ஜெயனுக்கு ஊர்மிளா பேசவும்தான் ஆசுவாசம், அச்சச்சன் அதிகம் பேசியிருந்தால் உண்மையில் மிளகாய் வைப்பவள் ஊர்மிளா என்று தெரியுமே. பெருமூச்சோடு அரக்க பறம்பில் வீட்டுக்குச் சென்று அவரிடம் பேசி வந்தான் ஜெய்ச்சந்திரன். அன்றிரவு வழக்கம்போல் பேசும் நேரத்தில் ஊர்மிளா ஜெயனுக்கு அழைத்தாள்.
இருவருமே பின்மாலை பிணக்கை மறந்து இயல்பாக பேசினார்கள். பேசி முடிக்கும் நேரம்
“ஜெய் நான் எக்ஸ்ட்ரா மூணு நாள் சேர்த்து ரவுண்டா பத்து நாள் இருந்துட்டு வரவா?” என்று ஊர்மிளா கேட்க, அவள் கேள்வியில் ஒளிந்திருந்த நக்கல் அவனுக்குப் புரிந்தது.
“உனக்கு வேணும்னா இருந்துட்டு வா, அப்புறம் என்னை பிடிக்கல கல்யாணம் பிடிக்கல, பெர்மிஷன் கொடுக்கலனு சொல்லுவ” என்று படபடவென சொன்னவன்
“ஊர்மிக்கு என்னை விட்டு இருக்க ஜாலியா இருக்கு?” பொறுமியபடி கேட்டான்.
ஊர்மிளா உடனே “நீங்க பார்த்தீங்களா ஜாலியா இருக்கேன்னு” என்று எதிர்கேள்வி கேட்டாள்.
“பின்ன இல்லையா? உன் தாத்தா எல்லாம் எங்க பேத்தி வந்துட்டா ஜாலியா இருக்கேன்னாரே”
“வீட்ல எல்லாரோட இருக்கும்போது நல்லாயிருக்கு, என் ரூமுக்கு வந்துட்டா…தனியா இருக்கப்போ எனக்குத் தூக்கம் வரல..” என்று பேசிக்கொண்டிருந்தவள் சட்டென்று நிறுத்திவிட, ஜெயனுக்கு உல்லாசமான சிரிப்பு.
“தனியா இருக்கப்ப..? பேசுடி” என்றான் உற்சாகமாக.
“நீங்களும் என்னோட வந்திருந்தா நான் இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன்”
ஊர்மிளாவுக்கு வீட்டினரோடு இருப்பது மகிழ்ச்சியாக நிறைவாக இருந்தாலும் அந்த நிறைவினில் குறைவாய் ஜெயனின் பிரிவு இருந்தது. அவனும் உடனிருந்திருந்தால் நிறைந்திருப்பாள். அதுதானே பிரியத்தின் நியதி, நிறைவு! ஜெய்யின் பேச்சை, வெட்கத்தோடு தலைகோதும் அவன் விரிந்த சிரிப்பை, நெருக்கமான நேரத்தில் சுடும் அவன் மூச்சுக்காற்றை, மோகம் பூத்து ஒலிக்கும் ‘ஊர்மி’ என்ற அவன் குரலை என்று எல்லாவற்றையும் ஊர்மிளா தேடினாள்.
பெருமூச்சுவிட்ட ஜெய், “பரவாயில்ல நீ எஞ்சாய் பண்ணிட்டு வா, ஆனாலும் நான் மட்டும் தனியா கஷ்டப்படுறேன் நினைச்சேன், என் பொண்டாட்டியும் தவிக்கிறா நினைக்கிறப்ப சந்தோசமா இருக்கு. முடிஞ்சா ஒரு நாள் முன்னாடி வா ஊர்மி, ஐ மிஸ் யூ” என்றான் தவிப்பாக.
“அதெல்லாம் முடியாது!” என்றாள் உடனே.
“அதானே பார்த்தேன், ரத்னவேல் பேத்தி காஞ்சிபுரத்தை விட்டு வரதான்னு?”
