அடுத்த சில மணி நேரங்களில் அப்பா, அம்மா, கணவனோடு ஊர்மிளா மருத்துவமனை சென்று பரிசோதித்து வந்தாள். ஜமுனா காலை வந்ததுமே மகளிடம்
“அம்மாவுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம்னு உனக்குத் தெரியும்ல ஊர்மி, இல்லாததோட அருமை அப்படியெல்லாம் சொல்லி உன்னை கன்வின்ஸ் பண்ண மாட்டேன். ஆனா உனக்கு உடம்பு நல்லாயிருந்தா இன்னொரு குழந்தை பிரச்சனையில்லைதானே? நீங்க இந்த நேரம் எதிர்ப்பார்க்கல, அவ்வளவுதானே? சுஜி இந்த வருஷம் ஸ்கூல் போய்டுவா, அப்புறம் கரன் மட்டும்தானே?” என்று பேசிட
“அம்மா! நான் அதெல்லாம் யோசிக்கல, எனக்கு ஷாக் அவ்வளவுதான்! ஒரு வாரமா உடம்பும் ரொம்ப முடியல, என்னமோ இவங்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறதுனு ஒரு டென்ஷன், அப்புறம் இப்போதானே கரன் பொறந்தான், அதுக்குள்ளன்னா எல்லாரும் எதாவது சொல்லுவாங்க” என்று தயங்கிட
“நீ இன்னும் நாலு புள்ளைங்க பெத்தா கூட பார்க்க நமக்கு வசதியிருக்கு, நம்ம வீட்டாளுங்க இருக்காங்க, யாரு என்ன சொன்னா என்னடா? நம்ம வீட்டை தவிர யார்கிட்டயும் இப்போ சொல்ல வேண்டாம்! நம்ம சொந்தக்காரங்க எனக்கு அபார்ஷன் ஆனப்போ அத்தனை பேசினாங்க, அவ்வளவு அட்வைஸ். உடம்பாலும் மனசாலும் எல்லா வேதனையும் அம்மாவுக்குத்தானே? உங்கப்பா லீவ் முடிஞ்சு போய்டுவார், சரின்னு அவரோட போய் இருந்து மறுபடி உண்டானேன், ட்ராவல் எல்லாம் செய்யக் கூடாது சொன்னதால் உங்க அப்பா கூடவே இருந்தேன். அத்தனை கவனமா இருந்தும் இருக்கக் கூடாதுன்னா இருக்காது ஊர்மி! ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் சொல்வாங்களே அப்படி!”
“என் பொண்ணுக்குக் கடவுள் அந்த வரத்தைக் கொடுத்திருக்கான் நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்ற ஜமுனாவின் கண்களில் நீர். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இழந்ததன் வலி தீராதே! அதை மீறிய சந்தோஷம் இருக்கலாம், ஆனால் இழப்பு இழப்புதான்! அதற்கு ஈடு கிடையாது! என்பது ஊர்மிளாவுக்கும் புரிந்தது.
“அண்ணனுங்க இருந்தாலும் எனக்கு தம்பி தங்கச்சிங்க இல்ல, என் பொண்ணுக்கு எல்லாரும் இருப்பாங்க இல்லம்மா” என்ற மகளின் பேச்சில் ஜமுனாவும் புன்னகைக்க, அம்மாவின் கன்னத்தைத் துடைத்து முத்தமிட்டாள் மகள்.
மருத்துவரிடம் சென்று வந்ததும் பாலச்சந்திரன் அச்சச்சனிடமும் அச்சம்மாவிடமும் சொல்ல, பத்மினி பேத்தியைப் பார்க்க ஓடி வந்துவிட்டார். அவரும் “யார்கிட்டயும் சொல்லாத மோளே” என்று பேத்திக்குத் திருஷ்டி எடுத்தார். அந்தி நேரத்தில் சுஜாதாவை அழைத்துக்கொண்டு அரக்க பறம்பில் வீடு சென்றான் வினயன், அங்குதான் இருவருக்கும் விளையாட்டு. மகனை அம்மாவிடம் விட்டவள், தேனீர் கோப்பையோடு ஆம்பல் குளத்தினருகே அமர்ந்திருந்த அப்பாவிடம் சென்றாள்.
