“உன்னை வளர்க்காத ராஜீவனுக்காக இவ்வளவு பேசுற, நானும் மினியும் அவன் பொறந்த அன்னிலிருந்து பார்த்து பார்த்து வளர்த்தோம், கோவத்துல பார்க்காத பேசாத சொன்னேன். அதுக்காக அவன் பொண்டாட்டி நல்லாயிருக்கக் கூடாது நினைச்சிருப்போமா நாங்க? அப்படி பெத்து வளர்த்த எனக்கு அவனை பேச உரிமையில்லையா மா?” என்று கேட்க ‘உனக்கு புள்ள பொறந்தாலும் உங்கப்பனை நான் அடிப்பேன்’ என்று ஊர்மிக்கு அவள் தாத்தாவின் வார்த்தைகள் கேட்க
“அவர் மேல தப்புதான் தாத்தா, அவருக்கும் சேர்த்து நான் மன்னிப்புக் கேட்கிறேன். எத்தனை நாளைக்கு தாத்தா இந்த கோவத்தோட இருக்க போறீங்க?” என்று ஊர்மிளா வருத்தமாகக் கேட்டாள். ராஜீவன் அவளுக்கு செய்தது நல்லதாக நியாயமாக இருக்கலாம், ஆனால் மகனாக அவர் செயல் தவறல்லவா?
சிலரின் கோபங்கள் நிமிடங்களில் கரையும், சிலரின் கோபங்கள் வருடக்கணக்கில் நீளும், அப்படி கோபம் நீளும்போது அதன் விளைவுகளையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அச்சுதனும் ராஜீவனும் அப்படித்தான்! ஒருவர் மீதான வருத்தங்களும் கோபங்களும் அத்தனை வருடங்கள் பிரிவைத் தந்திருக்க, இப்போதும் அதை பேசி என்ன பயன்?
அந்தந்த நேரத்து நியாயத்தை விட அந்ததந்த நேரத்து நல்லது கூட சரிதானே? ஊர்மிளா வருந்தி பேச, பத்மினிக்குப் பொறுக்கவில்லை. உண்மையில் பத்மினியை விட அச்சுதனுக்கே ஊர்மிளா மீதான பாசம் அதிகம், பத்மினிக்கு ராஜீவன் மகள் என்பதால் பாசம், ஆனால் அச்சுதனுக்கு அவளை பார்த்த நாள் முதலே ஒரு பாசம், அவரின் பிரியமான ஜெயனுக்குப் பிடித்தவள் என்ற பாசம்… அது மகனின் மகள் என்ற தெரிந்த கணம் உரிமையோடு கலந்திருக்க, மனிதர் தவித்தார்.
பத்மினி அச்சுதனிடம் “போதுமேட்டா, பாவம் ஊர்மி.” என்றவர் ஊர்மிளாவிடம் “நீ விஷமிக்கண்டா ஊர்மி, ராஜீவனை இவர் எதுவும் பேச மாட்டார். நான் பார்த்துக்கிறேன்” என்றார் ஆறுதலாக.
அச்சுதன் ஊர்மிளா ஊருக்குச் சென்ற நாள் முதலே ஒரு தெளிவான முடிவெடுத்திருந்தார், அவரின் ஏக்கங்கள் என்றுமே ஏக்கங்கள்தான்! அவர் முடிவுக்கும் அவரின் மகனின் முடிவுக்கும் ஊர்மிளாவை பொறுப்பாக்க முடியாது. பேத்தி என்று நெஞ்சை முட்டும் பாசவுணர்வு இருந்தாலும், அதனை காட்ட போய் ஒவ்வொரு முறையும் இன்னும் விலகல் வந்திருக்க, அவர் வணங்கும் பகவதி அம்மாவின் ஆசியில் எங்கோ இருந்தவள் கண்ணெட்டும் தூரத்தில் இருப்பதே போதுமானதாக இருந்தது. இந்த சிந்தனைக்குக் காரணம் கூட அவரின் ஜெயனே!
