்றி
“ஊர்மி ரிலாக்ஸ்!” என்று சொல்ல, அவன் கரத்தை விலக்கியவள்
“இந்த காமாட்சி, எங்க வரதராஜப்பெருமாள்… என் வீடு.. என் ஊரு இது எதுவும் என்னோடது இல்லைனு ஒரு நாள் எங்கிட்ட சொன்னப்போ எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா ஜெய்? இப்போ வரைக்கும் என்னால அந்த உண்மையை ஏத்துக்க முடியல, எங்க தாத்தா என்னை ரொம்ப பெருமையா வளர்த்துட்டார்! என்னால மாறவே முடியாது ஜெய்! என்னோட உணர்வு, உயிர் எல்லாம் இங்கதான், இதெல்லாம் உன்னோடது இல்லைனு உண்மையை யார் சொன்னாலும் எனக்குப் பிடிக்கல, என் தாத்தாவை உங்க அச்சச்சன் யாரோ சொல்றார் ஜெய். எனக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தது! அவர்தான் எனக்கு யாரோ?!”
“எங்க குடும்பம் ஒன்னும் ஸ்பெஷல் இல்லை, சண்டை, கோபம் எல்லாம் இருக்க சாதாரண ஃபேமிலி! பட் எத்தனை சண்டை போட்டாலும் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டோம், சர்வேஷ் மாமா என்னை பேசிட்டாலும் இப்ப வரை சாரி கேக்கிறார். எல்லாரையும் விடுங்க, நான் அவங்க ரத்தமில்லனு தெரிஞ்ச பின்னாடியும் எங்க வீட்ல எதுவுமே மாறல ஜெய்!”
“உங்களை பாலா மாமா பையன் இல்ல, உங்க ஊர் தேவிகுளம் இல்லை, வினய் உங்க தம்பி இல்லைனு சொன்னா எப்படி இருக்கும் ஜெய்? உங்களால கண்டிப்பா இதை கற்பனை பண்ண கூட முடியாது. எப்படி முடியும்? அது நம்ம உணர்வோட கலந்த உண்மை! நீங்க என்னை வேற மாதிரி அடையாளப்படுத்தறப்ப என்னால தாங்க முடியல ஜெய்! உங்க அச்சச்சன் கிட்ட ஏன் ஜெய் உண்மை சொன்னீங்க?” என்று ஊர்மிளா தாங்காது கேட்க, ஜெய்ச்சந்திரனுக்கு சில நிமிடங்கள் பேச்சில்லை.
“என்னால இதையெல்லாம் யார் கிட்ட ஜெய் ஷேர் பண்ண முடியும்? அப்பா அம்மாகிட்ட பேச முடியுமா? இல்லை உங்க ராஜீவன் மாமா கிட்டயா? அவரை பத்தி கூட உங்ககிட்ட தானே நான் பேசியிருக்கேன்? என்னை லவ் பண்றேன் சொல்றீங்க? ஆனா என்னை உங்க இஷ்டப்படி நினைச்சிக்கீறீங்க? உங்க அச்சச்சனுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணீங்க? அவர் அப்படி பேசினதால நான் எப்படி ஃபீல் பண்ணினேன் நீங்க யோசிக்கல. ஏன் வினய் என்னை விடறேன் வந்தப்போ கூட நீங்க எங்கிட்ட பேசல. இப்போ உடம்பு சரியில்லனு ஓடி வந்த நீங்க, அப்போ மனசு சரியில்லாம நான் கிளம்பினப்போ பேசவே இல்லை”
“ஒரு செடி கூட அதுக்கு சொந்தமான மண்ணை விட்டுப்போச்சுன்னா வளராது ஜெய், நான்.. நானும் அப்படிதான்.! நீங்க நினைக்கிற ஊர்மிளாவா நான் என்னைக்கும் இருக்க மாட்டேன், என்னை என் குடும்பத்துகிட்ட இருந்து பேச்சுல பிரிச்சா கூட தாங்க மாட்டேன் ஜெய்.” என்றவள் வேகமாக எழுந்து ஓய்வறை சென்றாள்.
