பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ‘வடக்கும்நாதன்’ கோயிலின் தெற்கு நுழைவு வாயிலை ‘நெய்திலக்காவிலம்மா’ சிலையை சுமந்தபடி தள்ளி நின்றது ‘எர்ணாகுளம் சிவகுமார்’ என்ற பெரிய வேழம். கொச்சி தேவஸம் போர்டுக்கு சொந்தமான யானை பூர விலாம்பரத்தை மதிய நேரத்தில் பூரம் நட்சத்திரத்தில் தொடங்கி வைக்க, கோலாகலமாக தொடங்கியது ‘திருஸ்ஸுர் பூரம்’. ஆசியாவின் மிகப்பெரிய திருவிழா. ‘ஆறாட்டுப்புழா பூரம்’ பூரங்களில் மிகப்பெரியதென்றாலும் 1798 ஆண்டு பெய்த பெருமழையின் காரணமாக திருவம்பாடி, கனிமங்கலம், பரமக்காவு ஆகிய ஊர்களிலிருந்து வேழத்தோடு சரியான நேரத்திற்கு சென்று சேர முடியாத காரணத்தால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவ்வூர்களை சேர்ந்தோர் அன்றைய கொச்சியின் அரசரான ‘சக்தன் தம்புரானிடத்தில்’ முறையிட அவரால் தொடங்கப்பட்டதே ‘திருஸ்ஸுர் பூரம்’.
வழக்கமாக ஜெய்ச்சந்திரன் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வில் இன்று பல வருடங்களுக்குப் பின் அச்சுதனும், ராஜீவனும் கலந்து கொண்டனர். மகனின் காதலுக்குப் பின் அச்சுதன் இதிலிருந்து ஒதுங்கியிருக்க, விவரம் தெரிந்த பின் ஜெயன் கலந்துகொள்வான். இந்த வருடம் ராஜீவனும் கலந்து கொள்ள பிரியப்பட, மூவரும் வெள்ளை வேஷ்டியணிந்து நெற்றியில் சந்தனமிருக்க, அச்சுதன் தோளின் குறுக்கே நீலத்தில் துண்டு அணிந்திருந்தார், வயதாகியிருந்தாலும் மகன் பல வருடம் கழித்து செண்டை மேளம் வாசிப்பதில் அவருக்கு உற்சாகம், கூடவே அவரின் ஜெயனுமிருக்க அச்சச்சனின் உள்ளம் குளிர்ந்தது. ‘கொடியேற்றம்’ முன்பே தொடங்கியிருக்க பூரமன்று காலை ஏழு மணிக்கே திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் இருந்து ‘யோகமயா தேவி’யை சுமந்தபடி யானை சர்வ அலங்காரத்தோடு வடக்கும்நாதன் கோயிலை நோக்கி தன் ஊர்வலத்தைத் தொடங்கியது.
‘திருஸ்ஸுர் பூரம்’ வடக்கும்நாதனை மையமாகக் கொண்டது. சுற்றியுள்ள பத்து கோவில்கள் அனைத்தும் எம்பெருமான் சிவனை வணங்குவ ஊர்வலம் அனுப்புவார்கள். பரமேக்காவு பகவதி கோயில் தலைமை கிழக்கு குழுவாகவும், திருவம்பாடி கிருஷ்ணர் கோயில் தலைமையில் மேற்கு குழுவும் தங்கள் ஊர்வலத்தை வடக்கும் நாதனை நோக்கி மேற்கொள்வார்கள்.
பஞ்சவாத்யத்தோடு பெரும்வேழம்(யானை) அலங்கரிக்கப்பட்டு ‘யோகமா தேவியை’ சுமந்து வர ப்ரம்மஸ்வாம் மடத்தில் பூஜை நடந்தது. மதியம் பரமேக்காவு பகுதியில் இருந்து ஊர்வலம் வர, ‘குடமாட்டம்’ நிகழ்ச்சி தொடங்கியது.
