இரவு உணவு உண்ணும்போது முடிந்தவரை எல்லாரும் சேர்ந்து உண்பது ரத்னவேல் வீட்டின் வழக்கம், உண்ணும்போது ரத்னவேல் சின்ன மகனின் முகத்தையே பார்த்தார். மிகவும் வாடி காணப்பட்டார், எப்போதும் பூனைக்குட்டியாக வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ஊர்மிளாவின் பிரிவு காஞ்சியை வாட்டத்தான் செய்தது. தேவிகுளம் அவள் வரவில் தூவல் காலம் கொண்டிருக்க, காஞ்சியிலோ கோடை காலம்.
உண்டு முடிக்கவும் ரத்னவேல் பிரபாகரனை தன்னறைக்கு அழைத்தார்.
“டேய் பிரபா! என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க, பிரபா மறுப்பாக தலையசைத்தார்.
“பதில் பேசுடா” என்று மீண்டும் சொல்ல
“ஊர்மி ஞாபகமா இருக்குப்பா” என்றார்.
ரத்னவேல் புன்னகையோடு “இவ்வளவுதானா? பழகிடும்டா, உன் அக்கா தங்கச்சி எல்லாம் கட்டிக்கொடுத்தப்ப எனக்கும் அப்படித்தான் இருந்தது” என்றார் இயல்பாக.
அதில் பிரபாகரனுக்குக் கோபம்.
“நீங்க பெத்த பிசாசும் என் பொண்ணும் ஒன்னா?” என்றார் பிரபாகரன்.
அதில் ரத்னவேல் மகனை முறைத்து, “என்னடா ஏத்தமா? என் பொண்ணை பேசுற?” என்று கேட்டார். ஊர்மிளா திருமணமாகி சென்றதும் புகுந்த வீடு வந்த அவளின் பெரிய அத்தை லீலாவதி பேச்சுவாக்கில் ஜமுனாவிடம்
“அவனுங்கதான் என்னை கிண்டல் பண்ணினா நீங்களும் பேசுறீங்கப்பா, நான் சும்மா எதார்த்தமா பேசினேன்” என்றார் வருத்தமாக.
“உனக்குக் கல்யாண வயசுல புள்ள இருக்கான், இப்ப இப்படி சொல்லும்போதே உனக்குத் தாங்க முடியல, அப்போ என் பேத்தியை நீ பேசினப்போ அவ மனசு கஷ்டப்பட்டிருக்காதா? அன்னிக்கே உன்னை கண்டிச்சேன், இப்போ அவ இல்லாதப்ப இப்படி பேசினா ஜமுனா, பிரபா மனசு கஷ்டப்படாதா? முதல்ல ஒன்னு புரிஞ்சிக்கோ லீலா, நான் சர்வேஷைக் கட்டிக்க சொன்னதுக்கு ஊர்மி சம்மதம் சொல்லிட்டா, உன் மகன் மறுத்தான்… அதுக்கு அப்புறம் அவளுக்கு அந்த பையனை பிடிச்சது, நான் கட்டி வச்சேன்!” என்று ரத்னவேல் பேச, லீலா இடையில் பேச வர அவர் தடுத்தார்.
“இப்படியே பேசிட்டு இருந்தா உனக்கு பிரபாவோட உறவில்லாம போயிடும், அவனை தெரியும்தானே? ஊர்மி கல்யாணமாகி போன பின்னாடி இந்த வீட்ல மங்கையும் ஜமுனாவும் உன்னை எப்படி கவனிக்கிறாங்க பார்த்தியா? அவங்களுக்கு புருஷன் கூடவ பொறந்தவளை கவனிக்கணும்னு கடமை, ஊர்மி எப்படி உன்னை கவனிப்பா? நீ பேசுற பேச்சை கேட்டா சின்ன பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும்? அந்த பையனை பிடிச்சிருந்தாலும் நீ சொல்ற இந்த காரணத்தையெல்லாம் யோசிச்சு ஊர்மி வேண்டாம்னு இருந்தா… இப்படி பேசாத லீலா” என்றார் கண்டிப்பாக.
