ஞாபகங்களாக மட்டும் மாறிப்போன பிரியமானவர்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது? அவர்கள் இல்லை என்பது நிஜம்! அவர்கள் இருந்தார்கள், அதுவும் நமக்குப் பிரியமாக இருந்தார்கள் என்பதூஉம் நிஜமே!
‘நினைத்துக் கொள்வதெல்லாம் ஒரு வகை சந்திப்பு’ என்பார் கலீல் கிப்ரான். வாரிதிக்கு அரவிந்தனை சந்திக்கும் வழி அது. அவனைப் பற்றிப் பேசுவது, நினைப்பது எல்லாம் அவனோடு இருப்பது போன்ற உணர்வினை தரும்.
உண்மையில் உடனிருக்க மாட்டான், ஆனால் அது போல என்பதே ஒரு ஆறுதல்தானே? அரவிந்தன் என்றொரு நண்பன் எனக்கிருக்கிறான் என்று அவளை அதிகம் அறியாதவர்களிடம் சொல்வதில் ஒரு ஆசுவாசம் அவளுக்கு.
அரவிந்தனும் வாரிதியும் ஒரே குடியிருப்புப் பகுதியில் வாடகைக்கு இருந்தார்கள். ஒத்த வயது, வீட்டில் ஒரே பிள்ளைகள் என்பதால் விளையாட்டுத் தோழர்களாக இருந்தனர். அதே பகுதியில் இருந்த பள்ளிக்கூடத்தில் வேறு வேறு வகுப்பில் பயின்றாலும் வீடு வந்தால் எல்லாம் ஒன்றாக ஆட்டம் போடுவார்கள்.
அரவிந்தனின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்க, அவன் பெரும்பாலும் வாரிதி வீட்டில் இருப்பான். கொஞ்சம் வருடம் கழித்து அரவிந்தனின் பெற்றோர் வீடு வாங்கிக்கொண்டு வேறிடம் சென்ற பின்னும் அரவிந்தனுடனான நட்பு தொடர்ந்தது. இடையில் அவனுக்குத் தங்கைப் பிறக்க, அவளை கவனிப்பதும் கொஞ்சுவதும் வாரிதிக்கும் அரவிந்தனுக்கும் பிடித்தமான ஒன்று.
அரவிந்தன் கணக்கிலும் அறிவியலிலும் ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் விளங்கினான். வாரிதிக்கு ஆகாதவை அவை. அரவிந்தன் எந்த பந்தாவுமில்லாமல் தோழிக்கு அதனைப் புரிய வைப்பான்.
உடன்பிறந்தோர் இல்லாத வாரிதிக்கு அரவிந்தனோடு அதீதமான ஒட்டுதலிருந்தது. அவளுக்கு அரவிந்தன் மீது உரிமை, உடைமைத்தனம் எல்லாம் உண்டு. அவளின் பால்ய காலத்தின் பாதச்சுவட்டினை திரும்பிப் பார்த்தால், பக்கத்தில் அரவிந்தனின் காற்தடங்களும் இருக்கும். ஒன்றாகவே வளர்ந்தார்கள், ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.
அரவிந்தனுக்கு ஐஐடி சென்று படிக்க ஆசை. அதற்காக அத்தனை மெனெக்கெட்டு படித்தான். வாரிதியும் அரவிந்தன் அங்கு சென்று படிக்க வேண்டும் என்று விரும்பினாள். அவன் விரும்பியபடி அதற்கான நுழைவுத் தேர்வு எழுதினாலும் அவனுக்கு ரேங்க் கிடைக்கவில்லை, அண்ணா பல்கலைகழகத்தில் பயின்றான்.
வேறு வேறு படிப்பு, கல்லூரி என்றாலும் அவர்கள் நட்பில் பிரிவில்லை. வாரிதி நன்றாகப் பேசுவாள், பாடுவாள் என்பதால் அவளை அது சம்மந்தமாகப் படிக்க சொன்னதே அரவிந்தன்தான். வாரிதியின் அப்பா கதிரவனும் மகளின் ஆவலுக்குக் குறுக்கே நிற்கவில்லை.