ஊர்மிளா சென்ற பின்னும் ஜெய் அசையாது இருந்தான், கற்பனைக்குக் கூட அவனால் பாலச்சந்திரனின் மகன் இல்லை என்று நினைக்க முடியவில்லை. கற்பனை என்ற திக்கில் கூட எண்ணம் போகவில்லை. ஊர்மிளாவின் உணர்வுகள் புரிந்தன, உள்ளத்தின் ஓரத்தில் ஊர்மிளாவை ராஜீவனின் மகளாக அவன் பார்ப்பதும், அதை விட அச்சுதனின் பேத்தியாக பார்ப்பதும் மறுக்க முடியாத உண்மை! அது சில சமயம் பேச்சாய் வெளிப்பட்டிருக்க, ஊர்மிளாவை அது எப்படி காயம் செய்திருக்கும் என்று இப்போது அவள் சொல்லவும் புரிந்தது.
மகளை கொடுத்தது ராஜீவனின் முடிவாக இருக்கலாம், மகனை பிரிந்தது அச்சுதனின் முடிவாக இருக்கலாம்! ஊர்மிளாவை வைத்தே அனைத்து முடிவுகள் என்றாலும், அவளின் வாழ்க்கை இவ்விடத்தில் என்ற நிஜத்தை, ஊர்மிளா பிரபாகரன் ஜமுனாவின் மகள் என்ற உணர்வுக்கு உண்மையை விட அதிக வலிமை என்று ஜெய் உணர்ந்தான்.
மனைவி என்று நினைத்த ஒற்றை பார்வைக்கே அவளை மறக்காது சுற்றுகிறான். அவள் ஊராக, உறவாக இத்தனை வருடம் நினைத்தவை எல்லாம் அவளுடையவை இல்லையென்ற உணர்வு எப்படி தாக்கியிருக்கும் என்று நினைக்க கூட முடியவில்லை. அச்சுதனுக்கு அவன் பிரியப்பட்ட பேரனாக இருக்கலாம், ஊர்மிளாவை பேத்தியாக இரு என்று சொல்ல முடியாது, கூடாது என்ற தெளிவு பிறந்தது.
ஊர்மிளா முகம் கழுவி வந்து உட்கார, ஜெய் அதற்குள் அவளுக்குக் காஃபி சொல்லியிருந்தான். ஊர்மி மறுக்காது அதனை பருக, ஜெய் எதிரே உட்கார்ந்தவன் அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
“ஜெய், என்ன பண்றீங்க?” என்று ஊர்மிளா பதற
“அன்னிக்கு உன்னை சமாதானம் செய்யலனு கோச்சுக்கிட்ட இல்ல, அதான்” என்றவன் அவள் கையைப் பிடித்து
“சாரி ஊர்மி” என்றிட
“கையை விடுங்க ஜெய்! அப்பா வருவாங்க” என்று இழுக்க ஜெய்ச்சந்திரன் அவள் பேச்சை கேட்கவில்லை.
“இப்ப சொல்றேன் ஊர்மி! நீ ஜெய்யோட மனைவினு நான் நம்புறது எவ்வளவு நிஜமோ அதே மாதிரி நீ எப்பவும் ரத்னவேல் தாத்தா பேத்தி, பிரபாகரன் ஜமுனா பொண்ணு! அப்போ என்னால அச்சச்சனை விட்டுக்கொடுக்க முடியல, பின்னே நீ என்னை நம்பணும்”
“சத்தியமா நானா அவர்கிட்ட எதுவும் சொல்லல, எனக்குக் குடும்பம்ன்றது ரொம்ப முக்கியம்! நான் எப்படி உன்னை பிரிக்கணும் நினைப்பேன்?” ஜெய் அன்று நடந்த எல்லாம் சொல்ல ஊர்மிளாவுக்கு என்னவோ அவனிடம் பேசிய பின் ஆசுவாசம்.
“அதான் சாரி கேட்டீங்களே, அங்க போய் உட்காருங்க” என்றவள் அப்பாவுக்கு அழைத்தாள்.
“உங்கப்பா நிஜமா சூப்பர் ஊர்மி! நீ ரொம்ப லக்கி!” என்றதும் ஊர்மிளாவின் முகத்தில் பிரகாசம், பெருமை கூடியது.
“இந்த பாலச்சந்திரனும் ராஜீவனும் மோசம், உன்னை பார்த்தாலோ உன் பக்கத்திலோ நின்னாலே இரண்டு பேரும் முறைப்பாங்க. உங்கப்பா பாரு எப்படி புரிஞ்சு நடந்துகிறார், லவ் மேரேஜா?” என்று ஜெய் ஆர்வமாகக் கேட்க ஊர்மிளா சிரித்தாள். அதற்குள் பிரபாகரன் வந்துவிட, அவர் ஜெய் பக்கம் உட்கார்ந்தார்.
