சுற்றுலா வந்தவர்கள் எல்லாம் நடந்த களைப்பில் ஓய்வெடுக்க நேரம் கொடுத்து, அரை மணி நேரத்தில் உணவு தொடங்கிவிடும் என்று தங்கப்பன் சொல்லிவிட்டு வந்தான். குழுவாக வந்தவர்கள் கொடுத்த பென்ட்ரைவிலிருந்து பாடல்கள் ஒலிக்க விட, சிலர் ஓய்வெடுக்க சிலர் நெருப்பை சுற்றி நின்று நடனம் ஆடினர்.
ஊர்மிளா பசிக்கிறது என்று சொல்லியிருக்க, ஜெய் ஊர்மிக்கு இரண்டு பரோட்டா வைத்து சுட சுட சிக்கன் கறியும் சிக்கன் 65 யும் வைத்து கொடுத்து உண்ண சொன்னான். ஊர்மிளா பசியில் உண்ண தொடங்கியவள் ஜெய் என்றழைத்து அவனுக்கும் நீட்ட, வினயன் மட்டும் அங்கே இருந்தான். தம்பியைப் பார்த்து சிரித்தபடி ஜெய் ஊர்மிளா ஊட்டியதை வாங்கிக்கொண்டவன்
“நீ சாப்பிடு” என்றவன் வினயனுக்கும் ஒரு தட்டை நீட்ட, ஊர்மி செய்தது போல வினயனும் ஜெயேட்டனுக்கு ஊட்டிவிட, ஜெய்யும் சிரித்தபடி வாங்கிக்கொண்டான்.
“எதுக்குடா அவளை முறைக்கிற?” என்ற ஜெய் ப்ளாஸ்கில் இருந்து கட்டஞ்சாயாவை அவனுக்கு ஊற்றியபடி கேட்க
பரோட்டாவை மென்றபடி “நல்லா கேளுங்க ஜெய், அண்ணினு கூட பார்க்காம இவன் ஓவரா பேசுறான். இனிமே என்னை அண்ணி சொல்லணும் சொல்லுங்க, நான் மறந்தது தப்புதான், ஆனா எனக்கு உங்க மேல பாசமில்லை, அக்கறையில்லை! வேணும்னு பண்ணினேனு எல்லாம் என்னை திட்டினான்” என்று ஊர்மிளா வினயனை புகார் சொன்னாள்.
“அண்ணியா? அதெல்லாம் சொல்ல முடியாது” என்ற வினயன் “ஜெயேட்டா அது என்ன அங்க மட்டும் பெரிய பீஸ், எனக்கு சின்ன பீஸ்?” என்று அண்ணனை முறைக்க
“ஏடா! நான் கைக்கு வந்ததை போட்டேன், இரு” என்று தம்பிக்குப் பார்த்து வைத்தான். ஊர்மியோ
“ஏன்னா ஜெய்க்கு என்னைதான் ரொம்ப பிடிக்கும்” என்று வம்பிழுக்க
“ஊர்மி! அவன் உன் ப்ரண்ட் தானே? ஏன் இரண்டு பேரும் சண்டை போடுறீங்க?” என்று ஜெய் சமரசம் பேச
“இவன் ப்ரண்டா? ப்ரண்ட்னா நேத்தே எனக்கு சொல்லியிருக்கணும், அதை விட்டு இன்னிக்குப் போன் பண்ணி திட்டுறான், இங்க வந்தும் கூட என்னை உங்களை பார்க்க அழைச்சிட்டு போக மாட்டேன் சொன்னான், மாமா திட்டி அனுப்பினாங்க” என்றாள் ஊர்மிளா.
“உனக்கு ஊருக்குப் போனா ஜெய்யை ஞாபகமிருக்காதுனு எனக்கு எப்படி தெரியும்?” என்றிட ஊர்மிளா முகம் சுருங்க,
“பேசாம சாப்பிடுங்க ரெண்டு பேரும்” என்று அதட்டிய ஜெய் வெளியே எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனித்தான்.