ஊர்மிளா ஊருக்குச் சென்றிருந்த நான்கு நாட்களும் அவன் வாடிய முகம் மட்டும் அச்சுதனுக்குத் தெரிந்தது, தன்னால் தன் வார்த்தையால் ஊர்மிளா சென்றுவிட்டாளோ என்ற வருத்தம், அதைவிட நேற்று பிறந்த நாளன்று கூட ஜெயன் தனியாக வர ஜெய்ச்சந்திரனின் சந்தோஷமே முக்கியம் என்று நினைத்தார், அவனும் ஊர்மிளாவும் மகிழ்ச்சியாக வாழ்வதே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.
“மினி! ஊர்மி பாயசம் கொடுத்திருக்கா இல்ல, அதை சாப்பிட கொடு” என்று பேச்சை மாற்றிட பத்மினியும் சின்ன கிண்ணங்களில் பாயசத்தை ஊற்றி எடுத்து வர வீட்டினுள் நுழைந்தார். ஊர்மிளாவும் அவரோடு போக எத்தனிக்க
“ஊர்மி! இனி நான் ராஜீவனை பேசல, போதுமா?” என்று அச்சுதன் கேட்க, ஊர்மிளாவின் முகத்தில் மெல்ல மெல்ல உதயமான புன்னகை முழுதாக நிறைத்தது.
அந்த புன்னகை முகத்தைப் பார்க்கவும் அவருக்கு அவர் அம்மா முகத்தில் சிரிப்பைக் கண்ட திருப்தி, அதனுடன் ஒரு ஏக்கமும் கூட! வளர்க்காதவன் மீதே இத்தனை அன்பாக இருக்கும் பெண், வளர்த்த பிரபாகரன் மீது எத்தனை பாசமாக இருப்பாள்? என் மகனுக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் என்ன முயன்றும் மனதில் தோன்றியது. ‘முட்டாள்!’ என்று ராஜீவன் மீதே அந்த கோபம் திரும்பியது.
“தேங்க்ஸ் தாத்தா” என்ற ஊர்மிளா அச்சம்மா வந்ததும் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று நினைக்க, அச்சுதன் ஊர்மிளாவிடம்
“என் ஜெயனை நல்லா பார்த்துக்கோ ஊர்மி” என்றார்.
“உங்க ஜெயனா?” என்று கேட்டபடி அவர் எதிரே உட்கார்ந்த ஊர்மிளா அச்சம்மா விட்டு சென்ற கீரையை சுத்தம் செய்தாள்.
“பின்னே இல்லையா? கல்யாணம் கட்டினா அவன் உன் ஜெயனா?” என்று அவர் சிரிக்க, ஊர்மிளாவின் மனதில் புது இதம், ஏன் அச்சுதன் ராஜீவன் பற்றி பேசவில்லை, இவளை பேசவில்லை என்று தெரியாவிட்டாலும், உரிமை கோறாது அவர் இயல்பாக பேச ஊர்மிக்கும் தயக்கமில்லை. அவளும் இயல்பானாள்.
“அப்படியில்ல தாத்தா, உங்க ஜெய்யை நீங்களே வச்சிக்கோங்க” என்று அவள் விளையாட்டாக சொல்ல, அச்சுதனோ
“நாங்க வச்சிப்போம், உன் புருஷன் இருக்க மாட்டானே” என்றவரின் அடுத்த அரை மணி நேரம் பேச்செல்லாம் ஜெய்ச்சந்திரனை சுற்றியே.
“ராஜீவனும் கல்யாணமாகி போய்ட்டான், ஷோபனாவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. நானும் மினியும் தனியாகிட்டோம், பாலா அவன் தொழில் பார்ப்பான். அவன் மனைவி ஜெய் அம்மா சுஜாதா அவதான் எங்களை பார்த்துப்பா, அவளோட ஜெயனும் வினயனும் வந்துடுவானுங்க.. எங்களுக்கு அவனுங்கதான் ஆறுதல்!”
