“நீங்க எனக்காகத்தான் சொல்றீங்கனு புரியுது ஜெய்..” ஊர்மிளா அவனுக்குப் புரிய வைக்க தெரியாது அவனையே பார்க்க
“உங்கப்பா கிட்ட சொல்லிட்டியா?” என்றான் ஜெய்.
“அப்பா கிட்ட கேட்டேன், அவர் உன்னிஷ்டம் சொல்லிட்டார். ப்ளீஸ் ஜெய்”
“ஊர்மி! ப்ளீஸ் நீ கெஞ்சாத! நமக்குக் கல்யாணமாகி இரண்டு நாள்தான் ஆகியிருக்கு, இப்போ போய் ஏன் டென்ஷனு சொன்னேன்” என்று ஜெய் சொல்வதும் ஊர்மிளாவுக்குப் புரிந்தது.
ஊர்மிளா அப்படியே நிற்க
“சீக்கிரம் கிளம்பு ஊர்மி, இப்போ கிளம்புனாதான் நைட் ஆலப்புழா ரீச் ஆகலாம். அஞ்சு மணி நேரம் மேல ஆகும்” என்றவன்
“அதானே! எங்க அச்சச்சனை மட்டும் பேசினா அமைதியா இருக்கிறது, அவர்னா மட்டும் இளக்காரம்” என்று ஜெய்யும் கடுப்பாக பேச
“எந்தாடா ஜெய் இது?” என்று ராஜீவன் முறைக்க
“என்னையும் தாக்கி பேசுற மாதிரி இருக்கே..” என்று ஊர்மிளா முன்னால் நகர்ந்து கணவனை பார்த்து சொல்ல
“உன்னையும்தான் பேசுறேன்” என்றான் ஜெய்.
“இரண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? ஊர்மி எங்கச்சனே என்னை பேசும்போது ப்ளஸி அப்பா என்னை பேசாம இருப்பாரா? பேசினா நான் வாங்கிப்பேன். நீ ரியாக்ட் பண்ணாத! ப்ளீஸ்” என்று அழுத்தமாக சொன்னவர் முன்னால் திரும்பி சாலையைப் பார்த்தார்.
“ப்ளஸி அம்மா இப்போ இல்லை, அவங்க அப்பா, அண்ணா ஃபேமிலி மட்டும் இருக்காங்க.” என்ற ராஜீவனிடம் ஊர்மிளா
“காயம்குளம்ல ப்ளஸியோட ப்ரண்ட் இருக்காங்க, அவங்க கிட்ட சொல்லி ப்ளஸி அப்பாவை பார்க்க பெர்மிஷன் கேட்க சொல்லியிருந்தேன். நாளைக்குக் காலையில வர சொல்லியிருக்காங்க”
“மாமா! காயம்குளமா? நான் ஆலப்புழாவுல ரூம் புக் பண்ணிட்டேன், நைட் அங்க ஸ்டே பண்ணிட்டு காலையில கிளம்பி போகலாம்” என்று ஜெய் சொல்ல ராஜீவனும் ஆமோதித்தார்.
இரவு பதினொரு மணி போல் ஆலப்புழா சென்றனர். ராஜீவன் அவர் அறைக்குப் போய்விட, ஊர்மிளாவும் ஜெய்யும் இன்னொரு அறைக்குச் சென்றனர். அரேபிக் கடலில் அலையோசை பால்கனி வரை கேட்டது. அமைதியான இரவு.
ஜெய் குளித்து வந்தவன் முகம் சுருங்கியிருக்க ஊர்மிளா என்னவென்று கேட்டிட
“இங்க தண்ணி சரியில்ல, உப்பா இருக்கு. நம்ம ஊர்ல தண்ணி ப்ரஷா இருக்கும்” என்று புலம்ப ஊர்மிளா முறைத்தபடி உடை மாற்றி வந்தாள்.
இருவரும் படுத்துவிட ஜெய் வண்டியோட்டி வந்த களைப்பில் உறங்கிவிட்டான். ஊர்மிளாவுக்கு உறக்கமில்லை, நாளை என்ன நடக்கும் என்ற யோசனை. ப்ளஸியின் வீட்டினரை பார்க்க அவளுக்கு சத்தியமாக ஆர்வமில்லை, ராஜீவனுக்காக மட்டுமே பார்த்தாள்.
