வெளியில் வந்ததும் “என்மேல உங்களுக்கு கோவம் இருக்கும். அதைப் பத்தி எனக்குக் கவலை இல்ல. அம்மாவா அவளை நான் பாதுகாக்கல்லை. அவ மேல தகாதபடி ஒருத்தன் கைவச்சிட்டான். நடந்ததை மாத்த முடியாது. அட்லீஸ்ட் நமக்கு ஏதாவது தப்பு நடந்தா தட்டிக் கேக்க அம்மா வருவாங்கன்னாவது அந்த குழந்தை நம்பனும். நடந்தது நடந்துபோச்சுன்னு ஈசியா கடந்து போயிடாம பதில் நடவடிக்கை எடுப்பாங்கன்னு அவளுக்கு தெரியனும். அதுக்காக தான் இதெல்லாம் பண்றேன்” என்றுவிட்டு முன்னே சென்றுவிட்டாள் சாந்தி.
ரகுராமன் மனம் ஆழியாய் ஆர்ப்பாட்டம் செய்தது. ஊர்க்குருவி பருத்தாகாது என்று சொல்வார்கள். இத்தனை காலமும் ஒரு பருந்தை ஊர்க்குருவி என்று நினைத்திருந்தோமே என்று நொந்து போனார். சுவையாக சமைக்கத் தெரியவில்லை வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை என்பதற்காக அவளுக்கு எதுவும் தெரியாதென்ற தீர்மானத்துக்குள் குதித்ததை நினைத்து வெட்கப்பட்டார். மனைவியின் மதிப்பு தெரியாமல் ஆண்டுகளை வீணடித்துவிட்டோமே என்று வருத்தப்பட்டார். ஆய்வாளரிடம் அவள் பேசியதும் கேட்டதும் எத்தனை அறிவுப்பூர்வமாக இருந்தது என்றெண்ணிப் பார்த்தார். இப்படிப்பட்ட இக்கட்டில் அவள் எத்தனை நிதானமாகச் சிந்தித்து செயலாற்றுகிறாள் என்றெண்ணி வியந்தார். காவல்துறை கண்காணிப்பாளரையே அவள் நேரடியாகத் தொடர்புகொள்ளும் இடத்தில் இருக்கிறாளா என்று பெருமிதம் கொண்டார். எத்தனை தைரியமான தாயாக அவள் இருக்கிறாள், எத்தனை கோழையான தந்தையாக நாம் இருக்கிறோமென்று ஒப்பிட்டுப் பார்த்தார். மொத்தத்தில் தன் இல்லாளை எத்தனை குறைத்து மதிப்பிட்டு வைத்திருந்தோம் என்று வெட்கிப்போனார்.
ஒருபக்கம் அவளின் தைரியம் அவரைப் பெருமைப்படுத்தினாலும் அவள் எடுக்கும் இந்த நடவடிக்கைகள் எங்கே போய் முடிமோ என்று மனம் பதறத்தான் செய்தது அவருக்கு.
சாந்தியின் பின்னாலேயே அவரும் வீடு சென்று சேர்ந்தார். வாசலில் காத்திருந்த சாந்தி ரகு வந்ததும் அவரிடம் அலைபேசியைக் காட்டினார். கண்ணன் சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டிவிட்டோம் என்ற தகவல் வந்திருந்தது ஆய்வாளரிடமிருந்து.
ரகுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வீட்டுக்குள் சென்ற சாந்தி கண்மணியைக் கிளப்பி வெளியில் அழைத்துப்போனாள். அவளை உற்சாகப்படுத்துவதற்காக கோவில் கடற்கரை உணவகம் அழைத்துப்போய் வருவதாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
“என்னடா.. ஏதோ நடவடிக்கை எடுக்கப்போறேன்னு சொல்லிட்டுப் போனா.. என்னத்தைக் கிழிச்சா?” என்று கமலம் குத்தலாகக் கேட்கவும் கடுப்பானது ரகுராமனுக்கு. “ஆ… மகளிர் காவல் நிலையத்தில புகார் கொடுத்துட்டா. நல்ல பக்காவா கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கா. நல்லா கிழிஞ்சு தொங்கும் பாருங்க” என்று ரகு சொல்லவும் அதிர்ந்து போனார் கமலம். “என்னடா சொல்லுற.. நீ தடுக்கல்லையா?”
“தடுக்க எல்லாம் முடியல்ல.”
“டேய். உன் தங்கச்சி வாழ்க்கை டா.. பொறுப்பில்லாம பதில் சொல்லுற”
“ராதிகா வாழ்க்கைக்கு உங்க மாப்பிள்ளை தான் பொறுப்பு. அங்க போய் கேளுங்க..” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார் ரகுராமன்.
