“டேய்!” என்று ராஜீவனும் சிரிக்க அச்சுதன் வினயனிடம் “உனக்குக் கிழவிதான் வேணுமா?” என்று கேட்க
“என்ன அச்சச்சா ரொம்ப சிரிக்கிறீங்க? என் அச்சம்மாவுக்கு என்ன குறை? ஐஸ்வர்யா ராய் கூட இந்த வயசுல என் அச்சம்மா அழகுக்கு வர மாட்டாங்க, என்ன மினி?” என்று கண்ணடித்தான். சிரிக்கும் கணவரை அச்சம்மா முறைக்க
“மாவேலிக்கரகாரிக்கு இத்திரி அஹங்காரம் கூடுதலானு டா வினயா, (மாவேலிக்கரகாரிக்கு தலைக்கனம் அதிகம்டா) அழகை பார்த்து ஏமாறாதடா!” என்றார் அச்சுதன்.
“அச்சம்மா இவர் ரொம்ப பேசுறார், ஏன் அச்சச்சா இந்த தேவிகுளத்துல பொண்ணு கிடைக்காம தானே மாவேலிக்கராவுல பொண்ணு கட்டினீங்க?” என்று வினயன் அச்சம்மாவை அணைத்துக் கேட்க, ராஜீவன் இதை ஆச்சரியமாகப் பார்த்தார். அவரும் பாலாவும் இன்றும் அச்சுதனை கண்டால் பயப்படுவார்கள், இப்படியெல்லாம் பேசியதில்லை. பேரப்பிள்ளைகளுக்குரிய சலுகை போல் என்று சிரிப்போடு நினைத்தார்.
“நல்லா கேளுடா” என்று அச்சம்மா கணவரை கிண்டலாக பார்க்க
“தடியெடுத்தேன்னு வைடா, அவ்வளவுதான்! எனக்குப் பொண்ணு கிடைக்காம நான் போனதை பார்த்தியா? என் ஜெயன் வரட்டும் அவன் உன்னை பேசிப்பான், தெம்மாடி!” என்று வினயனை திட்டினாலும் அச்சுதனுக்கும் அவன் பேச்சில் சிரிப்பே.
ராஜீவன் மெதுவாக “இருந்தாலும் உனக்கு தைரியம் வினய், விஜயன் விஷயத்துல ப்ளான் போட்டு பொய் சொன்னதே நீதானே? உன்னை எங்கச்சன் எப்படி ஒன்னும் சொல்லாம விட்டாரு, பாவம் டா ஜெய்! உங்கச்சனும் அவனை அடிச்சான், எங்கச்சனும் பையனை திட்டிட்டார், நீ எப்படிடா எஸ்கேப் ஆன?” என்று கேட்க, வினயன் அவரை முறைத்தான்.
“என்ன மிலிட்டரி என்னை மாட்டி விட பார்க்குறீங்களா?”
“என்னடா பேசுறீங்க?” என்று அச்சுதன் அதட்டலாகக் கேட்டவர்
“டேய் வினயா! நான் நிஜமா கேட்கிறேன், அச்சச்சன் உனக்குப் பொண்ணு பார்க்கவா? உன்னை கொஞ்ச ஒருத்தி வந்துட்டா நீ மினின்னு இந்த கிழவியைக் கொஞ்ச வேண்டியிருக்காது” என்றார்.
“என் அழகு அச்சம்மாவை கிழவின்னா சொல்றீங்க அச்சச்சா? எனக்கென்னமோ அச்சம்மாவை நான் கொஞ்சுறது பொறுக்காம நீங்க பேசுறீங்க தோணுது” என்றான். அச்சுதன் கடுப்பானவர் சுவரில் சாய்த்து வைத்திருந்த அவர் தடியை எடுத்து லேசாக வினயனின் தோளில் அடிக்க
“அப்போ உண்மைதான்!” என்றான் அப்போதும் அடங்காது.
