“அப்புறம் எத்தன நாள் இருக்க போறீங்க?” என்று ரத்னவேல் ஜெய்யிடம் கேட்க
“ஊர்மி முன்னாடியே சொல்லலயா தாத்தா? நாளைக்கு நைட் கிளம்புறோம்” என்றதும் ரத்னவேல் முகம் சுருங்கியது.
“என் பேத்தியை என் வீட்ல தங்க சொல்ல இவன் பெர்மிஷன் கொடுக்க வேண்டியிருக்கு” என்று கடுப்பாக முணுமுணுத்தார்.
“அப்போ கூட பேரனை தங்க சொல்ல மாட்டீங்க?” ஜெய் பதிலுக்குக் கேட்க
“நீதான் பெரிய துரையாட்டாம் வேலையிருக்குனு மாமனார் வீட்ல வந்து தங்க மாட்டேங்கிறியே, நான் தப்பு பண்ணிட்டேன், இந்த தேசிகன் பய பேச்சைக் கேட்டு அவ்வளவு தொலவுல பேத்தியைக் கட்டிக்கொடுத்திருக்கக் கூடாது!” என்றதும் ஜெய் சிரித்தவன்
“ப்ரண்ட் தாத்தாவை திட்டாதீங்க தாத்தா! நல்ல நண்பன் நல்லதுக்குத்தான் சொல்வாங்க” என்றவன் கண்கள் ஊர்மிளாவை தேட, அப்பாவின் பேச்சில் முறைத்த கிருபாகரன்
“ஜெய்! ஊர்மி ரூம்ல இருக்கா போப்பா” என்றார்.
“சும்மா அவனை வம்பிழுக்காதீங்கப்பா” என்று அப்பாவை அதட்ட, ஜெய் பத்து நாட்கள் கழித்து மனைவியைப் பார்க்க ஆர்வமாக சென்றான். ஊர்மி அவர்களின் பத்துமாதம் நிரம்பிய மகனை மரத்தொட்டிலில் போட்டு ஆட்ட, இவன் வருகையுணர்ந்து திரும்புவதற்குள் ஜெய் மனைவியை பின்னோடு அணைத்தான்.
“ஊர்மி!” என்றவனின் குரல் ஏக்கமாய் அவளைத் தொட்டது. ஊர்மிளாவுக்கோ நாளை ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற கவலை. சர்வேஷின் திருமணத்திற்காக ஊர்மிளா வந்திருந்தாள், ஜெய் திருமணத்தன்று வந்து போனவன் அவள் ஆசைக்காக பத்து நாட்கள் தங்கவிட்டான்.
“என்ன சொல்றான் குட்டி?” என்று எக்கி குழந்தையைப் பார்த்தவன் அவன் உறங்குவது கண்டு குரலை இன்னும் மெல்ல தாழ்த்தி
“சுஜிம்மா எங்க?” என்றான். அவன் காதோரம் பேசியதில் கூசிட ஜெய்யின் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள்
அவளை முறைத்தபடி கட்டிலில் உட்கார “அவ விஷால்ணா கூட வெளியே போயிருக்கா ஜெய்” என்ற ஊர்மிளா மகனை ஒரு முறை மெல்ல ஆட்டிவிட்டு கணவன் பக்கம் வந்தமர்ந்தாள்.
“அங்க தாத்தா, பாட்டி எல்லாம் ஓகேவா?”
“எல்லாரும் நல்லாயிருக்காங்க, அதான் அடிக்கடி போன் பேசுறியே அப்புறம் என்ன?”
“போன் பேசினாலும் நேர்ல பார்க்கிற மாதிரி இருக்காதே” என்றதும்
“ஒஹ்… பின்னே…!” என்று ராகமிழுத்தான்.
“என்ன?” என்றவளின் முகத்தை அருகே இழுத்தவன் மூக்கோடு உரசி
“நேர்ல பார்க்கிற மாதிரி இருக்காதுனு தெரிஞ்சா சரிதான். நம்ம வீடே நீயில்லாம நல்லாயில்ல ஊர்மி, வினய் அப்பா கூட புலம்பிட்டே இருந்தாங்க” என்றான். புன்னகைத்த ஊர்மி
“அதான் நாளைக்குக் கிளம்பப் போறோமே ஜெய்” என்றாள்.
“அதுக்குத்தான் வெளியே உன் தாத்தா என்னை வில்லன்’னு சொல்லி முறைக்கிறாரே, நானே பத்து நாளா என் பொண்டாட்டி புள்ளைங்களை பார்க்காம இருக்கேன். அவருக்குக் கொஞ்சமாச்சும் கவலையிருக்கா?” என்று பேச
“அப்படியொன்னும் கஷ்டப்பட்ட மாதிரி தெரியலயே, தம்பியோட ஜாலியா படம் பார்க்கிறது, ஃபுட்பால் விளையாடுறதுனு ஒரே குஷிதான் போல…இந்த வினயன் என்னை வில்லி சொல்லும்போது ஜாலியா இருந்ததா? எங்க தாத்தா சொன்னா மட்டும் ஜெய்க்குக் கோவம் வருதா?” என்று ஊர்மிளா கணவன் தோள் சாய்ந்து கேட்டாள்.
