டேனியலின் மகன் மேத்யூவுக்கு ராஜீவனின் வருகை பிடிக்கவில்லை. ஆதலால் டேனியல் ராஜீவனை அவர் அறைக்கு வரவழைத்துப் பேசினார். சூடான தேனீர் ராஜீவன் முன் இருக்க, அதனை மறுக்க மனமின்றி குடிக்க
“எந்துகொண்டானு நிங்கள் எனை காணான் ஆக்ரஹிக்குன்னது?”(எதுக்கு என்னை பார்க்கணும்னு நினைச்சீங்க?) என்று டேனியல் கேட்க ராஜீவன் ஆழ மூச்செடுத்தவர் அத்தனையும் சொன்னார்.
ப்ளஸியின் மறைவு, அதன் தாக்கம் ஊர்மிளா பிரபாகரன் மகளாக வளர்வது என்று எதையும் மறைக்கவில்லை. சென்ற முறை என் மகளோடு வந்தவன் இன்று அவள் இல்லாமல் வந்திருக்கிறான் என்பதே நெஞ்சத்தைக் குத்த, எரிச்சலான மனதோடு ராஜீவன் பேசியதைக் கேட்டவருக்கு அவர் பேசி முடிக்கவும் பதில் பேச முடியாது நெஞ்சம் அடைத்தது.
“எல்லாத்தினும் ஷமிக்கணும் சாரே(எல்லாத்துக்கும் மன்னிச்சிடுங்க)” என்று ராஜீவன் கைக்கூப்பி மன்னிப்புக் கேட்க, டேனியல் அதுவரை அமைதியாக இருந்தவர் ராஜீவனின் கையைப் பிடித்து கீழிறக்கினார்.
“நிங்களுக்கு வேணுமெங்கில் ஞங்களுட மகள் புறத்து காத்து நில்க்குனு, ஞான் அவளை கொண்டு வராம். ப்ளஸீயுட ஆக்ரஹம்(உங்களுக்கு விருப்பம்னா எங்க பொண்ணு வெளியே காத்திட்டு இருக்கா, அவளை கூப்பிடுறேன். ப்ளஸீ ஆசை)” என்று கேட்டிட, ஆமோதிப்பாக தலையசைக்க ராஜீவன் ஜெயனுக்கு அழைத்தார்.
ஊர்மிளா ஜெய்யோடு உள்ளே வந்தவள் வேகமாக ராஜீவன் பக்கம் நின்று பார்க்க, அவர் புன்னகைக்கவும் தான் திருப்தி.
“நிண்டே பெயரந்தானு” என்று டேனியல் பேத்தியைப் பார்த்து கேட்டவர் அவர்களை உட்கார சொல்லி கை காட்டினார். ஊர்மிளா ராஜீவன் அருகே இருந்த சோஃபாவில் உட்கார பதில் பேச தெரியாமல் விழித்தாள்.
“அவள்க்கு மலையாளம் அறியில்லா” என்று ராஜீவனும் ஜெய்ச்சந்திரனும் ஒரே நேரத்தில் சொல்ல டேனியல் ஊர்மிளாவை பார்த்தார்.
நிச்சயம் இத்தனை வருடத்திற்குப் பின் இதனையெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை, மகள் இறந்த பின் அந்த வேதனையையும் மகளின் நினைவையும் சுமந்து வாழும் மனிதருக்கு, மகளின் பிரதியாக பேத்தி வந்து கண்முன் நிற்பாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
“ராஜீவன் அவர் அப்பாவையும் என்னையும் சேர்த்து மொத்தமா பழிவாங்கிட்டார் இல்ல, எங்க பேத்திக்கு எங்க மொழி கூட தெரியாம..” கோபத்தோடு கலந்த கிண்டல் தொனியில் டேனியல் பேச
“தாத்தா! உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” என்ற ஆச்சரியம் ஊர்மிளாவிடம். அதுவரை இருந்த பயம் சட்டென்று நீங்கிய உணர்வு அவரின் தமிழினால்.
