தாத்தாவிடம் பேசிய பின் இரவு உணவு வீட்டில் அமைதியாக நடந்தது. எப்போதும் எதாவது பேசுவார்கள், இன்று ஆளுக்கொரு யோசனை. ஊர்மிளா உணவை முடித்து அறைக்கு சென்று மாத்திரை போட்டாள், ஆனாலும் மனம் உறங்காதிருக்க உடலும் உறங்கவில்லை. சிறிது நேரம் அப்படியே புரண்டவள் எழுந்து மொட்டை மாடி சென்றாள். காதில் ஹியர்போன் மாட்டி, அங்கு நிழலுக்கென்று போடப்பட்டிருக்கும் கூரையில் கீழ் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.
இந்த இரவின் காற்று கொஞ்சம் ரகசியமானது, ரசனையானதும் கூட! இரவு காற்று எல்லாருக்கும் கிட்டாதே, அந்த இரவினை தேடுபவர்களுக்குக் கிட்டுவது. அப்படிதான் ஊர்மிளாவையும் கொஞ்சி சென்றது காஞ்சிவர காற்று. மிதமான குளிரோடு, உடலை துளைக்காது மெல்ல தேகம் தீண்டியது.
யாரோ படியேறும் அரவத்தில் அவள் நிமிர்ந்து உட்கார, கிருபாகரன் வந்தார்.
ஊர்மி மாடியேறியதும் அங்கிருக்கும் சிறு லைட்டை ஒளிர செய்திருக்க, “என்ன ஊர்மி தூங்கலையா?” என்றபடி அவள் அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
“இல்லை பெரியப்பா, நீங்க தூங்கல?” என்று கேள்வியாகப் பார்க்க
“உன் வயசுல இப்படி தனியா வந்து நின்னா வயசு கோளாறு, என் வயசுல வந்தா வயிறு கோளாறு” என்றதும்
“என்ன பண்ணுது பெரியப்பா?” என்று ஊர்மிளா பதற
“ஒன்னுமில்ல பாப்பு, என்னமோ சாப்பிட்டது செரிக்கல போல. கொஞ்சம் காத்தாட உட்கார்ந்தா நல்லாயிருக்கும்னு வந்தேன்” என்றார். அவரிடம் ஐந்து நிமிடம் உட்கார சொல்லி, கீழே இறங்கியவள் அவருக்கு சோம்பு போட்டு வெந்நீர் கொடுத்தாள்.
“இதை குடிச்சிட்டு கொஞ்ச நேரம் உட்காருங்க பெரியப்பா, அப்பவும் எதாவது செஞ்சா சொல்லுங்க, நம்ம டாக்டர் பார்ப்போம்” என்றபடி அவர் முன் நாற்காலியை நகர்த்திப்போட்டு உட்கார்ந்தாள் ஊர்மிளா. சிறிது நேரத்தில் கிருபாகரன் ஆசுவாசமாக உணர்ந்தார்.
“அப்பா என்ன சொன்னார் ஊர்மி?” என்று கேட்க, ஊர்மிளா தாத்தாவிடம் பேசியதை நினைவு கூர்ந்து பகிர்ந்தாள்.
மாலை ரத்னவேல் ஜெய்ச்சந்திரனை சந்தித்ததை வீட்டினரிடம் சொல்லவில்லை. ஜெய்யும் ஊர்மிளாவிடம் இதனை பகிரவில்லை, ரத்னவேலிடம் பேசியவன் அன்றிரவே ஊருக்குப் புறப்பட்டான். ஜெய்ச்சந்திரன் பேசியதை கேட்டதிலிருந்து ரத்னவேலுக்கு அதனை குறித்த யோசனை, வீட்டுக்கு வந்த பின் பேத்தி அவரிடம் பேச, சட்டென்று முடிவெடுக்க முடியவில்லை.
அவர் பதில் பேசாதிருக்க “என் மேல கோவமா தாத்தா? நான் தேசிகன் தாத்தா கிட்ட பேசவா, சாரி கேட்கவா?” என்று ஊர்மிளா அவர்கள் நட்பில், உறவில் விரிசல் வருமோ என்று தவித்து கேட்டாள்.
“யாரா இருந்தாலும் என் பேத்தி மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை. ராஜனுக்கும் இப்போ கல்யாணத்துல இஷ்டமில்லை போல, எலெஷன், பதவினு பய அதுல பிசியா இருக்கான். நீ அதை நினைக்காத ஊர்மி” என்றார் ரத்னவேல்.