“விஜயன் லீவுக்கு மட்டும்தானே வர முடியும்.. அதுவும் வினயன் மினியோட சுத்தினா ஜெய் என்னோட எங்க போனாலும் கை பிடிச்சுட்டு வருவான். என் மகனோட கை பிடிச்சு நான் நடக்க வேண்டிய வயசுல எனக்கு ஜெய் தான் கூட நின்னான், இப்பவும் இருக்கான். அவனை நல்லா பார்த்துக்கோ, நீயில்லன்னா என் பேரன் சிரிக்க மறந்துடுறான்” என்றார் சிரிப்போடு.
நண்பனின் மகன் என்று பாலச்சந்திரன் மீதிருக்கும் பாசத்தை விட அச்சுதனுக்கு ஜெய்ச்சந்திரன் மீதான பிரியம் அதிகம். வாழ்க்கையில் அவர் மகனை தேடிய காலங்களில் எல்லாம் அவனை அறியாது துணையாக நின்றவன் என்பதாலா இல்லை அவன் பண்பா தெரியாது. ஜெய்ச்சந்திரன் அச்சுதனுக்கு விஷேசமானவன்!
ராஜீவன், விஜயனை விட அவன் மீது அன்பு அதிகம். அவரின் பண்பாடு, இனம், மொழி அத்தனையும் அவனோடு வேறுபட்டு இருந்தாலும் ஜெய்க்குத் தன் பேத்தியைக் கொடுக்க முன் வந்த காரணம் இந்த பாசமே. மகனிடம் பகிர முடியாத தன் உணர்வை, கண்ணீரை கூட அவனிடம் பகிரும் அளவு நேசம், நெருக்கம்!
ஊர்மிளாவை பேத்தி என்று சொல்லி உரிமைகோருவதை விட ஜெய்யைப் பற்றி இப்படி பாசமாய், உரிமையாய்ப் பேசும் அச்சுதனை ஊர்மிளாவுக்குப் பிடித்தது.
அதுவும் அவளுக்குப் பிரியமானவனை பற்றி பேச கேட்க கேட்க பிரியமான நிமிடங்கள். இதில் அச்சம்மாவும் பாயசத்தை சிறு கிண்ணங்களில் ஊற்றி மூவருக்கும் எடுத்து வர, கணவரோடு சேர்ந்து அச்சம்மாவும் ஜெய் பற்றி பேசிட ஊர்மிளாவின் புன்னகை குறையவில்லை.
ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை, அச்சம்மா மதிய உணவுக்கு ஊர்மிளாவை இருக்க சொல்லவும்தான்
“அய்யோ பாட்டி, நான் அப்புறம் வரேன். நேத்து ஜெய்க்கு ஒன்னும் செய்ய முடியல, இன்னிக்கு அவருக்குப் பிடிச்சதா செய்யணும்” என்று அவசரமாக எழுந்துகொள்ள, பத்மினியும் சிரிப்போடு அனுப்பி வைத்தார்.
“அடிக்கடி வரணும்” என்றவர் தன் கண்களில் இருந்த மையைத் தொட்டு பேத்தியின் காதோரம் திருஷ்டிக்காக வைத்தார்.
ஊர்மி சிரிப்போடு நடக்க, அச்சம்மா அவள் வீட்டுக்குள் நுழையும் வரை தெருவில் நின்று பார்த்து அதன் பின்னே உள்ளே போக,
மனைவியின் முகத்திலிருந்த புன்னகையைப் பார்த்த அச்சுதன், “எந்தாடி மினி? பேத்தியைப் பார்த்து ரொம்ப சந்தோஷமோ?” என்று சிரித்தார்.
“பின்னே இல்லையா ஏட்டா? ஊர்மிளா பக்கத்துல இருக்கிறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இந்த விஜயந்தான் பிந்துவை அழைச்சிட்டுப் போய்ட்டான்.. நம்ம ராஜீவனும் இங்க வந்துட்டா நான் நிம்மதியா இருப்பேன்” என்றதற்கு அச்சுதன் ஒன்றும் பேசவில்லை.
