காஞ்சிபுரத்தில் ரத்னவேல் வீடு இயல்பாக இருந்தது. வீட்டு மனிதர்கள் இயல்பாக இல்லை!
ஊர்மிளாவின் கண்கள் டீவியில் இருந்தாலும், கவனமில்லை. ஓடிடி’யில் வெளிவந்த புதிய திரைப்படத்தைப் பார்த்து, அதற்கு நாளை விமர்சனம் சொல்ல வேண்டும். படம் பார்த்துக்கொண்டு இருந்தவள் அப்படியே சோஃபாவில் சாய்ந்து யோசனையில் இருந்தாள். மகளையே பார்த்த ஜமுனா, அவளருகில் வந்து உட்கார, அம்மா வரவும் அவர் மடியில் தலைவைத்தாள்.
“என்னடி படம் தேறுமா?” என்ற அவர் கேள்வியில் விழித்தாள். பாதி படத்திற்கு மேல் ஓடியிருக்க, முதலில் வந்த பாடலிலே இவள் கவனம் காணாமல் போய்விட்டது.
ராஜீவன் குறித்த எண்ணமே மனதில்! அவளுக்கு விவரம் தெரிந்தது முதல் அவரை தெரியும், கிறிஸ்துமஸ் சமயத்தில் அவளுக்குப் பரிசு பொருட்கள் அனுப்பி வைக்கும் ராஜீவன் அங்கிளை ஊர்மிளாவுக்கு மிகவும் பிடிக்கும். கொஞ்சம் வளர்ந்த பின் ராஜீவன் அங்கிளின் காதல் பிடிக்கும், அவருக்கென்று ஒரு குடும்பம் இருந்திருக்கலாம் என்று நினைத்து வருந்தியிருக்கிறாள். அதை விட நாட்டின் சேவையில் இருக்கும் அவர் மீது மரியாதையுண்டு! அப்படியான ராஜீவன் மீது இப்போது சொல்லத் தெரியாத கோபம்.
அவள் மீது அன்பு காட்ட நிறைய பேர் இருந்தாலும், ராஜீவனின் நிராகரிப்பு, என்னை ஏன் வேண்டாம் என்று கொடுத்தார் என்ற கேள்வி குடைந்து குழப்பம் கொடுத்தது. அதனோடு அம்மாவை பார்க்க, மகளின் கன்னம் கிள்ளிய ஜமுனா,
“என்னடி? என்ன வேணும்?” என்று புன்னகையோடு கேட்க, ஊர்மிளா பதில் பேசாமல் அம்மாவின் இடையைக் கட்டிக்கொண்டாள்.
“அம்மா! நான் ஒன்னு கேட்டா கோவப்பட மாட்டியே? இதுக்கும் உனக்கும் சம்மந்தமில்லை. ஸோ ஃபீல் பண்ண கூடாது” என்று ஊர்மிளா மெல்ல தலை நிமிர்த்தி கேட்டார். மகளின் சுருள் கேசத்தை வருடியவர்,
“தப்பாம்மா?” என்று தவிப்போடு கேட்டாள். ராஜீவனிடம் பேச வேண்டும் என்று தோன்றினாலும், பிரபாகரனையும் ஜமுனாவையும் நினைத்தாள். அவர்களை கஷ்டப்படுத்த முடியாது. எதுவும் மாறவில்லை என்றாலும் மனதில் ஒரு மறுகல் இருந்தது, ஒரு ஐடெண்டி க்ரைசிஸ்(identity crisis- அடையாள நெருக்கடி).
“இல்ல ஊர்மி! சில விஷயம் பேசி தெளிவாகுறது நல்லது, நான் ராஜீவண்ணா கிட்ட பேசுறேன். நீ அவரை நேர்ல பார்த்து பேசு” என்றதும் தன் அம்மாவை இன்னும் பிடித்தது ஊர்மிக்கு.
“அப்பா? தாத்தா?” ஊர்மிளா அவர்களை யோசித்தாள்.
“தாத்தா லாஸ்ட் டைம் போனதுக்கே கோச்சுக்கிட்டார்மா, அப்பாவுக்கும் பிடிக்கல.”
