கடிதத்தை ஊர்மிளா பிரித்து டேனியலிடம் நீட்டினாள். டேனியலின் கைகளில் மெல்லிய நடுக்கம், மகளின் கடைசி வார்த்தைகள் இவையோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. இத்தனை வருடத்தில் மகளின் இறப்பை இழப்பை ஏற்று வாழக் கற்றிருந்தாலும் இன்று ராஜீவன், ஊர்மிளாவின் வருகை அவர் மனதை மொத்தமாக அசைத்தது. பழைய கோபங்கள், வருத்தம், ஆதங்கம் எல்லாம் மீண்டும் திரும்பின. அது அத்தனையும் பேத்தியால் அவருக்கு மறைந்து போயின. ப்ளஸியின் ஜாடையை விட ராஜீவனின் ஜாடை ஊர்மிளாவிடம் அதிகம்.
ஆனால் ஊர்மிளாவின் குரல், அவள் விரல்களை அசைக்கும் விதம், கடிதத்தைப் பிரித்தது என்று ஒவ்வொரு அசைவிலும் ப்ளஸியாகவே டேனியலின் கண்களுக்குத் தெரிந்தாள் ஊர்மிளா. கடிதத்தைப் படிப்பதற்கு ஏதுவாக கண்ணாடியை சரியாக மாட்டியவர் மகளின் கையெழுத்தை வருடிக்கொடுத்தார்.
ஊர்மிளா உடனே, “ப்ளஸிம்மா ஹேன்ட் ரைட்டிங் ரொம்ப அழகா இருக்குல்ல தாத்தா?” என்று அவர் அருகே உட்கார்ந்தபடி கேட்டாள். ராஜீவனுக்கு எழுதிய கடிதங்களை படிக்க ஊர்மிளாவுக்கு இருந்த ஆவலை விட இப்போது ஆவல் குறைவுதான், அது காதல் கடிதங்கள் என்பதால் ஒரு அலாதி ஆர்வம். இருந்தும் ப்ளஸ்ஸி தன்னை பெற்றவர் என்ற எண்ணமும், அவரின் வார்த்தைகளை நான் தெரிந்து கொள்ள வேண்டும், இப்படியாவது என் வாழ்வில் அவர் இருக்கட்டும் என்று நினைத்தே கடிதங்களை படிக்கக் கேட்டாள்.
டேனியல் தலையசைத்தவர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் கலந்திருந்த கடிதத்தைப் பேத்திக்கு மொழிப்பெயர்த்தபடி படித்தார்.
பிரியமான அப்பச்சனுக்கு,
இந்த லெட்டர் உங்களுக்குப் போஸ்ட்ல எல்லாம் வராது, இது படிக்கும்போது நான் உங்க பக்கத்துல தான் இருப்பேன். வழக்கம்போல் என் ப்ளஸ்ஸீயோட கையெழுத்து மாதிரி யாருக்கும் வராதுனு ஒரு கர்வத்தோடு நீங்க படிப்பீங்க.
நான் லெட்டர் போட்டு நீங்க படிக்காம கிழிச்சிடுவீங்களோனு எனக்குப் பயமா இருக்கு அப்பச்சா, நான் அனுப்பி நீங்க பதில் போடலன்னா அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். கண்டிப்பா நீங்க கோவமா இருப்பீங்க, அதுக்கு உங்களுக்கு உரிமையிருக்கு.
இப்பவும் எனக்குப் புரியலச்சா, என்னை படிக்க அனுப்பி உலகத்தைப் பார்க்க வச்சது நீங்க! மனுசங்களை மதிக்கணும்னு சொல்லி வளர்த்த என் அப்பச்சனுக்கு மதம் முக்கியமா போயிடுச்சா? எங்க காதலை வேண்டாம் சொல்ல உங்களுக்கு அது ஒரு காரணம். அல்லே? அப்படி மதம் பிரச்சனைன்னா அது எங்க தப்பில்லை, நான் நேசிக்கிறது அச்சுதன் மகன் ராஜீவனை, அவர் நேசிக்கிறது டேனியல் பொண்ணு ப்ளஸியை.