“நான் சென்ட்ரல் கவர்மெண்ட் ஸ்டாஃப், தமிழ் நாட்ல அஞ்சு வருஷம் வர்க் பண்ணிருக்கேன், உன் பெயர் என்ன?” என்று கேட்க ஊர்மிளா பதில் சொல்ல, அவளருகே இருந்த ஜெய்ச்சந்திரனை பார்த்தார். ராஜீவன் மருமகனை அறிமுக செய்ய
“நாட்டில் எவிடயா?” என்று ஜெய்ச்சந்திரனிடம் கேட்க
“தேவிகுளம் முத்தச்சா” என்றான் ஜெய்ச்சந்திரன். அவரை வரவேற்புக்கு அழைக்க டேனியல் பேத்தியைப் பார்த்து
“நீ தாத்தாவை கூப்பிட மாட்டியா?” என்றார்.
“அப்படியில்ல தாத்தா! சாரி! நீங்க கோவமா இருப்பீங்க நினைச்சேன்னா..” என்று ஊர்மிளா சொல்ல
“உன் மேல எனக்கு ஏன் கோவம்? எனக்கு இவர் மேல, என் பொண்ணு மேலதான் கோவம். அதுக்குக் கூட மொத்தமா என்னை விட்டு போய் தண்டிச்சிட்டாளே..” என்றார் வருத்தமாக.
ராஜீவனை பார்த்த டேனியல் “மேத்யூ ப்ளஸி இறந்த விஷயத்தை எங்க கிட்ட சொல்லல, அவனுக்குக் கோவம் ஷாக். இரண்டு மூணு நாள் கழிச்சுதான் சொன்னான், அந்த கோவத்துல நான் அவன் கிட்ட ரெண்டு வருஷம் பேசல. அப்புறம் இருக்க மகனையும் கஷ்டப்படுத்த விரும்பல…” என்றார் பெருமூச்சுடன்.
சில நிமிடங்கள் அமைதியில் கழிய டேனியல் ஊர்மிளாவிடம்
“என் பொண்ணு வேற மதத்தை சேர்ந்த ஆளை கல்யாணம் செஞ்சது எனக்கு அப்போ பெரிய விஷயமா தெரிஞ்சது, அவ்வளவு கோவம் அவ மேல! எப்பவும் என் கண் முன்னாடி வராத சொன்னேன், ரோஷக்காரி அப்படியே போய்ட்டா..” என்றார் குரல் அடைக்க.
“தாத்தா! ப்ளீஸ்” என்று டேனியலிடம் ஊர்மிளாவும் வருந்தி சொல்ல
“இல்லம்மா! இப்ப ப்ளஸீயோட நீங்க குடும்பமா வந்திருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்னு மனசு ஏங்குது..” என்றார்.
“நீங்க வருத்தப்படாதீங்க சார் ப்ளீஸ்.” என்றார் ராஜீவனும்.
“அட்லீஸ்ட் என் ப்ளஸி அவளோட கடைசி காலத்துல அவ விரும்பினவரோட வாழ்ந்தா நினைச்சுக்கிறேன். உங்க பொண்ணு விஷயத்துல நீங்க எடுத்த முடிவை கேள்வி கேட்கிற உரிமை எனக்கில்லை, பட் நீங்க ஏன் ராஜீவன் ரீமேரேஜ் பண்ணிக்கல…?” என்று கேட்டார்.
டேனியல் உண்மையில் மகள் இறந்த பின் ராஜீவன் மறுமணம் செய்திருப்பார் என்றே நினைத்தார். பிரபாகரனும் மேத்யூ கோபமாகப் பேச, ஊர்மிளா பிறந்த செய்தி சொல்லவில்லை, மேத்யூவும் குழந்தையோடு தங்கை இறந்துவிட்டாள் என்றே நினைத்தார். மகளே இல்லாத போது டேனியல் ராஜீவனை பற்றி தெரிந்துகொள்ளவில்லை.
ராஜீவன் மென்புன்னகையோடு “இருந்தாலும் இல்லைனாலும் ப்ளஸ்ஸீ உங்க பொண்ணு இல்லையா? எனக்கும் அப்படித்தான் சார்! எனக்கு காதலி, மனைவி எல்லாம் ப்ளஸி மட்டும்தான்!” என்றார். டேனியலுக்கு வருத்தமாக இருந்தது, இந்த காதலுக்குத்தான் என் மகள் என்னை உதறி போனாளோ என்று கூட தோன்றியது.