“ஃப்ர்ஸ்ட் உன் தாத்தா கிட்ட பெர்மிஷன் வாங்கு, பெரிய தலையாடினா தானா சின்ன தலையும் ஆடும்!” ஜமுனா வீட்டை அறிந்து சொல்ல, ஊர்மிளா அம்மாவின் பேச்சில் சிரித்தாள். எழுந்தவள் உட்கார்ந்தபடி அம்மாவை இறுகயணைத்தாள்.
“ஊர்மி அம்மா இஸ் தி பெஸ்ட்!” என்று கன்னத்தில் முத்தமிட்டாள். அதே வேகத்தில் ரத்னவேலிடம் சென்று கேட்க, அவர் ஒரேயடியாக மறுத்தார்.
“இங்க பாரு பாப்பு! உன்னை முதல்ல அனுப்பினதுக்கே உன் அப்பனை சண்டை போட்டேன் நான்! உங்கப்பனுக்கும் பிடிக்கல, எனக்கும் பிடிக்கல. இதை பத்தி இனி பேசாத ஊர்மி” என்றார் கண்டிப்பான குரலில்.
ரத்னவேல் அவ்வளவு உறுதியாக சொல்லிவிட, ஊர்மிளா தாத்தாவுக்கு விருப்பமில்லாததை செய்ய விருப்பமில்லை. அதே நேரம் ஊர்மி பழைய ஊர்மிளாவாக இல்லை. ஜமுனா மட்டுமே மகளை புரிந்துகொண்டார், பிரபாகரனுக்கும் ரத்னவேலுக்கும் உரிமை போராட்டம்.
ராஜீவன் காஷ்மீரிலிருந்து டெல்லி கிளம்பும் முன், பிரபாகரனுக்கு அழைத்துப் பேசினார். ஊருக்குப் போகிறேன் என்றதுக்கு பிரபாகரன் சரி என்றாரே தவிர, ஊர்மிளாவை பார்க்க அழைக்கவில்லை. அது புரிந்த ராஜீவன் ஊர்மிளா பற்றியே பேசவில்லை. அதில் பிரபாகரனுக்கு பெரிய நிம்மதி! ஜமுனா இதனை பார்த்தவர் நேராக மாமனாரிடம் போனார்.
தன் அறையில் இருந்த ரத்னவேல், அண்ணா எழுதிய ‘ரங்கோன் ராதா’ புதினத்தைப் படித்துக்கொண்டிருந்தவர், மருமகளின் அழைப்பில் நிமிர்ந்தார்.
“என்ன பேசுற ஜமுனா? உனக்கு தெரியுமா தெரியல.. அன்னிக்கு பிரபா என் கையைப் பிடிச்சுட்டு கலங்கி பேசுறான். அவன் ஆசைப்பட்டு சேர்ந்த மிலிட்டரி வேலையைக் கூட, மகளோட இருக்கணும்னு விட்டு வந்தான். ஊர்மி மேல அவன் அவ்வளவு பாசம் வச்சிருக்கான், என்னையே அன்னிக்கு எதிர்த்துப் பேசினான். அந்த ராஜீவன் பொண்ணு வேண்டாம்னு தூக்கிக் கொடுத்துட்டான்ல, அத்தோடு முடிஞ்சது! ஊர்மிளா விஷயமா இனி பேசுறப்ப அந்த மிலிட்டரிகாரனை பத்தி பேசாத! அவ என் பேத்தி” என்றார் அழுத்தமாக.
“நீங்களும் அவரும் உங்களை யோசிக்கிறீங்க மாமா, நான் என் பொண்ணை யோசிக்கிறேன். உங்களுக்கு அவ மேல இருக்க பாசம், உரிமை எனக்கில்லையா? ஊர்மி மனசுல ராஜீவண்ணா கிட்ட பேச நினைக்கிறா, உங்களுக்காகவும் அவ அப்பாவுக்காகவும் அதை மறைக்கிறா”
“நமக்குப் பிடிக்கலன்னா அதை செய்ய ஊர்மி யோசிப்பா, அப்படி நமக்காக யோசிக்கிற பொண்ணை நம்ம யோசிக்கணும் மாமா! உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு மாமா, நான் சொல்ல வேண்டியதில்லை. நான் அவளுக்குத் தெரிஞ்ச உண்மையை பேசி தெளிவாகட்டும் நினைக்கிறேன், அவ ஒன்னும் குழந்தை இல்லை! ராஜீவண்ணா அவளை நம்ம கிட்ட இருந்து பறிச்சுப்பார் நினைக்க, நாலும் யோசிக்கிற பொண்ணு.”