“எனக்கும் ஜெய்யைப் பிடிக்கும் தாத்தா” என்று ஊர்மிளா சொல்லியவள் அவர் பார்வையில்
“ஜெய்யை எனக்குப் பிடிச்சா மட்டும் போதாது தாத்தா! உங்களுக்கும் நம்ம வீட்ல எல்லாருக்கும் பிடிக்கணும். இதை அவர்கிட்டயும் சொல்லிட்டேன் தாத்தா”
“எனக்கு அந்த பயலை பிடிக்கவே இல்லைன்னா?” ரத்னவேல் பேத்தியை ஆராயக் கேட்டார். ஊர்மிளாவால் ஜெய்யை வேண்டாம் என்று இப்போது சொல்ல முடியவில்லை. பேத்தியின் தவிப்பினை பார்த்தாலும் அவள் பதிலை எதிர்ப்பார்த்தார்.
“நீங்க சர்வேஷ் மாமாவை கட்டிக்க சொன்னப்போ என் மனசுல யாருமில்லை தாத்தா, இதே ஜெய்யை எனக்குப் பிடிக்கிறதுக்கு முன்னாடி ராஜன் மாமாவை பத்தி சொல்லியிருந்தா, கண்டிப்பா ஜெய்யோட விருப்பத்தை வேண்டாம் சொல்லியிருப்பேன். இப்ப எனக்கு ஜெய்யைத் தவிர யாரும் வேண்டாம், எனக்குக் கல்யாண்மனா அது ஜெய்யோட மட்டும்தான், இல்லைனா யாரும் வேண்டாம்!” என்றாள் ஊர்மிளா திடமாக.
ரத்னவேல் தன் மீசையை நீவியவர், “இதான் காதல் கொடுத்த தைரியமா? இல்லை அந்த தேவிகுளத்துக்காரன் கொடுத்த தைரியமா?” என்று கேட்க, ஊர்மிளாவோ அசரவில்லை.
“உங்க காமாட்சிக்கு யார் தாத்தா தைரியம் கொடுக்கணும்? எனக்கு ஒன்னு வேணும்னா நீங்க செஞ்சு தருவீங்கன்ற தைரியம். எனக்கு ஒருத்தரை பிடிச்சிருந்தா உங்க கிட்ட கேட்காம யார் கிட்ட கேட்பேன் தாத்தா? எனக்கு ஜெய்யைப் பிடிச்சிருக்குன்னா நீங்க அவரை கடத்திட்டு வந்தாச்சும் கட்டி வைக்க மாட்டீங்களா?” என்று ஊர்மிளா வேகமாகக் கேட்க, ரத்னவேல் மனதில் ‘சும்மா கூப்பிட்டாலே அந்த பய வருவான், அவனை ஏன் நான் கடத்தணும்?’ என்று நினைத்தார்.
இப்போதும் அவருக்கு ஜெய்யைப் பிடிக்கவில்லை! அவனை சட்டென்று ஏற்கமுடியவில்லை. பேத்தியின் முகத்தை பார்த்தார், பிறந்ததிலிருந்து அவளை பார்ப்பவர், பிடித்தவரை எப்படி பார்ப்பாள், பிடிக்கவில்லை என்றால் எப்படி நடப்பாள் என்று எல்லாம் தெரியும். நேற்று ஊர்மிளா ஜெய்யை முறைக்கவும் தான் அவனை பிடிக்காமல் போனது, அதில் அவனின் உரிமை, அதட்டல் எல்லாம் இன்னும் ஏற்றிவிட்டது.
ஊர்மிளாவின் திடம் அவரை அசைத்தாலும் “நாலஞ்சு மாசம் போகட்டும் ஊர்மி, நான் யோசிக்கிறேன். எனக்குப் பிடிக்கலனாலும் அவன் நல்லவனா இருந்தா தாத்தா உனக்குக் கட்டி வைப்பேன், நீ கவலைப்படாத” என்று பிடித்தமில்லாத பாவனையில் சொல்ல ஊர்மிளா மறுப்பாக தலையசைத்தாள்.
“இல்லை தாத்தா! நீங்க பிடிக்காம மனசு கஷ்டத்தோட எனக்காக செய்ய கூடாது, நாலஞ்சு மாசமில்லை நாலு வருஷம்னாலும் நான் காத்திருப்பேன், எனக்காக ஜெய் காத்திருப்பார். உங்க முழு விருப்பத்தோட மட்டும்தான் என் கல்யாணம் நடக்கணும், இல்லைன்னா வேண்டாம்” என்று அழுத்தமாக சொல்ல
“வாயை மூடு ஊர்மிளா! இப்படி பொசுக்குனு பேசாத! என் காமாட்சி கல்யாணம் அந்த அம்மன் திருக்கல்யாணமாட்டம் பெருசா சிறப்பா நடக்கணும். இப்போ போய் தூங்கு, தை பொறக்கட்டும் பார்ப்போம்” என்றார். அதற்கு மேல் என்ன பேசுவது என்று ஊர்மிளா வந்துவிட்டாள்.
