அடுத்த நாள் காலையில் ஊர்மிளாவுக்கு முன்னே எழுந்த ஜெயன் குளித்து மாடியை விட்டு இறங்கினான். வழக்கம்போல் அம்மாவின் படம் முன் நின்று வணங்கியவன் சோஃபாவில் வந்து உட்கார்ந்தான். பாலச்சந்திரனும் எழுந்திருக்க மகனுக்கு சாயா கொடுத்தார்,
“ஜெய் நாளைக்கு ரிசப்ஷனுக்கு எல்லாம் நான் பார்த்துட்டேன், நீ ஊர்மிக்கு எதாவது அவசியமா பார்த்து சொல்லு..” என்றதும்
“சரிப்பா” என்றான்.
“நேத்து ஆலப்புழாவுல என்னாச்சுடா? ராஜீவன் வந்ததுமே வீட்டுக்குப் போய்ட்டான்?” என்று நேற்றை நிகழ்வை விசாரித்தார்.
“ஆலப்புழாவுல உங்க கூட்டுக்காரனுக்கு அறிவு வந்துடுச்சு, அவர் வீட்டுக்குப் போய்ட்டார். “
“பயந்துட்டே இருந்தேன் டா ஜெய், நல்ல வேளை என் குருவாயூரப்பன் காப்பாத்திட்டான்” என்று கைகூப்பினார்.
“ஆனாலும் இவன் என்ன வந்ததுமே கிளம்பிட்டான்..?” பாலச்சந்திரன் விடாது கேட்க
“உங்க ப்ரண்டுக்கு நீங்க புத்தி சொல்லணும், அவர் என்ன செஞ்சாலும் சப்போர்ட் பண்ணக்கூடாதுப்பா! மாமா நம்ம வீட்ல தங்குறது நமக்குப் பிரச்சனையில்ல, அச்சச்சனும் அச்சம்மாவும் ஃபீல் பண்ண மாட்டாங்களா?” என்று ஜெயனும் கேட்டான்.
“அதுக்குனு இங்க தங்க வரவனை போன்னு விரட்ட முடியுமாடா? என்னால அவனை அப்படி பேச முடியறதில்லை. ஒத்தையா வளர்ந்த எனக்கு அவன் கூட்டுக்காரன் மட்டுமில்ல கூடப்பிறந்தவன் மாதிரி..” என்றதும்
“முறையை மாத்தாதீங்கப்பா!” என்றான் ஜெய் கடுப்பாக.
“கொச்சு கள்ளா!” என்றபடி மகன் தோளில் பாலச்சந்திரன் அடிக்க,
“இன்னும் அங்க ரெண்டு அடி போடுங்க! ரொம்ப தூரம் வண்டியோட்டி பயங்கரமா வலிக்குது” என்றான் ஜெய்.
“ட்ரைவர் வச்சுக்க சொன்னா கேட்கல.. சட்டையைக் கழட்டு தைலம் போடுறேன்” என்று பாலா எழுந்து கொள்ள, ஜெய் உடனே அவர் கைப்பிடித்து தடுத்தான்.
“அதெல்லாம் வேண்டாம்பா, சும்மா பிடிச்சு விடுங்க” என்றதும் மகன் முகத்தை பார்க்க அவனோ வலக்கையை கழுத்தில் வைத்து நெட்டி முறித்து வேறு பக்கம் பார்த்தான். பாலச்சந்திரனுக்குப் புரிய சிரிப்போடு மகன் தோள்ப்பட்டையைப் பிடித்து அழுத்திவிட்டார்.
“இந்த மாமாவை சமாதானம் செஞ்சு அங்க அழைச்சிட்டுப் போனா அச்சச்சன் முறைச்சிட்டு நிக்குறார். எப்படியோ அவரை சமாளிச்சேன். காலையில என்ன பண்றாங்களோ?” ஜெய் புலம்ப
“அச்சனுக்கு அவன் இப்படி இருக்கிறது வருத்தம்டா, அதை அவர் கோவமா வெளிக்காட்டிடுறார். இவனும் அவருக்கு சரியா வீம்பு பிடிச்சவன்” பாலா இப்படி சொல்ல, ஜெய்யும் தலையசைத்தான்.