“வில்லி, என்ன என்னையும் எங்கண்ணாவையும் பிரிக்க பார்க்கிறியா?” என்று வினயன் முறைப்பாகக் கேட்க
“யார்டா வில்லி? நீதான் வில்லங்கம்! நைட்டே ஒரு மெசெஜ் போட்டிருக்கலாமில்ல… ஜெய்க்கு சர்ப்பரைஸா நிறைய செய்யணும் நினைச்சிருந்தேன், எல்லாம் போச்சு..” என்ற ஊர்மிளாவின் குரலில் உண்மையான வருத்தமிருக்க வினயனுக்கு அது புரிந்தாலும் வேண்டுமென்றே
“டெண்ட் எல்லாம் ஓகேவா கேட்டு வா, பார்பிக்யூ செட்டப் ரெடியா பாரு, லைட்ஸ் எல்லாம் ஆன்ல இருக்கா செக் பண்ணிட்டு வா வினய்” என்று வேலை கொடுக்க வினயன் தலையை உருட்டினான்.
ஊர்மிளா அப்பாவுக்கு அழைத்துப் பேசியவள் ஜெய் வரவும் அவனிடம் கொடுத்தாள். காஞ்சியில் எல்லாரும் வாழ்த்து சொல்ல, உணவை தங்கப்பனும் சாக்கோவும் கவனிக்க ஜெய் மனைவியோடு ஒரு ஓரமாக இருந்த நீண்ட மர பெஞ்சில் உட்கார்ந்தான். அருகே தேயிலைத் தோட்டம் இருக்க நெருப்பு மூட்டப்பட்ட இடத்தில் உற்சாகமாக சிலர் நடனம் ஆட, உணவு கேளிக்கை என்று அந்த இரவு இன்பமாக இருந்தது. ஆனால் இவையெதுவும் தீண்டா வண்ணம் ஜெயனின் கையை இறுக்கமாக பற்றியிருந்த ஊர்மிக்கு அந்த பனிக்காற்றில் உடல் வெடவெடத்தது.
குளிரில் அவள் வாயை ஊத வெண்புகையாய் பனி. “ஹைய், என் வாய்ல புகை” என்று உற்சாகமாக சொன்ன ஊர்மிளாவிடம்
“வினய் எனக்காக பேசியிருப்பான் ஊர்மி, ரொம்ப பேசிட்டானா?” என்று ஜெய் கேட்டிட
“அச்சோ ஜெய்! அவனும் நானும் இப்படித்தானே பேசிப்போம். இன்னிக்கு ரொம்ப திட்டிட்டான், ஆனா அது உங்க மேல இருக்க பாசம்னு எனக்குத் தெரியும்.” என்றாள் புன்னகையோடு. திருமணமான போது ஜெய் ஊர்மிளாவிடம் கேட்டது ஒன்றே!
“உங்கப்பா பெரியப்பா மாதிரி கடைசிவரைக்கும் நானும் வினயனும் ஒண்ணா இருக்கணும் ஊர்மி, அவன் மனைவி எப்படி வருவாங்க தெரியல, ஆனால் நீ எனக்கு இந்த விஷயத்துல மட்டும் சப்போர்ட் பண்ணு” என்று வேண்டுதலாகக் கேட்டிருந்தான்.
சிறிது நேரம் குளிரில் தாக்குப்பிடித்த ஊர்மிளாவால் சூர்ய நெல்லியின் அந்த இரவு நேர குளிரை தாங்க முடியவில்லை. பற்கள் தந்தியடிக்க, “ஜெய் குளிருது” என்றவளை தனியாக இருந்த டெண்ட்(tent) ஒன்றிற்கு அழைத்துப்போனான். மின்மினியாக வழி நெடுக சின்ன சின்ன விளக்குகள் எரிய, டெண்ட் உள்ளே சென்றதும் ஊர்மி கொஞ்சம் ஆசுவாசப்பட்டாள். ஜெய் அவளை ஓய்வெடுக்க சொல்ல, ஊர்மிளா அவன் கையைப் பிடித்துக்கொண்டாள். ஜெய் மனைவி அருகே உட்கார்ந்து கொள்ள ஊர்மிளா அவனை கட்டிக்கொண்டு முகமெல்லாம் முத்தமிட்டாள்.
“இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெய்” என்றாள் ஒவ்வொரு வார்த்தைக்கும் முத்தமிட்டு.
“சாரி ஜெய்! எனக்கு என் மேல ரொம்ப கோவம் வருது, ஏதோ டென்ஷன்ல மறந்துட்டேன். சாரி” என்று அவனை கட்டிக்கொள்ள, ஜெய் மனைவியை இறுக்கியணைத்தான்.
