“என்ன சொல்லணும்? இன்னிக்கு ஏன் இங்க வரல?” என்றவனின் கேள்வியில் அவ்வளவு கோபம். ஊர்மிக்கு அவன் கோபம் எதனால் என்று தெரியாததால்
“என்னாச்சு வினய்? நான் இன்னும் மூணு நாள் கழிச்சு வருவேனு ஜெய்கிட்ட சொல்லிட்டேனே” என்றதும் வினயனுக்கு இன்னும் கோபம்.
வினயச்சந்திரனுக்கு அவன் ஜெயேட்டா என்றால் மிகவும் பிரியம், சிறு வயதில் இருந்து எவ்வளவு அடித்துக்கொண்டாலும் வாரிக்கொண்டாலும் எங்கேயும் அண்ணனும் தம்பியும் விட்டுக்கொடுத்திட மாட்டார்கள். அவர்களை பார்த்து பாலச்சந்திரனுக்கே உடன்பிறந்தவன் இல்லை என்ற ஏக்கம் இருக்கும். ஜெய்ச்சந்திரனுக்குத் திருமணம் ஆனதுமே தன்னோடு இருக்கும் நேரம் குறைவதை வினயன் உணர்ந்தான், அவனுக்குப் புரிந்தாலும் வீட்டில் சிறியவனாக அண்ணனின் அன்பும் நேரமும் தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஏக்கமுண்டு. இருந்தும் ஜெயேட்டா ஹாப்பி நானும் ஹாப்பி என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு நான்கு நாட்களாக அவன் அண்ணனை பார்க்க முடியவில்லை.
முன்பெல்லாம் மாலை வரை வெளியே இருந்தாலும், வீடு வந்ததும் அண்ணனும் தம்பியும் சேர்ந்து படம் பார்ப்பது, கால்பந்து விளையாடுவது என்றே அவர்கள் பொழுது போகும், திருமணமானதும் ஜெய்யின் பொழுதுகள் ஊர்மியின் வசமாகிவிட, தனித்து போனான் வினயன். விஜயனுக்கும் திருமணமாகிவிட, அவன் நெருங்கிய நண்பர்கள் யாரும் தேவிகுளத்தில் இல்லை. ஊர்மிளா ஊருக்குச் சென்றுவிட அண்ணனுடன் நேரம் கிடைத்திருக்கிறது என்று வினயன் நினைக்க ஜெயேட்டனின் மனமோ காஞ்சியில் இருந்தது. ஊர்மி சென்ற முதல் நாள் மாலை வீட்டுக்கு வந்தவன் இரண்டு மாத பழக்கத்தில் ‘ஊர்மி’ என்றே அழைத்தான், பாலச்சந்திரனும் வினயனும் பார்க்க வெட்கத்தோடு சிரித்து மாடியேறிவிட்டான். ஆனால் ஜெய்யிடம் ஒரு உற்சாகமில்லை.
அதை காண காண வினயனுக்கு ஊர்மிளா ஏன் இப்போது ஊருக்குச் சென்றாள் என்ற கேள்வியிருந்தாலும் அவள் இஷ்டம் என்று நினைத்திருந்தான். ஆனால் நேற்றே ஊர்மிளாவின் வருகையை எதிர்ப்பார்த்தவனுக்கு ஏமாற்றம், இன்று காலை வருவாள் என்று வினய் நினைத்திருக்க அவள் வராமல் போகவும், காலை ஜெயனின் முகத்தில் இருந்த ஏமாற்றமும் வினயனை கொதிக்க வைத்தது.
அன்று ஜெய்ச்சந்திரனின் பிறந்த நாள்! ஊர்மிளாவுக்கு அது நினைவில் இல்லை, மறந்துவிட்டாள்!
