இரத்னவேல் ஜெய்ச்சந்திரனை வீட்டுக்கு வர சொல்லியிருந்தார். ஜெய் காஞ்சிபுரம் சென்று இறங்கியதுமே அவருக்கு அழைத்து
“தாத்தா! நான் காஞ்சிபுரம் வந்திருக்கேன், உங்களை பார்க்கணும்” என்று அனுமதி கேட்டிருந்தான்.
அவன் வீடு சென்ற நேரம் யாருமில்லை. பெண்கள் எல்லாரும் கோவிலுக்கு சென்றிருக்க, அண்ணனும் தம்பியும் அலுவலகத்தில் இருந்தனர். இரத்னவேல் மட்டுமே வீட்டிலிருந்தார். இவன் வாசலில் நின்று குரல் கொடுக்க,
“உள்ளே வாடா” என்ற ரத்னவேலின் கம்பீரக்குரல் கேட்டது.
“நல்லாயிருக்கீங்களா தாத்தா?” என்றவனை முறைத்தபடியே உட்கார சொன்னவர், சில நிமிடம் அவனோடு பல மாதங்கள் முன்பு பேசியதை அசைப்போட்டார்.
ஜெய் அவரை தனியே சந்தித்து பேச நினைத்தபோது அவர் மறுக்க, தேசிகன் தான்
“இருடா அந்த பையனும் என்ன பேசுறான் கேட்போம்” என்று நண்பரை சமாதானம் செய்திருந்தார்.
ஜெய் ரத்னவேலை பார்த்து
“தாத்தா! நான் ஊர்மி பத்தி எல்லாமே பேசணும்?” என்றவனின் பார்வை தேசிகனை தொட
“இவனுக்கு எல்லாம் தெரியும், பேசிட்டு கிளம்புடா” என்றார் எரிச்சலாக. அவரின் அந்த பாவனையில் ஜெயன் முகம் வாடிட, தேசிகனுக்கு நண்பன் செயல் பிடிக்கவில்லை
“ஏண்டா அந்த பையன் அமைதியா பேசுறான், கேட்காம மூஞ்சியைக் காட்டுற?” என்று திட்ட
“போற இடமெல்லாம் வந்து தொந்தரவு பண்றது நல்ல பழக்கமா?” என்று ஜெய்யை முறைத்தபடி கேட்டார்.
“டேய் ரத்னா! உன் பேத்தி பின்னாடி சுத்தாம உன் பின்னாடி சுத்துறானு சந்தோஷப்பட்டுக்கோ டா” என்று கிண்டலாக தேசிகன் சொல்ல ஜெயனுக்கு சிறு புன்னகை. சிரமப்பட்டு அடக்கியவன்
“உங்களை கோவப்படுத்தணும்னு நான் நினைக்கல தாத்தா…” என்று ஆரம்பித்தவன் அவன் அப்பா ஃபோட்டோவை மாற்றி அனுப்பிய கதையிலிருந்து, இவனுக்கு ஊர்மிளாவை பிடித்தது வரை அத்தனையும் சொன்னான்.
தேசிகன் உடனே “ஏன்பா ஊர்மிளாவும் உன்னை விரும்புறாளா” என்று கேட்க
“ஆமா ப்ரண்ட் தாத்தா, ஊர்மிக்கு என்னை பிடிக்கலன்னா இங்க வரைக்கும் நான் வருவேனா? ஊர்மிக்கு என்ன பிடிச்சாலும் ஒன்னும் ப்ரோயஜனமில்லை, ஊர்மிளா என்னை பிடிக்கும்னு சொல்லும்போதே எங்க வீட்ல உள்ள எல்லாருக்கும் உன்னை பிடிக்கணும், அப்போதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன் சொல்லிட்டா.” என்றிட, ரத்னவேலுக்கு வழக்கம்போல் பேத்தியை நினைத்து பெருமை.
