தேவிகுளம் வந்த ஜெயனுக்கு வேலைகள் இருந்தன. ஊர்மிளாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி அவள் நலம் விசாரித்தவன் அதை தாண்டி எதுவும் பேசவில்லை. ரத்னவேலிடம் பேசியதையும் சொல்லவில்லை, நிச்சயம் அவள் திட்டுவாள். ரத்னவேலிடம் தன் மனதை மறைக்காது பேசிவிட்டான் ஜெயன், அவர் அவனை பேச்சை கேட்டதே போதுமானதாக இருந்தது. இவன் பேசியது கேட்டு ரத்னவேல் அமைதியாக இருக்க, தேசிகன் இவனிடம்
“இங்க பாருப்பா பொண்ணு விஷயமெல்லாம் நாங்க சட்டுனு முடிவெடுக்க முடியாது, இப்போ நீ ஊருக்குக் கிளம்பு. கொஞ்ச நாள் போகட்டும்” என்று சொல்ல, அவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து கிளம்பிவிட்டான். அவர்களுக்கும் நேரம் வேண்டும்தானே?
ஊர்மிளாவாகாட்டும், அவள் குடும்பமாகட்டும் அவர்களுக்கு அவள் ராஜீவனின் மகள் என்பதே அதிர்ச்சி, இதில் இவன் காதல் இன்னும் அதிர்ச்சி கொடுத்திருக்கும். எல்லாவற்றையும் யோசித்து, ஏற்க ஒரு அவகாசம் வேண்டும். அந்த அவகாசம் கொடுக்கும் ஆசுவாசம் நிச்சயம் ஆனந்தம் கொடுக்கும் என்று நம்பினான். தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்ட பின் தனக்கும் ஒரு அவகாசம் வேண்டும் என்று நினைத்தான். பிந்துவின் வரவில் தொடங்கி இந்த சில மாதங்களில் அவன் வாழ்வில், மனதில் பல மாற்றங்கள் அல்லவா ? முழு மூச்சாக மழைக்கால முன்னெடுப்புகளை கவனித்தான்.
“ஏடா ஷஜி! எனிக்கு லாக் ஹார்ட்'(LOCKHart)ல ஜோலி உண்டு, அது கழிஞ்சு ஞான் வீட்டிலேக்கே போகும், நீ இவிட பாரு(எனக்கு LOCKAHART’ல வேலை இருக்கு, அது முடிஞ்சு நான் வீட்டுக்குப் போறேன், நீ இங்க பாரு)” என்று ரிசார்ட்டை பார்க்க சொல்லி கிளம்பினான் ஜெயன். எஸ்டேட் சென்று அவன் நண்பனை சந்தித்தவன் ஜீப்பில் தேவிகுளம் திரும்பினான்.
வீட்டிற்கு செல்லும் வழியில் அச்சச்சனை கண்டவன் ஜீப்பை நிறுத்த, “என்ன அச்சச்சா? எங்க போய்ட்டு வரீங்க?” என்று கேட்க, அச்சுதன் ஜெயனை பார்த்தாலும் பேசாமல் நடந்தார்.
“அச்சச்சா! என்னாச்சு?” என்று ஜெய் ஜீப்பில் இருந்து கேட்க
“எந்தாடா? எதுக்கு கத்துற?” என்று அச்சுதன் கத்தினர்.
“நான் எங்க போனா உனக்கென்னடா? நீ எங்கிட்ட சொல்லிட்டு போனியா?” என்று பேச ஜீப்பை விட்டு இறங்கியவன்
“நான் திடீர்னு கிளம்பிப் போனேன் அச்சச்சா, அதான் சொல்லல! என்னை ஷமிக்கும் அச்சச்சா! என்னோட வாங்க நான் வீட்ல விட்டுடுறேன்” என்று சொல்ல, அவரோ தோளில் இருந்த துண்டை நன்றாக போட்டுக்கொண்டு
“யாரும் வேண்டாம்டா எனக்கு! நான் வீட்டுக்குப் போகல, நீ போ” என்று விரட்டினார். அச்சுதன் கோபமாக இருக்க, அவரை அப்படியே விட்டு போக ஜெயனுக்கு மனமில்லை.