“ஏடா வினயா? அவர் கேட்கிறார்ல சொல்லு. நான் உனக்குப் பொண்ணு பார்க்கவா? இந்த விஜயனும் ஜெயனும் அவனுங்க இஷ்டத்துக்குப் பார்த்துக்கிட்டாங்க. நீ சொல்லு, உனக்கு எப்படி பொண்ணு வேணும்?” என்று அச்சம்மா ஆவலாகக் கேட்க
“வினயா! மினி கேட்கிறா இல்ல, சொல்லுடா” என்று அச்சுதனும் கேட்க
“அச்சோ! எனக்கு இப்போ கல்யாணமெல்லாம் வேண்டாம் அச்சச்சா, நாலு வருஷம் போகட்டும். நான் கொஞ்ச நாள் ஜாலியா இருக்கேன், அதுக்கு அப்புறம் சொல்றேன் அச்சம்மா அளவு இல்லைனாலும் சுமாரா ஒரு அழகியை எனக்குப் பாருங்க.” என்றான்.
“தமிழ்ப்பொண்ணா மலையாளியா?” ராஜீவன் கேட்க
“தமிழ் பேசுற கேரளப்பொண்ணு. எனக்கு மொழிப்பற்று அதிகம்! ஏற்கனவே ஒருத்தன் காஞ்சிக்கும் தேவிகுளத்துக்கும் பறந்துட்டு இருக்கான், நான் டயர்ட் ஆகிடுவேன் மாமா. அச்சச்சா இந்த தொடுபுழா, அடிமாலின்னு நமக்கு பக்கமா பாருங்க” என்றான்.
“குசுருதியானு டா வினயா நீ! “(சேட்டைக்காரன்) என்ற அச்சம்மா பூஜை கூடையிலிருந்து சந்தனமும் குங்குமம் எடுத்து வினயனுக்கு வைத்துவிட, சமத்தாக நின்றான்.
“உனக்கு மனசு பிடிச்ச மாதிரி நல்ல பொண்ணா அமையும் டா என் சக்கர” என்று அவன் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தார் அச்சம்மா. வினயனும் பதிலுக்கு அவர் கன்னத்தில் முத்தமிட்ட, ஜெயனிடமிருந்து அவனுக்கு அழைப்பு.
“ஆஹ்ன், ஜெய் வந்துட்டேன்” என்றவன் “ஜெய் உங்களுக்கு தைலம் கொடுக்க சொன்னான் அச்சம்மா, அதை மறந்துட்டேன்” என்றவன் அவரிடம் கொடுக்க
“சாப்பிட்டு போடா” என்றார் ராஜீவன்.
“இப்ப சாப்பிடலன்னா என் அண்ணி என்னை நாளைக்கு பழைய சோறு சாப்பிட விட்டுடுவா மாமா, நான் கிளம்புறேன். அச்சம்மா பை, அச்சச்சா வரேன்” என்று அவன் துள்ளலாக வீட்டுக்குப் போக, அதுவரை என்ன பேசினோம் என்பது கூட மறந்த நிலை ராஜீவனுக்கு. மனது மிகவும் லேசாக இருந்தது.
பத்மினி மகனுக்கு உணவு பரிமாற, அம்மாவோடு பேசியபடி நிறைவாக உண்டார் ராஜீவன். உறங்க சென்றதும் அறையின் தனிமையில் மீண்டும் எண்ணங்களின் அணிவகுப்பு, என் மகள் எந்த குறையுமின்றி பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற தவிப்பு அவரை ஆட்கொள்ள, வெகு நேரம் கழித்தே உறக்கம் தழுவியது.
அடுத்த நாள் விடியற்காலையில் வழக்கம்போல் எழுந்துவிட்டார். உறக்கம் வராது போக, அறையை விட்டு வெளியே வர அச்சுதன் வாசலில் நின்றார். அவரும் அதிகாலை எழும் பழக்கமுடையவர். மகன் வரவும் பார்த்தவர் மனைவி உறங்குவதால் கதவை பூட்டினார். அச்சுதன் தெருவில் இறங்கி நடக்க, ராஜீவன் அவரிடம்
“சாயா குடிக்கவா அச்சா?” என்று கேட்க அச்சுதன் ஆமாமென்றிட ராஜீவனும் தந்தையோடு நடந்தார். ராஜீவனிடமிருக்கும் அத்தனை நல்ல பழக்கங்களுக்கும், அவரின் இன்றைய பதவிக்கும் காரணம் அச்சுதனே! எல்லாவற்றிலும் நேர்த்தி, ஒழுக்கம் என்று மகனை சிறு வயதிலிருந்தே பழக்கியதால் இராணுவத்தின் கட்டுப்பாடுகள் எல்லாம் ராஜீவனுக்கு அத்தனை கடினமானதாக இல்லை. இப்போதெல்லாம் அவருக்கு ஊரை, உறவுகளை மனது தேடியது, மொத்தமாக விலகியிருந்த போது பிரிவு வலிக்கவில்லை.