“எப்படி மாமா? தாத்தா இந்த வயசுல இப்படி அடிக்கிறார், ஆனால் அவரை மாதிரி நிறைய பேர் அடிக்கிறாங்க இல்ல” என்று தனக்குத் துணையாக நின்ற பாலச்சந்திரனிடம் கேட்டாள் ஊர்மிளா. ஊர்மிளாவும் பாலச்சந்திரனும் மட்டுமே விழாவை காண வந்திருந்தனர். பிள்ளைகள் சிறியவர்கள் என்பதால் வீட்டில் விட்டிருக்க, வினயன் பார்த்துக்கொள்வான். ஊர்மி முதல் முறை வந்ததால் ஆவலாக எல்லாவற்றையும் கண்ணோக்கினாள், அவள் ஊரிலும் திருவிழா, கும்பாபிஷேகம் எல்லாம் கண்டிருந்தாலும் இந்த கூட்டம் பெரிது, புதிது! மக்களின் ஆர்ப்பரிப்போடு செண்டை மேளம், மற்ற பக்கவாத்யங்களின் இசை கூட்டாக ஒலிக்க விழாவை காண வந்திருந்தவர்களின் கரங்களும் மேளத்திற்கேற்ப தாளமிசைக்க வானசுவர்க்கமாய் இசை!
குடமாட்டம் நிகழ்ச்சி தொடங்க, பரமேக்காவு பகவதி தலைமேற்ற குழுவினர், நெட்டிப்பட்டம் கட்டப்பட்ட யானைகள் முன்னே பிரமாண்டமாய் நின்றன. வெண்சாமரம், பட்டிலான குடைகள், ஆலவட்டோம் எனப்படும் மயில் தோகைகள் என்று யானைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன, கழுத்தில் வண்ண துணிகள் அணிவிக்கப்பட்டு, முன்னே மணிகள் கோர்க்கப்பட்டு, காலில் சலங்கையாய் சின்ன சின்ன மணிகள், மற்ற இடங்களில் பெரிய மணிகள் என்று மிகவும் பிரமாண்டமாக அழகுறவும் கம்பீரமாகவும் அணிவகுத்து நின்றன கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட யானைகள்.
“அங்க நிக்குறானே அவன் தான் தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன், ஏகாசத்
ராதிபதினு சொல்வாங்க. இந்தியாவில உயரம் பெரிய யானை ராமச்சந்திரன்தான் ஊர்மிமா, 2019ல இவன் ரெண்டு பேரை மிதிச்சிட்டான் அதிலிருந்து இவனுக்கு பூரத்துக்குத் தடை போட்டாங்க, இப்போ கூட மெடிக்கல் ஃபிட்னஸ் வாங்கிட்டு வந்திருப்பாங்க, அங்க நிக்கிறானே அவன் பரமேக்காவு ராஜேந்திரன்” என்று யானைகளின் பெயரோடு குறிப்பிட்டு சொல்ல, ஊர்மிக்கு எல்லாம் யானையாகவே தெரிந்தது, பெயர் தெரியவில்லை. கூட்டத்தில் ஜெய்க்கு இவள் தெரியாவிட்டாலும் கணவன் அவனுக்குப் பிடித்ததை செய்வதை ரசித்து பார்த்தாள் ஊர்மிளா.
“அங்க பாரு குடையை மாத்திட்டாங்க, வேற வேற டிசைன்ல இன்னிக்கு முழுக்க மாத்திட்டே இருப்பாங்க, ஒரே நேரத்துல மாத்துறதான் போட்டியே” என்று சொல்ல, குடமாட்டம் நிகழ்ச்சியை ரசித்தவள் காணொளியாக பதிவு செய்து வீட்டுக்கு அனுப்பினாள், கூடவே வினயனுக்கும் அனுப்ப சித்தப்பாவை சுற்றிய பிள்ளைகள் பேசிக்கொண்டே முத்தச்சன், அம்மச்சன், அப்பா என்று திரையைப் பெரிதாக்கி தேடி பார்த்தனர்.