“கல்யாணமாகி வர முதல் பர்த்டே, இன்னிக்குக் கூட ஜெய்யோட உன்னால இருக்க முடியாதா ஊர்மி? அவன் சொன்னாலும் நீ வந்திருக்கணுமில்லையா? நான் உன்னை எக்ஸ்ட்பெக்ட் பண்ணிட்டே இருந்தேன், அட்லீஸ்ட் இப்படி சொல்லிட்டு காலையில சர்ப்ரைஸா வருவ நினைச்சேன்” என்று வினய் அதிருப்தியாக சொல்ல ஊர்மிளாவுக்கு அய்யோ என்றானது.
“அய்யோ வினய்! நான் மறந்தே போய்ட்டேன்” என்று ஊர்மிளா வருத்தம், ஏமாற்றம் எல்லாம் கலந்த குரலில் சொல்ல வினயச்சந்திரன் வெடித்தான்.
“என்னது மறந்துட்டியா? அடிபொலி! காலையில அப்போ நீ ஜெயேட்டாவுக்கு விஷ் கூட பண்ணல, நீ உன் காஞ்சிபுரத்துல சந்தோஷமா இரு…” என்று தொடங்கியவன் பத்து நிமிடம் படபடவென பொரிந்தான். ஊர்மிளாவுக்கு அவனின் அதிகப்படி பேச்சில் கோபம் என்றாலும் ஜெய் என்னை தேடியிருப்பானே என்று அவள் மீதே கோபம், வினயன் பேச்சில் கண்ணீர் வேறு! திட்டியவன் போனை வைத்துவிட ஊர்மிளா கண்ணீரோடு ஹாலில் காலை தேநீருக்குக் கூடியிருந்த குடும்பத்திடம் போனாள்.
“ப்பா!” என்ற கண்ணீர் குரலில் அனைவரும் பதட்டமாக
“என்னாச்சுடி?” என்று ஜமுனா பதற
“ம்மா! இன்னிக்கு ஜெய் பர்த்டேம்மா. நான் மறந்துட்டேன்” என்றாள் அழுகையோடு. அதனை கேட்டதும்
ஊர்மியோ “இல்ல பெரியப்பா, ஜெய் பாவம்… எப்படி மறந்தேனே தெரியல.. அப்பா நான் இப்பவே ஊருக்குப் போகணும்” என்றாள்.
உடனே எல்லார் முகத்திலும் அதிர்ச்சி. ஜமுனா மகளிடம் “இப்படி அவசரமா அழுதுட்டே போகணுமா ஊர்மி? முதல்ல மாப்பிள்ளைக்குப் போன் செஞ்சு பேசுடி, அவர் புரிஞ்சிப்பார்” என்று சமாதானம் சொல்ல, மங்கையும் அதையே சொன்னார். ஊர்மிளா அப்பாவை பார்த்தாள்,
“அப்பா ப்ளீஸ் நான் போகணும்” என்றவள் தாத்தாவிடம் சென்று சொல்ல அவர் பேத்தியைக் கடிந்தார்.
“பேரன் பொறந்த நாள் மறக்கலாமா ஊர்மி? இந்த காலத்து பசங்க என்ன எல்லாம் செய்றாங்க, நீ மறந்துட்டேன் சொல்ற?” என்று ரத்னவேலும் கேட்க, வினயனே நன்றாக திட்டியிருந்தான். ஊர்மிளாவுக்கு மனதே தாங்கவில்லை. நேற்று இரவு பன்னிரெண்டு வரை கணவனோடு பேசியவளுக்குக் கொஞ்சமும் ஞாபகமில்லை. எப்படியோ அடம் பிடித்து அப்பாவோடு விமான நிலையம் வந்துவிட்டாள்.
“இப்படி நீ அழுமூஞ்சியா போனா அப்பாவுக்குக் கஷ்டமா இருக்கும் ஊர்மி, நீ ஜெய் கிட்ட பேசு. அவர் புரிஞ்சிப்பார், இல்லை அப்பா பேசுறேன்” என்று பிரபா சொல்ல, ஊர்மி மறுத்தாள்.