அன்று இரவு ஜெய் கொஞ்சம் விரைவாக வீடு வந்தான். மதியம் ஊர்மிளா அவனுக்குப் பிடித்ததாக செய்து வைத்திருக்க உணவோடு மனமும் நிறைந்தது. உற்சாகமாக இரவு உணவு முடிந்ததும் மாடியேறியவன் ஊர்மிளாவுக்காகக் காத்திருக்க, ஊர்மிளாவும் மனமெல்லாம் ஆவலுடன் அறைக்குள் நுழைந்தாள். இருவருக்குமே ஆசைகளின் ஆர்ப்பரிப்பு! ஊர்மிளா அமைதியாக ஓய்வறைக்குள் புகுந்துகொள்ள ஜெய் பேசாமல் சட்டையைக் கழட்டிவிட்டு வேட்டியோடு கன்னத்தில் கை வைத்து ஊர்மிளாவின் வருகைக்காக காத்திருந்தான்.
ஊர்மிளா குளித்து ஊதா நிறப்புடவையில் ஊதாப்பூவாக வந்தாள், ஒற்றையாய் முந்தானை விட்டு நெற்றியில் சின்னதாக வட்ட பொட்டு. ஜெயனுக்கு கலைந்த தலையோடு பூனைக்குட்டியுடன் இருப்பவளே பேரழகிதானே?
அவனை கடந்து சென்றவளை கைபிடித்து இழுத்தவன், “இன்னிக்கு ரொம்ப டிஸ்டர்ப் பண்றியே?” என்றபடி இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு மெத்தையில் விழுந்தான்.
ஊர்மிளாவின் இடையைப் பற்றி மென்மையாய் வருடி ஸ்பரிசம் உணர்ந்தவன் “ஏடி காஞ்சிப்பொண்ணுன்னா இப்படி அடிக்கடி புடவை கட்டணுமா? ம்ம்” என்றபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் நேற்று காட்ட முடியாத நெருக்கத்தை இன்று இறுக்கமாகக் காட்டினான்.
“எனக்குப் புடவைன்னா ரொம்ப பிடிக்கும் ஜெய், சின்ன வயசுல அம்மா புடவையை எடுத்து சுத்திட்டு இருப்பேன்.. உங்களுக்குத் தெரியுமா எங்க ஆச்சியோட புடவை எல்லாம் எனக்குத்தான். எங்க அத்தைங்க மட்டும் கொஞ்சம் எடுத்தாங்க, சரண்யா மயூரி ரெண்டு பேரும் பழைய டிசைன் வேண்டாம் சொல்லிட்டாங்க… எனக்கு என்னமோ எங்க ஆச்சியோட புடவை கட்டினா அவங்களோட இருக்க ஃபீல்.. எனக்கு சின்ன வயசுல போய்ட்டாங்க.. இருந்தவரைக்கும் அவங்க மடியில் இருந்த ஞாபகம்…” என்று ஊர்மிளா நினைவேக்கத்தோடு( நாஸ்டால்ஜியா) ஜெய்யிடம் பகிர்ந்தாள்.
“உங்களுக்கு என்னை புடவையில பார்க்க பிடிக்கலையா?” ஊர்மி முகம் சுருக்கிக் கேட்க
“அதெல்லாம் பிடிக்கும், இப்போ ஏன் டைம் வேஸ்ட் பண்ணி கட்டின… அதான்” என்றான் கண்கள் சிரிக்க.
