பயணம் செய்த களைப்பில் ஊர்மிளா ஒரு பத்து நிமிடம் அதிகம் உறங்கியவள் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்க பறக்க எழுந்தாள். கீழே வர சமையல் செய்யும் சேச்சி வந்திருக்க, ஆசுவாசத்தோடு அவரிடம் சில வேலைகள் சொன்னவள், டீ குடித்துக்கொண்டிருந்த பாலாவிடம்
“மாமா, அவனுங்களை எழுப்பிவிடுங்க ப்ளீஸ்” என்று கேட்டிட, பாலச்சந்திரனும் சின்ன மகனுடன் கீழே இருக்கும் அறையில் உறங்கிய பேரன்களை தூக்கி வந்து வெளியே விட, ரத்னா, ஜீவன், வினயனின் மகன் பாலா எல்லாம் சேட்டைக்காரர்கள். சுஜாதா அடம் செய்யாது, சொல் பேச்சு நடக்கும் பிள்ளை என்றால், ஜெயனும் வினயனும் சிறு வயதில் செய்த சேட்டைக்குக் கொஞ்சமும் குறையாது அவர்களின் பிள்ளைகள் செய்தனர்.
அதுவும் வினயனின் மகன் பெயர் பாலா. “ஜெயேட்டா அம்மா பெயர் வச்சான்ல, அப்போ நான் அப்பா பெயர் வைப்பேன்” என்றவன் வேண்டுமென்றே மகனை பெயர் சொல்லி அழைத்து வம்பிழுப்பான். பாலா அம்மாவோடு தாத்தா வீடு சென்றிருக்க ஒன்றாம் வகுப்பு படிக்கும் ரத்னாவும் யூகேஜியில் இருக்கும் ஜீவனும் காலை கிளம்புவதற்குள் வீட்டை ஒருவழி செய்துவிடுவார்கள்.
மகன்களை குளிக்க வைத்து உடையெடுத்து மாமனாரிடம் கொடுத்து “இவனுங்களுக்கு யூனிஃபார்ம் மாட்டிவிடுங்க மாமா, கிச்சன்ல கொஞ்சம் வேலை” என்று ஊர்மிளா போய்விட, பேரன்களை பிடித்து வைத்து சட்டையும் டவுசரும் மாட்டிவிட்டார். பெல்ட், ஷூ, சாக்ஸ் போட்டுவிடலாம் என்று பார்க்க ரொனால்டோ வீட்டினுள் ஓடிவர அவனோடு விளையாடி கிளம்பாமல் அட்டகாசம் செய்தனர். பாலச்சந்திரன் கத்தி பார்த்தவர் முடியாமல் பேப்பர் படிக்க உட்கார்ந்துவிட, ஜெய் குளித்து முடித்து கீழே இறங்கியவன் மகன்கள் இன்னும் தயாராகாமல் இருப்பது கண்டு
“மோனே! இது உன் டர்ன்! இப்படித்தான் நீயும் உன் தம்பியும் சேட்டை பண்ணுவீங்க, ஏற்கனவே உன்னை சமாளிச்சே அப்பா டயர்ட் ஆகிட்டேன். நீ முடிஞ்சா ரெடி பண்ணு இல்லைன்னா வெயிட் பண்ணு” என்றவர் பேப்பரில் கவனம் செலுத்தினார்.
“ரொம்ப பண்றீங்கப்பா” என்று கத்த, சத்தம் கேட்டு ஊர்மிளா வெளியே எட்டிப்பார்த்தவள் சோர்ந்துபோனாள்.
மனைவியைப் பார்த்தவன் “நான் பார்த்துக்கிறேன் ஊர்மி” என்றவன் “டேய் ஒழுங்கா வந்து ஷூவைப் போட்டுக்கங்க, சாப்பிட்டு கிளம்பணும். ஜீவா உன் ஐடி கார்ட் எங்க?” என்று மகன்களை அதட்ட
“ஐடி காணும், ஸ்கூல் போலப்பா” என்ற சின்னவனை தொடர்ந்து பெரியவனும் கழுத்தில் மாட்டியிருந்த ஐடி கார்டை கழட்டி பாக்கெட்டினுள் போட்டவன் “எனக்குக் காணும்பா, நானும் போகல” என்றான்.