“என்ன அச்சச்சா நீங்க? வாங்க நம்ம அப்படியே பேசிட்டு சூடா ஒரு சாயா குடிப்போம்” என்றவன் வீட்டுக்கு செல்லாமல் அப்படியே திரும்பினான். வழியில் நிறுத்தி சூடாக கட்டஞ்சாயா வாங்கி, அச்சச்சனுக்கும் கொடுத்தான். அவர் அமைதியாகக் குடித்தார். தேநீர் கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி மலைகளை கண்டவாறு அங்கிருந்த கட்டையில் அச்சச்சனோடு உட்கார்ந்தான் ஜெய்.
“ஊர்மிளாவுக்கு உடம்பு சரியில்லை, ரொம்ப ஃபீவர் ஹாஸ்பிட்டல சேர்த்திருக்கோம்னு அவ அப்பா சொன்னார். அதனால உடனே கிளம்பிட்டேன் அச்சச்சா” என்று ஜெய் சொல்ல
“ஊர்மி எப்படி இருக்கா? இப்ப பரவாயில்லையா?” என்று அச்சுதனும் பதறிக் கேட்டார்.
“இப்போ நல்லாயிருக்கா அச்சச்சா” என்றதும் அவனை முறைத்தார்.
“என் பேத்திக்கு முடியல, நீ அவளை பார்க்க போற எங்கிட்ட சொல்லாம இருந்திருக்க?” என்று கேட்க
“அச்சச்சா! நான் இப்படி பேசுறது உங்களுக்குக் கஷ்டமா இருக்கும், ஆனா ஊர்மிளாவோட மனசையும் நம்ம பார்க்கணுமில்லையா?” என்று ஜெய் தயங்கிட,
“எந்தாடா? நீ பறையும்” என்றார் அச்சுதன்.
“ஊர்மிளா இன்னும் உங்களை ஏத்துக்கல அச்சச்சா” என்று ஜெய் இழுக்கவுமே
“அவ அச்சனை மாதிரியே அவளுக்கும் நாங்க வேண்டாம், அதானே?” என்று அச்சுதன் முகம் சிவக்க கோபத்துடன் கேட்டார்.
“அச்சா! ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா யோசிங்க, அவ ராஜீவன் மாமாவையே அப்பாவா நினைக்கல, அவளை வளர்த்தவங்களை தான் அவ முக்கியமா நினைப்பா, யார்னாலும் அப்படித்தானே?” என்ற ஜெய் ஊர்மிளாவின் உறவுகளை எல்லாம் சொன்னான்.
“ஊர்மிளா அழுதா அச்சச்சா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது! உண்மை தெரிஞ்சதுமே என் பேத்தினு நீங்க தவிக்கிற மாதிரி அவங்களுக்கும் ஒரு தவிப்பு இருக்கும்தானே? இத்தன வருஷம் அவளை வளர்த்தவங்க எப்படி ஃபீல் பண்ணுவாங்க? பிரபாகரன் மாமா ஊர்மிக்கு இந்த உண்மை தெரியாமதான் வளர்த்திருக்கார், இப்போ எப்படியோ தெரிஞ்சிருக்கு.” என்று ஜெயன் சொல்ல, அச்சுதன் அவன் பேச்சை கவனித்தார்.
அச்சுதனுக்கு ஜெயன் சொன்னதன் நியாயம் புரியாமல் இல்லை! இருந்தாலும் என் மகனின் வாரிசு, என் பேத்தி என்ற உரிமையை விட்டுக்கொடுக்க முடியவில்லை, அதுவும் ஊர்மிளா தேவிகுளத்திலிருந்து செல்லும்போது நீங்க என் தாத்தா இல்லையென்றது அவரால் தாங்க முடியவில்லை.
அதை அப்படியே ஜெயனிடம் சொல்ல,
“ராஜீவன் மாமா ஏன் இப்படி செஞ்சார்? அன்னிக்கு அவருக்கு என்ன கஷ்டம் நமக்குத் தெரியாது இல்லையா அச்சச்சா? ஊர்மிக்கும் நம்ம டைம் கொடுக்கணுமில்லையா?” என்று ஊர்மிளாவை அச்சுதனுக்குப் புரியவைக்கும் எண்ணத்தோடு பேசினான்.