“இந்த வினயன் எங்க..?” என்று கேட்க
“அவனுக்கென்ன எரும மாடு தூங்கிட்டு இருப்பான்.. ஆந்தை!” என்று சின்ன மகனை திட்டினார். ஜெயனுக்கு சிரிப்பு வந்தாலும்
“என்னப்பா நீங்க? லேட்டா எழுந்தாலும் அதுக்கு அப்புறம் எல்லா வேலையும் பொறுப்பா செஞ்சிடுவான்ல..” என்று ஜெயனும் பாலச்சந்திரனும் பேசிக்கொண்டு இருக்கும்போதே வினயன் இறங்கி வந்தான்.
“நேத்து அலைஞ்சிட்டு இவன் சீக்கிரம் எழுந்து வந்துட்டான், உனக்கென்னடா தூக்கம்?” என்று வினயனை அதட்ட
“ஜெயேட்டா!” என்று வினயன் பாவமாக பார்க்க
“விடுங்கப்பா” என்றான் ஜெயன்.
“என்ன விடுங்க? இப்படி பொறுப்பில்லாம இருந்தா நாளைக்குக் கல்யாணமாக வேண்டாமா? ரொம்ப விளையாட்டு இவனுக்கு. சீக்கிரம் எழுந்து ரிசப்ஷன் வேலை பார்க்க சொன்னேன்”
“கல்யாணம் பண்ணி வைங்க அப்போ பொறுப்பு வந்திடும்” வினயன் கிண்டலாக சொன்னபடி அவனுக்குக் காஃபி கலக்கி வந்தான்.
“என்னது??” என்று பாலா அதிர்ச்சியில் கேட்க
“பின்ன எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டீங்களா?” வினயன் வேண்டுமென்றே அப்பாவை சீண்டிட
“உனக்கென்னடா அதுக்குள்ள கல்யாணம்?” என்று மகனை முறைத்தார். ஊர்மிளாவும் குளித்து தயாராகி வர
“எனக்கு ஊர்மிக்கு விஜயனுக்கு எல்லாம் ஒரே வயசுதானே? அவங்களுக்கு எல்லாம் பண்ணி வச்சீங்க.. ஜெயேட்டா நீ நியாயம் சொல்லு” என்று அண்ணனை அழைக்க, அவனோ இவர்களை கண்டுகொள்ளவில்லை. ஊர்மிளா சமையலறைக்குச் சென்று அவளுக்குக் காஃபி எடுத்து வந்தவள் தனியாக இருக்கும் ஒற்றை சோஃபாவில் அமர போக
“ஊர்மி! இங்க வா” என்று ஜெய் தன்னருகே அழைக்க, ஊர்மிளா தயங்கினாள்.
“அவனுக்கு உரிமையிருக்காம், என்னை சீண்டுறானாம்” என்று பாலா சொல்ல ஊர்மிளா சிரித்துவிட்டாள்.
“நல்ல வேளை ப்ரண்ட், எங்க ஜெய் ஊர்மி ஊர்மினு ப்ராந்தன் ஆகும் முன்னாடி அவனுக்கு வாழ்க்கைக் கொடுத்துட்ட..” என்று சொல்ல,
“வினயா! அடி வாங்காத!” என்று ஜெய் முறைத்தான்.
மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை தர வேண்டி பாலா எழுந்தவர் வினயனை தன்னோடு அழைக்க
“மதியத்துக்கு மேல தான் இடுக்கி போகணும், இப்போ எனக்கு எந்த வேலையுமில்லை” என்றான் வினயன்.
“உனக்கு வேலையில்லைனு நான் சொல்லணும், ஊர்மி வீட்ல இருந்து ஆளுங்க வருவாங்க ரூம் ரெடி பண்ணனும் வாடா” என்று அதட்டி இழுத்து போனவர்
“ஒரு வார்த்தையில வர மாட்டியா டா நீ? ஜெய் ஊர்மி தனியா பேசிக்கட்டும்னு, என்ன புள்ள நீ?” என்று திட்ட
“போன மாசம் வரைக்கும் அவங்க தனியா பேசினாலே போடா வினயான்னு என்னை தள்ளிட்டு, இப்போ பேச்சை மாத்துறீங்க பாலச்சந்திரன்! எண்ட பகவதிம்மே! இன்னும் இவர் என்னை என்ன பாடுபடுத்த போறாரோ” என்று புலம்பியபடி வேலையைக் கவனித்தான்.