“ஊர்மி! நான் சோகமா இருந்தேன், கொஞ்சம் கோவமா இருந்தேன் எல்லாம் உன்னை பார்க்கிற வரைக்கும்தான்! இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், இன்னும் இரண்டு மணி நேரம் என்னோட பர்த்டே முடிய இருக்கு.. இதுல சாயந்திரத்துல என்னோட நீ இருக்க.. அதனால நான் ரொம்ப ஹாப்பிடி, நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத! நாளைக்கு வீட்டுக்குப் போய் என்னை நல்லா கவனிச்சிடு” என்றவன் டீஷர்ட்டின் காலரை ஊர்மிளா விடவில்லை.
“ஊர்மி! சாப்பிட்டு வரேன்” என்றதும் கைகளை விலக்கிக்கொள்ள, ஜெய் உண்டு வந்தான். சிலர் அவர்களின் கூடாரம் சென்றுவிட, சிலர் நெருப்பின் அருகே குளிர் காய்ந்தனர். இனி மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று ஜெய்யும் அவன் கூடாரத்துக்கு வந்தான். வந்தவனை ஊர்மிளா மீண்டும் அணைத்துக்கொண்டாள்.
“ரொம்ப குளிருதா?” என்ற ஜெய் கேட்க ஊர்மிளா இல்லை என்றவள் அவன் முகத்தோடு உரசி அவன் இதழில் முத்தமிட, ஜெய் ஊர்மிளாவின் அருகாமையில் மனம், உடல் இரண்டும் கிறங்கியிருந்தான்.
ஊர்மிளாவின் மென்முத்தம் அவனுக்குப் போதாமல் போனாலும் இருக்குமிடம் உணர்ந்தவனுக்கு முத்தத்தைத் தாண்டவும் முடியவில்லை, மோகமும் தீரவில்லை. ஐந்து நாட்கள் அவளில்லாத இரவுகளின் ஏக்கம், இன்று அவள் வந்த மகிழ்ச்சி என்று அத்தனை ஆசையிருந்தும் அதனை காட்ட முடியவில்லை.
விருப்பமின்றி விலகியவன் “ஊர்மி பேசாம ஒரு போன் பண்ணியிருக்கலாமில்ல வீட்டுக்கு வந்திருப்பேன், ரிசார்ட்டா இருந்தா கூட பரவாயில்லை…” என்று ஏக்கமாக இழுத்தவன்
“ஆனாலும் இதுவும் நல்லாயிருக்கு, போன தடவ நீ இங்க வந்தப்ப நம்ம இப்படி இல்லை, இப்போ சுத்தி தோட்டம், வானத்துக்குக் கீழ டெண்ட் உள்ள நீ என் பக்கத்துல, அதுவும் இவ்வளவு பக்கத்துல..” என்று ரசித்து இறுகயணைத்துக்கொண்டான்.
ஜெய்யின் கன்னம் ஊர்மியின் கன்னம் உரசிட, கைகள் அவள் கரத்தோடு பிணைந்திருக்க
“ஏன் ஜெய் முன்னாடி மீசை குத்தும் இப்போ தாடியும் குத்துது? ஏன் ஷேவ் பண்ணல..” என்று அவன் கன்னத்தைப் பிடித்திழுத்து கேட்டவள்
“இப்படி நீங்க தாடியெல்லாம் வைச்சதும்தான் உங்க தொம்பி என்னை அந்த பேச்சு பேசுறான், நான் என்ன உங்க ஷேவிங் செட்டைத் தூக்கிட்டா போய்ட்டேன்” என்று உதடு சுழிக்க, சுழித்த உதடுகளில் மென்மையாய் முத்தமிட்டவன்
“தோணலடி” என்றான் சிரிப்புடன். சிறுது நேரம் இருவரிடமும் அமைதி, வெளியே இரவோடு பனிக்காற்று கலந்து கூடிட, ஊர்மிளா ஜெய்யின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து
“உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் ஜெய்” என்றாள்.