எனக்குத் தெரியும் அப்பச்சா உங்களுக்கு நான் ராஜீவனை எப்படி முக்கியமா நினைச்சேனு கோவம். அப்படியில்லை அச்சா! வாழ்க்கையில எல்லா உறவும் தானா அமையறது, நட்பும் வாழ்க்கைத்துணையும் அப்படியில்லை! நம்ம அமைச்சுக்கலாம், எனக்கு ராஜீவன் மேல விருப்பம் வர காரணமே நீங்க!
ஏன்னா இந்த பட்டாளக்காரன் ரொம்ப டிசிபிலிண்ட், நேர்மை, பாசக்காரன். நீங்க நம்ம மேத்யூ இப்படியெல்லாம் இருக்கணும் சொல்லுவீங்களே அப்படியெல்லாம் ராஜீவன் இருக்கார். என்னோட காதலனா கணவனா இல்லாம நீங்க ராஜீவனை பார்த்திருந்தா நீங்க அவன் நல்ல குட்டியானு’னு சொல்லியிருப்பீங்க. உங்களை மாதிரி கொஞ்சம் கோவம் வரும், எங்கிட்ட அதுவும் ரொம்ப வராது! நம்ம சரியா பேசி ஒரு வருஷம் மேல ஆகுது, நான் சந்தோசமா இருக்கேன் அச்சா… ஆனா அதுல ஒரு நிறைவில்லை.
ராஜீவன் என்னை போன வாரம் சிரபுஞ்சி அழைச்சிட்டுப் போனார், இவிட தூவல் காலம் அப்பச்சா! நம்முடே நாட்டை, காயம்குளத்து காற்றை நம்முடே வீட்டை எல்லாத்தையும் மிஸ் பண்றேன் அச்சா. நம்ம சொந்த ஊர் மழை தர சந்தோஷம் வேற இல்லையா? அம்மையும் மேத்யூவும் கூட என் மேல கோவமா இருப்பாங்க இல்ல..
என் வாழ்க்கையைப் பத்தி உங்களுக்கு ஒரு விருப்பம், எனக்கொரு விருப்பம்! நம்ம விருப்பங்கள் ஒத்துப்போகலன்றதால எனக்கு நீங்க முக்கியமில்லைனு கிடையாது.
ஒரு குழந்தை வெளியே வந்து விவரம் தெரிஞ்ச பின்னாடிதான் அச்சன் அம்மானு பாசம் இருக்கும், பச்ஷே அச்சனும் அம்மையும் அந்த குழந்தை உருவானதிலிருந்தே பாசம் வச்சிருப்பாங்க. நான் உங்களை நினைக்கிற மாதிரி நீங்களும் என்னை நினைச்சிட்டே இருப்பீங்கனு எனக்குத் தெரியும் அப்பச்சா! ஐ மிஸ் யூ சோ மச்!
ராஜீவன் என்னை நல்லா பார்த்துக்கிறார், அவர் அச்சனுக்கு போன் செஞ்சு சமாதானம் செய்றேனு திட்டு வாங்கிட்டு இருக்கார். பின்னே அச்சன் திட்டிட்டார்னு ஃபீல் பண்ணுறார். எனக்கு அப்படியெல்லாம் முடியாது அச்சா! உங்களுக்குப் பிடிக்காதுனு தெரிஞ்சு முடிவெடுத்து அந்த முடிவை உங்களை ஏத்துக்க வைக்க நினைக்கிறதும் பிடிவாதமல்லே? உங்களுக்கு எங்க மேல கோவப்பட எல்லா ரைட்ஸும் இருக்கு. அந்த கோவம் போகவும் காலம் வேணுமே… அந்த காலத்துக்கு ரொம்ப ஆசையா காத்திருக்கேன்.
