“ஜமுனா! ஜமுனா!” என்று அறைக்குள் சென்று குரல் கொடுத்தார் பிரபாகரன். ஊர்மிளாவை ஓய்வெடுக்க சொல்லியவர் அறைக்கு மனைவிக்காக வாங்கி வந்த பாசுந்தியோடு காத்திருக்க,
“சொல்லுங்க, என்ன வேணும்” என்றபடி ஜமுனா அமைதியாக வந்து நிற்க, மெத்தையில் உட்கார்ந்த பிரபாகரன் ஜமுனாவின் கையைப் பிடித்து தன்னருகே அமர்த்தினார்.
“உனக்கு ஒன்னு கொடுக்கலாம்னு தான் கூப்பிட்டேன் ஜமுனா” என்றபடி பக்கத்தில் வைத்திருந்த பாசுந்தி அடங்கிய டப்பாவை நீட்ட, ஜமுனா வாங்காது கணவரை முறைத்தார்.
“சாரி ஜமுனா! நேத்து ஊர்மி டென்ஷன் பண்ணிட்டா, அவளே ஒரு முடிவெடுக்காம இருக்கப்ப நான் என்ன சொல்றது?” என்று கேட்கவும் புடவை முந்தானையால் வியர்வையைத் துடைத்தபடி கணவனை கேள்வியாகப் பார்த்தார். பிரபாகரன் ஏசியை ஆன் செய்ய
“ஊர்மி என்ன முடிவெடுக்கணும்ங்க, அவதான் மாமா சொன்ன சரினு சொல்லிட்டாளே?” என்று கேட்க, பிரபா ஊர்மிளாவுக்கும் ஜெய்யைப் பிடிக்கும், அவனை திருமணம் செய்ய விரும்புகின்றாள் என்று எல்லாம் சொல்லிவிட ஜமுனா பேசவில்லை. இதனை எதிர்ப்பார்க்காத ஏமாற்றம் அப்பட்டமாக அவர் முகத்தில் தெரிய,
“ஜமுனா” என்று தோளைத் தட்ட
ஜமுனாவுக்கு வந்த கோபத்தில் கணவனின் கையை வேகமாக தட்டிவிட்டார்.
“அவ உங்ககிட்ட இவ்வளவு சொல்லியிருக்கா, நீங்க எங்கிட்ட மறைச்சிட்டீங்க” என்று ஜமுனாவுக்குக் கண்ணீர்.
“அவ ஏதோ சொன்னா நீங்க யோசிக்க மாட்டீங்களா? முதல்ல அந்த ஊருக்கு அனுப்ப மாட்டேனு அடம்பிடிச்சவர்தானே நீங்க? எப்படி அவளை அவ்வளவு தூரம் அனுப்புறது? நான் ஊர்மியை பிரிஞ்சதே இல்லை… ஏதோ இங்க பெருமண்டூர்னு மனசை தேத்திட்டு இருந்தா இவளுக்கு ஏன் அந்த பையனை பிடிச்சது? நீங்களும் அவ இஷ்டத்துக்கு ஆமா சொல்றீங்க? அப்போ நான் யார் உங்க இரண்டு பேருக்கும்?” என்று ஜமுனா ஆற்றாமையோடு புலம்பினார்.
“என்ன ஜமுனா? நீ இப்படி பண்ற? அன்னிக்கு நீதானே என்னை பேசி கன்வீன்ஸ் பண்ணி ஊர்மியை அனுப்பி வைச்ச? அவ அங்க போகலன்னா எதுவும் நடந்திருக்காது! இப்போ என்னை குறை சொல்ற?” என்ற பிரபாகரன் குரலிலும் கோபம்.
“அது ராஜீவண்ணா மேல இருக்க மரியாதை, நன்றியுணர்ச்சி! அதுக்காக என் பொண்ணை அப்படியே அங்க அனுப்ப சொல்றீங்களா? இவள சொல்லணும்! அது கூட ஊர்மி அவர்கிட்ட பேசினா தெளிவாவா, அவ மனசு ரிலாக்ஸ் ஆகும்னு அனுப்பினேன்” என்ற ஜமுனாவுக்கு சட்டென்று ஊர்மிளாவின் காதலை, விருப்பத்தை ஏற்க முடியவில்லை. இத்தனைக்கும் ஊர்மி அவரின் விருப்பத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாள், பிரபாகரன் ‘உன்னிஷ்டம்டா ஊர்மிமா’ என்று எல்லாவற்றுக்கும் சொன்னாலும் அம்மாவுக்கும் தாத்தாவுக்கும் பிடிக்கவில்லை என்றால் அதனை செய்ய ஊர்மி யோசிப்பாள்.