“எண்ட அம்மே! அவனுக்கென்னடி? அவன் வேணும்னே உன்னை வம்பிழுக்க எல்லாத்தையும் ஸ்டேட்டஸ் போடுறான். போர் அடிக்குது ஜெய்னு அவனே கூப்பிடுறான், அப்புறம் மாட்டியும் விடுறான்” என்று ஜெய் புலம்பியவன் ஊர்மியின் கன்னம் பிடித்து
“அம்மா இல்லாம போனதும் எங்க வீடு வீடாவே இல்லை ஊர்மி, நாங்க எங்க போய்ட்டு வந்தாலும் வீட்ல அம்மா இருக்காங்கனு ஒரு ஃபீல் இருக்கும். வீட்டுக்குள்ள போனதும் எங்களை கூப்பிட அவங்க இருப்பாங்க, அவங்க இல்லாம போனதும் அந்த ஃபீல், அது கொடுத்த தனிமை… எங்களுக்கு ரொம்ப கஷ்டமான காலம், நீ வந்த பின்னாடி மனைவியா, மருமகளா, அண்ணியா, ப்ரண்டா நீ எங்களுக்காக வீட்ல காத்திருப்ப.. வீட்டுக்குள்ள நுழையும்போதே உன் குரல் கேட்கிறது.. அது வேற ஃபீல்மா.. தேங்க்ஸ்” என்றான் ஆத்மார்த்தமாக.
இதை எத்தனை முறை சொல்லியிருப்பான் என்று கணக்கே இல்லை. ஜெய்யைப் பொறுத்தவரை பிடித்தால் சொல்ல வேண்டும், இருக்கும்போதே சொல்ல வேண்டும். அவன் சலிக்காது சொல்ல, இவளுக்கு நித்தமும் அவனை காதலிக்க காரணங்கள் கூடிப்போகும். காதல் அது நித்தம் தொடரும் பயணமல்லவா?
“அது சரி, ஊருக்குப் போறதுக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” என்று ஜெய் விசாரிக்க ஊர்மிக்குப் பிறந்த வீட்டை விட்டு பிரிய மனமேயில்லை. இரண்டாவது குழந்தை பிறந்தபோது நான்கு மாதம் வரை இங்கு இருந்தவள் இடையில் ஆறு மாதங்கள் வரவில்லை. பிரபாவும் ஜமுனாவும் மகளை சென்று பார்த்தனர், குழந்தைகளுக்கு பயணம் ஒத்துக்கொள்வதில்லை, அவளுக்குப் பெற்றவர்களைப் பார்க்க ஏக்கமிருந்தாலும் பெற்றவளாக பிள்ளைகள் முன்னே நிற்க, அவள் அவா பின்னே சென்றுவிடும்.
ஊர்மிளா “எல்லாம் ரெடி” என்றிட ஜெய் பயணம் செய்த களைப்பில் அப்படியே மெத்தையில் சாய்ந்தான். அவன் போனை நீட்டி, “நாளைக்கு போக ட்ரெயின் டிக்கெட்ஸ் எல்லாம் சரியா இருக்கா பார்த்திடு” என்றவன் கண்களை மூடிட ஊர்மி உற்சாக குரலில் “ஜெய்ய்ய்” என்று அவன் மீது விழுந்தாள்.
“ஏடி! ஹா” என்று அவள் தீடீரென விழுந்ததால் கத்தியவன் ஊர்மிளாவின் இடையைப் பிடித்துக்கொண்டான்.
“வில்லன் தான் நீங்க! இன்னும் நாலு நாளைக்கு அப்புறம் டிக்கெட் எடுத்து சொல்லாம எங்களை எல்லாம் டென்ஷன் பண்றீங்க” என்றவள் குரலில் அவ்வளவு சந்தோஷம், நாளை செல்ல வேண்டும் என்று மனதினை தேற்றி வைத்தவளுக்கு இன்னும் நான்கு நாட்கள் என்றால்? அதிலும் ஜெய்யும் உடனிருக்கிறான் என்பதால் ஊர்மி உவகையில் கணவனை அணைத்துக்கொண்டாள்.