என்று ஒரு கடிதம் முடிய டேனியல் மனதின் பாரம் கூடியது. ஊர்மிளாவை பார்த்தவர்
“ப்ளஸீ மூணு வருஷமா சொன்னா நான் காதலிக்கிறேனு. எனக்கு பிடிக்கவே இல்லை, ராஜீவன் பெயரை சொன்னதுமே எங்க மதமில்லைனு ரிஜெக்ட் பண்ணிட்டேன். ஒவ்வொரு முறையும் பேசி பாருங்க அப்பச்சானு கெஞ்சினா, சண்டை போட்டா.. என்னால மாற முடியல. இப்ப எல்லாமே மாறிட்டாங்க, நானும்! அதுவும் அவ கல்யாணம் வேண்டாம் சொல்லியும் நான் என்னை மீற கூடாதுனு அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணினேன், அந்த கோவத்துல பயங்கர சண்டை…” என்று டேனியல் வருத்தமாக பேசினாலும் என் மகளை என்னிடமிருந்து பிரித்தது காதல் என்ற கோபம் மட்டும் தீரவில்லை. அவர் இறுக்கமாக இருக்க அடுத்த கடிதம் எடுத்தாள் ஊர்மி.
“இதை பிரிக்கவா தாத்தா?” என்று ஊர்மிளா கேட்டிட, அவர் தலையசைக்கவும் பிரித்துக் கொடுத்தாள்.
பிரியமான அப்பச்சனுக்கும் அம்மைக்கும்,
நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அப்பச்சா! அதுக்குக் காரணம் இன்னும் இரண்டே வாரத்துல எங்களுக்குக் குழந்தைப் பிறக்க போகுது. நான் ராஜீவன்ட்ட சொல்லிட்டேன் குழந்தை பொறந்து டாக்டர் ட்ராவல் பண்ணலாம் சொன்னதும் நான் காயம்குளம் போயிடுவேனு, தேவிகுளத்துக்காரனுக்கு அவங்க ஊர் போக ஆசை.
ஆனா நான் விடமாட்டேன் அப்பச்சா.. நான் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். இப்பவும் நீங்க கோவப்படுவீங்கனு தோணினாலும் குட்டி ப்ளஸி மேல கோவப்பட மாட்டீங்க அல்லே? பெருசா வளர்ந்து காதலிச்சு உங்க விருப்பத்தை மீறி கல்யாணம் செஞ்ச ப்ளஸி மேல தானே கோவம்? உங்க பேச்சைக் கேட்டு உங்க கை பிடிச்சு நடந்த குட்டி ப்ளஸி மேல உங்களால கோவப்பட முடியாது இல்லையா அச்சா? எனக்கும் ராஜீவனுக்கும் பொண்ணு வேணும் ரொம்ப ஆசை!
என் பொண்ணு பார்க்கிறப்ப என் அப்பச்சனோட கோவமெல்லாம் போயிடும். நான் உங்களை பிரிஞ்சு இருக்க மாதிரி நீங்களும் என்னை நினைச்சு கஷ்டப்படுவீங்கனு தெரியும் அச்சா, எங்க குழந்தையோட முகத்தைக் கூட இன்னும் பார்க்கல, ஆனா அதோட அசைவு ஒவ்வொரு முறை உணரும்போது நீங்களும் அம்மையும் என்னை எவ்வளவு மிஸ் பண்ணுவீங்கனு எனக்குப் புரியுது.
நம்ம நல்லா பேசி இரண்டு வருஷம் ஆச்சே அச்சா, எனக்கு உங்களோட பேசணும். மேத்யூவோட சண்டை போடணும், அம்மாவோட மீன் கறி சாப்பிடணும், நம்ம குடும்பமா ஆலப்புழா போட் ஹவுஸ் போகணும். நேத்து கோவத்துல என்னை எங்கச்சன் கிட்ட இருந்து பிரிச்சிட்டேன் சொல்லி ராஜீவனை கத்திட்டேனா, உடனே தொட்டா வாடி(தொட்டா சிணுங்கி) முகம் சுருங்கிடுச்சு. நான் உங்களை பத்தி பேசி பேசி ராஜீவனுக்கு இப்போ சீக்கிரம் பொண்ணு வேணுமாம். அவர் பொண்ணு அவரை பெஸ்ட் அச்சன் சொல்லுவாளாம், ஆனா எனக்கு எங்கச்சன் தானே பெஸ்ட்?!
