“ரெண்டும் தான். என்னை யார் மதிச்சா? இங்க வராம இருந்தா இதெல்லாம் நடந்திருக்காது தானே?…”
“என்ன நடந்திருக்காது? இல்லை என்ன தப்பு நடந்திருக்கு? இப்ப இங்க உங்க மதிப்புக்கு என்ன குறையாம்?…”
“நீ இப்படி பேசறதும் தான் என் மதிப்புக்கு குறைச்சல். அவன் என்னடான்னா இன்னைக்கு முறைச்சிட்டே இருக்கான். எடுத்தெறிஞ்சு பேசறான். நான் இந்த வீட்டு மாப்பிள்ளைன்ற நினைப்பு இருக்கா யாருக்காச்சும்?…”
“நல்லா இருக்கே உங்க நியாயம். இன்னும் எத்தனை வருஷத்துக்கு மருமகன் மருமகன்னு இருப்பீங்க?…”
“எத்தனை வருஷம் ஆனாலும் நான் உங்க வீட்டோட ஒரே மருமகன் தானே?…”
“அப்ப முகிலுக்கும் அந்த மரியாதையை நீங்க தரவேண்டாமா?…”
“நான் பார்க்க வளர்ந்த பையன். அவனுக்கு நான் மதிப்பு குடுக்கனுமா? என் வயசென்ன? அவன் வயசென்ன?…”
“எங்கப்பாம்மா கூட தான் உங்களைவிட வயசுல மூத்தவாங்க. அவங்க குடுக்கலையா உங்களுக்கு?…”
வேதாவிற்கு சரி கோவம் அனலரசுவின் மேல். எடுத்ததெற்கெல்லாம் இப்படி பிரச்சனை செய்கிறாரே என.
“வீட்டு மாப்பிள்ளைன்னா யார்னாலும் மதிச்சு தான் ஆகனும்…”
“அப்ப முகிலும் நமக்கு மாப்பிள்ளையா வர போறவன் தானே? அவனை என்னைக்கு மதிச்சீங்க நீங்க? இன்னும் சின்ன பையனை மாதிரி நடத்துறீங்க…”
“உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? இன்னைக்கு எதுக்கு இத்தனை பேசற நீ? இங்க பார். யாரை மதிக்கனும், யாரை எப்படி பார்க்கனும்னு எனக்கு நீ சொல்லாத. முகில் எனக்கு மருமகனா வர போறவன் தான். ஆனா அது வேற. இது வேற…”
அனலரசுவின் இந்த பேச்சில் இன்னும் எரிச்சல் மண்டியது வேதாவிற்கு. பதிலுக்கு அடுத்து பேசும் முன் முகிலன் வந்துவிட்டான்.
“அத்தை இதை கொண்டு போய் குடுங்க. அங்கயே அந்த பசங்க மீனை வெட்டி குடுத்துட்டாங்க. அலசியாச்சு….” என நீட்டினான் வேதாவிடம்.
“பிடிங்க…” என அவரின் கையில் தந்தவன் அனலரசுவை பார்த்தான்.
“முகிலா நீ வா…” வேதா அழைக்க,
“நீங்க போங்க. வரேன்…” என சொல்லி மாமனை பார்த்துக்கொண்டே நின்றான் முகிலன்.
“அங்க என்ன அதட்டல்? அவ நின்னா உனக்கென்ன?…” முகிலனிடம் மல்லுக்கு நிற்பதை போல நின்றார் அனல்.
“என்னோட பேச்சு அதட்டல் மாதிரியா இருக்கு? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? வந்ததுல இருந்து எதாச்சும் சொல்லிட்டு இருக்கீங்க?…” என்றவன் அவரின் கையை பிடித்து விருவிருவென இழுத்து சென்றான் தொட்டியின் அருகே.
“உள்ள எட்டி பாருங்க. கண்ணாடியா பளிங்கா தெரியுது தானே? சுவத்தை சுத்தி ஏறி வர எதாச்சும் படி இருக்கா? அதோட பாசி படிஞ்சிருக்கு. வழுக்காதா?…” என்றான் கோபத்துடன்.
“இப்ப எதுக்கு அதெல்லாம். கையை விடு…”
“ஒரு நிமிஷம் ஆகாது, இந்த தொட்டிக்குள்ள உங்களை தூக்கி போட…” என தனது கையை முறுக்கிக்கொண்டு அவன் நிற்க எங்கே அலேக்காக தூக்கி வீசிவிடுவானோ என இரண்டடி தள்ளி நிற்க,
“முகில் என்ன இது?…” என அதட்டினார் வேதா.
“பின்ன என்ன த்தை. கொஞ்சமும் முன்யோசனை வேண்டாம்? இத்தனை பேர் வேலை செய்யறாங்க. அசிங்கமா பர்க்காரு இவரு. உங்க பொண்ணு தானே? நீங்க பார்க்க வளர்ந்தவன் தானே நானும்…” என்றவன்,
“என்ன எங்களுக்கு தனியா பேசனும்னா வேற இடமேவா இல்லை. என்ன பார்வை அது? தப்பு. நானும் போனா போகுதுன்னு பொறுத்து போனா ஓவரா செய்யறீங்க?…” என்றான் மாமனிடம்.
