ஜெயனும் ஊர்மியும் எட்டு மணி போல் மலையிறங்கி வந்தபோது கூட வினயன் எழவில்லை. சூரியனின் வரவால் குளிர் குறைந்திருக்க, இதமான வானிலை. கோடை என்பதால் லேசான வெயிலும் கூட. ஊர்மிளா உறங்கா விழிகளோடு ஓய்வறை சென்று வந்தாள். ஜெய் வினயன் தங்கியிருந்த கூடாரத்தினை திறந்து,
“வினயா!” என்று குரல் கொடுக்க, அவன் எழவில்லை. “ஏடா!” என்று ஜெய் அப்படியே தம்பியை உருட்டி தள்ள,
“ஜெய்ய்ய்ய்ய்” என்று கத்தியபடி கொட்டாவி விட்டு எழுந்தான் வினயச்சந்திரன்.
“தூங்கும்போது ஏண்டா எழுப்புற?” என்று கடுப்பாகக் கேட்க
“நான் நைட் ரெண்டு மணி நேரம்தான் தூங்கினேன், மணி எட்டரை ஆகப்போகுது இன்னும் உனக்கு என்னடா தூக்கம்?” என்று ஜெயனும் கேட்டான்.
“உனக்கென்ன? ஊர்மிளாவைப் பார்த்த பரவசத்துல தூக்கம் வராது! எனக்குத் தூக்கம் வருது, தூங்குறேன். இப்படி எஸ்டேட் நடுவுல டெண்ட்ல் குளிரெடுத்தா தூக்கம் வராதா? போடா, நான் கார் எடுத்து பொறுமையா வரேன்”
“பொறுமையா வருவியா? அங்க அப்பா தனியா இருப்பார், ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பு, நானும் ஊர்மியும் ஜீப்ல வருவோம். அவரை ரெசார்ட்ல கொண்டு விட்டு இடுக்கி போய் கொஞ்சம் பொருள் வாங்கிட்டு வா” என்று வினயனுக்கு வேலைகள் சொல்லி வெளியே வந்தான். காலை உணவாக சுட சுட மெதுவடை, இட்லி சாம்பார் என்று இருக்க ஊர்மிளா திருப்தியாக உண்டாள். ஜெய் அன்று வந்த பயணிகள் எல்லாரும் கிளம்பியதும் ஊர்மிளாவை அழைத்துக்கொண்டு வீடு வந்தான்.
ஊர்மி வரும்வழியில் நன்றாக உறங்கினாள். வீடு வரவும் ஜெய் எழுப்பிவிட்டவன் “உனக்கு வினயனுக்கு எல்லாம் எங்க இருந்தாலும் தூக்கம் வருது” என்று சிரித்தபடி சொல்ல
“நேத்து நைட் கொஞ்ச நேரம் மட்டும் தூங்கினேன், எனக்கு கை கால் எல்லாம் வலிக்குது” என்று புலம்பினாள்.
“குளிச்சா நல்லாயிருக்கும், குளிச்சிட்டு ரெஸ்ட் எடு. நான் மதியம் வரேன்” என்றவன் சட்டை வேஷ்டி என்று உடை மாற்றி, கீழே இறங்கிவிட பாலச்சந்திரனுக்கு மகனின் புன்னகை முகம் கண்டு ஆனந்தம். ஜெய்யிடம்
“ஜெய்! நான் மூணாறு போறேன். நீ இன்னிக்கு ரெஸ்ட் எடு, ஷஜியை இன்னிக்கு சூர்ய நெல்லி அனுப்பி விடு. வினயனை இடுக்கி அனுப்புறேன்” என்று வேலை விஷயமாக பேசினார்.
“நான் பாயாசம் பண்றேன் மாமா, கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்புறீங்களா?” என்றாள்.
“கொஞ்சம் அவசர வேலையிருக்கு ஊர்மி, இந்தா இவனுக்குக் கொடு. நாங்க மதியம் வரோம்” என்றதும் ஊர்மிளா முகம் நிறைந்த புன்னகையோடு சமையலறைக்குள் புகுந்துவிட, ஜெய் தன்னையே பார்ப்பது கண்டு
“என்னடா?” என்றார் பாலச்சந்திரன்.
