ஜெய்யின் வார்த்தைகள் ராஜீவனை சுட்டன. பேசாமல் அவனை பார்க்க
“எனக்கு எப்பவும் அடுத்தவங்க விஷயத்துல தலையிட பிடிக்காது மாமா, இப்ப கூட இது நான் ஊர்மியோட ஹஸ்பண்ட்’ற உரிமையில சொல்றேன், நீங்க ஊர்மிளா மேல வச்சிருக்க பாசம் மாதிரிதானே அச்சச்சனும் அச்சம்மாவும் உங்க மேல வச்சிருக்காங்க.. உங்க வயசுல அப்பா, அம்மா இருக்கிறதே பெரிய வரம் மாமா! எங்கப்பாவுக்கு அது இல்ல, ஏன் எனக்கும் வினயனுக்குமில்லை.”
“எங்கம்மா சாகும்போது எனக்கு இருபத்தொன்னு, படிச்சிட்டிருந்தேன். அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன் மாமா, எங்கம்மா எங்களுக்கு எல்லாம் செஞ்சாங்க, அவங்களுக்குத் திருப்பி செய்ற பாக்கியம் எங்களுக்கில்லை! அவங்க இருந்திருந்தா ஊர்மியை ரொம்ப நல்லா பார்த்திருப்பாங்க..” என்றான் ஜெய். அவர் எதாவது பேசுவார் என்று பார்க்க அவரோ அலைகடலை வெறித்தார்.
“மாமா!” என்று அழைக்க
“நீயும் நான் அவங்களை தண்டிக்கிறேன் நினைக்கிறியா ஜெய்..?” என்று அழுத்தமாய்க் கேட்டிட, ஜெய் புரியாது பார்த்தான்.
“ஊர்மிளாவை நான் பிரபா கிட்ட கொடுத்தது நான் யோசிச்சு எடுத்த முடிவில்லை, அந்த நேரம் நான் யோசிக்கிற நிலைமையில இல்ல. அப்போ குழந்தை அவங்ககிட்ட பத்திரமா இருப்பா நினைச்சேன். தட்ஸ் இட்! நான் மனசு தேறி ஊர்மிளா வேணும்னு நினைச்சப்போ அவளுக்கு நான் தேவையில்லாதவனாகிட்டேன் ஜெய்..! நான் யோசிச்சப்போ அந்த முடிவு சரியா இருந்தது. அந்த டைம்ல எனக்கு யாரும் வேண்டாம்னு ஒரு மன நிலையில இருந்தேன், அதுக்காகவே பார்டர்ல போஸ்டிங் கேட்டு வாங்கினேன். எப்போ ஊர்மி பேச ஆரம்பிச்சாளோ அப்போ மறுபடி எனக்கு வாழனும்னு ஆசை கொடுத்தா என் பொண்ணு! அவளுக்கு அப்பாவா இல்லைனாலும் அவளுக்குப் பிடிச்ச அங்கிளா இருந்தேன்..”
“உன்னை மாதிரி நானும் அம்மா பையன்தான்! எங்கம்மான்னா எனக்கு ரொம்ப இஷ்டம் ஜெய், அவங்களையும் என் மனசு தேடிச்சு, இருந்தாலும் மனைவி மக இல்லாம நான் வந்து நின்னா அவங்க மனசு கஷ்டப்படாதா? ஒரு காலத்துல யாரும் வேண்டாம்னு ஒரு வெறுப்போட இருந்தேன், பட் மனசு மாறின பின்னாடி பக்கத்துல இருந்து அவங்களுக்கு சந்தோஷம் தராத மகனா இருக்கிறத விட தூரத்துல அவங்களுக்குப் பிடிக்காத கல்யாணம் செஞ்சு பிடிச்ச மாதிரி வாழ்ற மகனா இருந்திடலாம் நினைச்சேன்! இடையில பாலாவோட லெட்டர்ஸ் வரப்ப எனக்குனு ஒருத்தன் தேடுறான் சந்தோஷமா இருக்கும், ஆனாலும் என்னால உண்மையை சொல்ல முடியல. மத்தபடி அவங்களை தண்டிக்கணும்னு எல்லாம் நான் நினைச்சது இல்ல மோனே” என்றார் ராஜீவன்.