என்னை பைக்ல ஆலப்புழாவுல இருந்து காயம்குளம் வரைக்கும் கூட்டிட்டு போற எங்கச்சனை ரொம்ப மிஸ் பண்றேன், நான் கேட்கும்போதெல்லாம் என்னை திட்டிட்டே பழம்பொறி செஞ்சு தர அம்மாவை மிஸ் பண்றேன். நானும் நீங்களும் பேசும்போதெல்லாம் பொறாமையா பார்த்து என்னை வம்பிழுக்கிற மேத்யூவேட்டாவ மிஸ் பண்றேன். நீங்க என்ன நினைச்சீங்க அச்சா? ராஜீவனோட போய்ட்டா உங்களை நினைக்க மாட்டேனா… அவனை நான் எவ்வளவு திட்டுறேன் தெரியுமா? அவனும் அவங்க அச்சன் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றான்.. நீங்க வேணும்னா பாருங்க மேத்யூவை விட ராஜீவனை பிடிக்கும் உங்களுக்கு.. ப்ளஸி சாய்ஸ் பெஸ்ட் சாய்ஸ்னு ஒரு நாள் சொல்லுவீங்க!
அச்சா இரண்டு வருசமா எனக்கு கிறிஸ்துமஸ் கிஃப்டே நீங்க கொடுக்கல, எல்லாம் சேர்த்து வச்சு எனக்குக் கொடுக்கணும் சொல்லிட்டேன். அந்த மாங்கதொலி மேத்யூ என்னோட கிஃப்டை எல்லாம் எடுக்க பார்ப்பான், அவன் முகத்துல எங்க குஞ்சுமோளை அடிக்க வைக்க போறேன் அச்சா… அடுத்த திருவோணம் எங்க குழந்தைக்கு முதல் ஓணம்! உங்களோட நான் இருக்கணும் அச்சா. உங்களை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன், எங்க குழந்தையை நீங்க நிச்சயம் வெறுக்க மாட்டீங்க எனக்குத் தெரியும். அது மாதிரி என்னோட ராஜீவனையும் உங்களுக்குப் பிடிக்கணும் அச்சா! அவன் சக்கர முத்தானு அச்சா! இதோ இப்போ லெட்டர் எழுதும்போது கூட என் குஞ்சுமோள் என்னை உதைக்கிறா…
ஐ மிஸ் யூ அச்சா… எங்களுக்குக் குழந்தை பொறந்ததும் உடனே இந்த லெட்டரை போஸ்ட் பண்ண சொல்லிடுவேன். நீங்க எங்களுக்காக காத்திருங்க, ரொம்ப ஆசையா எங்க குழந்தையைப் பார்க்க காத்திருக்கேன் அப்பச்சா, குழந்தையை உங்க கையில் கொடுத்து நான் உங்க முகத்துல உள்ள சந்தோஷத்தைப் பார்க்கணும். அதே அளவு உங்களையும் அம்மையும் பார்க்க ஆசையா இருக்கேன்.
இப்படிக்கு,
பிரியங்களுடன்
செரக்கல் ப்ளஸி டேனியல்
என்ற கடிதத்தைப் படித்தவர் உடைந்து போய் அழுதார். டேனியல் அதுவரை கலங்கினாலும் பெரிதாக உணர்வுகளை காட்டாமல் இருந்தார், அதீத உணர்ச்சிவசமின்றி ஊர்மிளாவையும் ராஜீவனையும் ஒரு தெளிந்த மனதோடு அணுகினார். ஆனால் மகளின் கடிதம் உடைய வைத்தது.
உண்மையில் மகள் தன் விருப்பத்தை மீறி சென்றது அவ்வளவு கோபம் கொடுத்தது, என் பேச்சை கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கலாமே என்ற எண்ணமில்லாமல் இல்லை. எப்படியோ இதுதான் விதி என்று இத்தனை நாளாய் மனதைத் தேற்றியிருந்தார்.
என் மகள் என்னை வேண்டாம் என்று உதறி சென்றாள் என்று வெந்த மனிதருக்கு மகளின் வார்த்தைகள் அதில் நிலவிய வாஞ்சை எல்லாம் மொத்தமாக அவரை அசைத்தது. என் மகள் எப்போதும் என்னை நினைத்தே இருந்திருக்கிறாள், கடைசியாக கூட அவளை பார்க்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே, எத்தனை ஆவலாக குழந்தையை எதிர்ப்பார்த்து காத்திருந்திருக்கிறாள் என்று நினைக்க நினைக்க மனம் ரணமானது.