“இல்லப்பா, நான் அங்க போற வரைக்கும் நீங்க யாரும் அவருக்குக் கால் பண்ணக்கூடாது! அவர் புரிஞ்சிப்பார் தெரியும், ஆனா கண்டிப்பா என்னை மிஸ் பண்ணுவார். ச்ச, எப்படி மறந்தேனே தெரியலப்பா, போன வாரம் கூட நினைச்சேன். சொதப்பிட்டேன் பா” என்றவளுக்கு ஜெய் தன்னை எதிர்ப்பார்த்திருப்பான் என்ற எண்ணத்தில் மீண்டும் கண்ணில் நீர் சேர பிரபாகரன் கண்டித்தார்.
“சாரிப்பா! ப்ளான் பண்ணாம சொதப்பின டென்ஷன்ல இப்படி அவசரமா கிளம்புற மாதிரி ஆகிடுச்சு..” என்று அப்பாவை அணைத்து விடைப்பெற்றாள். கொச்சி சென்று அங்கிருந்து தேவிகுளத்திற்குக் காரில் போனாள். மதியம் மூன்று மணி போல் வந்து நின்ற மருமகளை பாலச்சந்திரன் எதிர்ப்பார்க்கவில்லை, உணவு முடிந்து அவரும் வினயனும் வீட்டில் ஓய்வாக இருக்க
“அட ஊர்மி! வரேனு சொல்லியிருந்தா இவனை அனுப்பியிருப்பேனேம்மா” என்று பாலச்சந்திரன் புன்னகையோடு மருமகளிடம் வினயனை காட்டி சொல்ல, அவனோ அப்பாவை முறைத்தான்.
“உங்க மருமக என்னமோ தானா வந்த மாதிரி சந்தோஷப்படாதீங்க டாடி, இவளுக்கு ஜெய் பர்த்டேனு கூட ஞாபகமில்லை. நான் போன் பண்ணி சொன்னேன்” என்றதும் ஊர்மிளாவுக்கு ஏற்கனவே வருத்தம், இதில் வினயன் சொல்லிக்காட்ட கண்ணீருடன்
“சாரி மாமா! நிஜமா மறந்துட்டேன், வேணும்னு பண்ணல” என்று பாலாவிடம் சொல்ல,
“ஊர்மிமா! இதுக்கு ஏன் டென்ஷன் ஆகுற? இவன் கிடக்குறான் ப்ராந்தன்! நீ ஃபீல் பண்ணாத, ஜெய் நீ வந்ததுக்கு சந்தோஷப்படுவான்” என்று சிரித்தார். வினயனோ ஊர்மிளாவை முறைக்க
“மாமா, ஜெய் அலைய வேண்டாம், நான் சூர்ய நெல்லி போறேன்” என்றாள்.
பாலா “வினய்! ஊர்மியை அழைச்சிட்டு போ” என்றதும்
“என்னால முடியாதுப்பா! இப்படி நீங்களாம் இவளுக்குப் பார்க்கிறதால தான் ரொம்ப பண்றா, சீன் பார்ட்டி! இங்க இருந்து போக தெரியுதுல, ஜெயேட்டா பர்த்டேவ மறப்பாளா?” என்றான் மீண்டும் மீண்டும்.
“ஏடா வினய்! அப்பா சொன்னா கேளு” என்று அதட்டி அவனை அனுப்பிவைத்தார். ஊர்மிளா உடை மாற்றி அவசர அவசரமாக வினயனுடன் தேவிகுளத்திலிருந்து சூர்ய நெல்லி புறப்பட்டாள்.
மனம் முழுவதும் ஜெய்ச்சந்திரன் வசம்! அவனை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்ற தவிப்பு. கோபத்தில் இருப்பானோ என்ற எண்ணம். இதில் வினயன் வேறு போகும் வழியெல்லாம் வறுத்தான், ஊர்மிக்கு இருந்த களைப்பில் அவனிடம் வாதாட முடியவில்லை, அதைவிட ஜெய் பிறந்த நாள் கூட நினைவில் நிற்காதா என்று தன் மீதே சுய கோபம். ஒருவழியாக இவர்கள் சூர்ய நெல்லி சென்ற நேரம் ஜெயன் சூர்ய அஸ்தமனம் பார்க்க சுற்றுலா பயணிகளோடு மலையேற்றம் சென்றிருந்தான்.