“என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு? இது சரியில்லை முகிலா…” என்றார் அனலரசு.
“எது? நான் பேசறது சரியில்லையா? நீங்க செய்யறது ரொம்ப சரியோ? சரி உங்களை தூக்கி உள்ள போடறேன். நானும் உள்ள வரலை. ஹெல்ப் பண்ணலை. முடிஞ்சா நீங்களா மேல ஏறி வாங்க பார்ப்போம்…” என்றவன் தூக்கியேவிட்டான் அனலரசுவை.
“முகிலா…” என அனலரசு அவனின் கையில் துள்ள,
“போட்டுடறேன். முடிஞ்சா ஏறி வாங்க. என் ஹைட் இருப்பீங்க தானே?…” என தொட்டியின் விளிம்பில் அவன் நிற்க,
“வேதா சொல்லு இவன்கிட்ட…” என கத்தினார்.
வேதாவிற்கு சட்டென சிரிப்பு தான் வந்தது. வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அதிர்ச்சியை முகத்தில் காண்பித்தார்.
“இத்தனை கத்தறேன். யாராச்சும் வராங்களா பாரு. கீழே இறக்கிவிடு முகிலா…” என்றார்.
எங்கே சண்டையாகிவிடுமோ என பயந்து வேதா முகிலனிடம் இறக்கிவிடும்படி கேட்க,
“சொல்லி வைங்க த்தை. எங்க எப்படி பேசனும்னு. வாய் கிழிய பேச மட்டும் தெரியுது. சிட்டில வளர்ந்தோம், மேனர்ஸ்கே நாங்கதான் சோறு போட்டு வளர்க்கோம்ன்னு. வெறும் பேச்சு தான்…” என கீழே இறக்கிவிட்டான்.
மூச்சுவாங்க நின்ற அனலரசு கோபத்துடன் அவனை பார்த்தபடி படபடப்பை அடக்கமுடியாமல் இருந்தார்.
இது ஒன்றும் கிணறில்லை தான். ஆனால் பெரிய தொட்டி. இப்படி இறங்கி குளித்தோ, விளையாடியோ பழக்கமில்லை.
முகிலன் கோபத்தில் தன்னை அங்கே போட்டுவிட்டால் அது தனக்கு அவமானம் வேறு என நினைத்தார்.
“பர்ஸ்ட் பிராட்மைன்ட் வேணும். பொண்ணோட அப்பாவா இருந்தாலும் சரி என்னோட அப்பாவா இருந்தாலும் சரி. இங்க என்ன சூழ்நிலைன்னு முதல்ல பார்க்கனும். பார்க்கறத எல்லாம் தப்பாவே பார்த்தா இப்படித்தான்…”
“முகிலா நான் பேசிக்கறேன். நீ விடு…” வேதா அவனை சமாதானம் செய்ய,
“இதை நான் என்னோட அப்பாம்மா, தாத்தா, பாட்டின்னு எல்லாரும் இருக்கும் போது சொல்லியிருக்க முடியும். என்ன செஞ்சிருப்பார்? அவளே நடுங்கிட்டு நிக்கிறா என்ன செய்வீங்களோன்னு பேசுவீங்களோன்னு. தெரியாம தான் கேட்கறேன். உங்களுக்கு இதுல என்ன தப்பு தெரிஞ்சிருச்சு?…”
“ரொம்பா பேசாத முகிலா. ஒரு அப்பனா என்னோட கடமையை தான் செஞ்சேன்…”
“இதுக்கு பேர் கடமையா? ஆமா என்ன அப்பா அப்பான்னு. இப்படி கண்கொத்தி பாம்பா நோட்டம் விடறதா அப்பா?…”
“முகிலா, கல்யாணம் ஆகற வரைக்கும் உங்களை பாதுகாக்கறது எங்க கடமை…” என சொல்ல பதிலுக்கு கோபமாய் பேச வாயெடுத்தவனை பார்வையால் கட்டுப்படுத்தினார் வேதா.
“ப்ச், ச்சே…” என நகர்ந்தவன்,
“அத்தை எல்லாத்துக்கும் ஒரு பொறுமை இருக்குது. அவ்வளோ தான் சொல்லுவேன். என்னை சீண்டிட்டே இருக்க வேண்டாம். சொல்லி வைங்க. அவ்வளவு நம்பிக்கை இல்லைன்னா?…” என்றவன் பார்த்த பார்வையின் பொருளில் அனலரசு வெகுண்டார்.