“பிந்துவை நாங்க என்னடா ஒதுக்கிட்டோமா? அவ பாவம்டா! எங்களை மாதிரி அவளுக்கும் அன்பு காட்ட ஆளில்லை” என்றார் வருத்தமாக.
“பிந்து விஷயமெல்லாம் விஜயன் விரும்பின அப்புறம் நடந்தது, ராஜீவன் முன்னாடியே ஏன் அவன் பொண்ணு விஷயம் சொல்லல? பிந்துவுக்காக யோசிக்கிற உன் ஊர்மிளா ஏண்டா என்னையும் உன் அச்சம்மாவையும் நினைக்கல, ராஜீவனை அடிச்சேனு அப்படி பேசுறா, எனக்கு என் மகன் மேல உரிமையில்லையா? ராஜீவன் பெத்தவங்களை இத்தன வருஷம் பார்க்கலையே அதெல்லாம் கேட்க மாட்டாளா?” என்று அச்சுதன் தன் ஆதங்கமெல்லாம் கொட்ட
“இங்க இருந்தாலும் நான் எதாவது பேசியிருப்பேன், எங்கயோ பிடிச்ச மாதிரி இருக்கான் நினைச்சேன், போன் செஞ்சு மன்னிப்புக் கேட்டவன் நேர்ல வந்தானா? அப்படியே நான் பேசினாலும் அச்சன் தானேனு மறுபடி வர வேண்டிதானே? அப்படி என்ன வீம்பு?” என்று அச்சுதன் கேட்க,
“உங்க மகனாச்சே?” என்று ஜெயன் சொல்ல, சுள்ளென்று அவன் முதுகில் அடித்தார்.
“அச்சச்சா!” என்று ஜெய் கத்த முறைத்தார். “நானும் பத்மினியும் எத்தன வருஷம் தனியா இருந்தோம்? எங்களை அவன் பார்த்தானா?” என்று கோபமாகக் கேட்டார்.
“இப்போ எந்தாடா உனக்கு? உன்னை ஊர்மிளா கல்யாணம் பண்ணின அப்புறம் உன் வீட்டுக்கு வரலாமா இல்லை அவளுக்குப் பிடிக்காதுனு எங்க கூட எல்லாம் பேச மாட்டியா?” என்று அச்சுதன் கேட்டுவிட, ஜெய்யோ
“இன்னும் அந்த தெம்மாடி தனியா இருக்கான் இல்லை, பிடிவாஷிக்காரன்”(பிடிவாதக்காரன்) என்று மகனை திட்டினார். மகன் மீதான அளப்பரிய அன்பு, அதனை காட்ட முடியாத இயலாமை எல்லாம் அச்சுதனுக்குக் கோபமாக இருந்தது. அத்தனை வருட பிரிவு, பிந்துவின் வருகை என்று அரக்க பறம்பில் பூக்காலம்! ஆனால் இப்போது ஊர்மிளா பற்றி தெரிய, மகன் மீதான கோபம் மட்டும் பெருகியது, அதே நேரம் அந்த பெண் இன்னும் சில வருடங்கள் இருந்திருக்க கூடாதா? என்று இறைவனை கேட்காத நாளில்லை.
ஜெயனால் ராஜீவன், ஊர்மிளா பற்றி எந்த உத்தரவாதமும் தர முடியாதென்றாலும் அச்சுதனின் கரம் பற்றி, “அச்சச்சா! ஊர்மிளா உங்க பேத்தியா இல்லைனாலும் கூட ஜெயன் எப்பவும் உங்க பேரன் தான்! அந்த வீட்ல உங்களுக்கு உரிமையிருக்கு, ஊர்மிளாவும் உங்களை உங்க வருத்தத்தை ஒரு நாள் புரிஞ்சிப்பா” என்றதும் அச்சுதன் ஜெயனின் கையைப் பற்றிக்கொண்டார். அவருக்கு அவனின் வாஞ்சை மிகவும் தேவையாக இருந்தது!