பிரபாகரன் அலுவலக விஷயமாக யாரிடமோ பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள் தேநீரை நீட்டிட
“உன் கையால டீ குடிச்சு எத்தனை நாளாச்சு ஊர்மி” என்றபடி வாங்கினார்.
அப்பாவின் தோளில் சாய்ந்தவள் “உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறேன்லப்பா?” என்று ஊர்மிளா உள்ளே சென்று குரலில் கேட்டிட
“கஷ்டமா?” என்ன சொல்ற?” என்று புரியாது பார்த்தார் பிரபாகரன்.
“உங்களுக்கு வயசாச்சு, கரன் பர்த்டேக்கு வந்துட்டு போனீங்க, இப்போ அடுத்த மாசமே வர வச்சிட்டேன். ட்ராவல் பண்ணி உங்களுக்கு டயர்ட் ஆகியிருக்கும்ல, அம்மாவுக்கும் முடியல” என்றவள் குரலில் பெற்றவர்களை கஷ்டப்படுத்துகிறோம் என்ற கவலை.
“உங்களை பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியல, அடிக்கடி இப்படி அலைய வைக்கிறேன். எர்ணாகுளத்துல இருந்து தேவிகுளம் வரதுக்குள்ள எவ்வளவு டயர்ட் ஆகும் எனக்குத் தெரியும். கல்யாணம் ஆகும்போது இதெல்லாம் யோசிக்கவே இல்லப்பா, டிரெயின் இருக்கு, ஃப்ளைட் இருக்கு நினைச்சிட்டேன். ஆனா உங்களுக்கும் வயசாகுது..” என்று ஊர்மி அழுகுரலில் சொல்ல
“அட! மாப்பிள்ளைக்குக் கூடத்தான் அங்கங்க வெள்ளை முடி எட்டி பார்க்குது, உன் மாமனார் மாதிரி அப்பா டை அடிக்கல, அதனால என்னடா? சால்ட் அண்ட் பெப்பர்” என்ற பிரபாகரன் சிரிப்பில் மனம் லேசானாலும் அவர்களை அலைய விடுகிறோம், எனக்காக இத்தனை பார்க்கிறார்கள் என்ற எண்ணமெல்லாம் கவலை கொடுத்தது.
“அப்பா! உங்க மாப்பிள்ளையோட நரைக்குக் காரணம் ப்ளாக் டீ, ஒரு நாளைக்கு மூணு வேள கட்டஞ்சாயா இல்லாம பொழுது போகாது. நினைச்சா பார்க்கிற தூரத்துல இருக்க மாட்டேனு தாத்தா ஃபீல் பண்ணினப்போ தெரியல, அப்போ அமெரிக்க பக்கத்துல இருக்கு, ஆஸ்திரேலியா பக்கத்துல இருக்குனு பேசிட்டு இப்போ நினைச்சாலும் பசங்களை, வீட்டை எல்லாம் யோசிச்சிட்டு உங்களை பார்க்க முடியல. இவ்வளவு தூரம் அலைய வைக்கிறேன், போன வாரம் அம்மாவுக்கு ஜூரம், என்னால பக்கத்துல இருந்து பார்க்க முடியல” என்று ஊர்மிளா கண்ணீரோடு சொல்ல
“உங்கம்மாவை நான் பார்த்துக்கிட்டேனே ஊர்மி, லைட்டா காய்ச்சல் அதுக்கெதுக்கு அழற? அப்படி முன்னாடியே இதெல்லாம் தெரிஞ்சிருந்தா ஜெய் வேண்டாம் சொல்லியிருப்பியா?” என்று பிரபாகரன் கேட்க
அப்பாவை முறைத்தவள் “இந்த ஊரைப் பத்திதான் இவ்வளவு நேரம் பேசினேன், நான் சொல்லியிருந்தா தாத்தா கடத்திட்டு வந்து கூட எனக்கு ஜெய்யைக் கட்டி வச்சிருப்பார்” என்றாள் பெருமையாக. மகள் பேச்சில் சிரித்த பிரபாகரன் அவள் பின் தலையில் லேசாக தட்டி