“என்ன என்ன பேசறான் இவன்?…” என கொந்தளிக்க,
“முகிலா நீ போ. நான் பேசிக்கறேன்…” என அனுப்பினார் வேதா. முகிலனும் அனலரசுவை முறைத்துக்கொண்டே,
“இப்பவும் உங்க மரியாதைக்காக தான் தனியா பேசினேன். புரியலைன்னா…” என வானத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவன் நகர்ந்துவிட,
“இன்னைக்கு இதை நான் சும்மா விடமாட்டேன். பார்த்தியா உன் அண்ணன் மகன் லட்சணத்தை. இன்னைக்கு இதுக்கு ரெண்டுல ஒன்னு முடிவு கட்டலை…”
“என்ன என்ன பண்ண போறீங்க? கோவத்துல முகிலன் என்னை தூக்கி தொட்டிக்குள்ள போட போனான்னு சொல்லுவீங்களா?…”
“ஆமா, அதான உண்மை. அதோட எவ்வளவு திமிரா பேசிட்டான்? அதையும் தான்…”
“சொன்னா நமக்கு தான் அசிங்கம். எனக்கும் சேர்த்து தான். அவன் பேசினதுல எல்லாம உண்மை. அப்போ அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க…”
“அதெப்படி சப்போர்ட் பண்ணுவாங்க? நான் இந்த வீட்டோட மாப்பிள்ளை. என்னையே அவமானப்படுத்திட்டான்…”
“சரி இன்னைக்கு உங்க கோவத்துக்கு நீங்க சொல்லி எல்லாரும் முகிலனை சத்தம் போட்டு பேசறாங்கன்னே வச்சுப்போம். அடுத்து எப்ப பார்த்தாலும் அவன் உங்களை செஞ்சதை தான நினைச்சு சிரிப்பாங்க…”
“ஹாங், என்ன சொல்ற?…”
“என்னத்த சொல்ல? இதை எல்லாம் யாரும் கவனிக்கலை. இதை அப்படியே விடுங்க. இல்லன்னா நம்மை தான் உங்களை தான் கிண்டல் பண்ணுவாங்க…”
“அதுக்குன்னு சொல்லாம விடவா?…”
“ஆமான்றேன். சொன்னா இந்த ஒருநாள்ல முடிஞ்சிரும். சொல்லாம விட்டா முகிலனே வருத்தப்பட்டு வந்து மன்னிப்பு கேட்பான்…”
“ஓஹ்…”
“நான் உங்க மரியாதைக்காக தான் பேசறேன்…”
“யாரு நீ? என்னை அவன் வரதுக்கு முன்னாடி எதிர்த்து பேசுனவ தான நீ?…”
“நான் ஆயிரம் பேசுவேன். அது நமக்குள்ள. ஆனா வேற யாரையும் பேச விடுவேனா? என்ன நினைச்சுட்டீங்க நீங்க?…”
“என்னவோ சொல்ற…” என அனலரசு வேதா சொல்லியதற்காக அமைதியாக இருப்பதை போல காட்டிக்கொண்டு,
“ஹ்ம்ம், சரி ஆனா இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கமாட்டேன். ஊருக்கு கிளம்புவோம்…”
“சரி, நீ போ வரேன்…” என்று சொல்லியவர் அங்கேயே நிற்க வேதாவிற்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது.
‘நல்லா வேணும் இந்த மனுஷனுக்கு. அப்பப்ப மாசத்துக்கு ரெண்டுதடவை இவரை தூக்கிட்டு ரங்கரங்கமா சுத்தினா தான் அடங்குவாரு’ என நினைத்துகொண்டே தள்ளி வந்த அனலரசு பார்த்துவிடாமல் ஒதுங்கி நின்று எட்டி பார்த்தார் வேதா.
அனலரசு அந்த தொட்டியை எட்டி எட்டி பார்த்து ஆராய்வதை போல நின்றுகொண்டிருக்க இன்னுமே சிரிப்பு.
“த்தை. இன்னும் வரலையா நீ?…” என்ற முகிலனின் குரலில் திரும்பி பார்த்த வேதா,
“செம ஷாக் குடுத்தடா முகிலா. நானே எதிர்பார்க்கலை. ஆடி போய்ட்டாரு மனுஷன். அங்க பாரேன் இன்னும் எட்டி எட்டி பார்த்துட்டு இருக்கறதை?…” என சொல்லி சிரிக்க முகிலனின் முகத்தில் விரிந்த புன்னகை.
முகிலன் விவரம் தெரிந்து அவனை டா சொல்லி அழைப்பதையே தவிர்த்திருந்தார் வேதா. இதோ இப்போது அவரறியாமல் வந்துவிட முகிலனுக்கு அத்தனை மகிழ்ச்சி.
“ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களே த்தை. பேசாம பின்னால போய் அவருக்கே தெரியாம உள்ளே தூக்கி போட்டுட்டா? இன்னைக்கு முழுக்க நீச்சல் அடிச்சுட்டு இருக்கட்டும்ன்னு. பார்த்து என்ஜாய் பண்ணுங்க…”