“ஜெய்யை பார்க்க பாவமா இருக்குடா, யோசிச்சு சொல்லுவோமே” என்று தேசிகன் பரிந்து பேச
“இவனா கற்பனை பண்ணி ஒன்னு நினைச்சா நான் ஒத்துக்கணுமா? உனக்கு நான் எல்லாம் சொன்னேன் தானே? அப்புறம் என்ன?” என்று ரத்னவேல் பல்லைக் கடிக்க
“ஏன் தாத்தா? உங்களுக்கு ஊர்மி பத்தின உண்மை தெரிஞ்சாலும் மனசை மாத்த முடியல தானே? எனக்கும் அப்படித்தான்! உங்க பேத்தியை பார்த்த பார்வையில எந்த பொண்ணையும் அது வரைக்கும் நான் பார்த்ததில்லை, இனி பார்க்க போறதுமில்லை! உங்க பிரச்சனை என்ன தாத்தா? நாங்க ராஜீவன் மாமாவுக்கு பழக்கமா இருக்கிறதால?” என்று ஜெய் சரியாகக் கணித்துக் கேட்டிட, ரத்னவேல் பார்வை ஜெயனை நேருக்கு நேராக சந்தித்தது.
“அதான் என் பிரச்சனை, போதுமா?” என்று ரத்னவேலும் உண்மையைப் பேச
“அதுல என் தப்பு என்ன தாத்தா? எனக்கு ஊர்மிளாவை எங்க அப்பா பார்த்தா பொண்ணாதான் தெரியும்! அவளுக்கு என்னை பிடிச்சாலும் இவ்வளவு யோசிச்சு என்னை வேண்டாம் சொன்னா, வேணும்னு நினைச்சாலும் உங்க சம்மதம் வேணும்னு சொல்றா. ஊர்மி உங்க விருப்பத்தை நினைக்கிறப்ப, நீங்க அவ விருப்பத்தை கேளுங்களேன். நாங்க ராஜீவன் மாமா வீட்டோட பழக்கமா இருந்தாலும் என்ன தப்பு?” என்றிட ஜெய்யின் அந்த உறுதி ரத்னவேலை அசைத்தது.
தேசிகன் ஜெயனை பார்த்தவர் நண்பரின் உணர்வு புரிந்து “தம்பி, நாங்க பொறுமையா பேசிட்டு சொல்றோம், நீ கிளம்பு ஜெய்” என்றார் நல்ல விதமாக.
ஜெய்யும் எழுந்தவன் “ஊர்மிக்கு மட்டுமில்ல தாத்தா! எனக்கும் உங்க சம்மதம் வேணும், எனக்கு ஊர்மியோட குடும்பமும் சேர்ந்துதான் வேணும். எங்க அம்மா கொஞ்ச வருஷம் முன்னாடி தவறிட்டாங்க தாத்தா, நான் அப்பா தம்பி மட்டும்தான்! நேத்து உங்க வீட்டுக்கு வந்தப்ப பெரிய மாமா சின்ன மாமா எல்லாம் பார்த்த பின்னாடி நானும் என் தம்பியும் அப்படி இருக்கணும்னு நினைச்சேன்.” என்றவன் அவரின் பதில் எதிர்ப்பார்க்காது சென்றுவிட்டான்.
இன்று அதையெல்லாம் யோசித்த ரத்னவேல்
“ஏன் தொரைக்குப் பொறுக்க முடியாதா? இவ்வளவு அவசரக்காரனா நீ?” என்று கோபமான குரலில் கேட்க
“உங்களை பார்த்து ஊர்மியைப் பார்க்க கேட்க நினைச்சேன் தாத்தா” என்றதும்
“ராஸ்கல்!” என்ற ரத்னவேல் சிரித்துவிட்டார். அவரின் சிரிப்பை ஆச்சரியமாக பார்த்தான்.
“டேய்! என்ன ஏதோ வயசுப்பொண்ணை பார்க்கிற மாதிரி என்னை ஆ’ன்னு பார்க்கிற” என்று ரத்னவேல் கிண்டலாகக் கேட்க
“ஊர்மி நீங்க ரொம்ப ஃப்ரண்ட்லினு சொல்லுவா தாத்தா, அதை நம்பி வந்தேன். இதுவரைக்கும் நீங்க சிரிச்சே நான் பார்க்கல, அதான் ஷாக்காயிட்டேன்” ஜெய்யும் சிரிப்போடு சொல்ல
“படவா! அரசியல்வாதி அளவா சிரிக்கணும், அளவா முறைக்கணும்! ப்ரண்ட்லி எல்லாம் என் பேத்திக்குத்தான்” என்றவர் குரல் ஊர்மிளா பற்றி பேசவும் மென்மையானது.