உண்மை, ரகசியம் எல்லாம் வெளிவரும் வரை மட்டுமே கட்டுப்பாடு, அதன் பின் அதனை தெரிந்தவர்கள் கட்டுப்பாட்டில் போய்விடும். அப்படித்தான் ஊர்மிளாவின் பிறப்பு விசயம் அடிக்கடி இப்படி தலை காட்டியது.
“ஊர்மி ஸ்கூல் போக ஆரம்பிச்சதிலிருந்து அவளை காலையில ஸ்கூல்ல விட்டு சாயந்திரம் அழைச்சிட்டு வந்து, காலேஜ் வரைக்கும் என் பொண்ணோடதான் என் பொழுதே ஓடும். இப்போ இத்தனை பேர் இருந்தும் எனக்குக் கஷ்டமா இருக்கு, நானாவது ஆபிஸ் போறேன். ஜமுனா பாவம், ஊர்மியை ரொம்ப மிஸ் பண்றாப்பா”
மகனின் உணர்வு புரிந்த ரத்னவேல் “சரிடா, நீ என்னை விட நல்ல அப்பா! அதுக்காக என்ன செய்றது, ஊர்மிளாவ நினைச்சா பார்க்கிற தூரத்துல கட்டிக்கொடுக்கணும்னு இதுக்குத்தான் ஆசைப்பட்டேன்.. அவ விருப்பம் தானே நமக்கு முக்கியம். நமக்கு அப்புறமும் அவ நல்லாயிருக்கணும்னு மனசை தேத்திட்டுதான் அடுத்த மாநிலமா இருந்தாலும் ஒத்துக்கிட்டேன். நீ மனசை தேத்திக்கோ” என்று மகன் தோளில் தட்டிக்கொடுக்க, பிரபாகரன் அப்பாவின் கையைப் பிடித்து
“நான் தப்பு பண்ணிட்டேனா பா?” என்று கேட்க, ரத்னவேலுக்குப் புரியவில்லை. மகனின் வாடிய முகம், சோர்ந்த குரல் அவருக்கு உவப்பாக இல்லை.
“என்னடா பிரபா?” என்றார் ரத்னவேல் கவலையாக.
“ஊர்மி கல்யாணத்துக்குப் பத்திரிக்கை வைக்க ராஜீவன் வீட்டுக்குப் போனேன்லப்பா, அப்போ அவங்க அப்பா என்னை கேட்ட கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. எனக்கு எல்லாமே இருந்தாலும் இப்போ மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்ற பிரபாகரனின் குரல் மிதமிஞ்சிய வருத்தமிருக்க ரத்னவேலுக்கும் கஷ்டமாக இருந்தது. பிரபாகரன் அவர் பேச்சை கேட்காத மகன்! அவர் சொல்வதற்கு எதிராக செய்யும் முதல் ஆள்! ஆனால் இளைய மகன், சேட்டைக்காரன் என்று பிரபாகரன் மீது கூடுதலாக ஒரு பாசம். சின்ன மகன் இப்போதும் அவருக்கு சின்னவனே.
“டேய் சின்னவனே! நீ இப்படி கலங்கி பேசினா எனக்கு பயமா இருக்கு, என்னனு சொல்லுடா? ராஜீவன் அப்பா என்ன சொன்னார்?” என்று கேட்டிட
“ராஜீவன் அப்போ இருந்த நிலைமையில எங்களை எல்லாம் நினைக்கல, அவனுக்கே விருப்பமில்லாம இருந்தாலும் நீங்க எங்க மருமக இறந்ததை சொல்லியிருக்கணுமில்ல தம்பி? ஊர்மிளாவை உங்களோட அழைச்சிட்டு போய் உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கு, என் மகன் தனியா நிக்கிறானே? ஒரு வார்த்தை இப்படினு நீங்க எங்களை தேடி வந்து சொல்லியிருக்கலாமில்ல..” என்று அச்சுதனின் பேச்சை அப்படியே சொன்னார் பிரபாகரன்.
