“மாமா! காஞ்சிபுரத்துக்காரிக்கு நீங்க எவ்வளவு நல்ல புடவை வாங்கி கொடுத்தாலும் பாராட்ட மனசே வராது” என்று ஜெய் ஊர்மிளாவை ஒரவிழியால் பார்த்தபடி ராஜீவனிடம் புகார் சொல்ல
ஊர்மிளாவோ ஜெய்யைக் கிண்டலாக பார்த்து, “இது காஞ்சிப்பட்டு” என்றாள். ஜெய் ராஜீவனை பார்க்க
“இவளுக்குத் தெரியாதா ஜெய்? நான் பிரபாவோட போய் எல்லாம் காஞ்சில வாங்கினது” என்றதும் ஜெய் மனைவியைப் பார்க்க, பெருமையாக ஒரு பார்வை பெண்ணிடம்.
“எந்தா மோனே? நீ வாங்கி கொடுத்து ஊர்மி பிடிக்கல சொல்லிட்டாளா?” என்று சிரிப்போடு ராஜீவன் கேட்க
“பிடிக்கலனு சொன்னா கூட பரவாயில்லை மாமா, இது ஒரிஜினல் இல்லைங்கிறா, அப்படியே ஒரிஜினல் பட்டா இருந்தா, காஞ்சில இதை விட கம்மி ரேட்டுக்கு வாங்கலாம். நீங்க ஏமாந்துட்டீங்கனு சொல்றா” என்று குறைப்பட்டான். ஊர்மிளாவின் புடவை பிரியம் அணிந்தவன் அவளுக்காக பட்டு புடவைகள் வாங்கி தர, பிரியத்தோடு வாங்கித்தருவதை பிடிக்கவில்லை என்று எப்படி சொல்வாள்? ஆனாலும் இயல்பாக சிறு வயதிலிருந்து பட்டைப் பார்த்து வளர்ந்தவளுக்கு சட்டென்று வாய் வந்துவிடும்.
இதனை கேட்டிருந்த பாலச்சந்திரனோ, “மருமக நீ ஏமாறக்கூடாது, வீணா செலவு பண்ணக்கூடாதுனு அக்கறை சொல்லுதுடா” என்றவர் “பார்த்தியா மிலிட்டரி உஷாரா காஞ்சில வாங்கிட்டான்..” என்று நண்பனின் தோளில் அடித்தார்.
ராஜீவன் காலையில் தேவிகுளம் வந்ததுமே பெட்டியை அவர் வீட்டில் வைத்துவிட்டு நேராக மகளை பார்க்க வந்துவிட்டார். அவர் வருவது தீடீர் பயணம் என்பதால் யாரிடமும் சொல்லவில்லை, ஊர்மிளா எல்லாருக்கும் காலை தேநீர் எடுத்து வந்தவள் மாமனாருடன் உட்கார்ந்திருந்த ராஜீவனை எதிர்ப்பார்க்கவில்லை.
“எப்படி டா இருக்க?” என்று ராஜீவன் மகளை கேட்க
“நான் நல்லாயிருக்கேன், நீங்க வரேனு சொல்லவே இல்லை” என்றாள் உற்சாகமாக. அப்படியே காலை உணவு முடிந்து அவருடன் பேசிக்கொண்டிருக்க, மகளுக்காக புடவைகள் வாங்கி வந்திருந்தார். அவளுக்கு மட்டுமின்றி அம்மாவுக்கு, தங்கைக்கு, பிந்துவுக்கு, ஜமுனாவுக்கும் கூட. பிந்துவுக்கும் ஜமுனாவுக்குமானதை பிரபாகரனை கொடுக்க சொல்லிவிட்டார்.
ராஜீவன் வந்திருப்பதால் பாலச்சந்திரனும் நண்பனுடனே இருந்தார், மகன்கள் இருவரும் வேலையைப் பார்க்க சென்றுவிட்டனர். ராஜீவனுக்கு தாய்மையில் மிளிர்ந்த மகளை பார்க்க பார்க்க மனதுக்கு நிறைவாய் இருந்தது, அதே நேரம் அச்சம் நெஞ்சை கவ்வியது. அவரால் அதை யாரிடமும் பகிர முடியவில்லை.