“ஊர்மி அப்பா பேசினார் சொன்னதும் ஏன் கொஞ்ச நேரம் யோசிச்சீங்கப்பா?” என்றவனின் குரலே குற்றம் சுமத்தியது.
“ஜெய்! என்னடா? ஊர்மி டக்குனு ப்ரண்ட், அப்பானு சொன்னா எனக்கு ராஜீவனைத்தான் நினைக்க தோணும், எனக்கு ஊர்மிளாவ ராஜீவன் பொண்ணாதானே தெரியும். அவ மனசு பார்த்துதானே நான் எதுவும் பேசுறதில்ல, தீடீர்னு வந்து சொல்லவும் குழம்பிட்டேன், அதிலென்ன தப்பு?”
“எனக்கு நீங்க எப்படியோ பிரபா மாமா ஊர்மிக்கு அப்படி! இப்படி நீங்க நினைக்கிறது கூட தப்புப்பா, ஊர்மி மனசு கஷ்டப்படும். அவ ஃபீலிங்க்ஸ் எல்லாம் எல்லாருக்கும் புரியறதில்லை. ராஜீவன் மாமா இதுல சரியாயிருக்கார், நீங்களும் அச்சச்சனும் பண்றது நியாயமே இல்லை!” என்று குற்றம் சொன்ன மகனை முறைத்த பாலச்சந்திரன்
“இப்போ நான் என்னடா சொல்லிட்டேன், ஓவரா பேசுற? எனக்கு அச்சனுக்கு இருக்கிறதெல்லாம் நியாயமான ஆதங்கம். என் மருமக மனசு நோகுற மாதிரி நான் இரண்டு மாசத்துல என்னைக்காச்சும் பேசியிருப்பேனா?” என்றார் ஆதங்கமாக.
“நீங்க பேசினதில்லப்பா, நமக்கு சின்ன விஷயமா தெரியறது அவளை ரொம்ப காயப்படுத்தும், அவளோட இத்தனை வருஷ வாழ்க்கை, அதுதான் உண்மை! நம்ம அவளை ராஜீவன் மாமா பொண்ணா நினைக்கிறது அவளோட உண்மையை, வாழ்க்கையை இல்லைனு சொல்ற மாதிரி, ஊர்மி யாரையும் கஷ்டப்படுத்தாம முடிஞ்சளவு நடக்கிறா, நம்மளும் அப்படி இருக்கணும்பா” என்றான் அமைதியான முகத்தோடு. ஊர்மிளாவுக்குக் கேட்டுவிடக்கூடாதென்று கவனமாக பேச, பாலச்சந்திரனும்
“சரிடா மோனே, எனக்குப் புரியுது. நீ கவலைப்படாத!” என்றார். வினயன் கிளம்பி வர, பாலா அவனோடு கிளம்பினார். ஜெய் சமையலறை சென்று பார்க்க, ஊர்மிளா பாயசம் செய்தவள் அதனை தூக்கு வாளியில் ஊற்றி
“பாட்டி கிட்ட அவங்க பையனுக்கு அவார்ட் கிடைக்கும் சொன்னா சந்தோஷப்படுவாங்க ஜெய், பாயசம் கொடுத்து சொல்லிட்டு வருவோம், ஏன் வேலை இருக்கா?” என்றதும்
“போய்ட்டு வருவோம்” என்றவன் மனைவியை அழைத்துக்கொண்டு அரக்க பறம்பில் வீடு சென்றான். அச்சம்மா மதிய உணவுக்குக் கீரை ஆய்ந்தபடி பூமுகத்தில் உட்கார்ந்திருக்க, அச்சச்சன் அவரின் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ என்ற புதினத்தை படித்துக்கொண்டிருந்தார். ஊர்மிளாவும் ஜெயனும் ஜோடியாக வருவது பார்த்த அச்சம்மா
“ஏட்டா!” என்று கணவரை அழைத்து கண் காட்டினார். ஊர்மிளா திருமணமாகி முதல்முறை இன்றுதான் அங்கு வருகிறாள், அச்சச்சனும் அச்சம்மாவும் மனது நெகிழ பார்த்தனர்.