அப்பாவும் மகனும் எதுவும் பேசவில்லை.
“பத்ரோஸ், ரெண்டு சாயா” என்று சொல்லி அச்சுதன் தேநீர் கடை பெஞ்சில் அமர, “பத்ரோஸ் மூணு” என்றபடி பாலச்சந்திரனும் வந்தார். அவர் வழக்கமாக அதிகாலை தேனீர் அங்குதான் அருந்துவார்.
‘வைஷாக சந்த்யே…” என்று தாஸேட்டனின் குரலில் பாடல் வானொலியில் ஒலிக்க, ராஜீவன் பாலச்சந்திரனின் கண்கள் நினைவேக்கத்தில் சந்தித்தன. புகையாய் பனி படர்ந்த அந்த மெல்லொளிப்பொழுதில் சூடான தேனீர் அவர்களின் சுவையான இளமைக்கால நிகழ்வுகளை நினைவுகளாய் கொண்டு வர, அமைதியாக தேனீரை பருகினர்.
ராஜீவன் அச்சுதன் நடையின் தடத்தைப் பின்பற்றி நடந்த நாட்கள், அவர்கள் ஊரில் உறவுகளில் அப்போது அரசாங்க உத்தியோகம், அதிலும் நாட்டுக்கான பணி செய்தது ராஜீவனே, அதில் ஏக பெருமை அச்சுதனுக்கு. காலையில் அச்சுதன் எஸ்டேட் பார்க்க செல்லும் முன் மகனை படிக்க எழுப்பி விடுவார், ராஜீவன் அப்பாவோடு நடந்து இதே பத்ரோஸின் அப்பா ‘அல்போன்ஸ்’ நடத்திய கடையில் தேனீர் குடிப்பார். அச்சுதன் எஸ்டேட் செல்ல, ராஜீவன் மீண்டும் வீடு சென்று படிக்க உட்கார்ந்துவிடுவார். அதெல்லாம் இப்போது மனதில் ஓடியது.
“சில பழக்கமெல்லாம் ஆயுசுக்கு மறக்காதில்லடா பாலா?” என்று ராஜீவன் மெல்ல கேட்க
“சூரியனுக்கு முன்னாடி எந்திரிக்கிற நம்ம அச்சன் பழக்கத்தைதானே சொல்ற?” என்று சிரித்த பாலா “நம்ம எல்லாம் நம்ம அப்பாவோட எந்திரிச்சிடுவோம், இப்போ எல்லாம் பசங்க எங்கடா அப்படி இருக்காங்க? என் வீட்டு சின்ன எருமமாடு ஏழு மணி தாண்டிதான் எழுவான், ராக்கோழி!” என்று சிரித்தார்.
“அவனா? டேய் அவன் என்ன பேச்சு பேசுறான் தெரியுமா? நேத்து அச்சனை பயங்கரமா கிண்டல் பண்ணிட்டான், நான் இவர் கோவப்படுவார் பார்த்தா சிரிக்கிறார். இந்த வயசுல நீ கூட அவர் கிட்ட அப்படி பேச மாட்ட” என்று ராஜீவன் நேற்று நடந்ததை சொல்ல
“ஜெய் அதிகம் பேசமாட்டான், சின்னவன் எல்லாரோடவும் சீக்கிரம் பேசிடுவான். அச்சனை பார்த்தா அவனுக்குக் கொஞ்சம் பயம், ஆனா இவர் சின்ன பையன்னு அவனை விட்டுடுவார். உனக்குத் தெரியுமாடா உன் மேல இருந்த கோவத்துல என்னோட பேசாம இருந்தவர், அவங்கிட்ட மட்டும் பேசினார். எல்லாம் பேரப்பசங்கனு பாசம்” என்று பொறுமினார் பாலச்சந்திரன்.