“சாரி ராஜீவன்! அப்போ இருந்த மன நிலையில உங்களை ரொம்ப பேசிட்டேன், என் பொண்ணை விட நிறைய விஷயம் பெருசா தெரிஞ்சது. இப்போ வயசாகிடுச்சு, காலம் மாறிடுச்சு நானும் மாறிட்டேன். பட் மை சைல்ட் இஸ் நோ மோர்!” என்றதும்
“நீங்கதான் சார் என்னை மன்னிக்கணும், உங்க பொண்ணை என்னால காப்பாத்த முடியல, ஐ லாஸ்ட் ஹெர், ஐ லாஸ்ட் எவிரிதிங்!” என்று ராஜீவன் குற்றவுணர்ச்சியோடு சொல்ல ஊர்மிளாவின் கண்கள் கலங்கின.
“இட்ஸ் ஆல் ஃபேட்! விடுங்க ராஜீவன்” என்று டேனியல் தேற்றினார். டேனியல் இண்டர்காமில் அழைத்து பேத்திக்கும் ஜெய்க்கும் குடிக்க கொண்டு வர சொன்னார். பழச்சாறு குடித்த பின் மூவரும் எழுந்தனர்.
“தேங்க்ஸ் சார்!” என்று ராஜீவன் டேனியலின் கைப்பிடித்து சொல்ல, டேனியலும் ராஜீவனின் கையைப் பிடித்துக் கொண்டார்.
“நீங்க கண்டிப்பா ரிசப்ஷனுக்கு வரணும் தாத்தா, நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்” ஊர்மிளா மனதார அவரை அழைத்தார்.
“கண்டிப்பா!” என்ற டேனியல் அவரின் மேஜையிலிருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்து வந்தார். ஊர்மிளாவிடம் அதனை கொடுத்து பிரிக்க சொன்னார். உள்ளே பைபிளும் மரத்திலான க்ராஸும் இருக்க
“நீ படிச்சிருக்க மாட்ட, எனிவேஸ் இது என்னோட சின்ன பரிசு. காட் ப்ளஸ் யூ” என்று ஊர்மிளாவின் தலையில் கைவைத்து ஆசி வழங்க, ஜெய்ச்சந்திரன் ஊர்மிளாவோடு அவர் காலில் விழுந்து எழுந்தான். இருவரையும் அணைத்து ஆசிர்வதிக்க ராஜீவனுக்கு மனது நிறைந்தது.
சட்டென்று நினைவு வர இரண்டு கடிதங்களை தனது பாக்கெட்டில் இருந்து டேனியலிடம் நீட்டினார் ராஜீவன்.
டேனியல் கேள்வியாகப் பார்க்க, “ப்ளஸ்ஸி உங்களுக்கு எழுதினது, அப்போ நீங்க இருந்த கோவத்துல எப்படியும் ரிப்ளை போட மாட்டீங்கனு எழுதி அவளே வச்சுருந்தா, குழந்தையோட நேர்ல வந்து கொடுக்கணும்னு ஆசைப்பட்டா” என்றிட தன் மகளின் கடிதம் என்றதும் மனதில் சொல்ல முடியாத உணர்வு. மறுப்பின்றி வாங்கி கொள்ள
“தாத்தா! ப்ளீஸ் நான் இருக்கும்போதே படிக்கிறீங்களா?” ஊர்மிளாவுக்குப் ப்ளஸியின் நினைவாக இருப்பது அந்த கடிதங்கள் தானே, ஆர்வத்தில் அவள் கேட்டுவிட ராஜீவன் உடனே மறுத்தார்.
“தாத்தா கிட்ட நீ ஃப்ர்ஸ்ட் டைம் கேட்டிருக்க… அதுக்கென்ன வா சேர்ந்து படிப்போம்” என்றிட ராஜீவன் ஊர்மிளாவை முறைத்தார். ஜெய்யும் கூட மனைவியை முறைக்க ஊர்மிளா கண்டுகொள்ளவில்லை.