“அவ என் பேத்தி மட்டுமில்லடா! என் அம்மா! என்னடா இந்த பெருசு பில்டப் கொடுக்கிறான் நினைக்காத, என் மனைவி இறந்தப்ப ஊர்மிக்கு அஞ்சாறு வயசு இருக்கும், என்னால யார்கிட்டயும் துக்கத்தைக் காட்ட முடியல, அத்தன வருஷம் நான் வெளியே அரசியல் பண்ணினேனா என் மனைவி வீட்டை கட்டி காப்பாத்தினா! என் புள்ளைங்க ரெண்டு பேரையும் ஒழுக்கமா வளர்த்தது அவதான்! அவ இல்லைனதும் எனக்கு அதை தாங்க முடியல. என் ரூம்ல அடைஞ்சு கிடந்தேன், யாரும் என்னை சாப்பிட்டியானு கூட கேட்கல.”
“அது தப்பில்லை! என் பசங்க எல்லாம் அம்மா போன துக்கத்துல இருந்தானுங்க, மருமவ பொண்ணுங்க மகனுங்களை கவனிச்சாங்க. பெரிய பேரப்பசங்க ஆச்சி இல்லைனு அழுதாங்க, என் காமாட்சி மட்டும் என் ரூமுக்கு வந்து என்னை சாப்பிடு தாத்தா சொல்லி அவளுக்கு அவங்க அம்மா கொடுத்த தட்டைத் தூக்கிட்டு வந்தா! எல்லாருக்கும் பாசமிருந்தது, ஆனா நினைப்பு, அக்கறை எல்லாம் என் பேத்திக்கு இருந்தது. ஆச்சி இல்லைனு அழாத தாத்தானு கண்ணை துடைச்சு கொஞ்சி பேசிச்சு குழந்த..” என்றவருக்குக் கண்கள் கலங்க துடைத்தபடி பேசினார்.
“அதுக்கு அப்புறம் தான் என் மருமக சாப்பாடு கொண்டு வந்தா, அன்னிலேர்ந்து அவ மேல எனக்கு ரொம்ப பாசம், இருந்தாலும் ஊர்மிளா என்னைக்கும் நான் அவளுக்குக் கொடுக்கிற செல்லத்தை தப்பா யூஸ் பண்ணினதில்லை! ரொம்ப பாசமான அக்கறையான பொண்ணு எங்க ஊர்மி! என் புள்ள அதுக்குள்ள வளர்ந்திடுச்சு, என் பேத்தியை நல்லா பார்த்துக்கணும், பார்த்துப்பியா?” என்று ரத்னவேல் கேட்டிட ஜெயனுக்கு அவர் பேசிய விதத்தில் நெகிழ்வாக இருந்தது.
“உங்க அளவுக்கு இல்லைனாலும் என்னால முடிஞ்சளவு உங்க பேத்தியை நான் நல்லா பார்த்துக்கிறேன் தாத்தா” என்றதும் அவர் முறைத்தார்.
“என்ன தாத்தா?”
“என்ன நொன்ன தாத்தா? என் பேத்தியை எங்களை விட நல்லா வச்சுக்கணும், எங்க வீட்ல உள்ள அளவு கூட இல்லைன்னா என்ன பெரிய லவ்வு உன்னோடது? நீ சரிப்பட்டு வர மாட்ட” என்றார் கடுப்பாக.
“எண்ட அம்மே!” என்று மனதில் அலறிய ஜெய்
“அதெல்லாம் சொல்றதை விட செஞ்சாதானே தாத்தா சரியா இருக்கும்?” என்று கேட்க
“ம்ம், பொழச்சுப்போடா!” என்றார் முறைப்பாக.