“அடப்பாவி! நீ அவனுக்கு மேலடா” என்று சிரித்த ராஜீவன் “ஊர்மி நல்லாயிருக்காளா?” என்று விசாரிக்க
“ஏண்டா இன்னும் ஊர்மி எந்திரிக்கவே இல்லை, நேத்து நைட்தானேடா பார்த்த? அநியாயம் பண்ணாதடா, என் மகன் மருமகளை கவனமா பார்த்துப்பான்” என்ற பாலா
“அப்படி அக்கறையிருந்தா இங்கயே தங்கி என் மருமகளை பாரு” என்றார்.
ராஜீவன் பதில் சொல்லவில்லை. அச்சுதன் தேனீருக்குப் பணம் கொடுத்து வீடு நோக்கி நடக்க, ராஜீவனும் பாலாவிடம் சொல்லிவிட்டு அப்பாவோடு நடந்தார்.
“அச்சா! நான் இந்த முறை ரிசைன் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று சொல்ல, அச்சுதனின் நடை நின்றது. மகனுக்கு அந்த வேலை எத்தனை பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும். ராஜீவனை உயிர்ப்போடு வைத்திருக்கும் வேலை அது, அவரின் செர்வீஸ் இருக்கும்வரை செய்யவே அவருக்கு விருப்பம், ஆனால் அம்மா ஊர்மிளா என்று அவர்கள் யோசனையில் நேற்றே இப்படியொரு முடிவுக்கு வந்தார். ஆனாலும் மனதார எடுத்த முடிவல்ல!
அச்சுதனுக்கு மகன் மீது கோபமிருந்தாலும் சில மாதங்களாக பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளவில்லை, அவரின் ஆதங்கத்தை வார்த்தையால் காண்பித்தவர் ஓய்ந்து போய்விட்டார். மகனுக்கான கோபத்தை மகனிடமே காட்டினார் மனிதர்.
மகன் முகத்தை ஊன்றி பார்த்தவர், “பிடிச்சவளோட வாழத்தான் முடியல, பிடிச்ச வேலையை செர்வீஸ் இருக்க வரை செய் ராஜீவா” என்றபடி முன்னால் நடந்து செல்ல, ராஜீவன் அரை மனதாக எடுத்திருந்த முடிவை அழித்தார்.
வீட்டுக்குள் நுழையும்போது “உன் அம்மா சொல்றானு முடிவெடுக்காத! எதையும் முழுசா செய்யணும், அதுவும் நம்ம நாட்டுக்கான கடமை அது!” என்றார்.
“சரிங்கச்சா” என்ற ராஜீவன் இரண்டு நாள் இருந்துவிட்டு மீண்டும் பணிக்கு சென்றார்.
ஊர்மிளாவுக்கு ஏழாம் மாதம் தொடங்கவும் வளைகாப்பு நடத்தி காஞ்சிபுரம் அழைத்து சென்றுவிட்டனர், இடையில் ராஜீவனுக்கு சுதந்திர தின விழாவில் ‘பரம் வீர் சக்ரா’ விருது வழங்கப்பட, ஊர்மிளா ஆசைப்பட்டாள் என்று ஜெய் அவளை டெல்லி அழைத்துப்போனான். வயதின் காரணமாக அச்சுதனாலும் அச்சம்மாவாலும் போக முடியாது போக, பாலச்சந்திரனும் பிரபாகரனும் நண்பனுக்காக சென்றனர். இடையில் டேனியல் தாத்தா பேத்தி மாசமாக இருப்பது கேள்விப்பட்டு அவளை பார்த்து சென்றார்.
ஊர்மிளாவின் பிரசவ தேதிக்கு ஒரு வாரம் இருக்கும்போதே மனைவியோடு இருக்க ஜெய் காஞ்சி சென்றுவிட்டான். ராஜீவனும் இரண்டு நாள் முன்னதாக காஞ்சி வந்துவிட்டார், அவர் வெளியே அறையெடுத்து தங்கிக்கொள்ள ஊர்மிளா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும் வந்துவிட்டார்.