“நீங்க ஊர்மிளாவை பிரபா மாமா கிட்ட கொடுத்தது எல்லாம் உங்க முடிவு மாமா, இன்னிக்கு வந்த எனக்கு அதை கேட்கிற உரிமையில்லை.. ஓகே நீங்க சொல்றதை நான் ஏத்துக்கிறேன். ஓணத்துக்கு நீங்க வந்து பிரச்சனை ஆன பின்னாடி இப்போ வரை நீங்களும் அச்சச்சனும் பேசிக்கிறதே இல்லையே மாமா, அது தண்டிக்கிறது இல்லாம வேற என்ன?” ஜெய் விடவில்லை. அச்சுதனின் பிரியப்பட்ட பேரனாக நின்றான்.
“பேசினா ஊர்மி விஷயம் பேசுவார், எனக்கு வாழ பிடிக்காம என் பொண்ணைத் தூக்கிக் கொடுத்தேன் சொல்ல சொல்றியா? அவர் புரிஞ்சிக்க மாட்டார் ஜெய்” ராஜீவன் சலிப்பாக சொன்னார்.
“ஓஹ்..பின்னே! ஊர்மிளாவுக்கு நீங்க அப்பா ஆகுற முன்னாடி அச்சச்சனுக்கு மகன் மாமா! ஞாபகமிருக்கா?” என்று நக்கலாகக் கேட்டான் ஜெய்ச்சந்திரன்.
“ஜெய்..!” ராஜீவன் கடலை விட்டு ஜெய்யை முறைத்தார்.
“உண்மையை சொன்னா முறைக்கிறீங்க? ஊர்மிளா விஷயத்தை விட்டுட்டு உங்கச்சன் கிட்ட பேசுறதுல என்ன பிரச்சனை? ஊர்மிக்கும் அச்சச்சனுக்கும் உள்ளதை அவங்க பேசிக்கட்டும்.. உங்க பொண்ணை மட்டும் ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? எங்கச்சம்மாவும் உங்களை அப்படித்தான் வளர்த்தாங்க..” என்றான் எரிச்சலாக.
“அரக்க பறம்பில் வீட்டுக்கு ஆயிரம் மனுஷங்க வந்தாலும், அவங்களுக்கு ராஜீவன் வந்தாதான் மனசு நிறையும் மாமா!” என்று ஜெய் சொல்ல ராஜீவன் அவன் சொன்னதை கேட்டாலும் பதில் பேசவில்லை. அதற்குள் இவர்கள் ஏதோ தீவிரமாக பேசுவதை பால்கனி வழியே பார்த்த ஊர்மிளா இறங்கி கடற்கரைக்கு வந்தாள்.
“ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்று ஊர்மிளா மூச்சு வாங்க கேட்க
“ரொம்ப சந்தோஷம்” ராஜீவனும் முகம் விகசிக்க சொன்னார். ஜெய்யோ அவர்களிடம் பேசாமல் அறையை நோக்கி நடந்தான்.
‘அச்சச்சனை அந்த பேச்சு பேசிட்டு இந்த தாத்தா கிட்ட மட்டும் நல்லா பேசுறா’ மனைவியை மனதில் வறுத்தவனுக்கு வருத்தமே!
அறைக்கு வரவும் ஊர்மிளா ராஜீவனிடம்
“டேனியல் தாத்தா எனக்கு ப்ள்ஸிம்மாவோட ஃபோட்டோஸ் கொடுத்தார், நீங்க பார்த்தீங்களா?” என்று அவரிடம் ஃப்ரேமிடப்பட்ட புகைப்படத்தை காட்ட ஓணப்பட்டுடுத்தியிருந்த ப்ள்ஸீயைக் காணவும் ராஜீவன் கண்கள் கனிந்தன. அவர் ப்ளஸியின் ஊர் வந்ததுமே அவருக்கு ஒரு நிறைவு, அதைவிட டேனியல் நன்றாக பேசியது மிகுதியான ஆறுதலாக இருக்க, ப்ளஸியின் புகைப்படத்தைக் காதலாக வருடியவருக்கு அது எந்த வருட ஓணத்திற்கு எடுத்தது என்று கூட நினைவிலிருந்தது.