ஜெய் “ஊர்மியைப் பார்க்க கேட்டேனே தாத்தா” என்று மீண்டும் கேட்டிட
“கோவிலுக்குப் போயிருக்கா டா, வந்துடுவா” என்றவர்
“உங்க அப்பாவை பேச சொல்லு, தை மாசில முகூர்த்தம் குறிச்சிடலாம்” என்று சொல்ல ஜெய்க்கு இன்பத்தினும் இன்ப அதிர்ச்சி.
ரத்னவேல் ஜெய்யும் ஊர்மியும் பேசிய நாள் முதலாக இதனையே யோசித்தார். தேசிகன் வேறு அவர் பேரன் ராஜனுக்குத் திருமணத்தில் இப்போது நாட்டமில்லை, அதிலும் ஊர்மிளா தனக்கு சகோதரி போல என்றிருந்தான்.
“என்ன காரணத்துக்கு ஊர்மியை ராஜனுக்குக் கொடுக்க சம்மதிச்ச? என் வீட்டுப் பொண்ணா பார்த்துப்போம்னு தானே? இப்ப என்ன கெட்டுப்போச்சு? இந்த ஜெய் பத்தி விசாரிச்சு நமக்குத் திருப்திதானே? அந்த ராஜீவன் வீடும் பக்கம்னா நம்ம பொண்ணுக்கு ஒரு துணை தானே? நாளைக்கு வேற இடத்துல கட்டிக்கொடுத்து ஊர்மி உன் சொந்த பேத்தியில்லைன்ற விஷயம் தெரிஞ்சா, எதாவது பிரச்சனை வரும். நீ கும்பிடுற காமாட்சிதான் அந்த பையனை அனுப்பி வச்சிருக்கா நினைச்சிக்கோ! பேச்சுக்கு சொல்லலடா, உண்மையில அவன் நல்ல பையன், என் பேரன் எல்லாம் அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து பேசமாட்டான். அது அவன் இயல்பு தப்பு சொல்லல, ஆனா ஊர்மிக்கு இவன் சரியா இருப்பான்” என்று தேசிகனும் ஜெய்க்காக பேசியிருந்தார்.
பிரபாகரன், கிருபாகரன் இருவரும் கூட பேசியிருக்க ரத்னவேலும் பேத்தியின் பிரியத்திற்கு சம்மதித்தார்.
“என்னடா பேசாம இருக்க?” என்று ரத்னவேல் குரல் கொடுக்க
“ஹான்! தாத்தா இப்போ நீங்க நிஜமாத்தான் சொன்னீங்களா?” என்று மீண்டும் கேட்டான்.
“எனக்கு உன் கூட விளையாடுற வயசாடா? உங்க அப்பா நம்பர் கொடு நான் பேசிக்கிறேன்.” என்றதும்
“தாத்தா! தேங்க்ஸ் தாத்தா” என்று ஜெய் மகிழ்ச்சியாக சொல்ல, அவன் புன்னகை கண்டு அவருக்கும் புன்னகை விரிந்தது.
இருவருமாக எழுந்து வெளியே வர, ஹாலில் பெண்கள் இரவு உணவுக்குக் கூடியிருந்தனர். ஊர்மிளா முதலில் இதனை கண்டு ஆனந்த அதிர்ச்சியடைந்தவள்
“தாத்தா!” என்று சந்தோஷமாகக் கூவியவள் அவர் அருகே செல்ல, பேத்தியை அணைத்துக்கொண்டவர்
“இப்போ சந்தோஷமா ஊர்மி” என்று கேட்க, ஊர்மிக்குக் கண்கள் கலங்கின.
“என்னாச்சு என் காமாட்சிக்கு?” என்று ரத்னவேல் பேத்தியைப் பார்க்க, தாத்தாவின் தோளில் முகம் புதைத்தாள் ஊர்மிளா. அவளின் பல மாத கனவு அவளுக்குப் பிடித்த ஜெய்யை அவள் பிரியமான தாத்தாவிற்குப் பிடிக்க வேண்டுமென்று. இப்போது அது நிறைவேறியிருக்க கண்கள் கனிந்தன.
“வாங்க வாங்க தம்பி! உட்காருங்க” என்று பெண்கள் ஜெய்யை கவனிக்க அவனோ அவர்களிடம் நலம் விசாரித்தான்.