பட்டாம்பூச்சி போல் அவர்கள் கல்லூரியில் சிறகடித்த காலம். படிப்பு, விளையாட்டு, சினிமா, கான்சர்ட் என்று விரும்பியதை எல்லாம் செய்தனர். முதலாம் ஆண்டு கல்லூரி முடிந்த நேரம். அரவிந்தனை ஆட்கொண்டது ‘கேன்சர்’. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடலில் பரவி, அவன் உயிரைப் பருகிக் கொண்டிருந்தது வெளியே தெரியவில்லை.
அதனை கவனித்து அடுத்த ஒரு வருடம் முழுக்க மருத்துவம் பார்த்தும் அரவிந்தனை காப்பாற்ற முடியவில்லை.
‘சாகுற வரைக்கும் நீயும் நானும் ப்ரண்டா இருக்கறதை யாராலயும் பிரிக்க முடியாது டா’ என்று வாரிதி சில நேரங்களில் அவனிடம் சொல்லியிருக்கிறாள்.
ஆனால் அந்த கணத்தை எதிர்கொள்ளும் போது, வாரிதிக்கு அந்த வயதில் அதனை கடக்க முடியவில்லை. இன்னும் கூட அவளால் அந்த இழப்பிலிருந்து மீள முடியவில்லை.
இறந்தவரை நாம் இருக்கும்வரை எப்படி நம்மோடு இருத்திக்கொள்வது? பிரிந்தவர் வர மாட்டார்கள், நிச்சயம் எல்லாரும் அறிந்தவொன்று. ஆனால் அவர்கள் மீது பிரியம் கொண்டவர்கள் நிலை? பிரிந்தவர்கள் மீது காட்ட காத்திருக்கும் பிரியத்தின் நிலை?
வாரிதி எல்லாவற்றையும் பகிர்கின்ற ஒரு தோழனை இழந்தாள். அவள் வாழ்நாள் முழுமைக்கும் துணை வருவான் என்று நினைத்த நண்பனை இழந்துவிட்டாள். அவள் பால்யத்தின் ஒரு பகுதியை, அவளில் ஒரு பகுதியை இழந்துவிட்டாள்.
“யார்கிட்ட அரவிந்த் பத்தி பேசினாலும் இல்லாதவனைப் பத்தி ஏன் பேசுற கேட்பாங்க ஆனந்த். இருக்கவங்க ரொம்ப முக்கியம்னு எனக்குத் தெரியும். ஆனா அவன் என்னோட அஞ்சு வயசுல இருந்து ப்ரண்ட், என்னோட சின்ன வயசு ஞாபகமெல்லாம் அவனும் கூட இருப்பான்.” சொன்னவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. அரவிந்தன் மீதான பிரியம் ஈரமாய் இருந்தாலும் அதனை பகிர வார்த்தைகள் வறண்டே இருந்தன.
அரவிந்தனுக்காக அவளிடம் கொட்டிக்கிடக்கும், காத்திருக்கும் அந்த பிரியத்தின் கனத்தைச் சுமப்பது வாரிதிக்கு bittersweet என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அப்படியான நிலை.
‘Our dead are never dead to us, until we have forgotten them’ – ஜார்ஜ் எலியட்(இறந்தவர்களை மறக்கும் வரை அவர்கள் இறக்க மாட்டார்கள்) என்பதுதான் ஆனந்தனுக்கு நினைவில் வந்தது. ஒரு துயரத்தை அதே அளவில் புரிந்து கொள்ள யாரோ ஒருவரால் மட்டுமே முடியும். ஆனந்தனுக்கு வாரிதியை அப்படி புரிந்தது, அவளை அப்படியே உணர முடிந்தது. எங்கோ அவனின் ஆறாத மனதினை அவளும் பெற்றுள்ளது போல் ஒரு எண்ணம்.
அவனுக்கு அவனே சொல்லிக்கொள்ளாத ஆறுதலை அவளிடம் சொல்ல நினைத்தான். ஆனால் அவனுக்கும் வார்த்தைகள் வரவில்லை.
“உன்னை மாதிரி ஒரு ப்ரண்ட் கிடைக்க அரவிந்தன் கொடுத்து வச்சிருக்கணும் வாரிதி” ஆனந்தன் உணர்ந்து சொன்னான்.