ப்ளஸீயின் மகள் வளர்ந்து திருமணமாகி அவர் அருகே நின்றாலும் கூட அவர் ப்ளஸி அவருக்கு முக்கியமல்லவா? அந்த வலியை மறைத்து அதுவரை இயல்பாக காட்டினாலும் மகளின் வார்த்தைகள், அவளின் ஏக்கமெல்லாம் டேனியலை கண்ணீரில் தள்ள, உணர்ச்சிப்பெருக்கில் பாதி கடிதத்துக்கு மேல் ஊர்மியிடம் அவரால் மொழிப்பெயர்க்க முடியவில்லை. அவர் கடிதத்தை நெஞ்சோடு சேர்த்து கண்மூடி அழுதிட ஊர்மிளாவின் கண்களிலும் கண்ணீர்.
அவர் பாதி படித்தவரைக்குமே ஊர்மிக்கு என்றுமே தோன்றாத அளவு ப்ளஸியை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் வந்தது. அதைவிட டேனியலின் அழுகை அது மிகவும் பாதித்தது. அவள் டேனியலிடம் தாத்தாவை பார்க்கவில்லை, ஒரு பிரியமான தந்தையை, மகளை பிரிந்த தந்தையைப் பார்த்தாள். அவள் அவரிடம் பிரபாகரனை பார்த்தாள்! திருமணமாகி நான்கே நாட்களில் பிரிவை உணர்ந்தவளுக்கு டேனியல் ப்ளஸியின் பிரிவு பெரிதாக பாதித்தது.
அதுவரை ப்ளஸீ ராஜீவனின் காதல் மனைவி, இவளை பெற்றவள் என்ற பார்வை பார்த்த ஊர்மிளாவுக்கு ப்ளஸி டேனியலின் பிரியமான மகள் என்ற உண்மையையும் உரைத்தது.
“தாத்தா! ப்ளீஸ் அழாதீங்க” என்று குரல் கமற ஊர்மிளா சொல்ல, டேனியலின் கண்ணீர் நிற்கவில்லை. கிட்ட தட்ட இருபது நிமிடங்கள் கண்ணீர் விட்டவர் மெல்ல தன்னை நிலைப்படுத்தினார்.
“டூ மினிட்ஸ்” என்று ஓய்வறை சென்று வந்தவர் முகம் துடைத்து மீண்டும் கண்ணாடி அணிந்து கடிதம் எடுக்க
“ப்ளீஸ் வேண்டாம் தாத்தா..” என்று அவர் வருந்துகிறார் என்று ஊர்மிளா தடுக்க,
“ஐ அம் ஓகேம்மா! நீ…நீ தெரிஞ்சிக்கணும்.. என் பொண்ணை நீ தெரிஞ்சிக்கணும்..” என்றவர் முழுவதுமாக படித்து முடிக்க மீண்டும் கண்ணீர். அதனை துடைத்தவர்
“உண்மையில என்னை, என் பேச்சை உதறிட்டு போய்ட்டானு கோவம்.. ரெண்டு வருஷம் ஒரு வார்த்தை பேசல, ஒரு போன், ஒரு லெட்டர் இல்லை.. பேசியிருந்தா நிச்சயம் திட்டியிருப்பேன். இங்க இருந்து போகும்போது அவ பார்த்துட்டு போனது எனக்கு மறக்காம இருக்கு, அவ கல்யாண கோலத்துல உங்கச்சன் கையைப் பிடிச்சிட்டு வந்தது எனக்கு இன்னும் கோவம்.. பட் இன்னிக்கு அவ மனசு புரியுது, நிச்சயம் என் ப்ளஸி சொல்ற மாதிரி என் கொச்சு மோளே, உன் கிட்ட என்னால கோவப்பட முடியல.. என் பொண்ணுக்குப் பிடிக்காத வாழ்க்கை அமைச்சுக்கொடுத்து அவ விதி முடிஞ்சு போய் சேர்ந்திருந்தா.. அதுக்கு அவ பிடிச்சவனோட சந்தோஷமா வாழ்ந்திருக்கா நினைச்சு சந்தோஷப்பட்டுக்கிறேன்..”
