காஞ்சியில் இருந்து தேவிகுளம் வந்து சேர அந்தியாகிவிட்டது. நான்கு நாளில் வரவேற்புக்கு செல்வதால் ஊர்மிளாவோடு யாரும் துணைக்குப் போகவில்லை, ஊர்மிளாவிற்கு தேவிகுளம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்வும் கொடுத்திருக்கிறது. இந்த முறை அந்த உணர்வு பெருக்கம் அதிகமாகவே இருந்தது, காஞ்சியைப் பிரிந்து வந்திருக்கிறாள். இனி தேவிகுளத்தில் அவளின் மொத்த வாழ்க்கையும் என்பதை திருமணம் உணர்த்தியிருக்க, பிடித்தவனோடு திருமணம் என்ற மகிழ்ச்சியைக் காட்டிலும் அடுத்த நாளே காஞ்சியை விட்டு வந்தது அவளை மனதளவில் மிகவும் சோர்வாக்கியது.
தேவிகுளத்தின் அந்தி குளிர் காஞ்சிப்பட்டையும் தாண்டி அவளை தாக்கிட, கைகளை இறுக கோர்த்துக்கொண்டாள். வினயனும் விஜயனும் அவர்களை அழைக்க விமான நிலையம் வந்துவிட, ஊர்மிளா வேடிக்கை பார்ப்பது, உறங்குவது என்றிருந்தாள். ஜெய்ச்சந்திரனின் வீடு வர அச்சுதன் வீட்டினர் அத்தனை பேரும் அங்கிருந்தனர், காஞ்சியில் பேத்திக்கு உரிமையாய் செய்ய முடியாததை இங்கு ஜெயனின் அச்சச்சனாக செய்ய காத்திருந்தார். பாலச்சந்திரனும் அவர் மனைவியும் ஒற்றை பிள்ளைகள் என்பதால் நெருங்கிய சொந்தமில்லை. எல்லாம் பங்காளி முறையில் உள்ளவர்களே, அவர்களும் வரவேற்பு இருப்பதால் வீட்டில் ஒன்றிரண்டு சொந்தங்களே. பத்மினியே பேரனுக்கும் பேத்திக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்.
ஜெய் ஊர்மிளாவின் கைப்பற்றி புன்னகையுடன் நிற்க, அச்சம்மா இருவரையும் இறைவனை வணங்கி ஊர்மிளாவை விளக்கேற்ற சொன்னார்.
“ப்ர்ஷ் ஆகிட்டு வரோம் அச்சம்மா” என்ற ஜெய்ச்சந்திரன் ஊர்மிளாவோடு மாடியறைக்குச் சென்றான்.
ஊர்மிளா காஞ்சியில் கட்டிய அடர் அரக்கு நிற பட்டில் இருந்தாள், முகம் கழுவி தலையை மட்டும் வாரியவள் ஜெயனுக்காகக் காத்திருக்க அவனும் தயாராகி வந்தான். ஊர்மிளா ஜெய் வீட்டில் விளக்கேற்றி இறைவனை வணங்கிட, ஜெய் அம்மாவை மனதில் நினைத்து நின்றிருந்தான். பாலச்சந்திரன் மகனிடம்
“அச்சன் அம்மைகிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க ஜெய்” என்று சொல்ல ஊர்மிளாவின் கைப்பற்றி அச்சுதன் பத்மினி கால்களில் விழுந்து எழுந்தான். பின் பாலச்சந்திரன் ராஜீவன் என்று ஆசிர்வாதம் வாங்கிட, அச்சம்மா பேத்திக்குத் தலை நிறைய மல்லிப்பூ வைத்தார். பாலச்சந்திரனின் மாமன் மகன் வந்திருக்க, அவர் மனைவி அவர்கள் பக்கம் சடங்கினை எல்லாம் செய்ய வைத்தார்.