“ரொம்ப கொழுப்பு ஜெய், மாமா இருக்காங்க வேணும்னே கூப்பிடுறீங்க” ஊர்மிளா அவர்கள் போனதும் கண்டிக்க
ஊர்மிளாவின் விழிகள் வீட்டை அலசின, ராஜீவனை அவள் தேடுவது ஜெயனுக்குப் புரிந்தது. இரவில் ஊர்மிளா அறைக்குச் சென்றுவிட, அவர் சொல்லாமல் போய்விட்டார்.
“மாமா அவர் வீட்டுக்குப் போய்ட்டார்.” என்றதும் ஊர்மிளா தீடீரென ஏன் சென்றார் என்று கேள்வியோடு பார்க்க
“அவர் வீடு அதானே? அதான் போய்ட்டார்” என்றவன் வேறு பேசினான். ஜெய் காலையில் முடிவெடுத்துவிட்டான். ஊர்மிளா யாரின் பேத்தியாக, யாரின் மகளாக இருந்தாலும் இப்போது அவன் மனைவி! அவன் சினேகித்து, காத்திருந்து கை பிடித்தவள்!
ஊர்மிளா பொறுமையாக யோசித்தாலே அச்சச்சனை புரிந்துகொள்வாள் என்று ஜெய் நம்பினான், அவளுக்கு ராஜீவனை போல் வீம்போ பிடிவாதமோ கிடையாதே! பிறந்த வீட்டை பிரிந்திருப்பவளுக்கு இப்போது இவன் என்னதான் அச்சச்சனை பற்றி பேசினாலும் புரியாது, அதைவிட ஊர்மிளா உண்மையான உள்ளன்போடு அவர்களிடம் நடக்க வேண்டும் என்று விரும்பினான் ஜெய். திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த நாட்களை அதற்குரிய வசந்தத்தோடு மற்ற வருத்தங்களின்றி கொண்டாட நினைத்தான் ஜெய்.
*************
அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஜெய் ஊர்மி அறையில் விளக்கு ஒளிர்ந்தது. இரவே விமானத்தில் எல்லாரும் எர்ணாகுளம் வந்துவிட்டனர், காலையில் அங்கிருந்து அவர்கள் தேவிகுளம் வருவதாக இருந்தனர். இரவெல்லாம் உற்சாகத்தில் ஆவலில் ஊர்மிளாவுக்கு உறக்கமில்லை, எப்போதும் ஜெய் எழுந்திருக்க இன்று அவனுக்கு முன்னால் எழுந்து முழு அலங்காரத்தில் இருந்த மனைவியை பார்த்தவனுக்கு ஆனந்த அதிர்ச்சி.
கைகளை உயரத்தூக்கி நெட்டி முறித்தவன் “ஊர்மி! என்ன அதிசயம்?” என்று கேட்க
“குட் மார்னிங் ஜெய்! அப்பா கிளம்ப போறோம்னு மெசெஜ் பண்ணியிருக்கார், இங்க முணு மணி நேரத்துல வந்துடுவாங்க தானே? அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். நான் போய் சமையல் பார்க்கிறேன்” என்றவளை கை நீட்டி அருகே அழைத்தான்.
ஊர்மிளா அருகே வரவும் புடவை கட்டியிருந்தவளை தன்னோடு இழுத்துக் கட்டிக்கொள்ள
“ஜெய், லேட்டாகிடும். ப்ளீஸ்” என்று ஊர்மிளா எழ பார்க்க, ஜெய் விடவில்லை. அதிகாலை குளிர், அகமெல்லாம் காதல், அவன் முன் ஊர்மிளா, கிறங்கித்தான் போனான்.
மெத்தையில் அவளோடு சரிந்தவன் “நான் ஒன்னும் பண்ணக்கூடாதுன்னா நீ என்னை எதாவது பண்ணு” என்றான். ஊர்மிளா விழி விரித்து
“நான் குளிச்சி ரெடியா இருக்கேன் ஜெய்” என்றிட ஜெய்யோ அவள் முகத்தை அருகே இழுத்து உரிமையாக ரசித்தான்.