“உங்களுக்காக ஆயுசுக்கும் அங்க வர ஒத்துக்கிட்டேன், அதெல்லாம் நினைக்காம ஏழு நாளைக்கு அக்கப்போர், டூ மச் ஜெய்” என்றாள் ஊர்மிளா. இப்படியே சில நிமிடங்கள் பேசி வைத்தனர். நாட்கள் இயல்பாக செல்ல, லீலா அப்பா வீட்டுக்கு வந்தார். ஊர்மிளா அத்தையிடம் அத்தனை ஆண்டு எப்படி உரிமையாக பழகினாளோ அப்படியே நடக்க, லீலாவும் நல்லவிதமாக நடந்தார்.
“ஏண்டி ஊர்மி? கல்யாணமாகி பொறந்த வீட்டுக்கு வர பொண்ணு புருஷன் கூட வராம தனியா வருவியா?” என்று கண்டிக்க
“ஏன் அத்த? நீயும் தானே தனியா வந்திருக்க?” என்று கேட்டாள் ஊர்மிளா.
“நான் என் மகனுக்கே கல்யாணம் பண்ண போறேன், நீ அப்படியா? அங்க எல்லாம் உன்னை நல்லா பார்த்துக்கிறாங்களா?” என்று அக்கறையாக விசாரித்தார். ஊர்மிளா அத்தைக்குப் பிடித்த பலகாரம் செய்து கொடுத்து நன்றாக கவனிக்க, அப்பா சொன்னது லீலாவதிக்கு நன்றாக விளங்கியது. அண்ணியும் தம்பி மனைவியும் அவருக்குத் தேவையானதை கடமையாக செய்தாலும், ஊர்மி பிடித்ததை அன்பாக செய்தாள். சர்வேஷ் அம்மாவை அழைக்க வர, அவனிடம் மட்டும் இன்னும் இயல்பான பேச்சில்லை. சர்வேஷும் அவளாக பேசட்டும் என்றுவிட்டுவிட்டான்.
ஊர்மிளாவுக்கோ நாட்களின் வேகம் ஒளியின் வேகத்தை விட அதீதமாக இருப்பது போல் இருந்தது. அம்மாவிடம் புலம்பினாள்.
“அம்மா, அங்க எல்லா வேலையும் செஞ்சுட்டு உட்கார்ந்தாலும் வீட்ல எல்லாரும் வரதுக்கு ரொம்ப நேரம் ஆகும், இங்க வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள நாலு நாள் முடிஞ்சு போச்சு” என்ற மகளை பார்த்த ஜமுனா
“அங்க நேரம் போகுமான்னா பார்த்துட்டே இருப்ப, இங்க அப்படியில்ல. ஒரு குழந்த வந்துட்டா அதோட நேரம் போயிடும் ஊர்மி” என்றபடி அவள் தலையை வாரிவிட்டார்.
“ஒழுங்கா முடியை மெயிண்டெய்ன் பண்ணு ஊர்மி” என்று சொல்ல, ஜெய் சொன்னது நினைத்து சிரிப்பு வர பக்கென்று சிரித்தவள் அம்மாவிடம் பேச்சை மாற்றினாள்.
“அப்போ எனக்குக் குழந்தை வந்தா உங்களை எல்லாம் தேட மாட்டேன் சொல்றியா?” முன்னால் விழுந்த ஒற்றை முடியை ஒதுக்கி முறைப்பாக அம்மாவிடம் கேட்க
“தேட மாட்டேனு சொல்லலடி, தேட நேரமிருக்காது சொல்றேன். நீ வந்தப்புறம் எனக்கு உன்னை கவனிக்க நேரம் சரியா இருந்தது, பெரியம்மாவுக்கு விஷ்ணு ஸ்கூல் போய்ட்டாலும் விஷாலை கவனிக்கணும். குழந்தை தூங்குற நேரம் தூங்கணும், அப்புறம் எப்படி நேரமிருக்கும் சொல்லு? என் பொழுது உன்னோட ஆரம்பிச்சு நைட் தூங்குற வரைக்கும் உன்னோட போகும், இப்போ…” என்றவருக்குத் தொண்டை அடைத்தது.
“அம்மா”என்று ஊர்மிளா அவர் கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.
“நீயும் அப்பாவும் என்னோட வந்து கொஞ்ச நாள் இருங்களேன், அங்க யாரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. ப்ளீஸ்மா” என்று கேட்க
“தேங்க்ஸ் ஊர்மி” என்று பிரபாகரன் காஃபி பருக ஊர்மிளா அவரை கிண்டல் செய்தாள்.