டேனியல் உணர்ந்து சொன்னார்.
“நீங்க அவங்களை நினைச்ச மாதிரி அவங்களும் உங்களையே நினைச்சிருக்காங்க தாத்தா.. நீங்க அழுதா அவங்க கஷ்டப்படுவாங்க. ப்ளீஸ் அழாதீங்க” என்று ஊர்மிளா சொல்ல
“நான் அழலடா என் வாவே! நீ அம்மச்சனை முன்னாடியே பார்க்க வந்திருக்கலாமில்லை. நான் ப்ளஸியை நினைக்காத நாளில்லை, நீ பேசுறது எல்லாம் எனக்கு என் பொண்ணை ஞாபகப்படுத்துது. மேத்யூ கிட்ட அவளை பத்தி பேச முடியாது, கோவப்படுவான். சண்டை போட்டுட்டே இருப்பாங்க அவனும் ப்ளஸியும் அவ போனதும் அவன் ரொம்ப இறுக்கமாகிட்டான். அவ இறந்ததும் சொல்ற பேச்சு கேட்கல, ராஜீவன் கொன்னுட்டானு கோவம்..” என்று டேனியல் சொல்ல
“தாத்தா! ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க. அவர்… அவர் உங்க பொண்ணை ரொம்ப லவ் பண்றார்..” என்று ஊர்மிளா வேகமாக சொல்லவும்
“கொச்சு மோளே!” என்று ஊர்மிளாவின் கன்னம் கிள்ளியவர்
“ஆனாலும் இந்த பட்டாளக்காரன் என் பொண்ணை ரொம்ப வசியம் பண்ணியிருக்கான்… அவனை பிடிக்கணுமாமே. நீயும் அவனுக்குத்தான் சப்போர்ட் பண்ற..” என்றார் டேனியல் கிண்டலாக. ஊர்மிளா பதிலின்றி அவரை பார்க்க
“அவனை மன்னிச்சிடுறேன். என் பொண்ணை என் கிட்ட இருந்து பிரிச்சதுக்கு மன்னிக்கிறேன். உன்னை எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டானே, என்ன செய்ய அந்த ஆளை?” என்று கேட்டார்.
ஊர்மிளா முகம் சுருங்க முட்டியிட்டிருந்தவள் எழ, “கொச்சு மோளே! நீ டல்லாகாத! இதை படிக்காம போயிருந்தா கண்டிப்பா என் பொண்ணு என் மேல கோவமா இருந்தா நினைச்சிருப்பேன். என் பொண்ணு கடைசி காலத்துல நான் கஷ்டப்படக் கூடாதுனு இதை அனுப்பி வச்ச மாதிரி இருக்கு, அவ சொன்ன மாதிரி ராஜீவன் டிஸிப்ளிண்ட் அல்லே? அவன் நல்ல குட்டியானு! இத்தனை வருசம் கழிச்சும் கூட அவ எழுதின லெட்டரை கசங்காம பத்திரமா வச்சிருக்கவன் என் பொண்ணையும் நல்லா வச்சிருந்திருப்பானு புரியுது. உன்னை கூட படிக்க விட மாட்டேங்கிறார், ரொம்ப ஸ்டிரிக்ட் இல்ல.. உண்மையில நான் என் பசங்க கிட்ட எதிர்ப்பார்த்த அத்தனையும் ராஜீவன் கிட்ட இருக்கு”
“எனக்கு என் பொண்ணு இல்லைனு இத்தர வருஷம் ரொம்ப கவலை, அவ வாரிசா நீ இருக்கனு நினைக்கிறப்ப எனக்கு என் ப்ளஸியே வந்த மாதிரி இருக்கு. முன்னாடியே இந்த பட்டாளக்காரன் உன்னை எங்க கிட்ட கொடுத்திருந்தா நானும் உன் அம்மம்மாவும் உன்னை வளர்த்திருப்போம்.. எனிவேஸ் நீ எந்த ஏக்கமில்லாம சந்தோஷமா வளர்ந்தது நினைச்சது எனக்கு சந்தோஷம்.”