ஜமுனா இப்படி செய்ய, பிரபாகரனுக்கு வருத்தமாக இருந்தது.
“இங்க பாருடி!” என்று மனைவி முகத்தைத் திருப்ப, அவரோ பிரபாவின் தோளில் முகம் புதைத்து அழுதார்.
“என்ன ஜமுனா? லவ் பண்றது தப்பா டி?” என்று கேட்க, ஜமுனா சமாதானமாகவே இல்லை. பொறுத்துபார்த்தவர் போனை எடுத்து ஊர்மிளாவின் வாய்ஸ் மெசெஜ் போட்டு விட, அழுத ஜமுனாவின் குரல் தடைபட, ஊர்மிளாவின் குரலை கவனித்தார். மகளின் ஆசை குரல் அம்மாவை யோசிக்க வைத்தது. ஜமுனா இரண்டு முறை குழந்தையை பாதியில் இழந்து, மீண்டும் கரு சுமந்து அது உயிராய் உருவாகி, ஆவலாக காத்திருந்தபோது உயிரற்ற அவரின் மகனை பார்த்து வலி ஆயுளுக்கும் மறக்காது!
வாழ்க்கையில் அப்படியொரு விரக்தியான நிலையிலிருந்தபோது வரமென வந்தவள் ஊர்மிளா.பிறந்த சில மணி நேரங்களில் ஊர்மிளா ஜமுனாவின் கையில்தான் இருந்தாள், அவரின் ஒளியிழந்த வாழ்க்கையை மந்திரமாக மாற்றியவள் என்பதாலேயே ‘ஊர்மிளா’ என்று ஆசையாக பெயரிட்டார். ஜமுனாவுக்கு அதன் பின் வாழ்க்கையில் வருத்தங்களே இல்லையெனலாம், மகள் திருமணம் ஆகி வேறு வீட்டுக்குப் போய்விடுவாள் என்று மனதை தயார் செய்து பிரிவுக்குத் தன்னை திடப்படுத்தியவராக இருந்தாலும், இப்படி சட்டென்று வேறு மாநிலத்துக்கு மகளை அனுப்ப எல்லாம் மனம் தயாராக இல்லை.
ஊர்மிளாவின் குரல் பதிவு முடிந்து விட, ஜமுனா நிமிர்ந்து கணவரை பார்க்க
“ஊர்மி கேட்டாளே நீ என்னை பார்த்தப்ப என்னை நினைச்ச ஜமுனா?” என்று பிரபாகரன் அறிந்து கொள்ளும் ஆவலிலும் மனைவி அழுகை நிறுத்திய சந்தோஷத்திலும் கேட்க
“என்ன செஞ்சு இந்த ஆர்மிகாரனை ஓட விடலாம் நினைச்சேன்” என்றதும் பிரபாகரன் முறைத்தார். சில நிமிடங்கள் அமைதியில் கழிய,
“என்ன ஜமுனா எதுவும் பேசாம இருக்க? எனக்கு மட்டும் ஊர்மியை அங்க அனுப்ப இஷ்டம் நினைக்கிறியா? ஊர்மிளாவை நமக்கு அப்புறமும் நல்லா பார்த்துக்கிற ஒருத்தன் தானே அவளுக்கு புருஷனா அமையணும்? அந்த பையனை நான் நல்லா விசாரிச்சிட்டேன், இப்ப கூட மூணு மாசம் அவனை வாட்ச் பண்ணி ரிபொர்ட் பண்ண சொல்லியிருக்கேன், அந்த பையனோட அப்பா ராஜீவனுக்குப் ப்ரண்ட்’ன்றதால மட்டும் நம்ம ஊர்மியோட நியாயமான ஆசையை நிராகரிக்கணுமா சொல்லு? நம்ம பொண்ணு உரிமையா கேட்கிற விஷயத்தை வேண்டாம் எப்படி சொல்றது?” என்ற பிரபாகரனின் கேள்வியின் நியாயம் ஜமுனாவுக்கு புரிந்தது. ஜமுனா அமைதியாக இருக்க
“ஊர்மி ஏற்கனவே நிறைய யோசிச்சு, நமக்காக அந்த பையனை வேண்டாம்னு சண்டை எல்லாம் போட்டுட்டா டி, நீயும் எதாவது பேசி அவளை கஷ்டப்படுத்தாத” என்றதும் ஜமுனா ஆத்திரத்துடன் எழுந்தவர்
“என் பொண்ணுக்கிட்ட எப்படி நடக்கணும்னு நீங்க எனக்கு சொல்லாதீங்க! உங்களை விட அதிக நேரம் அவ என்னோடதான் இருக்கா, நாளைக்கு அவ கல்யாணமாகி போய்ட்டாலும் நீங்க காலையில ஜம்முனு ஆஃபிஸ் போய்ட்டு நைட் வருவீங்க, தினமும் பூனைக்குட்டியாட்டம் என்னையே சுத்திட்டு இருக்க பொண்ணு இல்லைன்னா எனக்குதான் கஷ்டமா இருக்கும். வந்துட்டாரு பெருசா அட்வைஸ் பண்ண, போங்க” என்று கத்தினார்.
