“அப்பா! நான் இன்னிக்குக் காஞ்சிபுரம் கிளம்புறேன்” என்று காலையில் காஃபி குடித்துக்கொண்டிருந்த பாலச்சந்திரனிடம் ஜெயன் சொல்ல, அவரோ அதிர்ச்சியோடு மகனை பார்த்தார்.
“ஏண்டா? இன்னிக்குப் போறேன்னு இப்ப வந்து சொல்ற? உனக்குப் போகணும்னா உடனே போய்டுவியா? நினைச்சதும் வந்து சொல்ற?” என்று பாலச்சந்திரன் கடுப்பாக மகனை திட்டினார்.
“அப்பா! நான் நேத்து நடுராத்திரியில நினைச்சேன், அப்பவே வந்து சொல்லியிருந்தா பயந்திருக்க மாட்டீங்க? அதான் காலையில பொறுமையா சொல்றேன்” என்ற ஜெயனும் தனக்கான கட்டஞ்சாயாவோடு ஒற்றை கையால் பேப்பரை புரட்டினான்.
“டேய் வினயா! இதெல்லாம் கேட்க மாட்டியா? போன தடவ இப்படி சொல்லாம கொள்ளாம போய் அவங்க கோவப்பட்டாங்க, கொஞ்சம் பொறுமையா இரென் டா, போன தடவ அவங்க தாத்தா உனக்குக் கொடுத்த மரியாதை மறந்துச்சா மோனே?” என்று பாலா கிண்டலாகக் கேட்க, ஜெயன் பேப்பரை மடித்தவன்
“நீங்களே ஊர்மியைப் பிடிச்சிருக்கு சொன்னதுக்கு என் ஒரே கன்னத்துல ரெண்டு தடவ அடிச்சீங்கப்பா, அவங்க பொண்ணு பெத்தவங்க. அந்த ரியாக்ஷன் கூட காட்ட மாட்டாங்களா?” என்று கேட்க
“ஏடா! கள்ளா! நடிக்காதடா! ஊர்மியைப் பிடிச்சிருக்குனு சொன்னதுக்கா நான் அடிச்சேன்? நீ ராஜீவனை பேசினதுக்கும் ஊர்மி பத்தி அச்சச்சன் கிட்ட சொன்னதுக்கும்தான் அடிச்சேன். கள்ளம் பரையுன்னவன்!” என்று பாலா பக்கத்தில் இருந்த மகன் தோளில் அடித்தார்.
“யாரு? நான் கள்ளன்? என்னவா இருந்தாலும் ஊர்மி விஷயத்துக்குத்தானே அடிச்சீங்க? நான் அப்படித்தான் சொல்லுவேன்” என்று ஜெயனும் விட்டுக்கொடுக்காது சொல்ல,
“ஜெயேட்டா! என்னடா இது? நீ ஊர்மி விஷயத்துல ரொம்ப பண்ற, இப்போ ஏன் போக நினைக்கிற?” என்று வினயனும் கேட்க
“எந்தாடா வினயா இது? நாலு மாசம் ஆகிடுச்சுடா, ஊர்மி கிட்ட நேத்து பேசினேன், எனக்குப் பார்க்கணும் போல இருக்கு. நான் அரை மணி நேரத்துல கிளம்பப் போறேன்.” என்று சொன்னபடி குளித்து உடை மாற்றியவன்
“அச்சச்சன் கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று தன்னை முறைத்த அப்பாவிடம் சொன்னான்.
“நானும் வரேன் டா” என்று பாலச்சந்திரனும் எழ
“நான் உங்களுக்கு டிக்கெட் போடலயே” ஜெய் சொல்ல, அவன் தோளில் கடுப்பாக தட்டியவர்
“நான் அச்சனை பார்க்க உன்னோட வரேன் சொன்னேன்” என்றதும் ஜெய் சிரித்தான். வினயனும் வருகிறேன் என்றிட, மூவருமாக அரக்க பறம்பில் சென்றனர். பாலச்சந்திரன் ராஜீவன் சென்றதிலிருந்து அங்கு அச்சனிருக்கும் நேரம் போவதில்லை, அச்சச்சன் நண்பர்களையோ இல்லை எஸ்டேட் செல்லும் நேரம் மட்டும் பாலா எட்டிப்பார்த்து வருவார், அச்சனிடம் பேச அவர் பேசாமல் முகம் திருப்பிப் போக பாலச்சந்திரனுக்கு மனக்கஷ்டம். இன்று மகன்களோடு சென்று மனஸ்தாபத்தை தீர்க்க நினைத்தார்.