“உண்மையில நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தாத்தா, எங்க அப்பா உங்கள மாதிரி, என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க..” என்று முகம் தெளிந்து பிரபாகரனை பற்றி பேச
“நீயாச்சும் உன் அப்பா பார்த்த பையனைக் கட்டினியா இல்லை லவ்வா?” என்று கிண்டலாகக் கேட்டார். டேனியலின் மனதில் அழியாத வருத்தம் மீறி ஒரு ஆனந்த திருப்தி. அத்தனை வருடம் கழித்து மகளின் வார்த்தைகள் படித்தவருக்கு மகளே தன்னிடம் பேசிய உணர்வு, அதோடு சேர்த்து ஊர்மியின் வருகை. நிச்சயம் நிறைந்து போயிருந்தார் மனிதர்.
ஊர்மிளா சொல்லவும் “அதானே!” என்று சிரித்தவர் “அந்த பையனை பார்த்ததும் நீ தமிழ் நாட்டுல வளர்ந்த, ஸோ தமிழ் பையனை கட்டியிருக்க நினைச்சேன்” என்றார்.
“அய்யோ தாத்தா! நீங்க வேற ஜெயேட்டா சரியான கட்டஞ்சாயா! சும்மா தேவிகுளம் இஸ் மை நேஷனு பேசுவார்.” என்று ஊர்மிளா சிரிப்பாக சொல்ல, ஒரு மணி நேரம் ஆகிவிட ஜெயனும் ராஜீவனும் பொறுமையிழந்தனர்.
“ஜெய்! ஊர்மியைக் கூப்பிடு. இந்த பிரபா ரொம்ப செல்லம் கொடுத்து வச்சிருக்கான், அவங்க அப்பா பொண்ணு லெட்டர் படிக்க இவளுக்கு என்ன ஆர்வம்..?” என்று திட்ட
“உங்க சோல்ஜர்ஸ் ரொம்ப பாவம் மாமா, பிரிகடியர் சார் இப்போ காஷ்மீர்ல இல்லை, காயம்குளத்துல இருக்கோம்னு மறந்துடாதீங்க” என்றான் ஜெயன்.
“ஜெய்..” என்று ராஜீவன் முறைக்க ஜெய் எழுந்தவன் உள்ளறை வாசலில் நின்று கதவை தட்டிட, டேனியலும் ஊர்மிளாவும் வந்தனர்.
“லேட்டாச்சு முத்தச்சா” என்று ஜெய் சொல்ல, ராஜீவனை முறைத்தபடி வந்த டேனியல்
“என் பேத்திகிட்ட ஒரு மணி நேரம் பேச கூட பெர்மிஷன் கிடையாதா?” என்று கேட்டிட
“தாத்தா..” என்று ஊர்மிளா அழைக்க
“ஷரி மோளே! நிண்ட அச்சனே ஞான் ஷகாரிக்குன்னில்லா!(உன் அப்பாவை நான் திட்டல)” என்றார். ராஜீவனை அணைத்துக்கொண்ட டேனியல்
“தேங்க்ஸ்! எனக்கு என் ப்ளஸியே என்னோட இருந்தது போல இருக்கு. ப்ளஸி சாய்ஸ் இஸ் பெஸ்ட்!” என்றவர் “ஓகேவா?” என்று ஊர்மிளாவைப் பார்க்க அவள் கண்களின் சிரிப்பு முகமெல்லாம் பட்டுத் தெறிக்க ஜெயனுக்கு மனது நிறைந்தது.
ராஜீவன் “சாரி…” என்று குரல் கமற சொல்ல, டேனியல் ராஜீவனின் தோளில் தட்டியவர் “காட் ப்ளஸ் யூ மை சன்” என்றார். அந்த வார்த்தைகள் ராஜீவனுக்கு கொடுத்த வாத்சல்யங்கள் வார்த்தைக்குள் அடங்கா. ப்ளஸி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் என் அச்சனுக்கு உன்னை பிடிக்கணும் என்று. இன்று அது நிறைவேறியிருந்தாலும் ராஜீவனால் முழுதாக மகிழ முடியவில்லை, ப்ளஸியின் ஊர், ப்ளஸியின் அச்சன் எல்லாம் இருந்தும் ப்ளஸி இல்லையே..
டேனியல் மதிய நேரமாகிவிட உண்டு செல்ல சொல்ல ஊர்மிளா மறுத்தாள்.