“ரொம்ப கத்துறடி நீ! நான் கிளம்புறேன்” என்று பிரபாகரன் அறையை விட்டு வெளியே வர, ஊர்மிளா உறங்காமல் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த கிருபாகரனோடு கதையளந்தாள். அவளும் ஜமுனா வைத்திருந்த கோழி ரசத்தை ருசித்து உண்டாள். இரு நாட்களாக உணவு இறங்காது இருந்தவளுக்கு இப்போதுதான் உடல் நலம் தேறியிருக்க, பசியில் நன்றாக உண்டாள்.
“ரசமலாய் இருக்கு பெரியப்பா, சாப்பிட்டதும் ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்று சொல்லும்போதே பிரபாகரன் வெளியே வர,
“சாப்பிட்டு போ பிரபா, ரெடியாகிடுச்சு” என்று மங்கை குரல் கொடுத்தார்.
“வரேன் அண்ணி” என்றபடி மகள் அருகே பிரபாகரன் உண்ண உட்கார, தம்பியைப் பார்த்த கிருபாகரன் முறைக்க, பிரபாவோ ஜமுனா கத்தியதில் யோசனையில் இருந்தார். கிருபாவும் ஏதோ சொல்ல முயல, பிரபா பார்க்கவில்லை. மகளிடம்
“சாப்பிட்டு மாத்திரை மறக்காம போட்டுடு ஊர்மி” என்று சொல்லிக்கொண்டிருக்க, பெரியப்பாவின் சைகையைப் பார்த்த ஊர்மி
“என்ன பெரியப்பா?” என்று கேட்டாள். கிருபாகரன் சட்டென்று தயங்க, அவரின் பார்வையை ஊர்மிளா கண்டுவிட்டாள். பிரபாகரனின் சட்டையின் தோள்பகுதியில் ஜமுனா அழுததில் அவர் குங்குமம் இருக்க, ‘விவஸ்த கெட்டவன்’ என்று தம்பியைத் திட்டினார்.
ஊர்மிளா அதை கண்டு சிரித்து, “கேப்டன் ஒரே ரொமான்ஸ் தான் பெரியப்பா” என்று அப்பாவை கிண்டல் செய்ய
“அதான் குறைச்சல்!” என்று எரிச்சலாக எழுந்த பிரபாகரன், “உங்கம்மா என்னை காய்ச்சி எடுத்து அழறா, நீ வேற ஊர்மி” என்றதும் ஊர்மிளாவுக்கு உணவு இறங்கவில்லை.
அண்ணனை முறைத்தவர் “அண்ணி உங்களை இந்த அண்ணா என்னமோ சொல்றார்’ என்று குரல் கொடுத்தவர் அறைக்குச் சென்று சட்டை மாற்றி வந்தார். மங்கை வந்தவர் “என்ன சொன்னீங்க?” என்று கணவரை மிரட்ட,
“நான் என்ன சொன்னேன், ஒன்னுமில்லையே” என்று கிருபாகரன் சொல்ல,
“ஒன்னும் சொல்லாமயா பிரபா சொல்லிட்டு போறான், சொல்லுங்க என்ன சொன்னீங்க?” என்று மங்கை விடவில்லை.