“ராஜீவண்ணா மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு, அவர் என்ன நினைச்சு இவ்வளவு பெரிய விஷயம் செஞ்சார் தெரியாது. ஆனா அவர் எங்களுக்கு வாழ்க்கையை, சந்தோஷத்தைக் கொடுத்திருக்கார். அந்த நன்றி கொஞ்சமாச்சும் வேணுமில்லையா மாமா? அவர்கிட்ட ஊர்மி உங்களை பார்க்க வரானு சொல்லிட்டு உங்க பையன்… அந்த பேச்சை அப்படியே விட்டுட்டார்..” என்று ஜமுனா சொல்லியதில் இருக்கும் நியாயம் புரிந்தாலும், பெற்றவராக பாசம் நியாயத்தைத் தடுத்தது.
“இப்படி அவளை யோசிக்காம தடுத்தா, அவ மனசு பாடுபடாதா? அவளை இவ்வளவு பாசம் கொட்டி வளர்த்து என்ன?” என்றார் ஜமுனா ஆற்றாமையோடு கேட்டார்.
ரத்னவேல் பிரபாகரனின் மனதை யோசித்தார், அதே நேரம் ஊர்மிளாவுக்கும் மனதில் கேள்விகள் இருக்கும் என்று அனுபஸ்வதராக உணர்ந்தார். மருமகள் பேசவும் மனம் இருபக்கமும் யோசித்தது. அன்றிரவு மகனை அழைத்து பேச, பிரபாகரன் ஜமுனாவிடம் காய்ந்தார்.
“ஊர்மியும் கேட்கல, இன்னிக்கு எங்கிட்ட பேசின ராஜீவனும் கேட்கல. நீ ஏன் ஜமுனா இப்படி பண்ற?” என்றார் கோபமாக.
கணவரின் குரலில் ஜமுனாவின் கண்கள் கலங்கின. அவர் கலங்கவும் பிரபாகரன் மனைவியை அணைத்துக்கொண்டார். ஜமுனா கணவரைக் கட்டிக்கொண்டவர் உடைந்தார்.
பிரபாகரன், “எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு நீ ஏன் அழற?” என்று கரகரப்போடு மனைவி காதில் கேட்டார்.
“ஊர்மி விஷயம் தெரிஞ்சதுல இருந்து பழைய மாதிரி இல்லை. எனக்கு அவ நம்மளை விட ராஜீவண்ணா முக்கியமா நினைப்பா அப்படியெல்லாம் பயமில்லை! அவளை எனக்குத் தெரியும்.. ஆனா அவ ரொம்ப டென்ஷனா இருக்கா, என் பொண்ணோட பழைய சந்தோஷமே இல்லை. அது மாதிரி அவளை ராஜீவண்ணா கிட்ட பேச கூடாதுனு சொல்றது தப்பில்லையா? எனக்கு அவ சந்தோஷமா என் பழைய ஊர்மியா வேணும்.” என்றார் அழுகையோடு.
மனைவியை ஒற்றைக் கையால் அணைத்த பிரபாகரன், மறுகையால் அவரின் கண்ணீரைத் துடைத்து,
“நானே பரவாயில்லைடி, அழுமூஞ்சி” என்றார். ஜமுனா முறைத்தாலும் இருவருக்கும் மகளை நினைத்து பாரம்., பயம் எல்லாம். கணவரின் அணைப்பிலிருந்தவாறே, முகம் உயர்த்தியவர்
“அவ அவரை பார்த்துட்டு வந்தா, நிம்மதியா இருப்பா தோணுதுங்க. எனக்கு அவளை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்களை யாரு குடிச்சிட்டு வீட்ல இந்த விஷயம் பேச சொன்னது..?” என்று கணவர் நெஞ்சில் குத்தினார் ஜமுனா. இத்தனை நாள் அடக்கிய தவிப்பை எல்லாம் இன்று கொட்டினார்.