ஊர்மிளாவின் பார்வையிலும் சிரிப்பு. அவன் கழுத்தில் கரம் கோர்த்து நன்றாக சாய்ந்தவள்
“ஜெய் நீங்க ஹாப்பியா? மதியம் சாப்பாடு நல்லாயிருந்ததா? பிடிச்சதா?” என்று கேட்க ஊர்மிளாவை இறுகயணைத்தவன் சூடான மூச்சுக்காற்று ஊர்மிளாவை உரசியது. அவள் காதோரம் முத்தமிட்டு
“எல்லாமே நல்லாயிருந்தது ஊர்மி, நேத்து நீ இல்லாம எனக்கு மூடே இல்ல.. பட் நீ வந்து நின்னப்போ உன்னை அப்படியே” என்றவன் அடுத்து பேசவில்லை. ஊர்மிளாவின் முகமெங்கும் முத்தங்களால் நிறைத்து அவளை அவனில் திளைக்க வைத்தான். ஊர்மிளாவின் கரங்களும் ஜெய்யின் தலைமுடியைக் கோதிட இருகரத்தாலும் ஊர்மியின் முகத்தைப் பற்றியவன் விரல்கள் அவளின் முடியினுள் அளைந்தன.
“ஊர்மி! இன்னிக்கு எனக்கு நிறைய வேலையிருக்கு” என்றான் தீவிரமாக. ஊர்மிளா அவனை கேள்வியாகப் பார்க்க, அறையில் ஒளிர்ந்த மெல்லிய விளக்கை எட்டி அணைத்தவன் ஊர்மிளாவை மென்மையாக அணைத்தபடி
“எங்கிட்ட அச்சம்மா ஒன்னுமே கேட்டதில்ல, அதோட உங்க தாத்தாவுக்கு வேற கொள்ளுப்பேரப்பசங்களைப் பார்க்கணும். அப்போ நான் நல்ல பேரனா அவங்க ஆசையா நிறைவேத்தணுமில்ல ஊர்மி? இனிமே நீ பிரசவத்துக்குத்தான் உங்க வீட்டுக்குப் போகணும் புரிஞ்சதா?” என்று கேட்டவனின் மீசையைப் பிடித்து இழுத்தாள் ஊர்மிளா.
“அதெல்லாம் முடியாது” என்று அவன் முகம் பார்த்து சொன்னவள் மெல்ல அவன் உதட்டில் முத்தம் பதிக்க, நேற்று ஏங்கியதெற்கெல்லாம் சேர்த்து மொத்தமாக இன்று ஏக்கம் தீர்த்தான் ஜெய்ச்சந்திரன்.
“என்னாச்சு ஊர்மிக்கு?” என்று காதில் கேட்க, கூச்சத்தில் நெளிந்தவள் “என்னாச்சு?” என்றாள் அவனை போல் காற்றின் மென்மையொத்த குரலில்.
“ஊர்மி இன்னிக்கு ஜெய்யை ரொம்ப தேடுறாளே?” என்றவனுக்கு இன்றைய கூடலில் மிகுதியான ஒரு நிறைவு, வெட்கங்களின் விடுதலையா, ஆவல்களின் வேட்கையா, பிரிவின் தாகமா, புரிதலின் நிமித்தமா என்று காரணம் தெரியாவிட்டாலும் ஜெய்க்குக் குறையா தேடல் அவளிடம்.
“ஏன் தேடக்கூடாதா? எனக்கு ஜெய்யை ரொம்ப பிடிச்சிருக்கே” என்றவளை ஜெயனாலும் விடமுடியவில்லை. அடுத்த நாள் காலை வழக்கம்போல் விடிய, இருவருக்கும் அன்றாட வேலைகள். ஜெய் அப்பாவோடு உட்கார்ந்து பேப்பர் படிக்க, வினயன் ஷஜியை அழைக்க சூர்ய நெல்லி சென்றுவிட, ஊர்மிளா காலை உணவை பரிமாறி அவர்களோடு உண்டு முடித்தாள்.
ஜெயனின் பார்வை அதிசயமாக ஊர்மிளாவை எதார்த்தமாக கூட தொடவில்லை. பாலச்சந்திரன் “ஏடா ஜெய், நான் போய் பேங்க் போக தேவையானது எடுத்து வரேன். நீ ரெடியாயிரு” என்று அறைக்குப்போனார். ஜெய் மாடி செல்ல போக, ஊர்மிளா சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள்.