“இரண்டரை மணி நேரம் ஆகும், வெயிட் பண்ணனும்” என்று வினயன் சொல்ல ஊர்மிளா அவனிடம்
“அவ்வளவு நேரம் வெயிட் பண்ண முடியாது! நான் உடனே ஜெய்யைப் பார்க்கணும். நம்ம மலை ஏறலாம்” என்று ஊர்மிளா அவசரமாக சொல்ல
“என்னது?! என்னால எல்லாம் ஏறமுடியாது. ஏற்கனவே வண்டியோட்டி டயர்ட் ஆகிட்டேன். நான் சொல்லாம இருந்திருந்தா உனக்கு ஜெயேட்டா பர்த்டே தெரிஞ்சிருக்காது. டூ அவர்ஸ்க்கு சீன் போடாத” என்று திட்ட ஊர்மி முறைத்தாள்.
“ஏதோ என் மேல தப்புனு அமைதியா இருந்தா ரொம்ப பேசிட்டு இருக்க டா.. நீ வரலன்னா என்ன நான் போறேன்” என்று அவள் கிளம்ப எத்தனிக்க, வினயன் உடனே அங்கு வேலை செய்யும் தங்கப்பனை அழைத்து ஊர்மியோடு துணைக்குப் போக சொன்னான்.
“வினயா, எனக்குப் பரோட்டா செய்யணும். இல்லை ஜெயேட்டன் திட்டுவார்” என்று தங்கப்பன் மறுக்க
“மலையேறி இறங்கறதுக்கு அந்த பரோட்டாவை நானே போடுறேன், நீங்க ஊர்மியைப் பத்திரமா அழைச்சிட்டுப் போங்க” என்றான். ஊர்மிளா முதன்முறை ஜெய்யோடு சென்றபோது எத்தனை தூரம் என்ற களைப்பை எல்லாம் இப்போது உணரவில்லை, உள்ளம் ஜெய்யைப் பார்க்க வேண்டும் என்று உந்தித் தள்ள உடல் களைப்பை எல்லாம் உணரும் நிலையில்லை.
ஒருவழியாக சூரியன் மறைந்திருக்க, எல்லாரும் புகைப்படம் எடுத்தனர். அந்தி நேரம் என்பதால் குளிர் இருபது டிகிரிக்கும் குறைவாக இருக்க சுற்றுலா பயணிகள் அந்த வானிலையை அனுபவித்தனர். மூச்சு வாங்க ஏறி வந்த ஊர்மிளாவின் கண்கள் ஜெய்யைக் காணவும் சந்தோஷத்தில் கலங்கின. சுற்றியும் பார்வை பதித்திருந்த ஜெய்யின் கண்களுக்கு தங்கப்பன் வருவது தெரிய, ‘இவன் ஏன் கீழ இருந்து வரான்?” என்று எண்ணியபடி அவனை நெருங்கினான்.
“எந்தா தங்கப்பா?” என்று கேட்டவன் பார்வையில் தங்கப்பனுக்குப் பின்னால் நின்ற ஊர்மிளா விழ, பரவசம். அத்தனை நாள் சோர்வும், ஊர்மிளா பிறந்த நாளை மறந்துவிட்டாள் என்ற வருத்தமும் இருந்தவனுக்கு அந்த நொடி வர்ணஜாலம், ஊர்மிளாவின் வரவால் மாறியது அவன் பொழுதும் மனதும்!
ஊர்மிளா, “ஹாப்பி பர்த்டே ஜெய்” என்று சட்டென்று அவனை நெருங்கி அணைத்துக்கொண்டாள். சிலரின் பார்வை அவர்கள் மேல் விழ, தங்கப்பன் சிரிப்போடு நகர்ந்தான்.