ஆசுவாசமாக எல்லாரும் அமர ஊர்மிளாவுக்கு அந்த வீடு ஒன்றும் புதிதல்ல, இனி அவள் வீடும் கூட! இருந்தும் தனியாக உணர்ந்தாள். ஜெய் விஜயன் வினயனோடு வரவேற்பு ஏற்பாடுகள் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, அச்சுதன் பாலச்சந்திரனுடன் பேச ஊர்மிளாவுக்கு அந்த கூட்டத்தில் ராஜீவனை காணவும் தான் ஆறுதலாக இருக்க அவர் தனியாக ஊஞ்சலில் உட்கார்ந்து மனோரமாவின் வார இதழை புரட்டிக்கொண்டிருந்தார்.
ஊர்மிளா அவர் பக்கத்தில் போய் அமைதியாக உட்கார, மகள் பக்கத்தில் வர புன்னகையோடு
“என்ன ஊர்மி? ஜெய் விட்டு இங்க வந்துட்ட?” என்று கேட்டார்.
“எல்லாரும் பேசிட்டு இருக்காங்க” என்றாள் முற்றத்தை நிறைத்திருந்த ரோஜா செடிகளைப் பார்த்தபடி.
“வீட்டை மிஸ் பண்றியாமா?” என்று ராஜீவன் கேட்க ஊர்மிளாவின் தலை அசைந்தது.
“ஜெய் உன்னை நல்லா பார்த்துப்பான்” என்று ராஜீவன் சொல்ல, ஊர்மிளா புன்னகைத்து
“இருந்தாலும் இப்போ நீங்க மட்டும்தான் எனக்கு வீட்டு ஃபீல் கொடுக்கிறீங்க, புது ஸ்கூலுக்கு வந்த மாதிரி இருக்கு. குளிர வேற செய்யுது..” என்றபடி கைகளை பரபரவென தேய்த்திட ராஜீவன் சிரித்தார்.
“காஷ்மீர் குளிர்ல இருக்கிறதால உங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபியா இருக்கு இல்ல..” ஊர்மிளா சொல்ல இன்னும் விரிந்து சிரித்தார். இவர்கள் பேசிக்கொண்டிருக்க வினயன் ட்ரேயோடு வந்தான்.
“ப்ரண்ட் உங்களுக்குக்காக நான் பாசமா போட்ட வினய் ஸ்பெஷல் ஃபில்டர் காஃபி, மாமா உங்களுக்கு சாயா” என்று நீட்டிட
“ஊர்மிக்கு மட்டும் காஃபியா?” ராஜீவன் வினயனை கேட்க
“ஜெயேட்டாவோட ஆர்டர், உங்களுக்கெல்லாம் சேச்சி போட்டாங்க, ஊர்மிக்கு மட்டும் நானே காஃபி போட்டேன்” என்று வினயன் சொல்ல
“ரொம்ப தேங்க்ஸ் வினய், இப்போதான் எனக்கு நல்லாயிருக்கு” என்று ஊர்மிளா காஃபியின் மணத்தை நுகர்ந்து, சுவை உணர்ந்து பருகினாள்.
இரவு உணவு முடிய ஊர்மிளா அவர்களை வேடிக்கைப் பார்த்து உட்கார்ந்திருக்க, ஜெயனின் பார்வை அவள் மீதிருக்க,
“நீ நம்ம ரூம்ல போய் ரெஸ்ட் எடு ஊர்மி” என்று அனுப்பி வைத்தான். ஊர்மிளா மாடிக்கு வந்தவள் வீட்டுக்கு அழைத்துப் பேசினாள். வீடியோ காலில் மகளை பார்த்த ஜமுனா
“என்னடி டல்லா இருக்க?” என்று கேட்க
“நீயும் அப்பாவும் மட்டுமாச்சும் என்னோட வந்திருக்கலாம், ஐ மிஸ் யூ” என்று புலம்பினாள். கண்ணிலும் ஈரம் சேர
“மூணு நாள்ல நாங்க அங்க வந்திடுவோம். கொஞ்ச நாள் அப்படித்தான் ஊர்மி இருக்கும், பழகிடும்டா” என்று சொல்ல பதில் பேசாமல் உதட்டினை மடக்கி அழுகை அடக்கி உட்கார்ந்திருந்த மகளை பார்க்க பிரபாகரனுக்குக் கஷ்டமாக இருந்தது.