“ஏடா ஜெய்! அப்பா உனக்கு துணையா வரார்னு நினைச்சியா? அவர் உன்னை அச்சச்சனை பார்க்க துணைக்குக் கூப்பிடுறார், தனியா போனா அச்சச்சன் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டாரு இல்ல” என்று கிண்டலாக சொன்னபடி நடந்தான் வினயன்.
“உன்னை வெளுக்கணும்டா முதல்ல, பெரியவனை கூட நம்பலாம்! இந்த அச்சன் மோசம், உன்னையும் அந்த விஜயனையும் மன்னிச்சிட்டார். என்னை பார்த்தாலும் பேசாம போறார், ஜெய் நீ வந்து நியாயம் கேட்கிற” என்று பெரிய மகனிடம் சொல்லியபடி மூவருமாக அரக்க பறம்பில் சென்றனர்.
“நாங்க அறியாத பசங்க, தெரியாம செஞ்சிட்டோம்! நீங்க பெரிய மனுஷன், யோசிச்சு எங்களுக்குப் புத்தி சொல்லியிருக்க வேண்டாம்” என்று வினயனும் பதில் பேச, அரக்க பறம்பில் இப்போது அச்சச்சனும் அச்சம்மாவும் மட்டுமே. ஷோபனா அவர் மாமியார் வீடு சென்றிருக்க, விஜயனுக்கு சென்னையில் வேலை என்பதால் பிந்துவோடு அங்கு குடி பெயர்ந்திருந்தான்.
பிந்து இருந்தவரை அந்த வீட்டிலிருந்த முழுமை இப்போதில்லை. பத்மினிக்கு ஊர்மியைப் பற்றி தெரிந்ததிலிருந்து அவளை குறித்த ஏக்கம் மனதிலிருந்தாலும் யாரிடமும் சொல்லவில்லை, மகனே மகள் பற்றி சொல்லாத வருத்தம், ஆதங்கமிருந்தாலும் ராஜீவன் மீதான அவர் பாசம் அதனை வெளிக்காட்டவிடவில்லை. அச்சுதன் ஏற்கனவே மகன் மீது ஆதங்கத்திலிருக்க, இதனை சொல்லவில்லை.
பிந்து இருந்தவரை அவளை முன்பு போலவே பாசமாக நடத்தினார், அவளை பிடித்திருந்தது. இப்போது அவளும் சென்றுவிட மீண்டும் தனிமை, வெறுமையின் துணையோடு அவ்வளவு பெரிய வீட்டிலிருந்தனர். ஜெயனும் வினயனும் தினமும் அச்சம்மாவை சென்று பார்த்து பேசுவார்கள். ஒரே ஆறுதல் ராஜீவன் வாரத்தில் ஒரு நாள் அம்மாவிடம் தவறாமல் பேசிவிடுகிறார்.
வீட்டின் பூமுகத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தபடி அச்சுதன் மிகவும் பழமையான நாளிதழலான தீபிகா’வில் அன்றையை செய்தியைப் படிக்க, ஆல் இந்தியா ரேடியோ 101.4 தேவிகுளம் அலைவரிசையில் நிகழ்ச்சியைக் கேட்டபடி காய் நறுக்கிக் கொண்டிருந்தார் அச்சம்மா.
“எத்தர தவண பரையனும் அச்சம்மா?(எத்தன தடவ சொல்றது?) உங்க போன்ல யூடூப்ல பாட்டு கேட்க நான் சொல்லிக் கொடுத்தேன்ல” என்றபடி அவரின் செல்ல பேரன் வினயன் அச்சம்மா பக்கத்தில் உட்கார்ந்து கேட்க,
“ஏடா வினயா! எனக்கு இது பழகிடுச்சு.” என்றபடி அவர்கள் வரவும் ரேடியோவை ஆஃப் செய்ய, ஜெயனையும் வினயனையும் பார்த்து புன்னகைத்த அச்சச்சன்
“எந்தானு காரியம்? காலையில வந்திருக்கீங்க?” என்று கேட்டவரின் புன்னகை பின்னால் நின்ற பாலச்சந்திரனை கண்டதுமே மங்கியது. கோபமாக எழுந்து உள்ளே செல்ல பார்க்க, ஜெயன் அவரை நிறுத்தினான்.
“அச்சச்சா, எனக்காக” என்று ஜெயன் சொல்ல
“இப்படி ஒரு பிள்ளைக்கு இப்படி ஒரு அச்சன்!” என்றார் கடுப்பாக.