“ஏடா ஜெய், ஊர்மி மோளே” என்று அச்சம்மா எழ
“பாட்டி!” என்று பாசமாய் அழைத்த ஊர்மிளாவின் முகத்தில் புன்னகை. அவரிடம் வாளியை நீட்டி
“உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம்” என்றதும் அவர் கற்பனை வேறாக இருந்தது.
“இந்த மாதிரி நேரத்துல நீ ஏன் நடந்து வந்த? சொல்லியிருந்தா நான் வந்திருப்பேனே” என்றவர் வாளியை வாங்கி வைத்துவிட்டு, ஊர்மிளாவை உட்கார செய்தார். ஜெய்யும் ஊர்மிளாவும் கள்ளமாய் பார்வை பரிமாறி சிரிக்க அச்சுதனும் நிறைவாக பார்த்தார்.
“அச்சம்மா! நீங்க நினைக்கிறதில்ல” என்று ஜெய் சொல்ல, பெரியவர்கள் முகம் வாடியது.
அவர் வாட்டம் கண்ட ஜெய், “உடனே ஏன் முகம் வாடுது, வேற ஒரு சந்தோஷமான விஷயம், ஊர்மி சொல்லு” என்றிட
“உங்க பையனுக்கு பரம் வீர் சக்ரா அவார்ட் கிடைக்க போகுது பாட்டி, பெரிய மிலிட்டரி அவார்ட்” என்று ஊர்மி சந்தோஷ குரலில் சொல்ல, பேத்தியைத்தான் பார்த்தார் அச்சுதன்.
அச்சுதனோ பேத்தி சொன்ன செய்தியில் “நிஜமாவா டா ஜெயா? ராஜீவன் சொன்னானா?” என்று ஜெய்யிடம் கேட்க, அவன் பெயர் பரிந்துரை பற்றி சொல்ல அச்சுதனும் நம்பிக்கையாக
“அவனுக்குக் கண்டிப்பா கிடைக்கும்” என்றார். பத்மினி முகம் பெரிய மகிழ்வை எல்லாம் காட்டவில்லை, அவருக்கு மகன் குடும்பமாக இருக்க வேண்டும் என்பதே பெரிய ஆவல், பேத்திக்குக் குழந்தை வரப்போகிறது என்று அவர் நினைக்க அதில்லையே என்ற வருத்தமே.
“எந்தா அச்சம்மா இது? நீங்க சந்தோஷப்படுவீங்கனு நினைச்சா ஒன்னுமே சொல்லல, நீங்க நினைச்சது எல்லாம் ஒரு நாள் நடக்கும், ஆனா ராஜீவன் மாமா மாதிரி ஆட்கள் இருக்கிறதால நம்ம இங்க நிம்மதியா இருக்கோம், பிரிகடியர் ராஜீவன் அம்மா பெருமைப்பட வேண்டாமா? என்ன அச்சச்சா நான் சொல்றது?” என்று ஜெய் கேட்க,
“அதானே என்ன மினி?” என்றார் அவரும். அச்சுதன் பேசவும் ஊர்மிளா அவரின் சாய்வு நாற்காலி முன் உட்கார்ந்தவள்
“என்னை மன்னிச்சிருங்க தாத்தா! அப்போ கோவமா பேசிட்டேன். உங்களை கஷ்டப்படுத்திட்டேன்..” என்று சொல்ல அச்சுதன் உடனே
“அதெல்லாமில்ல மோளே, என் பேத்திதானே பேசின, எனக்கு உன் மேல கோவமில்லை. எழுந்திரு” என்று சொல்ல ஊர்மிளா மறுத்தாள்.
அச்சுதன் நிமிர்ந்து உட்கார, அந்த சாய்வு நாற்காலியின் கைகளில் இருபக்கமும் கையூன்றிய ஊர்மி மண்டியிட்டு, உள்ளார்ந்த குரலில் அச்சுதனின் கண் பார்த்து
“என் மேல கோவமில்லைன்னா உங்க பையன் மேல கோவமா?” என்று கேட்டாள்.
