“உன்னிஷ்டம் ஊர்மி” என்ற ஜெய் சிறிது நேரம் உறங்கி எழ, ஊர்மிளா உறங்கவில்லை. ஊஞ்சலில் உட்கார்ந்து வீடியோ காலில் அம்மாவிடம் அவள் பிரியாணி பிரதாபங்களை பகிர்ந்தாள். அம்மாவிடம் பேசி முடித்தவள் ஜெய்க்கும் பாலச்சந்திரனுக்கும் கட்டஞ்சாயா தயாரித்தவள், வினயனுக்கும் அவளுக்கும் ஃபில்டர் காஃபி செய்தாள். தேனீர் நேரம் முடிந்து எல்லாரும் சென்றுவிட, ஊர்மிளா ரொனால்டோவோடு விளையாடியவள் இரவுக்கு சப்பாத்தி செய்தாள். ஏழு மணி போல் ஒவ்வொருவராக வர வந்ததுமே ஜெய்
“ஊர்மி, குளிச்சிட்டு வரேன், எனக்கு ஒரு சாயா” என்று குரல் கொடுத்து சென்றான். வினயன் டீவி பார்க்க, பாலச்சந்திரன் வார இதழை புரட்டினார். ஜெய் டீஷர்ட்டுக்கு மாறியவன் வேஷ்டியை மடித்துக் கட்டியபடி கீழே வந்தான்.
“ஊர்மி, சாயா ரெடியா?” என்று கேட்டபடி அவளிடம் போக, ஊர்மிளா இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.
“என்னை பார்த்தா டீ மாஸ்டர் மாறி இருக்கா?” என்று கேட்க,
“உனக்கு டயர்டா இருக்கா, சரி நானே போட்டுக்குறேன்” என்று டீ தூளை எடுக்க போனவன் கையைப் பிடித்தாள் ஊர்மிளா.
“என்னடி?” என்றான் எரிச்சலாக. மாலை அவனுக்கு நிறைய வேலைகள் இருக்க, சோர்வுக்கு சாயா குடிக்காமல் இருக்க முடியவில்லை.
“இன்னும் அரை மணி நேரத்துல சாப்பாடு வைக்கிறேன், அப்படி ரொம்ப பசிச்சா சொல்லுங்க இப்பவே சூடா சாப்பாத்தி போடுறேன், இப்போ நோ டீ. அப்புறம் உங்க இஷ்டம்” என்றபடி அவள் வெளியே வர,
“தலைவலிக்குதுனு தானே கேட்கிறேன்.” என்று கத்தியபடி அவனும் வந்தான்.
“என்னடா? ஏன் கத்துற?” என்று பாலா மகனை கேட்க
“தலைவலிக்குதுனு சாயா கேட்டா, கொடுக்க மாட்டேங்கிறாப்பா” என்று குறை சொல்ல, மருமகளுக்கு வேலை களைப்பு என்று நினைத்த பாலா
“அதுக்கென்னடா? நான் போட்டுத் தரேன்” என்றார்.
“அட போங்கப்பா! நானே போட்டுக்கிறேன் சொல்லியும் என்னை விட மாட்டேங்கிறா” என்று மனைவியை முறைத்தபடி ஜெய் தலையைப் பின்னுக்கு சாய்த்து சோஃபாவில் உட்கார்ந்தான்.
“இவர் ரொம்ப மோசம் மாமா, மூணு மணி நேரம் முன்னாடி தானே டீ கொடுத்தேன்.. ஒரு நாளைக்கு எத்தன டீ குடிப்பார் இவர். நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன் ஒரு நாளைக்கு வீட்லயே நாலு டீ குடிக்கிறார்…” என்றதும்
“அடிபொலி! அப்படி சொல்லு ஊர்மி, அதுவும் இவன் ஷஜினு கத்தினா போதும், உடனே ஜெயேட்டா சாயானு வந்து நின்னுடுவான். இவன் டீடோட்டலர்னு சொல்லியிருப்பாங்க, அப்படின்னா டோட்டலா டீ மட்டும் குடிக்கிறவன்.” என்று வினயன் வம்பிழுத்தான்.
“ஏடா! பட்டி! அடிவாங்காத எங்கிட்ட! நீ மட்டும் காஃபியா உள்ள தள்ளல?” என்ற ஜெய் வினயை முறைக்க
“கொஞ்ச நேரம் கண்ணை மூடி அமைதியா படுத்த தலைவலி குறைஞ்சிடும், இவர் ரொம்ப டீ குடிக்கிறார் மாமா” என்று ஊர்மிளா சொல்ல, ஜெயன் பதில் பேசாது மாடியேறினான். ஊர்மிளா அரை மணி நேரம் கழித்து உண்ண அழைக்க ஜெய்யும் வந்தான்.