“மவனுங்களா!” என்று ஜெய் சத்தம்போட்டு அவர்களை பிடிக்க போக, ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடினார்கள். கடுப்பானவன் அப்படியே நின்றுவிட பாலச்சந்திரன் நக்கலாக சிரித்தார். ஜெய்யும் வினய்யும் இப்படித்தான் அடிக்க கம்பு எடுத்தாலே அரக்க பறம்பில் ஓடிவிடுவார்கள். ஆனால் பள்ளிக்கூடம் செல்ல அடம் பிடித்த நினைவில்லை, அவர்களை போல் மகன்களால் அரக்க பறம்பில் செல்ல முடியாது.
வீட்டுக்குள் கண்ணாமூச்சி ஆடியவர்கள் “அப்பா பிடிங்க” என்று வேறு ஜெய்யை அழைக்க அவனோ அமைதியாக நின்றான். ஜீவன் வாசல் பக்கம் ஓடியவன் வேகமாக வீட்டுக்குள் ஓடி வந்தான்.
“அண்ணா! அம்மச்சா” என்றான் பயந்த குரலில்.
“அம்மச்சனா?” என்று ரத்னா கேட்கும்போதே ராஜீவன் பேத்தியோடு வந்துவிட்டார். சுஜாதா நேற்று அவள் முத்தஸ்ஸீயோடே உறங்கியிருந்தாள், காலையில் அவள் அங்கிருந்தே கிளம்பி வந்துவிட அங்குமிங்கும் சிதறியிருந்த ஷூ, சாக்ஸ் எல்லாம் பார்த்த ராஜீவன்
“பாய்ஸ்!” என்று சத்தமிட அண்ணனும் தம்பியும் அமைதியாக “அம்மச்சா” என்று ஒரே குரலில் அப்பாவியாக அழைத்தனர்.
“ஷு சாக்ஸ் போடுங்க” என்று ராஜீவன் சொல்ல, “வாடா” என்று ஜெய் மகனை அழைக்க
“நீ இரு ஜெய், கரன் உனக்கு சாக்ஸ் ஷு போட தெரியும்ல, போடு!” என்றார் கட்டளையாக. ஜீவனுக்கு சொல்ல தேவையில்லை, அண்ணனை பின்பற்றி ஐந்தே நிமிடங்களில் இருவரும் ஷூ சாக்ஸ் போட்டு, ஐடி கார்ட், பெல்ட் என்று தயாராக நின்றனர்.
“இதுக்குத்தான் மிலிட்டரி வேணும்ன்றது” என்று பாலா மகனிடம் கிசுகிசுக்க
“ஊர்மி! சாப்பாடு எடுத்துட்டு வா” என்று ராஜீவன் மகளிடம் குரல் கொடுக்க, அவள் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தாள்.
“சுஜிம்மா” என்று ஜெய் மூன்றாவது படிக்கும் மகளின் கைப்பிடித்து “நீ என்னடா ரெடியாகி வந்துட்ட, குட் கேர்ள்” என்று பாராட்டிட
“அப்பா! நான் முத்தஸ்சி பாடினாங்களா, அப்படியே தூங்கிட்டேன், நேத்து சித்தப்பா போன்ல உங்களை காமிச்சாங்க. நீங்க குட் பா” என்று மகளும் பாராட்ட
“சுஜிம்மா, சாப்பிடுடா லேட்டாகிடும்” என்ற ராஜீவனின் குரலில்
“ஏன் உன் அம்மச்சன் உனக்கு சாப்பாடு கொடுக்கலயா?” என்றான் ஜெய் கிண்டலாக.
“அவ அம்மா கிட்ட சாப்பிடணும் சொன்னா, இரண்டு நாளா பார்க்கல ல?” என்று ராஜீவன் ஜெயனை முறைத்தபடி சொன்னவர் வினயன் அறைக்கதவை தட்டினார்.
“வினய்!” என்று குரல் கொடுத்திட “அய்யோ மிலிட்டரி” என்று சோம்பல் முறித்தெழுந்தான்.
“மாம்ஸ்” என்று அவன் கதவை திறக்க “போய் ப்ரஷ் ஆகிட்டு வா” என்று உத்தரவிட்டார். பத்து நிமிடத்தில் வெளியே வந்த வினயன் அவனுக்குக் காஃபி கலக்கியபடி ஜெய் பக்கத்தில் வந்தமர்ந்தான்.