மகள் முகம் சோர்ந்திருக்க, “இங்க பாருடா அப்பாவும் அம்மாவும் நல்லா இருக்க வரை உன்னை வந்து பார்க்கிறோம், எங்களுக்கு முடியாதப்ப நீ வந்து பாரு! சொல்லப்போனா நீதான் இப்போ பக்கத்துல இருக்க, விஷ்ணு யூஸ்ல இருக்கான் விஷால் யூகே, ஒரு போன் பண்ணினா காலையில கிளம்புனா கூட நைட் சாப்பாடுக்கு இங்க வந்திடலாம். நீ சந்தோஷமா இருக்கணும், இப்படி யோசிச்சு மனசை கஷ்டப்படுத்திக்காத, எங்களுக்கு வயசாகுறதெல்லாம் இயற்கைதானே?” என்று மகள் தோளில் தட்டிக்கொடுத்தார். ஊர்மிளா அப்பாவின் தோளில் சாய்ந்துகொள்ள
“ஊர்மி! இவனுக்குப் பால் கொடுத்து தூங்க வை, கொஞ்ச நாள்ல நிப்பாட்டிடு! சீக்கிரம் சாப்பிட்டு மாத்திர போடணும். சும்மா உங்கப்பா கூட என்ன வெட்டி பேச்சு?” என்று ஜமுனா மகளை அதட்ட, ஊர்மிளா சிரித்தபடி எழுந்துகொண்டாள். ஜமுனாவை அருகே அழைத்த பிரபா மகள் சொன்னதை பகிர
ஜமுனா, “அவ நேத்தே டல்லா பேசினாங்க, அதான் பார்த்துட்டு போனா நல்லாயிருக்கும் தோணிச்சு. நீங்களும் வாங்க சாப்பிட்டு தூங்குவோம்” என்று கணவனை அழைத்தார்.
“இருடி, இந்த குளத்து பக்கத்துல ஃபோட்டோ எடுத்துப்போம், என் வாட்ஸப் டிபியா வைக்கலாம்” என்றதும் ஜமுனா முறைத்தாலும் பிரபாகரன் பிடிவாதமாக படமெடுத்தே விட்டார்.
ஊர்மிளா இரவு உணவு முடியவும் மகனை தொட்டிலில் தூங்க வைத்து, தன்னருகே நகர்த்திட ஜெய் குளித்து வந்தான். சுஜிம்மா அவள் தாத்தா பாட்டியோடு உறங்க போய்விட்டாள்.
“ஏன் ஜெய் உங்க கொள்ளு தாத்தாவுக்குத் தமிழ் நாட்டுல வேற இடமே கிடைக்கலயா? சென்னையில எத்தனை பேரு வியாபாரம் பண்றாங்க? அதை விட்டு எதுக்கு இங்க வந்தார்?” என்றாள் மெல்லிய குரலில்.
“எங்க பூர்வீகம் குமுளி பக்கத்துல, மூணாறுல இருந்து ஒரு மூணு நாலு மணி நேரம்தான். அதனால வந்திருப்பார்” என்று ஜெய் சொல்ல
“தமிழ் நாடு எவ்வளவு பெரிய ஊர், அத விட்டு ஏன் இங்க வந்தாரு? பாருங்க அவரால நான் என் அப்பா அம்மாவை நினைச்ச நேரம் பார்க்க முடியறதில்லை.” என்றாள் முகம் சுருக்கி. ஊர்மிளாவின் பேச்சில் சிரிப்பு வர, குழந்தை உறங்குவதால் மெல்ல குரலை தாழ்த்தி ஊர்மிளாவின் அருகே உட்கார்ந்தவன் அவள் காதில்
“எங்க கொள்ளு தாத்தாவை எதுக்குடி இப்போ பேசுற? அவருக்குத் தெரியாதே அவர் பேரனுக்கு ஒரு காஞ்சி அழகியைப் பிடிக்கும்னு, தெரிஞ்சிருந்தா அங்கயே செட்டில் ஆகியிருப்பார்” என்றான் கிசுகிசுப்பாக. அதில் ஊர்மிக்குக் கூச்சமெடுக்க அவனை தள்ளிவிட, ஜெய் மனைவியை இழுத்து அணைத்தான்.
“இப்போ என்ன? மாமா, அத்தை நல்லாயிருக்காங்க. அவங்களுக்கு முடியலன்னா நம்ம பார்க்க போறோம். நீ ரெஸ்ட் எடும்மா” என்று சமாதானம் செய்தான்.
காஞ்சியிலும் அரக்க பறம்பில் வீட்டிலும் ஊர்மிளா மீண்டும் கருவுற்ற செய்தி கேட்டு எல்லாரும் மகிழ்ந்தாலும் ராஜீவன் மட்டும் மகிழவில்லை. அவருக்கு அதிர்ச்சியே!