அதுவும் உண்மைதானே? ராஜீவனுக்கு யோசிக்கும் சூழலில்லை! பிரபாகரன் நண்பனுக்கு எடுத்து சொல்லியிருக்கலாம், குடும்பத்தோடு சேர்த்து வைத்திருக்கலாம்.. இந்த எண்ணங்கள் எல்லாம் இப்போது பிரபாகரனுக்குக் குற்றவுணர்ச்சியைக் கொடுத்தன. என் வயதுதானே அவனுக்கும், அவன் பிடிவாதம் பிடித்திருந்தாலும் அவனை பெற்றவர்களிடம் நல்ல நண்பனாக நான் எல்லாம் சொல்லியிருக்க வேண்டும்.
“எனக்கு அவன் ஊர்மியைக் கொடுத்ததுமே வேறெதுவும் தோணலப்பா, குழந்தையை இழந்த எனக்கு அவ பொக்கிஷமா தெரிஞ்சா… என்னை ஜமுனாவை தாண்டி எதுவும் யோசிக்க தோணல. நான் நினைச்சிருந்தா அவன் ஊர் தெரியும், அவங்க அப்பா அம்மா கிட்ட பேசியிருக்கலாம். என் பிரச்சனை தீர்ந்ததுன்னு அவனை விட்டேன்பா, நான் நல்ல நண்பனே கிடையாது! இப்போ ஊர்மியைப் பிரிஞ்சு இருக்கப்ப அவன் கஷ்டம் புரியுது, நீங்க சொல்றீங்களே என் பொண்ணை பிரிஞ்சு கஷ்டமா இருந்ததுனு, கூட இருந்து வளர்க்கலனாலும் உங்களுக்கு இருக்க அதே கஷ்டம் அவனுக்கும் இருக்குமில்ல..ரொம்ப ரொம்ப சுயநலவாதிப்பா நான்!” என்று கண்கள் கலங்க சொன்ன மகனை ஒற்றைக் கையால் அணைத்துக்கொண்ட ரத்னவேலுக்கு அச்சுதன் மீது கோபம் வந்தது.
‘மகன் அப்பனை தேடலன்னா அப்பனும் மகனை தேடல தானே? அப்படி வீம்பு பிடிச்சிட்டு என் மகனை பேசியிருக்கானா?’ என்று கோபம் எழுந்தாலும் அதனை அடக்கி
“நீ தேவையில்லாம யோசிக்கிறடா பிரபா! ராஜீவன் நிச்சயம் உன்னை அப்படி நினைக்க மாட்டான், அவன் ரொம்ப நியாயஸ்தன்! சில முடிவு நமக்குப் பிடிச்சவங்களோட நல்லதுக்காக நம்ம கஷ்டப்பட்டு எடுக்க வேண்டியிருக்கும்! ஊர்மியை ஜெய்க்குக் கட்டிக்கொடுக்க எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை, அந்த பையன் நல்லவன், வசதியிருக்கு எல்லாமிருந்தும் என்னால ஊர்மிளாவை அவ்வளவு தொலவு அனுப்ப முடியாதுனு ஒரு பிடிவாதம்… சுய நலம்! நம்ம சுய நலத்தை விட்டு தரது அன்போட அடிப்படையான விஷயம்! நான் ஊர்மிளா என் பக்கத்துல இருக்கிறதை விட அவளுக்குப் பிடிச்சவனோட வாழ்றது சந்தோஷம்னு என் சுய நலத்தை விட்டேன்!”