வினயன் சும்மா இருக்காமல், “நல்ல வேளை! சிங்கிளா இருக்கிறதால தப்பிச்சேன், இல்லைனா சிங்கிள் டீ குடிக்க கூட சிங்கி அடிக்கணும் போல, என்ன ஜெயேட்டா?” என்று அண்ணனை வம்பிழுக்க, ஜெய் முறைத்தான். பாலா அவன் முதுகில் அடி போட்டு
“அவனே அமைதியா இருக்கான், நீ அவனை வெறுப்பேத்துறியா?” என்றார். வினயன் சிரிக்க ஊர்மிளா இரவு உணவு பரிமாற
“இங்க நீ சொல்லிட்ட, நாளைக்கு ரிசார்ட்ல, எஸ்டேட்ல எல்லாம் டீ குடிப்பானே.. அப்போ என்ன ஊர்மி பண்ணுவ?” என்று வினயன் கேட்க
“ஜெய் குடிக்க மாட்டார்” என்றார் ஊர்மிளா கணவனை நேராக பார்த்து. அந்த வார்த்தைக்கும், அவளின் அக்கறைக்காகவுமே ஜெய்
“நாளையில இருந்து ரெண்டு சாயா, ரொம்ப முடியலன்னா மூணு. கம்மி பண்ணிக்கிறேன்” என்ற ஜெயேட்டனை கையைப் பிசைந்து வில்லத்தனமாக பார்த்தான் வினயன்.
“ஏடா ஜெய்! எத்தன நாள் சாயா கொடுனு என்னை பாடாபடுத்தியிருப்ப, எனக்கும் அப்பாவுக்கும் காஃபி கலந்தாலும் உனக்கு ஸ்பெஷலா சாயா போடலன்னா மூஞ்சி தூக்கி வச்சிருப்ப தொட்டாவாடி, இப்போ ஊர்மி சொன்னதும் என்ன ஒரு நடிப்பு” என்றான் கடுப்பாக. ஜெய்யோ சிரித்து
“ஊர்மி என் நல்லதுக்காகதானே சொல்றா” என்ற ஏட்டனிடம்
“நல்லதுக்கே காலமில்லடா” என்றான் வினய் முறைப்பாக.
இரவு ஊர்மிளா ஜெய்யின் தலையை இருவிரல்களால் மெல்ல நீவியபடி
“தேங்க்ஸ் ஜெய்” என்றாள்.
“நீ நல்லதுக்குத்தான் சொல்றேன் தெரியுது ஊர்மி, ஆனா எனக்கு சாயா இல்லாம நாளே ஓடாது. ரிசார்ட், வீடு, எஸ்டேட்னு அலையுறதுல சாப்பிட டைம் கிடைக்கிறதில்ல. சின்ன வயசுல படிக்கணும்னு சீக்கிரம் எழுந்திருக்க, அம்மா இஞ்சி ஏலக்காய் போட்டு கட்டஞ்சாயா சூடா தருவாங்க. பனிக்காத்தோட அந்த டீ வாசம் ஒரு எனர்ஜி கொடுக்கும் பாரு, வாசல்ல உட்கார்ந்து கத்தி படிப்பேன். அப்படியே பழகிடுச்சு” என்று பேச்சு நீள ஊர்மிளா அவனிடம்
“எனக்கு வீட்டு ஞாபகமா இருக்கு ஜெய், நம்ம இரண்டு பேரும் வீக்கெண்ட் காஞ்சிபுரம் போவோமா?” என்று கேட்க ஜெய் மறுத்தான்.
“சம்மர் சீசன் வந்தாச்சு ஊர்மி, கல்யாணம் ஹனிமூன்னு அந்த டைம்ல நான் எந்த வேலையும் பார்க்கல, அப்பா எல்லாத்தையும் மேனேஜ் பண்ணினார். வினயனுக்கு இன்னும் தானா செய்ற அளவு தெரியாது. இந்த டைம் ரொம்ப டைட், ஒரு ரெண்டு மாசம் போகட்டும் ஊர்மி” என்றுவிட ஊர்மியும் அவன் சொல்வது புரிந்து ஒருவாறு மனதை தேற்றினாள்.