பரமேக்காவு பகுதியும் வந்து சேர, இலஞ்சித்தார மேளம் வாசிப்பட்டது. கோயிலின் முற்றத்திலுள்ள இலஞ்சி மரத்திற்கு அருகில் மேளக்கலைஞர்கள் கூடிட, கேரளத்தின் பாரம்பரிய இசை விண்ணை தொட்டது. இயல்பாக ஊர்மிளாவின் கால்களும் தாளம் போட்டன, 36 மணி நேரம் தொடர்ந்து நிகழும் பூரத்தில் மாலையிலும் ஓய்வில்லை. உறங்கா இரவிலும் மக்கள் கூட்டமோ இசையோ நிற்கவில்லை. இரவும் வண்ணம் பூசிக்கொள்ள, நிறங்களின் தாளமாய் வான வேடிக்கை கண்களை நிறைக்க, மறுபக்கம் செண்டைமேளம், நாதஸ்வரம், இன்னும் பிற வாத்யங்கள் சேர ஒத்தினியமாக இசை(சிம்பனி) விருந்து.
அந்தி தொடங்கி இரவு தொடர விழா அப்படியே வேறு வர்ணம் கொண்டது, தீப்பந்தங்கள் அணிவகுத்து நின்ற வேழங்களின் முன் ஏற்றப்பட, யானைப்பாகன்கள் யானைகளின் மேல் வீற்றிருக்க, வகைவகையான நிறங்களில், வடிவங்களில் காலத்திற்கும் ரசனைக்குமேற்ப மாற்றப்பட்டன. மேளத்தின் தாளத்தோடு அலை அலையான மக்கள் கூட்டம்.
“ஒவ்வொரு வருசமும் பூரத்துக்குத் தேவையானதை புதுசா செய்வாங்க ஊர்மி, பழசை பயன்படுத்த மாட்டாங்க” என்ற பாலச்சந்திரன்
“உனக்கு முடியலன்னா ரூமுக்கு போவோமாமா?” என்று கேட்டார்.
“ஒரு நாள் தானே மாமா, வயசான தாத்தாவே நிக்கிறாங்க. எனக்கு என்ன?”
“அவருக்கென்ன பல வருஷம் அப்புறம் ராஜீவன் பூரத்துக்கு வந்த குஷியில அவர் அடிப்பார், அச்சச்சன் சந்தோஷத்துல ஜெய் இன்னும் உற்சாகமாக இருப்பான், மிலிட்டரி சொல்லவே வேண்டாம். நீ இவ்வளவு நேரம் நின்னதில்லலமா” என்றார் அக்கறையாக.
“பரவாயில்ல மாமா, இப்படி பார்க்கிறதுக்கு வாய்ப்பெல்லாம் எப்பவாச்சும் கிடைக்கிறதுதானே?” என்ற ஊர்மிளாவுக்கு உறங்கா இரவென்றாலும் உற்சாகமாய்க் கழிந்தது.
“அங்க நிக்கிறாரே அவர்தான் அப்பு மாறர், ப்ராமணி. கிட்டதட்ட இருபது வருஷத்துக்கு மேல பூரத்துல வாசிக்கிறார். நம்ம அச்சச்சன் தொடர்ந்து வந்திருந்தா அவர் இன்னேரம் ப்ராமணி ஆகியிருப்பார்” என்றார் பாலச்சந்திரன்.
