ஊர்மிளா காலையில் கிளம்பும்போது பிரபாகரனுக்கு அழைத்து சொல்ல, அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. ஊர்மிளாவுக்குப் பிடித்ததாக வாங்கி வந்துவிட்டு நேரத்தை நெட்டித்தள்ளி காத்திருந்தார்.
“அண்ணா! நான் ஆபிஸ் வரல..” என்று கிருபாகரனிடம் காலை உணவின் போது சொல்ல
“டேய் ஊர்மி வர மதியம் மேல ஆகிடுமே, அதுவரைக்கும் சும்மா தானே இருப்ப? வாடா” என்றார் கிருபாகரன்.
மகன்களின் பேச்சைக் கேட்ட இரத்னவேல், “கிருபா, இவனுக்கு ஆபிஸ்ல முடிஞ்சளவு அதிக வேலை கொடு, சும்மா இருக்கிறதால கண்டதும் யோசிக்கிறான். பொண்ணு ஞாபகமா இருக்குன்றான்” என்றதும் கிருபாகரன் சிரிக்க பிரபாகரனோ
“ஓஹ், மிஸ்டர். ரத்னவேல் இப்படியெல்லாம் திட்டம் போடுறீங்களா? அப்படியொன்னும் உங்க ஆபிஸ் வேலை எனக்குத் தேவை இல்லை, நான் ரிசைன் பண்றேன்.” என்றதும் ரத்னவேல்
“படவா! பேச்சை பார்த்தியா இவனுக்கு? இருடா என் பேத்தி வரட்டும் சொல்றேன்” என்றவரும் அன்று ஊர்மிளா வருவதால் வெளியே எங்கும் செல்லவில்லை.
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்மா” என்றாள். ஜமுனாவும் மகளுக்குப் பிடித்ததெல்லாம் செய்து அவளோடு பொழுதை கழித்தார். ஊர்மிளாவின் வருகை மாயமாக அவர்கள் வீட்டுக்கு மகிழ்ச்சி கொடுத்திருந்தது, கிருபாகரனும் மகளோடு வம்பிழுத்து அவளை காரணம் வைத்து பிடித்ததெல்லாம் செய்ய சொல்லி சாப்பிட்டார்.
“ஊர்மி, உன் புருஷன் என்ன பண்றான்? உன்னை மட்டும் தனியா அனுப்பியிருக்கான்?” ரத்னவேல் பேத்தியின் முகம் பார்த்து விசாரிக்க
“கட்டிக்கிறதுக்கு முன்னாடி காஞ்சிபுரம் வர வழி தெரிஞ்சது, இப்போ வேலை இருக்குன்னா சொல்றான் அவன்?” என்று மீசையை முறுக்கினார்.
ஊர்மி சிரித்து “இப்போ அங்க சீசன்ல தாத்தா, அதனால் வர முடியல.” என்றாள்.
“வேற ஒன்னும் பிரச்சனையில்லயே மா? நீ சந்தோஷமா இருக்க தானே?” என்று அச்சுதனை மனதில் வைத்து ரத்னவேல் கேட்க, ஊர்மிளாவுக்கு அதெல்லாம் நினைவில் இல்லை.
“எனக்கென்ன தாத்தா பிரச்சனை? ஜெய் நல்லா பார்த்துக்கிறார், அங்க எல்லாம் என்னிஷ்டம், மாமா வினய் கூட என்னை நல்லா பார்த்துப்பாங்க”
“அது சரி! ஆனா நாளைக்கு உன் கொழுந்தனுக்குக் கல்யாணம் ஆகும், நீ மூத்த மருமகளா பொறுப்பா இருக்கணும் ஊர்மி, என் பேத்தி எங்க போனாலும் நம்ம காமாட்சியா ஆட்சி பண்ணனும். அம்மா இல்லாத பசங்க, நீ அந்த குடும்பத்தை சரியா நடத்தணும்!” என்றதும் ஊர்மிளா தலையை ஆட்ட
“என்ன தாத்தா அட்வைஸ் பண்றான் பார்க்கிறியா? உன்னை யாரும் குறை சொல்ற மாதிரி நடக்காத! அதே நேரம் உனக்கு எதாவது பிரச்சனைன்னா நாங்க என்ன நினைப்போம் நினைச்சு சொல்லாம இருக்க கூடாது, உனக்கு தாத்தா இருக்கேன்! அப்பா, பெரியப்பா இருக்காங்க.. புரியுதாடா?” என்று ரத்னவேல் பேத்தியிடம் கேட்க அவரின் மருந்துகளை சரி பார்த்தவள் அவர் பக்கமாக வந்து உட்கார்ந்து
“நீங்க இவ்வளவு யோசிக்க வேண்டாம் தாத்தா, நான் ரொம்ப நல்லாயிருக்கேன். எல்லாரையும் நல்லா பார்த்துக்கிறேன், நம்ம காமாட்சி ஆசிர்வாதத்துல எனக்கு ஒரு குறையுமில்லை” என்றாள். தனக்குக் கீழ் உட்கார்ந்திருந்த பேத்தியின் தலையை வாஞ்சையாக வருடியவர்
“இந்த சிரிப்புக்கும் சந்தோஷத்துக்காகவும் தான் உன்னை தொலவா இருந்தாலும் அங்க கட்டிக்கொடுத்தது. பேரன் பரவாயில்லை போல, ஆனாலும் அந்த பைய பொண்ணைக் கட்டிக்கொடுத்ததும் தாத்தாவ மறந்துட்டான் பாரேன். அதுக்கு முன்னாடி போற இடமெல்லாம் வயசு பொண்ணை துரத்துற மாதிரி பின்னாடி வருவான்..” என்று சிரித்தார்.