“உன் பையனுக்குக் கொஞ்சமும் அறிவில்லடா” என்று பாலாவை போனில் திட்ட
“எனக்கு எப்படி இப்படி ஒரு அறிவான பையனு கேட்டவன் நீ தானே?” என்றார் கிண்டலாக.
“தெரியாம சொல்லிட்டேன், போடா” என்றார் கவலையாக. ஊர்மியின் இரண்டு பிரசவத்திற்கும் நித்தமும் பயந்தது அவரல்லவா? அவளுக்கு என்றில்லை, பிந்து பிரசவ அறைக்கு சென்றபோதும் ராஜீவனுக்குப் பதட்டமே, அந்த உணர்வை அவரால் கடக்க முடியவில்லை. பிரசவம் அவருக்கு மோசமான போர்க்களமாகவே இருக்க, மீண்டுமா என்ற பயமே.
ஊர்மிளா முதல் குழந்தை பிறந்த போது தேவிகுளம் வந்தபின்தான் அச்சச்சனும் அச்சம்மாவும் பார்த்தார்கள், அச்சம்மாவுக்கு முட்டு வலி இருப்பதால் அவரால் நீண்ட பயணங்கள் செய்ய முடிவதில்லை. மனைவியை விட்டு செல்ல அச்சுதனுக்கு மனமில்லை, அடுத்த குழந்தைக்கும் அப்படியே. இந்த முறை பிரசவத்துக்கு ஊர்மிளாவை இங்கயே இருக்க சொல்லி அச்சுதன் ஜெயனிடம் சொல்ல, அவனுக்குத் தெரியும் ஊர்மி நிச்சயம் இருக்கமாட்டாள். அது போல ஆறு மாதங்களுக்கு மேல் ஊர்மிளாவால் இரண்டு குழந்தைகள், வயிற்றில் ஒன்று என்று சமாளிக்க முடியாது போக ஜெய்யே அவள் உடல் நலன் கருதி காஞ்சிக்கு அனுப்பி வைத்தான்.
மீண்டும் ஊர்மிளாவுக்கும் மகன். அவர்கள் காதல் ஜீவனின் பெயர் ‘ஜீவன்’. அச்சுதனுக்கும் பாலச்சந்திரனுக்கும் ஊர்மிளா அந்த பெயரை வைத்தது தெரிந்து அத்தனை நிறைவு. பெயர் வைப்பது அவள் உரிமை என்று ஜெய் விட்டுவிட, அவனிடம் ஊர்மி முன்பே ஆண் என்றால் ஜீவன், பெண் என்றால் ஜீவனி என்று சொல்லியிருந்தாள்.
“அங்க யார் இவளை பார்ப்பா?” என்றதும் ஜெய் முறைத்தான்.
“சரி! நீங்க பார்ப்பீங்க, ஆனா என்னால இவளை விட்டு இருக்க முடியாது. ப்ளீஸ் ஜெய், இங்க எல்லாரும் அம்முவை பார்த்துப்பாங்க” என்றபோதும் ஜெய் அழுத்தமாக இருந்தான்.
“என்னால மட்டும் இருக்க முடியுமா? உனக்காக தான் ஊர்மி நான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கேன், நீயும் குழந்தைகளுமில்லாம வீடு வீடாவே இல்லடி! நம்ம ரூம் போறதுக்கே எனக்குப் பிடிக்கல, அடுத்த மாசம் இவளை ஸ்கூல் சேர்க்கணும். நான் பார்த்துக்கிறேன், வீட்ல அப்பா, வினயன் பார்த்துப்பாங்க, அச்சச்சன் அச்சம்மா இருக்காங்க, ஷோபனா அத்த கூட இருக்காங்க. நானும் என் பொண்ணுக்கு அப்பா தான் ஊர்மி, எனக்கும் அவளை விட்டு இருக்க கஷ்டம். அதை விட நீங்க இங்க இரண்டு சின்ன பசங்களை வச்சிருப்பீங்க, அவளை முன்னாடி மாதிரி கவனிக்க முடியாது” என்றவன் முடிவில் உறுதியாக இருந்தான். ஊர்மிளாவுக்கு அதில் வருத்தம், இருந்தாலும் ஜெய் அவளுக்காக நிறைய விட்டுக்கொடுப்பான், அவன் உறுதியாக இருந்தால் மாற மாட்டான் என்று தெரிந்து ஊர்மிளாவும் பேசவில்லை.