ரத்னவேல் பேத்தியை தன்னிடமிருந்து விலக்கியவர் “பாவம் இந்த பயலுக்கு வந்ததுல இருந்து ஒன்னுமே கொடுக்கல, அவனை கவனி” என்றார்.
“ஜெய்” என்ற ஊர்மிளாவின் கண்கள் ஜெய்யிடம் காதலாய்ப் பேச, அவள் கால்கள் கூட உற்சாகத்தில் துள்ளின.
“ஊர்மி!” என்ற தாத்தாவின் அதட்டலில் சுய நினைவுக்கு வந்தவள் வேகமாக கிச்சனுக்குள் ஓட, ரத்னவேல் ஜெய்யோடு உட்கார்ந்து இயல்பாக பேசினார்.
கிருபாகரனும் பிரபாகரனும் வீட்டுக்கு வர அவர்கள் கண்ணில் இந்த காட்சி விழுந்தது. ஜெயனுக்கு சுட சுட இட்லி, சாம்பார், பொடி, சட்னி என்று உணவு பரிமாறப்பட, உண்டவன் பார்வையில் இவர்கள் விழ
“வாங்க மாமா, சாப்பிடுங்க” என்று ஜெய் அவர்களை வரவேற்க, கிருபாகரனுக்குத் தலை சுற்றியது.
அருகே நின்ற தம்பியிடம், “டேய் பிரபா! இது நம்ம வீடு தானே டா, இவன் என்ன நம்மளை வரவேற்கிறான்” என்று புரியாது கேட்க
“ஏண்டா வீட்டுக்கு வந்த பையனை வா’ன்னு சொல்லாம அப்படியே நிக்குறீங்க?” என்று ரத்னவேல் அதட்டவும் இருவரும் உள்ளே நுழைந்தனர். அப்படியே பேச்சோடு இரவு உணவு முடிய ஜெய் ஹோட்டல் ரூம் செல்கிறேன் என்றிட
“என் ரூம்ல தங்கிக்கடா” என்றார்.
“நீங்க அவ்வளவு மாடர்ன் தாத்தாவா?” என்று ஜெய் ஆச்சரியப்பட்டு கேட்க
“இதுல என்னடா இருக்கு? எங்க வீட்டுப் புள்ளையாகிட்ட, வெளியே தங்கினா நல்லாவா இருக்கும்?” என்று கேட்டவர்
“உனக்கு பத்தரை வரைக்கும் டைம், என் பேத்தி கிட்ட பேசிட்டு சமத்தா என் பக்கத்துல வந்து படு” என்று மிரட்டி சென்றிட, ஜெய் துள்ளலாக மாடியேறி ஊர்மிளாவுக்காகக் காத்திருந்தான். ஊர்மிளா கொலுசு சலசலக்க மாடியேறிட ஜெய் பார்வை ஊர்மிளாவை மொத்தமாய்க் கொள்ளையிட்டது. கோவிலுக்குச் சென்றவள் புடவை அணிந்திருக்க, முந்தானை காற்றில் பறந்தது.
ஜெய் அருகே வந்தவளை “ஊர்மி! எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று வேகமாக தூக்கி சுற்றினான்.
“அய்யோ இப்போதானே சாப்பிட்டேன், இறக்கி விடுங்க” என்று ஊர்மி பதற மெல்ல அவளை இறக்கி விட்டாலும் அவன் கையணைப்பிலிருந்து அவளை விடவில்லை.
ஊர்மிளா மூச்சு வாங்க, ஜெய் சிரித்தான்.
“அன்னிக்கு அவ்வளவு சொல்லியும் தாத்தா கிட்ட போய் பேசியிருக்கீங்க? இத்தன நாளா சொல்லல” என்று ஊர்மிளா முறைக்க, ஜெய் அதற்கும் சிரித்தான்.
“நம்மை பத்தி ஒருத்தங்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லைன்றப்போ அதை மாத்தணும், அவங்க நமக்கு முக்கியமில்லைனா வேற! ஆனா முக்கியமானவங்க அப்படி நினைச்சா எனக்குப் பிடிக்கல, வீட்ல எனக்குப் பொறுமையா பேச டைம் அமையல. அதான் தனியா மீட் பண்ணி பேசினேன்” என்றிட
“அது ஓகே! நேத்து பேசினப்போ கூட எங்கிட்ட வரேனு சொல்லவே இல்லை ஜெய்” என்று கேட்டாள்.