“ஏன் ஜெயேட்டா நேத்து அந்த அடி அடிச்சீங்களே, உங்களுக்கெல்லாம் டயர்ட் ஆகாதா? இவர் லேட்டா வருவார்னு நான் தூங்கினா கரெக்ட் டைமுக்கு வந்துட்டார்” என்று புலம்பியவன் அண்ணன் மகன்களை பார்க்க அவர்கள் அமைதியாக ஊர்மி இட்லி ஊட்டிட வாங்கினர்.
“மிலிட்டரிக்குப் பயந்து பம்மிட்டு இருக்கானுங்க” என்று முணுமுணுத்தவன்
“நல்ல வேளை பா, உங்க ப்ரண்ட் நாங்க சின்ன பசங்களா இருக்கும்போதே ஊரை விட்டுப் போய்ட்டார். அவர் காதல் வாழ்க, இல்லைன்னா எங்களுக்கும் மிலிட்டரி டிரில்லா இருந்திருக்கும்” என்று கிண்டல் செய்ய ராஜீவன் பேரன், பேத்தியின் பைகளை எடுத்தவர்
“காஃபி குடிச்சிட்டன்னா என்னடா கதை, கிளம்பு” என்று வினயச்சந்திரனை விரட்டினார். வினயன் வேலை செய்தாலும் உடல் உழைப்பு குறைவு, அதை விட என்ன முயன்றும் அவனுக்கு சீக்கிரம் எழும் பழக்கமே வருவதில்லை. அவன் ஆரோக்கியத்திற்காக தினமும் மூன்று கிலோமீட்டர் ஓட சொல்லி காலையில் டிரில் எடுப்பார் பிரிகடியர். சில நேரம் சோர்வாக, கடுப்பாக இருந்தாலும் அவர் சொல்வது நல்லதுக்காக என்பதால் வினயன் கிண்டல் செய்தாலும் கேட்டுக்கொள்வான். மரியாதையாகவே நடப்பான்.
“மாம்ஸ், இன்னிக்கு என் பொண்டாட்டி வீட்ல இல்ல. ஹாலிடே எல்லாம் கிடையாதா?” என்று கோரிக்க வைக்க
“அவ இல்லைன்னா லீவ் விடணுமா? அவ வந்தா ஒழுங்கா இருப்ப இல்ல? உனக்கு மூணு ரவுண்ட் இல்லை. கார் சாவியை வாங்கிடு ஜெய், நீ மூணார் வரைக்கும் ஓடுறியா? ஒழுங்கா ஃபிட்டா இல்லைன்னா உங்கப்பனை மாதிரி தொப்ப வச்சிரும்டா” என்று ராஜீவன் சொல்ல, பாலா சண்டைக்கு வந்தார்.
“அம்மச்சா! ஸ்கூலுக்கு லேட்டாகிடும்” என்று சுஜா வந்து கையைப் பிடிக்க “பாய்ஸ்” என்று குரல் கொடுக்க நேர்கோட்டில் அண்ணனும் தம்பியும் லஞ்ச் பேக்கோடு நின்றனர். மூவரும் எல்லாருக்கும் டாடா சொல்ல, ராஜீவன் அவர்களை பள்ளிக்கு அழைத்து சென்றார்.
சுஜிம்மா ராஜீவனின் உயிர், அவரின் செல்லம். அவளுக்கும் அம்மச்சன் என்றால் தனி ப்ரியம்,
“பெரிய பொண்ணாகி என்னவாகணும் சுஜிம்மாவுக்கு?” என்று கேட்டால்
“நான் அம்மச்சன் மாதிரி, தாத்தா மாதிரி ஆர்மி கேர்ள் ஆவேன்” என்றுதான் அவள் பதில் இருக்கும். ராஜீவனோடு சின்ன வயதிலிருந்தே இருப்பதால் எப்போதும் நேர்த்தியாக நடப்பாள். அவர்களைப் பொருத்தவரை ராஜீவன் ஜெய்யின் மாமா, அவனுக்கு அச்சச்சன் அவர்களின் முத்தச்சன். குழந்தைகளுக்கு விவரம் தெரிந்து கேட்டால் சொல்லிக்கொள்ளலாம் என்பதே ஊர்மிளாவின் எண்ணம்.