ஒருவாரம் ஓடிவிட, ரொனால்டோவைக் கொஞ்சிய ஊர்மிக்கு அவள் ரோமியோவின் எண்ணம். சமைத்து முடித்து காத்திருந்தாள். ஒவ்வொருவரும் வரும் நேரம் மாறும், வேலை செய்யும் சேச்சியும் சென்றுவிட, தனியாக இருந்தவளுக்கு ஊர் உறவின் ஞாபகம். வீட்டில் அவளுக்கு எந்த பிரச்சனையுமில்லை. தேவிகுளம் வந்து இரண்டு மாதங்கள் முடிய போகிறது, ஆனாலும் அந்த ஊரோடு ஒட்ட முடியவில்லை, அவள் ஊரில் தெருவில் இருக்கும் கடையெல்லாம் அத்தனை பரிட்சயம்.
“அண்ணா, மாமா” என்று உறவோடு அழைக்கும் அளவு நெருக்கம். காஞ்சியில் கோவில் முதல் ஜூஸ் கடை வரை எல்லாம் தெரிந்தவர்கள், எங்கும் தமிழ்! இங்கு தமிழ் பேசுபவர்கள் இருந்தாலும் ஊருக்குள் அவர்கள் இருக்கும் பகுதியில் எல்லாம் மலையாளம் பேசுபவர்கள். கடையில் கூட சேட்டா, சேச்சி என்ற குரல்களே! எல்லாமே ஊர்மிளாவுக்கு அன்னியமாக இருந்தது.
அம்மா, பெரியம்மா என்று அவர்களோடே இருந்தவளுக்கு காலை முதல் மாலை வரை தொடரும் தனிமையை விரட்ட முடிவதில்லை. வேலைகள் எல்லாம் செய்தாலும் நேரம் போனாலும், மனதை வாட்டும் தனிமையுணர்வை நீக்க முடியவில்லை. ஹாஸ்டல் கூட செல்லாத பெண், மதிய உணவுக்குக் கூட அப்பா, பெரியப்பா என்று நேரம் பார்த்து வீடு வந்துவிடுவார்கள். இங்கோ இவர்களையும் குறை சொல்ல முடிவதில்லை, மதிய உணவு முடிந்ததுமே ஜெய் சில நாட்கள் சூர்ய நெல்லி கிளம்பிப் போனான் என்றால் அடுத்த நாள் காலை வருவான். அன்று பகலோடு இரவும் ஊர்மியை வாட்டும்.
சில நேரம் பசிக்கிறதே என்று மதியம் அவர்கள் வர தாமதமானால் உண்பவளுக்கு அம்மா தன்னோடு உட்கார்ந்து பரிமாறுவது ஏக்கமாய் எழுந்து கண்ணீர் வரவைக்கும், கூடவே எரிச்சல் என்று ஊர்மிளாவின் உணர்வுகள் தவித்து தாயை, வீட்டை, ஊரை தேடிக்கொண்டிருந்தன. அன்று பொறுத்து பார்த்தவள் ஜெயனுக்கு அழைத்தாள்.
ஜெய் மூணார் ரிசார்ட்டில் அறை பராமரிப்பையெல்லாம் சரி பார்த்துக்கொண்டிருக்க, ஊர்மிளா அழைக்கவும் எடுத்தான்.
“சொல்லு ஊர்மி” என்றதும்
“ஜெய்! எனக்கு ஊருக்குப் போகணும்” என்றாள்.
“என்ன ஊர்மி, நான் போன வாரமே சொல்லிட்டேனே”
“எனக்குத் தனியா இருக்க என்னமோ போல இருக்கு, ப்ளீஸ் ஜெய் ஒரு நாலு நாள் ஊருக்குப் போய்ட்டு வரலாம்” என்றாள் கெஞ்சலாக.
ஜெய்க்கு ஊர்மிளாவை விட்டு இருப்பது கஷ்டம், அவனும் கூட செல்ல முடியாது.
“ஊர்மி தனியா இருக்க போர் அடிச்சா அச்சம்மாவை போய் பாரு, அவங்களும் தனியா இருப்பாங்க. போர் அடிக்காது” என்றது ஊர்மிளாவுக்குக் கோபம் கொடுத்தது. அவன் எதார்த்தமாக சொன்னான் என்று புரிந்தாலும் ஊரைப் பிரிந்து வந்தவளுக்கு எரிச்சல் கொடுத்தது.
“எங்க வீட்டை உங்க அச்சம்மா வீடு ரிப்ளேஸ் பண்ணுமா ஜெய்?” என்றாள் கோபமான குரலில்.