“ஹாஹா, அவர் என்னையே அனுப்ப மாட்டேன் சொல்லிட்டார் தாத்தா. நான் அடம்பிடிச்சு வந்தேன்” என்று ஊர்மிளா சொல்ல
“என்ன உன்னை அனுப்ப மாட்டேன் சொன்னானா? அவனுக்குப் போன் போடு” என்றதும் ஊர்மிளா புன்னகையோடு கணவனுக்கு அழைத்து தாத்தாவிடம் பேச கொடுத்தாள்.
“ஏண்டா பொண்ணைக் கட்டிக்கொடுக்கிறது முன்னாடி காஞ்சிக்கு நடையா நடந்த, இப்போ வர மாட்டேங்கிற?”
“உங்க பேத்தியை நல்லா பார்த்துக்கணுமே, அதுக்கு வேலை செய்யணுமில்ல தாத்தா? அடுத்த முறை ஊர்மியோட வரேன்”
“என் பேத்தி எங்களை பார்க்க பெர்மிஷன் தர மாட்டேங்கிறியாமே?” என்று ரத்னவேல் கிண்டலாகக் கேட்க
“உங்க பேத்தி போட்டுக்கொடுத்துட்டாளா? ஏன் தாத்தா நீங்க இப்படித்தான் பாட்டியை அனுப்பி விட்டிருவீங்களா? உங்க பேத்தி இல்லாம நான் நல்லா இல்ல..” என்று புலம்பினான். கேட்டிருந்த ரத்னவேலுக்கு சந்தோஷமாக இருந்தது.
அவர் வாய்விட்டு சிரித்திட, ஊர்மிளா என்னவென்று கேட்க ரத்னவேல் பதில் சொல்லாது ஜெயனிடம்
“அடுத்த முறை இரண்டு பேரும் சேர்ந்து பத்து நாள் இருக்க மாதிரி வரணும் ஜெய், வீட்ல கேட்டதா சொல்லு” என்று பேசி வைத்தார்.
“தாத்தா! நான் உங்களுக்கு மருந்தெல்லாம் ஆப்ல ஆர்டர் பண்ணிட்டேன், முடியறதுக்கு முன்னாடியே டெலிவரி பண்ணிடுவாங்க. சரியா நேரத்துக்குச் சாப்பிட்டு மாத்திரை போடணும், அப்போதான் பிபி கன்ட்ரோல்ல இருக்கும். வெயில் காலம் ரொம்ப அலையாதீங்க, தேசி தாத்தா கிட்டயும் சொல்லிடுறேன், கட்சி கூட்டம்னு போக கூடாது” என்று காமாட்சி கட்டளைகள் சொல்ல கேட்டுக்கொண்டார் ரத்னவேல். இரண்டு நாட்கள் சந்தோஷமாக கழிய அன்றிரவு ஜெய் வழக்கம்போல் ஊர்மிக்கு அழைத்தான். எப்போதும் இரவு உணவு முடிந்து பத்து மணிக்கு மேல் அழைப்பவன் ஏழு மணிக்கே அழைத்துவிட
“என்ன ஜெய் இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம்?” என்று ஊர்மி கேட்க
“ஊர்மி! நீ ஊருக்குப் போறதுக்கு முன்னாடி அச்சச்சன் உங்கிட்ட பேசினாரா?” என்ற ஜெயனின் குரல் கோபமிருந்தது.