***********
“சுஜிம்மா, ரெடியா?” என்று மகளை ஜெய் தூக்கிக்கொள்ள
“டேய்! சுஜிக்கு சாரல் ஒத்துக்காம போயிட போகுது, ஊர்மி வேற இல்ல. பார்த்து அழைச்சிட்டுப் போ” என்று அதிகாலையில் மகளோடு ரயில் நிலையம் செல்லவிருந்த ஜெய்ச்சந்திரனிடம் சொன்னார் பாலச்சந்திரன்.
“என் சக்கர முத்து!” என்று கொஞ்சியவன் மகளோடு ஜீப்பில் ஏறி
“உங்க செல்ல மகனை எழுப்பி விட்டு காலையில சூர்ய நெல்லி போக சொல்லுங்கப்பா, எரும மாடு எழுப்பலன்னா லேட் பண்ணிடுவான்” என்றவன் ராஜீவனை அழைக்க எர்ணாகுளம் ரெயில் நிலையம் சென்றான்.
பிரிகடியர் ராஜீவன் அவரின் சேவை காலம் முடிந்து ஓய்வு பெற்று தேவிகுளத்துக்கு திரும்புகிறார்.
ராஜீவன் இரண்டு பெட்டிகளோடு ரயில் நிலையத்தில் காத்திருந்தவர் பார்வை, ஜெய்ச்சந்திரனின் கை பிடித்து ரயில் நிலையத்தை வேடிக்கை பார்த்தபடி வந்த பேத்தியைத் தொட்டது. ஊர்மிளா இப்படி ஜெய்யோடு வந்து தன்னை அழைக்க வந்த நாள் நினைவில் வர, அர்த்தமில்லா புன்னகை அவரிடம். காலத்தின் இந்திரஜாலத்தை கண்டு வியந்தார், தன் மகளோடு ஜெய் வருவதை விரும்பாதவர், இன்று தன் மகளின் மகள் ஜெய்யின் மகளாக. ஜெய் மகளுடன் வந்து நின்றவன்
“என்ன மாமா தீவிர யோசனை?” என்று ஜெய் கேட்க
“நீயும் ஊர்மியும் என்னை முதல்முறை சேர்ந்து அழைக்க வந்தது ஞாபகத்துல வந்தது ஜெய்” என்றதும்
“ஓஹோ” என்று ஜெய் சிரித்தவன் மகளிடம் “அம்முக்குட்டிக்கு அம்மச்சனை தெரியுதா?” என்று கேட்க, பேத்தியின் முகத்தை ஆர்வமாக பார்த்தார் ராஜீவன். அவரோடு எப்போதாவது அலைப்பேசியில் பேசினாலும் சட்டென்று குழந்தைக்கு நினைவில் வரவில்லை, சில நாள் விடுமுறைக்கு மட்டுமே வருபவர் என்பதால் தெரியவில்லை.
ஜெய் உடனே அவன் அலைப்பேசியை எடுத்து காட்டி “அம்மச்சன் டா” என்று மீண்டும் சொல்ல அது ராஜீவன் பரம் வீர் சக்ரா வாங்கிய அன்று எடுத்த புகைப்படம். அதில் முழு மிலிட்டரி உடையிலும் இப்போது வெள்ளை டீஷர்ட், கார்கோ பேண்ட் அணிந்திருந்தவரை தன் குட்டி விழியால் அளந்தாள் சுஜாதா.
“என் உன்னிம்மாவுக்கு அம்மச்சனை தெரியலயா?” என்று ராஜீவன் பேத்தியின் அருகே குனிந்து கேட்க
“தெரியுமே” என்று வேகமாக தலையாட்டினாள் பாவை.
“அம்மச்சன் கிட்ட வரிங்களா?” என்று இரு உள்ளங்கைகளையும் நீட்டி பேத்தியிடம் ராஜீவன் அனுமதி கேட்க, அப்பாவை பார்த்த மகள் ஜெய் தலையசைக்கவும் அவரின் கைகளின் மேல் தன் குட்டி கைகளை வைத்திட, ராஜீவன் பூரிப்போடு பேத்தியைத் தூக்கிக் கொண்டார்.