“ராஜீவனும் அப்படித்தான்! அம்மா இல்லாம குழந்தை வளராதுனு இல்ல, ஆனா அந்த ஏக்கம் கூட பொண்ணுக்கு வரக்கூடாதுனு நினைச்சு, என்னோட இருக்கிறதை விட எங்க இருந்தா சந்தோஷமா இருப்பாளோ அங்க வளர விட்டான்! உன்னை எந்தளவு நல்ல நண்பனா நினைச்சிருந்தா அவன் குழந்தையை உனக்குக் கொடுத்திருப்பான்.. அப்படி யோசிடா பிரபா! என் பேத்தி நம்ம வீட்லதான் வளரணும்னு இருந்திருக்கு, நடந்தது நல்லதுக்குனு நினைச்சிக்கோ! இப்படி நீ வருத்தப்படுறது தெரிஞ்சா ஊர்மி கஷ்டப்படுவா..”
அப்பா தனக்காக பேசுகிறார் என்று நினைத்த பிரபாகரன் “ஊர்மி ஞாபகமாவே இருக்குப்பா, நானும் ஜமுனாவும் போய் பார்த்துட்டு வரோமே?” என்று கேட்க
“உன்னை அடிச்சிடுவேன் டா ராஸ்கல்! ஊர்மிளா முதல்ல அந்த வீட்டு மருமகளா பழகட்டும்! உனக்கு மட்டும்தான் அவ இல்லாம கஷ்டமா இருக்கா? நாள் முழுக்க மாத்திர போட, சாப்பிடனு அத்தனை அலாரம் வச்சிட்டு போயிருக்கா என் பேத்தி, ஆனாலும் அவ பக்கத்துல இருந்து கவனிக்கிற மாதிரி இருக்குமா? பெருசா அப்போ எந்த ஊரா இருந்தாலும் பொண்ணுக்கு விருப்பம்னா கட்டி வைக்கணும்னு பேசிட்டு இப்போ கண்ணை கசக்குற? நீயெல்லாம் மிலிட்டரிகாரனா? இதுல என் பேத்தி வேற கேப்டன் பிரபாகரனு பெருமை பேசுவா..” என்றார் நக்கலாக.
“அவ புகுந்த வீட்ல பொண்ணு இல்லை, ஊர்மிக்கு மூத்த மருமகளா நிறைய பொறுப்பிருக்கு, இப்போதான் புகுந்த வீட்டோட பழகுற காலம். ஒரு மாசம் போகட்டும், பொறுமையா இரு” என்றவர் மகனை தேற்றி அனுப்பினாலும் பிரபாகரன் மனம் தேறவில்லை.
இங்கு காஞ்சி ஊர்மிளாவின் நினைவிலிருக்க ஊர்மிளாவின் நினைவிலும் காஞ்சியே! தேனிலவு முடிந்து ஒரு மாதமாகிறது, மற்ற சடங்குகள் எல்லாம் முடிந்து இப்போது திருமண களை, களைப்பு எல்லாம் முற்றிலும் நீங்கியிருந்தது. அன்றாட வாழ்க்கை தொடங்கியது.
அதுதான் ஊர்மிளாவுக்கு சோர்வை கொடுத்தது, வீட்டு வேலைக்கு ஆட்கள் இருந்தனர், சமையல் அவள் செய்தாலும் உதவிக்கும் ஒருவர் உண்டு. தேனிலவு முடிந்து இடுக்கியில் இருக்கும் அவன் நெருங்கிய உறவுகள் வீட்டில் விருந்து முடித்த ஜெய் மீண்டும் ரிசார்ட், கேம்ப் என்று வேலையில் மூழ்கிவிட்டான். கோடை காலம் நெருங்கியிருக்க குளிர் பிரதேசத்தில் அதானே விசேஷம், வழக்கத்தை விட அதிக சுற்றுலா பயணிகள் வரும் காலம். ரிசார்ட்டை மேம்படுத்துவது, டிரெக்கிங், கேம்பிங் குறித்த வேலைகள் அதிகம். இதில் அரக்க பறம்பில் வீட்டின் எஸ்டேட் மேற்பார்வை என்று ஜெய்க்குப் பகல் முழுவதும் வேலை, இரவில் அவர்கள் நெருக்கத்திற்குக் குறைவில்லை.