“ஏன் போனா என்ன?” என்று சிரித்த பிரபா “வீட்ல இருந்தா உங்கம்மாவுக்கும் போர் அடிக்கும்ல டா, முன்னாடி உனக்கு ஸ்கூல், காலேஜ்னு ஓடிச்சு. இப்போ தானே ரிலாக்ஸ் டைம், அதான்” என்றதும் ஊர்மிளாவும் மகிழ்ச்சியாக தலையசைத்தாள்.
“அப்பா! ஜெய்க்கு டூர் பத்தி எல்லாம் நல்லா தெரியும், நிறைய தெரிஞ்சவங்க இருப்பாங்க, அவர் கிட்ட கூட கேளுங்க” என்றதும் மகளின் காதைப் பிடித்தவர்
“புருஷனுக்கு ஹெல்ப் பண்றியா நீ? நம்ம பிஸ்னஸுக்கு என்னைக்காச்சும் இப்படி சொல்லியிருக்கியா?” என்று ஊர்மிளாவை கேட்க
“எது நம்ம பிஸ்னஸா? நீங்க கட்டுற ஐம்பது லட்சம் வீட்ட நான் யாருகிட்ட போய் விக்குறது? சரி சரி ஹனிமூன் போக மாப்பிள்ளை கிட்ட எப்படி கேட்குறது கூச்சப்படாதீங்க கேப்டன், நான் பேசிடுறேன்” என்று அவளும் அப்பாவை சீண்டினாள்.
“கழுத!” என்று ஜமுனா மகளின் தலையில் குட்டு வைக்க, “தாத்தா! இந்த அம்மா தலையில் அடிக்கிறாங்க” என்று கத்தினாள்.
பேச்சும் சிரிப்புமாக பொழுது சென்றாலும் அப்பாவின் முகத்தில் இருந்த யோசனை ஊர்மிளாவுக்குத் தெரிந்தது. அன்றிரவு அப்பாவை அழைத்து கேட்க பிரபாகரனுக்கும் மகளிடம் பேசினால் நன்றாக இருக்குமென தோன்றியது.
அச்சுதன் சொன்னார் என்று சொல்லாது “அப்பா நல்ல ப்ரண்ட் இல்லல ஊர்மி? ரொம்ப செல்ஃபெஷ் இல்ல” என்று வேதனையாக சொல்ல, ஊர்மிளாவுக்கு அப்பாவின் முகம் பார்க்க தாங்கவில்லை. ரத்னவேல் தன்னை பேசினாலே ஊர்மிளா விட மாட்டாள் இதில் அச்சுதன் பேசியது தெரிந்தால் வீண் பிரச்சனை என்று பிரபாகரன் விட்டார், அதனை விட அச்சுதனின் ஆதங்கமும் நியாயமும் பிரபாகரனுக்குப் புரிந்தது.
“அப்பா! இப்படியெல்லாம் பேசினா நீங்க என்னை வேண்டாம் சொல்ற மாதிரி” ஊர்மிளா கோபமாக சொன்னாள். அவளால் அப்பா அப்படி பேசுவதை எல்லாம் ஏற்க முடியவில்லை, உண்மைக்கும் உணர்வுக்கும் இடையே சிக்கி போராடினாள் ஊர்மிளா.
“அப்படியில்ல ஊர்மி! நீ எனக்காக பேசுற, நான் நினைச்சிருந்தா செஞ்சிருக்கலாம்” என்ற பிரபாகரன் பக்கம் உட்கார்ந்து தோள் சாய்ந்தவள்
“அப்பா! நீங்க நல்ல ப்ரண்டா இல்லனா என்ன இப்போ? எனக்கு நல்லா அப்பா! அது போதும்! உங்க ப்ரண்ட் கிட்ட நான் முதல் தடவ பேசினப்போ சொன்னேன் இங்க உங்களுக்கு இவ்வளவு பேர் இருக்காங்க, பாலா மாமா, தாத்தா பாட்டி எல்லாம்னு, அவர் அப்ப கூட அவங்களை நினைக்கல.. நீங்க சொல்லியிருந்தா கேட்டிருப்பாரா? ஜெய் எப்பவோ பேசும்போது ஒன்னு சொன்னார், ஒரு துயரத்தைக் கடக்கிற வழி எல்லாருக்கும் ஒன்னா இருக்காது, பாலா மாமா அத்தை இறந்ததும் இன்னும் ஜெய் வினய் கூட க்ளோஸ் ஆகிட்டாராம், அவருக்கு மனுஷங்க துணை ஆறுதல், பிரிகடியருக்கு அப்படியில்லை அவருக்கு ஆறுதல் அவர் தனிமை!” என்று ஊர்மிளா சொல்லவும் பிரபாகரன் மகளின் விரல்களை பிடித்தார், அவர் பார்வையில் ஆச்சரியம்.