சித்திரையின் இரவுக்காற்றோடு விழிகளுக்கு விருந்தாய் வண்ண வண்ண வான வேடிக்கை. யானைகளின் அலங்காரம் பகலில் ஒரு நிறம், அழகென்றால் இரவில் வேறு வண்ணம் பூசினாலும் அதுவும் ஊர்மிளாவுக்குப் பிடித்தது. இரவுக்கு ஏற்றார்போல் குடைமாற்றபட்டுக்கொண்டே இருக்க, அவர்களின் ஒற்றுமையையும் அத்தனை மாதம் பழக்கத்தையும் மனதில் மெச்சினாள். வடக்கும் நாதன் கோயிலும் வண்ண வண்ண விளக்குகளால் ஒளியேற்றபட்டிருக்க திருச்சூர் கேரளத்தின் பண்பாட்டு தலை நகராக விளங்கியது.
அடுத்த நாள் பகல் பூரம் தொடங்கிட, நேற்றையை நிகழ்வுகள் பகலில் நிகழ்ந்தன. பிரியாவிடை நிகழ்ச்சியின் தொடக்கமாக பகலில் ‘வெடிக்கட்டு’ எனப்படும் வாண வேடிக்கையுடன் பரமேக்காவு குழுவும், திருவம்பாடி குழுவும் அவரவர் கோயிலுக்கு செல்ல, பூரம் நிறைவு பெற்றது.
விழா நிறைவுற ‘பூரக்கஞ்சி’ வழங்கப்பட உண்டு முடித்து, ஜெய் ஊர்மிளாவிடம் வர மொத்தமாக களைத்திருந்தாலும் முகத்தில் சிரிப்பிருந்தது. பெரியவர்கள் சுற்றியிருக்க ஊர்மிளா கண்களால் கணவனை மெச்சினாள். அச்சச்சனுக்கு அன்று களைப்பே இல்லை என்பது போல, ராஜீவனை அவரின் பழைய நண்பர்களுக்கு அறிமுகம் செய்தார், கூடவே என் பேரன் என்று ஜெயனையும் திருவம்பாடி தேவஸத்தில் இருப்பவர்களிடம் பெருமையாக சொன்னார்.
அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வரவும் ஊர்மிளாவிடம் “நீ சாப்பிட்டியா? கால் வலிச்சதா?” என்று அக்கறையாகக் கேட்க,
“இதெல்லாம் நான் கேட்கணும் தாத்தா” என்றாள் ஊர்மிளா. விஜயன், வினயன் வராதது வருத்தமென்றாலும் பேத்தி வந்ததில் பெருமகிழ்ச்சி. விஜயன் பிந்துவுக்கு ஒரு மகன், ஆன்சைட்டுக்காக அமெரிக்கா சென்றவன் ஐந்து வருடங்களாக அங்கேயே தங்கிவிட்டான். வினயன் குழந்தைகள் பொறுப்பெடுத்திருந்தான். வினயச்சந்திரனுக்கு திருமணமாகி ஒரு மகன், மனைவி பிறந்த வீடு சென்றிருக்கிறாள்.
சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு காரில் வீடு செல்லலாம் என்று திட்டம், எல்லாரும் ஓய்வெடுக்க ஊர்மிளா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அழைத்து விழாவை வர்ணித்து, அவர்களோடு பேசி வைத்தாள். மாலையானதும் திருஸ்ஸுரிலிருந்து தேவிகுளத்திற்கு அவர்கள் பயணம் தொடங்கிட, வீடு வந்து சேர மணி பத்தானது. வீடு வந்த அச்சுதன் மனைவியிடம் மகனை பற்றி பெருமையாக பேசி மனம் நிறைந்தார்.
ஜெய்ச்சந்திரனுக்கும் அதே நிலை.
“உன்னோட வடக்கும்நாதனை பார்க்கணும்னு ரொம்ப ஆசை ஊர்மி, இன்னிக்குத்தான் நேரம் அமைஞ்சிருக்கு” என்றவன் களைப்பில் உறங்கிவிட, பிள்ளைகள் வினயன் வசம் என்பதால் ஊர்மிளாவும் உறங்கினாள்.