“இங்க பாருடி, மூஞ்சியை இப்படி வைக்காத! முதல்ல புடவையைப் மாத்து, நான் கல்யாண டயர்ட்ல இருக்கேன். நீயும் உங்கப்பாவும் இப்படி மூஞ்சி வைச்சிருந்தா எனக்கு எங்க தூக்கம் வரும்? அம்மா மூணு நாள்ல உன் பக்கத்துல இருப்பேன். அதையே நினைச்சு ஃபீல் பண்ணக்கூடாது ஊர்மி, நீ அந்த வீட்டுக்கு மூத்த மருமக, பொறுப்பா இருக்கணும்.” என்று அறிவுரை சொல்ல, பிரபாகரனும் மகளிடம் சிறிது நேரம் பேசி வைத்தார். ஊர்மி அடுத்து தாத்தாவுக்குப் பேசியவள் குளித்து அம்மா சொன்னது போல் ஒரு மென் பட்டு புடவை கட்டி அப்படியே மெத்தையில் சாய்ந்தாள்.
களைப்பாக இருந்தாலும் உறக்கம் வரவில்லை. பத்து மணி போல் ஜெயனும் அறைக்கு வந்தான். மீண்டும் குளித்தவன் உள்பனியனும் வேஷ்டியும் அணிந்தபடி குளியலறையில் வந்தான், ஊர்மிளா
“என்ன இப்போ குளிக்கறீங்க? ஹீட்டர் போட்டீங்களா?” என்று விசாரிக்க
“அது எங்கம்மா பழக்கிவிட்டாங்க, ரெண்டு தடவ குளிக்கணும், பல்லு விளக்கணும்னு. குளிச்சிட்டு படுத்தா இன்னும் நல்லா தூக்கம் வரும் தெரியுமா, நான் பச்சைத் தண்ணியில தான் எப்பவும் குளிப்பேன், அது உடம்புக்கு ரொம்ப நல்லது!” என்றபடி அவள் பக்கமாக படுத்தான்.
“காலையில இருந்து ட்ராவல் பண்ணினது டயர்டா இருக்கா ஊர்மி? ரொம்ப டல்லா இருக்க?” என்று அவள் முகம் பார்த்து கேட்க
“அதுவும் டயர்ட், நான் எங்க வீட்ட மிஸ் பண்றேன். நீங்க தாத்தா கிட்ட சொல்லி அடுத்த வருஷம் கல்யாணம் வச்சிருக்கலாம்ல, இப்போதான் உங்களை பார்த்த மாதிரி இருக்கு, இவ்வளவு சீக்கிரம் கல்யாணம். கொஞ்ச நாள் எங்க வீட்ல இருந்திருப்பேன்” ஊர்மி புலம்ப
“ஓஹ் பின்னேஏஏஏ…” என்று ஜெயன் ராகமிழுத்தான்.
“என்ன பின்னே..?”