“எவ்வளவு அழகா பேசுறா என் பொண்ணு” என்று பெருமிதமாக பார்த்தார்.
ஊர்மிளாவின் விரல்களை பிடித்தவர் “நீ பொறந்தப்போ குட்டி குட்டி விரலா இருந்தது ஊர்மி, இப்போ பாரு எவ்வளவு சீக்கிரம் வளர்ந்துட்ட..” என்று தட்டிக்கொடுக்க
“உங்களுக்கு ஆபிஸ்ல பெரியப்பா நிறைய வேலை கொடுக்கிறதில்லையாப்பா? அதான் இப்படி யோசிக்கிற” என்றாள் ஊர்மிளா கோபமாக.
“நீ எனக்காக பேசுற”
“நான் உங்களுக்காகத்தான் பேசுவேன், நீங்க ஒன்னும் ப்ளான் பண்ணி என்னை பிரிக்கல.. இப்போ என்ன நீங்க நல்லா ப்ரண்டா இல்லையா தெரியணும், உங்க ப்ரண்டை கேளுங்க” என்று பக்கத்தில் இருந்த பிரபாகரனின் போனை நீட்டினாள்.
“தூங்கியிருப்பான் ஊர்மி, விடு” என்று பிரபா மறுக்க, பிரபாவின் வாடிய முகம் கண்ட பின் ஊர்மிளாவால் விட முடியவில்லை.
“ஆர்மி எப்பவும் அலர்ட்டா இருப்பார், கூப்பிடுங்கப்பா” என்று அதட்டி அழைக்க வைத்தாள். பிரபாகரன் பேசவும் ராஜீவனும் ஊர்மிளா போல
“டேய் உனக்கு வேலை எதுவும் இல்லன்னா இங்க எதாவது வாங்கி தரவா? சும்மா இருந்துட்டு கண்டதும் யோசிக்கிறியாடா, ப்ராந்தன்” என்றார் கடுப்பாக.
“இல்ல ராஜீவ்” என்று பிரபா பேச வர
“மண்டத்தரம் சம்சாரிக்காதே ஃபோன் வைக்கடா…”(லூசுத்தனமா பேசாம போன் வை) என்று ராஜீவன் அதட்டினார்.
“தூக்கத்துல இவன் என்ன கண்டபடி பேசுறான்” என்று பிரபா புலம்ப
“ஹரே! அப் தும் ஹெய்ன் க்யா சாஹியே?”(இப்போ உனக்கு என்ன வேணும்?) என்று பல்லைக் கடித்தார் ராஜீவன்.
“டேய் ஹிந்தி தெரியாது போடா” என்று பிரபா சொல்ல, ராஜீவன் அப்போதுதான் தெளிந்தார். பிரபாவின் புலம்பலில் சிரித்தவர்
“தீடீர்னு ஏன் பிரபா உனக்கு இப்படியெல்லாம் யோசனை போகுது? ஊர்மிளாவுக்கு உன் பொண்ணா வாழத்தான் கொடுத்து வச்சிருக்கு, அவ சந்தோஷமா இருக்கா எனக்கு அது போதும்! ஒருவேளை உனக்கு இன்னொரு குழந்தை இருந்திருந்தா கூட நீ ஊர்மியை இப்போ இருக்க மாதிரிதான் டா பார்த்திருப்ப, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு! ஏண்டா ஊர்மிக்குக் கல்யாணமாகி தாத்தாவாக போற, இப்போ போய் நடுராத்திரியில புலம்பிட்டு இருக்க? என்னாச்சு உனக்கு? யாராவது எதாவது சொன்னாங்களா?” என்று ராஜீவன் கேட்க, பிரபாகரன் உடனே மறுத்தார்.