“ஊர்மி! ப்ளஸி நீ பொறந்ததும் உன்னோட அவங்கப்பாம்மாவை பார்க்க போகணும்னு ரொம்ப ஆசைப்பட்டா, அது நடக்கல. அட்லீஸ்ட் உன்னோட ரிசப்ஷெனுக்கு அவங்களை கூப்பிடணும்னு தோணுதும்மா. உனக்கு எல்லாரோட ஆசிர்வாதமும் வேணும், ப்ளீஸ் நம்ம அவங்களை பார்த்துட்டு வரலாமா?” என்று மாலை கேட்ட போது மறுக்க முடியவில்லை. மகள் இறந்த போது கூட பார்க்க வராதவர்கள் இத்தனை வருடம் கழித்து மட்டும் என்ன மாறியிருக்க போகிறார்கள் என்ற எண்ணமே.
ஊர்மிளாவுக்கு காஞ்சியை விட்டு வந்த பிரிவுத்துயரே நீங்கவில்லை, இப்போதுதான் ஜெய்யோடு இணைந்து வாழ்க்கையைத் தொடங்கியிருக்க, அவன் சொல்வது போல் தேவையில்லாத டென்ஷன் என்று தோன்றினாலும் ராஜீவன் அவளிடம் எதையுமே உரிமையாகக் கேட்டதில்லை. அதோடு சேர்த்து ப்ளஸிக்காகவும் மகள் யோசித்தாள். இப்படி யோசனையில் உறக்கம் தொலைத்து பால்கனியில் நின்றபடி கடலை பார்த்தாள்.
“நாளைக்கு என்ன நடக்குமோனு டென்ஷனா இருக்கு ஜெய், அந்த தாத்தாவே அடிச்சிட்டார். இந்த தாத்தா என்ன செய்வாரோனு இருக்கு” என்று புலம்பினாள்.
“என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்னு வந்துட்டு ஏன் இப்போ டென்சன், ப்ளஸி அத்தையோட ஆசைக்காக வந்தாச்சு. அப்படி ராஜீவன் மாமாவை அடிச்சா நீ சும்மா இருப்பியா என்ன, இல்லைதானே? பார்த்துக்கலாம்” என்று ஜெய் அவள் முதுகை ஆறுதலாக தட்டிக்கொடுத்தவன்
“பீச் பக்கத்துல இருக்கு, வா கொஞ்ச நேரம் நடந்துட்டு வந்தா தூக்கம் வரும்” என்றவன் அவளை ஐம்பதடி தொலைவில் இருந்த கடலுக்கு அழைத்து போனான். அந்த கடற்கரை ரிசார்ட்டின் பின் பக்கம் கடல் இருக்க,
“இந்த மண்ணு எங்க பீச் மாதிரி இல்லாம வித்தியாசமா இருக்கே” என்றாள் ஊர்மிளா.
“உங்க ஊர்ல பீச் இல்லையே..”
“மெரீனா சொல்றேன்” என்றதும்
“அது பே ஆஃப் பெங்கால், இது அரெபியன் சீ! நான் சொல்லியிருக்கேன்ல எனக்கு ஆலப்புழா பீச் ரொம்ப பிடிக்கும்னு. மெரீனா எல்லாம் கூட்டம், கடலை ரசிக்க முடியாது” என்று ஜெய் சொன்னதும்
“ரொம்பத்தான்” என்று ஊர்மிளா முறைத்தாள்.
“என்ன ரொம்பத்தான்? எங்க ஊர்ல மலை, அருவி, ஆறு எல்லாமே இருக்கு. உன் காஞ்சிபுரத்துல என்ன இருக்காம்?” என்று கிண்டல் செய்ய
“எங்க காஞ்சிபுரம் ல பாலாறு ஓடுது, வேகவதி ஆறோட கரையில தான் காஞ்சிபுரமே இருக்கு தெரியுமா?” ஊர்மிளாவும் வாதாட
“எங்க ஊர் மாதிரி எப்பவும் ஒரே க்ளைமேட் இருக்குமா உங்க ஊர்ல? அதைவிட எங்க ஊர் ஆறு, குளம் எல்லாம் வத்தாம இருக்கும், உங்க ஊர்ல அப்படியா? தண்ணியே இல்லாம இருக்கிறது பேரு ஆறு இல்ல ஊர்மி!” தேவிகுளத்துக்காரன் விடவில்லை.
ஊர்மிளா அவன் கிண்டல் செய்யவும் கரையில் அவனோடு உட்கார்ந்திருந்தவள் கோபமாக எழுந்து அறையை நோக்கி நடக்க,
“ஏடி நில்லு!” என்று கத்த ஊர்மிளா கேட்கவில்லை. சிரிப்போடு வேகமாக அவளை நெருங்கியவன் அவள் கையைப் பிடித்திழுத்தான்.