“அது அவங்க பெர்சனல் ஊர்மி! தப்பு தானே?” என்று சொல்ல
“ரொம்ப ஸ்டீரிக்ட் நீங்க.. ஆனாலும் ப்ளஸிம்மாவுக்கு உங்க மேல உள்ள லவ் விட அவங்க அப்பா மேல பாசம் அதிகம்..” என்றதும் ராஜீவன் சிரித்தார்.
“அதான் எனக்குத் தெரியுமே! அவ அவரை ரொம்ப மிஸ் பண்ணினா.. அவர் அவளை கட்டாயப்படுத்தி கல்யாண ஏற்பாடு பண்ணலன்னா ப்ளஸி கண்டிப்பா வீட்டை விட்டு வந்திருக்க மாட்டா.. அவங்கச்சன் மேல ரொம்ப பாசம்” என்றார்.
ஜெய்யோ “அம்மாயி நிங்களை போலேயல்லா!(அத்தை உங்களை மாதிரி இல்லை)” என்றான் முணுமுணுப்பாக. ராஜீவன் அவனை பார்க்க, ஊர்மிளாவிற்கு அவன் சொன்னது தெளிவாகக் கேட்கவில்லை.
“என்ன ஜெய்?”
“டைமாச்சு ஊர்மி, நான் போய் கார் எடுக்கிறேன். சீக்கிரம் வாங்க” என்றவன் ராஜீவனை முறைத்தே சென்றான். ஊர்மிளா ராஜீவனிடம் அந்த புகைப்படத்தை நீட்டினாள். மூவருமாக மீண்டும் காரில் தேவிகுளம் பயணப்பட, ராஜீவன் ஜெய்யிடம்
“ஏடா மோனே! உனக்கு முன்னாடி தேவிகுளத்தை சுத்துனவன் நான், ஆலப்புழாவுல இருந்து எத்தர தரம் நான் ஊருக்கு வந்திருக்கேன் தெரியுமா? நேத்தும் ட்ரைவ் பண்ணின, டயர்டா இருப்ப சொன்னா.. ஊர்மி நீ சொல்லு” என்று ராஜீவன் அவளிடம் சொல்ல ஜெய்யும் சம்மதித்தான்.
இரவு பத்து மணியாகிவிட்டது அவர்கள் தேவிகுளம் சென்று சேரும்போது. வரும் வழியிலே உணவு முடிந்திருக்க ராஜீவன் பாலச்சந்திரனிடம் “நான் எங்க வீட்டுக்குப் போறேன் டா” என்று சொல்லி அவர் பெட்டியோடு அரக்க பறம்பில் செல்ல, ஜெய்ச்சந்திரனும் துணைக்குச் சென்றான்.
ராஜீவன் பதில் சொல்லாமல் இருக்க கோபம் கொண்டவனுக்கு அவரின் செயலில் திருப்தி. ஜெய் வாசலில் நின்று விஜயனுக்கு அழைக்க, அவன் கதவை திறந்தான். அச்சுதன் உறங்காமல் இருந்தவர் வாசலில் வெளிச்சம் கண்டு வர மகனையும் ஜெய்யையும் பார்த்து நின்றார்.
“மாமா இங்க தங்கலாம் வந்திருக்கார் அச்சச்சா” என்று ஜெய் சொல்ல
“இப்போதான் உன் அம்மாவனுக்கு வழி தெரிஞ்சதா?” என்று அச்சுதன் கோபமாகக் கேட்டிட, ராஜீவன் ஜெயனை பார்த்தார். அவனோ கெஞ்சுதலாக அவரை பார்க்க
“இவன் வீட்டுக்கு வர இவனை வரவேற்கணுமா?” என்று மீண்டும் சத்தம் போட ராஜீவன் பதில் பேசாது வீட்டுக்குள் போனார். விஜயன் அவருக்கு அறை ஏதுவாக இருக்கிறதா என்று பார்த்திட, அச்சுதன் ஜெயனிடம்
“எங்கடா போனீங்க?” என்று கேட்க
“ஆலப்புழாவுல ப்ளஸி அத்தை வீட்டுக்கு” என்றதும் அச்சுதனின் கோபம் இன்னும் பெருகியது.