“ஏட்டா! பாலா பாவம்” என்று பத்மினி பாலாவுக்குப் பரிந்து பேச
“நினக்கு அறியிலா மினி! இந்த பாலா வாயைத் தொறந்தாலே பொய், கள்ளம் பரையுன்னவன்!” என்று அச்சுதன் கோபமாக சொல்ல, கொஞ்ச நேரம் முன் ஜெயனை சொன்னதை நினைத்து மகன்கள் இருவரும் சிரிக்க, அச்சுதன் பேரன்களை முறைத்தார்.
“என்ன அச்சா நீங்க? விஜயனுக்காக செஞ்சேன் சொன்னேன், அவனோட பேசுறீங்க? வினயோட பேசுறீங்க? என் மேல மட்டும் கோவப்படுறீங்க?” என்று பாலச்சந்திரன் பொறுமிட
“அவங்களாம் சின்ன பசங்க டா! நீ அப்படியா? தடியெடுத்தேன்னா அவ்வளவுதான் டா! என் கண் முன்னாடி நிக்காத! போய்க்கோ!” என்று அதட்டியபடி உள்ளே செல்ல பார்க்க
“அன்னிக்கு ராஜீவனை அடிச்ச மாதிரி என்னையும் அடிங்க அச்சா, உங்களுக்கு அந்த உரிமையிருக்கு! இப்படி என்னை பார்க்காம, பேசாம இருக்காதீங்கச்சா! நான் இங்க சாயா குடிச்சே நாலு மாசம் ஆகுது, நீங்க எங்கிட்ட பேசாம நான் எதுவும் இங்க சாப்பிடுறது கூட இல்ல.. என்னை மன்னிச்சிருங்கச்சா, இன்னொரு காதலால உங்க மனசு கஷ்டப்படக் கூடாது நினைச்சேன். ராஜீவனுக்கு யாருமில்லைன்றத விட ஒரு பொண்ணு இருக்கா சொன்னா உங்க மனசு சந்தோஷப்படும் நினைச்சேன்.” என்று பாலச்சந்திரன் தவிப்பாக சொல்ல, அச்சுதன் நடை சில நொடி நின்றாலும் கோபம் தீராது வீட்டினுள் சென்றார்.
“அச்சச்சா!” என்று ஜெய் பின்னாடி போக, வினயன் அச்சம்மா வெட்டி வைத்திருந்த கேரட் துண்டை வாயில் போட்டபடி
“பாவம் டாடி நீங்க!” என்று வெறுப்பேற்றினான்.
“சும்மா இருடா!” என்ற பத்மினி பாலாவிடம் “அச்சன் கோவம் உனக்குத் தெரியாதடா பாலா, கொஞ்ச நாள் ஆகும். விஷமிக்கண்டா மோனே!” (கவலைப்படாத) என்றார் வாஞ்சையாக. பாலாவோ கலங்கிய கண்களோடு அமர்ந்திருக்க, உள்ளே சென்ற ஜெயனிடம்
“என் அச்சனுக்காக பேசல, உங்க கூட்டுக்காரன் சேகரன் மகன் பாலச்சந்திரனுக்காக பேசலாம் தானே அச்சச்சா?” என்று ஜெயன் கேட்க, அவர் முறைத்தார்.
“பாலா சொன்னதும் நான் உடனே நம்பினேனேடா, கொஞ்ச நாள் கழிச்சும் அவன் சத்தியம் பரையல தானே? ஊர்மிளாவை பார்க்கறப்ப எல்லாம் கேட்டேன் டா, அப்பவும் சொல்லல. இவனும் ராஜீவனுக்காக தானே பார்த்தான், என்னையும் உன் அச்சம்மாவையும் யாரும் புரிஞ்சிக்கலடா! என் கோவம் உனக்கு புரியுதாடா ஜெயா?” என்று அச்சுதன் ஆற்றாமையுடன் ஜெயனிடம் கேட்க
மெல்ல புன்னகையுடன் அவர் கைப்பற்றியவன், “கோவப்படாதீங்க அச்சச்சா! எனக்குப் புரியுது. பச்ஷே யோசிங்க அப்பா சொன்ன பொய்யால எவ்வளவு நல்லது நடந்திருக்கு. இத்தன வருஷம் வராம இருந்த மாமா வந்தார், விஜயனுக்குப் பிடிச்ச பொண்ணோட கல்யாணம், யாருமில்லாத பிந்துவுக்கு நம்ம எல்லாம் இருக்கோம், எல்லாம் விட ஊர்மிளாவுக்கும் எனக்கும் கல்யாணம். நாரதர் கலகம் நன்மையில முடியும்னு அச்சம்மா சொல்லுவாங்க, அப்படித்தானே?” என்று ஜெயன் அச்சுதனிடம் கேட்க, அவர் முகத்திலும் புன்னகை.