“நான் குடிக்கல, அவன் குடிச்சான். அன்னிக்கு வீட்ல யாருமில்லை, இந்த சர்வேஷ் எப்போ வந்தானே தெரியல.. விடு ஜமுனா. நீ சொல்றதும் கரெக்ட், யோசிச்சு சொல்றேன்” என்றார் பிரபாகரன்.
**************************
அன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பாலச்சந்திரன் எழுந்துகொண்டார். குளித்து கிளம்பியவர் சின்ன மகனின் அறைக்குச் சென்று அவனை எழுப்பிவிட்டார். வினயனும் அப்பாவோடு கீழே இறங்கி வர,
“ஜெய் ரூம்ல லைட் எரியல, தூங்கிட்டு இருக்கான்! நான் ஊர்மிளாவை அழைச்சிட்டு நம்ம ரிசார்ட்’ல தங்க வைக்கிறேன். ராஜீவன் இன்னிக்கு சாயங்கலாம் வந்துடுவான். நீ நேத்து நைட் சொன்ன மாதிரியே சொல்லிடு, நல்ல காலம் இந்த பொண்ணு, எனக்கு கரெக்டா போன் பண்ணி வரேன் அங்கிள்னு சொல்லிட்டா” என்றதற்கு வினயன் உறக்கக் கலக்கத்தில் தலையாட்டினான்.
“இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும், பொறுமையா ராஜீவன் கிட்ட சொல்லி உங்கண்ணனுக்குப் பேசலாம் நினைச்சிருக்கேன். இப்பவே சொன்னா ஊர்மினு அந்த பொண்ணை வெறுப்பேத்துவான், பார்ப்போம்” என்றபடி அப்பாவும் மகனும் வெளியே வர, வாசலில் வெளிச்சம்.
“என்னடா லைட் எரியுது?” என்று கேட்டபடி வாசலை பார்க்க, கதவு திறந்திருந்தது. அவசரமாக பாலச்சந்திரன் வெளியே வர, வினயன் தூணில் சாய்ந்து நின்றான். ஜெய்ச்சந்திரன் அவன் ஜீப்பில் ஜம்மென்று உட்கார்ந்திருந்தான்.
தேவிகுளத்தின் காலை காற்றில் கேசம் பறக்க, கூலர்ஸ் அணிந்து புன்னகையோடு அப்பாவை பார்த்தான். இங்க் ப்ளூ சட்டையும், சந்தன நிற வேஷ்டியும் நெற்றியில் கீற்றாக சந்தனமும் என்றிருந்த அண்ணனை பார்த்த வினயன்
“ஜெயேட்டா! அடிபொலி. நீ சுந்தரனானு!(நீ அழகன்!)” என்றான் அப்பாவை ஓரவிழியால் பார்த்து.
“எங்கடா இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட?” என்று பாலா கேட்க
“நீங்க எங்க கிளம்பிட்டீங்கப்பா?” என்று எதிர்கேள்வி கேட்டான்.
“நேத்தே சொன்னேனே இடுக்கில ஏலக்காய் வாங்க போறேன்” என்றார் சின்ன மகனை முறைத்து.
ஜெய்யின் விழிகளில் கிண்டல் தவழ, குரலோடும் அது இணைந்தது. “ஓஹ் பின்னே?!(ஆஹ்ன் அப்புறம்?!) நானும் இடுக்கில ஏலக்காய் வாங்கதான் போறேன். சேர்ந்து போகலாம் வாங்கப்பா” என்று அழைத்தான்.
“டேய்! ஜெய்.. நான் தனியா போய்க்கிறேன்” என்று பாலச்சந்திரன் கையில் இருந்த வாட்ச்சைப் பார்த்தபடி சொல்ல,
“எப்படி போவீங்க? நடந்தா? உங்க கார் சாவி எங்கிட்ட இருக்கே! டிரெயின் வரதுக்கு முன்னாடி போய், சீக்கிரமே உங்க மருமகளை அழைக்க வேண்டாமா? இல்லை தனியா போகவா?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான் ஜெயன்.