பேரன்களின் குறும்பும் சேட்டையும் ராஜீவன் ரசித்தாலும் அவரின் மிலிட்டரி கண்டிப்பு அடிக்கடி எட்டிப்பார்க்கும், அதுவும் எல்லாரும் செல்லம் கொடுக்க ராஜீவனிடம் மட்டும் அவர்களுக்குப் பயமுண்டு. அவரோடு விளையாடுவார்கள், பேசுவார்கள் ஆனாலும் அவர் கொஞ்சம் குரல் உயர்த்தினாலும் சேட்டை குறைந்து அடங்கிவிடுவார்கள். மகளுக்கு செய்ய முடியாத கடமையாகட்டும், சின்ன சின்ன விஷயங்களாட்டும் எல்லாம் ராஜீவன் ஊர்மியின் பிள்ளைகளுக்குப் பொறுப்பாக செய்துவிடுவார். கூடவே வினயன், விஜயன் மகன்களுக்கும்!
“ஏண்டா ஜெய் எனக்குத் தொப்ப இருக்கா?” பாலச்சந்திரன் ராஜீவன் சென்றதும் மகனிடம் கேட்க, அவ்வளவு நேரம் அவர் வெறுப்பேற்றியிருக்க
“அதான் பெருசா முன்னாடி இருக்கே தெரியல” என்று கிண்டல் செய்தவன் காலை உணவை முடித்து ஓய்வெடுத்தான். அவன் அதிகமாக ஓய்வெடுக்காமல் இருக்க, ஊர்மிளா அதில் மிகவும் கண்டிப்பு, இரண்டு நாளாக பூரத்தில் நின்றபடி மேளம் அடித்தவனை நாள் முழுவதும் ஓய்வெடுக்க சொல்லிவிட்டாள். வினயனும் மூன்று கிலோமீட்டர் ஓட்டம் முடிந்து வந்தவன் அப்பாவை அழைத்துக்கொண்டு ரெசார்ட் சென்றான், எழுவது மட்டுமே அவனுக்குக் கடினம் மற்றபடி இப்போது மிகவும் பொறுப்பு.
ஜெய் மதிய உணவு முடித்து மீண்டும் உறங்க, ஊர்மிளாவும் அவனோடு சிறிது நேரம் உறங்கினாள். மாலை பிள்ளைகள் வரும் முன் எழ, ஊர்மி அலாரம் வைத்திருக்க சத்தம் கேட்கவும் அவள் சோர்வாக எழ
“ஏய் காஞ்சி அழகியே!” என்று மனைவியை அணைத்தவன்
“எனக்கு ஒன்னு வேணும், தருவியா?” என்று விழிகளால் கெஞ்சினான்.
ஜெய்யின் விரல்களை மெல்ல பிடித்து அழுத்திவிட்டவள் “ஜெய்க்கு என்ன வேணும்?” என்று கேட்க
“அமைதியா தரணும்” என்றான்.
“என்ன ஜெய்?”
“சூடா இஞ்சி, ஏலக்காய் போட்டு ஒரு கட்டஞ்சாயா” என்றிட, ஊர்மிளா கடுப்பாக அவன் தோளில் அடித்தாள்.
“சாயாவுக்குத்தான் இந்த பில்டப்பா?” என்றவள் “ஏதோ டயர்டா இருக்கீங்கனு தரேன்” என்று எழ ஜெய்யின் கரங்கள் அவளை விடவில்லை.
“விடுங்க ஜெய், இந்த வாலுங்க வரதுக்குள்ள சாப்பிட எதாச்சும் செய்யணும்” என்றவளிடம்
“கொஞ்ச நேரம்” என்ற ஜெய் ஊர்மியை அணைத்து படுத்திருந்தான்.
ராஜீவன் பிள்ளைகளை அழைத்து வர, ஊர்மி மூவருக்கும் உடைமாற்றி உண்ண கொடுக்க
“அம்மா! நான் ஸ்பீச்ல செகண்ட் ப்ரைஸ் தெரியுமா? நான் பெரிய தாத்தாவுக்கு சொல்லணும், மைக்ல பேசினேன் தெரியுமா?” என்று பெருமையாக சொன்ன சுஜாதாவுக்கு உடனே அதனை ரத்னவேலிடம் சொல்ல வேண்டும். ஊர்மிளா போன் கொடுக்க, வீடியோ காலில் மீண்டும் ஒரு சொற்பொழிவு ஆற்றி, பெரிய தாத்தாவிடம் பாராட்டு வாங்கி, அவள் கேப்டன் தாத்தாவிடம் ப்ளையிங் கிஸ் வாங்கி மீண்டும் அதனையெல்லாம் அம்மச்சன் மடியில் உட்கார்ந்து கதையாக சொல்லி மகிழ்ந்தாள்.