அவன் பார்வையில் ஊர்மிளா தவிக்க, “பாரு, நீதான் ரெடியா இருக்க. நான் ஒன்னும் பண்ணல, நீ என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ…” என்றவன் அவள் அமைதியில்
“போடி! உனக்கு என் மேல ஆசையே இல்லை” என்று பிடித்திருந்த கையை விட, இன்னும் அழுத்தமாக அவன் மேல் விழுந்தாள் ஊர்மிளா.
“அப்படியில்ல ஜெய்..”
“லேட்டாச்சு போ” என்று ஜெய் கண்களை மூடிட, ஊர்மிளா ஜெய்யின் கன்னத்தில் முத்தமிட அது போதவில்லை ஜெயனுக்கு. அப்படியே அவளை தன்னருகே இழுத்து கொஞ்ச நேரம் கொஞ்சியே விட்டான். சிறிது நேரம் கழித்து அவன் முத்தமிட்டு சிவந்த இதழை உதட்டுச்சாயம் கொண்டு மறைத்த ஊர்மிளாவின் விழிகள் கணவனை முறைத்தன.
ஜெய்யோ இன்னும் எழாமல் ஒருக்களித்து படுத்தவன் உரிமையாக ஊர்மிளா செய்வதை ரசித்திட அவனருகே வந்தவள்
“பாருங்க ஜெய்! நான் இவ்வளவு டார்க் லிப்ஸ்டிக் போட்டதே இல்லை. நீங்க செஞ்ச வேலை தெரியாம இருக்க இப்படி போட்டுருக்கேன்” என்றவளின் பேச்சில் சிரித்தபடி உட்கார்ந்தவன் ஊர்மிளாவின் கன்னத்தைப் பிடித்து
“இப்படி பக்கத்துல நின்னு பேசிட்டே இருந்தா அப்புறம் இன்னும் சிவந்திடும் ஊர்மி, ஓகேவா?” என்றதும் பட்டென்று தள்ளி நின்றாள். ஜெய் சிரித்தபடி ஓய்வறை செல்ல ஊர்மிளா கண்ணாடியில் தன்னை சரி பார்த்து கீழ் இறங்கினாள்.
பாலச்சந்திரன் உணவுக்கு வெளியே சொல்கிறேன் என்றதற்கு ஊர்மி ஒத்துக்கொள்ளவில்லை, காலை உணவை தானே செய்கிறேன் என்றவள் உதவிக்கு எப்போதும் சமையலுக்கு இருப்பவரை முன்பே வர சொல்லிவிட்டாள். ஏழு மணிக்கு ஊர்மிளா சமையல் முடித்துவிட, எட்டு மணிக்கு காஞ்சியிலிருந்து எல்லாரும் வந்துவிட்டனர்.
“தாத்தா…! அப்பா…! பெரியப்பா! அத்த…! அம்மா!… அண்ணா.” என்று ஊர்மிளா அவர்களை காணவும் உற்சாகக் கூச்சலிட்டாள். பாலச்சந்திரனும் அவரின் மகன்களும் சம்மந்தி வீட்டினரை கவனிக்க ஷோபனா, விஜயன், பிந்து எல்லாம் வந்தனர். ஊர்மிளா அப்பா அம்மா, பெரியப்பா பெரியம்மா என்று எல்லாரோடும் உட்கார்ந்து கதை பேச
“ஊர்மி!” என்ற ரத்னவேலின் குரலில் அவரிடம் சென்று அமர
“முதல்ல எல்லாரையும் கவனி! அப்புறம் பேசலாம். இது உன் வீடு ஊர்மிமா, நாங்க இங்க தானே இருப்போம், என் பேத்தி எங்க போனாலும் பொறுப்பா இருக்கணும் இல்லையா? என் வீட்டு மருமகங்க எப்படி இருக்கணும் நான் நினைக்கிறேனோ என் பேத்தி இன்னொரு வீட்ல அப்படி இருக்கணும். புரிஞ்சதா பாப்பு?” என்று சொல்ல ஊர்மிளா தலையசைத்து சென்றாள்.
“நீ போய் பேசிட்டு இரு ஊர்மி, நாங்க பார்க்கிறோம்” என்று பிந்து சொல்ல
“எல்லாம் ரெடி பிந்து, சாப்பாடு வச்சிடலாம்” என்றிட காலை உணவு முடியவும் சிறிது நேர ஓய்வுக்குப் பின் எல்லாரும் இடுக்கி சென்றனர். இடுக்கியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் ஜெய் ஊர்மியின் வரவேற்பு நடந்திட, டேனியல் மகனுடன் பேத்திக்காக வந்திருந்தார்.