“என்ன ஊர்மி?” என்று ஜெய் உள்ளே நுழைய அவனை கையசைத்து அருகே வர சொன்னவள்
“என்னாச்சு ஜெய்? காலையிலிருந்து என்னை பார்த்து ரொம்ப வெட்கப்படுறீங்க?” என்று கேட்க, ஜெய்யின் முகம் சிவந்துவிட, வெட்கச் சிரிப்போடு கழுத்தைத் தடவியபடி
“இல்லையே” என்றான். ஊர்மிளா அவன் முன்னால் வந்து நின்று குறுகுறுவென பார்த்திட அவளை மென்மையாக அணைத்து
“நேத்து உன்னை தூங்கவிடலையே, அதான் .. போடி.” என்று திணறினான்.
ஊர்மிளா அவனையே சிரிப்போடு பார்க்க, “எப்படி காலையில எழுந்து வேலை எல்லாம் செய்ற ஊர்மி? கஷ்டமாயிருக்கா?” என்று அக்கறையாகக் கேட்க
“அதெல்லாம் பழகிடுச்சு, மத்தியானம் சமைச்சுட்டு தூங்க வேண்டிதானே ஜெய். ஆனாலும் இந்த அக்கறையெல்லாம் அந்த நேரம் காணாம போயிடுதே.. இதெல்லாம் பார்த்தா எப்படி நல்ல பேரன் ஆகுறது?” என்றாள் ஊர்மிளா கிண்டலாக.
“எண்ட அம்மே! தெரியாம கேட்டேன் ஊர்மி” என்றவன் பாலாவின் குரல் கேட்கவும் வேகமாக கன்னத்தில் முத்தமிட்டு
“வரேன்பா” என்று குரல் கொடுத்தான். சில அடிகள் எடுத்து வைத்தவன் “ஊர்மி! நேத்து அச்சச்சன் வீட்ல ஒன்னும் பிரச்சனையில்லையே..” என்று தயக்கமாக சமையலறை நிலைப்படியில் நின்று கேட்க, ஊர்மிளா புன்னகையோடு
“ஒன்னும் பிரச்சனையில்ல ஜெய்.. இன்னொன்னு சொல்லவா? நான் அங்க தாத்தா பாட்டி கூட ஒரு மணி நேரம் மேல பேசினேன்.” என்றதும் ஜெய்க்கு அதிர்ச்சி.
“குருவாயூரப்பா! சண்ட போடாம ஒரு மணி நேரம் பேசினீங்களா?” என்று அவன் அருகே வந்து கேட்க
“உங்க மூணு பேருக்கும் ராஜீவன் மாமாவைத்தானே பிடிக்கும், பரவாயில்ல சண்ட போடாம இருந்தவரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோஷம் ஊர்மி” என்ற கணவனின் கன்னத்தைக் கிள்ளியவள்
“எங்க மூணு பேருக்கும் பிடிச்சவர்னா அது ராஜீவன் மாமா மட்டுமா? அவர் பத்தி பேசினா சண்டையில்லாம இருக்குமா?” என்று கேட்டு “எங்க மூணு பேருக்கும் ஜெய்யை ரொம்ப பிடிக்கும், அது ஜெய்க்குத் தெரியலையே..?” என்று கண்கள் சுருங்கி ஊர்மிளா கேட்ட விதத்தில் ஜெயனுக்கு கொள்ளை ஆச்சரியம்.
“பாட்டியும் தாத்தாவும் என் பேரனை கண்கலங்காம பார்த்துக்கோனு ஒரே அட்வைஸ்..”
“ஒஹ் பின்னே..”