“அடியே! நான் ஒன்னுமே சொல்லலடி, பாப்பு நீ சொல்லு” என்று ஊர்மிளாவை பார்க்க, அவளோ அம்மா அழுகிறார் என்று பிரபா சொல்லவும் பாதி உணவில் எழ, பிரபாகரன் உடை மாற்றி வந்தவர் மகளை அதட்டி அமர வைத்தார்.
“இன்னிக்குத்தான் உனக்கு சோறே இறங்குது, அம்மாகிட்ட சாப்பிட்டு பேசு ஊர்மி. இப்போ சாப்பிடாம எந்திரிக்காத!” என்று கட்டளையாக சொல்ல, ஊர்மிளா வேகவேகமாக தட்டில் இருந்த உணவை காலி செய்தாள்.
ஊர்மிளா சென்றதும், “என்னாச்சுடா?” கிருபாகரன் பிரபாவிடம் கேட்க அவர் ஜெய்யை சந்தித்து என்று எல்லாம் சொல்ல,
“அப்பா கிட்ட ஊர்மியே பேசுறேன் சொன்னாண்ணா, அவளே பேசினாதான் அவர் புரிஞ்சிப்பார்” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அறையில் ஜமுனாவை ஊர்மிளா சமாதானம் செய்தாள்.
“அம்மா! உங்கிட்ட சொல்லக் கூடாதுனு இல்லமா, இங்க வந்ததும் நேர்ல சொல்லலாம் நினைச்சேன். அதுக்குள்ள அங்க சண்டை, ஃபீவர்… சாரிம்மா! சொன்னா நீ ஃபீல் பண்ணுவனுதான்மா சொல்லல. எப்படி உங்கிட்ட சொல்லாம இருப்பேன்?” என்று ஜமுனாவின் கன்னத்தைத் துடைத்து கைகளைப் பிடித்து சமாதானம் செய்ய
“லவ் பண்றேணு கோவமாம்மா?” என்று அவர் பேசாமல் இருக்கவும் ஊர்மிளா கேட்க, ஜமுனாவோ
“ஏண்டி இந்த செங்கல்பட்டு, பக்கத்துல பெருமண்டூர், சென்னை’ல எல்லாம் உனக்குப் பசங்க கிடைக்கலையா? நீ லவ் பண்ணினது எனக்குக் கோவமில்லை. அவ்வளவு தூரம் உன்னை அனுப்பிட்டு எனக்குக் கஷ்டமா இருக்கும்டி” என்று ஜமுனா பாவமாக சொல்ல, ஊர்மிளா முகம் வாடியது.
“காஞ்சிபுரத்துல எல்லாம் ரத்னவேல் பேத்திகிட்ட லவ் சொல்ற தைரியம் யாருக்குமில்லையேம்மா, ஜெய்க்குதானே இருக்கு” என்றதும் ஜமுனா முகத்தில் சிரிப்பு. பிரபாகரன் சொன்னது, அவர் பொறுமையாக யோசித்தது எல்லாம் சேர மனது பக்குவப்பட்டது, மனதின் தூரம்தானே இருப்பதில் பெரியது. மகளுக்குப் பிரியமான வாழ்க்கை அமைந்தால், அதை விட வேறென்ன வேண்டும் என்று அவர் தெளிந்தார்.
“அந்த பையனை நான் சரியாவே பார்க்கலடி, உன் அப்பாவோட நீ மட்டும் பார்த்திருக்க” என்று ஜமுனா மகளை பேச
“அம்மா! நாங்க எதேச்சையாதான் ஜெய்யைப் பார்த்தோம்மா, நேத்து நீ நேர்ல பார்த்ததானே?” என்று கேட்டாள்.
“அது யாரோ உன் ப்ரண்ட்னு பார்த்தேன், என் பொண்ணுக்கு வர மாப்பிள்ளைன்னா நல்லா பார்த்திருப்பேன்” என்றபடி அவர்கள் பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாய் நீண்டது. ஊர்மிளாவுக்குத் தாத்தாவை குறித்த தயக்கம் மட்டுமிருக்க, மாலையில் அவரிடமும் பேசிவிட்டாள்.