“பேசினார்”
“ஏன் எங்கிட்ட சொல்லல? அதான் அவசரமா போனியா நீ?” என்று கத்த
“ஜெய் நான் அதுக்கு முன்னாடியே ஊருக்குப் போகணும் சொன்னேன் தானே? உங்க அச்சச்சன் பேசவும் கஷ்டமா இருந்தது, அவரும் ஒரு காரணம்! ஆனா அவர் மட்டும் காரணமில்லை. இப்போ என்னாச்சு? ஏன் கத்துறீங்க?” என்று ஊர்மியும் கோபத்தை அடக்கிக் கேட்டாள்.
“அத விடு! அச்சச்சன் பேசினதை ஏன் எங்கிட்ட சொல்லல?” என்றான் மீண்டும். மாலை அச்சுதன் ஜெயனிடம் ஊர்மிளா ஊருக்குப் போனதறிந்து, தன்னால் தானோ என்று வருந்தி பேசியிருக்க அப்போதுதான் அவனுக்கு விஷயமே தெரியும். அச்சுதன் என்ன பேசினார் என்று தெளிவாக தெரியவில்லை, இவளும் பதிலுக்குப் பேசியிருப்பாளோ என்ற கவலை, இதில் ஊர்மிளா தன்னிடம் சொல்லாத கோபம்.
“கல்யாணமாகிட்டா எல்லாம் நம்ம பிரச்சன ஊர்மி, நீ சொல்லாம இருந்ததுதான் டென்ஷன். இன்னிக்கு அச்சச்சன் வந்து ஃபீல் பண்ணி பேசுறார், அவர் பேசி கோச்சுகிட்டு நீ போய்ட்டியோனு. எனக்கு எதுவும் தெரியாம நான் என்ன சமாதானம் சொல்றது?” என்று கேட்டுவிட ஊர்மி உடனே
“அப்போ உங்க அச்சச்சனை சமாதானம் செய்ய காரணம் தேடி எனக்குக் கூப்பிட்டுருக்கீங்க, எனக்காக இல்ல” என்றாள் ஆற்றாமையோடு.
“ஏன் என் அச்சச்சனை சமாதானம் செஞ்சா என்ன? அரை மணி நேரம் பார்த்த அம்மச்சனை நீ சமாதானம் பண்ணும்போது விவரம் தெரிஞ்சதுல இருந்து பார்க்கிறவரை நான் சமாதானம் செய்யக் கூடாதா?” என்றான் பதிலுக்கு.
“இத அன்னிக்கே கேட்க வேண்டிதானே? இத்தன நாள் மனசுல வச்சிருக்கீங்க? இதுல என்னை மட்டும் ஏன் சொல்லல கேட்கிறீங்க?”
“அப்போ கேட்டு உன்னை டென்ஷன் பண்ண வேண்டாம்னுதான், நமக்கு கல்யாணமான உடனே இந்த பிரச்சனயெல்லாம் பேச எனக்கிஷ்டமில்ல… ! ஆனா நீ ஒரு கண்ல வெண்ணையும் இன்னொரு கண்ல சுண்ணாம்பும் வைக்கிறடி” என்றான் கடுப்பாக.
ஊர்மிக்கு ஜெய்யின் பேச்சு கோபம் கொடுக்க, “இப்படி பேசினா உங்க கண்ணுல மிளகா வச்சிருவேன்” என்றாள் கோப மூச்சுகளோடு.
இருவரும் கோபமாக பேசிக்கொண்டிருக்க ஊர்மிளாவின் பேச்சில் ஜெயனுக்கு சிரிப்பு. புன்னகை எட்டிய முகத்தோடு
“ஓஹ்… பின்னே…?” என்றான் கிண்டலாக.
“போங்க ஜெய், போய் உங்க அச்சச்சனை சமாதானம் செய்ங்க. அவரால நான் ஒன்னும் எங்க வீட்டுக்கு வரல, அவர் பையன் மாதிரி எனக்கு பொசுக்குனு கோச்சுட்டு போற பழக்கமில்லனு நல்லா அவர் பாஷையில அழுத்தி சொல்லுங்க” என்றாள் எரிச்சலாக.
“அவரைதான் சமாதானம் செய்ய போறேன், பின்னே உன்னையா? போடி” என்று வம்பிழுக்க
“அப்படியா? ரொம்ப நல்லது” என்று போனை வைத்துவிட்டாள்.