“தாத்தா இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பார் நான் நினைக்கவே இல்லை ஊர்மி” என்று ஜெய் சொல்ல
“நானும் ஜெய்! எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றவளை தன்னோடு இறுக்கியவனின் கண்கள் காட்டிய காதல் கிரணங்களில்(Beam, Moonlight) ஊர்மிளா அவன் கண்ணை பார்த்து நின்றாள்.
“ஊர்மி! நேத்து சொன்ன மாதிரி என் கண்ணை பார்த்து நீ! உன் கண்ணை பார்த்து நான்! லேசா காத்து மட்டும் இடையில, அதை கூட குறைச்சிடுறேன்… உன் முகம் என் கையில இருக்கு, நீ என்னை ஃபீல் பண்றியா” என்றவன் பேச ஊர்மிளா பதிலின்றி திணறினாள்.
காஞ்சியின் பனிக்கால காற்றில் ஊர்மிளாவின் கூந்தல் பறக்க, இருகையாலும் அதனை காதோரம் ஒதுக்கியவன் ஊர்மியின் முகம் பார்க்க அவள் கூச்சத்தில் தவித்தாள். தேவிகுளத்துக்காரனை மார்கழி காற்று ஒன்றும் செய்யவில்லை, ஆனால் காஞ்சிப்பாவைக்கு அந்த லேசான குளிரே தாங்கவில்லை. மொட்டை மாடி குளிரில் சிலிர்த்து நின்றவளை இன்னும் அணைத்திட குளிர் அடங்கவில்லை. ஜெய் மெல்ல அவள் நெற்றியில் உதடுகளை பதித்தவன் கொஞ்சமாக அழுத்தம் கூட்டினான்.
மெல்ல இறங்கி கன்னத்தில் குளிராய் ஒரு மார்கழி முத்தம்!
ஜெய்யின் செயலில் ஊர்மிளா வெட்கத்தில், தேகத்தில் புலரும் புது உணர்வில் தவித்திட அவன் தோள்களை இறுகப்பற்றியிருந்தாள். ஊர்மிளாவின் உள்ளே காதல் குளிர் பரப்பியது, இதமாக இனிதாக. அந்த நிலவொளி நிறைந்த ராத்திரியில் ஊர்மிளா நிற்க, அவன் வீட்டில் காதல் சொல்லிய திருவோண இரவு நினைவில் வர அன்றையை ஏக்கத்தை இன்று தீர்த்தான். மெல்ல அவள் இதழ் தீண்டி விலகியவன் அவளை அணைத்து நின்றான். வாட்சில் சத்தம் கேட்க, ஊர்மி பதட்டமாக விலக,
“ஊர்மி, அலார்ம் வைச்சேன்!” என்றதும் அவள் விழித்தாள். அவள் தோளில் கைப்போட்டவன்
“தாத்தா சொன்ன டைமுக்குக் கீழ போகணும்னு.. உங்கிட்ட பேசிட்டு சீக்கிரம் வர சொன்னார்.” என்றதும் ஊர்மிளா அவனை முறைக்க
“தாத்தா பேச சொன்னா நீங்க என்ன பண்ணுனீங்க?” என்று கேட்க
“இதுவும் தாத்தாவுக்காக! அவர் கொள்ளுப்பேரப்பசங்க பார்க்கணுமில்லை” என்றதும் ஊர்மிளாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிய,
“அதுக்கு சின்னதா ஒரு ப்ராக்டீஸ்” என்றவன் சிரிப்பில் ஊர்மிளாவும் சிரிப்போடும் உரிமையோடும் அவன் கைகோர்த்தாள்.
பிறகு எல்லாம் ஜெய்யை விட வேகமாக நடந்தது. ரத்னவேல் சொன்னது போல ஒரு மூகூர்த்த நாளில் அவரின் காமாட்சியின் கல்யாணத்தை திருவிழாவாக காஞ்சியில் நடத்தினார். பாலச்சந்திரனுக்கு மகன் திருமணத்தை தேவிகுளத்தில் நடத்த விருப்பம், இருந்தாலும் ஊர்மிளாவுக்காகவும் ரத்னவேலுக்காகவும் திருமணம் காஞ்சியில், வரவேற்பு தேவிகுளத்தில் என்று முடிவானது.