அச்சுதன் பேசாமலிருக்க “அவர் மேல கோவப்படாதீங்களேன் தாத்தா, அவர் பாவம் தானே? தனியா இருக்கார்.” என்று ஊர்மிளா ராஜீவனுக்காக பேச அச்சுதனுக்கு ஆதங்கமாய் இருந்தாலும் பேத்தி பேச்சில் சின்ன சிரிப்பும் கூட. ஒருவகையில் அவருக்கு ராஜீவனை ஊர்மிளா நினைப்பது, அவருக்காக பேசுவது பேராறுதலாக இருந்தது, மகனாக தங்களை பார்க்காததை விட தந்தையாய் அவளை ராஜீவன் வளர்க்காத கோபம் அதீதமாக அச்சுதனுக்கு உண்டு.
“உனக்காக அவன் ஒன்னும் செஞ்சதில்ல, அவனை பேசக்கூடாது சொல்ற? தனியா இருக்கான்னா அவனை பெத்தவங்க செத்தா போய்ட்டோம்?” என்று சொல்லும்போதே ஜெய் அதட்டினான்.
“அச்சச்சா! என்ன பேசுறீங்க?” என்று குரல் உயர்த்த “உண்மையைத்தானேடா சொன்னேன்” என்றார் அச்சுதனும்.
ஜெய் அவரை முறைத்து, “உண்மையா இருந்தாலும் இப்படியெல்லாம் பேசாதீங்க! எனக்குக் கஷ்டமாயிருக்கு, அவர் பையனை அவர் என்னமோ பேசுறார்! விடு ஊர்மி” என்றான் ஊர்மிளாவிடமும்.
“ஜெய் நாங்க பேசிக்கிறோம், நீங்க வேலையிருக்கு சொன்னீங்க இல்ல.. நீங்க கிளம்புங்க” என்றாள். இதுவரை ஊர்மிளா அங்கே தனியே இருந்ததில்லை, சென்றிருந்த சில முறை கூட பிந்துவோ, வினயன், ஜெயன் என்று யாராவது இருப்பார்கள், அவளுக்கு அது பிடிக்காது என்பதால் ஜெய் மனைவியைப் பார்க்க
“நான் வீட்டுக்குப் போய்ப்பேன், நீங்க கிளம்புங்க” என்றாள். ஜெயனுக்கு அப்படி விட மனதில்லை. அவன் அசையாது நிற்க,
“ஏடா ஜெய், எனக்காக நிக்கிறியா இல்லை உன் ஊர்மிக்காக நிக்கிறியா?” என்று அச்சுதன் ஜெய்யைக் கிண்டல் செய்ய, ஜெய்ச்சந்திரனுக்கு இருவருமே மிக மிக முக்கியமானவர்கள். யார் யாரை காயப்படுத்தினாலும் அவன் காயப்படுவான். அவன் பதிலின்றி நிற்க, அச்சம்மா உடனே
“எந்தா ஏட்டா இது?” என்று கணவரை கேட்க
“மினி! இவன் பதில் சொல்ல மாட்டேங்கிறான் பாரேன்..” என்றவர் ஜெய்ச்சந்திரன் முறைப்பது பார்த்து
“ஜீவிச்சுப் போடா!(பொழச்சு போடா)” என்றார் சிரிப்போடு. ஊர்மிளா ஜெய்யைப் பார்வையால் போக சொல்ல, வேறு வழியின்றி அவனும் “நான் அப்புறம் வரேன்” என்றவன் “ஊர்மி, ஒரு நிமிஷம்” என்றவன் அவளை தன்னோடு நிற்க வைத்து
“நேத்து சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கல, இப்போ பண்ணுங்க அச்சம்மா” என்று கேட்டிட, அச்சுதனும் பத்மினியும் மனம் நிறைந்து அவர்களை வாழ்த்த ஜெய் கிளம்பினான்.