ராஜீவனை அரக்க பறம்பில் வீட்டில் கொண்டு வந்து ஜெய் இறக்கிவிட, பார்த்திருந்த அச்சுதனுக்கு அவரின் மிகப்பெரிய கவலை நீங்கியது. அச்சம்மா மகனின் வருகைக்காக வாசலில் காத்திருக்க,
“முத்தஸ்ஸீ!” என்று அவரிடம் ஓடினாள் சுஜாதா.
“பொன்னு மோளே!” என்ற பத்மினி பேத்தியைக் கொஞ்சிட
“சுஜிம்மா முத்தஸ்ஸீ கூட இருக்கியா? அப்பா உன்னை கொஞ்ச நேரம் கழிச்சு அழைச்சிட்டு போறேன்” என்று மகளிடம் சொல்ல, மகளும் சரியென்றுவிட பேத்தியோடு பேசியபடி ராஜீவனும் பத்மினியும் உள்ளே சென்றனர்.
“ஏடா ஜெய்” என்று அச்சுதன் ஜெய்யை நிறுத்தியவர் “எனக்கு அப்புறமும் என் மகனை நல்லா பார்த்துக்கோடா, நீ செய்வன்னு தெரியும்! இருந்தாலும் என் திருப்திக்கு சொல்றேன்” என்றார் உணர்ச்சிமிகுதியில்.
“என்ன அச்சச்சா நீங்க? அவர் ஊர்மியோட அப்பாவா இல்லாம இருந்தா கூட எங்க அச்சச்சன் பையனை பார்க்கிறது என் கடமை! இங்க எங்கிட்ட ஃபீல் பண்றதை என் மாமனார் கிட்ட ஃபீல் பண்ணினா அவராச்சும் சந்தோஷப்படுவார் இல்ல..?” என்று ஜெய் கிண்டல் செய்ய
அச்சுதன் “போடா!” என்று அவன் தோளில் தட்டியவர் “அதென்ன என் பேத்தியை அப்புறம் வந்து அழைச்சிட்டு போறேன்ற, அவளா வரணும்னு சொன்னா நான் அழைச்சிட்டு வருவேன். உன் பொண்டாட்டிக்கு நீ பயப்படு, நானெல்லாம் பயப்பட மாட்டேன், எங்க ஜெயன் பொண்ணை நாங்க பார்த்துக்க மாட்டோமா?” என்று கேட்க
“அச்சச்சா! ஊர்மி ஒன்னுமே சொல்லல. அது என்ன பார்த்துக்க மாட்டோமா? நீங்கதான் பார்க்கணும், என் பசங்க வேற இன்னும் மூணு மாசத்துல வந்துடுவானுங்க. அவங்களையும் நீங்கதான் பார்க்கணும்” என்று ஜெய் உரிமையாக சொல்லி சென்றான்.
ராஜீவன் சோம்பி இருக்க தேவையில்லாமல் பேத்தி ஊரில் இருக்க, அவளை கவனிக்கும் முழு பொறுப்பு அவருடையதாகியது. ஒரு மாதம் ஓடிவிட, அன்று சுஜாதா முதல் நாள் பள்ளிக்கு செல்லும் நாள்.
“ஏடி! ஸ்கூல் போறது நம்ம பொண்ணு, நீ இல்லை! எதுக்கு இப்படி உம்முனு இருக்க?” என்று ஜெய் காலையில் மனைவியை வீடியோ காலில் அதட்டிட
“சுஜிம்மா முதல் நாள் ஸ்கூல் போறா, நான் அவளோட இல்லை. அடுத்த வருஷம் சேர்த்துக்கலாம் சொன்னேன் கேட்டீங்களா? எல்லாம் உங்களாலதான்!” என்று அவனை திட்ட, ஜெய் அசரவில்லை.
“என்னாலதான் இப்போ என்ன?” என்று முறைக்க, ஊர்மிக்கு மகளை பிரிந்த கவலை. கண்ணீருடன் கணவனை பார்த்தாள். உண்மையில் மகள் உடனிருந்தாலும் அவளுக்குக் கடினமே, ஒரு மகன் தவழ்ந்து, நடந்து பழக இன்னொருவன் முழுக்க முழுக்க அம்மாவின் வசமே இருந்தான். ஜமுனா மகளை பார்த்துக்கொள்ள, ஊர்மிளா உடலும் மனதும் ஆரோக்கியமாக இருந்தது. அது புரிந்தாலும் மகள் தன்னை தேடுவாளே என்ற கவலை.