“என் காஞ்சிபுரம் அழகியே! நில்லுடி” என்று ஜெய் சொல்ல ஊர்மிளாவுக்கு அவன் பேச்சு கொஞ்சம் இதம் கொடுத்தாலும்
“பேசுறதெல்லாம் பேசிட்டு.. உங்க மாமா மாதிரி தேவிகுளத்துக்காரர் காயம்குளத்துல பொண்ணு கட்ட வேண்டியதுதானே? உங்களுக்குப் பிடிச்ச மாதிரி ஆறு, கடல் எல்லாம் இருக்கே..” என்று கடுப்பாக முணுமுணுத்தவள் அவன் கையைத் தட்டிவிட்டாள். ஜெய்ச்சந்திரன் விடவில்லை.
ஊர்மிளாவை தோளோடு அணைத்து அப்படியே கரையில் சரிந்து உட்கார்ந்தவன்
“எனக்கு இந்த காஞ்சிபுரத்து பொண்ணைத்தானே பிடிச்சிருக்கு” என்ற ஜெய் ஊர்மிளாவின் முகத்தைப் பார்த்து சிரித்தான். அவன் சிரிப்பில் ஊர்மிளாவும் புன்னகைத்தாள்.
“என் ஊர்மிளாவோட ஊரு எனக்கு இஷ்டம் தான்” என்றான்.
“அய்யோடா” என்று ஊர்மி கிண்டலாக இழுக்க
“என்ன அய்யோடா?” என்று தன்னோடு அவளை சேர்த்தணைத்தவன்
“பரவாயில்லை நான் உன்னோட ஆலப்புழாவுக்கு வரணும்னு முன்னாடி சொல்லியிருக்கேன்ல, இன்னிக்கே மாமா நிறைவேத்திட்டார்” என்று சிரித்து
“இருட்டுல கடலை ரசிக்கிறது இருக்கே! அதுவும் பக்கத்துல நீ! நம்ம அடுத்த டைம் வரப்போ போட்டீங் போவோம், ப்ளான் பண்ணிட்டு வந்திருந்தா அம்பலப்புழா போயிருக்கலாம்.. அங்க பாயாசம் ரொம்ப ஃபேமஸ்” என்று ஜெய்ச்சந்திரன் ஆலப்புழாவை சுற்றும் திட்டம் சொல்ல, ஊர்மிளா பதில் பேசாதிருந்தாள்.
ஜெய் அவள் முகம் திருப்பிப் பார்க்க “நான் நாளைக்குப் ப்ளசிம்மா அப்பா என்ன செய்யப்போறார்னு கவலைல இருக்கேன், நீங்க ஆலப்புழா அம்பலப்புழான்னு ரசிச்சிட்டு இருக்கீங்க” என்றதும்
“பின்னே! நான் பாவம் ஊர்மி, இரண்டு நாள்தான் ஆகுது நமக்குக் கல்யாணமாகி, என்னை ரொம்ப கொடுமை பண்ற” என்றான் ஜெயனும்.
“கொடுமை பண்றன்னா..” என்று அவனை தன்னிடமிருந்து தள்ளிவிட மண்ணைத் தட்டிவிட்டு எழுந்த ஜெய் கடலில் கால் நனைத்தான். ஊர்மிளாவையும் இழுத்துவிட பேரலை ஒன்று இருவரையும் நனைக்க
“ஜெய்!” என்று கத்தினாள். ஜெய்யோ சிரித்தபடி அவளை அறைக்கு அழைத்துப்போனான். இருவரும் உடைமாற்றி படுக்க,
“ஜெய் சாரி” என்றாள் ஊர்மிளா.
“எதுக்கு?”
“கொஞ்சம் கொடுமைத்தான் பண்றேன்.. ” ஊர்மிளா குரல் இறங்க சொல்ல, அவள் சொல்லாமல் விட்டதும் ஜெயனுக்குப் புரிந்தது.
“ஏடி! இப்படி பேசாத!” என்று கன்னத்தைக் கிள்ளியவன்
“நீ கொஞ்சம் கண்கலங்கினா கூட எனக்குத் தாங்க முடியாது ஊர்மி, நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எனக்கு எப்பவும் எதுவும் நமக்குள்ள ஆசையா நடக்கணும், உன்னோட கவலை என்னோடதும் கூட! நாளைக்கு நினைச்சு ரொம்ப கவலைப்படுற, நானும் கூட இருப்பேன். கவலைப்படாத!” என்று ஆறுதலாக அணைத்துக்கொண்டான்.
ஜெயனின் பேச்சு ஊர்மிளாவுக்கு அத்தனை ஆறுதலாக இருந்தது, அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டவள் ஒருகட்டத்தில் உறங்கிப்போனாள். அடுத்த நாள் காலை ஜெய் சீக்கிரமே எழுந்து தயாரானவன் ஊர்மிளாவை எழுப்பினான்.