ஐந்து நிமிடங்களில் அவரும் கிளம்பிச் சென்றுவிட்டார். சாந்திக்கு அழைத்து எங்கிருக்கிறாள் என்று கேட்டுக்கொண்டு மகளோடும் மனைவியோடும் சேர்ந்துகொண்டார். கண்மணியைக் கொஞ்சம் திசைதிருப்ப இருவரும் இணைந்து முயன்றனர். இருவரும் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்தாலும் அதை மறைத்து அவளை உற்சாகப்படுத்துவதில் குறியாக இருந்தனர்.
ஆனால் என்ன முயன்றும் குழந்தை வேதனையாகவே இருந்தாள்.
“கண்மணி.. இது உனக்கு நடந்திருக்க வேண்டாம். இந்த வயசில உலகத்தோட இந்த கோர முகத்தை நீ பார்த்திருக்க வேண்டாம். ஆனாலும் நீ இப்படி வேதனைப்பட வேண்டியதில்லை டா.. இதை அனுபவிக்கற முதல் பொண்ணு நீ இல்ல. கடைசி பொண்ணும் நீயா இருக்கப்போகறதில்லை. அதனால இதுலேருந்து நீ கடந்து வரனும். உனக்கு நடந்ததுக்கு நிச்சயமா நாங்க நடவடிக்கை எடுப்போம். சியர் அப் மை பேபி” என்று சாந்தி சொன்னாள். மீண்டும் ஆச்சிரியப்பட்டார் ரகுராமன். எவ்வளவு பக்குவமாய்க் கையாள்கிறாள் என்று வியந்து போனார்.
“எனக்கு இங்க எல்லாம் ரொம்ப வலிக்குது மா..” என்று மார்பகங்களைச் சுட்டிக்காட்டி வேதனை முகத்தில் தெரிய கலங்கிய கண்களோடு சொன்னாள் கண்மணி. அவளை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு அழுதாள் சாந்தி. பாலூட்டிய முலைகள் திண்ணப்பட்டு வேதனையளித்தன அந்தத் தாய்க்கு. ரகுராமனுக்கும் தொண்டை அடைத்தது. கண்ணீர் துளிர்த்தது. மார்மீதும் தோள்மீதும் போட்டு வளர்த்த செல்ல மகளின் வேதனையை நேரில் கண்டு கண்ணன் மீது சாந்தி எடுத்த நடவடிக்கையில் தப்பே இல்லையென்று தோன்றியது. வீடு திரும்பினர்.
உள்ளே நுழைந்தது தான் தாமதம். கமலம் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தார்.
“போலீஸ் ல புகார் கொடுத்திருக்கியாமே.. நல்ல குடும்பத்துல இருக்கற நாம ஸ்டேஷன் படி மிதிக்கலாமா? மாப்பிள்ளை பண்ணினது மன்னிக்க முடியாத தப்புத்தான். அதுக்காக ரகு திட்டிட்டான். நானும் ராதிகா கிட்ட கண்டிச்சுட்டேன்.அதோட விட வேண்டியது தானே.. வேணுமின்னா அவங்களோட பேச்சுவார்த்தையை நிறுத்திக்கோங்க. அதுக்காக வீட்டு மாப்பிள்ளை மேல கம்ப்ளைண்ட் கொடுப்பியா.. என்ன நெஞ்சழுத்தம் டி உனக்கு?” என்று பாய்ந்துகொண்டு வந்த கமலத்தைப்பார்த்து பயம் கொண்டாள் கண்மணி. குழந்தையை உள்ளே போகச் சொன்னாள் சாந்தி. அவள் போன பின் “இப்ப திட்டுங்க அத்தை” என்று வாங்கிக்கொள்ளத் தயாராய் இருந்தாள்.
“என்னத்தை திட்டுறது. நாளைக்கு முதல் வேலையா போய் புகாரை வாபஸ் வாங்குற”
“நீங்க என்னை எவ்வளவு வேணுமின்னாலும் திட்டுங்க அத்தை. ஆனா வாப்பஸ் மட்டும் வாங்க முடியாது.” என்று திட்டவட்டமாய்ச் சொன்னாள்.
“டேய் ரகு.. இவளோட மாரடிச்சது போதும். இவ மட்டும் இப்ப வாபஸ் வாங்க முடியாதுன்னு சொன்னா இவளைத் தலை முழுகிடு”
“அவருக்கு அது தான் விருப்பமின்னா நான் தயார் தான் அத்தை. உலகமே எதிர்த்தாலும் இந்த நடவடிக்கையிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன்” என்று பொறுமையாகச் சொல்லிவிட்டுக் கண்மணியிடம் சென்றுவிட்டாள் சாந்தி.
நிலைத்து நின்றுவிட்டார் கமலம். ரகு எதுவும் பேசாதிருப்பதையும் கவனித்தார்.
“அப்ப உன் சம்மதத்தோட தான் எல்லாம் நடக்குதா..” என்று கர்ஜித்தார். பதிலேதும் சொல்லாமல் உள்ளே சென்றார் ரகு.
உள்ளே சாந்தி மீண்டும் கமிஷ்னரிடம் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்படி பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு பேய் அறைந்தாற்போல் நின்றுவிட்டார்.