ஜெய்யுடனான காதல் வாழ்க்கையில் ஊர்மிளாவுக்கு குறையேதும் இல்லை, அவள் முகத்தில் எப்போதும் புன்னகையே, ராஜீவனால் அதை முழுதாக ரசிக்கக் கூட முடியவில்லை. அதே நேரம் மகளை விட்டு போகவும் மனதில்லை, மதிய உணவுக்கு பத்மினி மகனை அழைக்க மகளின் கையால் உண்பதை விரும்பியவர் இரவு வருவதாக சொல்லிவிட்டார். அந்தி சாய்ந்த பின் ஜெயனும் வினயனும் வீடு வர, அவர்களோடு பேசினாலும் பார்வை எல்லாம் மகள் மீதே. இரவு உணவுக்கு செல்லவில்லை என்றால் அம்மா வருத்தப்படுவார் என்று மனதை அடக்கி அரக்க பறம்பில் வீடு நோக்கி நடந்தார்.
இத்தனை வருடத்தில் ஊர்மிளாவோடு இருக்க வேண்டும் என்று தோன்றினாலும் மனதை தேற்றிக்கொள்வார், மழலையில் கொஞ்சி பேசிடும் மகளை விட்டு பிரிய மனமில்லாது உரிமைக்கும் நியாயத்திற்கும் இடையில் அவர் தவித்த பொழுதுகள் அனேகம். தர்மம் சில நேரம் தன்னலத்தை மீறியதல்லவா? அந்த தர்மம் ராஜீவனை மகளிடம் உரிமை கோர விடாது. மகளுக்காக என்ற சுய நலமிருந்தாலும் அவரின் ஏக்கங்கள் எல்லாம் நியாயத்தின் முன் காணாமல் போகும். ஊர்மி வளர்ந்து ‘அங்கிள்’ என்று அழைக்க பழகிய பின் நியாயத்தோடு நிதர்சனமும் உரைக்க, அதுதான் எதார்த்தம் என்று ஏற்றுக்கொண்டுவிட்டார்.
இப்போது மகள் ஒரு குழந்தைக்குத் தாயாக போகிறாள், அந்த செய்தி கொடுத்த சந்தோஷம், அதோடு கூடிய பயம், அதையும் தாண்டி தன் குழந்தைக்கு ஒரு குழந்தை என்ற பூரிப்பு என்று உணர்ச்சிவசத்தில் இருந்தார். அவளை பக்கமிருந்து பார்க்க மனம் விரும்பியது, அருகிலிருந்தும் தூரமாய் ஒரு உணர்வு! பேரக்குழந்தையைப் பார்க்க அத்தனை ஆசை, அதை நினைத்தவருக்கு அப்பா அம்மாவுக்குத் தன்னால் அந்த உரிமையைக் கொடுக்க முடியவில்லை என்ற குற்றவுணர்வு பெரிதாக தாக்கியது.
வீட்டுக்கு வர பத்மினி வழக்கம்போல் அவர் வானொலி பெட்டியோடு இருக்க, ராஜீவனை சாப்பிட சொல்ல அவர் நேரம் கழித்து உண்கிறேன் என்றதும் பத்மினி பக்கத்தில் இருந்த பூஜைக்கூடையிலிருந்து சந்தனமும் குங்குமமும் எடுத்து மகனின் நெற்றியில் வைத்தார். ராஜீவனின் சோர்ந்த முகம் பார்த்த பத்மினி
“எந்தாடா மோனே?” என்று கேட்கவும் உணர்வுகளின் பொங்கெழுச்சியில்(upsurge of feelings) இருந்த ராஜீவனுக்கு அம்மாவை பார்க்கவும் கண்கள் கலங்கின. அவரின் மொத்தவுணர்வுகளையும் பார்த்தவள் இல்லாது போனதிலிருந்து தன் உணர்வுகளை ராஜீவன் பெரிதாகக் காட்டியதில்லை, அவரின் வேலையும் அதற்கு ஒரு காரணம்.