“சுஜிம்மா, வா” என்று ஜெய் மகளை அழைத்திட, வினயன் மகளை தூக்கி வந்து ஊஞ்சலில் நிற்க வைத்து போனை பார்த்தான்.
“ஹாய் ப்ரண்ட்! எப்படி இருக்காங்க குட்டீஸ், நாங்க ஸ்கூல் போக போறோம் சொல்லுடா சுஜி” என்று சொல்லிக்கொடுக்க
“நீ போடா” என்று தம்பியை அனுப்பியவன் மகளிடம் “அம்மாவுக்கு பை சொல்லுங்க” என்றான்.
ஜெய்க்கும் மகள் அம்மாவை தேடுவாளோ என்ற எண்ணமிருக்க, பொறுமையாக மகளுக்குப் புரியும்படி எடுத்து சொல்லியிருக்க, சுஜாதாவும் வெளியே செல்லபோகிறோம் என்ற உற்சாகத்தில்
“அம்மா, பை! நான் ஸ்கூல் போறேன். பிக் கேர்ள் ஆகிட்டேன், இல்லப்பா?” என்று ஜெய்யைக் கேட்டு கேட்டு மகள் பதில் சொல்ல, ஊர்மிளாவின் மனம் மகளிடம் லயித்திட லாளிதமான பொழுது.
“அம்மா, நான் புது பேக் வாங்கினேன். ஷூ, க்ரேயான்ஸ்..” என்று மகள் மழலையில் பேசிட, ஊர்மிளாவுக்கு இனித்தது.
“இவ ஸ்கூல் போறான்னதும் பிரிகடியர் வாங்கி தள்ளிட்டார் ஊர்மி” என்று சிரித்த ஜெய் அவளிடம் பேசி, பின் பிரபா, ஜமுனா, கிருபாகரன், மங்கை, ரத்னவேல் என்று எல்லாரும் பேத்திக்கு வாழ்த்து சொன்னார்கள். மகளுக்குக் காலை உணவு கொடுத்தவன் அவன் அம்மாவின் படம் முன் நின்று வணங்க, அப்பாவை பார்த்து மகளும் பாட்டியை வணங்கினாள்.
அரக்க பறம்பில் வீடு செல்ல அங்கே அச்சுதனும் பத்மினியும் பேத்தியை ஆசிர்வதிக்க, ராஜீவனும் பேத்தியை பள்ளியில் விட வந்தார். “அம்மச்சா” என்று ஆரம்பித்த சுஜாதா அம்மாவிடம் பேசியதை எல்லாம் அம்மச்சனிடம் பகிர, பேத்தியோடு ஆசையாக கதை பேசினார். ஜெய் மகளை அவள் வகுப்பில் விட்டு கிளம்ப, ராஜீவன் வரவில்லை என்றார்.
“மாமா, முதல் வாரம் இரண்டு மணி நேரத்துல விட்ருவாங்க. இங்க இருந்து என்ன செய்ய போறோம். வாங்க போகலாம்” என்று அழைக்க அவரோ பிடிவாதமாக பேத்தி வரும்வரை இருப்பதாக சொல்லிவிட்டார்.
வகுப்பு முடியவும் ஜெய் வருவதற்கு முன்பே ராஜீவன் சென்று நிற்க, அம்மச்சனை பார்க்கவும் சுஜாதா வேகமாக தாவிக்கொள்ள, அதன் பின் பேத்தியுடனே அவரின் பொழுதுகள். தினமும் அவளை பள்ளியில் விடுவது, காத்திருந்து அழைத்து வருவது, வீடு வந்த பின் உண்ண வைத்து உறங்க வைத்து, மாலையானதும் சிறிது நேரம் பாடம் சொல்லிக்கொடுத்து, பின் விளையாட என்று மகளிடம் காட்ட முடியாத அத்தனை பாசமும் உரிமையும் மொத்தமாக பேத்தியிடம் காட்டினார்.
ராஜீவன் இழந்தது மீட்க முடியாதது! ஆனால் எஞ்சியிருந்த ஏக்கங்கள் இனி இல்லை! சுஜாதாவும் அவருடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள்.