“இங்க இருக்க அரக்க பறம்பில் வீட்டுக்கு உன் அம்மாவனும் அவன் பொண்ணும் வர மாட்டாங்க.. ஆனா ஆலப்புழா வரைக்கும் போவாங்க..” என்று அச்சுதன் அவரின் தோளில் இருந்த துண்டை கோபத்தில் உதறிட
“அச்சச்சா! நான் பாவம், என்னை விட்டுடுங்க…” என்று கெஞ்சியே விட்டான்.
பேரன் முகம் பார்த்தவருக்கு மகனை விட்டு இவனை பேசி என்ன பயன் என்று புரிய, “ஜீவிச்சு போடா ஜெய்(பொழச்சு போடா)” என்று அவன் தோளில் அடிக்க
“மாமா கூட சண்டை போடாதீங்க அச்சச்சா! நான் காலையில் வரேன்..” என்ற ஜெய் வீட்டுக்குப் போக பாலச்சந்திரன் அவனை பிடித்துக்கொண்டார்.
“ஏண்டா ராஜீவன் வந்ததும் கிளம்புறான், நீ எதாச்சும் சொன்னியா?” என்று கேட்க, அப்பாவை முறைத்தான் ஜெய்.
“பதில் சொல்லாம என்னடா பார்வை?” என்று பாலச்சந்திரன் அதற்கும் சத்தம் போட, வினயன் அண்ணன் முகத்திலிருந்த களைப்பையும் கடுப்பையும் பார்த்து
“மாமா போனா இவனை கேட்பீங்களாப்பா? அவர் அவங்க வீட்டுக்குத்தானே போயிருக்கார், அச்சச்சனும் அச்சம்மாவும் சந்தோஷப்படுவாங்க… நீங்க ஏன் சும்மா இவனை கேள்வி கேட்கிறீங்க? ஜெயேட்டா நீ போய்க்கோ” என்று வினயன் அப்பாவை அடக்கி வைத்தான்.
‘இந்த அச்சச்சனும் மாற மாட்டார், இந்த தொட்டா வாடி ராஜீவன் மாமாவும் மாற மாட்டார்.. எல்லாத்துக்கும் மேல எங்கப்பா ப்ரண்டை ஒன்னும் சொல்லவிட மாட்டார். எல்லாத்தையும் விட நேத்து பயமா இருக்கு ஜெய்னு புலம்பி தூக்கத்தைக் கெடுத்துட்டு இன்னிக்கு பாச மழை பொழியுறா என் பொண்டாட்டி..’ என்று நினைத்தபடி ஜெய் கடுப்போடு மாடியேறினான்.
அந்த கோபம், எரிச்சல் எல்லாம் அறைக்குள் நுழையும் வரை மட்டுமே! அறைக்குள் நுழைந்ததும் ஊர்மியின் சோப் வாசம் அறையை நிறைத்தது. குளித்து முடித்திருந்த ஊர்மிளா அவளின் சுடிதாரில் பின் இருக்கும் ‘நாட்’ டை கட்டிக்கொண்டிருந்தாள். இரவோடு இனிமை சேர்ந்த நேரம், மெல்ல குளிர் திறந்திருந்த சாளரம் வழி ஊடுருவ ஊர்மியை நெருங்கி நின்றான் ஜெய்.
“ஜெய்! இதை கட்டி விடுங்க” என்று ஊர்மிளா சொல்ல, ஜெய்யோ ஊர்மிளா ஏற்கனவே போட்டிருந்த முடிச்சினை விடுவித்தான்.
“ஜெய், ஏன் அ…வு..?” என்றவளின் வார்த்தைகள் அவன் இட்ட முத்தங்களினால் தடைப்பட்டன. ஊர்மிளாவின் ஈர முதுகில் ஜெய்யின் இதழ்கள் சூடாய்ப் பதிய, சிலிர்த்து கண்களை மூடிக்கொண்டாள். ஜெய் அத்தோடு நிறுத்தாது அவளை பின்னோடு இறுகயணைத்து காதோரம் மீசையால் உரசிட, ஊர்மிளா அவன் கொடுத்த உணர்வினால் தவித்தாள். சட்டென்று அவனை தள்ளியவள்
“இருங்க ஜெய்.. தோடு போடணும்” என்று குளிக்கும் முன் கழட்டி வைத்த காதணியை அணிய போக, ஜெய் ஊர்மிளாவின் இருகைகளையும் அவன் கைகளால் பற்றினான்.