“இத்தன முத்தம் கொடுக்கிறப்ப தெரியுது, அதைவிட மூச்சு வாங்க வந்து என் பொண்டாட்டி சொன்ன பர்த்டே விஷ் எனக்கு அவ்வளவு பிடிச்சது” என்று ஊர்மிளா மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
“மிளகா மூக்கு” என்று கொஞ்சிட ஊர்மி உடனே
“மிளகாவா? ஊர்ல இருந்து வந்ததும் உங்களை சண்டை போடணும் நினைச்சேன், என் மேல மிஸ்டேக் ஸோ எஸ்கேப் ஆகிட்டீங்க. போன் பண்ணி உங்க அச்சச்சனுக்கு சப்போர்ட் பண்றீங்க” என்றவள்
“உங்க அச்சச்சன் சமாதானம் ஆகிட்டாரா?” என்றும் கேட்டாள்.
“கொஞ்சம் சமாதானம் பண்ணி வச்சேன், இன்னிக்குக் காலையில் அச்சச்சன் அச்சம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்க போனேன். நீ வரலையானு கேட்டு மறுபடியும் டல்லாகிட்டார்” என்றவன்
“அவரும் பாவம் தானே ஊர்மி?” என்று கேட்டான். ஊர்மி அமைதியாக இருக்க
“உங்கிட்ட இதை பத்தி அப்புறம் பேசணும்னு நினைச்சேன், இப்போ நீயா கேட்டதால சொன்னேன். டேனியல் தாத்தாவை புரிஞ்சிக்க முடிஞ்ச உன்னால ஏன் ஊர்மி அச்சச்சனை மட்டும் புரிஞ்சிக்க முடியல..” என்று வேகமாக கேட்டுவிட்டான்.
ஜெய்யின் தோளைப் பற்றி அதில் முகம் வைத்த ஊர்மிளா “எனக்கு அவர் மேல கோவமெல்லாம் இல்லை ஜெய், உண்மையில டேனியல் தாத்தா கிட்ட நான் பயங்கர ரியாக்ஷன் எதிர்ப்பார்த்தேன். அவர் அதுக்கு எதிரா நடக்கவும் என்னால அவர்கிட்ட சகஜமா பேச முடிஞ்சது. அதைவிட எங்கப்பாவோட பொண்ணா என்னால அவரை புரிஞ்சிக்க முடிஞ்சது, என்னோட அப்பா மாதிரி அவரும் ரொம்ப பாசமான அப்பா… உங்க அச்சச்சனும் பாசமானவர், ஆனா டேனியல் தாத்தா மாதிரி அவரால என்னை காஞ்சிபுரம் ஊர்மியா பார்க்க முடியல இல்ல..”
“அன்னிக்கு அவர் என்னை ரத்னவேல் பேத்தி இல்லைனு சொன்னதும் என்னால தாங்க முடியல ஜெய்…அவரை பேசிட்டேன். உங்க ராஜீவன் மாமா முடிவுல எனக்கு எப்படி சம்மந்தம் இல்லையோ அதே மாதிரி தானே அவரும் பாட்டியும்.. உண்மையை சொல்லணும்னா எனக்கு சின்ன வயசுல இருந்தே உங்க ராஜீவன் மாமாவை பிடிக்கும்ல, அவர் அப்பா அம்மா ஏத்துக்கலன்னு அப்பவே கொஞ்சம் எனக்குக் கோவம், அது அன்னிக்கு அதிகமாகி கத்திட்டேன்.. நம்ம வீட்டுக்கு வந்தப்போ நான் சாரி கேட்க நினைச்சேன், அதுக்குள்ள அவரா பேசிட்டு போய்ட்டார்.” என்றாள் சோகமாக.
“ப்ளஸியத்த இருந்து நீ வேற ஒருத்தங்களை அம்மானு சொன்னா டேனியல் தாத்தாவும் அப்படித்தான் ஊர்மி நடப்பார், உன் அப்பாவுக்கு பொண்ணா உன்னால அவரிடத்துல யோசிக்கிற மாதிரி, என் அப்பாவுக்கு மகனா அச்சச்சனை என்னால உணர முடியுது.. என் அப்பா தன்னோட பசங்க குடும்பம் குழந்தைனு சந்தோஷமா இருக்கிறத விரும்புறது மாதிரி அச்சச்சனுக்கு இருக்கிறது நியாயமான ஆசை!”