“அப்பா ரொம்ப ஃபீல் பண்றார் அச்சச்சா, முன்னாடியெல்லாம் நினைச்ச நேரம் இங்க வருவார். இப்போ வாசலோட அச்சம்மாவை பார்த்துட்டு போயிடுறார், நீங்க பேசாம அவர் ரொம்ப கஷ்டப்படுறார்”
“நானா அவன துரத்துனேன்?” என்று கடுகடுத்தாலும் அச்சுதன் வெளியே வந்தார். மீண்டும் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தவர்
“மினி! இவனுக்கு ஒரு சாயா கொண்டு வந்து கொடு” என்று முறைப்பாக சொல்ல, பாலச்சந்திரன் அச்சுதன் பக்கம் சென்று “மன்னிச்சிடுங்க அச்சா” என்றிட
“எல்லாரும் என்னை ஏமாத்த பார்த்தாலும் எண்டே பகவதி அம்மைக்கு என்டெடுத்து காருண்யம் உண்டு! (என் பகவதி அம்மாவுக்கு என் மேல கருணை உண்டு) ராஜீவன் பொண்ணு என் ஜெயனுக்கு மனைவியா வரப்போறா, என் கண்ல இத்தன வருஷம் படாத எங்க பேத்தி இனி தேவிகுளத்துல இருப்பா, இத்தன வருஷம் என் சொந்தத்தை பிரிச்சு வச்சாலும் போக போற காலத்துல எல்லாரையும் எனக்குக் கொடுத்துட்டா!” என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லியவர் கண்களை மூடி “எண்டே பகவதி” என்று கைக்கூப்பி வணங்கினார்.
“ஜெயேட்டா! என்ன சொல்லி அச்சச்சனை கன்வீன்ஸ் பண்ணின”
“நாரதர் கலகம் நன்மையில முடியும்னு சொன்னேன்” என்று ஜெய் சொல்ல, பாலா உடனே
“என்னை நாரதர்னு சொன்னியாடா?” என்று கோபமாக சொல்ல, ஜெயன் அவரை பதிலுக்கு முறைத்தான்.
வினயனோ “நாராயணா! நாராயணா!” என்று வம்பிழுக்க பத்மினி உடனே
“பாலா பாவம்டா! மனசுல ஒன்னும் வச்சுக்க மாட்டான், பாவம் அவன் ஏதோ செய்ய நினைச்சு இப்படி ஆகிடுச்சு. உங்க அச்சச்சன் சொல்ற மாதிரி எப்போ எது எங்க சேரணும் இருக்கோ அப்போ தான் சேரும். எந்தா ஏட்டா? நான் பரையுன்னது ஷரியானு அல்லே?”(நான் சொல்றது சரிதானே?) என்று கணவனிடம் அச்சம்மா கேட்க
“ஷரியானு மினி” என்ற அச்சுதன் முகமும் அமைதியாக இருந்தது.
“அப்புறம் அச்சச்சா! நான் ஊர்மியைப் பார்க்க போறேன்” என்று ஜெய் சொல்ல
“எந்தானு காரியம்?” என்று அச்சுதன் கேட்க
“நல்லா கேளுங்க அச்சா! பிரபாகரன் எங்கிட்ட பேசினார், தை மாசம் வரட்டும் நான் வீட்ல பேசி சொல்றேனு, அதுக்குள்ள உங்க பேரனுக்கு அவசரம்.” என்றார் பாலச்சந்திரன்.
“ஜெயன் எது செஞ்சாலும் பொறுப்பா செய்வான், அவனுக்கு பார்க்க ஆசைன்னா போய்ட்டு வரட்டும். பத்திரமா போய்ட்டு வாடா ஜெய்” என்றதும் புன்னகையுடன் அவரிடமும் அச்சம்மாவிடமும் ஆசிர்வாதம் வாங்கிய ஜெயன் தம்பியோடு வீடு சென்றான். வினயன் அண்ணனை விமான நிலையத்தில் விட ஜெயன் காஞ்சி சென்றபோது மாலையாகிவிட்டது.