“ஊர்மி” என்று பிரியத்தில் பூத்த அவன் குரலில் ஊர்மிளா எப்பொழுதும் போல் நனைந்தாள். ஜெய் ஒற்றைக்கையால் லேசாக ஊர்மிளாவை அணைத்து கூட்டத்திலிருந்து தள்ளி, மலையிறங்கும் இடம் நோக்கி அழைத்து வர, ஊர்மிளா அவனை ஒட்டியபடி வந்தாள்.
இருவரும் சின்ன பாறையில் உட்கார, “ஊர்மி! என்னடி இது சர்ப்பரைஸ்?” என்றான் ஜெய் ஆச்சரியமாக.
“சாரி ஜெய்” என்றவள் காலையில் வினயன் அழைத்ததிலிருந்து அத்தனையும் சொல்லி
“நான் லாஸ்ட் வீக் கூட ஞாபகம் வச்சிருந்தேன் ஜெய், வீட்டை மிஸ் பண்ணினதுல இதை மறந்துட்டேன். எப்படி மறந்தேன் தெரியல, மத்தவங்கன்னா ரீமைண்டர் கூட போட்டு வைப்பேன், உங்களை எப்படி மறப்பேன்னு அதையும் செய்யல… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஜெய்… ” என்றாள் கலங்கிய குரலில்.
“இப்பவும் நீ என்னை மறக்கல, என் பர்த்டேவதான் மறந்த!” என்று ஜெய் சொல்ல, ஊர்மிளாவுக்கு ஜெய்யை அந்த நேரம் அப்படி பிடித்தது. நித்தமும் காதலிக்க காரணம் தருபவன் அவள் கணவன், ஆனால் அந்த நொடி என்னமோ அவனை மிகவும் பிடித்தது, அதை காட்ட முடியாத நிலையாக இருக்க கண்ணீர் வந்தது.
“நீ எனக்கு விஷ் பண்ணலன்னு கஷ்டமா இருந்தது ஊர்மி, பட் நீ வேணும்னு எல்லாம் மறக்க மாட்ட தெரியும். நேத்து நைட் நம்ம நல்லாதானே பேசினோம். சின்னதா ஒரு ஆசை, நீ காலையில வந்து சர்ப்ரைஸா நிப்பன்னு..” என்று ஜெய் சொல்ல, ஊர்மிளாவுக்குத் தன் மீது அவ்வளவு கோபம். திருமணத்திற்கு முன் அவள் பிறந்த நாள் வந்தபோது ஜெய் அவளுக்குப் பரிசு அனுப்பியிருந்தான், வீட்டில் அத்தனை பேரும் பரிசு தந்திருந்தாலும் ஜெய்யின் அந்த காதல் கொஞ்சம் தனியாக தெரிந்தது, அவன் கொடுத்த உணர்வு பிடித்தது!
அப்படித்தானே இவனும் என்னை எதிர்ப்பார்த்திருப்பான், எனக்காவது வீட்டில் அத்தனை உறவுகள். இவனுக்கு உணவு கூட வேலை செய்பவர் இன்று செய்து கொடுத்திருப்பார்.. எத்தனை ஆவலாய் என்னை எதிர்ப்பார்த்திருக்கிறான் என்று எண்ணி எண்ணி தன்னை நொந்தாள்.
ஊர்மிளா முகம் வாடியபடி “சாரி ஜெய் வினய் சொல்லலன்னா நான் இன்னிக்கு இங்க இருந்திருப்பேனா தெரியல, வீட்ல கொஞ்ச நேரத்துல எதாவது டேட் பார்த்தா ஞாபகம் வந்திருக்கும்.. சாரி ஜெய், என்னை ரொம்ப எதிர்ப்பார்த்திருப்பீங்கள இல்ல..” என்றாள் குரல் இறங்க.