“இருந்தாலும் நீ புடவையே கட்டியிருக்கலாம் ஊர்மி” என்று ஜெய் ஊர்மிளாவை அணைத்து அவள் கழுத்தோரம் முத்தமிட்டு கிறக்கமாய் சொல்ல
தன் மெட்டர்னிட்டி மேக்ஸியைப் பார்த்தபடி “எதுக்கு?” என்று கேட்டவள் “வேண்டாம் வேண்டாம்.. நீங்க ஏ ப்ளஸா பேசுவீங்க”என்று தடுத்தாள்.
“பேச மாட்டேன்” என்றவன் அத்தனை நாள் ஏக்கத்தை, தவிப்பை எல்லாம் அவளிடம் காட்ட பார்க்க
“ஊர்மி! சுஜி வந்துட்டா” என்று ஜமுனா குரல் கொடுத்தார். ஜெய் பெருமூச்சுடன் எழுந்தவன் ஊர்மிளாவை இறுக்கமாக அணைத்து விடுவித்து
“இதுக்கெல்லாம் நம்ம வீடுதான் பெஸ்ட்” என்றதும்
“ஓஹ், அப்போ இங்க யாரும் புள்ள பெத்துக்கலையா? எங்க தாத்தாவுக்கு நாலு பசங்க, ரொம்ப பண்ணாதீங்க” என்றவளை மீண்டும் தன்னை நோக்கி இழுத்தவன்
“உன் தாத்தாவை பீட் பண்ண எனக்கு ஆசைதான், உனக்கு ஓகேவா” என்று கண்சிமிட்ட
“இருக்க புள்ளைங்களை முதல்ல மேய்ங்க” என்று உதடு சுளித்தவள் “தேங்க்ஸ் ஜெய்” என்று அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள்.
“ஜெய் இப்போ ஃபீரியா நீங்க? வெளியே போய்ட்டு வரலாமா? பிந்துவுக்கு கோரியர் போட புடவை எடுக்கணும்” என்று கேட்டவள் அவன் கண்கள் கண்டு
“வரட்டும் வரட்டும், டேய் உன் மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்குமோ நாலு நாள் அதை வாங்கிப்போடு. அவனே எப்போவாச்சும்தான் தங்க வரான்” என்ற ரத்னவேல் ஏழு மணிக்கு முன் இரவு உணவை முடித்துவிடுவதால் உறங்க போய்விட்டார். ஊர்மிளா உடை மாற்றி பிரபாகரனுடன் வெளியே சென்றுவிட, ஜெய் மகளோடு தம்பிக்கு அழைத்து வீடியோ கால் பேசினான்.
இரவு பிள்ளைகள் இருவரும் உறங்கிவிட, ஊர்மிளாவின் அறையில் இருக்கும் பால்கனியில் கால் நீட்டியபடி ஜெய் உட்கார, அவனருகில் ஊர்மி.
“சர்வேஷ் மாமா ரொம்ப சந்தோசப்பட்டார் ஜெய்.” என்று ஊர்மி சொல்ல, ஜெய் அவள் பேசுவதை புன்னகையோடு கேட்டான்.
இரண்டு வருடங்களுக்கு மேல் அவள் சர்வேஷிடம் பேசுவதில்லை, அவனாக பேசினாலும் பழைய ஒட்டுதல் உரிமை கிடையாது. அத்தனை வருடங்கள் ஊர்மிளா வாழ்ந்த வாழ்வை அவன் வார்த்தைகள் பொய்யாக்கிவிட்ட கோபம், அதனால் அவள் உணர்ந்த அழுத்தம் என்று சர்வேஷிடம் பேச பிடிக்கவில்லை. திருமணத்திற்குப் பின் அவள் இயல்பாகிவிட்டாலும், அவளின் தனிப்பட்ட வாழ்க்கை, குழந்தை, குடும்பம் என்று அவனுடனான பேச்சுவார்த்தை குறைந்து போனது.
“அவர் சந்தோஷப்படுறது இருக்கட்டும், நீ சந்தோஷமா இருக்க தானே?” என்ற கணவனின் கேள்வியில் ஒற்றைக் கையால் அவன் கன்னத்தைப் பிடித்திழுத்தவள்
“எனக்கு அந்த காமாட்சி எந்த குறையும் வைக்கல ஜெய், நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். முன்னாடி சர்வேஷ் மாமா மேல நிறைய கோபம், வருத்தம். அவராலதான் எல்லாம்னு, பட் எனக்கு விஷயம் தெரிய அவர் ஒரு காரணம்னு புரியறப்போ கோவம் போச்சு. பழையபடி பேசிக்கிட்டோம்” என்றாள்.