“ஊர்மி நான் அப்படி சொல்லல!” ஜெய் திருத்தமாக சொன்னவன் ” நீ போர் அடிக்குது சொன்னதால சொன்னேன் ஊர்மி, அச்சம்மா கூட இருந்தா உனக்கும் பொழுது போகும்” என்றிட ஊர்மிளா பல்லைக் கடித்தாள்.
“நான் தனியா இருக்க மாதிரி இருக்கு சொன்னேன், போர் அடிக்கல. எனக்கு என் அம்மாவை, அப்பாவை பார்க்கணும். எங்க வீட்டுக்குப் போகணும் புரியுதா உங்களுக்கு?” என்றாள் தெளிவாக.
“எண்ட அம்மே! அதெல்லாம் முடியாது. நான் ஈவினிங் சீக்கிரம் வரேன். நீ ஃபீல் பண்ணாத” என்று ஜெய் சமாதானம் சொல்லி வைக்க, ஊர்மிளாவுக்கு அவன் மறுப்பு இன்னும் கோபம் கொடுத்தது.
அந்த கோபத்தில் அவள் இருக்க, அச்சுதன் மதிய உணவு முடிந்து பாலாவிடம் பேச வீட்டுக்கு வந்தார்.
“வாங்க தாத்தா” என்று ஊர்மிளா அவரை மரியாதையாக வரவேற்றாள். ஓணத்தின்போது நடந்த சண்டைக்குப் பிறகு அவளும் அவரும் நேருக்கு நேராக சந்திக்கவில்லை, ஊர்மிளாவுக்கு அவரோடு பேசக்கூடாதென்றில்லை, ரத்னவேலிடம் சண்டை போட்டு உரிமையாக சமாதானம் செய்பவள், இவரிடம் அந்த உரிமை வரவில்லை. அதைவிட அப்போது மன போராட்டம், திருமணம், தேனிலவு என்று நாட்கள் சென்றிருக்க அச்சுதனோடு பேச வாய்ப்போ எண்ணமோ இல்லை.
“பாலா, ஜெயன் யாருமில்லையா ஊர்மி?” என்று அச்சுதன் கேட்க
“இல்ல தாத்தா” என்றாள்.
“தனியா இருக்கியா? சுந்தரி இல்ல”
“அவங்க வேலை முடிஞ்சு போய்ட்டாங்க. உங்களுக்கு டீ எடுத்துட்டு வரவா?” என்று ஊர்மிளா கேட்க மறுப்பாக தலையசைத்தார். அவர் தன்னை ரத்னவேல் பேத்தியில்லை என்றது ஊர்மிக்கு இன்னும் மறக்கவில்லை. இருந்தாலும் வயதானவரை தான் அப்படி பேசியிருக்கக் கூடாதென்ற எண்ணம், பிரபாகரனை அடிக்க ரத்னவேலுக்கு உரிமையிருப்பது போல, ராஜீவனை அடிக்க அச்சுதனுக்கு உரிமையிருக்கிறதே, பிரபாகரன் முன்பு சொன்ன சமாதானம் நினைவில் வர, அவரிடம் மன்னிப்புக் கேட்க நினைத்தாள். அச்சுதனோ அதற்குள்
“தனியா இருக்க நீ நம்ம வீட்டுக்கு வரலாமில்ல மா?” என்று கேட்டிட, ஜெய் ஏற்கனவே அங்கு போக சொன்ன கோபத்தில் இருந்தவள் இவரும் இப்படி பேச ஒரு கோபம். இவர்களோடு நான் இணக்கமாக இருக்க வேண்டும் என்று எனக்கு எதையும் மறுக்காத ஜெய் ஊருக்குப் போக விடாது செய்கிறானோ என்ற கோபம். இவள் பதில் பேசாது இருக்க அச்சுதன் சட்டென்று
பேத்தி என்ற உரிமையில், “அது உன்னோட வீடு, அங்க நான் கூப்பிடணுமா உன்னை?” என்று கேட்டார். அவரும் எதுவும் பேச கூடாது என்று இத்தனை நாள் பொறுத்திருந்தார், திருமணம் முடிந்ததும் விஜயனும் பிந்துவும் சென்றுவிட மீண்டும் தனிமை, அதுவும் பத்மினி பிந்து போனதும் இன்னும் வாடினார், ஊர்மிளா அவராக பேசினால் பேசினாளே தவிர உரிமையாக அவளாக தேடி வரவில்லை. ராஜீவன் ஊர்மிளா வரவேற்பு முடியவும்
“அம்மா! இனிமே அடிக்கடி நான் போன் பேசுறேன், ஊருக்கு வரேன். நீங்க என்னை நினைச்சு கவலைப்படக்கூடாது” என்று அம்மாவிடம் சமாதானம் செய்துவிட்டு போனார். அச்சச்சனும் அச்சம்மாவும் பேத்தி அருகில் வந்துவிட்டால் விரைவில் அரக்க பறம்பில் வீட்டுக்கும் வந்து போவாள் என்று ஆவலுடன் காத்திருக்க ஊர்மிளாவுக்கு அப்படியொரு ஆவலில்லை. இதில் அச்சுதனுக்கு பேத்தி அவள் அம்மச்சன் வீட்டுக்கு சென்றது தெரிய, மனதில் ஆற்றாமை.