“சத்தியம் அச்சச்சா! ஊர்மி முதல்முறை இங்க வந்தப்போ ராஜீவன் மாமா மேல் அவ்வளவு கோவமா இருந்தா, அன்னிக்கு பாருங்க அவரை அடிச்சதுக்கு உங்களோட எப்படி சண்டை போட்டா, கண்டிப்பா உங்களையும் புரிஞ்சிப்பா”
“ராஜீவனே புரிஞ்சிக்கல, அவன் பொண்ணு புரிஞ்சிக்க போறாளா போடா”
அச்சுதனிடம் சிறிது நேரம் பேசி அவரை வீட்டில் விட்டு வீடு திரும்பினான் ஜெய்ச்சந்திரன். அவன் வீடு திரும்பிய நேரம் மழை தொடங்கியது. பாலச்சந்திரனும் வினயனும் இன்னும் அவர்கள் மூணார் ரிசார்ட்டில் இருக்க, ஜெய் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். சூடாக அவனுக்குக் கட்டஞ்சாயா போட்டு கொண்டவன் டீஷர்ட் வேஷ்டிக்கு மாறி, ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தான்.
முற்றத்து மழையை ரசித்தவன் மனது ஊர்மிளாவை தேட, உடனே அவளுக்கு அழைத்தான். ஊர்மிளாவின் நலம் கேட்க,
“நானே உங்களுக்குப் பேசணும் நினைச்சேன் ஜெய், நான் தாத்தா கிட்ட பேசிட்டேன்” என்றாள்.
“தாத்தா என்ன சொன்னார்?” என்று ஜெய் கேட்க, ஊர்மிளா தாத்தாவிடம் பேசியது சொல்ல
“ஏடி! அவரே நாலஞ்சு மாசம் சொன்னா நீ நாலஞ்சு வருஷம் சொல்லுவியா?” என்று ஜெய் பொறுமினான்.
“என்ன ஜெய்? தாத்தாவுக்குப் பிடிக்க வேண்டாமா? அவர் அப்படி கஷ்டப்பட்டு சொன்னதும் நானும் ஒரு ஃப்லோவுல சொல்லிட்டேன்”
“தப்பு பண்ணிட்டேன், உனக்குப் பதிலா அவர்கிட்ட லவ் யூ தாத்தா’னு ப்ர்போஸ் பண்ணீயிருக்கணும்!” ஜெய் கடுப்பாக சொல்ல, ஊர்மிளா அவன் சொன்னதை கற்பனை செய்து சிரித்தாள்.
எங்கிருந்தாலும் பிடித்தவர்களின் சிரிப்புக்குத் தனி விசை, தனி இசை போல! அந்த கலகல சிரிப்பு மழையோடு கலந்து இவனுக்குக் கேட்க
“அவருக்கும் டைம் வேணும்ல ஊர்மி, பார்த்துக்கலாம்” என்றான் நிதானமாக.
“அப்புறம் ரசமலாய் சாப்பிட்டியா?” ஜெய் கேட்க
“போங்க ஜெய்! எங்கப்பா சாப்பிடவே விடல, ஒரு வாரத்துக்கு நோ ஸ்வீட் சொல்லிட்டார்” என்று புலம்பினாள்.
“ஹாஹ! பின்னே நீ இங்க இருந்து போனதும் டைரக்டா ஹாஸ்பிட்டல படுத்துட்டா, அதான் சொல்லியிருப்பார்.”
“என்ன சத்தம் அங்க?”
“மழை பெய்யுது ஊர்மி, தேவிகுளத்துல மழை காலம்” என்றான் மழைத்தூறலை ரசித்து, அதன் குளுமையை உணர்ந்தபடி. எங்கு மழை பெய்தாலும் மனம் ஏன் சட்டென நனைகிறது என்று புரியவிட்டாலும் எங்கோ மழை என்பதால் ஊர்மிளாவுக்கும் இதமான மன நிலை.
“உங்க ஊர்ல என்ன க்ளைமேட்?”
“மழை இல்ல! பட் க்ளைமேட் நல்லாயிருக்கு.” என்றவள்
“எப்படி இருந்தது எங்க ஊரு?” என்றாள் ஆவலாக.
“உன்னை பார்க்கத்தானே ஊர்மி வந்தேன், ஊரை எங்க சுத்த? டைமும் இல்லை, மூடும் இல்லை. உங்க இட்லியும் சொல்லிக்கிற மாதிரி இல்லை..” என்று இட்லியைப் பேசிவிட, ஊர்மிளா சிலிர்த்தாள்.