“உங்களுக்கு விருப்பமில்லைன்னா நீங்க இங்க இருங்க, ஊர்மிளா நீ வா” என்று அவர்களை விட்டு படிப்பதற்கென்றே ப்ரத்யேகமாக இருக்கும் உள்ளறைக்குப் பேத்தியை அழைத்து சென்றார்.
“தேங்க்ஸ் தாத்தா..” என்று ஊர்மிளா சொல்ல
“இதுக்கெதுக்கு மா தேங்க்ஸ்?” டேனியல் புன்னகையோடு கேட்டவர் அவரின் கண்ணாடியை அணிந்தார்.
“இதுக்கில்லை தாத்தா! நீங்க அவரை ஹர்ட் பண்ணல, நேத்து இங்க வரதுக்கு நான் ரொம்ப பயந்தேன், பட் தேங்க்ஸ். நீங்க அவரை மன்னிச்சு புரிஞ்சிக்கிட்டதுக்கு” என்று ஊர்மிளா உணர்ந்து சொல்ல
“உனக்கு இப்போதான் விஷயம் தெரியும்னு ராஜீவன் சொன்னார், நீ அவருக்காக இவ்வளவு பார்க்கிற.. உள்ள வந்ததுமே அவரை நான் பேசிட்டேனோனு பார்த்த இல்லையா?” என்று சரியாகக் கேட்டிட ஊர்மிளா ஆச்சரியமாகப் பார்த்தாள். டேனியல் தன்னை கவனித்திருக்கார், புரிந்து கொள்கிறார், ராஜீவனை பேசவில்லை என்பதெல்லாம் அவர்மீது மரியாதை வரவைத்தது. ரத்தப்பாசமோ என்னமோ இயல்பாகவே டேனியல் மீது பாசம் துளிர்த்தது.
“எனக்கு சின்ன வயசுல இருந்தே ராஜீவன் அங்கிளை பிடிக்கும் தாத்தா, எங்கப்பாவோட ப்ரண்டா.. நானும் இவர் மேல கோவமா இருந்தேன் பெத்த பொண்ணை கூட வளர்க்கலனு… பட் எனக்கு அவரை புரிஞ்சிக்க முடிஞ்சது. அவர் பாவம் தாத்தா தனியா ரொம்ப கஷ்டப்படுறார், அவருக்கு ப்ளஸீம்மா மேல ரொம்ப காதல்… அவங்க இல்லாம அவர்..” என்று ஊர்மிளா பேசிக்கொண்டு போக
“காதல் மட்டும்தான் பெருசா மோளே? என் பொண்ணு மேல எனக்கு ரொம்ப பாசம், அவ இஷ்டப்படி எல்லாமே லைஃப்ல செஞ்சுகொடுத்தேன். என்னை என் பொண்ணுக்கிட்ட இருந்து பிரிச்சது அந்த காதல்! அந்த காதலை பிடிக்கல எனக்கு, அதனால ராஜீவனையும் பிடிக்கல.. அந்த காதல்னால எனக்கும் என் பொண்ணுக்கும் அடிக்கடி சண்டை, கடைசிவரைக்கும் நாங்க இரண்டு பேருமே எங்க முடிவை மாத்திக்கல… ஒரு அப்பாவா ராஜீவன் அனுபவிக்கிற வேதனைக்குக் கொஞ்சமும் குறைஞ்சதில்ல என்னோட கஷ்டம்… அதுவும் இந்த வயசுல நான் உயிரோட இருக்க, என் பொண்ணு இல்ல..” என்றவரின் கண்கள் கலங்கி போனது.
ஊர்மிளாவுக்கும் அவர் பேச்சில் கண்ணீர். முதல்முறை தன் பேத்தி வீட்டுக்கு வந்திருக்க, அவள் அழுவது பிடிக்கவில்லை.
“இட்ஸ் ஓகே! டோண்ட் க்ரை மா” என்றவர் “இந்த லெட்டரை படிப்போம். அழக்கூடாது” என்று சமாதானம் செய்தார்.
அந்த கடிதம் படித்த பின் ஊர்மிளாவும் மனதும் சரி டேனியலின் மனதும் சரி அப்படியே மாறிப்போனது.