“தாத்தா கூட சாப்பிட மாட்டியா?” என்று கேட்க
“ரிசப்ஷன் வேலையிருக்கு தாத்தா, ப்ளீஸ் நாங்க கிளம்பணும். ஏற்கனவே லேட்டாச்சு..” என்று ஊர்மிளா சொல்ல அவளின் கையைப் பிடித்துக்கொண்டவர் பேத்தியின் நெற்றியில் முத்தமிட்டார்.
“காட் ப்ளஸ் யூ முத்தே” என்றவர் மனதில் ‘என் பேத்திக்கு எல்லா நல்லதும் நடக்கணும்’ என்று வேண்டுதல் மட்டுமே. மீண்டும் அவரை வரவேற்புக்கு வர வேண்டும் என்று சொல்லி மூவரும் ஆலப்புழா சென்றனர்.
மதிய உணவு முடித்து ஊர்மிளா சிறிது நேரம் ஓய்வெடுக்க செல்ல, ஆலப்புழாவின் கடற்கரையில் நின்றார் ராஜீவன். காதலித்த காலத்தில் அந்த கடலில் கால் நனைக்காது அவரும் ப்ளஸியும் இருந்ததே இல்லை, டேனியலின் வார்த்தைகள் தந்த நிம்மதியோடு அவர் கரையில் கால் நனைய நின்றிருக்க, ஜெய்ச்சந்திரன் அவர் பக்கம் வந்தான்.
“தூங்கலையா ஜெய்..?” என்று கேட்க
“ஒன் ஹவர்ல கிளம்பப் போறோம். அதான் தூங்கல மாமா” என்றவன் அவரை பார்க்க
“நானும் ப்ளஸியும் திருட்டுத்தனமா இங்க அடிக்கடி வருவோம், மாட்டிக்க சான்ஸ் இருக்குனு சொன்னாலும் அவ கேட்க மாட்டா.. இல்லை உன் ஊருக்கு அழைச்சிட்டுப் போ சொல்லுவா.. நம்ம ஊர் சின்னது இல்ல, அதனால் பயந்து நான் அழைச்சிட்டுப் போனதில்ல..” என்று சிரித்தார்.
ஜெய் பேசாமல் அவரையே பார்க்க, “ஊர்மிளாவை நல்லா பார்த்துக்கோ ஜெய், நீ அவளை ரொம்ப பிடிச்சு கட்டியிருக்க தெரியும். இருந்தாலும் அவ என்னோட உயிர்.. என் சந்தோஷம்.. சொல்லணும்னு தோணிச்சு சொல்லிட்டேன்” என்றார்.
“வாழ்க்கை நினைச்சு பார்க்க முடியாத அதிசயம்.. ஜெய்… இதே கடல் முன்னாடி என் ப்ளஸீயோட கை பிடிச்சு நின்னிருக்கேன். இன்னிக்கு அவ இல்லை, இருக்கும்போதே நமக்குப் பிடிச்சவங்கள இறுக்கமா பிடிச்சுக்கணும்..” என்று சொல்ல ஜெய் உடனே
“நீங்க சொன்னது ரொம்ப சரி மாமா! இழந்த பின்னாடி தெரியற அருமையே வேற! இருக்கும்போது தெரியாது.. நீங்க மனைவியை இழந்தவர்.. அதனால இப்படி சொல்றீங்க. நான் அம்மாவை இழந்தவன், உங்களுக்கு இந்த வயசுல அம்மா அப்பா இருக்காங்க மாமா, அவங்களையும் பிடிச்சு வச்சிக்கோங்க! இதுக்கு மேல அவங்களை தண்டிக்காதீங்க மாமா!” என்ற ஜெயனின் வார்த்தைகள் ராஜீவனை திகைக்க வைத்தன.
ஜெய்ச்சந்திரனுக்கு மனது ஆறவில்லை. ஊர்மிளா டேனியலிடம் நடந்த விதம் சந்தோஷம் என்றாலும் ராஜீவனுக்கும் ஊர்மிளாவுக்கும் என் அச்சச்சனின் உணர்வுகள் புரியாதா என்ற கோபமிருந்தது.