ஊர்மிளா குழந்தையை வயிற்றில் சுமக்க, அத்தனை மாதங்களும் மகளை மனதில் சுமந்தார் ராஜீவன். அவரின் பயத்தை வாய்த்திறந்து சொல்லாவிட்டாலும் முடிந்தபோதெல்லாம் ஜெய்க்கு அழைத்து ஊர்மிளாவின் நலம் கேட்டுவிடுவார். ஜெய் வெளிப்படையாக “மாமா! ஊர்மி நல்லாயிருப்பா, நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று சொல்லியிருக்க, அப்போதும் அவர் மனம் ஆறாது.
ஊர்மிளா பிரசவ அறைக்குள் சென்றுவிட, ஜெய் பாலச்சந்திரன் அருகே உட்கார்ந்திருந்தான். தேசிகனை அழைத்துக்கொண்டு ரத்னவேல் காமாட்சியைப் பார்க்க சென்றுவிட, பிரபா, ஜமுனா, மங்கை மூவரும் வீட்டினராக இருந்தனர். ராஜீவன் அந்த நீண்ட காரிடாரில் தனியாக உட்கார்ந்திருந்தார், இருகைகளும் பிணைந்திருக்க வியர்த்து போயிருந்தார். பாலா நண்பன் தனியாக இருக்கவும் அருகே வர ராஜீவனின் நிலை கண்டு அவர் பயந்தார்.
ராஜீவன் அணிந்திருந்த ஆலிவ் பச்சை சட்டை வியர்வையால் நனைந்து அடர் பச்சையாக இருந்தது.
“டேய்! என்னடா ஆச்சு? ஏன் இப்படி வியர்த்திருக்கு?” என்று பாலா கேட்க, ராஜீவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. போர்க்களத்தில் கூட பயமில்லாது இருக்கும் மனிதருக்கு இன்னும் பிரசவம் தரும் பயம் போகவில்லை, மரணம் இயற்கையானது! பிறப்போடு பிணைந்தது என்றாலும் அது யாருடையது, எப்போது நிகழ்கிறது என்பதெல்லாம் தான் மனிதனை மிகுதியாக பாதிக்கும். ராஜீவனுக்குப் ப்ளஸியின் மரணம் வலி கொடுத்தாலும் இத்தனை வருடத்தில் அதனை ஏற்றுக்கொண்டுவிட்டார்.
போர்க்களத்தில் இல்லாத இழப்புகளா? அவரால் முடிந்தவரை முன்னின்று எப்போதும் இளம் வீரர்களை பாதுகாப்பார். மகளுக்காக அப்படியொன்றை செய்ய முடிந்தால் கண்டிப்பாக செய்யும் மனிதரே! இப்போது ப்ளஸியை எல்லாம் தாண்டி மகள் நலமாக வர வேண்டும் என்பதே மிகப்பெரிய வேண்டுதலாக இருந்தது. படபடப்பாகவே இருந்தார்.
பிரபாகரனுக்கும் பிரசவம் ஒன்றும் நல்ல நினைவுகளை கொடுத்ததில்லையே, அவரும் மகளும் பேரக்குழந்தையும் நலமாக வர வேண்டும் என்று வேண்டியபடி இருந்தார். ஜெய் மனதில் பயமில்லை, அவன் அம்மாவையும் அவனின் குருவாயூரப்பனையும் நினைத்துக்கொண்டான். ஊர்மிளாவுக்கு காமாட்சியின் ஆசியால் அவள் தாத்தா ரத்னவேலின் ஆவல்படி ‘குட்டி காமாட்சி’யே பிறந்தாள்.
மருத்துவர் வெளியே வந்து விஷயம் சொல்லவும் ஜெய்யும் பிரபாகரனும் ஊர்மியைத்தான் கேட்டனர். சுகப்பிரசவமாகியிருக்க அவள் நலமாக இருப்பதை சொல்லவும் கேட்டிருந்த ராஜீவனுக்கு நிம்மதியில் கண்ணில் நீர் நிறைந்தது.