“பின்னே என்ன? உங்க பேரனுக்கு சமைக்கணும், அப்புறம் வரேன்னு கிளம்பிட்டேன். நீங்க கிளம்பின அப்புறம் தாத்தா சண்டை போடுற மாதிரி பேசல ஜெய். நாங்க உங்களை பத்தி மட்டும் பேசினோம், உண்மையில் நேத்து அங்க போனதில அவங்களுக்கும் சந்தோஷம், எனக்கும் சந்தோஷம். இப்படி பேசினா எந்த பிரச்சனையுமில்லை ஜெய்” என்றாள் ஊர்மிளா மனமுவந்து. ஜெயனும் சந்தோஷமாக கிளம்பினான்.
ஊர்மிளா நேரம் கிடைக்கும்போது அரக்க பறம்பில் வீடு சென்றாள். அச்சுதன் மகனை பற்றி பேசி பேத்தியை நோகடிக்கவில்லை. பத்மினிக்குப் பேச்சுத்துணையாகப் பேத்தியிருக்க, அவரின் பேச்சில் ராஜீவன் கண்டிப்பாக இருப்பார். ஊர்மிளாவுக்கும் அவர் உணர்வு புரிய, அமைதியாகக் கேட்டுக்கொள்வாள். பிந்துவிடம் சொன்னது போல் ராஜீவனுக்குப் பிடித்தது, அவரின் சிறுவயது என்று எல்லாம் சொல்வார், ஊர்மிளாவும் அவளின் சிறுவயது புகைப்படங்கள் எல்லாம் காட்டி கதை பேசுவாள். பேச்சில் இயல்பாக அச்சம்மா ஏக்கத்தை வெளிப்படுத்தினாலும் அதனை நியாயமாக கடந்துவிடும் பக்குவம் ஊர்மிளாவுக்கு இருந்தது.
அச்சுதன் மனைவியைக் கண்டிப்பார், ஊர்மிளா ஜெய்யோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணமாக இருக்க, மகனை பற்றி ஊர்மியிடம் பேசுவதெல்லாம் தேவையற்றது என்ற தெளிவு அவரிடம். ஊர்மிளா உரிமை எடுக்கவிட்டாலும் அவளின் வரவு, பேச்சு எல்லாம் போதுமானதாக இருந்தது. அந்த நிமிடங்கள் எல்லாம் அரக்க பறம்பில் ஆனந்த நொடிகள்! வீட்டில் ஊர்மிளாவும் வினயனும் மட்டும் அடிக்கடி மாமியார் மருமகள் போல் வம்பிழுத்துக்கொள்வார்கள். மற்றபடி இயல்பான நாட்கள்.
அன்று மதிய உணவுக்கு பாலச்சந்திரனும் அவர் மகன்களும் வீட்டுக்கு வர ஊர்மிளா ஊஞ்சல் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.
“ஊர்மி, சாப்பிடலாமா?” என்று ஜெய் அவள் அருகே வர, ஊர்மிளா புதிதாய் புலர்ந்த உணர்வில், நெஞ்சம் முட்டும் மகிழ்வில் மூச்சில் கலந்த படபடப்பில் கணவனை ஏறிட்டாள்.
“ஊர்மி? என்னாச்சு? டயர்டா இருக்கியா?” என்று ஜெய் கவலையாகக் கேட்க
“ஜெய் நான் ப்ரக்னெண்ட்” என்றாள் பட்டென்று. ஜெய் ஒரு நொடி அவள் சொன்னது புரிய கண்களை விரித்தான். பரிசோதித்த கிட்’டை அவனிடம் நீட்ட அதை வாங்காமல் நீட்டிய ஊர்மிளாவின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான் ஜெய்ச்சந்திரன்.
“ஊர்மி!” என்று அவள் கன்னம் பிடித்தவனுக்குக் கால் தரையில் நிற்கவில்லை.