ஒத்துணர்வு ஒருமையைக் கொடுத்ததை இருவருமே உணரவில்லை. ஆனந்தன் அப்படி சொல்ல, ஈரம் நிறைந்த விழியோடு அவனை கண்ட வாரிதி,
“அவனை மாதிரி ஒரு ப்ரண்ட் கிடைக்க நான்தான் கொடுத்து வச்சிருக்கணும். அவனை நீங்க பார்த்திருந்தா கூட அவனுக்குப் ப்ரண்ட் ஆகியிருப்பீங்க, அவன் இருந்திருந்தா ஒரு பெர்ஃபக்ட் ஜெண்டில்மேன்’னா இருந்திருப்பான். என்ன நான் அவனோட யாரும் ப்ரண்டாக விட்டிருக்க மாட்டேன்” என்றவளுக்குத் தொண்டையடைத்தது.
ஆனந்தன் அவளுக்குத் தண்ணீரைக் கொடுத்தான். வாங்கி பருகிய வாரிதி,
“தேங்க்ஸ் ஆனந்த்” என்றாள். அந்த நன்றி தண்ணீருக்கானது மட்டுமில்லை என்பது ஆனந்தனுக்கும் விளங்கியது.
“மியுசிக் தெரபி அரவிந்தனுக்காக வந்ததா?” ஆனந்தன் அவளை அறிய ஆவலில் கேட்க, தலையசைத்தாள் வாரிதி.
“எஸ். அவன் சும்மாவே பாட்டெல்லாம் கேட்பான். பட் டிரிட்மெண்ட் டைம்’ல அப்படியொரு விஷயம் இருக்குனு தெரிஞ்சது. அஸ்வின் மகாராஜ்னு ஒருத்தருக்கு மியுசிக் தெரபி ஹெல்ப் பண்ணுச்சு, அவர் இப்போ உயிரோட இல்லை. அவரை மாதிரி மத்தவங்களுக்கு அது ஹெல்ப் பண்ணும் நினைச்சு அவங்க குடும்பம் அவர் ஆசைப்படி ஒரு ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சாங்க. அரவிந்தனுக்கும் அது தெரிஞ்சு சொன்னான், அஸ்வின் இல்லைனாலும் அவரோட எண்ணம் உயிரோட இருக்குனு.”
“Humans are simply thoughts(மனிதர்கள் வெறும் எண்ணங்கள்), இல்லை? அரவிந்த் வாஸ் ரைட்” என்றான் ஆனந்தன்.
“ரொம்ப ரொம்ப நம்பிக்கையோட அவனோட நானும் டிரிட்மெண்ட் போவேன். எல்லாம் பழையபடி மாறிடும் நினைச்சோம். பட்” என்று கைகளை மேலே காட்டிய வாரிதிக்கு அதற்கு மேல் சொல்ல முடியவில்லை. சொல்ல எதுவுமில்லை. சொல்லாமல் அருகிலிருந்தவனுக்குப் புரிந்தது.
அமைதிக்குத் தங்களை கொடுத்து பேச்சினை தடை செய்து இருவரும் காரில் இருந்தனர். அருகே வாகனங்கள் விரைய, அந்த அரவம் ஆனந்தனை கலைக்க, வாரிதியும் திரும்பினாள். பெரிதாக அறிமுகம் இல்லாதவனிடம் அரவிந்தனைப் பற்றி பேசினாலும் அது குறித்த கேள்விகள் வாரிதியிடம் இல்லை.
“உலா போகலாமா? நீ கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவ நினைக்கிறேன்.” ஆனந்தன் கேள்வியாக வாரிதியைப் பார்த்தான். ஆனந்தன் அரவிந்தனாக முடியாது! ஆனால் வாரிதிக்கு நல்ல நண்பனாக இருக்க முடியுமே. அதை சொல்லாமல் செயலாற்ற நினைத்தான்.
“உலா போகணுமா இல்லை உலாவுக்குப் போகணுமா?” ஆனந்தனை திருப்பிக் கேட்ட வாரிதியிடம் கீற்றாய்ப் புன்னகை.
“உலாவுக்கு உலா போகலாமா?” ஆனந்தனிடமும் அதே கீற்றுப்புன்னகை அவன் தாடிக்குள் ஒளிந்திருந்தது.