“அவரோட வீம்பு, பிடிவாதம் ராஜீவன் மாமா கிட்ட இருந்து பிரிச்சிடுச்சு, அதற்காக அவருக்குப் பாசமில்லை ஆகாது! அவருக்கு ப்ளஸி அத்தை இறந்தது, ராஜீவன் மாமா தனியா இருக்கிறது எதுவும் தெரியாதுதானே? அத்தனை வருஷம் மகன் நம்மை தேடலனு வருத்தம், பிந்து வந்தப்ப கூட ராஜீவன் வரலனு ஆதங்கப்பட்டார், இந்த அப்பா, வினயன் விஜயன் எல்லாம் சொன்ன பொய்யால… இன்னும் அவர் ஹர்ட் ஆகிட்டார். தன்னோட மகன் அவனோட பொண்ணு யார்னு எனக்கு சொல்லமாட்டானா? தனியா இருந்தப்போ கூட எங்களை தேடலனு ஒரு அப்பாவா நியாயமான ஆதங்கம் தானேம்மா?”
ஊர்மிளா பேசாதிருக்க, “உனக்கு நான் இப்போ பேசுறது பிடிக்கலையா?” என்று கேட்க
“நீங்க சொல்றது சரினு கூட அமைதியா இருக்கலாம் ஜெய்” என்றதும் ஜெய் சின்ன சிரிப்போடு தொடர்ந்தான்.
“பிந்து வந்தப்போ உண்மையில எல்லாரும் சந்தோஷப்பட்டாங்க, நானும் அச்சம்மா அச்சச்சனுக்காக சந்தோஷப்பட்டேன்! ஆனா அது பொய்னு தெரிஞ்சப்ப அவங்க ரொம்ப மனசு கஷ்டப்பட்டாங்க! அதுக்கு நீ பொறுப்பில்லை! அதே நேரம் அவங்க எதிர்ப்பார்ப்பு தப்பில்லையே?”
“தப்பில்ல! என்னை எல்லாரும் நினைக்கிறாங்க ஜெய், அது சந்தோஷமா இருக்க நேரம் எனக்குப் பயமும் கூட! என் ஒருத்தியை எல்லாரும் நினைக்கிறதும் நான் ஒருத்தி எல்லாரையும் நினைக்கிறது வேற இல்லையா? பெரிய விஷயம், கஷ்டமும் கூட! இன்னொன்னும் தோணும் ஜெய் இந்த பாசமெல்லாம் நான் பிரபாகரன் ஜமுனா பொண்ணுன்றதால. இல்ல…ராஜீவன் ப்ளஸி பொண்ணுன்றதால” என்றவள் பிரபாகரனின் வருத்தத்தையும் பகிர்ந்தாள்.
ஜெய் உடனே “இப்போ ஃபில் பண்ணி என்ன ஆகப்போகுது?” என்றான் கிண்டலாக. ஊர்மி அவன் தோளில் அடித்து
“எங்கப்பா எவ்வளவு ஃபீல் பண்ணினார் தெரியுமா? பாவம்” என்றிட
“ஒரு ப்ரண்டா அவர் தப்பு, ஆனா ஒன்னு ராஜீவன் மாமா வேணும்னு செஞ்சாரோ இல்லையோ… உன்னை உங்கப்பா கிட்ட கொடுத்தது ரொம்ப நல்ல விஷயம். அச்சச்சன் அச்சம்மா உன்னை ரொம்ப பாசமா வளர்த்திருப்பாங்க, டேனியல் தாத்தா அவரும் கூட! ராஜீவன் மாமா ப்ளஸியத்தை காதல் மதம் பார்க்காம மனசு பார்த்தது! எனக்கு ராஜீவன் மாமா ப்ளஸியத்த மேல் எவ்வளவு காதல் வச்சிருக்காரோ அவ்வளவு மரியாதை வச்சிருக்கார் தோணும்! நீ உங்கப்பா பொண்ணா இல்லைன்னா மனுஷங்களுக்கும் மதங்களுக்கும் நடுவுல சிக்கியிருப்ப!”