சிறிது நேரத்தில் குழந்தையைத் தூக்கி வந்து ஜெய்யிடம் கொடுக்க பூரிப்போடு மகளை வாங்கிக்கொண்டான். அவளோடு கண்ட கனவு நனவாகியிருக்க பயத்தோடு மகளைப் பிடித்துக்கொண்டான். சில நிமிடங்கள் குழந்தையை வைத்திருந்தவன் ராஜீவனிடம் சென்றான். இத்தனை மாதமாய் அவரின் தவிப்பு அறிந்த ஒருவன் என்பதால் மகளை அவரிடம் நீட்டினான்.
“மாமா, உங்க பேத்தி நல்லபடியா பொறந்துட்டா” என்று சொல்ல ராஜீவனுக்கு பேத்தியை விட ஊர்மிளாவை பார்க்க மனம் பரபரத்தது.
“வாங்குடா” என்று பிரபா சொல்ல ராஜீவன் மெல்ல பேத்தியைக் கையில் ஏந்தினார். பிரபாகரனுக்கு ஊர்மிளாவை வாங்கிய நினைவு, ராஜீவன் கையில் குழந்தையைப் பார்த்து பாலாவுக்கும் பிரபாவுக்கும் மனம் நிறைந்து போக, பிரபாகரன் புன்னகையுடன் ஜெய்யின் தோளில் தட்டினார். பேத்தியை ஏந்தியவருக்கு சொல்ல முடியாத உணர்வு, கண்ணீர் பெருக்கெடுக்க ஜெய்யிடம் குழந்தையை நீட்டியவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து நின்றார்.
மிகப்பெரிய ஆசுவாசம் அவரிடம். பாலச்சந்திரன் வந்து தோள் தொட, ராஜீவன் நண்பனை அணைத்துக்கொண்டார். பாலாவும் கண்ணீரோடு நண்பரை அணைத்தார்.
ஊர்மிளா அறைக்கு மாற்றப்பட, உறங்கிய குழந்தையைக் கண்ட ஊர்மிளாவுக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது. செவிலியர் தொட்டிலில் குழந்தையை விட்டு போக ஜெய் மனைவி பக்கமாக வந்தமர்ந்தான்.
ஊர்மிளாவின் கையைப் பிடித்த ஜெய் புன்னகையோடு பார்க்க
“தேங்க்ஸ்” என்றாள்.
“எதுக்கு?”
“என்னை அம்மாவாக்கினதுக்கு! எனக்கு அழகான பொண்ணு கொடுத்ததுக்கு” என்றதும் அவள் கன்னத்தைக் கிள்ளியவன் “கொச்சுக்கள்ளி” என்றான். பிரபாவும் ஜமுனாவும் அறைக்குள் நுழைய
“அப்பா! எங்க பொண்ணு அழகா இருக்கா இல்ல?” என்று ஆவலாய்க் கேட்க
“என் பொண்ணை விட கம்மிதான்” என்றார் பிரபாகரன்.
ஜெய் இரும ஊர்மிளா சிரித்தாள். “பார்த்தீங்களா?” என்று பெருமித பார்வை வேறு.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடி” என்று ஜமுனா மகளை அதட்ட, பிரபாகரன் பேத்தியை நின்று ரசித்தார். கண்சிமிட்டும் நேரமாய் காலம் ஓடிய உணர்வு, அவரின் ஊர்மிக்கு இப்போது குழந்தை, அந்த நினைவோடு அவர் நிற்க ஜமுனா கணவரை அதட்டினார்.
“வாங்கப்பா, ரூமுக்கு மாத்திட்டாங்க” என்றதும் பாலச்சந்திரன் ராஜீவனோடு வர பிரபாகரன் தந்தையை அழைத்து வர சென்றார். பாலச்சந்திரன் பேத்தியைப் பார்த்து
“எங்கம்மா மாதிரி இருக்கா இல்ல” என்று மகனிடம் மெல்ல சொல்ல, அவனோ “எங்கம்மா” என்றான்.
ராஜீவன் ஊர்மிளாவிடம் போனவர் மகளை பார்க்க, அவரின் தோற்றமே ஊர்மிளாவை அசைத்தது.