“அது உங்க வீடு தாத்தா, இதான் என் வீடு” என்று ஊர்மிளா பதில் சொல்ல, அச்சுதன் பேத்தியின் பேச்சில் கோபமாக எழுந்தார்.
“உன் அச்சம்மா ஜெயனும் வினயனும் வரும்போதெல்லாம் பேத்தியும் வருவாளானு ஆசையா பார்த்துட்டு இருப்பா, நானா கூப்பிட வந்தும் உனக்கும் மனசில்ல இல்ல..ஷரி! என்னதான் உன்னை பிரபாகரன் வளர்த்திருந்தாலும் உன் உடம்புல ராஜீவன் ரத்தம் ஓடுதுல, அதான் அவனை மாதிரி இருக்க. அவன் தூரமா போய் எங்களை தண்டிச்சான், நீ பக்கத்துல இருந்து தண்டிக்கிற!” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட, ஊர்மிளாவுக்கு அவரின் வார்த்தைகள் வலி தந்தன.
“எங்க அம்மாப்பா என்னை ஒன்னும் அப்படி வளர்க்கல” என்று சொல்ல தோன்றினாலும் அவர் பேசிய பேச்சில் கோபம், இயலாமை அழுகை எல்லாம் வந்தது. என்ன செய்ய முடியும் அவளால், இத்தனை வருட உண்மை உண்மையில்லை, உண்மையை அவளால் ஏற்க முடியவில்லை. அதையெல்லாம் உணர்ந்து ஏற்பதற்குள் திருமணம், அதில் பொருந்தி போவதற்குள் இப்படியொரு பேச்சு. ஏற்கனவே ஊர் நினைவில் இருந்தவளுக்கு அச்சுதன் பேச்சில் இன்னும் வேதனை, அம்மா அப்பாவை தேடியது ஊர்மி மனம்.
இரவு உணவு முடிந்து அறைக்குள் வர, ஜெய் கணக்குகள் பார்க்க ஊர்மிளா மெத்தையில் படுத்துவிட்டாள். எப்போதும் “ஹெல்ப் பண்றேன்” என்று உரசும் மனைவி அருகே வராது போக, இவன் அவளிடம் போனான். ஊர்மிளாவின் தோளைத் தட்டியவன்
“என்னாச்சு ஊர்மி? நைட் சரியா சாப்பிடல, பிடிக்கலையா?” என்றான்.
ஊர்மிளா அவன் பக்கம் திரும்பாமல், “பிடிக்கல” என்றாள் பட்டென்று.
“என்ன பிடிக்கல?” என்று ஜெய் அவள் கையைப் பிடித்து தன் பக்கம் பார்க்க வைத்து கேட்க
கண்ணீரோடு “எதுவும் பிடிக்கல, இந்த ஊர் பிடிக்கல, கல்யாணம் பிடிக்கல…” என்றாள்.
“என்னையும் பிடிக்கலயா?” ஜெய் அவள் ஏதோ கோபத்தில் பேசுகிறாள் என்று தெரிந்தே கேட்டான்.
“பிடிக்கல” என்றதும் ஜெய் முகம் வாடியது. “ஏடி! என்னை பிடிக்காதா?” என்று அவள் முகம் பற்றி மூச்சுக்காற்று உரசிட கேட்க,
“பிடிக்கல” என்று அவன் தோள் சாய்ந்தாள். அதில் ஆசுவாசமானவன்
“ஏன் ஊர்மிக்கு ஜெய்யைப் பிடிக்கல?” என்று கேட்க
“பின்ன முன்னாடி இங்க வந்தப்ப நான் ஊருக்குப் போகணும்னு சொன்னா நீங்க என்னை உடனே கொண்டு போய் விடுவீங்க, இப்போ விடல இல்ல..” என்றதும் ஜெய் சிரித்தான். அந்த சிரிப்பு கோபம் தர, அவனிடமிருந்து விலக ஜெய் விடவில்லை.