“என்னம்மா ஊர்மி? இங்க உட்கார்ந்திருக்க? உடம்பு முடியலயா?” என்று கேட்டபடி பாலாவும் வினயனும் வர ஜெய் உடனே
“அப்பா, ப்ளீஸ்! சாரி.. ஒரு நிமிஷம் உங்க கண்ணை மூடி வினயன் கண்ணையும் மூடுங்க” என்றதும் ஊர்மிளா ஜெய்யை புரியாது பார்க்க
“ஜெயேட்டா, என்ன பண்ண போற? ஏன் கண்ணை மூடணும்” என்று வினயன் கத்தினான்.
“அப்பா அவன் வாயையும் சேர்த்து மூடுங்க” என்று ஜெய் கத்த, பாலச்சந்திரன் ஏதோ மகன் விஷயமின்றி சொல்ல மாட்டான் என்று புரிந்தவர் வினயனை இழுத்துப்போனார்.
ஊர்மிளா அவனை முறைக்க ஜெய்யோ அவளை நெருங்கி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஊர்மி, என்ன சொல்றது தெரியல.. நமக்கு ஒரு பாப்பா.. இந்த வீட்ல.. கனவு மாதிரி இருக்கு” என்றான் நெகிழ்ச்சியாக.
“எனக்கும் ஜெய்! டேட் தள்ளி போகவும் வழக்கம்போல செக் பண்ணேன்.. லாஸ்ட் டைம் நான் எக்ஸ்பெக்ட் பண்ணினேன்ல.. சோ பெருசா எதிர்ப்பார்க்கல.. ஆனா எனக்குள்ள ஒரு குழந்தை! செக் பண்ணிட்டு கீழ வந்து உட்கார்ந்துட்டேன்”
“போன் பண்ணியிருக்கலாம்ல”
“எப்படியும் வரப்போறீங்க, போன் பண்ணி டென்ஷன் பண்ன வேண்டாம்னுதான்” என்றவள் எழுந்து
“எனக்கு விஷயம் கேட்ட நிமிஷம் வர ஃபீலை பொறுமையா காட்ட முடியல, நீ ரூம்ல வச்சு சொல்லியிருக்கணும். பேசிட்டே இருக்கும்போது ப்ரக்னெண்ட் சொன்னா” என்று ஜெய் சிரிப்போடு கேட்டான்.
“எனக்கு என்ன செய்றது தெரியல, சர்ப்பரைஸா சொல்லலாம்னா என்னால அதை கூட யோசிக்க முடியல. சரி வாங்க ஜெய் மாமா வினய் கிட்ட சொல்லிட்டு நான் அம்மாப்பாவுக்கு சொல்லணும், உங்களுக்கு சொல்லணும்னு வெயிட் பண்ணினேன்” என்றபடி கூடத்திற்கு சென்றனர்.
“சந்தோஷமா இருக்குடா ஜெய்” என்று மகன் தோளில் தட்டிக்கொடுத்தவர் “டாக்டர்கிட்ட போய்ட்டு வாங்கம்மா” என்றார் ஊர்மிளாவிடம். வினயன் விஷயம் கேட்டதும் “ஜெயேட்டா, அடிபொலி!” என்று மகிழ்ச்சியில் கூவி
“அப்பா! நம்ம வீட்டுக்குக் குட்டி பாப்பா வரப்போகுது, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? கையைக் கொடுங்க ப்ரண்ட்” என்று ஊர்மிளாவுக்கு வாழ்த்து சொன்னவன் அண்ணனை அணைத்துக்கொண்டான். ஊர்மிளா வீட்டுக்கு அழைத்து சொன்னவள் ராஜீவனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பினாள். அரக்க பறம்பில் வீட்டிலும் விஷயம் தெரிய, அவர்களுக்கும் சந்தோஷம். காஞ்சி இந்த சந்தோஷ செய்தியைக் கொண்டாடிட, பிரபாகரன் மனைவியோடு மகளை வந்து பார்த்து ஒரு வாரம் தங்கி சென்றார்.
பிரிகடியர் ராஜீவனும் விஷயம் கேட்டதும் மகளை பார்க்க தேவிகுளம் வந்தார்.