“ஏடி! உன்னை கல்யாணம் கட்ட நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன், நீ ஈசியா சொல்ற? எங்கப்பா, உன் அப்பா, தாத்தான்னு எத்தனை பேரை நான் ஒரு ஆளா சமாளிச்சிருக்கேன் தெரியுமா?” என்று ஜெய் சொல்ல, ஊர்மிளாவோ அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. அவள் பார்வையில் அது புரிந்த ஜெய்யும் அவள் கையைப் பிடித்து
“எனக்கு அக்கா தங்கச்சி இருந்திருந்தா இப்படி பொண்ணு கல்யாணம் ஆகி எப்படி ஃபீல் ஆகும் தெரிஞ்சிருக்குமோ என்னமோ? எனக்கு உன்னோட ஃபீலிங் புரியல ஊர்மி, பட் நீ கஷ்டமா ஃபீல் பண்றது புரியுது. உனக்கு என்ன வேணுமோ சொல்லு நான் பண்ணி தரேன், நீ சந்தோஷமா இருக்கணும். அதான் எனக்கு வேணும்” என்ற ஜெயனை ஊர்மிளாவுக்கு அதிகம் பிடித்தது. அந்த பிடித்தம் முகத்தில் புன்னகையைக் கொடுக்க
“சாரி ஜெய், உங்களை அப்செட் பண்ணிட்டேன். டயர்டா இருக்கா, அதான் ரொம்ப ஃபீல் பண்றேன்” என்று ஊர்மி சொல்ல
“நல்லா தூங்கி எழுந்திரு ஊர்மி, காலையில ப்ரஷா இருப்ப” என்றபடி ஜெய் விட்டத்தைப் பார்த்தபடி சொன்னவன் கண்களை மூடினான். ஊர்மிளாவும் அவனுக்கு முதுகுக் காட்டி திரும்பி படுத்தாள்.
இரவு நீண்டு போனாலும் ஊர்மிளாவுக்கு உறக்கமில்லை. அவள் புரண்டு புரண்டு படுத்தாள். அதில் ஜெயனின் உறக்கமும் களைந்தது, சிறிது நேரத்தில் தூங்குவாள் என்று ஜெயனும் கண்களை மூட, ஊர்மிளா உறங்கவே இல்லை. அவன் தலை பக்கம் படுத்தவள், கால் பக்கம் படுத்தாள். மீண்டும் தலை பக்கமே வந்து படுத்தாள். ஜெய்யும் ஒரு கட்டத்தில்
“என்னாச்சு ஊர்மி?” என்று கேட்க
“தூக்கம் வரல ஜெய்” என்றாள்.
“டயர்டா இருக்கு சொன்னியே ஊர்மி?”
“டயர்டா இருக்குத்தான், பட் புது இடமா எனக்குத் தூக்கமே வர மாட்டேங்குது”
“புது இடமா? நீ நம்ம வீட்டுக்கு இதுக்கு முன்னாடி மூணு தடவ வந்திருக்க” ஜெய் சொல்ல
“அப்போ எல்லாம் உங்க ரூம்ல, உங்க பக்கத்துலயா படுத்தேன்?” ஊர்மி கடுப்பாகக் கேட்டாள்.
“நேத்து உங்க வீட்ல உன் பக்கத்துல தானே படுத்தேன்?” ஜெய் திரும்பிக் கேட்க
“அது என் ரூம், என் பெட் ஸோ எப்பவும் போல தூங்கிட்டேன்.. அப்புறம் நீங்க…” என்றவளின் வார்த்தை நின்றது.
தேவிகுளத்தின் குளிரும் அருகே படுத்திருக்கும் கணவனின் அருகாமையும் அவஸ்தை கொடுத்து உறக்கம் பறிப்பதை எப்படி சொல்ல என்று ஊர்மிளா தடுமாறினாள்.
“நானும் உன் ஜெய் தானே ஊர்மி?”
“என்னை டிஸ்டர்ப் பண்றீங்க ஜெய்” என்று குற்றம் சொல்ல, ஜெயனின் பார்வை மாறியது.
உல்லாச சிரிப்போடு, “அப்படியா?” என்றபடி இன்னும் நெருங்கி படுக்க அவன் வெற்றுத்தோள் ஊர்மிளாவை உரசிட தேக நடுக்கம்.
“எனக்கு ஏற்கனவே குளிருது, இதுல நீங்க வேற ஜில்லுனு போங்க …ஜெய்” என்று ஊர்மிளா குற்றம் படிக்க
“எனக்கும் நீ இப்படி பண்றது டிஸ்டர்ப் பண்ணுதே ஊர்மி” என்றான் ஜெய்.