“உனக்கு ப்ளஸியத்த ஆசிர்வாதம் ஊர்மி, அதான் இவ்வளவு அன்பு, அதைவிட என் ஊர்மியோட நல்ல மனசுக்கு அவளை எல்லாருக்கும் பிடிக்கும்” என்று ஜெய் ஊர்மிளாவை வாஞ்சையாக அணைத்துக்கொள்ள, ஊர்மிளா நெகிழ்ச்சியாக உணர்ந்தாள். இதையெல்லாம் இத்தனை சுதந்திரமாக யாரிடம் சொல்வாள், பிரியம் தந்த பிரியமானவனை நிறைய பிடித்தது. ஊர்மிளாவுக்கு உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் வந்தது,
“ஏடி! ஏன் அழற?” என்று ஜெய் முதுகை தட்டிக்கொடுக்க
“போன வருஷம் வரைக்கும் தெரிஞ்சது மட்டும் உண்மை நினைச்சேன் ஜெய்! தெரியாம இருக்கிறதும் உண்மைனு எனக்குத் தெரியவே இல்லை, அப்போ ரொம்ப ரொம்ப நான் கஷ்டமா ஃபீல் பண்ணினேன். யாருக்கு யோசிக்கிறதுன்னே தெரியல ஜெய், என்னை மட்டும் நினைச்சேன். இப்போ யோசிச்சா பொண்ணு இல்லாம கஷ்டப்படுற டேனியல் தாத்தா, பையன் தனியா இருக்கார் நினைச்சு வருத்தப்படுற அச்சச்சன் பாட்டி அவங்களும் பாவம், அப்பா ஃபீல் பண்ணினது வேற கஷ்டமா இருக்கு” என்றவளின் கன்னத்தைத் துடைத்தவன் ஆதுரமாக தலையை வருடினான்.
“ராஜீவன் மாமா எப்படி அந்த நிமிஷம் ஒரு முடிவெடுத்தாரோ, அதே வயசுதானே உங்கப்பாவுக்கும்? அவரும் ஒரு குழந்தையை இழந்து நிற்கும்போது மத்தவங்களை யோசிக்க தோணாது ஊர்மி, சுய நலம் எதார்த்தம், அது தப்பு கிடையாது! அவங்க ரெண்டு பேருமே இழந்த நிலையில இருந்து முடிவெடுத்தப்போ அதை ஆராய முடியாது… நான் வெளியில இருந்து பார்க்கிறதால இவ்வளவு தெளிவா பேசுறேன். மத்தபடி நம்ம விஷயத்துல எல்லாம் எனக்கு அவ்வளவு பிடிவாதம்! இப்போ இதையெல்லாம் யோசிச்சு நீ கவலைப்படாத! ஜெய்ச்சந்திரன் பொண்டாட்டியா இருந்தா போதும், யார் பேத்தி, யார் பொண்ணுனு எந்த பிரச்சனையுமில்லை. எப்படி?” என்று ஜெய் கேட்டிட அவன் பாவனையில் ஊர்மிளாவுக்கு மெல்ல புன்னகை உதித்தது.
“அதென்னவோ எங்க காமாட்சி ஆசிர்வாதம் ஜெய்! ஜெய்ச்சந்திரன் பொண்டாட்டியா இருக்கிறதால எனக்கு எல்லாரும் கிடைச்சிருக்காங்க, தேங்க் யூ” என்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
ஊர்மிளாவின் முகம் பற்றியவன் “அப்போ நாளைக்கு அச்சச்சனோட அவர் பேத்தி பேசிடுவா போல..” என்று கேட்டிட
“ஜெய்! அவங்க கிட்ட பேசுறதோ அவங்களுக்காக எதாவது செய்றதோ எனக்குக் கஷ்டமே கிடையாது, உங்க அச்சச்சன் எதாவது பேசி என்னை எங்க வீட்ல இருந்து தூரமா ஃபீல் பண்ண வைக்கிறதுதான் கஷ்டமே, பாட்டி இந்த விஷயத்துல அப்படி கிடையாது.” என்றாள் கவலையாக.
“நிஜமா எனக்கு இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஊர்மி! அவரோட நியாயம் உன்னை கஷ்டப்படுத்துறது புரியுது.. அவரை என்னால மாத்த முடியல, உனக்குத் தெரியுமா நம்ம காயம்குளம் போய்ட்டு வந்த அன்னிக்கு…” என்று ராஜீவனிடம் பேசியதை சொன்னவன்
“அவருக்கு இன்னும் பையன் தனியா நிக்கிறது ஏத்துக்க முடியல, அவர் பையனோட முடிவுக்கு நீ என்ன செய்ய முடியும்? இந்த ராஜீவன் மாமாவுக்கும் வாய் சும்மா கிடையாது, நான் இப்படி இருக்கிறதுதானே சந்தோஷம்னு கேட்டாராம்… ” என்றான் வருத்தமாக.