“ஊர்மி! ஊர்மி” என்று ஜெய் குரல் கொடுக்க
“என்ன ஜெய்” என்று அவள் அறைக்குள் நுழைய
“அடிபொலி சாயா! தேங்க் யூ” என்று மனைவியின் கன்னத்தில் முத்தமிட, அவனின் நொடி நேர தீண்டலில் திளைத்தவள் “பசங்க ஸ்கூல் புராஜக்ட்கு திங்க்ஸ் வாங்கணும் சொன்னாங்க ஜெய், வரீங்களா?” என்று கேட்டாள்.
“நானும் மாமாவும் நைட் சூர்ய நெல்லி போறோம், வினயோட போய் வாங்க சொல்லு. சுஜிம்மாவை மட்டும் அனுப்பு, பசங்களை அனுப்பாத ஊர்மி” என்று கண்டிப்பாக சொன்ன ஜெய் டீஷர்ட், ட்ராக் என்று தயாராகி வந்தான்.
ராஜீவன் இப்போது அவர்களின் எஸ்டேட் பார்த்துக்கொள்வார், கூடவே ஜெய்க்கு உதவியாக நண்பரின் ரிசார்ட்டிலும் வேலைகள் இருந்தால் செய்துகொடுப்பார். இராணுவத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து பழகியவர் இங்கும் மலையேறுபவர்களை கைட் செய்வார்., அவருக்கு ஜெய்யோடு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். பாலாவிடம் பெருமையாக சொல்வார்
“ஜெய் எனக்கு என் பொண்ணை மட்டும் தரலடா, அவன் எனக்கு எல்லாம் கொடுத்திருக்கான்! என் பையன் டா அவன்” என்பார். ஒரு குழந்தைக்குத் தந்தையான பின்னே ஜெய்க்கு ராஜீவன் மீதும் பிரபாகரன் மீதும் அதிக மரியாதை வந்தது, பெற்ற குழந்தையைப் பிரிவது எத்தனை கொடுமையென உணர்ந்தவனுக்கு, பெறாத மகள் மீது எப்படி இத்தனை தூய பாசம் என்ற பிரமிப்பு பிரபாகரன் மீது உண்டு. பிரபாகரனிடம் மாமனார் என்று மரியாதையான இடைவெளி இருக்கும், ராஜீவனிடம் ஜெயனுக்கும் வினயனுக்கும் அது கிடையாது, மாமனிடம் நிறைய உரிமை, பாசமுண்டு.
கிளம்பும்போது வானத்தைப் பார்த்த ஜெய் “மழை வந்தாலும் வரும்போல, நல்ல க்ளைமேட் இல்ல மாமா” என்று ராஜீவனிடம் ரசித்து சொல்ல
“அப்போ போய் மாடியில காய வச்ச துணியை எடுத்துப் போட்டு போங்க ஜெய்” என்றாள் ஊர்மிளா.
“அடிப்பாவி” என்று பார்த்தாலும் மனைவிக்கு உதவி செய்தே ராஜீவனோடு சூர்ய நெல்லிக்குப் புறப்பட்டான் ஜெய்ச்சந்திரன். ஜீப்பில் எஃப், எம் ஆன் செய்ய
ஒன்னானம் குன்னின் மேல் கூடு கூட்டும் தத்தம்மே
நீயென்டே தேன்மாவில் ஊஞ்சாலாடான் வா
லா லா லா லா லா
******
வா வா நீயென் குளிரே
வா வா நீயென் கண்குளிரே!
என்று பாடல் ஒலித்திட ராஜீவனுக்கும் ஜெய்ச்சந்திரனுக்கும் பழைய நினைவுகள். ஜெய் கன்னகதுப்பில் சிரிப்பை அடக்கி ராஜீவனை பார்க்க அவரோ அட்டகாசமாய் சிரித்தார்.
இருவர் மனதிலும் காதல் உண்டு, அது தந்த நிறைவிருக்க ஜெய் ஆச்சர்ய்ம் கொள்ளும் வகையில்
“வா வா நீயென் குளிரே
வா வா நீயென் கண்குளிரே” என்று வாய்விட்டு அவரும் மனம் குளிர பாடிட, பழைய தேவிகுளத்து ராஜீவன் மீண்டிருந்தார், ஜெயன் ரசனையாக புருவம் உயர்த்திட ராஜீவன் குரல் தேவிகுளத்து காற்றில் மகிழ்வாய் கலந்திட,