பல வருடங்கள் கழித்து அம்மாவின் மடியில் படுத்தார். பத்மினி ஒரு நொடி அதனை எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும் கூட எப்போதும் அவருக்கு ராஜீவன் குழந்தைதானே? மகனின் நெற்றியை வருடிவிட்டவர் எதையும் கேட்கவில்லை. ஊர்மிளா பற்றி தெரிந்த அன்று கேட்டவருக்கு ராஜீவன் பதில் சொல்லாது போக, அதன்பிறகு பத்மினி ஒன்றுமே கேட்கவில்லை. அது ராஜீவனுக்கு ஆசுவாசம் கொடுத்த அதே சமயம் குற்றவுணர்வும் கொடுத்தது.
“எனக்கு அவ போனதும் எல்லாமே போன மாதிரி ஆகிடுச்சுமா, உண்மையில எனக்கு என்ன செய்றது தெரியல. ஊர்மி பத்திரமா இருக்கணும்னு மட்டும் நினைச்சேன்..” என்று ராஜீவன் கண்ணீருடன் சொல்ல, பத்மினி மகன் கன்னத்தைத் துடைத்து
“இங்க பாரு கண்ணா நீ செஞ்சது எனக்குப் பிடிக்கலனாலும் ஊர்மிளாவை சந்தோஷமா பார்க்கும்போது உன் முடிவை நான் ஏத்துக்கிறேன்..”
“இல்லம்மா, ஊர்மிக்குக் குழந்தை வரப்போகுதுனு தெரிஞ்சதும் எனக்கு அவ்வளவு ஆசையா இருக்கு. அச்சனுக்கும் அப்படியிருந்திருக்கும் தானே? என்னால தானே உங்களுக்கு அவ மேல இருக்க உரிமை போச்சு.. நான் நல்ல மகனுமில்ல, நல்ல அச்சனுமில்லை!”
பத்மினிக்கு மகன் வருந்துவது பொறுக்கவில்லை, அவர் சமாதானம் செய்ய
“ஊர்மி இங்க இருக்க வரைக்கும் பத்திரமா பார்த்துக்கோங்கம்மா, இந்த மாதிரி நேரத்துல எப்படி இருக்கணும் சொல்லுங்க. அவ சொன்னா கேட்டுப்பா, எனக்குத்தான் அவளோட இருக்க கொடுத்துவைக்கல” என்று அவரையும் மீறி அச்சங்களும் ஏக்கங்களும் வார்த்தையாகின. ஆற்றுப்படுத்த கூட அத்தனை வருடம் யாரையும் நாடாதவர் தானாக தாயிடம் ஆறுதல் தேடினார்.
பத்மினிக்கு மகன் உணர்வுகள் புரிய
“இதெல்லாம் நீ சொல்லணுமாடா? நான் அவளை பார்த்துக்கிறேன், நீ வருத்தப்படாத ராஜா” என்றார். ராஜீவன் அமைதியாக அம்மாவின் கைப்பற்றி மடியில் இருந்தார். பத்மினி பெருமூச்சோடு
“இங்கயே வந்துடு ராஜீவா! அம்மாவுக்கும் நீ வந்தா சந்தோஷம், உனக்குக் கொடுப்பினை இல்லனு எல்லாம் பறையண்டா மோனே! உன்னோட முடிவு எல்லாத்துக்கும் காரணம்னாலும் நான் கும்பிடுற பகவதியம்மா என் பேத்தியை என் பக்கத்துல கொண்டு வந்துட்டா, சேர வேண்டிய இடத்துல என் பேத்தி சேர்ந்துட்டா. ஏன் நீ தனியா இருக்க? இங்க உன் பொண்ணை பார்த்திட்டு இருக்கலாம்” என்று சொல்ல அவர் இருந்த மன நிலைக்கு அம்மாவின் வார்த்தைகள் மழையாய் நனைத்தன.
அச்சுதன் இவர்களின் உரையாடலை கேட்டபடி அவர் சாய்வு நாற்காலியில் வந்தமர்ந்தார். எல்லாவற்றுக்கும் அவன் காரணம் என்று குற்றம் சொன்னாலும் சில நேரம் மனம் மகன் பக்கம் இளகத்தான் செய்தது, அவருக்கு வருத்தங்கள் இருந்தாலும் எல்லாரையும் விட ராஜீவனுக்குத்தானே வருத்தங்கள் அதிகம்.