“சாரி! நீங்க தூங்குங்க” என்று ஊர்மிளா முகம் திருப்பி படுக்க
“எனக்கும் நீ பக்கத்துல இருக்கிறது டிஸ்டர்ப் பண்ணுதுதான், நேத்து கல்யாண டயர்ட்ல படுத்ததும் தூங்கிட்டோம். இன்னும் எத்தன நாள் இப்படி டிஸ்டர்ப் ஆகி தூங்காம இருக்க போறோம்? இப்படி ஏன் ராத்திரியை வேஸ்ட் பண்ணனும்?” என்றவனின் குரல் காதருகே ஒலிக்க குளிரோடு அவன் வார்த்தைகள் ஊர்மிளாவை சிலிர்க்க வைத்தன.
நேற்று இரவு ஊர்மிளா முதலிரவு என்று நினைத்து பயந்திருக்க, ஜெயனோ
“எனக்கு இதெல்லாம் ஆசையில நடக்கணும் ஊர்மி, அவசரத்துக்கோ அவசியத்துக்கோ நடக்கக் கூடாது. இப்போ நீயும் நானும் இருக்க டயர்ட்ல ஒன்னும் வேண்டாம், நான் சூப்பரா ஹனிமூன் ப்ளான் வைச்சிருக்கேன்” என்று சொல்லியிருந்தான்.
இப்போது அர்த்த ராத்திரியில் அவன் ஆசை குரல் அவஸ்தை கொடுத்தது. ஊர்மிளாவுக்கும் அவன் சொன்னதும் சரியெனப்பட்டது, இந்த அவஸ்தை நித்தமும் உறக்கம் கெடுக்கும் தானே? அவனை விட்டு தள்ளியிருப்பதால் தானே இந்த தயக்கம்? அந்த தடையை உடைந்தால் தளர்வாக இருக்கலாமே என்ற எண்ணம்.
இருந்தும் முதல் முறைக்கே உரித்தான அச்சமிருந்தது. முதல் முறைக்கென்றே ஒரு அழகிய ஆர்வமுண்டு! தெரியாது என்பதாலயே முதல் முறை ஒரு தைரியம் கொடுக்கும்.
“அப்போ ஹனிமூன்” இரவில் மெல்ல ஒலித்த ஊர்மிளாவின் குரல் ஜெயனுக்கு உன்மத்தம் கொடுத்தது.
“அது அடுத்த வாரம் தானே?”
“எனக்குப் பயமாயிருக்கு ஜெய்” ஊர்மி தயக்கம் உடைத்து சொல்ல
“எனக்கும் தான் ஊர்மி” என்று ஜெய்யின் பேச்சில் ஊர்மிளா
“என்ன உங்களுக்கு பயமா?” என்று வேகமாக திரும்பிக் கேட்டாள்.
“பின்னே? உனக்குத்தான் பயமெல்லாம் இருக்குமா? எனக்கும் ஃப்ர்ஸ்ட் டைம் பயமா இருக்கும்ல. உன்னை ஹர்ட் பண்ணிடக்கூடாதில்ல, அந்த டென்ஷன் வேற எனக்கு இருக்கு. அதே நேரம் எனக்கு ஊர்மி வேணும்” என்றான் அவளை அணைத்தபடி.
ஜெய் அத்தனை வெளிப்படையாக பேச ஊர்மிளாவுக்கும் அச்சத்தை மீறியது அவா. தன்னிடம் அவன் கொள்ளும் தேடலை அறிய ஒரு ஆவல். ஊர்மிளா இன்னும் வாகாக அவன் மீது சாய்ந்துகொள்ள அதுவே அவள் சம்மதம் சொன்னது.
“ஊர்மி?! உனக்கும் நான் வேணுமா?” ஜெயன் உரிமையாக ஆவலாக கேட்க
“ம்ம்ம்” என்ற அவள் மகரங்களின் ஒலி அவன் இறுக்கி அணைத்து இட்ட முத்தங்களால் நீண்டது. கழுத்தோரம் அவன் கொடுத்த முத்தங்களால் உள்ளும் புறமும் குளிர் வீசியது. உணர்ச்சி தழும்பலில் ஊர்மிளாவின் கரங்களும் ஜெயனை இறுக்கி அணைத்துக்கொண்டன.