அவள் குளித்துக்கொண்டிருக்க பிரபாகரனிடமிருந்து மகளுக்கு அழைப்பு.
“மாமா! ஊர்மி குளிக்கிறா” என்று ஜெய் சொல்ல
“ஒஹ், ஓகே ஜெய்” என்ற பிரபாவின் கவலை குரலில்
“என்னாச்சு மாமா?” என்றான்.
“ராஜீவன் ப்ளஸிக்காக கேட்டான் ஜெய், அது நியாயமும் கூட! ஆனா அவங்க எப்படி நடந்துப்பாங்க எனக்குத் தெரியல. ப்ளஸி இறந்தப்போ நான் தான் அவங்க வீட்டுக்குப் போன் பண்ணி சொன்னேன், ப்ளஸி அண்ணா ரொம்ப ஹர்ஷா பேசினார். அதான்…” என்று பிரபா இழுக்க
“மாமா! நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாதீங்க” என்றான் ஜெய். அவரிடம் பேசி வைக்க பாலச்சந்திரன் அழைத்தார்.
“டேய் ஜெய்! ராஜீவன் என்ன பண்றான்? அப்பவே அவ்வளவு பேசினவங்கனு ராஜீவன் ஃபீல் பண்ணி சொல்லியிருக்கான். நீ பார்த்துக்கோ டா” என்றதும்
“அப்பா! கொஞ்சமாச்சும் உங்களுக்கு என் மேல பாசமிருக்கா?” என்றான் ஜெய் கடுப்பாக.
“ஏண்டா?”
“என் மாமனார் போன் பண்ணி பொண்ணை பார்த்துக்க சொன்னார், அது நியாயம். நீங்க உங்க ப்ரண்டை பார்க்க சொல்றீங்க, பையனுக்குக் கல்யாணமாகி இரண்டு நாள்தானே ஆகுது, இப்படி பஞ்சாயத்துக்குப் போயிருக்கானேனு ஃபீல் இருக்கா?”
“மோனே! இதெல்லாம் நீயா அடம்பிடிச்சு தேடிகிட்டது, ஊர்மிக்கு இத்தனை பேர் இருப்பாங்கனு தெரியும்தானே? நல்லவேளை கல்யாணத்துக்கு அவர் பெர்மிஷன் வாங்க வேண்டியில்லனு குருவாயுரப்பனுக்கு நன்றி சொல்லுடா!” என்றார் கிண்டலாக.
“அப்பா..”
“ஹாஹா! பார்த்துக்கோ ஜெய்” என்று அவர் வைத்துவிட, மூவருமாக காயம்குளம் கிளம்பினர். ஒரு மணி நேர பயணத்தில் காயம்குளம் செரக்கல் டேனியல் (Kayamkulam Cherakkal Daniel) வீட்டின் முன் கார் நின்றது.
எழுபது வயதிலிருந்த செரக்கல் டேனியலுக்கும் இரவெல்லாம் சரியான உறக்கம் இல்லை. மகள் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, ஏன் அவள் கணவன் என்னை பார்க்க கேட்டான் என்ற கேள்வியோடு மகளின் நினைவுகள் அதிகமாக உறக்கம் தொலைந்தது. என் மகளை என்னிடமிருந்து பறித்துவிட்டான் என்ற கோபம், அவளுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை என்ற ஆதங்கம் என்று டேனியல் வருத்தத்தோடு இருந்தார். காலை பத்து மணி போல் ராஜீவன் செரக்கல் இல்லம் வந்துவிட்டார். ஊர்மிளாவையும் ஜெய்யையும் காரில் இருக்க சொன்னவர்
“நான் முதல்ல பேசிட்டு வரேன் ஊர்மி, சொல்றப்ப நீ வா” என்று அவர்களை காத்திருக்க சொல்லி போனார். ராஜீவன் திருமணம் முடித்த அன்று ப்ளஸியோடு அங்கு கடைசியாக சென்றார், இன்று மீண்டும் ஒரு இறுக்கம் தயக்கம் எல்லாம் சூழ டேனியலை சந்தித்தார். அன்று ஒரு மகனாக, ப்ளஸீயின் காதல் கணவனாக டேனியலை சந்தித்த ராஜீவன் வேறு, இன்று ஊர்மிளாவின் தந்தையாக, மனைவியை இழந்த கணவனாக, டேனியலின் மகளை இழந்து அவர் முன் நிற்கும் ராஜீவன் வேறு!!