“நான் நல்லாயிருக்கேன்” என்றாள் புன்னகை முகமாக. ராஜீவனுக்கு அவளை அப்படி பார்க்கவும்தான் திருப்தியாக இருக்க குனிந்து ஊர்மிளாவின் நெற்றியில் முத்தமிட்டார். முத்தத்தோடு அவர் கண்ணீரும் ஊர்மியின் கன்னம் நனைத்திட
“என்னாச்சு?” என்று ஊர்மிளா கவலையாகக் கேட்க, புன்னகையோடு அவள் கன்னம் தட்டியவர் தன் கண்ணீரை துடைத்து விட்டார்.
“டேய் ராஜீவா! நீ சொல்லு என் பேத்தி எங்கம்மா மாதிரி தானே இருக்கா? இவன் சுஜா மாதிரி இருக்கா சொல்றான்” என்று பாலா கேட்க
“பொறந்த அன்னைக்கே யார் மாதிரி குழந்தை இருக்கானு சொல்ற அறிவெல்லாம் எனக்கில்லைடா” என்ற ராஜீவன் “ஊர்மி ரெஸ்ட் எடுக்கட்டும், வா” என்று அழைத்து போனார். அடுத்து ரத்னவேல், கிருபாகரன், ஊர்மியின் அத்தைகள் என்று எல்லாரும் வர வினயனும் குழந்தையைப் பார்த்துவிட்டு அன்றே தேவிகுளம் சென்றான். ராஜீவன் அடுத்த நாள் டெல்லி செல்ல வேண்டியிருக்க ஜெய்ச்சந்திரன் அவரை விமான நிலையம் அழைத்துப் போனான்.
“நானே போய்ப்பேன் சொன்னா நீ கேட்க மாட்டேங்கிற ஜெய்” என்று பேச
“அங்க ஊர்மியைப் பார்க்க எல்லாரும் இருக்காங்க மாமா, உங்களை பார்க்கிறதும் என் கடமைதான்” என்றவன் அவரை விமான நிலையத்தில் விட சில அடிகள் முன்னே எடுத்து வைத்தவர் மீண்டும் வந்து ஜெய்யை அணைத்துக்கொண்டார்.
“தேங்க்ஸ் ஜெய், நான் இழந்தது எல்லாம் உன்னால மட்டும்தான் எனக்குத் திரும்ப கிடைச்சிருக்கு, தேங்க்ஸ்டா மோனே!” என்றார் நிறைவாக.
பிரபாகரன் ஊர்மிளாவை நன்றாக பார்த்தாலும், அவள் திருமணமாகி போனால் அவளை பார்க்க கூட அவருக்கு உரிமையிருக்காது என்று பல நாள் உறக்கம் தொலைத்து தவித்திருந்தார். ராஜீவனின் காதல் ஊரை, அவர் பெற்றோரை எல்லாம் பிரிய வைத்திருக்க, ஜெய்ச்சந்திரனின் காதல் அவருக்குக் கிட்டாமல் இருந்த அத்தனையும் கொடுத்திருந்தது. ராஜீவனின் தனிமை, வெறுமை, ஏக்கம் எல்லாவற்றுக்கும் விடையாக ஜெய்ச்சந்திரனின் ‘காதல்’.
பிரபஞ்சத்தில் யாரின் சந்தோஷம் யாரிடம் இருக்குமென்று யாருக்கும் தெரியாது, ‘நாம்’ நமக்கானவர்கள் மட்டுமில்லை! பிறருக்காகவும்தான்! நம்மில் யாரின் நிம்மதியோ, ஆனந்தமோ அடைப்பட்டிருக்கலாம்! பிறருக்கான ஆறுதல், தேடல், காதல், விடுதலை நம்மிடம் இருக்கலாம். பிரியத்தை, பிரியமானவர்களை பிரிந்தாலும் அது வேறொரு வடிவமெடுத்து நம்மை என்றாவது சேரும்! இந்த பிரபஞ்சம் அதனை நம்புபவர்களுக்கு வேண்டியதை தானாகவே கொடுத்துவிடும்.
பல வருடங்களுக்குப் பிறகு ராஜீவன் மனம் நிறைவை மட்டுமே சுமந்திருக்க, அவர் போவதை புன்னகையுடன் பார்த்தான் ஜெய்ச்சந்திரன்.