தேனிலவு சென்று வந்தபின் ஊர்மிக்கும் ஜெய்யோடான நெருக்கம் மனதால், உடலால் அதிகரித்திருந்தது., அவள் வீடு என்ற உணர்வு வந்திருந்தது. இவர்களும் என் குடும்பம் என்ற உணர்வு, எல்லாரையும் அக்கறையுடன் பார்த்துக்கொண்டாள்.
அன்றும் அப்படித்தான், மதிய உணவுக்கு எல்லாரையும் வீட்டுக்கு வர சொல்லிவிட்டாள்.
வினயனும் பாலச்சந்திரன் சீக்கிரமே வந்துவிட, உள்ளே நுழையும்போதே பிரியாணி வாசம் வீடெங்கும் நிறைந்திருந்தது.
“அடிபொலி! பிரியாணியா இன்னிக்கு?” என்று வினய் உற்சாகமானான். அம்மா இருந்தபோது வீட்டில் செய்வார், அதன் பின் நேரத்துக்கு உண்ண முடியாது என்பதால் வீட்டில் செய்ய சொல்வதில்லை, வெளியில் மட்டுமே.
ரொனால்டோ இருப்பதால் தெரியாதவர்கள் யாரும் வந்துவிட முடியாது, இவர்கள் வரவும் பாலச்சந்திரன் கட்டியிருந்த ரொனால்டோவை அவிழ்த்துவிட, அவரை சுற்றிக்கொண்டு வீட்டுக்குள் வந்து அங்குமிங்கும் ஓடினான். பாலா அவனை கண்டிக்க, வினயன் சமையல்கட்டுக்குள் நுழைந்தான்.
“என்ன ப்ரண்ட்? பிரியாணியா?” என்று ஊர்மிளாவிடம் கேட்க
“ஆமா! அன்னிக்கு நீயும் உன் ஜெயேட்டனும் மசாலா சோறு வாங்கிக் கொடுத்தீங்களே, அது பிரியாணி இல்லை. இன்னிக்கு நான் செஞ்சதுதான் அக்மார்க் பிரியாணி, அதுவும் ஆம்பூர் பிரியாணி!” என்றாள் பெருமையாக. சென்ற வாரம் தலச்சேரி பிரியாணி வாங்கி தந்திருக்க ஊர்மிளாவுக்கு அது பிரியாணியாக தெரியவில்லை.
“ஊரா முக்கியம்? தலசேரியா இருந்தா என்ன ஆம்பூரா இருந்தா என்ன? எங்கண்ணி முதல் தடவ எங்களுக்காக செஞ்சிருக்க, சீக்கிரம் போடு..” என்று வினயன் ஆசையாக சொன்னவன்
“அடப்பாவி! அப்படியெல்லாம் கிடையாது. அவர் வந்துடுறேன் சொல்லிட்டார். நீ வா” என்றதும் அவனும் உண்ணுமிடத்தில் எல்லாவற்றையும் கீழே எடுத்து வைத்தான். ஊர்மிளா வீட்டின் பின் உள்ள வாழை மரத்திலிருந்து இலைகள் வெட்டி வைத்திருக்க, பிரியாணி, சிக்கன் 65, சோறு, ரசம், பச்சடி, சிக்கன் குழம்பு என்று விருந்தே செய்திருந்தாள். எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து கேரியரில் வைத்தவள்
“உங்க அச்சச்சன் வீட்ல கொடுத்துட்டு வா வினய்” என்றதும் வினயனும் சந்தோஷமாக கொண்டு சென்றான். ஊர்மிளாவுக்கு அரக்க பறம்பில் வீட்டில் உரிமை தோன்றாவிட்டாலும் அக்கறையிருந்தது, விஜயனும் பிந்துவும் சென்னை சென்றுவிட மாமியாரை கவனிக்க ஷோபனா அடிக்கடி புகுந்த வீடு சென்றுவிடுவார்.