“வினயன் சொல்லியிருந்தா என்ன ஊர்மி? நீ நினைச்சிருந்தா அங்க இருந்து சாரி சொல்லிட்டு விஷ் பண்ணியிருக்கலாம்.. இல்லையா வீட்டுக்கு வந்துட்டு என்னை கூப்பிட்டிருக்கலாம். அதுவும் இல்லைன்னா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணியிருந்தா நானே இறங்கி வந்திருப்பேன், அதை விட்டு இப்படி வந்து நேர்ல நிக்கும்போது எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா? நம்ம ரூமா இருந்திருந்தா… உன்னை அப்படியே..” என்றவன் பெருமூச்சோடு பேச்சை நிறுத்தினான்.
“நான் உங்களை அப்படியே கடிச்சிருப்பேன் ஜெய்..” என்று ஊர்மிளா அங்கு இருபக்கமும் சரிந்திருந்த மரங்களில் பார்வை பதித்து சொல்ல
“என்ன சொன்ன?” என்று ஜெய் சிரிப்போடு அவள் இடையை அணைத்து கேட்க
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஜெய், எனக்கு.. இப்போ உங்களை கட்டிப்பிடிக்கணும் முத்தம் கொடுக்கணும் தோணுது.. ச்ச… ஒழுங்கா நேத்தே வந்திருந்தா… நீங்களும் சந்தோஷமா இருந்திருப்பீங்க.. நானும் இப்படி ஃபீல் பண்ணியிருக்க வேண்டாம். எப்பவும் நீங்க சொல்லுவீங்களே எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்… அதை காட்ட முடியாம எனக்கு மூச்சு முட்டுதுனு எனக்கு இப்போ அப்படியொரு ஃபீல்… எங்க அப்பா சொன்னார் ஒரு நாள்… அம்மா மட்டும்தான் உலகம்னு தோணுச்சாம், சந்தோஷம் பயம் எல்லாம் கலந்த ஒரு ஃபீல்! எனக்கு உங்களை இப்போ அவ்வளவு பிடிக்குது, எனக்குக் காட்ட முடியல.. சொல்லவும் வார்த்தை தெரியல…” என்ற ஊர்மிளாவின் ஒவ்வொரு உணர்வும் ஜெய்யை ரசிக்க வைத்தன. அவள் வார்த்தை தேட தேவையின்றி ஜெயனுக்குத் தெரியும் ஊர்மிளாவுக்கு அவனை பிடிக்குமென்று.
பொழுது சாய்ந்துவிட, மலையிறங்க தயாராகினர். சாக்கோவும் இருக்க மலையேற வந்தவர்களை அவனும் தங்கப்பனும் பார்க்க, மனைவியை தன்னோடு அழைத்துக்கொண்டான் ஜெயன். சாக்கோ முன்னே லைட் அடித்தபடி நடக்க, அனைவருக்கும் பின்னால் தங்கப்பன் சென்றான். அவன் பின்னால் ஊர்மிளாவும் ஜெயனும் நடந்தனர்.
“ஊர்மி! எனக்கு நீ இப்போ வந்ததே அவ்வளவு சந்தோஷம், அதனால் நீ சும்மா ஃபீல் பண்ணாத” என்று சொல்ல, ஊர்மிளா பதில் சொல்லவில்லை.
ஜெய்யும் கீழே சென்று பேசலாம் என்று அவள் கைகோர்த்து இருளில் பத்திரமாக நடக்க ஐந்து நிமிடத்தில் ஊர்மிளா சரிந்து உட்கார்ந்தாள்.
“எண்ட அம்மோ! ரெண்டு பேரும் விழுந்து வாரவா? சினிமா பார்த்து கெட்டு போயிட்ட! ஏறினதை விட சீக்கிரமா இறங்கிடலாம் ஊர்மி” என்று ஜெய் சொல்ல, அவள் கேட்கவில்லை.