நியாயங்களை நிலை நிறுத்துவதும் எதார்த்தங்களை ஏற்றுக்கொள்வதும் எல்லா நேரமும் எல்லாருக்கும் சாத்தியப்படுவதில்லை, ஊர்மிளா, அச்சச்சன் எல்லாருக்கும் அப்படியே! இப்போதும் ஊர்மிளாவுக்கு செய்ய முடியாததை செய்ய நினைத்ததை எல்லாம் அவள் மகளுக்கு செய்து அச்சச்சனும் அச்சம்மாவும் மகிழ்கின்றனர், ஊர்மி அன்பாக, பாசமாக இருப்பாள். ஆனால் உரிமையிருக்காது! மூன்று வருடங்களில் அது அச்சச்சனுக்குப் புரிந்தது, இருந்தும் அவள் மகளுக்கு உரிமையாக எல்லாம் செய்வார். ஜெய் கூட
“சின்ன குழந்தைக்கு இவ்வளவு ஏன் அச்சச்சா?” என்று கேட்டால்
“என் பேத்திக்கு செய்ய முடியல, ஏன் உன் பொண்ணுக்கு செய்ய எனக்கு உரிமையில்லையா?” என்று கோபம் கொள்பவர்
“இவ வளர்ந்து நிக்குறப்ப எனக்கு ஆயுசு இருக்குமா தெரியாது, அதான் இப்பவே செய்றேன்” எனும்போது ஜெய்யால் மறுக்க முடியாது. ஊர்மி எதாவது கேட்டாலும் என் பேரன் பொண்ணுக்கு செய்றேன் என்று சொல்லிவிட, அவளும் பேச முடியாது.
“கிறிஸ்மஸ்க்கு தாத்தா கூப்பிட்டாங்க ஜெய், உங்களுக்கும் கால் பண்றேன் சொன்னார். மேத்யூ அங்கிள் கூட பேசினார் தெரியுமா? அவரும் கூப்பிட்டார்” என்றிட
“அங்கிள் எனக்கும் பேசினார் ஊர்மி, போய்ட்டு வருவோம்” என்றான் ஜெய். டேனியல் அச்சுதனை போல் உரிமையெல்லாம் கேட்பதில்லை, மகளில்லாத அவருக்குப் பேத்தி ஆறுதல்! வாரம் ஒரு முறை பேசிவிடுவார்.
ஊர்மிளாவுக்கு முதல் குழந்தை பிறந்த போது காஞ்சிப்புரத்துக்கு மகனோடு வந்து பார்த்து சென்றார், மேத்யூவால் அப்பாவை போல் சட்டென்று உரிமையோ பாசமோ காட்ட முடியவில்லை. ஆனால் அப்பாவுக்காக வந்தார், இப்போது சகஜமாக சில பேச்சுகள், மகளே இல்லையென்று வாழ்ந்தவருக்குப் பேத்தியின் வரவு என்பது பாலைவன தூவலே!
இருக்கும் வரை அந்த உறவை கொண்டாட நினைத்தார், மற்றபடி கடந்து சென்ற காலங்கள் மகனுக்கும் மகளுக்கும் நெடுந்தூரமாக அமைந்ததை உணர்ந்தவர் மேத்யூவை எதற்கும் கட்டாயப்படுத்தியதில்லை. காஞ்சிபுரம் வந்தபோது ரத்னவேல் பற்றி கேள்விப்பட்ட பின் ஊர்மிளாவிற்கு தங்கள் உறவெல்லாம் அவசியமில்லை, பணத்துக்காக என்று அவர் நினைத்தது எல்லாம் தவறு என்று மேத்யூ உணர்ந்தாலும் ராஜீவனை இன்றும் அவரால் மன்னிக்க முடியவில்லை. ஏனோ அந்த காதல் இல்லையென்றால் அவரின் தங்கை நன்றாக இருந்திருப்பார் என்ற எண்ணம், அதே நேரம் ஊர்மிளாவோடு இயல்பான பேச்சுவார்த்தை உண்டு. அதனாலயே அவர் அழைக்கவும் ஜெய் காயம்குளம் அழைத்துப்போகிறேன் என்றான்.
வாழ்க்கையின் அர்த்தம் வாழ்தலில் இருக்கிறது, சில நேரம் அர்த்தங்களை நாம் தேட வேண்டும், சில நேரம் அதுவே தேடி வரும். ஊர்மிளாவுக்கு அதுவே தேடி வந்தது, அவள் பிரபாகரன் ஜமுனாவின் சந்தோஷம், டேனியல் தாத்தாவின் ஆறுதல், ராஜீவனின் வாழ்க்கை, ஜெய்யின் காதல்! இப்போது அவள் அந்த அர்த்தத்தை உணர்ந்ததால் எல்லாரையும் புரிந்து நடந்தாள், அரவணைத்து போனாள். ஊர்மிளா என்றால் இந்திரஜாலமல்லவா?! அவள் அத்தனை பேரின் வாழ்க்கைக்கும் அர்த்தமாய் ஆறுதலாய் மாயம் செய்தாள்! ஜெய்யை நிறைய நிறைய காதல் செய்தாள்!