“பிரிகடியருக்குக் கொழுப்பு ஜாஸ்தி, பாவம் வயசானவங்க, எந்த அப்பா அம்மாவாச்சும் அப்படி நினைப்பாங்களா?” என்று ஊர்மி கேட்க
“அவரும் ஹர்ட் பண்ணனும் கேட்டிருக்க மாட்டார், ஆனா இரண்டு பேர் மனசுல உள்ள ஆதங்கம், அத்தன வருஷம் கோபம் எல்லாம் இப்படி பேசி பேசி காயப்படுத்திக்கிறாங்க.” என்றான்.
“நான் இனி உங்க அச்சச்சனோட சண்டை போட மாட்டேன் ஜெய்” என்று ஊர்மிளா மெல்ல சொல்ல
“நிஜமாவா? ஆனா அவர் பேசுவாரே?” என்றான் சந்தோஷமும் கவலையுமாக.
“பேசினா நான் பார்த்துக்கிறேன் ஜெய்! நீங்க கவலைப்படாதீங்க! நீங்க சொல்ற மாதிரி அவரை இனி மாத்த முடியாது. யார் என்ன சொன்னாலும் நான் ரத்னவேல் பேத்தி, அதை யாருக்கும் நான் ப்ரூவ் பண்ண தேவையில்லை! நாளைக்கே உங்க அச்சச்சன் கிட்ட பேசுறேன்” என்ற ஊர்மிளாவை ஜெயனுக்கு அள்ளிக்கொள்ள தோன்றினாலும் அந்த நேரம் முடியாமல் போக
“கொடுமை பண்றடி” என்றான் தவிப்பாக.
“கோச்சுக்காதீங்க ஜெய்” என்று ஊர்மிளா முகத்தோடு உரச “இதுவும் நல்லது, உன்னை ரொம்ப நாளா சூர்யோதயம் பார்க்க கூப்பிட்டேன்ல, இன்னும் கொஞ்ச நேரத்துல பொழுது விடிஞ்சிரும். நம்ம போறோம்” என்றதும்
“பர்த்டே பாய்க்காக வரேன்” என்றாள் ஊர்மிளாவும் சிரிப்புடன். அதிகாலை நான்கு மணி போல் எல்லாரும் தயாராக, ஜெய் குளித்து வந்து ஊர்மிளாவை எழுப்பிட அவளுக்கோ தூக்கம் கண்ணை சுழற்றியது. ஜெய்க்காக கடினப்பட்டு எழுந்தவள் முகம் கழுவ தண்ணீரில் கை வைக்க, ஜில்லென்று இருக்க அய்யோ என்று அவனை பார்த்தாள்.
“ஜெய், இந்த குளிர்ல எப்படி குளிச்சீங்க? இந்த தூங்குமூஞ்சி ஓகே வா, நான் முகம் கழுவ மாட்டேன்” என்றாள் தூக்க கலக்கத்தில்.
“வினய் வரல” என்று ஊர்மிளா ஜீப் நோக்கி நடந்தபடி கேட்க, “அவன் ராத்திரி பட்ஷி, நம்ம போய்ட்டு வரவரைக்கும் தூங்குவான் பாரு” என்று சிரித்தான் ஜெய். அந்த அதிகாலை குளிரில், புன்னகை ஏந்தி நின்ற கணவன் முகம் காண தெவிட்டவில்லை ஊர்மிளாவுக்கு. போகும் வழியெங்கும் ஜீப்பில் அவனுடன் முன்னிருக்கையில் உட்கார்ந்தவள் தூங்கி விழ, அந்த குண்டும் குழியுமான சாலைகளில், மலை வளைவுகளில் உறங்க முடியவில்லை. பயத்திலே விழித்திருந்தாள்.
இரண்டு மணி நேர பயணம் முடிந்து பத்து நிமிடத்தில் சூர்ய நெல்லியில் சூர்யோதயம். செந்தூர பந்தாய் சூரியன் மஞ்சள் கதிரோடு மேலெழ, பனியும் குளிரையும் மீறி ஊர்மிளாவோடு இருந்த அந்த பொழுதை ரசித்தான் ஜெய்ச்சந்திரன், அவன் ஆவல் நிறைவேறிய காலை அது!
அந்த காலை பொழுதில் இன்னும் மகிழ்ச்சி கூட்டவென வீடு சென்றதும் வந்தது அந்த செய்தி!