“ஊர்மி” என்றவனின் மீசை அவள் காதில் உரச
“ஜெய் மீசை குத்துது” என்று ஊர்மிளா கன்னத்தை இழுத்து கண்களை சிலிர்த்து மூட, ஜெய்யோ புதிதாய் புலரும் உணர்வில் திளைத்திருந்தான். அசையாமல் அவன் மீசையும் இதழும் காதுக்கும் கழுத்துக்கும் இடையே அப்படியே இருக்க, அதுவும் அவஸ்தை கொடுத்து.
“ஜெய்..” என்று ஊர்மிளா அவனை தள்ளி முகம் பார்க்க
“நீதான மீசை குத்துது சொன்ன, அமைதியா இருந்தா அதுவும் டிஸ்டர்ப் பண்ணுதா…?” என்று கேட்டுவிட, அறையில் நிலவிய மெல்லிய விளக்கொள்ளியில் ஊர்மிளாவின் முகம் காட்டிய பாவனைகள் அவனை கொள்ளையிட்டன. வெட்கம் கொண்டு அவன் பேச்சில் முறைக்க அது இன்னும் ஈர்த்தது.
அந்த பாவனை இன்னும் ஜெயனை தூண்டிவிட, ஊர்மிளாவின் உதட்டு வரியைப் படித்து சுவைத்து ரசித்தவனுக்குள் மோகம் பூத்திட, பாவைக்குள்ளும் அதன் பரிமளம் வீச செய்தான்.
புது புது உணர்வுகள்! அத்தனையிலும் ஜெயனுக்குத் தன்னை எவ்வளவு பிடிக்கும் என்று ஊர்மிளா உணர்ந்தாள், இச்சையின் நிறம் கூட இஷ்டமாகி போனது!
‘ஊர்மி’ என்ற அவள் பெயரை அத்தனை நாள் சொன்ன விதத்தினை விட, அந்த ராத்திரியின் அர்த்தம் தேட உச்சரிக்கும் போது ஊர்மிளா மீதான தன் உன்மத்தத்தை உணர்த்தினான் ஜெய்ச்சந்திரன். காஞ்சிப்பட்டின் மென்மையாய் அவனின் காஞ்சி பாவையும் இருக்க தவித்தவன் அவளையும் தவிக்க வைத்தான். கூடி களைத்தவன் ஊர்மிளாவையே பார்த்தான், ஊர்மிளா அசதியாக புன்னகைக்க கன்னத்தைத் தட்டி எழுந்தவன், ஓய்வறை சென்று ஹீட்டர் போட்டு வந்தான். பத்து நிமிடத்தில் குளித்து வந்தவன்,
“ஹீட்டர் போட்டிருக்கேன் ஊர்மி” என்று சொல்ல, ஊர்மிளாவும் குளித்து வந்தாள். மணி ஐந்தாகிவிட ஊர்மிளா தலைக்குக் குளித்தவள் உறங்கவில்லை.
“கடைசி வரைக்கும் நம்ம தூங்கவே இல்லை ஊர்மி” ஜெய் கண்ணாடி முன் நின்று தலையைத் துவட்டும் ஊர்மிளாவிடம் ரசனையாக சொல்ல, அவன் பேச்சில் பூத்த புன்னகையை அவளின் கருகூந்தல் மறைத்துவிட ஜெய்யின் பார்வை அவளின் சுருளான இடைவரை நீண்ட அடர் கேசத்தைத் தொட்டது.
“ஏன் ஊர்மி? இவ்வளவு முடி எப்படி மெய்ண்டேய்ன் பண்ற, கஷ்டமா இல்ல?” என்று கேட்க
“எங்கம்மாவுக்கு என் முடியை மெய்ண்டேய்ன் பண்றது அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச வேலை, அதனால ஹேர் கட்னு பேச்சைக் கூட எடுக்க முடியாது.” என்றாள்.