ஊர்மி அவரை பிரபாகரனிடம் அறிமுகம் செய்ய, டேனியல் பிரபாகரனிடம் மிகவும் நன்றாக பேசினார். மேத்யூவால் அப்பாவை போல் சட்டென்று தங்கை மகளிடம் ஒட்ட முடியவில்லை, ராஜீவன் மீதான வெறுப்பு அப்படியே இருக்க
“அவன் இத்தன வருஷமில்லாம இப்போ ஏன் வந்தான்? சொத்துக்காக வந்திருப்பான்” என்றெல்லாம் பேசிவிட, டேனியல் மறுத்தார். டேனியல் மகளின் கடிதம் கொடுக்க, அதை படித்தாலும் இன்னும் கோபம் அவருக்கு. தங்கை காதலிக்காமல் இருந்திருந்தால் தங்களை பிரிந்திருக்க வேண்டாமே என்ற எண்ணம், ஏதோ கோபத்தில் அவள் இறந்ததை சொல்லாமல் இருந்த குற்றவுணர்வு எல்லாம் அவரை அழுத்தின. உடன்பிறப்பின் இழப்பு இத்தனை வருடத்தில் அவரை மிகவும் இறுக்கமாக மாற்றியிருக்க, மேத்யூவுக்கு அப்பாவை தனியே அனுப்ப மனமில்லை. அதனால் உடன் வந்தார்.
ஜெய் ஊர்மியை வாழ்த்திவிட்டு அவர்கள் சென்றுவிட, ராஜீவன் பாலச்சந்திரனோடு இருந்தார். இடுக்கியிலும் மேடையில் ரத்னவேல் குடும்பமே நிறைந்திருந்தது, மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என்று எல்லாரும் ஊர்மியை சுற்றியிருந்தனர். ரத்னவேல் ஊர்மிளாவை பெற்றவர் என்று ராஜீவனை அவள் திருமணத்திற்கு அழைத்திருந்தாலும், தந்தை என்ற ஸ்தானம் தன் மகனுக்கு என்பதில் உறுதியாக இருந்தார். எங்கும் அவர் உரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை!
ரத்னவேல் உரிமையை விட்டுக்கொடுக்காமல் இருக்க, அச்சுதனோ மகளின் திருமணத்தில் கூட தனியாக நிற்கும் தன் மகனை கண்டு வருந்தினார். இருந்தும் ஜெயனுக்காகவும் ஊர்மிளாவுக்காகவும் வருத்தம் பொறுத்து இருந்தார். ரத்னவேல் மகனும் மருமகளும் பேத்தியோடு இருப்பதை நிறைவாக பார்க்க, தன் மகனின் இடமல்லவா அது என்ற தவிப்பு அச்சுதனுக்கு.
சிறப்பாக ஜெய் ஊர்மிளாவின் வரவேற்பு முடிய, இரண்டு நாட்கள் அவள் உறவுகள் தேவிகுளத்தில் தங்கி சென்றனர். அடுத்த நாள் ஜெயனும் ஊர்மிளாவும் தேனிலவுக்கு காதல் நகரமான வெனீஸ் அழைத்து போனான். இயற்கையும் வரலாற்று சிறப்புமிக்க வெனீஸ் நகரின் வீதிகளில் ஊர்மிளாவோடு ஜெய் கைகோர்த்து நடந்தான். ஊர்மிளா வெனீஸில் இருந்த ஒரு வாரமும் கணவனையும் காதலையும் மட்டும் நினைத்தாள், அவர்கள் தனிமையை யாரும் தொந்தரவு செய்யவில்லை. தெவிட்டாத ஒரு தேனிலவை முடித்து வந்தவர்களுக்கு தேவிகுளத்திலும் தேனிலவு காலமாக இருந்தது.
எல்லாம் ஒரு மாதம், நாட்கள் வேகமாக ஓடிவிட அச்சுதனின் பொறுமையும் பறந்தது. அதன் விளைவு ஊர்மிளா தேவிகுளம் விட்டு காஞ்சி சென்றாள், தனியாக!