“போகலாம். ஆனா உங்க நேம் செலெக்ஷன் சூப்பர்” என்று வாரிதி பாராட்ட,
“என்னோடது இல்லை. என் ப்ரோடியூசரோடது” என்றான் கண்சிமிட்டி. அவள் விழிக்க,
“எனக்குப் பெயர் வச்சதும், உலாவுக்குப் பெயர் வச்சதும் என் அப்பா” என்றதும்
“அப்போ அங்கிளுக்குத்தான் க்ரெடிட்ஸ். அழகான பெயர், இன்ஃபேக்ட் அந்த பெயர் பார்த்துதான் நான் முதல் தடவ உலா வந்தேன்.” என்றாள் வாரிதி. அவளோடு பேசியபடி உலாவுக்குச் செல்லும் வழியில் ஆனந்தன் வண்டியைச் செலுத்தினான்.
“தேங்க்ஸ் ஆனந்த், அரவிந்த் எனக்கு ஸ்பெஷல். ஆனா அதே மாதிரி எல்லாருக்கும் அவன் அப்படியே இருக்க மாட்டான். இருந்தாலும் எங்கிட்ட பேசினதுக்கு, என்னைப் பேச வச்சதுக்குத் தேங்க்ஸ்”
“நானும் இப்படி உங்கிட்ட தேங்க்ஸ் சொல்லணும் வாரிதி” என்று ஆனந்தன் சொல்ல, புரிந்தும் புரியாமலும் பார்த்தாள் வாரிதி.
“ஹோய்! ரொம்ப யோசிக்காத, இன்னொரு நாள் பேசலாம்.” என்றவன் அவளை உலா அழைத்துப் போனான்.
வாரிதி ஆனந்தன் அழைத்ததால் வந்தாளே தவிர, என்ன புத்தகம் வாங்குவது என்று தெரியவில்லை. எப்போதும் எதையாவது யோசித்து வருவாள், அதனோடு கூடுதலாய் வாங்கிப்போவாள். இன்றோ அப்படி எந்த எண்ணமும் இல்லை. அரவிந்தனின் நினைவாய் இருந்தது. பெயருக்கு உலாவினுள் உலா போனாள். அவளுக்குப் புத்தகங்கள் பிடித்தம், ஆனால் அந்த கணம் எதுவும் தேவையாக இல்லை.
அவளின் அலைபாய்தலை ஆனந்தன் கண்டுகொண்டான். அவளை அழைத்தவன் அவன் மேஜையை சுற்றிப்பார்த்தான். சட்டென்று ஒரு தலைப்பு அவனை கவர்ந்தது. அவன் படித்து வைத்த புத்தகம்.
‘I came upon a lighthouse’(நான் ஒரு கலங்கரை விளக்கத்தைக் கண்டேன்) சட்டென்று கவனம் ஈர்க்க அந்த புத்தகத்தை கையில் எடுத்தான். மிகவும் எளிமையான, இயல்பான, இனிதான ஒரு புத்தகம்.
“ரொம்ப பெரிய புக் இல்லை, ஷாந்தனு எப்படி ரத்தன் டாடாவை மீட் பண்ணினார், அதுக்கு அப்புறம் அவர் லைஃப் எப்படி மாறுச்சு? கேஸுவல் ரீட். யூ வில் ஃபீல் குட் ஆர் பெட்டர்” என்று நீட்டியவன், அவள் வாங்க கை நீட்டும்போது புத்தகத்தை மீண்டும் திரும்பிப் பார்க்க, அவன் படித்த அதே புத்தகம். புதிதாய் அவளுக்குக் கொடுக்க நினைத்து நகர,
“பரவாயில்லை ஆனந்த், நீங்க படிச்ச புக்’கா இருந்தாலும் ஒகே இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்று சொல்ல, ஆனந்தனும் புன்னகையுடன் தோள் குலுக்கினான்.
“ஐ டோண்ட் மைண்ட், என்ன அங்க அங்க ஹைலைட் பண்ணிருப்பேன்.”
“பரவாயில்லை. இப்போ நானும் ஹைலைட் பண்ணலாமா?” வாரிதி புன்னகையோடு கேட்டாள். ஆனந்தன் அவளை இயல்புக்குக் கொண்டு வர வேண்டி முயற்சி எடுக்க, அது புரிந்து வாரிதியும் மீண்டிருந்தாள். அவள் கேள்விக்கு அவன்