ராஜீவன் பேசாமல் இருக்க, பத்மினி மகனிடம் “நீ இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கலாமேடா, உன் வாழ்க்கை ஏன் தனியா…” என்று ஆரம்பிக்கும்போதே ராஜீவன் அம்மாவின் மடியிலிருந்து சட்டென்று எழுந்துவிட்டார். வேறு யாராவது இதை பேசியிருந்தால் கத்தியிருப்பார். அம்மா என்ற காரணத்தால் அமைதியாக பேசினார்.
“உங்க கூட இருந்தாலும் தூரமா இருந்தாலும் நீங்கதானே என் அம்மா? என் மேல எவ்வளவு கோவம் இருந்தாலும் உங்க பாசம் மாறலதானே? அப்படித்தான்மா என் ப்ளஸ்ஸியும், எத்தர ஜென்மமெடுத்தாலும் அவ மட்டும்தான் எனக்கு மனைவி” என்றார் அழுத்தமாக. அதனை கேட்டதும் பத்மினிக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. ‘என் மகனின் அன்பை பெற அந்த பெண்ணுக்குக் கொடுத்து வைக்கவில்லையே’ என்று வருந்தியவர் மகனின் கையைப் பிடித்து மடியில் சாய்த்துக்கொண்டார்.
“அதுக்கெதுக்கு எழுந்துக்கிற?” என்று அதட்ட, விசிலடித்தபடி வந்தான் வினயச்சந்திரன்.
ராஜீவன் அச்சம்மாவின் மடியில் படுத்திருந்த காட்சி கண்டவன், “எண்ட பகவதியம்மே! என்னவொரு அநியாயம்?!” என்று முறைத்தபடி அச்சம்மாவின் தோளில் இடித்து அமர்ந்தான்.
“எந்தாடா வினயா?” என்று அச்சுதன் கேட்க
“அச்சச்சா! நீங்களே நியாயம் சொல்லுங்க, இந்த அச்சம்மா பையன் வந்ததும் என்னை மறந்துட்டாங்க… எல்லாரும் என்னை மறந்துட்டாங்க” என்று புலம்பினான்.
“டேய் வினய்! உனக்கு என்னடா பிரச்சனை?” என்று ராஜீவன் அம்மாவின் மடியிலிருந்து எழுந்து வினயனை கேட்டிட
“பின்ன என்ன மாமா? இந்த அச்சம்மா நீங்க வந்ததும் என்னை மறந்துட்டாங்க, உங்க பொண்ணு வந்ததும் என் அண்ணா என்னை மறந்துட்டான், மிஸ்டர். பாலச்சந்திரன் உங்க நண்பன் அவரும் என்னை சும்மா வேலை வாங்கிட்டு இருக்கார், இந்த விஜயனுக்காக என் கணக்குல இருந்த ஆயிரம் பொய்யையும் அவன் கல்யாணத்துக்கே சொன்னேன், அவன் பிந்துவோட போய் ஜாலியா சென்னையில செட்டில் ஆகிட்டான்.. யாருக்கு இந்த வினயனை பத்தி அக்கறை இருக்கு?” என்றான் கடுப்பாக. அதுவரை இறுக்கமாக இருந்த ராஜீவன் மன நிலை வினயனின் பேச்சில் முற்றிலுமாக மாறியது, அவரின் அச்சங்களை அந்த நேரம் மறந்தார்.
அவன் பேச்சில் ராஜீவன் சிரிக்க, அந்த புன்னகை அச்சம்மாவின் மனதை நிறைத்தது.
“வினயன் எப்பவும் என் சக்கரமுத்துதானே?” என்று அச்சம்மா சிரிப்போடு அவனுக்கு நெட்டி முறிக்க
“இப்போ உனக்குக் கல்யாணம் பண்ணலனு தான் ப்ரச்சனையா? சொல்லு உனக்கு எப்படி பொண்ணு வேணும்?” ராஜீவன் வினயனின் தோளில் கைப்போட்டு கிண்டலாகக் கேட்டார்.