இதனையெல்லாம் கிருபாகரனிடம் சொல்ல, “பேத்தி சொன்னதுக்கு அப்புறம் பெருசு வேண்டாம்னு சொல்ல மாட்டார்” என்று சிரிக்க
“தாத்தா டல்லா இருந்தார் பெரியப்பா, கஷ்டமா இருக்கு” என்று ஊர்மிளா கவலையாக சொல்ல,
“அதெல்லாம் அவருக்கு எதையும் தாங்கும் இதயம்! நீ ஏன் டென்ஷன் ஆகுற ஊர்மி? நாங்க எப்பவும் உங்களை குழந்தையாவே நினைக்கிறோம், நீங்க வளர்ந்து என் இஷ்டம், என் விருப்பம் சொல்றப்ப டக்குனு ஏத்துக்க முடியறதில்லை, விஷ்ணு லவ் பண்றானு சொன்னப்போ எனக்கும் அப்படி ஷாக்’கா இருந்தது. அப்புறம் புரிய கொஞ்சம் நேரமெடுக்கும், ஆனாலும் அந்த பையன் ஜெய் ரொம்ப அடாவடி! நல்லாயிருக்கீங்களா மாமானு கேட்கிறான். பொண்ணே கொடுக்கல, என்ன கொழுப்பு அவனுக்கு?” என்று சிரித்தார்.
சிறிது நேரத்துக்குப் பின், கிருபாகரன் “ஏற்கனவே முடியாம இருந்த ஊர்மி, பனியில உட்காராம போய் தூங்கு” என்றார்.
“இப்ப ஓகேவா பெரியப்பா, இல்லை அப்பாவை எழுப்பவா?” என்று மீண்டும் அவர் நலம் கேட்க, கிருபாகரன் கண்கள் கலங்கின.
“நாளைக்கு நீ கல்யாணமாகி போய்ட்டா யார்டா பெரியப்பாவ இப்படி கேட்பா?” என்றவர் குரல் கமறியது.
“என்ன பெரியப்பா நீங்க? எங்க போனாலும் நான் உங்க பொண்ணுதானே? நான் உங்களை கவனிக்க மாட்டேனா?” என்று ஊர்மிளா படபடவென்று கேட்க,
“இப்படி காஞ்சிபுரம் வந்து கஷாயம் போட்டு தர முடியுமா?” என்று அவர் பதிலுக்குக் கேட்க ஊர்மிளாவுக்கும் வீட்டை பிரிய வேண்டுமே என்ற கவலை தொடங்கியது. அவள் முகம் பார்த்தவர்
“அட விடுடா! எங்க கட்டிட்டுப் போனாலும் பெரியப்பனுக்குக் கஷாயம் போட்டுத்தர எல்லாம் வர முடியாது. விஷால் ஹாஸ்டல் போனப்போ அப்படிதான் கஷ்டமா இருந்தது, இதெல்லாம் பழகிக்கணும்தானே?” என்று நிதர்சனம் பேசியவர்
“என்ன உங்கப்பன் உனக்குக் கல்யாணமாக போறன்னைக்கு அழுதே, கேரளாவை மிஞ்சுற அளவு காஞ்சிபுரத்துல வெள்ளம் வர வைச்சிடுவான்.” என்றதும் பெரியப்பாவை முறைத்து
“அப்பா அப்படியெல்லாம் பண்ணமாட்டார், சும்மா அவரை வம்பிழுக்காம இருங்க பெரியப்பா” என்றாள்.
“யார் நான் அவனை வம்பிழுக்கிறேன்? அவன் பாட்டுக்கு உன் பெரியம்மாவை கிளப்பி விட்டுட்டான், என்ன சொன்னீங்க என்னை பத்தி? என் குடும்பத்தை இழுத்தீங்களா? என் சமையலானு மத்தியானம் ஆரம்பிச்சி இப்ப வரைக்கும் நிறுத்தல, நாளைக்கு நீ உண்மை சொல்லிடுற ஊர்மி” என்றதும்
“பெரியப்பா சொல்லக்கூடாது சொல்லிட்டார் பெரியம்மா சொல்லிடுறேன்” என்று அவள் சிரிக்க
“அப்பனுக்குத் தப்பாத பொண்ணு! வாலு, போய் தூங்கு” என்றவரையும் கீழே அழைத்துப் போனாள் ஊர்மிளா. காஞ்சிக்கும் தேவிகுளத்துக்குமான தூரத்தை எப்படி கடக்க என்ற யோசனையோடு உறங்கினாள் ஊர்மிளா.