“உங்களுக்கு எங்க ஊரை சுத்திக்காட்டணும் நினைச்சேன் ஜெய், கோவிலுக்கு அழைச்சிட்டுப் போகணும், எதுவும் பண்ண முடியல. நீங்க என்னை எப்படி கவனிச்சீங்க, அட்லீஸ்ட் எங்க வீட்ல உங்களுக்கு லஞ்ச், டின்னர் ஒன்னும் செய்யல, சாரி” என்றாள் மிகவும் வருத்தமான குரலில்.
“ஹே! என்ன இது? எதுக்கு ஃபீலிங்? நாளைக்கே மாப்பிள்ளையா வரப்ப நல்லா கவனிச்சிடு என்னை. உனக்கே முடியாம இருந்த, அப்பவும் உங்க பெரியம்மா சூப், ஸ்னாக்ஸ் எல்லாம் வச்சாங்க ஊர்மி” என்று சொல்ல, ஊர்மிளாவுக்கு ஜெய்யை நிறைய நிறைய பிடித்தது.
“ஜெய்! உங்க அளவுக்கு எனக்கு எப்போ உங்களை பிடிக்கும்? இன்னிக்கு கூட நீங்களா எனக்குப் போன் பண்ணீங்க? நான் உங்களை கூப்பிடவே இல்லை… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று பிரியத்தின் அளவை பற்றி அவள் வருந்த, அது கூட பிரியமாகத்தான் தெரிந்தது பிரியமானவனுக்கு.
“ஊர்மியை அதிகம் பிடிச்சா எனக்கு சந்தோஷம்! நம்ம பார்த்து பேசி கொஞ்ச நாள்தானே ஆகுது, கொஞ்ச நாள் அப்புறம் நீயும் என்னை தேடுவ, என்னை உனக்கும் ரொம்ப பிடிக்கும்! மரியாதை கூட சமமா கொடுக்கலாம், பிரியத்தை அப்படி கொடுக்க முடியாதே!” என்று சொல்ல ஊர்மிளாவும் ஒத்துக்கொண்டாள். சிறிது நேரம் பேசி வைக்க போகும் நேரம்
“அப்புறம் உங்க தாத்தா கேட்டா நாலஞ்சு வருஷமெல்லாம் காத்திருப்பேனு இன்னொரு முறை சொல்லிடாத” ஜெய் விளையாட்டாக எச்சரிக்க
“எனக்காக நான் சொல்லல, உங்க தாத்தாவுக்காக சொல்றேன்” என்றதும் ஊர்மிளாவுக்குப் புரியவில்லை.
“என்ன தாத்தாவுக்காக?”
“அவருக்குக் கொள்ளுப் பேரன் பேத்தி எல்லாம் பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல, எனக்காக நான் கேட்கல. தாத்தாவோட ஆசைய நிறைவேத்துறது நம்ம கடமை இல்லையா?” என்று ஜெய் தீவிரமான குரலில் கேட்க
“ஜெய்ய்ய்!” என்று ஊர்மிக்கு அடுத்த வார்த்தை வரவில்லை.
“சொல்லு ஊர்மி”
“ரொம்ப பேசுறீங்க”
“நான் ரொம்ப தூரம் உன்னோட கனவு கண்டுட்டேன் ஊர்மி, உனக்காக காத்திட்டு இருக்கேன்” என்றான் காதலாக. அத்தனை நாளும் தனியே கனவு கண்டவன், இன்று ஊர்மிளாவையும் அவன் கனவில் துணைக்கு அழைத்தான்.
ஊர்மிளாவும் அவனிடம் பேசிய பின் புதிதாக உணர்ந்தாள், ஜெய்யோடு ஒரு வாழ்க்கை, குழந்தைகள் என்று எண்ணங்கள் நீள, காஞ்சியில் காதல் மழை அவளை நனைத்தது!
இப்படி நாட்கள் நகர, ஜெயனே எதிர்ப்பார்க்காத நிலையில் ஒரு நாள் நள்ளிரவில் ஊர்மிளா அவனை அழைத்தாள். ஊர்மிளாவின் குரல் அவனை தேடலாக, ஆறுதலாக கண்ணீரோடு தேட, ஜெயனுக்குத் தாங்கவில்லை.