“அப்போ நமக்குக் கல்யாணமாகல, இப்போ கல்யாணமாகிடுச்சு. நீ ஊர்மிளா ஜெய்ச்சந்திரன்” என்று விரலால் அவள் முகத்தில் வருடி அவன் பேச, ஊர்மிளாவோ
“அதான் கல்யாணம் பிடிக்கல, என் வீட்டுக்குப் போக என் அப்பா, அம்மாவை பார்க்க உங்க பெர்மிஷன் தேவைப்படுது இல்ல, அதான் பிடிக்கல. எல்லாத்தையும் மாத்தினா இந்த கல்யாணம் எனக்குப் பிடிக்கல, கல்யாணத்து அப்புறம் மாறின ஜெய் எனக்குப் பிடிக்கல” என்று பொறுமினாள்.
ஜெய்யோ ஊர்மிளாவை இறுகயணைத்து, “ஏடி! உன்னை விட்டு நான் எப்படி இருப்பேன். ஒரு மாசம் ப்ளீஸ், அப்புறம் நம்ம சேர்ந்தே போகலாம்.. எனக்காக ஊர்மிம்மா” என்று கொஞ்சலாக சொல்ல, ஊர்மிளாவோ
“இரண்டு மாசம் கூட இருக்க என்னை விட்டு நீங்க இருக்க மாட்டீங்க, இருபது வருசம் வளர்த்தவங்களை விட்டு நான் மட்டும் இருக்கேன்ல” என்றாள் அவன் அணைப்பிலிருந்தபடியே.
“அப்போ என்னை விட்டு இருந்தா உனக்குக் கஷ்டமா இருக்காது?” ஜெய் அணைப்பை விட்டு கோபத்துடன் கேட்க, ஊர்மிளா முறைத்தபடி அவன் பனியனின் காலரோடு அவனை அருகே இழுத்தாள்.
“உங்களை விட்டு இருக்க முடியாதுனுதான் கூட கூப்பிட்டேன், நீங்கதான் சம்மர், விண்டர்னு வர மாட்டேன் சொல்லிட்டீங்க.” என்று சொல்லி அவனை விட, ஜெய்க்கு தர்ம சங்கடம். அவள் ஆசையும் முக்கியம், அவளை விட்டும் இருக்க முடியவில்லை. தவித்தவன் இறுக்கமாக அணைத்து கழுத்தில் முத்தமிட்டு
“அது நீங்க முதல்ல கேட்டப்போ விட்டிருந்தா, இப்போ ஒரு வாரம். ஏழு நாள்!” என்று ஊர்மிளாவின் உடன்படிக்கைக்கு கடைசியில் ஜெய் ஒத்துக்கொள்ள வேண்டியதானது.
அச்சுதன் பேசியதை ஊர்மிளா ஜெய்யிடம் சொல்லவில்லை, ஜெய்யிடம் சொன்னால் அவன் எப்படியும் அச்சச்சனுக்குத்தான் பேசுவான் என்று தெரியும். அப்போது கோபமாக இருந்தாலும் அவருக்குத் தன்னை புரியாது என்று புரிந்து போனது. ஊருக்குப் போய்விட்டு வந்து அவரிடம் பேசலாம் என்று நினைத்தாள்.
அடுத்த நாள் காலையில் ஊர்மிளாவை விமான நிலையத்தில் விட போனான் ஜெய்ச்சந்திரன். இருவருக்குமே அவன் காதல் சொல்லிய நினைவு எழ, ஊர்மிளாவின் புன்னகை ஒரு நிறமென்றால் ஜெய்யின் வெட்கம் ஒரு நிறமாக இருந்தது.
ஜீப்பை நிறுத்திய ஜெய், தலையைக் கோதியபடி
“என்னடி பார்க்கிற?” என்றான் ஊர்மிளாவிடம்.
“இல்ல, அப்போ நேரா சொல்லாம எவ்வளவு சுத்தி வளைச்சீங்க. வினய் சொல்லி நான் கேட்கலன்னா எத்தன நாளாகிருக்கும் உங்க காதல் சொல்ல?” கிண்டலாகக் கேட்டாள்.