மகளை பார்த்தவர் ஜெய்யைக் காட்டி, “என்னடா கோவம் போச்சா? இந்த பையன் ஓகேவா? இல்லை..” என்று இழுக்க
“ஏன் மாமா?” என்று ஜெய் ஊர்மியைப் பார்த்தபடி கேட்க, அவளுக்குத்தான் அப்பாவையும் அவனையும் பார்க்க முடியவில்லை.
ஜெய்ச்சந்திரனிடம் திரும்பிய பிரபாகரன், “கொஞ்ச நாள் போகட்டும் ஜெய், நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்” என்றபடி பிரபாகரன் எழுந்து அவனுக்குக் கை கொடுத்துவிட்டு, ஹோட்டலின் முன் பகுதிக்குச் சென்று பேசி பாசுந்தி வாங்கினார்.
ஊர்மிளா தன்னருகே நடந்த ஜெய்யிடம்,
“ஜெய்! நேத்து எப்படி அவ்வளவு கான்ஃபிடண்டா தாத்தாவை கன்வின்ஸ் பண்ணுவேன் சொன்னீங்க? நானே என் தாத்தா கிட்ட இன்னும் பேசல” என்று கேட்க, அவனோ
“அதெல்லாம் அவரை கன்வின்ஸ் பண்ணிட்டு சொல்றேன், ரகசியம்” என்றான். அதற்குள் அப்பா ஸ்வீட் வாங்குவது கண்டு
“என்னப்பா ஸ்வீட் வாங்குறீங்க?” என்று கேட்டாள்.
“அது உங்கம்மா நேத்து நைட் உன் விஷயம் கேட்டா, கத்திவிட்டேன். இப்போ அவ ஃபேவரைட் பாசுந்தி வாங்கி கொடுத்து சமாதானம் பண்ணனும்” என்றபடி பில்லுக்குப் பணம் கொடுக்க
“அப்பா! எனக்கும் வாய் கசக்குது, ரசமலாய் வாங்குங்க” என்று கேட்டாள்.
“இப்போதான் ஃபீவர், கோல்ட் எல்லாம் விட்டிருக்கு. இப்போ கிடையாது, உனக்கு வாங்கிக்கொடுத்துட்டு யார் பேச்சு வாங்குறது” என்று பிரபா பேசும்போதே
“ஒன் கேஜி ரசமலாய்” என்ற ஜெய்யின் குரல் அருகே கேட்க, ஊர்மி சிரிப்போடு அப்பாவை பார்த்தாள்.
“ஊர்மி கூட என் மேல கோவமா இருந்தா மாமா, அவ கேட்டு எப்படி இல்லைனு சொல்றது?” என்று ஜெய் கேட்க,
“அடப்பாவி!” என்று சிரித்தாலும் முதல்முறை அவன் விருப்பப்பட்டு வாங்கி தருவதை மறுக்கவில்லை. ஜெய் ஸ்வீட் கொடுக்க வாங்கியவள்,
“தேங்க்ஸ் ஜெய்” என்றவள் “தாத்தா கிட்ட நான் பேசுறேன் ஜெய், நீங்க மறுபடியும் அவரை டென்ஷன் பண்ணாதீங்க” என்று சொல்லி கிளம்பினாள்.
இன்று தாத்தாவிடம் பேசிவிட வேண்டும் என்று ஊர்மிளா நினைத்தாள். அவளின் விழைவின்(தீவிர ஆவல்) விளைவு எப்படி இருந்தாலும், என் தாத்தா என்னை புரிந்துகொள்வார் என்று நம்பினாள். ஊர்மிளா இப்படி நினைத்திருக்க, ஜெய்ச்சந்திரனோ அவள் பேச்சை கேட்கவில்லை.
மாலை பொழுதில் காஞ்சி காமாட்சியைத் தரிசத்த தேசிகனும் ரத்னவேலும் அவர்களின் ஆஸ்தான கடை ஒன்றில் அமர்ந்து மணக்க மணக்க ஃபில்டர் காஃபி குடித்தபடி பேசிக்கொண்டிருக்க, அவர்கள் முன் வந்து அமர்ந்தான் ஜெயன்.
“என்ன தாத்தா காஃபியா?” என்று ஜெய் கேட்டிட, ரத்னவேலோ முறைப்பாக பார்த்தார். தேசிகனோ யார் இவன் என்று புதியவனை பார்த்தார்.