ராஜீவனையும் ரத்னவேல் திருமணத்திற்கு அழைக்க, அவரும் வந்தார். பிரபாகரன் தேவிகுளம் சென்று அச்சுதன் வீட்டினரை திருமணத்திற்கு அழைத்திருக்க, பேத்தி திருமணத்தைக் கண்ணார கண்டனர் அரக்க பறம்பில் வீட்டினர். திருமணம் முடியவும் வினயனோடு வரவேற்பு வேலைகளை பார்க்க எல்லாரும் கிளம்பிவிட, தேவிகுளத்துக்காரன் மட்டும் காஞ்சியில் இருந்தான்.
திருமணம் முடிந்த அடுத்த நாள் காலை அவர்கள் தேவிகுளம் செல்வதாக இருக்க, ஜெயன் கிருபாகரனோடு ஹாலில் உட்கார்ந்திருந்தான். ரத்னவேல் நேரம் பார்த்தவர்
“ஃப்ளைட்டுக்கு டைமாகிடுமே” என்று பெரிய மருமகளை பார்க்க
“நான் கூப்பிடுறேன் மாமா” என்று பிரபாகரன் அறைக்கதவை தட்டினார். உள்ளே ஊர்மிளாவோ ஜமுனாவை கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தாள்.
“எனக்குக் கஷ்டமா இருக்கு மா” என்று அழ, ஜமுனாவுக்கும் மகளை பிரிய வேண்டுமே என்று வருத்தம். அவரும் கண்ணீர் வடிக்க பிரபாகரனோ அவருக்குப் பிரியமானவர்கள் அழுவதை வேடிக்கை பார்க்க முடியாது இறுக்கமாக உட்கார்ந்திருந்தார்.
காலையில் எழுந்ததும் மகள் முகம் பார்ப்பதில் இருந்து இரவு உணவுக்கு ஒன்றாக கதை பேசுவது வரை மகளோடு கழியும் பொழுதுகள் நினைவில் எழ, இனி எல்லாம் நினைவாக இருக்கும் என்ற எண்ணத்தில் நெஞ்சடைத்தவுணர்வு. இருபத்தி நான்கு வருடமாக மகளோடு கழிந்திருக்க இனி என் பொண்ணு இல்லாம எப்படி இருப்பேன் என்ற பயமே பிரபாவுக்கும் ஜமுனாவுக்கும்.
“என்னடா வெள்ளம் இன்னும் வரல” என்று கிருபாகரன் தம்பியைக் கிண்டல் செய்ய, பிரபாவோ பதிலுக்குப் பேசாது அமைதியாக இருந்தார்.
மங்கை ஜமுனாவை அதட்டி வெளியே அழைத்தவர் ஊர்மிளாவை அவள் பெட்டியை எடுத்து வர சொன்னார். ஊர்மிளா அவர்கள் அறைக்குள் நுழைய, ஜெயனும் போனான்.
“என்னாச்சு ஊர்மி?” என்றபடி அவள் கலங்கிய கண்களை துடைக்க
“எனக்குக் கஷ்டமாயிருக்கு ஜெய்! அம்மா அப்பாவை விட்டு வரணும்… எனக்கு என்னமோ மாதிரி இருக்கு” என்றாள்.
“நாலே நாள் தானே? ரிஷப்ஷனுக்கு அவங்க ஊருக்கு வரப்போறாங்க”
“அப்போ நாலே நாள் தானே? நானும் அவங்களோட வரேன்” என்றதும்
“எண்ட அம்மே! பிச்சிடுவேன்! உனக்குப் பாவம் பார்த்தா கல்யாணம் ஆகி உடனே என்னை தனியா விடுவியா?” என்று சிரித்தவன் அவளை சமாதானம் செய்து அழைத்து வர எல்லார் ஆசியோடும் தேவிகுளத்திற்குப் புறப்பட்டாள் காஞ்சிப்பாவை.