“சரிங்க சார், அப்போ நான் தூங்கவா?” என்ற ராஜீவன் கேட்க பிரபாகரன் “ரொம்ப பண்ணாம போடா” என்றார். ராஜீவன் பேசவும் பிரபாகரன் முகம் தெளிந்தது.
“பார்த்தீங்களா? கேப்டன் இதுக்குப் போய் ஃபீல் பண்ணிட்டு” என்று ஊர்மிளா சொல்ல, ஜமுனா கணவரை காணாது மாடியேறினார்.
“அப்பாவும் பொண்ணும் தூங்காம கதை பேசிட்டு இருக்கீங்களா?” என்று கேட்க
“புருஷனை காணும்னு ரெண்டே மணி நேரத்துல தேடுறா பார்த்தியா உன் அம்மா?” என்று பிரபாகரன் மனைவியை சீண்டிட, அவர் முறைத்தார்.
“சும்மா பேசிட்டு இருந்தோம்மா” என்ற ஊர்மிளா டேனியலை சந்தித்ததை விரிவாக சொன்னாள். கல்யாணம், விருந்து என்று இதனை பேச நேரம் எடுக்கவில்லை. இப்போது ஊர்மிளா சொல்லவும்
“அவர் உன் இடத்துல ப்ளஸியைத் தேடுவார்டா, அவரும் பாவம்தானே?” என்று பிரபாகரன் சொல்ல
“ஆமாப்பா, அவருக்கு என்னை பார்த்ததும் ரொம்ப சந்தோஷம்” என்றதும் ஜமுனா
“முடியறப்போ அவரை பார்த்துட்டு வாங்க ஊர்மி, ராஜீவண்ணா அப்பா, அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க? என்று கேட்க
“நல்லாயிருக்காங்கம்மா” என்ற ஊர்மி மனதில் ‘ஒருமுறை பார்த்ததுக்கே அச்சச்சனும் அவர் பேரனும் பொங்குறாங்க’ என்று நினைத்தாள்.
“மணி ஆகிடுச்சுடி, போய் தூங்கு” என்று ஜமுனா மகளை அனுப்பிவிட, பிரபாகரன் மனைவியிடம்
“ஜமுனா! ப்ளஸி அப்பா ஊர்மி பார்த்து சந்தோஷப்பட்டார் இல்ல” என்றதும் ஜமுனா தலையசைத்தார்.
“இத்தனை வருஷம் பேத்தி இருக்கா’னு தெரியாம இருந்தது அவருக்குக் கஷ்டமா இருந்திருக்குமில்ல, பொண்ணு இல்லாத அவருக்கு ஊர்மி ஆறுதலா இருந்திருப்பா..”
“என்ன சொல்ல வரீங்க? ஜமுனா கணவர் பேச்சு புரியாமல் கேட்க
“ஊர்மிளாவால நம்ம சந்தோஷமா இருக்கோம், அவளும் சந்தோஷமா இருக்கா. ஆனா அவளால மத்தவங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆறுதல், சந்தோஷம் எல்லாம் நம்ம பறிச்சிட்டோம்” என்றதும் ஜமுனா முறைத்தார்.
மனைவியிடம் மனதில் உள்ளதை பகிர, ஜமுனா பட்டென்று எழுந்துவிட்டார்.
“உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, அன்னிக்கு மாமா சொன்ன மாதிரி வேலை கொடுக்கணும் உங்களுக்கு. நீங்க நியாயஸ்தனா இருந்துட்டு போங்க! ஊர்மி விஷயத்துல நான் சுய நலவாதிதான், சர்வேஷ் உண்மையை சொல்லாம இருந்திருந்தா ஜென்மத்துக்கும் அவ என் பொண்ணு மட்டும்தான்!” என்றதும்
“என் மனசு புரியாம..” என்று பிரபாகரன் இழுக்க
“உங்க மண்ணாங்கட்டி மனசு எனக்கு புரிய வேண்டாம், முன்னாடி ஊர்மிளா அனுப்ப அவ்வளவு யோசிச்சிட்டு இப்போ எதுக்கு இப்படி யோசனை? நம்ம பொண்ணு விஷயத்துல எனக்கு நியாயமெல்லாம் தெரியாது” என்றார் பட்டென்று.