“தோடு போடாமயே இந்த காது அழகாத்தான் இருக்கு!” என்று ஆழ்ந்த குரலில் சொன்ன ஜெய் ஊர்மிளாவின் காது மடலில் அழுத்தமாக முத்தம் கொடுக்க, அவன் மீசையின் குறுகுறுப்பும் தன் கைகளோடு உரசிய அவன் கைகளின் அழுத்தமும் ஊர்மிளாவிற்குக் கூச்சம் தர, காதை வழக்கம்போல் கழுத்தோடு சாய்க்க, ஜெய் விடவில்லை. அப்படியே மெத்தையில் சரிந்தவன் ஊர்மிளாவின் முகமெல்லாம் முத்தமிட்டு, அவள் இதழை விடாது சுவைக்க ஊர்மிளா மூச்சுக்குத் திணறி அவனை தள்ளி எழுந்தாள்.
மூச்சு வாங்க நின்றவள் “எவ்வளவு அவசரம் ஜெய் உங்களுக்கு..?” என்று முறைத்தபடி ஆசுவாசம் கொள்ள, அந்த அவகாசம் கூட ஜெயன் கொடுக்கவில்லை. ஊர்மிளாவை இழுத்துத் தன் மீது போட்டுக்கொண்டு
“ஏடி! எனக்கு அவசரமா?” என்று செல்லக்கோபத்தோடு கேட்டவன் ஊர்மிளாவை மிகவும் இறுக்கமாக அணைத்து
“திருவோணத்தனைக்கு உன்னை பார்த்துட்டு எனக்கு உன்னை இப்படி இறுக்க அணைச்சு முத்தம் தரணும் தோணிச்சு தெரியுமா?” என்றவன் மீண்டும் அவள் மூக்கோடு உரசி ஆசையாய் முத்தமிட்டான்.
சின்னதாய் முத்தமிட்டு விலகியவன் “உன் பக்கத்துல வர விட்டிருப்பாரா என் அப்பா? எப்ப பார்த்தாலும் பேசினாலும் உடனே வந்து நின்னுடுவார்.. நீ என்னை அவசரக்காரன் சொல்ற..? நான் எவ்வளவு பொறுமையா இருந்தேன்..” என்று ஜெயன் பொறுமலாக சொல்ல
“அதே பொறுமையோடு இருங்க, நான் தோடு மாட்டிடுறேன்” என்று ஊர்மிளா அவனை விட்டு எழ பார்க்க, ஜெயன் விடாமல் அவள் கால்களை தன் கால்களால் பிடித்திருந்தான்.
“தூங்கும்போது எதுக்கு அதெல்லாம்? எனக்கு அதெல்லாம் டிஸ்டர்ப் பண்ணுது ஊர்மி” என்றான் அவள் கூந்தலுக்குள் கைவிட்டு.
“உங்களை எதுதான் டிஸ்டர்ப் பண்ணல…” என்று ஊர்மி சிரிப்போடு கேட்க
“எல்லாமே டிஸ்டர்ப் பண்ணுது, இந்த சுடி கூட..” என்றதும்
“அய்யோ காமாட்சி! A ப்ளஸ்னு பார்த்தா பி சி எல்லாம் பேசுறீங்க…” ஊர்மிளா அதிர்ச்சியில் சொல்ல, ஜெய்யோ உல்லாசமாக சிரித்தான்.
“நான் சத்தியம் பேசுறேன் ஊர்மி” என்றவன் பேசிய உண்மையில் ஊர்மிளாவின் மொத்தமும் சிலிர்த்தது. மொத்தத்தில் அந்த இரவிலும் உறக்கம் தொலைத்து ஊர்மிளாவிடம் தன்னை தொலைத்தான் ஜெய்ச்சந்திரன்.