“உனக்குப் பிடிக்கலன்னா கட் பண்ணிக்கோ”
“ஏன் உங்களுக்குப் பிடிக்காதா?” என்றவளை நோக்கி நெருங்கி வந்தவன் இடப்பக்கம் வழிந்த அவள் கூந்தலை ஒதுக்கி பின் கழுத்தில் முத்தமிட்டு நிலைத்தவன்
“உனக்கு என் மீசை டிஸ்டர்ப் பண்ணுது, எனக்கு உன் முடி டிஸ்டர்ப் பண்ணுது.. பாரு இப்ப கூட முத்தம் கொடுக்க விடாம டிஸ்டர்ப் பண்ணுது. தூரத்துல இருந்தா பார்த்தா ரசிக்க தோணுது, பக்கத்துல வந்தா கஷ்டம் கொடுக்குதே” என்றபடி அவன் ஊர்மிளாவின் இடையணைத்து முத்தங்கள் கொடுக்க
“ஜெய்… காலையில வேண்டாம்! நீங்க ஆரம்பிச்ச நிறுத்த மாட்டீங்க” ஊர்மி இடையைப் பிடித்திருந்த அவன் கையைப் பிடித்து சொல்ல
“ஏடி! ஒரு ராத்திரிதானே? அதுக்குள்ளவா தெரியுது..? நான் அப்படியா செய்றேன்?” என்று தன்னையறியாது கேட்க, ஊர்மிளாவின் இதழ்கள் கிண்டலாக வளைந்தன.
“நீங்க தூரமா இருக்க வரைக்கும் வேற மாதிரி இருக்கீங்க, பக்கத்துல வந்தா ஆளே மாறி போயிடுறீங்க” என்று ஊர்மிளா சொல்ல, ஜெய்ச்சந்திரனுக்கு மனைவி பேச்சு வெட்கம் கொடுத்தது. ஓரவிழியால் அவளை சிரிப்போடு பார்த்தவன் தலையைக் கோதியபடி தள்ளி நின்றான்.
“அப்போ எங்கம்மா கிட்ட உங்க மாப்பிள்ளையை என் முடி ரொம்ப டிஸ்டர்ப் செய்து, ஸோ கட் பண்ணிக்கிறேன் சொல்லிடவா ஜெய்?” என்று ஊர்மிளா முடியை கிளிப் போட்டபடி கேட்க
“எண்ட அம்மே! ஆள விடும்மா” என்று சிரித்தவன்
“காலையில் சாப்பிட்டு அப்புறம் தூங்கி ரெஸ்ட் எடு ஊர்மி” என்று மென்மையாக அவளை அணைத்துக்கொண்டான்.
“அப்போ நீங்க?”
“கொஞ்சம் வேலையிருக்கு, நான் மத்தியானம் தூங்கிக்கிறேன்.” என்றான்.
இருவரும் கீழ் இறங்கி செல்ல, ஊர்மிளா ஜெய் அம்மாவின் படத்தின் முன் விளக்கேற்றினாள். ஜெய்யும் அம்மாவை வணங்கிவிட்டு சந்தனம் எடுத்தவன் தனக்கும் வைத்து ஊர்மிளாவுக்கும் வைத்தான்.
“இது உனக்கு இன்னும் அழகா இருக்கும்” என்றான். அடுத்து பாலா, வினய் என்று எல்லாரும் வர காலை பொழுது உற்சாகமாக சென்றது. ஊர்மிளாவும் காலை உணவு முடித்து வீட்டுக்குப் பேசியவள் உறங்கிவிட, யாரும் தொந்தரவு செய்யவில்லை. மதியம் போல் ஜெயன் வீட்டுக்கு வந்து உறங்கியவன் மாலை நான்கு மணிக்கு எழுந்து வர ராஜீவனும் ஊர்மிளாவும் ஏதோ தீவிரமாக பேசியபடி நின்றனர்.