இப்போது அவரும் வந்திருக்க, மூவருக்கும் உணவு கொடுத்துவிட்டாள், பாலச்சந்திரனுக்கு அந்த வீட்டோடு இருக்கும் நெருக்கம் அவள் அறிந்ததுதானே? அதைவிட பாலாவும் மருமகளிடம் அடிக்கடி பேச, ஊர்மிளாவுக்கும் அந்த தாத்தா பாட்டி தனியாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில், அக்கறையில் கொடுத்துவிட்டாள்.
ஜெய்யும் பத்து நிமிடத்தில் வந்துவிட, நால்வரும் ஒன்றாக உண்டனர். உண்டு முடித்து சிறிது நேரம் எல்லாரும் ஓய்வெடுக்க செல்ல, ஜெய் படுக்காமல் மெத்தையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். ஊர்மிளா வர அவளை பக்கத்தில் அமர வைத்து
“சூப்பரா செஞ்சிருந்த ஊர்மி, வயிறு ஃபுல்லா சாப்பிட்டேன்.. இவ்வளவு அருமையா சமைச்ச இந்த கைக்கு…” என்றவன் அவள் கையைப் பிடித்து முத்தங்களிட்டான்.
“இப்போ சமைக்கலன்னா மட்டும் எனக்கு முத்தம் கொடுக்க மாட்டீங்களா ஜெய்..” ஊர்மிளா அவன் கையைப் பிடித்து வருடியபடி கேட்டு
“காரணமில்லாம முத்தம் வேணும் அதானே?” என்றவன் அவளை அணைத்துக்கொண்டு
“தனியா இவ்வளவு செஞ்சியே கஷ்டமா இல்லையா ஊர்மி, சேச்சி சொன்னாங்க நீ இப்ப அவங்களை சமையல் வேலை ஒன்னும் செய்ய விடறது இல்லையாமே” என்று விசாரித்தான். ஊர்மிளா வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு சமையல் பொறுப்பை முழுவதுமாக எடுத்துக்கொண்டாள். அவள் பகுதி நேரமாக செய்து கொண்டிருந்த, திரைப்பட விமர்சகர் வேலையைத் திருமணத்திற்கு முன்பே விட்டாள், அதை முழுமையாக செய்ய அவளுக்கு நேரமில்லை.
“ஏன் என் சமையல் பிடிக்கலையா?”
“ஏடி! அப்படி சொன்னேனா? நீ ரொம்ப நல்லா சமைக்கிற, இட்லி, தோசை சாம்பார் எல்லாம் அடிபொலி! புட்டு கூட நல்லா பண்ற.. ஆனாலும் ஏன் தனியா செய்யணும்? ஆள் இருக்கும்போது?” என்று அக்கறையாகக் கேட்டான்.
“வேற என்ன வேலையிருக்கு, வீடு சுத்தம் பண்ண சேச்சி இருக்காங்க. துணி மெஷின்ல போடுறோம், இல்லை அவங்க டிரஸ் துவைச்சிக்கிறோம். துணி மடிக்கிறதும் நம்ம இரண்டு பேர் துணி தானே? மாமாவும் வினயனும் அவங்க டிரஸ் மடிச்சிடுறாங்க.. சமையல் செஞ்சு, சாமான் வெளக்கிறது மட்டும்தானே? அதையும் செய்யலன்னா எனக்குப் போர் அடிக்கும் ஜெய்.. ” என்றாள். இதற்காகவே சென்ற வாரம் ரிசார்ட் அழைத்து சென்று பார்த்தான். அங்கு இருக்கும் வேலை செய்ய ஆட்கள் இருக்க, இவள் தேவை அங்கில்லை. அதைவிட மலைப்பிரதேசத்தில் மாறி மாறி பயணித்து ஊர்மிளாவுக்குத் தலை சுற்றிப்போனது.