“ஜெய், செமையா கால் வலிக்குது! சுத்தமா முடியல.. எப்படி ஏறினனே தெரியல… அப்போ எதுவும் தெரியல, உங்களை பார்க்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன். வேறொன்னும் தோணல” என்றாள் சோர்வாக. ஜெயனுக்கு பாவமாக இருந்தாலும் சிரிப்பு வந்தது.
“நானே வந்திருப்பேன், உன்னை யாரு ஏற சொன்னா? என்னை பிடிச்சு மெல்லமா இறங்கு! வேற வழியில்லை. கீழ போனா என்னை கட்டிக்கலாம், முத்தம் கொடுக்கலாம் நினைச்சிக்கோ” என்று அவள் காதில் மெல்ல சொல்ல, ஊர்மிளா உடனே அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். ஜெய் எதிர்ப்பார்க்காமல் வந்து நின்றதிலே எட்டாம் வானில் உற்சாகமாக பறந்துகொண்டிருக்க, இதில் முத்தம் வேறு! ஊர்மிளா அவனுக்கு இந்திரஜாலம் என்று நிரூபித்தாள், அவன் உள்ளத்துக்கும் உணர்வுகளுக்கும் நிறம் கூட்டுபவளை நிறைய பிடித்தது.
“இருட்டா இருக்கு, முத்தம் கொடுத்தாலும் தெரியாது.. பசிக்குது ஜெய்.” என்று ஊர்மி புலம்பியபடி அவன் மேல் சாய, ஜெய் கண்டிப்பானான்.
“ஊர்மி! இங்க இப்படியெல்லாம் சாஞ்சா வழுக்கும். பார்த்து ஜாக்கிரதையா என்னை பிடிச்சு நட! நம்ம போகும்போது சாப்பாடு ரெடியா இருக்கும்..” என்று சொல்ல, ஊர்மிளா பத்து நிமிடத்துக்கு ஒரு முறை களைத்து நின்றாள்.
“ஊர்மி! இரண்டர கிலோமீட்டருக்கு இந்த பில்டப் ஓவர்” என்று ஜெய் கடுப்பாக திட்ட
ஊர்மியின் புலம்பலில் சிரிப்பு வந்தாலும் அடக்கிய ஜெய், “சரி ஊருக்குப் போன எப்படி இருந்தது?” என்று பேச்சுக்கொடுக்க, ஊர்மியும் கொஞ்சம் வலி மறந்து பேசியபடி அவனுடன் நடந்தாள். ஒருவழியாக இருவரும் இறங்கிவிட, “ஜெய் வீட்டுக்குப் போலாமா?” என்று ஊர்மி கேட்க
“இந்த நேரத்தில் வண்டி ஓட்ட ரொம்ப கஷ்டம் ஊர்மி, நம்ம இறங்கினதே லேட். இங்க நம்ம டெண்ட்’ல ஸ்டே பண்ணிட்டு காலையில போகலாம். நீ ரெஸ்ட் ரூம் போய்ட்டு அந்த ரூம் வா” என்று சமையலறைக்கு அழைத்தான். ஊர்மிளா ஓய்வறை செல்ல, ஜெயன் புன்னகை முகமாக சமையல் செய்யும் கூடத்தில் நுழைய, அங்கே வினயன் வியர்த்தபடி பரோட்டா செய்தான்.
“டேய்! குட்டா தேங்க்ஸ்” என்று ஜெய் தம்பியை பின்னோடு கட்டிக்கொள்ள, வினயனுக்கு அவன் ஜெயேட்டாவை அப்படி பார்க்கவும் தான் மகிழ்ச்சி. ஊர்மிளா அங்கு வர அவளை முறைத்தான், ஜெய் தங்கப்பனையும் சாக்கோவையும் அழைத்து தீ மூட்டி சுடரோளி களியாட்டத்துக்குத் தயார் படுத்த சொன்னான், கூடவே இரவு உணவு பரிமாற மேஜை ஏற்பாடு செய்ய சொன்னவன் தண்ணீர் ஊற்றினான்.